கடந்த ஜனவரி 29 ஆம் தேதி உத்தரப்பிரதேச மாநிலம் பிரயாக்ராஜ்ஜில் நடைபெற்ற மகா கும்பமேளா கூட்ட நெரிசலில் சிக்கி 37 பேர் பலியாகியிருப்பதாக யோகி அரசு தெரிவித்தது. ஆனால், சமீபத்தில் ”பி.பி.சி ஹிந்தி” நடத்திய ஆய்வில் குறைந்தது 82 பேர் உயிரிழந்திருப்பதாக உறுதிப்படத் தெரிவித்துள்ளது நம்மை அதிர்ச்சிக்குள்ளாக்குகிறது.
11 மாநிலங்களில் உள்ள 50க்கும் மேற்பட்ட மாவட்டத்தில் 100-க்கும் மேற்பட்ட குடும்பங்களை நேரில் சந்தித்து பி.பி.சி. இந்த கள ஆய்வை செய்துள்ளது. பி.பி.சி தனது கள ஆய்வின் அடிப்படையில் உயிரிழந்த மக்கள் 82 பேரை மூன்று வகையாகப் பிரிக்கிறது.
முதலாவதாக, உத்தரப்பிரதேச அரசால் கும்பமேளாவில் உயிரிழந்தவர்கள் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்ட 37 பேர்; இவர்களில் 36 பேரின் குடும்பங்களுக்கு ₹25 இலட்சம் இழப்பீடு அரசால் வங்கிக் கணக்கில் நேரடியாகவோ அல்லது காசோலை மூலமாகவோ வழங்கப்பட்டுள்ளது. ஒருவரது குடும்பத்தினருக்கு மட்டும் வாரிசுதாரர்கள் இல்லாததால் இழப்பீடு வழங்கப்படவில்லை.
இரண்டாவதாக, அரசால் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை என்றாலும் அதிகாரிகளின் மூலம் உயிரிழந்த 26 பேரின் குடும்பங்களுக்கு ₹5 இலட்சம் பணமாக வழங்கப்பட்டுள்ளது. மூன்றாவதாக, எந்த உதவியும் பெறாத பாதிக்கப்பட்ட 19 குடும்பத்தினர். இவர்களுக்கு நிதியும் வழங்கப்படவில்லை; கும்பமேளா கூட்ட நெரிசலில் உயிரிழந்ததாக அறிவிக்கப்படவும் இல்லை. மேலும், கூட்ட நெரிசலில் இறந்தவர்களின் முழுமையான பட்டியலை யோகி அரசு இன்னும் வெளியிடவில்லை.
இதில் ₹5 இலட்சம் இழப்பீடு வழங்கப்பட்டவர்களிடம், உயிரிழந்த தங்களது குடும்பத்தினர் திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டு இறந்துவிட்டதாக அயோக்கியத்தனமாக ஆவணங்களில் கையெழுத்து பெற்றுள்ளது உத்தரப்பிரதேச போலீசு. அதிலும் இழப்பீட்டைப் பணமாக வழங்கியிருப்பதானது கும்பமேளா பலி எண்ணிக்கையை மறைக்க அரசே அதிகாரப்பூர்வமற்ற முறையில் பணம் வழங்கியுள்ளதா என்ற கேள்வியையும் எழுப்புகிறது.
படிக்க: உத்தரப்பிரதேசம் கும்பமேளாவில் 40 பேர் பலி! யோகி ஆட்சியின் கொடூரம்!
உத்தரப்பிரதேசத்தின் ஜான்பூரில் தர்மராஜ் என்பவரின் மனைவி ராம்பதி மற்றும் மருமகள் ரீத்தா தேவி கூட்ட நெரிசலில் உயிரிழந்துள்ளனர். இவருக்கு போலீசு இரண்டு கவர்களில் தலா ₹5 இலட்சத்தை வழங்கியுள்ளது.
“என் மனைவி என்னைப் பார்த்து காப்பாற்ற அழைத்தார். காப்பாற்றுவதற்குள்ளாக நான் கீழே விழுந்தேன். சுயநினைவை இழக்கும் போது அவர் வலியால் போராடிக் கொண்டிருந்தார். அவருக்கு உதவ யாரும் வரவில்லை. முதலில் என் மருமகள் இறந்தார், பின் என் மனைவி இறந்தார். அதன்பின் நானும் சரிந்து விழுந்தேன்” என தர்மராஜ் கண்ணீர் மல்க தெரிவித்துள்ளதாக பி.பி.சி பதிவு செய்துள்ளது.
