மரக்கறி மட்டும் உண்ணும் உணவு முறை குறித்த எனது கருத்து !

விலங்குக்கு உயிர் இருக்கிறதென்றால், பயிருக்கும் தான் உயிர் இருக்கிறது. விலங்கு மூலம் கிடைப்பது கறி என்றால், செடிகள் மூலம் கிடைப்பதும் கறி தான். ஆட்டுக்கறி தவறென்றால், காய் கூட்டுக்கறியும் தவறு தான்.

எந்தக் கீரை வந்து காதில் கூறியது? என்னைப் பறித்து உண்ணடா மானிடா என்று.. விளையும் பயிரில் எந்தப் பயிர் கூறியது? என்னை மட்டும் மூன்று வேலை உண்ணடா மானிடா என்று…

பயிரை நாடி வரும் பூச்சியை கொன்றேன், பூச்சிக்கொல்லி வைத்து.. பூச்சியை நாடி வந்த எலியைக்கொன்றேன், எலிக்கொல்லி வைத்து.. நெற்கதிரை உண்ண வந்த கொக்குக்கு க்ரேன் பாய்சன் வைத்து..

நெருக்கம் நெருக்கமாக மூச்சு முட்டுமாறு நடப்பட்ட நெற்பயிரில் இருந்து வந்த அரிசியில் ஒன்றாவது கூறியதா? என்னை மட்டும் தான் நீ சாப்பிட்டு உயிர் வாழ வேண்டும் மானிடா என்று.

கொல்லக்கூடாது என்றால், ஒரு உயிரையும் கொல்லக்கூடாது!

டெங்கு, மலேரியா, சிக்கன்குனியா நோய்களைத்தரும் கொசுக்களுக்கும் உயிருண்டு அறிவோம். உயிரைக்கொல்வது தவறென்போர் இனி ஒரு போதும் மஸ்கிட்டோ கில்லரை ஆன் செய்யக்கூடாது..

டைபாய்டு, வயிற்றுப்போக்கு நோய்களைத்தரும் கரப்பான்பூச்சிகளுக்கும் உயிருண்டு அறிவோம். இனி ஒரு போதும் ஸ்ப்ரே அடித்து அவற்றை கொல்லக்கூடாது.

உயிர்களைக் கொல்லக்கூடாது என்றால்… பாக்டீரியாவுக்கும் உயிர் உண்டு, அதுவும் இனப்பெருக்கம் செய்கிறது. வைரஸ்-க்கு கூட உயிர் உள்ளது! பூஞ்சை காளானுக்கு உயிர் உள்ளது !

ஆண்டிபயாடிக், ஆண்ட்டி வைரல், ஆண்ட்டி ஃபன்கல் மாத்திரைகள் எதுவும் எடுக்காமல் இருக்க வேண்டும்…

ஒரு கிளாஸ் தண்ணீரில் பல கோடி நுண்ணுயிர் உண்டு. தண்ணீரை கொதிக்க வைத்து வடிகட்டி அவற்றை கொன்று குடிப்பதேன்? மீண்டும் கூறுகிறேன் உணவுக்காக அன்றி பல்வேறு காரணங்களுக்காக உயிர்கள் உலகில் பலியாகின்றன. அடுத்தவன் உணவுத் தட்டில் எட்டிப்பார்ப்பது அநாகரீகம்.

மரக்கறி மட்டும் சாப்பிட விரும்பும், மானுடர் அதை மட்டும் சாப்பிடட்டும். விலங்குக்கறி மட்டும் சாப்பிட விரும்பும் மானுடர், அதை மட்டும் சாப்பிடட்டும். மரக்கறியோடு விலங்குக்கறியும் சேர்த்து சாப்பிட விரும்பும் மானிடர்
இது இரண்டையும் சேர்த்து சாப்பிடட்டும்.

