நெடுஞ்சாலைத்துறை சாலைப் பணியாளர்களின் தமிழ்நாடு தழுவிய ஆர்ப்பாட்டம்

சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பின்படி, சாலைப் பணியாளர்களின் 41 மாத பணி நீக்க காலத்தை பணிக்காலமாக முறைப்படுத்தி ஆணை வழங்க வேண்டும்; சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பிற்கு எதிராக மேல் முறையீடு செய்வதை தமிழ்நாடு அரசு கைவிட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ”தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலைப் பணியாளர்கள் சங்கம்” (Tamil Nadu Highways Road Employees Association – TNHREA) சார்பாக ஜூன் 12 அன்று மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கண்களில் கருப்பு துணி கட்டியும் கருப்புக்கொடி ஏந்தியும் பணியாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

திருச்சி:

திருச்சி நெடுஞ்சாலைத்துறை கோட்ட பொறியாளர் அலுவலக வளாகத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலைப் பணியாளர்கள் சங்க திருச்சி மாவட்டத் தலைவர் ஜீவானந்தம் தலைமை வகித்தார். கோரிக்கைகளை விளக்கி திருச்சி மாவட்டச் செயலாளர் இளங்கோவன் பேசினார்.

பெரம்பலூர்:

பெரம்பலூர் மாவட்ட தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலை பணியாளர்கள் சங்கம் சார்பில், பெரம்பலூர் நெடுஞ்சாலைத்துறை கோட்டப் பொறியாளர் அலுவலகம் முன்பு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு கோட்டத் தலைவர் ராஜ்குமார் தலைமை வகித்தார். கோரிக்கைகளை விளக்கி கோட்டச் செயலாளர் சி. சுப்பிரமணியன் உரையாற்றினார். மாநில செயற்குழு உறுப்பினர் சுப்பிரமணியன், மாநில இணைச் செயலாளர் இளையராஜா ஆகியோர் கோரிக்கைகள் குறித்துப் பேசினர். ஆர்ப்பாட்டத்தில் சங்க நிர்வாகிகள் உறுப்பினர்கள் என 50-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

நாமக்கல்:

நாமக்கல் நெடுஞ்சாலைத்துறை கோட்ட பொறியாளர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு சங்க மாவட்ட தலைவர் ஜாகீர்உசேன் தலைமை வகித்தார்

மாவட்ட துணைத் தலைவர் வேலு, செயலாளர் ரவி, அரசு ஊழியர் சங்க மாவட்டச் செயலாளர் முருகேசன், பொருளாளர் மயில்சாமி, முதுநிலை கால்நடை மேற்பார்வையாளர் சங்க மாநில தலைவர் இளங்கோவன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

கரூர்:

கரூர் தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலைப் பணியாளர் சங்கத்தின் கரூர் மாவட்டக் குழு சார்பில், செல்லாண்டிபாளையத்தில் உள்ள நெடுஞ்சாலைத்துறை கரூர் கோட்ட பொறியாளர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. நெடுஞ்சாலை பராமரிப்பு பணியை தனியாருக்கு வழங்கும் கொள்கை முடிவைக் கைவிட்டு அரசே ஏற்று நடத்த வேண்டும்; காலி பணியிடங்களை கிராமப்புற இளைஞர்களைக் கொண்டு நிரப்ப வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளும் முன்வைக்கப்பட்டன. ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத்தின் மாவட்ட தலைவர் கே. செவந்திலிங்கம் தலைமை வகித்தார். தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் பொன். ஜெயராம், மாவட்ட தலைவர் எம்.எஸ். அன்பழகன், நெடுஞ்சாலைத்துறை சாலை பணியாளர் சங்க மாவட்டச் செயலாளர் எஸ். பாலசுப்பிரமணி உள்ளிட்டோர் கண்டன உரையாற்றினர். ஆர்ப்பாட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

திருப்பூர்:

நெடுஞ்சாலைத்துறை சாலைப் பணியாளர் சங்கம் சார்பில் திருப்பூர் கோட்ட பொறியாளர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கோட்ட தலைவர் ஆர்.கருப்பன், இணை செயலாளர் கருப்பன், கோட்ட செயலாளர் ராமன் உள்ளிட்டோர் கோரிக்கைகளை விளக்கிப் பேசினர்.

தாராபுரம்:

நெடுஞ்சாலைத்துறை சாலைப் பணியாளர் சங்கத்தினர் தாராபுரம் நெடுஞ்சாலைத்துறை கோட்ட பொறியாளர் அலுவலகம் முன்பு நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கோட்டத் தலைவர் வெங்கிடுசாமி ஆர்ப்பாட்டத்திற்குத் தலைமை வகித்தார்.

விருதுநகர்:

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள கோட்டப் பொறியாளர் அலுவலகத்தில் நெடுஞ்சாலைத்துறை சாலைப்பணியாளர் சங்கத்தின் சார்பில் மாவட்ட தலைவர் குமார் பாண்டி தலைமையில் கருப்புக்கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம் நடந்தது.

இதில் மாவட்ட துணை தலைவர்கள் கோபால், சேகர், செயலாளர் முருகன் செந்தில்வேல், இணைச் செயலாளர்கள் தேவராஜ், ராஜேந்திரன், மாநில செயற்குழு உறுப்பினர் முருகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

சிவகங்கை:

சிவகங்கை கோட்ட பொறியாளர் அலுவலகம் முன்பு சாலைப் பணியாளர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ்நாடு நெடுஞ்சாலைத் துறை சாலைப் பணியாளர் சங்க மாவட்ட தலைவர் ஆர்.மாரி தலைமை தாங்கினார். மாவட்டச் செயலாளர் எம்.ராஜா, அரசு ஊழியர் சங்க மாவட்டச் செயலாளர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் கோரிக்கைகளை விளக்கிப் பேசினர்.

தேனி:

தேனி பங்களாமேடு மாநில நெடுஞ்சாலைத்துறை அலுவலகம் முன்பு சாலைப்பணியாளர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. மாவட்ட தலைவர் பரமேஷ்வரன் தலைமை வகித்தார். செயலாளர் முருகேசன், பொருளாளர் பாண்டியராஜ், அரசு ஊழியர் சங்க மாவட்ட துணைத்தலைவர் ரவிக்குமார், செயலாளர் முத்துக்குமார், நிர்வாகி பவுன்ராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.


ராஜேஷ்

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram



விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க