அமித் குமார் என்பவரின் குடும்பம் எந்த நிதி உதவியையும் பெறவில்லை. அமித் குமார் கூட்ட நெரிசலில்தான் இறந்தார் என்று அரசு அறிவிக்கவில்லை. அமித் குமார் இந்திய இராணுவத்தில் பணியாற்றி வந்துள்ளார். ராணுவத்தை வைத்து தேசவெறிப் பிரச்சாரம் செய்யும் பாசிச கும்பல் அவர்களை எதார்த்தத்தில் எவ்வாறு நடத்துகிறது என்பதை இதன்மூலம் புரிந்துகொள்ளலாம்.
“நடந்து கொண்டே இருந்ததால் அமித் குமாரின் கால்கள் வீங்கியது. அதனால் நொண்டியபடி நடந்தார். கூட்ட நெரிசலில் சிக்கி கீழே விழுந்த அவரால் எழ முடியவில்லை. அவரது உடல் நீலநிறமாக மாறியது. எந்தவிதமான உதவியும் எங்களுக்குக் கிடைக்கவில்லை” என அமித் குமாரின் தாயார் தெரிவிக்கிறார்.
“நான் மீனா பாண்டேவை இழுத்தபோது 8 பேர் அவர் மீது விழுந்து கிடந்தனர். கீழே விழுந்திருந்தாலும் அவர் உயிரோடிருந்தார். ஆனால், ஒருவர் அவரது தலையில் மிதித்து நடந்தார். அப்போது அவரது மூக்கிலிருந்து இரத்தம் வரத்தொடங்கியது. அது மிகவும் கோரமாக இருந்தது. கேமராவில் இது பதிவாகி இருந்திருந்தால் புரிந்திருக்கும். கேமராக்கள் அணைக்கப்பட்டிருக்கலாம். ஊடகத்தினரிடமும் தெரிவித்தோம். உடல்கள் அழுகத் தொடங்கின. உடல்கள் நாள் முழுவதும் வெயிலில் கிடந்ததால் துர்நாற்றம் வீசத் தொடங்கியது. காலை எட்டு மணிக்கு உயிரிழந்தார். ஆனால், பிற்பகல் 3 மணிவரை அவரது உடல் அங்கே இருந்தது. பார்வையிடுவதற்கு ஹெலிகாப்டர் கூட வந்தது. அதைக் கண்டு மக்கள் உதவி கோரினார். ஆனால், எதுவும் நடக்கவில்லை” என சம்பத்தை நேரில் கண்ட அர்ச்சனா சிங் என்பவர் தெரிவித்தார்.
படிக்க: மகா கும்பமேளா: நீராடும் பெண்களின் புகைப்படங்களை விற்கும் கிரிமினல் கும்பல்
இந்த கொடுமையின் உச்சக்கட்டமாக இறந்தவர்களின் உடல்களைப் பெறுவதற்கே மக்கள் போராட வேண்டியிருந்தது. இரு உடல்களில் ஒரே எண் குறிப்பிடப்பட்டு இருந்ததால் உடல்கள் மாற்றி அனுப்பப்பட்ட அவலமும் அரங்கேறியது. பாதுகாப்பு குறைபாடு, வி.ஐ.பி-களுக்கு முன்னுரிமை, சுய விளம்பரத்திற்கு முக்கியத்துவம் போன்ற காரணங்களால் மக்கள் தங்களது குடும்பத்தினரை இழந்து வாடிக்கொண்டிருக்கின்றனர்.
இந்நிலையில், இறந்தவர்கள் கூட்ட நெரிசலில்தான் இறந்தார்கள் என்று அரசு ஏற்றுக்கொள்ள மறுப்பது அக்குடும்பங்களுக்கு எவ்வளவு பெரிய வலியைத் தரும் என்பதை நம்மால் கற்பனை செய்துகூடப் பார்க்க முடியாது. கும்பமேளாவில் இறந்தவர்கள் குறித்து ஆதாரத்துடன் தங்களால் உறுதிப்படுத்த முடிந்தவர்களை மட்டும்தான் பி.பி.சி கணக்கில் எடுத்திருக்கிறது. ஆதாரப்பூர்வ தகவல்கள் தர வாய்ப்பில்லாதவர்களையும் சேர்த்தால் பலி எண்ணிக்கை இன்னும் அதிகமாகவே இருக்கக் கூடும் என்று பி.பி.சி கூறுகிறது.
மக்களைப் பாதுகாக்க வக்கற்ற பாசிச பா.ஜ.க அரசு தனது யோக்கியதை வெளிப்பட்டுவிடும் என்பதால் உண்மையான பலி எண்ணிக்கையைக்கூட மறைக்கிறது. இது மக்களுக்கு இழைக்கப்படும் மிகப்பெரிய அநீதியாகும். கொரோனா முதல் கும்பமேளா வரை இந்தப் போக்கைத்தான் பாசிச பா.ஜ.க கடைப்பிடித்துள்ளது.
செய்தி ஆதாரம்: பி.பி.சி ஹிந்தி
ஹைதர்
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram