ந்தக் குறுநூல் இரண்டு கட்டுரைகளை உள்ளடக்கியது. ஒன்று ஆர்.எஸ்.எஸ் எப்படி இந்துத் தீவிரவாதத்தைக் கட்டமைக்கிறது என்றும் மற்றொன்று எப்படி சிறுபான்மையினர் ஆர்.எஸ்.எஸ்-ஆல் வேட்டையாடப்படுகிறார்கள் என்பதைப் பற்றியும் விளக்குகிறது.

பல்வேறு கலாச்சாரம், மொழி, பண்பாடு கொண்ட தேசத்தில் இந்து பண்பாடு மட்டுமே உயர்ந்தது என்றும் அப்படி இந்துவாக இல்லாதவன் தேசவிரோதி என்றும் பல்வகைப்பட்ட தேசிய இனங்களின் மரபுரிமைகளைப் பறித்து ஒற்றைக் கலாச்சாரத்தை நம்மீது திணிக்கும் பாசிசச் செயல்பாடுகள் கருக்கொண்டதை விளக்கித் தெளிவுபடுத்துகிறார் இந்நூலாசிரியர்.

தேசிய இனங்களின் பொருளாதாரத்தையும், சிறுபான்மையினரின் வணிகத்தையும் வேட்டையாடும் ஆர்.எஸ்.எஸ்-இன் வளர்ச்சிக்கு அமெரிக்கா போன்ற நாடுகளிலிருந்து வரும் நிதிக்கட்டமைப்பையும் அதற்கு சங்பரிவார அமைப்புக்கள் ‘யோகா’ போன்ற நிதி ஆதாரங்களையும் ஆராய்ந்து அவர்களின் தீவிரவாதத்தைத் தோலுரித்துக் காட்டியிருக்கிறார் நூலாசிரியர். நம்மைச் சுற்றி நடக்கும் உண்மைகளை அறிந்துகொள்ள அனைவராலும் படிக்கப்பட வேண்டிய குறுநூல் இது. (பதிப்புரையிலிருந்து).

ஆர்.எஸ்.எஸ் – இந்து தீவிரவாத கட்டமைப்பின் வேர்!

…. ஆரிய இந்து தீவிரவாதத்தின் தத்துவார்த்த கோட்பாடுகளை வடிவமைக்கும் அதிகாரம் படைத்த அமைப்பாக ஆர்.எஸ்.எஸ் என்று அழைக்கப்படும் ராஷ்ட்ரீய ஸ்வயம் சேவக சங்கம் (Rashtriya Swayamsevak Sangh) செயல்படுகிறது. மத அடிப்படைவாத செயல்களை வி.எச்.பி என்று அழைக்கப்படும் விஸ்வ ஹிந்து பரிஷத் (Vishva Hindu Parishad) செயல்படுத்தி வருகிறது. இந்த வி.எச்.பி-யின் திட்டங்களைச் செயல்படுத்தும் காவி ரவுடி கும்பலாக பஜ்ரங்தள் (bajran dal) எனும் இளைஞர் அமப்பு இருக்கிறது. காவி அடிப்படைவாதத்தின் மாணவர் அமைப்பாக ஏ.பி.வி.பி (Akhil Bharatiya Vidyarthi Parishad) செயல்பட்டு வருகிறது. இதைப் போன்று 30க்கும் மேற்பட்ட  அமைப்புகள் உள்ளன. இந்த அமைப்புகள் அனைத்தும் கூட்டாக சங் பரிவார் என்று அழைக்கப்படுகிறது.

வேலைக்காக அமெரிக்கா சென்று வாழத் தொடங்கிய இந்திய நடுத்தர வர்க்க இளைஞர்களை கார்ப்பரேட் சாமியார்களின் யோகா, தியானம் என்ற பெயரில் ஆர்.எஸ்.எஸ் தன்வயப்படுத்தி வைத்திருக்கிறது. காவி பயங்கரவாத சக்திகள் அமெரிக்காவிலும், சிலந்தி வலைபோல் பரவி பல நிர்வாகக் கட்டுமானங்களையும், உருவாக்கி செயல்பட்டு வருகிறது. சேவா விபா அமைப்பு அமெரிக்காவில் வாழும் இந்தியர்களிடம் நிதி திரட்டி இந்தியாவில் பல மதக்கலவரங்களுக்கு நிதியுதவி செய்து வருகிறது. பல்வேறு அமைப்புகளாக செயல்பட்டாலும் இந்த அமைப்புகளில் உள்ள உறுப்பினர்கள் அனைவரும் இந்து அடிப்படைவாத கூட்டம்தான், ஒருவரே பல அமைப்புகளிலும் உறுப்பினராக இருந்து செயல்பட்டு வருகிறார்கள்.

