குஷ்புவும் செருப்பும்

வந்தாரை எல்லாம் வாழ வைத்ததா சென்னை?
இல்லை
சேரிகள் தான்
வாழ வைத்தன

வைகையின்
காவிரியின்
தாமிரபரணியின்
பெருமையை பேசுவோர்க்கு
கூவத்தின் பண்பாடு
அறிவது கடினமே

சேரி என்றால் அன்பு
அதை நீ சொல்லி
நான் தெரிந்து கொள்ள வேண்டிய அவசியமில்லை

சாதி கேட்காத ஊர்
சொர்க்கம் என்றால்
சேரி தான் சொர்க்கம்

சேரியின் அன்பும்
அரவணைப்பும்
அக்கிரகாரத்தில் தேடினாலும் கிடைக்காது

துரத்தியடிக்கப்பட்டவர்களுக்கும் விரட்டியடிக்கப்பட்டவர்களுக்கும்
இல்லாதவர்களுக்கும்
மறு வீடு சேரிதான்

கேட்டாலும் தண்ணீர் கொடுக்காத ஊரும்
கேட்காமலே சோற்றை போடும் சேரியும் ஒன்றல்ல
எப்போதும் ஒன்றல்ல
அதனால்தான் ஊரும் சேரியும் எப்போதும் பிரிந்து இருக்கிறது

இங்கு இருந்தால்
பெண் கிடைக்காது
மாப்பிள்ளை கிடைக்காது
வேலை கிடைக்காது
தண்ணீர் கிடைக்காது
எதுவும் கிடைக்காமல் போனாலும்
சேரிதான் சொர்க்கம்

எல்லோருக்கும் இங்கு
இடமுண்டு

கர்த்தரை நம்பி கைவிடப்படாமலிருப்போரின் எண்ணிக்கை தெரியாது

ஒன்று மட்டும் உண்மை
சேரியை நம்பினோர் ஒருபோதும் கைவிடப்படார்

இழிவுபடுத்த நீ சேரியை உவமையாக காட்டினால்
நான் உன்னை என்னவென்று சொல்வேன்

நாய், பூனை, எலி, பன்றி
என எல்லாம் நாங்கள் நேசிப்பவைத்தானே!

சக மனிதனை
தீண்டப்படாதவன் ஆகவும்
சூத்திரன் ஆகவும் பிரித்து வைக்கும் உங்கள் வேதத்துக்கு சேரி எப்போதும் கசக்கத்தான் செய்யும்

குஷ்பூ

உன் பெயரை விட இழிவான ஒரு சொல் கிடைக்குமா என்ன?

இனியும் சேரியை இழிவாகப் பேசினால்
குஷ்பூவுக்கு
கவிதைகள் பதில் சொல்லப் போவதில்லை
சேரியின் செருப்புகளே
பதில் சொல்லும்.


தோழர் மருது

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube



விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க