உணவுப் பரிசோதனையை தன் வாழ்நாள் முழுவதும் செய்து வந்த மகாத்மா காந்தியால் கூட பாலுக்கும், முட்டைக்கும் சிறந்த மாற்று கூற முடியவில்லை.

மனிதன் இயற்கையில் ஒரு அனைத்துண்ணி. அவன் மரக்கறியும்; விலங்குக்கறியும் உண்ணப் படைக்கப்பட்டவன்.

படிக்க :
மாட்டுக்கறி சாப்பிடலேன்னா நீ மனுசனே இல்ல – ஆய்வு முடிவு !
♦ பாரதமாதாவின் ஊட்டச்சத்து குறைபாடுள்ள குழந்தைகள் | படக்கட்டுரை

ஐந்து வயதுக்கு கீழ் உள்ள குழந்தைகள் வருடம் தோறும் எழுபது லட்சம் பேர் ஊட்டச்சத்து பற்றாக்குறையால் இறந்து வரும் நம் தேசத்தில், பால் கூட உண்ணாத மரக்கறி முறையால், இன்னும் பல குழந்தைகளை கொன்றொழிக்கும் அபாயம் இருக்கிறது.

மகாத்மா காந்தி அவர்கள் பால் கூட உண்ணாத முறையில் ஐந்து வருடங்கள் இருந்து, பிறகு உயிருக்கு அபாயமான சூழலில் மருத்துவர்களின் பலவந்தத்தில் ஆட்டுப்பால் அருந்த ஆரம்பித்தார்.

மிருக வதை தவறு. அதை அனைவரும் எதிர்க்கிறோம் ஆனால் உணவுக்காக மிருகங்களை உண்பது தவறாகாது. அதுவே சிறந்தது.

இன்றும் முட்டை தரும் புரதத்துக்கு இணையில்லை. உலகின் வேறு உணவுப்பொருட்களில் உள்ள புரதச்சத்தை முட்டை கொண்டே கம்பேர் செய்வார்கள்.
Egg has complete protein. இன்றும் இரும்புச்சத்து ஏறுவதற்கு சிறந்த உணவு மிருக மாமிசம் மற்றும் கல்லீரல் / செவரொட்டி தான்.

மாதிரிப் படம்

பால் கூட உண்ணாத, மரக்கறி உணவுமுறையில் வெகுநாட்கள் சப்ளிமெண்ட் இல்லாமல் நீடிக்க முடியாது. B complex விட்டமின்களுக்கு,
புரதச்சத்துக்கு என சப்ளிமெண்ட் எடுக்க வேண்டும். நாட்டில் அனைவராலும் சப்ளிமெண்ட் எடுக்க முடியாது.

காரணம் அன்றாட உணவுக்கே இங்கு பாதி பேருக்கு வழியில்லை. எனவே அறிவுக்கும் உடலுக்கும், ஆரோக்கியத்துக்கும் பொருந்தாத இந்த உணவு முறை குறித்து உங்கள் குழந்தையோ, வீட்டில் இருப்போரோ பேசி வந்தால் அவர்களுக்கு தெளிவாக புரிய வைத்து விடுங்கள்.

அது உங்கள் பொறுப்பு.

மரக்கறி + விலங்குக்கறி + பால் பொருட்கள் = உடலுக்கு சிறந்தது.

மரக்கறி + பால் பொருட்கள் = தனிப்பட்ட விருப்பம் / சப்ளிமெண்ட்டுகளுடன் தனிப்பட்ட எண்ணத்தில் தொடர முடியும்.

மரக்கறி மட்டும் = நீண்ட நாள் சப்ளிமெண்ட் இல்லாமல் தொடர்வது உடலுக்கு உயிருக்கு ஆபத்து / கட்டாயம் சப்ளிமெண்ட்கள் அவசியம்.

நன்றி : ஃபேஸ்புக்கில் Dr. ஃபரூக் அப்துல்லா MBBS.,MD., பொது நல மருத்துவர் சிவகங்கை.