ஆர்.எஸ்.எஸ் அமைப்பு அமெரிக்க ஐரோப்பிய நாடுகளில் எச்.எஸ்.எஸ் (HSS – Hindu Swayamsevak Sangh) எனும் பெயரில் செயல்பட்டு வருகிறது. இவ்வமைப்பு அமெரிக்கவாழ் இந்தியர்களை ஒன்றுதிரட்ட FISI (Friends of Indian Society) எனும் அமைப்பை துவங்கி தீவிரமாக ஆட்களை சேர்த்து வருகிறது. அதேபோல் வி.எச்.பி.ஏ (VHPA – Vishva Hindu Parashad of America) எனும் அமைப்பு இந்துமதவாத செயல்களை பரப்பி வருகிறது. இந்திய மக்களுக்கு சேவை செய்யும் எனும் போர்வையில் Sewa International USA Ekal Vidyalaya Foundation – USA எனும் அமைப்புகள் பல்லாயிரக்கணக்கான கோடி பணத்தை அமெரிக்காவில் திரட்டி இந்தியாவில் மதக் கலவரத்திற்கும் இந்து அடிப்படைவாத கட்டமைப்பை விரிவுபடுத்துவதற்கும் உதவி வருகின்றன.

எந்தவிதமான சந்தேகமும் வராமல் இருப்பதற்காக அமெரிக்காவில் 1989ம் ஆண்டு IDRI (Indian Development Relief Fund) எனும் பொது அமைப்பை உருவாக்கி அவற்றின் ஊடாகவும் நிதி திரட்டும் வேலையை செய்து வருகிறது. இந்த IDRF எனும் மைய அமைப்புதான் கடந்த 27 ஆண்டுகளாக பல ஆயிரம் கோடி நிதியை இந்தியாவிற்குள் கொண்டு வந்தது. (நூலிலிருந்து பக்கம் 7-11)

… தமிழ்நாட்டின் சிற்பங்கள், கோயில்கள், பக்தி இலக்கியங்கள், தொல்லியல், வரலாறு அனைத்தையும் தனக்குள் சேர்க்கப் பார்க்கிறது. இப்படித்தான் ஆரிய – வேத – சமஸ்கிருத பண்பாடு இந்திய துணைக்கண்டத்தின் அனைத்துக் கூறுகளையும் உள்வாங்கிக் கொண்டது. தமிழ்த்தேசியத்தின் அடையாளமாக சொல்லப்படும் அனைத்தும் ஆரிய வேத மரபின் நீட்சியாக உருவாக்க ஆர்.எஸ்.எஸ் அமைப்பு தீவிரம் காட்டி வருகிறது. ஆனால், ஆர்.எஸ்.எஸ் அமைப்பால் விழுங்க முடியாத ஒரே சக்தியாக தந்தைப் பெரியார் நம் மண்ணில் நிற்கிறார். (நூலிலிருந்து பக்கம் 26-28)

ஆர்.எஸ்.எஸ் சங்பரிவார் குண்டர்களால் வேட்டையாடப்படும் சிறுபான்மையினர்

…. இந்திய சுதந்திரம் அடைந்ததற்குப் பின்பு ஏறத்தாழ 40,000க்கும் அதிகமான மக்கள் மதக்கலவரத்தில் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். இதில் பெரும் பகுதியினர் சிறுபான்மையின மக்கள், குறிப்பாக இஸ்லாமிய சமூகத்தைச் சார்ந்தவர்கள்.

…. பாஜக ஆட்சி நடக்கும் கடந்த நான்கு ஆண்டுகளில் ஏறத்தாழ 2,920 கலவரங்கள் நடந்துள்ளன. அதில் 8,890 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். 389 பேர் கொல்லப்பட்டுள்ளனர். இதில் பெரும்பான்மையானோர் இஸ்லாமியர்கள். இக்கலவரங்களில் பெரிய தொகையான மக்கள் உடைமைகளை இழந்து வாழுகின்றனர். மோடி ஆட்சி செய்யும் கடந்த மூன்று ஆண்டுகளில் மதக்கலவரம் 28% அதிகமாகியுள்ளது. 2016ம் ஆண்டை ஒப்பிடும்போது 17% மதக்கலவரங்கள் அதிகரித்துள்ளன. (நூலிலிருந்து பக்கம் 39, 41)

