கர்நாடகா மாநிலத்தில் சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் அரசாங்கம் தகவல் தொழில்நுட்பம் மற்றும் வணிக / வர்த்தக நிறுவனங்களில் தொழிலாளர்களின் வேலை நேரத்தை 10 மணியிலிருந்து 12 மணி நேரமாக மாற்றும் முடிவை அறிவித்துள்ளது.
கர்நாடக அரசாங்கத்தின் தொழிலாளர் நலத்துறை ஜூன் 18 அன்று கர்நாடகாவின் கடைகள் மற்றும் வர்த்தக நிறுவனங்களுக்கான சட்டத்தில் (Karnataka Shops and Commercial Establishments Act, 1961) 12 மணி நேர வேலை தொடர்பான திருத்தம் மேற்கொள்வது பற்றி ஐடி நிறுவனங்களின் நிர்வாகிகள் மற்றும் தொழிற்சங்கத்தினரை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தியது.
இந்த சட்டத் திருத்தத்தை ஏற்க முடியாது என்றும் இது நவீன கொத்தடிமை முறையைத் தோற்றுவிக்கும் முயற்சி என்றும் கூட்டத்திலேயே கடுமையான எதிர்ப்பையும் கண்டனத்தையும் தெரிவித்தது கே.ஐ.டி.யு (Karnataka State IT/ITeS Employees Union) தொழிற்சங்கம். கர்நாடகத்தின் வணிக மற்றும் வர்த்தக நிறுவனங்களின் சட்டம் 1961 இன் உறுப்பு ஏழு, தொழிலாளர்களின் வேலை நேரத்தை 9 மணி நேரம் என்று வரையறுத்துள்ளது ஒரு மணி நேரம் மிகைப்பணி என்றும் இந்த மிகைப்பணி மூன்று மாதத்திற்கு அதிகபட்சமாக 50 மணி நேரம் என்றும் வரையறுத்திருந்தது.
தற்போது கொண்டு வரப்பட்டுள்ள சட்டத் திருத்தம் 10 மணி நேர வேலை என்றும் மிகைப்பணி 2 மணி நேரம் என்றும் அனுமதித்திருக்கிறது. அத்துடன் மூன்று மாதத்திற்கு அதிகபட்சமான மிகைப் பணி 50 மணி நேரம் மட்டும் என்று இருந்ததை 144 மணி நேரம் என்று மாற்றி அமைத்திருக்கிறது. ஐ.டி ஊழியர்கள் தொழிற்சங்கம் மற்றும் பிற தொழிற்சங்கங்களும் இது கார்ப்பரேட் நிறுவனங்களின் லாபத்திற்காக தொழிலாளர்களின் வாழ்வைப் பலியிடும் முயற்சி என்று கடுமையாகக் கண்டித்துள்ளதுடன் தொழிலாளர்களுக்கு உயிர் வாழ்வதற்காக உழைப்பதைத் தவிர அவர்களுக்கு வாழ்க்கை என்று வேறு எதுவும் இல்லை என்றாக்கும் கொடுமையான சட்டத் திருத்தம் என்று சாடியுள்ளனர். இந்தியா டுடே, தி ஹிந்து, டெக்கன் ஹெரால்டு உள்ளிட்ட எல்லா தேசிய ஊடகங்களும் இது பற்றிய செய்தியை விரிவாக வெளியிட்டுள்ளன.
சிறிதும் மனிதத் தன்மையற்ற வேலை நிலைமைகளை இயல்பாக்கி விடுவதே இவர்களின் நோக்கம். இச்சட்டத் திருத்தம் என்பது ஊழியர்களின் உற்பத்தித்திறனை மேம்படுத்துவதற்காக அல்ல; மாறாக முதலாளிகளைத் திருப்திப் படுத்துவதற்காகவே கொண்டு வரப்பட்டிருக்கிறது. அதாவது மனிதர்களை இயந்திரங்கள் ஆக்கி விடவே கொண்டு வரப்பட்டிருக்கிறது என்று கார்ப்பொரேட் கும்பலின் உள்நோக்கத்தை தொழிற்சங்க தலைவர்கள் பலரும் அம்பலப்படுத்துகின்றனர்.
