• அண்ணா பல்கலைக்கழகத்தின் கட்டணக் கொள்ளையை தடுத்து நிறுத்து!!
  • நீட் தேர்வு ரத்து செய்!!
  • கல்லூரி பல்கலைக்கழக இறுதியாண்டு தேர்வை ரத்து செய்!!

என்ற முழக்கங்களை முன்வைத்து மதுரை ஆட்சியர் அலுவலகம் திருவள்ளுவர் சிலை அருகில் 04.09.2020 அன்று காலை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு பு.மா.இ.மு மாவட்ட அமைப்பாளர் தோழர் ரவி அவர்கள் தலைமை ஏற்றார்.

அதைத் தொடர்ந்து திராவிடர் விடுதலைக் கழகம் தோழர் திலீபன் செந்தில் அவர்கள் பேசுகையில் “ஜனநாயகம் சமூக நீதியை அழித்து குழந்தைகளை வேலைக்கு அனுப்பும் குலக்கல்வியை நடைமுறை படுத்தக்கூடிய தேசிய கல்விக் கொள்கையை அமுல் படுத்துகிறார்கள். நீதிமன்றம் திறக்காத சூழலில் கல்லூரியை திறந்து தேர்வை மட்டும் நடத்துவது எப்படி சரியாக அமையும்?” என்று கேள்வி எழுப்பினார்.

அத்தோடு “பெருந்தொற்று காலகட்டத்தில் இப்படி தேர்வு நடத்துவது கண்டிக்கத்தக்கது இந்த நாட்டிற்கே எதிரியாகி உள்ள இந்துத்துவா-  பாஜக கும்பலை, ஜனநாயக சக்திகள் அனைவரும் சேர்ந்து விரட்டும் நாள் எந்நாளோ அதுவே விடுதலை நாள்!” என்று தனது கண்டன உரையை பதிவு செய்தார்.

This slideshow requires JavaScript.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

அடுத்ததாக மக்கள் அதிகாரம் தோழர் ராஜ்குமார் பேசுகையில் நீட், JEE தேர்வுகள் ஒத்தி வைப்பது குறித்து உச்ச நீதிமன்றம் மனுவை தள்ளுபடி செய்தவுடன் நீட் தற்கொலைகள் தொடர்கதையாகிறது மாணவர்களின் எதிர்காலம் கேள்விக்குறி ஆகிறது இது அனைத்திற்கும் என்ன செய்வது என்று கேட்கும் பட்சத்தில் மோடி ‘பொம்மைகள்’ குறித்து ஆங்கிலத்தில் பேசி வருகிறார், இந்த விஷயத்தில் ஆட்சியாளர்களின் நிலைப்பாடு என்ன? என்பதை நாம் உற்று நோக்க வேண்டும்.

கட்டணத்தை கட்ட சொல்லி அண்ணா பல்கலைக்கழகம் மாணவர்களின் கழுத்தில் கத்தி வைக்காத குறையாக மிரட்டுகிறது. இது அநீதியானது அத்தோடு, இதற்குமுன் தேர்வு மறுகூட்டல் முறைகேடு நடந்துள்ளது. இது அனைத்தும் இந்த கல்வி கட்டமைப்பே எப்படி சிக்கலில் உள்ளது என்பதை தெளிவுபடுத்துகிறது. அதனை தொடர்ந்து அனைத்து கல்வி நிறுவனங்களையும் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் துணைவேந்தர் நியமனம் அனைத்திலும் அரசின் கைக்கூலிகளை நியமிப்பது என்பது அபாயத்திற்கு உரியது. அத்தோடு பொருளாதாரம் நெருக்கடியில் சிக்கியுள்ள நிலையில் அடித்தட்டு மாணவர்கள் எப்படி கல்வி கட்டணம் செலுத்த முடியும்? ஆர்.எஸ்.எஸ். பார்ப்பன பயங்கரவாதிகளிடமிருந்து மாணவர்கள் பெற்றோர்கள் ஆசிரியர்கள் தலைமைக்கு கல்வியை கொண்டு வர வேண்டும் என்றும் அப்பொழுதுதான் கல்வியை மீட்டெடுக்க முடியும் என்றும் தனது கண்டனத்தை பதிவு செய்தார்.

அடுத்ததாக தமிழ் புலிகள் கட்சியின் வடக்கு மாவட்ட செயலாளர் தோழர் விஜயகுமார் பேசுகையில் “நீட் தேர்வு என்பதே ஏழை-எளிய மாணவர்களை மருத்துவ படிப்பில் இருந்து வெளியேற்றவும், CBSE பாடத்திட்டத்தை அனைத்து மாநிலத்திலும் அனைத்து மாணவர்களிடமும் பொதுத் தேர்வாக திணிக்கிறது. இதுவே அனிதாவின் இறப்புக்கு காரணம். திட்டமிட்டு கல்வியில் மாநில மொழியை அழிக்கிறது மத்திய அரசு. அதேபோல் வேலை இழப்பு, சிறு வயதிலேயே வேலைக்கு அனுப்புவது என்று குலக் கல்வியை அமுல்படுத்துவதற்கு துடிக்கிறது. இதை அனைத்தையும் சமூக ஜனநாயக சக்திகள் அனைவரும் ஒன்றிணைந்து எதிர்க்க வேண்டும்.” என்று வலியுறுத்தி கண்டன உரையை பதிவு செய்தார்.

படிக்க:
நீட் தேர்வுக்கு எதிராக ! கடலூர் ஜெய் பீம் பாடசாலை மாணவர்கள் போராட்டம் !!
கொரோனா தளர்வுகள் : பொருளாதாரம் எப்போது சீரடையும் ! | பொருளாதார அறிஞர் ஜெ. ஜெயரஞ்சன் காணொளி

அதனைத் தொடர்ந்து புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி தோழர் ஆனந்த் அவர்கள் ஊடகத்திற்கு பேட்டி அளித்தார் அதில் “நீட் தேர்வின் தொடர் தற்கொலைகள், அத்தோடு அண்ணா பல்கலைக்கழகத்தின் கட்டண கொள்ளை மாணவர்களை மிரட்டும் வகையில் உள்ளதை கண்டித்தும், இதற்கு முன்னதாக மறுகூட்டலில் நடந்த முறைகேடு பற்றியும் அண்ணா பல்கலைகழகத்தின் மாணவர்கள் மீதான நிலைப்பாடு என்ன..” என்பதை அம்பலப்படுத்தி பேட்டி அளித்தார்.

அதனைத் தொடர்ந்து மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் மாவட்ட அமைப்பாளர் தோழர் ராமலிங்கம் RSS-னுடைய நீண்டகாலத் திட்டமான குறிப்பாக மாணவர்கள் மத்தியில் அவர்களின் இந்துத்துவ கொள்கையை அமல்படுத்துவது, தமிழ் மொழியின் மீது ஆதிக்கம் செலுத்துவது, பொதுத்தேர்வு.. அதனூடாக விளைகின்ற தற்கொலைகள், இன்று கல்வி நிறுவனங்களை தன் கட்டுப்பாட்டில் வைத்து, அதன் விளைவாக இந்த அண்ணா பல்கலைக் கழகத்தின் கட்டணக் கொள்ளையை தான் பார்க்கவேண்டும் என்றும், ஆன்லைன் கல்வி ஆண்ட்ராய்டு மொபைல், போன்ற பிரச்சனைகள் மாணவர்கள் பெற்றோர்களின் மன அழுத்தம், இந்த ஒட்டுமொத்த நெருக்கடி சூழலையும் அம்பலப்படுத்தி அத்தோடு இதை எதிர்த்து கேள்வி கேட்கின்ற அறிவுஜீவிகள் மீதான தாக்குதலை கண்டித்தும் தனது கண்டன உரையைப் பதிவு செய்தார்.

இறுதியாக புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி தோழர் ஆனந்த், ஆர்ப்பாட்டத்தில் கண்டன உரை ஆற்றிய தோழர்கள், தோழமை அமைப்புகள், மாணவர்கள், இளைஞர்கள், பெற்றோர்கள் என அனைவருக்கும் நன்றி தெரிவித்து உரையாற்றி முடித்தார்.

தகவல் :
மாணவர் இளைஞர் முன்னணி,
மதுரை.

***

நீட் தேர்வை ரத்து செய் ! என்ற முழக்கத்தின் அடிப்படையில் தமிழகம் முழுவதும் எமது புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி அமைப்பு 4 தேதியன்று கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடத்தியது.

கரூரில் எமது அமைப்பு ஆர்ப்பாட்டத்திற்கு தாந்தோணி மலை காவல் நிலையத்தில் அனுமதி கோரியிருந்தோம். கரூரில் ஊரடங்கு காலகட்டத்திலும் பிற அமைப்புகளுக்கு “ஆர்ப்பாட்டம் நடத்திக் கொள்ளுங்கள், ஆனால் வழக்குப் போடுவோம்..!” என காவல்துறை பிற அமைப்புகளை ஆர்ப்பாட்டங்கள் நடத்த விடுகிறார்கள்.

ஆனால் தொடர்ச்சியாகவே எமது புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி அமைப்பு நடத்தும் எந்த நிகழ்ச்சிக்கும் அனுமதி கொடுப்பது கிடையாது. குறிப்பாக சென்ற ஆண்டு நவம்பர் 7 அன்று நமது அமைப்பு தாந்தோணி மலையில் கொடிக்கம்பம் வைக்க அனுமதி கேட்டிருந்தோம். அதற்கு அனுமதி மறுத்து “திண்டுக்கல் மெயின் ரோடு என்பதாலும், நகராட்சி அலுவலகம் உள்ளது என்பதாலும், பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படும்…” என்று சொல்லிக்கொண்டு அனுமதி மறுத்தது.

ஆனால் ஒரு சில நாட்களிலேயே அதே இடத்தில் அதிமுகவுக்கு கொடிக்கம்பம் வைத்து பெரிய அளவில் எம்ஜிஆருக்கு மேடை போட்டு மைக்செட் வைத்து கூட்டம் நடத்தினார்கள் அதே இடத்தில் பல்வேறு கட்சிகள் கொடிக்கம்பம் வைத்துள்ளார்கள். இது எமது அமைப்பை ஒடுக்கும், கருத்து சுதந்திரத்தை நசுக்கும் நடவடிக்கை. எங்கு கூட்டம் நடத்த வேண்டும், என்ன பேச வேண்டும், என்ன பேச கூடாது, என்பதை தாந்தோணி மலை காவல் நிலையம் தான் முடிவு செய்வார்களாம் இதுதான் ஜனநாயகமா? இதனை கண்டித்து நேற்று காலை 11 மணி அளவில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை 9 மாணவர்கள் முற்றுகையிட்டனர் !

This slideshow requires JavaScript.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

அங்கேயும் உள்ளே செல்ல கூடாது, வாயிலேயே மனுவைக் கொடுத்து விட்டு செல்லுங்கள், என்று வரம்பு மீறி அதிகாரம் நீண்டது இரண்டு பேர் மட்டும் தான் செல்ல வேண்டும், முழக்கம் போடக்கூடாது என்று அடுக்கடுக்காக அடக்குமுறை செலுத்தினர். ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி இல்லை, கலெக்டர் பார்க்க அனுமதி இல்லை ரோட்டில் நிற்க நடக்க கூட அனுமதி இல்லையா?,என்று காவல்துறையை எதிர்த்து நின்று போராடி உள்ளே சென்று துணை ஆட்சியரிடம், மனு கொடுத்தோம்.

  • நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும்!
  • அண்ணா பல்கலைக்கழகத்திற்கு சிறப்பு அந்தஸ்து வழங்கக் கூடாது! கட்டணத்தை உயர்த்தக்கூடாது!

என்ற கோரிக்கைகளை முன்வைத்தோம். நமது போராட்டங்களுக்கு அனுமதி மறுக்க காவல்துறை சொல்லும் காரணம், “நீங்கள் தனியான கண்காணிப்புக்குள் இருக்கக்கூடிய குழுக்கள்…” இதனால் உங்களுக்கு அனுமதி கிடையாது என்பதுதான்.

பாசிசம் நம்மைச் சூழும் போது அவ நம்பிக்கை நம்மை சூழும் போது அதையெல்லாம் கிழித்துக்கொண்டு, பற்றவைக்கும் நெருப்பாக என்றும் புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி போர்க்குணமிக்க போராட்டங்களை நடத்த தயாராக இருக்கும் அவர்கள் எங்கு அனுமதி மறுத்தார்கள் அங்கேயே துளிர்விட்டு முளைப்போம்…

தகவல் :
புரட்சிகர மாணவர்- இளைஞர் முன்னணி,
கரூர்.