ந்து ராஷ்டிரத்தின் சோதனைச்சாலையான உத்திரப் பிரதேசத்தில் தாழ்த்தப்பட்ட, சிறுபான்மையினர் மீதான தாக்குதல்கள் மிகக் கொடூரமான முறையில் அரங்கேறி வருகின்றன. கடந்த 2020−ம் ஆண்டில் மட்டும் தலித் மக்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் சம்பவங்கள் தேசிய சராசரி அளவினைக் காட்டிலும் உ.பி.யில் அதிகம் நடைபெற்றதாக, தேசியக் குற்ற ஆவணக் காப்பகம் (NCRB) சமீபத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையின் மூலம் தெரியவந்துள்ளது.

உ.பி.யின் மக்கள் தொகையில் 21 சதவீதமுள்ள தாழ்த்தப்பட்ட மக்களுக்கு எதிராக, கடந்த ஆண்டில் மட்டும் மொத்தம் 12,714 தாக்குதல்கள் தொடுக்கப்பட்டிருக்கின்றன. நாடு முழுவதும் தாழ்த்தப்பட்டோர் மீது நிகழ்த்தப்படும் தாக்குதல்களில் இது 25.3 சதவிகிதமாகும். தேசிய அளவில் தாழ்த்தப்பட்டோர் மீதான தாக்குதல்கள் (ஒரு லட்சம் தாழ்த்தப்பட்ட மக்களில்) 25.4 சதவிகிதமென்றால், உ.பி. மாநில அளவில் மட்டும் அது 30.7 சதவிகிதம் என்ற அளவில் உள்ளது. இது நான்கில் ஒரு பங்காகும்.

படிக்க :

யோகி ஆட்சியில் உ.பி : பாலியல் வன்முறையின் தலைநகரம் !

முசாஃபர் நகரில் மோடி – ஆர்.எஸ்.எஸ்-ன் உண்மை முகம்

என்.சி.ஆர்.பி. அளித்துள்ள குற்றப் புள்ளிவிவரங்கள் பின்வருமாறு:

உ.பி−ல் தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினருக்கு (எஸ்.சி/எஸ்.டி) எதிராக கடந்தாண்டு மட்டும் 10,138 குற்றங்கள் (இந்திய தண்டனைச் சட்டத்துக்கு (IPC) உட்பட்டவை) நடந்துள்ளன. இது தேசியளவில் நடத்தபட்ட 45,959 குற்ற சம்பவங்களில் மொத்தம் 22.5 சதவிகிதமாகும். உ.பி.யின் 24.5 சதவிகிதமானது தேசிய அளவிலான 23.3 சதவிகிதத்தை விட அதிகம்.

எஸ்.சி/எஸ்.டி மக்களுக்கு எதிராக கடந்தாண்டு மட்டும் 2,576 குற்றங்கள் (IPC−க்கு உட்படாதவை) நடந்துள்ளன. இது தேசியளவில் நடத்தபட்ட 4,232 குற்ற சம்பவங்களில் மொத்தம் 34 சதவிகிதமாகும். உ.பி.யின் 6.2 சதவிகிதமானது தேசிய அளவிலான 2.1 சதவிகிதத்தை விட மூன்று மடங்கு அதிகம்.

2020−ம் ஆண்டில், 214 தலித் கொலை வழக்குகள் பதிவாகியுள்ளன, இது தேசியளவில் நடந்த 855 கொலை வழக்குகளில் 25 சதவிகிதமாகும். உ.பி.யின் 0.5 சதவிகிதமானது தேசிய அளவிலான 0.4 சதவிகிதத்தை விட அதிகம்.

எஸ்.சி/எஸ்.டி மக்கள் மீது கடந்தாண்டு மட்டும் 417 கடுமையான தாக்குதல்கள் (ஊனமாக்கப்பட்டோர்) நிகழ்ந்துள்ளன. இது தேசியளவில் நடத்தபட்ட 1,587 குற்ற சம்பவங்களில் மொத்தம் 26 சதவிகிதமாகும். உ.பி.யின் 1.0 சதவிகிதமானது தேசிய அளவிலான 0.8 சதவிகிதத்தை விட அதிகம்.

தாழ்த்தப்பட்ட பெண்கள் கடத்தல் குற்றங்கள் கடந்தாண்டு மட்டும் 381 நடந்துள்ளன. இது தேசியளவில் நடத்தபட்ட 853 குற்றங்களில் மொத்தம் 45 சதவிகிதமாகும். உ.பி.யின் 0.9 சதவிகிதமானது தேசிய அளவிலான 0.4 சதவிகிதத்தை விட இருமடங்கு அதிகம்.

கட்டாய திருமணத்திற்காக கடத்தப்பட்ட தாழ்த்தப்பட்ட பெண்களுக்கு எதிராக 2020−ஆம் ஆண்டில் 269 குற்றங்கள் நடந்துள்ளன. இது தேசியளவில் நடத்தபட்ட 394 குற்றங்களில் மொத்தம் 68 சதவிகிதமாகும். உ.பி.யின் 0.7 சதவிகிதமானது தேசியளவிலான 0.2 சதவிகிதத்தை விட மூன்று மடங்கு அதிகம்.

தாழ்த்தப்பட்ட பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு எதிரான கடந்த ஆண்டு 604 பாலியல் வன்கொடுமைகள் நடந்துள்ளன. இது, தேசியளவில் நடத்தபட்ட 3,368 வன்கொடுமைகளில் மொத்தம் 24 சதவிகிதமாகும். இது உ.பி.யில் 1.5 சதவிகிதமும் தேசிய அளவில் 1.7 சதவிகிதமும் பதிவாகியுள்ளது.

உ.பி.யில் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு எதிராக கடந்த ஆண்டு 324 கலவரங்கள் நடந்தப்பட்டன. இது தேசியளவில் நடத்தப்பட்ட 1,445 கலவரங்களில் 23 சதவிகிதமாகும். உ.பி.யின் 0.8 சதவிகிதமானது தேசிய அளவிலான 0.7 சதவிகிதத்தை விட அதிகம்.

தாழ்த்தப்பட்ட மக்களுக்கு எதிராக 1,379 கொலை மிரட்டல்கள் (IPC பிரிவு 506) ஆதிக்க சாதியினரால் விடுக்கப்பட்டுள்ளன. இது தேசியளவிலான 3,786 மிரட்டல் வழக்குகளில் மொத்தம் 37 சதவிகிதமாகும். உ.பி.யின் 3.3 சதவிகிதமானது தேசிய அளவிலான 1.9 சதவிகிதத்தை விட இரண்டு மடங்கு அதிகம்.

கடந்த ஆண்டு மட்டும் 1,642 தாழ்த்தப்பட்ட மக்களுக்கு எதிரான இதர தாக்குதல்கள் நடந்துள்ளன. இது தேசியளவில் நடத்தபட்ட 2,312 தாக்குதல்களில் மொத்தம் 71 சதவிகிதமாகும். உ.பி.யின் 4.0 சதவிகிதமானது, தேசிய அளவிலான 1.2 சதவிகிதத்தை விட நான்கு மடங்கு அதிகம்.

000

படிக்க :

ஆவணப்படம் : “உப்பிட்டவரை…” | ம.க.இ.க.

தேசிய பணமாக்கல் திட்டம் : நோக்கமும் பின்னணியும் !

தற்போது வெளியாகியிருக்கும் தேசிய குற்றவியல் அறிக்கையின் புள்ளி விவரங்கள், இந்துவெறி பாசிஸ்டுகள் ஆளும் உத்தரப்பிரதேச மாநிலமானது, தாழ்த்தப்பட்ட மக்களின் வதைக்கூடமாக மாறியுள்ளதைப் படம் பிடித்துக் காட்டுகிறது.

ஆனால், இந்த விவரங்கள் கூட உ..பி. போலீசால் பதிவு செய்யப்பட்ட வழக்குகளின் அடிப்படையில் கணக்கிடப்பட்டவைதான். இந்துவெறி கும்பலால் தாக்குதலுக்குள்ளான எண்ணற்ற தாழ்த்தப்பட்ட மக்கள் அச்சத்தால் புகார் அளிக்காமல் இருப்பதும், புகாரைப் பதிவு செய்யாமல் குற்றவாளிகளுக்கு ஆதரவாக செயல்படும் போலீசின் நடவடிக்கையையும் இணைத்துப் பார்த்தால், இவையெல்லாம் அற்பமானவை என்பதையும், தேசிய குற்றவியல் அறிக்கை உண்மை நிலையை வெளிக்கொணரவில்லை என்பதையும் புரிந்துகொள்ள முடியும்.


ஆதிரை

1 மறுமொழி

  1. முதலாளித்துவத்திற்கு எதிரான மாற்று அரசியல் என்பதை விட மாற்று அமைப்பு உங்களை போன்றோர் இருந்தால் காலனி ஆதிக்கம் ,சாதி வேறுபாடு ,மத பிரச்சனைகள் இவை அனைத்தும் வேரோடு அழிக்கப்படும்

Leave a Reply to SILAMBARASAN RAJENDIRAN பதிலை ரத்து செய்க

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க