இந்திய சுதந்திரத்திற்குப் பிறகு 35க்கும் அதிகமான கலவரங்கள் குறித்து விசாரணை நடத்திய ஆணையங்கள் சமர்ப்பித்த அறிக்கைகளில் காவல்துறையும் அரசாங்கமும் கலவரத்திற்கு துணைநின்றதை வெளிச்சத்திற்கு கொண்டுவந்துள்ளன. குறிப்பாக முக்கியமான இந்துத்துவ மற்றும் பாஜக தலைவர்களின் பெயர்கள் பல்வேறு அறிக்கைகளில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. ஆனால், இதுவரை அவர்களுக்கு எந்த தண்டனையும் வழங்கப்பட்டது கிடையாது. ஆர்.எஸ்.எஸ் இந்துத்துவ அமைப்புகள் ஒரு நிறுவனமயப்படுத்தப்பட்ட வன்முறையைச் Institutionalised riot system) செயல்படுத்தி வருகிறது. கலவரங்கள் எப்படி உருவாக்குவது, எந்தப் போக்கில் திசைதிருப்பப்பட வேண்டும், கலவரம் முடிந்ததற்கு பிறகு எவ்வாறு வழக்குகளைக் கையாள வேண்டும் போன்ற அனைத்துத் திட்டங்களும், முன்கூட்டியே திட்டமிட்டு செயல்படுகிறது. இதுபோன்ற கலவரங்களை நடைமுறைப்படுத்துவதில்தான் அவர்களின் அரசியல் எதிர்காலமே அடங்கியுள்ளது. இப்படி வன்முறைச் செயல்களில் ஈடுபடும் இந்துத்துவா குண்டர்கள் மீது எந்த வழக்கும் பதியப்படுவது கிடையாது. மாறாக பாதிப்பிற்கு உள்ளான சிறுபான்மையினர் மீதுதான் அதிக வழக்கு பதியப்பட்டுள்ளது. கடந்த 60 ஆண்டுகளில் கலவரம் குறித்து கைது செய்யப்பட்டவர்களில் அதிகபடியானவர்கள் கலவரத்தால் பாதிக்கப்பட்ட இஸ்லாமியர்கள் என்பது மிக வேதனைக்குரியது.

….. வகுப்புவாத மற்றும் இலக்கு வன்முறைத் தடுப்புச் (நியாயமும், இழப்பீடும் பெறுவதற்கான வழிவகை) சட்டத்தின் முன்வரைவு பல்வேறு முற்போக்கு சக்திகளைக் கொண்டு நீண்ட ஆய்வுக்கு பிறகு வடிவமைக்கப்பட்டது. இதில், 49 திருத்தங்கள் செய்யப்பட்டு மேலும், செழுமைப்படுத்தப்பட்டது. இந்துத்துவ அமைப்புகள் இந்த வரைவை கடுமையாக எதிர்த்து வந்தனர். அதற்குள்ள காரணங்களில் மிக முக்கியமானது பிரிவு 15ல் பின்வருமாறு பரிந்துரைக்கப்பட்டது.

படிக்க:
சென்னை டாஸ்மாக் திறப்பு : மக்கள் பணத்தை கல்லா கட்டும் எடப்பாடி அரசு !
நூல் அறிமுகம் : கடவுள் கற்பனையே | ஏ.எஸ்.கே

“ஒரு அரசு சாராத அமைப்புச் செய்யும் வகுப்பு மற்றும் இலக்கு வன்முறையை அதன் தலைவர் தடுக்கத் தவறினால் அவரின் தொண்டர்கள் செய்த குற்றத்திற்கு பொறுப்பேற்க வேண்டும். அதேபோல் அவரும் குற்றம் இழைத்தவர்களாகக் கருதப்படுவார்”. இந்தச் சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டிருந்தால் ஆர்.எஸ்.எஸ் சங்பரிவார் அமைப்புகளின் பெருவாரியான தலைவர்கள் கைது செய்யப்பட்டிருப்பார்கள். குறிப்பாக பாஜகவில் இன்று திகாரத்தில் உள்ளவர்கள் சிறையில் இருந்திருப்பார்கள். (நூலிலிருந்து பக்கம் 56, 60)

நூல் : ஆர்.எஸ்.எஸ்: இந்து தீவிரவாத கட்டமைப்பின் வேர்
ஆசிரியர் : அரண்

வெளியீடு : நிமிர் வெளியீடு, 18, சுப்ரிதா பிளாட்ஸ், அவ்வையார் தெரு,
நங்கநல்லூர், சென்னை – 600 061
தொலைபேசி எண்: 72999 68999
மின்னஞ்சல்: nimirpublications@gmail.com

பக்கங்கள்: 64
விலை: ரூ. 50.00

வினவு தளத்தின் மின் நூல்கள் (e books) வாங்க