privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புசெய்திஇந்தியாகேரள வெள்ளம் : மானிய அரிசி கிடையாது | பாஜக-வின் கோரமுகம் !

கேரள வெள்ளம் : மானிய அரிசி கிடையாது | பாஜக-வின் கோரமுகம் !

வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட கேரள மக்களின் உணவுத் தேவைக்காக மானிய விலை அரிசியை கொடுத்து உதவுமாறு மத்திய அரசைக் கேட்டுக் கொண்டுள்ளது கேரள அரசு. ஆனால் தர முடியாது என மறுத்துள்ளது மோடி அரசு.

-

கேரள மாநிலத்தில் இந்த ஆண்டும் மிகப்பெரும் சேதத்தை ஏற்படுத்திய மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு, மானிய விலையில் அரிசி வழங்க முடியாது என மத்திய அரசு கைவிரித்துவிட்டது.

கடந்த ஆகஸ்ட் மாதம், கேரள மாநிலத்தில் பெய்த கனமழையால் மக்கள் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டனர். சுமார் 120 -க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். பலரும் தங்களது உடமைகளை இழந்தனர்.

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை பாதுகாப்பான இடங்களில் தங்க வைப்பது மற்றும் அவர்களுக்குத் தேவையான உணவை அளிப்பது போன்ற நிவாரணப் பணிகளில் கேரள அரசும், பொதுமக்களும் ஈடுபட்டு வருகின்றனர்.

கேரள வெள்ளத்திற்கு நிவாரணப் பொருட்கள் அனுப்பி வைக்குமாறு கேரள அரசு பலருக்கும் வேண்டுகோள் விடுத்துவந்த நிலையில், கேரளத்து சங்கிகள், கேரளா தனது தேவைகளைத் தாமே பூர்த்தி செய்துகொள்ளும் என்றும், கேரளாவிற்கு பிறரது நிவாரணம் தேவையில்லை என்று சமூக வலைத்தளங்களில் போலியான தகவல்களை பரப்பிவிட்டனர்.

Wayanad flooded region
மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட வயநாடு பகுதி.

இதனைத் தொடர்ந்து, அக்கருத்தை மறுத்து அறிக்கை வெளியிட்டது கேரள அரசு. மேலும் இந்த போலி செய்தியை வெளியிட்ட சங்கியைக் கைது செய்தது கேரள போலீசு. கேரள மக்களுக்கான நிவாரணப் பொருட்களை உடனடியாக அனுப்பி வைத்து உதவுமாறு வேண்டுகோள் வெளியிட்டார் கேரள முதல்வர் பிணராயி விஜயன். மேலும், தனது டிவிட்டர் பக்கத்தில் தமிழக மக்களுக்கு தமிழில் வேண்டுகோள் விடுத்தார்.

தன்னால் ஆட்சி அதிகாரத்தில் உட்கார முடியாத இடத்தில், பொதுமக்கள் செத்தாவது ஆளும் கட்சிக்கு மேல் வெறுப்பு உருவாக்க வேண்டும். பொதுமக்களுக்கு ஆளும் கட்சி எதுவும் செய்து விடக் கூடாதவாறு தடையை ஏற்படுத்த வேண்டும் என்ற வக்கிர எண்ணத்துடன் எவ்வளவு தரம்தாழ்ந்து நடக்க முடியுமோ அவ்வளவு தரம் தாழ்ந்து நடந்துள்ளது ஆர்.எஸ்.எஸ். – பாஜக கும்பல்.

பாஜக – சங்க பரிவாரக் கும்பலின் இந்த வக்கிரம் அதோடு முடியவில்லை. தற்போது பாதிக்கப்பட்ட மக்களுக்கு மானிய விலையில் அரிசி வழங்குவதைத் தடுக்கும் வேலையில் இறங்கிவிட்டது.

படிக்க:
கேரளா : ஆர்.எஸ்.எஸ் வெள்ள நிவாரண பணிகள் ! ஒரு அனுபவம் !
♦ பிள்ளையார் சிலையும் போதை ஆசாமியும் !

வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட கேரள மக்களின் உணவுத் தேவைக்காக மானிய விலை அரிசியை கொடுத்து உதவுமாறு மத்திய அரசைக் கேட்டுக் கொண்டுள்ளது கேரள அரசு. தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டத்தின் (National Food Security Act (NFSA)) கீழ் கிலோ அரிசி மூன்று ரூபாய் விலையில் தருமாறு கேட்டுள்ளது கேரள அரசு.

ஆனால் அவ்வாறு தரமுடியாது என்றும் ஒரு கிலோ ரூ.26 என்ற விலையில் வேண்டுமானால் அரிசி தருவதற்குத் தயாராக இருப்பதாகவும் கூறியிருக்கிறது மத்திய அரசு.

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் இருக்கும் மக்களுக்கு 15 கிலோ இலவச அரிசி கொடுக்கப்படும் என்று கடந்த மாத இறுதியில் கேரள அரசு அறிவித்துள்ளது. ஆனால் அறிவித்தபடி இன்னும் ரேசனில் அரிசி வழங்கப்படவில்லை. சுமார் 4.68 லட்சம் குடும்பங்கள் இந்த அரிசிக்காக காத்துக் கொண்டிருக்கின்றனர்.

கேரள மாநிலத்தின் உணவுத்துறைச் செயலர் மினி அந்தோனி இது குறித்து கூறுகையில் இலவச அரிசி வழங்குவது இந்த மாதத்தில் இருந்து தொடங்கப்படும். அரசாங்கக் கொள்கையில் வரையறுக்கப்பட்டிருப்பதற்கு இணங்க இயற்கைப் பேரிடர் சமயத்தில் மக்களுக்கு உணவு தானியங்களை குறைவான விலையில் அளிக்க வேண்டிய கடமையிலிருந்து மத்திய அரசு விலகியுள்ளது என்பதை சுட்டிக் காட்டினார்.

modi_pinarayiஇதே போல கடந்த 2018-ம் ஆண்டில் நிகழ்ந்த மோசமான வெள்ளத்தின் போதும் மத்திய அரசு மானிய விலையில் அரிசி அளிக்க மறுத்துள்ளது என்பதை நாம் மறந்துவிடக் கூடாது. அப்போதும் மத்திய அரசு கேரள அரசை கிலோ அரிசி ரூ.25 விலையில் பெற்றுக் கொள்ளுமாறு கூறியது. மேலும் பணத்தை உடனடியாக அனுப்புமாறும், அவ்வாறு அனுப்பாதபட்சத்தில் வெள்ள நிவாரணத்துக்காக மத்திய அரசால் ஒதுக்கப்பட்ட ரு. 500 கோடியிலிருந்து அதற்கான விலையை தாம் கழித்துக் கொள்ளப் போவதாகவும் தெரிவித்தது.

கேரள முதல்வர் பிணராயி விஜயன் கடிதம் மூலம் மோடியிடம் தனது கடுமையான எதிர்ப்பைப் பதிவு செய்த பின்னர்தான் மாநில அரசின் கோரிக்கையை ஏற்று ரேசன் அரிசிக்கான விலையை ரத்து செய்தது.

தற்போது இந்த ஆண்டும் மானிய விலையில் அரிசி கொடுக்க மறுத்திருப்பதை பாஜக-வைத் தவிர கேரள கட்சிகள் அனைத்தும் கடுமையாகக் கண்டித்துள்ளன. தாம் ஆளக்கூடிய மாநிலமான உத்தரப்பிரதேசத்தில் வெள்ளம் வராத சமயத்திலேயே வெள்ளநிவாரண நிதியாக ரூ.200 கோடி ஒதுக்கிய மத்திய அரசு, கேரளத்திற்கு மட்டும் ஓரவஞ்சனை பார்க்கிறது என்று குற்றம்சாட்டுகின்றன கேரள கட்சிகள்.

படிக்க:
கேரளா : கொழஞ்சேரியை சீர்குலைத்த வெள்ளம் ! நேரடி ரிப்போர்ட்
♦ கேரளா : ஆயுசு முழுக்க சம்பாதிச்சதை ஒரு நாள் மழை அழிச்சிருச்சு ! நேரடி ரிப்போர்ட்

மக்கள் பெரும் இழப்பைச் சந்தித்து துயரத்தில் உழலுகையில் அதைவைத்து அரசியல் பிழைப்பு செய்யும் கேவலமான நடைமுறையை பின்பற்றுகிறது மோடி அரசு. தமக்கு செல்வாக்கு இல்லாத தமிழகம், கேரளா ஆகிய மாநிலங்களைத் திட்டமிட்டு பலி வாங்குகிறது மத்திய பாஜக அரசு. தமிழகத்திலும் கடந்த ஆண்டு வீசிய கஜா புயலுக்கு, எட்டிக் கூட பார்க்கவில்லை மோடி. அதோடு நிவாரணப் பணிகளுக்கு அற்பமான தொகையை கிள்ளிக் கொடுத்தது மோடி அரசு.

மக்கள் துன்புறுவதைக் கண்டு ரசிக்கும் இந்தக் குரூரக் கும்பல்தான் ஒரே தேசம் ஒரே கலாச்சாரம் என்றெல்லாம் நமக்கு வகுப்பெடுக்கிறது .


நந்தன்
நன்றி : தி வயர்