நினைவில் கொள், இது தமிழ்நாடு! தீரனும் திப்புவும்

உனக்கு திப்பு சுல்தானையும் தெரியாது. பல்லாயிரக்கணக்கான இளைஞர்களை திரட்டி கொண்டு போய் திப்புவுக்கு ஆதரவாக போர் செய்த தீரன் சின்னமலையையும் உனக்கு தெரியாது.

நினைவில் கொள், இது தமிழ்நாடு! தீரனும் திப்புவும்

மது ஒழிப்பு போராளி தியாகி சசிபெருமாளின் பிறந்த நாளான இன்று பூரண மதுவிலக்கை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்துக்கு ஏற்பாடு செய்திருந்தார் தோழர் சுந்தர். அதில் கலந்து கொண்ட பிறகு தாம்பரம் செல்லும்  ரயிலில் ஏறினேன்.

எழும்பூர் ரயில் நிலையத்தில் இருந்து ஆறு பேர் ஏறி எனது இருக்கைக்கு அருகில் அமர்ந்தனர். பொதுவாகவே தமிழர் அல்லாதவர் என்றாலே நான் விரும்பி பேச ஆரம்பிப்பேன். அவர்கள் யார் எங்கிருந்து வந்தார்கள் அவர்கள் பண்பாடு, உணவு முறை, தமிழ்நாட்டைப் பற்றி என்ன நினைக்கிறார்கள்? இப்படி பலவற்றை நான் பலரிடமும் விவாதித்து இருக்கிறேன். இன்றைக்கு கிடைத்தது வித்தியாசமான அனுபவம்.

அந்த ஆறு பேரும் கர்நாடகாவின் மங்களூரைச் சேர்ந்தவர்கள். அனைவரும் சுமாராக 40 வயதுகளில் இருப்பவர்கள். நேரு ஸ்டேடியத்தில் நடக்கும் விளையாட்டுப் போட்டிகளில் கலந்து கொள்வதற்காக வந்திருக்கிறார்கள். தி நகரில் உள்ள போத்தீஸுக்கு செல்வதற்காக வந்திருக்கிறார்கள்.

படிக்க : இன்று நமக்கு அஸ்திவாரக் கற்கள்தான் தேவை!

என் எதிரில் அமர்ந்திருந்தவரிடம் “திப்பு சுல்தான் மங்களூரை ஆட்சி செய்தாரா?” என்று கேட்டேன்.

அதற்கு பதில் இன்னொருவர் சொன்னார் “இல்லை. சிவாஜி ஆட்சி ஆட்சி செய்தார்”

அவர்களில் இருந்த இன்னொருவர் “சிவாஜி மகாராஷ்டிராவை ஆட்சி செய்தார்” என்று கூறி யாரோ ஒரு அரசியல் பெயரை சொன்னார்.

மங்களூரை சிவாஜி ஆட்சி செய்ததாக கூறிய நபர், தனது கட்டை விரலை கீழ்நோக்கி காட்டியவாறு “திப்பு கெட்டவர்” என்றார்.

“உனக்குத் திப்புவின் வரலாறு சரியாக தெரியாது” என்றேன்.

“எனக்கு திப்புவின் வரலாறு தெரியும். அவர் கெட்டவர்” என்றார்.

“உன் வரலாறு மட்டும் அல்ல நீயும் சரியானவர் அல்ல” என்றேன்.

“உன்னுடைய பெயர் என்ன?” என்றான்.

என்னுடைய பெயரை சொன்னேன். இரண்டு மூன்று முறை அவன் உச்சரித்துப் பார்த்தான்.

“நீ என்ன இந்துவா? முஸ்லிமா?” என்றான்.

“நான் என்ன மதம் என்று கூறினால்தான் பதில் சொல்வாயா?” என்றேன்.

“திப்பு சுல்தான் நிறைய இந்துக்களை கொன்றிருக்கிறார் உனக்கு தெரியுமா?” என்றான்.

“திப்பு இந்துக்களைக் கொன்றதற்கான சான்றுகளை ஏதாவது இருக்கிறதா? தமிழ்நாட்டின் சில பகுதிகளையும் அவர் ஆட்சி செய்திருக்கிறார். தமிழ்நாட்டில் அவர் எந்த ஒரு இந்துவையும் கொன்றதற்கான கதைகளும் கிடையாது, சான்றுகளும் கிடையாது. ஏதாவது டாக்குமென்ட்(ஆதாரம்) இருந்தால் கொடு” என்றேன்.

படிக்க : பாசிச எதிர்ப்பு – க்ரியா ஊக்கிகளும், நவீன அராஜகவாதிகளும் – ஒரு பார்வை

“உனக்கு திப்பு சுல்தானையும் தெரியாது. பல்லாயிரக்கணக்கான இளைஞர்களை திரட்டி கொண்டு போய் திப்புவுக்கு ஆதரவாக போர் செய்த தீரன் சின்னமலையையும் உனக்கு தெரியாது. ஆனால் எங்களுக்கு எல்லாம் தெரியும். அந்த உண்மை தெளிவாக புரியும். திப்பு சுல்தானும் தீரன் சின்னமலையும் எங்கள் தலைவர்கள்” என்றேன்.

வாயை மூடிக்கொண்டு அமைதியாக இருந்தான்.

“நினைவில் கொள், இது தமிழ்நாடு!” என்றேன். அதற்குப் பிறகு அவன் என் கண்களை பார்க்கவே இல்லை.

(அவர்களோடு ஆங்கிலத்தில் நடந்த உரையாடல் இது)

– மருது