ந்தியாவில் வெளிவரும் முதலாளித்துவ ஆங்கிலப் பத்திரிகைகளில் வெகு சில பத்திரிகைகளே மோடி மற்றும் பாசிச எதிர்ப்பில் முன்னணியில் நிற்கின்றன. அந்த வகையில் மோடியின் பாசிசத்தை, செருப்பாலடித்தாற் போன்ற ஒற்றை வரித் தலைப்புகளின் மூலம் அம்பலப்படுத்துவதில் தனிச்சிறப்பான புகழைப் பெற்ற நாளிதழ்தான் மேற்கு வங்க மாநிலத்தில் வெளிவரும் “தி டெலிகிராப்”.

கடந்த செவ்வாய்க்கிழமை (09-02-2021) நாடாளுமன்றத்தில் மாநிலங்களவையில் இருந்து குலாம் நபி ஆசாத் ஓய்வு பெறுவதை ஒட்டி மோடி பேசினார். பேசிக் கொண்டிருக்கும் போதே கண்ணீர் சிந்தினார் மோடி. நா தழுதழுத்து பேச முடியாமல் நின்ற அவர், ஒரு மிடக்கு தண்ணீரை குடித்துவிட்டு மீண்டும் பேசினார். இதை ஒட்டி ஒரு “சரியான விடையைத் தேர்ந்தெடு” பாணியிலான கேள்வியை தனது பத்திரிகையில் வெளியிட்டது தி டெலிகிராப் நாளிதழ். அதனை சிறிது விரித்து எழுதி கீழே கொடுத்திருக்கிறோம்.

000

செவ்வாய்க் கிழமையன்று ராஜ்யசபாவில் பிரதமர் நரேந்திர மோடி நா தழுதழுத்து அழுததால், அவர் பேசுவதற்கு முன்னால் ஒரு குவளை நீர் அருந்த வேண்டியதாகிவிட்டது.

பிரதமர் மோடி நா தழுதழுத்தது ஏன் ? சரியான பதிலை தேர்ந்தெடுக்கவும் !

அ) கடும் பனியிலும் குளிரிலும் இரண்டு மாதங்களாக வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறக்கோரி போராடிவரும் விவசாயிகளில் 200க்கும் அதிகமானோர் தங்கள் உயிரை தியாகம் செய்ததற்காக …

ஆ) கொரோனாவுக்காக பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கால் ரயில் தண்டவாளத்திலும், சாலை ஓரங்களிலும் அடிபட்டும், பட்டினியாலும் இறந்த இடம்பெயர் தொழிலாளர்களுக்காக…

இ) ஹத்ராஸில் இளம்பெண் ஒருவர் ஆதிக்க சாதி வெறியர்களால் கொடூரமாக பாலியல் வன்கொலை செய்யப்பட்டததற்காக …

ஈ) மனித உரிமை ஆர்வலர்களான சுதா பரத்வாஜ், ஸ்டேன் சாமி, நோதீவ் கவுர், நடாஷா நார்வால், உமர் காலித் உள்ளிட்ட செயல்பாட்டாளர்கள் சிறையிலடைக்கப்பட்டதற்காக ..

உ) ஹத்ராஸ் பாலியல் வன்கொலை வழக்கு குறித்து செய்தி சேகரிக்கச் சென்ற சித்திக் காப்பான் என்ற கேரள பத்திரிகையாளர் எந்தவொரு முகாந்திரமும் இல்லாமல் சிறையில் அடைக்கப்பட்டதற்காக..

ஊ) நகைச்சுவை பேச்சாளர் முனாவர் ஃபரூக்கி, ஒரு மாதத்துக்கும் மேலாக சிறையில் அடைக்கப்பட்டதற்காக…

எ) ஜனநாயகக் குறியீட்டில் இந்தியா மிகவும் பின்னோக்கிச் சென்றதற்காக…

ஏ) சுதந்திரத்துக்குப் பின்பான காலக்கட்டத்தில் மிக மோசமான பொருளாதார சீரழிவில் நாடு சிக்கியதற்காக…

ஐ) விவசாயிகளின் போராட்டம் குறித்து சர்வதேச சமூகம் எழுப்பிய கண்டனக் குரல் காரணமாக…

ஒ) தாம் கொண்டுவந்த வேளாண் சட்டங்களுக்கு முட்டுக் கொடுத்துப் பேச, முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங்கை முன் வைத்து பேச நேர்ந்ததற்காக…

ஓ) காங்கிரஸ் எம்.பி.யும் காஷ்மீரைச் சேர்ந்தவருமான குலாம் நபி ஆசாத்தின் மாநிலங்களவை பதவிக்காலம் முடிவடைந்ததால் அவருக்கு பிரிவுபச்சாரம் அளித்த போது மோடியும் குலாம் நபி ஆசாத்தும் முறையே குஜராத் மற்றும் காஷ்மீரின் முதல்வராக இருந்த காலகட்டத்தில் நடந்த நிகழ்வு குறித்து நினைவு கூர்ந்தார் மோடி. குஜராத்தைச் சேர்ந்த புனிதயாத்திரை பக்தர்கள் காஷ்மீரில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பலியானது குறித்து மோடிக்கு தொலைபேசியில் பேசும்போது ஆசாத் அழுது கொண்டே அந்தத் தகவலை தெரிவித்ததாக மோடி கூறினார். இந்த சம்பவததை நினைவுகூர்கையில்…

ஔ) டொனால்ட் டிரம்ப் தோல்வியுற்றதற்காக..

விடை : ஓ

000

படிக்க :
♦ மோடியின் படிப்பு – என்ன ஒரு நடிப்பு !
♦ கருப்புப் பணம் : மோடியின் கறைபடிந்த நாடகம் !

ஆம், குலாம் நபி ஆசாத்திற்கு பிரியாவிடை தந்து பேசியபோதுதான் மோடி கண்ணீர் விட்டார். ஒரு தேர்ந்த நடிகனாக நாட்டின் தலைமை பதவியில் அமர்ந்திருக்கும் பிரதமரின் நாடாளுமன்ற கண்ணீர் நடிப்பு, மற்றுமொரு எபிஸோடாக முடிந்திருக்கிறது. நாடே தமக்கு எதிராக கொந்தளித்து நிற்கும் சூழலில், அதனை திசை திருப்புவதற்கான ஆயுதம் தான் இந்த ஏழைத்தாயின் மகன் வடிக்கும் கண்ணீர் என்பது பணமதிப்பழிப்புத் திட்ட தோல்வி சமயத்திலேயே இந்தியா பார்த்துவிட்டது. இப்போது மீண்டும் அதே ஆயுதத்தை எடுத்து ஆடப் பார்க்கிறார் மோடி !

நன்றி: டெலிகிராப் இந்தியா
கலைமதி