அறிவாளிகளின் அந்தரங்கம் – லெனின்

மார்க்சியத்தை ஏற்கிறேன்; ஆனால் கட்சியில் இருக்க மாட்டேன் என்று ஒருவர் கூறினால் அவர் வேறு எதுவாகவோ இருக்க முடியுமே தவிர கம்யூனிஸ்ட்டாக இருக்க முடியாது. தொழிலாளி வர்க்கத்தின் உயிரே கட்சி அமைப்புதான் என்றார் லெனின். பல்வேறு போக்குகள் கொண்ட குழுக்களாக இருந்த ரசிய சமூக ஜனநாயகக் கட்சியின் இரண்டாவது மாநாடு 1903-இல் நடந்தது. அதில் கட்சி கட்டுவது குறித்த பாட்டாளிகளின் கண்ணோட்டம், செயல்முறை, அமைப்புமுறை பற்றி உறுதியுடன் வழக்காடிய லெனின் அதையெல்லாம் தொகுத்தளித்த நூல்தான் ‘ஓரடி முன்னால் ஈரடி பின்னால்’. கம்யூனிஸ்ட் கட்சிக்குள் அறிவாளிகள் வழியா? பாட்டாளிகள் வழியா? எது சரி என்பதை சுவைபட விவரிக்கிறது இந்நூல்.

மாநாட்டில் லெனினின் வழியை ஏற்ற பெரும்பான்மையினர் போல்ஷ்விக்குகள் என்று பிரிந்தது அப்போதுதான். அன்று மட்டுமல்ல, இன்றும் உண்மையான கம்யூனிஸ்ட் கட்சிகளும், அறிவாளி வர்க்கமும் ஒன்றுக்கொன்று முரண்பட்டு நிற்கிறது, இனியும் அப்படித்தான். ஏன்? அறிவாளிகளின் சமூக, உளவியல் பின்னணியை ‘காவுட்ஸ்கி’யின் கட்டுரையின் மூலம் விளக்கி பதில் தருகிறார் லெனின்.

அறிவாளிகளின் பண்புகள் ‘மண்ணுக்கேற்றபடியெல்லாம் மாறுவதில்லை’, உலகெங்கிலும் ஒரே மாதிரிதான். தமிழ்நாட்டில் ஏதாவது ஒரு சமூக நடவடிக்கையில் இருப்பதாகக் காட்டிக்கொள்ளும் பேராசிரியர்கள், எழுத்தாளர்கள், பத்திரிகையாளர்கள் ஏராளம் இருக்கிறார்கள். புரட்சிகரக் கம்யூனிஸ்டுக் கட்சிகளை எதிர்ப்பதில் மட்டும் இவர்கள் ஒன்றுபடவில்லை. தமது கத்துக்குட்டி அறிவின் மூலம் சமூகத்தை ஏளனமாகப் பார்க்கும் இவர்களது சிந்தனைமுறை, வாழ்க்கை பற்றிய பாதுகாப்பு உணர்வு, தன்னகங்கார தனித்துவம் இன்னும் ஏராளமானவற்றில் ஒன்றுபடுகிறார்கள்.

பெரும்பான்மை மக்களோ, கட்சியோ, சமூகமோ இவற்றுடன் முரண்பட்டு தன்னை உயர்வாய் நினைத்துக் கொள்ளும் அறிவாளிகளின் பாத்திரத்தை ‘அதே அறிவைக்’ கொண்டு ஆய்கிறார் லெனின். இனி அவரது வார்த்தையிலேயே பார்ப்போம்.

(மேலும் படிக்க)

***

லெனின் – தலைவர், தோழர், மனிதர்!

சாமானிய உழைப்பாளி மக்களை லெனின் நேசித்தார். லெனினது சவ அடக்கத்தின் போது இது பற்றி நதேஸ்தா கன்ஸ்தன்தீனவ்னா நன்றாகச் சொன்னார்:

“எல்லா உழைப்பாளர்களின் பாலும் அவரது நெஞ்சம் ஆர்வமிக்க அன்பு கொண்டு துடித்தது.”

சோவியத் அரசாங்கத்தின் தலைவராக இருந்த போது விளதீமிர் இலீச் (லெனினது இயற்பெயர்) தொழிலாளர்களுடனும் விவசாயிகளுடனும் விருப்பமுடன் உரையாடினார். மத்தியக் கமிட்டி உறுப்பினர்கள், மக்கள் கமிசாரவை உறுப்பினர்கள ஆகியோரின் கருத்தை அறிவது போன்றே தொழிலாளரின், விவசாயியின் மனநிலையை அறிவதும் அவருக்கு முக்கியமானதாகும்.

தொழிலாளர்களுடன் உரையாடுவதற்குக் குறிப்பாக விரும்பினார் விளதீமிர் இலீச். தமது சிந்தனைகளை அவர்களுடன் அவர் பகிர்ந்து கொண்டார். அவர்களது கருத்துக்களை மிகவும் மதித்தார்.

பெத்னதா (“ஏழ்மை”) என்ற பத்திரிகையில் வந்த விவசாயிகளின் கடிதங்களை உயர்வாக மதித்தார்.

“இவையல்லவா உண்மையான மனித ஆவணங்கள்! எந்தவொரு பேச்சிலும் நான் இதைக் கேட்க முடியாது!”

பெத்னதாவின் ஆசிரியராக இருந்த நான் விவசாயிகளின் கடிதங்களை அவரிடம் எடுத்து வரும்போது என்னிடம் அவர் இவ்வாறு சொன்னார். கிராமத்தில் வாழ்க்கை எப்படி இருக்கிறது, கிராமத்தின் தேவை என்ன என்று அவர் நீண்ட நேரம் கூர்ந்து கேட்பார். ஒரு கடிதத்தைக் கையிலெடுத்துக் கொண்டு கவனமாகப் பார்ப்பார். வ்பெரியோத், புரொலித்தாரி (“பாட்டளி”) என்ற பத்திரிகைகளுக்காக, தொழிலாளர்கள் எழுதிய கடிதங்களை எவ்வளவு ஆர்வமுடன் அவர் படித்தார், திருத்தினார் என்பது எனக்கு நன்கு நினைவிருக்கிறது.

1920 – 1921 பனிக்காலத்தில் நடந்த உரையாடல் குறிப்பாக என் நினைவில் பசுமையாக இருக்கிறது. இது கஷ்டமான காலம். உள்நாட்டுப் போர் முடிந்த நேரம். உழைப்பாளர்களின் தியாகங்களும் இழப்புக்களும் உச்சகட்டத்தை அடைந்திருந்த நேரம். பெத்னதாவுக்கு ஏராளமான கடிதங்களை எழுதியது கிராமம். ஒவ்வொரு கடிதத்தையும் பற்றி விளதீமிர் இலீச் என்னை நிறையக் கேள்விகள் கேட்டார்.

“இதோ, சோவியத் ஆட்சி ஜார் ஆட்சியை விட மோசம் என்று எழுதுகிறார்கள்” என்றேன் நான்.

“ஜார் ஆட்சியை விட மோசமா?” என்று திரும்பக் கேட்டுவிட்டுக் கண்களை நெரித்துக் சிரித்தார் விளதீமிர் இலீச். “எழுதுவது யார்? குலாக்கா? மத்தியதர விவசாயியா?”

விவசாயிகள் கடிதங்களிலிருந்து மேற்கோள்கள் தந்து, கிராமத்திலுள்ள நிலைமை பற்றி விவரமான அறிக்கை சமர்ப்பிக்கும்படி அவர் கோரினார். உரையாடல் அத்துடன் முடிந்தது.

(மேலும் படிக்க)