படிக்க: கர்நாடகா: 14 மணிநேர வேலை சட்டத்துக்கு எதிராக ஐ.டி. ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
கார்ப்பரேட்டுகளின் கோரிக்கை 14 மணி நேர வேலைநேரமே என்ற போதிலும் அரசாங்கம் தொழிலாளர்களின் எதிர்ப்பை கட்டுக்குள் நிறுத்திச் சமாளிக்க, முதற்கட்டமாக 12 மணி நேர வேலை என்று மாற்ற முன் வந்திருக்கிறது. எனினும் இதன் மூலம் நூறாண்டுக்கும் மேலாக உலகெங்கும் சட்டப்பூர்வமாக நிலைநாட்டப்பட்டிருந்த, தொழிலாளர்களின் அடிப்படையான வேலை நேர உரிமை பறிக்கப்பட்டுள்ளது. மனித வாழ்வில் உழைப்புக்கும் வாழ்வுக்குமான உறவின் தன்மையே இச்சட்டத் திருத்தத்தின் மூலம் மாற்றி அமைக்கப்பட்டிருக்கிறது. இதற்காகத்தான் கார்ப்பரேட் முதலாளிகள் குறிப்பாக தகவல் தொழில்நுட்பத் துறை சார்ந்த நாராயண மூர்த்தி போன்ற கார்ப்பரேட் முதலாளிகள் தொடர்ந்து குரல் எழுப்பி வந்தனர்.
ஒன்றிய அரசும் இதை நோக்கியே மாநில அரசுகளின் தொழிலாளர் நலச் சட்டங்களை மாற்றி அமைக்க தொடர்ந்து அழுத்தம் கொடுத்துக் கொண்டே இருக்கிறது. மாநில அரசுகள்தான் தங்களின் வாக்கு வங்கி பாதிக்கப்படும் என்று பயந்து தள்ளிப் போட்டுக் கொண்டே வருகின்றன. பா.ஜ.க ஆளும் பல மாநிலங்களில் இத்திருத்தங்கள் ஏற்கெனவே நிறைவேற்றப்பட்டுவிட்டன. கடந்த ஆண்டு இதே போன்ற 12 மணி நேர வேலை நேர சட்டத்தைத் தமிழ்நாட்டில் தி.மு.க அரசு நிறைவேற்றியதை அனைவரும் அறிவோம். ஆனால் தொழிற்சங்கங்கள், மற்ற பிற கூட்டணி அரசியல் கட்சிகள் – இயக்கங்களின் கடுமையான எதிர்வினையினால் உடனடியாக அதை வாபஸ் வாங்கிக் கொண்டது.
ஜூலை 2024-இல் கர்நாடக அரசு 14 மணி நேர வேலை நேரத்திற்கான சட்டத் திருத்தம் குறித்து கருத்து கேட்டது. அதற்கு கடும் எதிர்ப்பு வந்ததால் அப்போது பின்வாங்கிக் கொண்டது. ஆனால் தற்போது கர்நாடக காங்கிரஸ் அரசாங்கம் கார்ப்பரேட் நெருக்கடிகளுக்குப் பணிந்து வேலை நேரத்தை உயர்த்தும் அதே போன்றதொரு சட்டத் திருத்தத்தை மேற்கொண்டிருக்கிறது.
இதுநாள் வரையிலும் இருந்து வந்த சட்டம் மிகைப்பணியுடன் சேர்த்து 10 மணி நேரம் வரையிலும் அனுமதிக்கிறது. ஆனால் இப்போது கொண்டு வரப்பட்டிருக்கும் 12 மணி நேர வேலை நேரம் என்பது அடிப்படையில் இரண்டு ஷிப்ட் முறையை இலக்காகக் கொண்டிருக்கிறது என்பது கவனிக்க வேண்டிய அம்சமாகும். இதன்படி பல நாடுகளிலும் கடைப்பிடிக்கப்பட்டு வருகின்ற மூன்று ஷிப்ட் முறையை மறைமுகமாக ரத்து செய்வதே இச்சட்டத் திருத்தத்தின் நோக்கமாகும். இரண்டு ஷிப்ட் முறை வந்து விட்டால் அது ஐடி. துறையில் கணிசமான பேரை வேலையிலிருந்து வெளியேற்றி விடும். இந்த நோக்கத்துடன் தான் கார்ப்பரேட் முதலாளிகளும் இச்சட்டத் திருத்தத்தை நீண்ட காலமாக வலியுறுத்தி வருகின்றனர். ஆட்குறைப்பு தான் லாபத்தை அதிகரிக்கும் வழி என்ற நிலைக்கு அவர்கள் ஏற்கெனவே வந்து விட்டனர்.
ஆனால் சமூகத்தில் இளைஞர்கள் படிப்பை முடித்து தகுதியை வளர்த்துக் கொண்டவர்களாய் ஆண்டுதோறும் இலட்சக்கணக்கில் வந்து கொண்டிருக்கிறனர். இவர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்குவது பற்றி நாராயண மூர்த்தியோ சித்தராமய்யாவோ சிறிதும் அக்கறைப்படவில்லை. ஆனால் நாராயண மூர்த்தி போன்றவர்கள் இந்தியப் பட்டதாரிகளுக்கு தொழில்நுட்ப அறிவு போதவில்லை, இந்திய தொழில்நுட்பக் கல்வியில் தரம் இல்லை என்று எப்போதும் குறை சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். இந்த இளம் போட்டியாளர்களைப் பயன்படுத்தி பாதி சம்பளம் கொடுத்துவிட்டு பழைய ஊழியர்களை வெளித்தள்ளி விடுவது தான் அவர்களின் எண்ணம்.
படிக்க: தேவனஹள்ளி சலோ: கர்நாடகா விவசாயிகள் போராட்டம் வெல்லட்டும்!
ஐ.டி ஊழியர்களிடம் வியாபித்திருக்கும் மனநல பிரச்சனைகள் குறித்து இவர்கள் எப்போதும் அலட்டிக் கொள்வதே இல்லை. இன்று 25 வயதுக்குக் குறைவான இளைஞர்களில் 90 சதவீதம் பேர் கவலை என்னும் மன நோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர். அரசின் பல ஆய்வறிக்கைகள் இதற்கு சாட்சியம் அளிக்கின்றன.
கே.ஐ.டி.யூ தொழிற்சங்கம் ஐ.டி துறை முழுவதையும் இணைத்து இதற்கு எதிராகப் போராட இருப்பதாகத் தெரிவித்துள்ளது.
சென்ற மாதத்தில் ஆந்திர மாநிலத்தின் என்.டி.ஏ-வின் சந்திரபாபு நாயுடு அரசாங்கம் இதே போன்று தனியார் ஊழியர்களுக்கான வேலை நேரத்தை 10 மணியிலிருந்து 12 மணி நேரமாக அதிகரித்து சட்டத் திருத்தம் செய்துள்ளது. தொழில் வளர்ச்சிக்காகவும் சர்வதேச மூலதனத்தைக் கவருவதற்காகச் செய்துள்ளதாகவும் அதன் மூலம் வேலை வாய்ப்பைப் பெருக்கப் போவதாகவும் விளக்கம் அளித்தது ஆந்திர அரசு.
ஆந்திராவின் தகவல் மற்றும் மக்கள் தொடர்பு அமைச்சர் கே பார்த்தசாரதி வெளிப்படையாகவே சொல்லுகிறார். ”தொழிலாளர் சட்டம் (Labour Laws) என்பது தொழிலாளர்களுக்கு மட்டுமானதல்ல. எப்பொழுதும் தொழிலாளிகளுக்கும் அதேசமயம் கம்பெனி நிர்வாகத்துக்கும் உகந்ததாக இருக்க வேண்டும். சான்றாக முன்பெல்லாம் பெண்கள் இரவு நேர பணியில் ஈடுபடுத்தப்படுவதில்லை. ஆனால் இப்பொழுது சிறந்த முறையிலான சாலைகள், சாலைகளில் பகல்போன்ற நிறைவான விளக்கொளி, வசதியான வாகன போக்குவரத்து, சாலைகளில் போலீசு பாதுகாப்பு ரோந்து பணி என்று எல்லா ஏற்பாடுகளையும் செய்து விட்ட பிறகு இப்பொழுது நாம் அப்படி பெண்களிடம் கூற முடியுமா?” என்று கேட்கிறார். மேலும், ”நீங்கள் கூடுதலான பணி செய்யும் போது கூடுதலான ஊதியம் பெறப் போகிறீர்கள். பொருளாதாரத்தில் மேம்படப் போகிறீர்கள்” என்று அற்பமான ஆசையைக் கிளறிவிட முயல்கிறார்.
