டந்த ஓராண்டில் மட்டும் உலக அளவில் அதிகமான சொத்துக்களை சேர்ந்தவர்கள் வரிசையில் அதானி முதல் இடத்தில் இருப்பதாக ஆண்டுதோறும் உலக அளவில் பணக்கரர்களின் சொத்துக்களை மதிப்பிடும் M3M Hurun என்ற நிறுவனத்தின் ஆய்வில் தெரியவந்துள்ளது. 2020 மற்றும் 2021  ஆகிய இரண்டு ஆண்டுகள் உலகம் முழுவதும் கொரோனா பேரிடர் மற்றும் பிற காரணங்களால் பொருளாதாரம் மிகவும் மந்த நிலையில் இருந்தது. இந்த காலகட்டத்தில் இந்தியாவில் தொழிற்சாலைகள் மூடல், வேலையிழப்பு,  பசி, பட்டினி போன்ற நிகழ்வுகள் அதிகரித்து இருந்தன. இதே ஆண்டில்தான் இந்தியாவின் இயற்கை வளங்களையும், இந்திய மக்களையும் சுரண்டி கொழுத்த ஒரு கூட்டத்தின் சொத்து மதிப்புகள் பற்றிய விவரங்கள் தற்போது வெளியாகி உள்ளன.
இந்த ஆண்டிற்கான உலக பணக்காரர்களுகன பட்டியலை M3M Hurun அமைப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி, ஆசியா மற்றும் இந்திய அளவில் அதிக பணக்காரர் பட்டியலில் அதானி இரண்டாவது இடத்திலும் அம்பானி முதல் இடத்திலும் உள்ளனர். உலக அளவில் எலோன் மஸ்க் முதல் இடத்திலும்,  ஜெஃப் பெசோஸ் மற்றும் பெர்னார்ட் அர்னால்ட் ஆகியோர் முறையே இரண்டாவது மற்றும் மூன்றாவது இடத்திலும், அம்பானி எட்டாவது இடத்திலும்  உள்ளனர் என்று அந்த நிறுவனத்தின் தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
படிக்க :
அதானியின் சொத்து மதிப்பு ஒரே ஆண்டில் 261 சதவிகிதம் உயர்வு !
பணக்காரர்கள் எப்படி உலகப் பணக்காரர்கள் ஆனார்கள் ?
எண்ணெய் மற்றும் சில்லறை வர்த்தகத்தில் ஈடுபட்டு வரும் ரிலையன்ஸ் நிறுவனத்தின் உரிமையாளரான முகேஷ் அம்பானி, 103 பில்லியன் டாலர் சொத்து மதிப்புகளுடன் இந்தியாவில் முதல் இடத்தில் உள்ளார். கடந்த ஆண்டில் மட்டும் இருவருடைய சொத்து மத்திப்பு 24 சதவீதம் அதிகரித்துள்ளது. அதானி 81 பில்லியன் டாலர் சொத்துகளுடன் இரண்டாவது இடத்தில் உள்ளார். கடந்த ஆண்டில் மட்டும் இவரின் சொத்து மதிப்பு 153  சதவீதம் அதிகரித்துள்ளது. துறைமுகம் மற்றும் எரிசக்தி சார்ந்த துறையில் இவரது நிறுவனம் ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
அம்பானியின் சொத்து மதிப்பு ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு 45 பில்லியன் டாலராகவும், 10 ஆண்டுகளுக்கு முன்பு 20.5 பில்லியன் டாலராகவும் இருந்தது. அதானியின் மதிப்பு 10 ஆண்டுகளுக்கு முன்பு 8.8 பில்லியன் டாலராகவும், ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு 14 பில்லியன் டாலராகவும் இருந்தது.
அதானியின் சொத்து மதிப்பு கடந்த பத்தாண்டில் மட்டும் 1,830 சதவீதம் அதிகரித்து அம்பானியை பின்னுக்கு தள்ளி அதிகமான சொத்துக்களை சேர்த்துள்ளார். அம்பானியின் சொத்து மதிப்பு கடந்த 10 ஆண்டுகளில்  400 சதவீதம் மட்டுமே அதிகரித்துள்ளது. ஹெச்.சி. எல் நிறுவனத்தின் தலைவர் ஷிவ்நாடார் 28 பில்லியன் டாலர் சொத்துக்களுடன் இந்தியாவில் மூன்றாவது இடத்திலும், சீரம் இன்ஸ்டியூட் சைரஸ் பொன்னவாலா 26 பில்லியன் டாலர் மற்றும் லட்சுமி மிட்டல் 25 பில்லியன் டாலர் சொத்துக்களுடன் நான்காவது மற்றும் 5 வது இடத்திலும் உள்ளனர்.
உலகத்திலேயே கடந்த ஓராண்டில் மட்டும் அதிக சொத்துக்க்ளை சேர்த்தவர்கள் பட்டியலில் அதானி தான் முதல் இடத்தில் உள்ளார். (49 பில்லியன் அமெரிக்க டாலர்). இவர், உலகபணக்காரர்கள் பட்டியலில் முதல் மூன்று இடங்களை பிடித்தவர்களை விட அதிகமான சொத்துக்களை கடந்த ஆண்டில் மட்டும் சேர்த்துள்ளார். 2021 ம் ஆண்டில் மட்டும்  அதானி நிறுவனத்தின் சொத்து மதிப்பு  அதிகரித்து தற்போது 81 பில்லியன் அமெரிக்க டாலராக உள்ளது. கூகுள் இணை நிறுவனர் லாரி பேஜ், செர்ஜி பிரின் மற்றும் ஆடம்பர பொருட்களின் நிறுவனமான LVMH –ன்  நிறுவனர் பெர்னார்ட் அர்னால்ட் ஆகியோர் 39 பில்லியன் சொத்துக்களை சேர்த்து 2 வது இடத்தில் உள்ளனர். ஆனால் அம்பானி 2021 ம் ஆண்டில் 20 பில்லியன் டாலர் தான் சொத்து சேர்த்துள்ளார்.
படிக்க :
அம்பானி – அதானி கொழுக்கவே வேளாண் சட்டத் திருத்தம்!
அதானிக்கு ரூ.100 கோடி அள்ளிக் கொடுக்கும் மோடியின் சதி அம்பலம் !
உலகத்தில் உள்ள 3,381 பணக்காரர்கள் வெறும் 69 நாடுகளை சேர்ந்தவர்களாகவே உள்ளனர். கடந்த 10 ஆண்டில் மட்டும் இந்தியவை சேர்ந்த பணக்காரர்கள் சம்பாதித்த 700 பில்லியன் டாலர் என்பது சுவிட்சர்லாந்து நாட்டின்  ஜி.டி.பி. க்கு இணையாகவும், ஐக்கிய அரபு அமிரகம் நாட்டின் ஜி.டி.பி. யின் இரண்டு மடங்குக்கு சமமாகும். இந்தியாவில் உள்ள 215 பணக்காரர்கள்  சீனாவை சேர்ந்த 1,133  பணக்காரர்களுக்கும், 716 அமெரிக்க பணக்கரர்களின் சொத்துகளுக்கும் இணையாக தனது சொத்தை அதிகப்படுத்தி உள்ளனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு கார்ப்பரேட்களுக்கு வேலை செய்யவே மோடி தலைமையிலான இந்த காவி கும்பல் வேலை செய்து வருகிறது. இருந்தாலும் மோடியால் மிகப்பெரிய பணக்காரராக உருவாக்கப்பட்டவரும் அவரின் நெருங்கிய நண்பருமான அதானியின் சொத்து மதிப்பு மிகப்பெரிய அளவில் உயர்ந்துள்ளது. ஒரு வேளை சோறு இல்லாமல் சாவு ஒரு பக்கம். உலக பணக்காரர்களுடன் போட்டிபோடும் இந்திய முதலாளிகளின் வளர்ச்சி ஒரு பக்கம். இந்த ஏற்றத்தாழ்வை அகற்றும் காலம் எப்போது..?கார்ப்பரேட்களின் வளர்ச்சியைதான் இந்தியாவின் வளர்ச்சி என வாய்சவடால் அடித்து வரும் இந்த காவி கும்பலை கருவருக்காமல் நமக்கு விடிவேதும் இல்லை.

வினோதன்
செய்தி ஆதாரம் : தி வயர்

1 மறுமொழி

Leave a Reply to பகத்சிங் பதிலை ரத்து செய்க

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க