டெல்லியில் இரண்டு மாதங்களுக்கும் மேலாக சமரசமின்றி போராடிக் கொண்டிருக்கும் விவசாயிகளின் வீரம் செறிந்த போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வரத் துடிக்கிறது மோடி அரசு. அதற்கு உறுதுணையாக தன்னுடைய சங்கப் பரிவார கும்பலையும், தன்னை தூக்கி நிறுத்தும் ஊடகங்களையும் களத்தில் இறக்கி விட்டுள்ளது.

அந்த வகையில், ”டெல்லியின் சிங்கு எல்லைப் பகுதியில் உள்ள கிராமத்தைச் சேர்ந்த ஒரு குழுவினர், சிங்கு எல்லையில் போராடி வரும் விவசாயிகளின் போராட்டத்தால் தங்களது வர்த்தகம் பாதிக்கப்பட்டுவிட்டது எனவும், குடியரசு தின டிராக்டர் பேரணியில் தேசியக் கொடியை அவமானப்படுத்தியதால் போராட்டக் களத்தை காலி செய்ய வேண்டும்” எனவும் உள்ளூர் மக்கள் தெரிவித்ததாக செய்தி வெளியிட்டுள்ளது ANI ஊடக நிறுவனம்.

இரண்டு மாதக் காலமாக அமைதியாக நடந்த போராட்டத்தில் அந்தப் பகுதி மக்கள் இதுவரை தங்கள் வாழ்க்கை பாதிக்கப்பட்டதாக எந்தப் புகாரும் அளிக்கவில்லை. திடீரென இப்போது அவர்கள் போராட்டத்தை கலைக்க வருவதாகக் கூறுவது பொய் என்பதும் இந்து சேனா அமைப்பை சேர்ந்த குண்டர்கள்தான்  விவசாயிகள் மீது என்பது தற்போது அம்பலமாகியுள்ளது.

படிக்க :
♦ கைவிடப் போகிறோமா நமக்கான விவசாயிகள் போராட்டத்தை !
♦ சர்வதேச நோக்கில் விவசாயிகள் போராட்டத்தின் முக்கியத்துவம் !

மேலும் பல கிராமங்களில் வீட்டிற்கு ஒருவர் போராட்டத்திற்குச் செல்ல வேண்டுமென்றும், செல்லாதவர்களுக்கு அபராதம் விதிப்பதாக கிராம தலைவர்கள் கூறியிருப்பதாகவும் செய்தி வெளியிட்டுள்ளது ANI. கிராம மக்கள் மிரட்டப்பட்டு போராட்டத்தில் பங்கேற்கச் செய்யப்படுவதாக ஒரு கருத்துருவாக்கத்தை இதன் மூலம் செய்திருக்க்கிறது ANI.

இதே வகையான செய்திகளைத்தான் தி இந்து, டைம்ஸ் நவ், இந்துஸ்தான் டைம்ஸ், சி.என்.என்., நியூஸ்18, இந்தியா டுடே உள்ளிட்ட பல்வேறு ஊடகங்களும் வெளியிட்டுள்ளன.

தமிழக ‘நடுநிலை’ ஊடகங்களும், தனது பங்கிற்கு போராடும் விவசாயிகளை வன்முறையாளர்களாகவும், ஈவு இரக்கமற்றவர்களாகவும் தன்னால் இயன்ற அளவிற்கு சித்தரித்து வருகின்றன.

நடுநிலை வகிப்பதாக கூறிக் கொள்ளும் தினகரன் நாளிதழும் தன் தலையங்கத்தில் போலீசின் அடாவடித்தனத்தை ஆதரித்து எழுதியுள்ளது.

”குடியரசு தினத்தில் விவசாயிகள் டெல்லிக்குள் டிராக்டர் பேரணி நடத்த போலீசார் அனுமதியளித்தது தான் பிரச்சனை எனவும், விவசாயப் பேரணிக்கு போலீசார் ஒதுக்கிய பகல் 11.30 மணிக்கு முன்பாகவே விவசாயிகள் 9 மணிக்கே பேரணியை தொடங்கி விட்டார்கள்; யார் தடுத்தும் கேட்கவில்லை; அதனால் தான் வன்முறை மோதல் ஏற்பட்டது” எனவும், “போலீசார் பேரணிக்கு அனுமதியளித்த மூன்று பாதைகளை விட்டு செங்கோட்டையை விவசாயிகள் முற்றுகையிட்டனர்” எனவும் பிரச்சினையை திசைத்திருப்பும் கண்ணோட்டத்தில் எழுதியுள்ளது.

மேலும், பொது மக்களுக்கும், விவசாயிகளுக்கும் இருக்கும் தொடர்பை துண்டிக்கும் வகையில் காசிபூர், சிங்கு, திக்ரி விவசாயிகள் போராட்டம் நடைபெறும் எல்லைப் பகுதியில் 31-ம் தேதி நள்ளிரவு 11 மணிவரை இணைய சேவை முடக்கத்தை அறிவித்துள்ளது மத்திய உள்துறை அமைச்சகம்.

இதுவரையில் ஊடகங்களின் பொய்யை, விவசாயிகள் மற்றும் அப்பகுதி மக்களின் சமூக வலைத்தளப்பதிவுகளில் இருந்து தெரிந்து கொள்ளக் கிடைத்த வாய்ப்பையும் தற்போது பறித்துள்ளதன் மூலம், பொய் செய்திகளை பரப்பும் ஊடகங்களுக்கு நல் வாய்ப்பை வழங்கியுள்ளது.

இரண்டு நாட்களுக்கு முன்னர், புதுடெல்லியின் இஸ்ரேலிய தூதரகத்திற்கு வெளியே குண்டு வெடித்த சம்பவத்தைப் பயன்படுத்தி டெல்லியிலும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளிலும் மேலதிகமான படைகளை டெல்லியில் குவித்துள்ளது.

விவசாயிகள் போராடும் எல்லைப் பகுதிகளில் அரசு மூலம், தண்ணீரை நிறுத்துவது, மின்சாரத்தை நிறுத்துவது என்ற வகையில் பல இடர்பாடுகளைக் கொடுத்துக் கொண்டிருக்கும் அதே சமயத்தில், சங்கபரிவாரக் கிரிமினல் கும்பல்களின் மூலம் கலவரத்தைத் தூண்டும் வேலையைச் செய்து வருகிறது மோடி அரசு.

போலீசும் ஊடகங்களும் அதற்கான அடியாள் வேலையைச் செவ்வனே செய்து வருகின்றன!!

மேகலை

 

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க