ஆனால் கர்நாடகாவின் ஐடி கம்பெனி முதலாளிகள் அரசாங்கத்திடம் 14 மணி நேரம் கேட்டு கோரிக்கை வைத்திருந்தார்கள் நாராயணமூர்த்தி வாரத்திற்கு 70 மணி நேர வேலை செய்ய கேட்டுக் கொண்டார். மகேந்திரா முதலாளி ஊழியர்களைப் பார்த்து வீட்டில் என்னதான் செய்வீர்கள்? எவ்வளவு நேரம் தான் மனைவி / கணவன் முகத்தையே பார்த்துக் கொண்டிருப்பீர்கள்? என்று நக்கலாகக் கேட்டார். இவையெல்லாம் அப்போதே சமூக ஊடகங்களில் பேசுபொருளாகி பலராலும் கண்டிக்கப்பட்டது.
முதலாளிகளை அவர்களின் விருப்பம் போல் செயல்பட அனுமதிக்க வேண்டும் என்பதே அவர்களது கோரிக்கையாகும். சட்டம் எதற்காக அவர்களைத் தடுத்து நிபந்தனைகள் வரையறைகளை விதிக்க வேண்டும்? தொழிலாளர்களை எப்படி நடத்த வேண்டும் என்பது மூலதனம் போட்டுத் தொழில் நடத்தும் எங்களுக்குத் தெரியாதா? என்பதே முதலாளிகளின் கண்ணோட்டம். இதைத்தான் கம்பெனிகள் எங்களை நிர்ப்பந்திக்கிறார்கள் என்று கர்நாடக தொழிலாளர் துறை அமைச்சர் சந்தோஷ் லாட் நேரடியாகக் கூறினார்.
இவர்கள் தங்களின் ஊழியர்களை, பொதுவில் தொழிலாளர்களை தங்களையொத்த மனிதர்களாகவே கருதுவதில்லை. தமக்கு லாபம் ஈட்டி தருகின்ற உற்பத்தி சாதனங்களின் ஒரு பகுதியாகவே அதாவது மற்றுமொரு இயந்திரமாகவே பார்க்கின்றனர்.
ஏற்கெனவே இந்தியாவில்தான் வாரத்திற்கு 48 மணி நேரம் என்கிற நீண்ட வேலை நேரம் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.
இப்பொழுது 12 மணி நேரம் என்று வரையறை செய்திருப்பதும் காகிதத்தில் தான் இருக்கும். அதைவிடவும் அதிக நேரம் வேலை செய்வதைத் தவிர்க்க முடியாததாக்கி விடுவார்கள். சட்டவிதிகளுக்கு வெளியில் 14 மணி நேரம் என்று ஆக்கிக் கொள்ள அவர்களால் முடியும். இது அரசாங்கத்திற்கும் நன்றாகவே தெரியும். கூடுதல் வேலை நேரத்தை மறுப்பவர்கள் கூட்டு உழைப்புக்கு தகுதியற்றவர்கள், உழைக்க மறுப்பவர்கள் என்று முத்திரை குத்தப்படுவார்கள். ஊழியர்கள் இந்த அச்சத்திலேயே வேலை செய்யவும் வாழவும் நிர்ப்பந்திக்கப் பட்டிருக்கிறார்கள் என்பதே இன்றைய நிலைமை.
படிக்க: ஐ.பி.எல். படுகொலை | கர்நாடக அரசு விழா எடுக்க வேண்டிய அவசியம் என்ன? | தோழர் மருது
தற்பொழுது பெங்களூருவில் மட்டும் ஐ.டி துறையில் 30 லட்சம் பேர் அளவில் வேலை செய்து வருகிறார்கள். ஐ.டி துறை சார்ந்து இந்திய ஏற்றுமதியில் கர்நாடகா மட்டும் 38 சதவீதம் பங்களிக்கிறது. இரண்டு ஷிப்ட் முறை வந்தால் ஏறக்குறைய ஐந்து முதல் ஆறு லட்சம் பேர் வேலை இழக்கக் கூடும் என்று மதிப்பிடப்பட்டிருக்கிறது. வேலை நேரத்தை நீட்டிப்பதால் உற்பத்தி பெருகும் என்பது தவறான கருத்து என்பதுடன் தோல்வியடைந்த ஒன்றாகும்.
மூளை உழைப்பில் ஆறு மணி நேரத்துக்கு மேலான வேலை நேரத்தில் உற்பத்தித்திறன் குறைந்து உற்பத்தியும் குறைகிறது என்று பல ஆய்வுகள் நிறுவியிருக்கின்றன. அதிக அளவில் தவறுகள் மற்றும் கடுமையான தவறுகள் நேர்வதும், மறுபடியும் திருப்பிச் செய்ய வேண்டிய நிலை ஏற்படுவதும் தவிர்க்க முடியாததாக ஆகியிருக்கின்றன. 12 மணி நேர உழைப்பின் பலனை மட்டும் இவ்வளவு பேசுபவர்கள் மீதமுள்ள 12 மணி நேரத்தில் மனிதர்கள் இழப்பதை ஈடு செய்ய முடியுமா என்பது பற்றிச் சிந்திப்பதோ வாய் திறப்பதோ இல்லை.
மேலும் நீண்ட வேலை நேரம் ஊழியரின் உடலும் மனமும் சார்ந்த பல பிறழ்வுகளுக்குக் காரணமாகி விடுகிறது என்று மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். அவ்வகையில் உலகின் பல நாடுகள் வேலை நேரத்தைக் குறைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளன. பிரிட்டனில் குறிப்பிட்ட துறைகளில் வாரத்தில் நான்கு நாள் வேலை முறை கொண்டு வரப்பட்டிருக்கிறது. இது உற்பத்திக்கும் ஊழியர் நலனுக்கும் சீராக இருக்கின்றது என்பதை அறிந்து பல நிறுவனங்கள் அதற்கு மாறிக் கொண்டிருக்கின்றன. ஐஸ்லாந்து என்னும் சிறிய நாட்டில் எல்லா பொதுத்துறை மற்றும் அரசுத்துறை நிறுவனங்களிலும் வாரம் நான்கு நாட்கள் வேலை என்பது நடைமுறையில் இருக்கிறது.
கே.ஐ.டி.யு செயலாளர் சூரஜ் நிடியங்கா பெங்களூருவில் 32 ஐடி நிறுவனங்களின் வாயில்களில் வாயில் கூட்டங்கள் நடத்தப்படும் என்றும், ஆகஸ்ட் 3 அன்று தொழிலாளர் நல ஆணையர் அலுவலகம் நோக்கி பேரணியாகச் செல்ல இருப்பதாகவும் அறிவித்திருக்கிறார். ஐ.டி ஊழியர்கள் அனைவரையும் சங்க உறுப்பினர்களாக்க ஆன்லைன் மூலம் விண்ணப்பப் படிவங்கள் அனுப்பப்பட்டு வருகின்றன என்றும் கூறியுள்ளார்.
ஐ.டி துறை சார்ந்த ஊழியர்கள் தங்களை உழைக்கும் தொழிலாளர்கள் என்றுணர்ந்து சங்கமாக ஒன்றிணைந்து போராட முன் வந்திருப்பது வரவேற்கத் தகுந்ததாகும். நாடு முழுவதும் உள்ள உழைக்கும் மக்கள் அவர்களின் போராட்டங்களுக்குத் துணை நின்று தோள் கொடுக்க வேண்டும்.
வெல்க ஐ.டி ஊழியர்கள் போராட்டம்!
ஆதி
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram