விதைகள் மசோதா: விதை, கார்ப்பரேட்டுகளின் பிடியில் விவசாயம் கல்லறையில்!

விதை-விவசாயம்-உணவு என்ற சங்கலியை ஒட்டுமொத்தமாக கார்ப்பரேட்டுகளின் பிடியில் கொண்டுசெல்வதற்கான அடித்தளமாகவே இம்மசோதா கொண்டுவரப்பட்டுள்ளது. இது விவசாயிகளின் பிரச்சினையாக மட்டுமல்லாமல், ஒட்டுமொத்த இந்திய மக்களும் எதிர்கொண்டுள்ள பேரபாயமாக முன்னெழுந்துள்ளது.

னிதகுல நாகரீக வளர்ச்சிக்கு மாபெரும் பங்களிப்பு செய்த விதை, இன்று உலகெங்கும் பன்னாட்டு கார்ப்பரேட்டுகளால் பண்டமாக்கப்பட்டு சந்தைப்படுத்தப்பட்டு வருகிறது. ஆனால், விவசாயத்தின் உயிர்நாடியான விதை பண்டமாக அல்லாமல் ஒரு சமூக சொத்தாக இருத்தல் வேண்டும். விவசாயிகளின் கைகளில் உள்ள விதைகளே நாளைய உணவுப் பாதுகாப்பு, பல்லுயிர் பெருக்கம் மற்றும் விவசாயத் தன்னிறைவு ஆகியவற்றின் அடித்தளமாகும்.

ஆகவே, விதைகள் மீதான கார்ப்பரேட்டுகளின் பிடியை தளர்த்தி விவசாயிகளின் நலன் காக்கும் வகையிலும் பாரம்பரிய விதைகளை பாதுகாக்கும் வகையிலும் விதைச் சட்டத்தை கொண்டுவர வேண்டும் என்பது இந்திய விவசாயிகளின் நீண்டகால கோரிக்கை.

ஆனால், பாசிச மோடி அரசோ விதைகளின் மீது விவசாயிகளுக்கு இருக்கும் மிச்சமீதி உரிமைகளையும் கட்டுப்பாடுகளையும் பறித்து, அவற்றை முற்றுமுழுதாக கார்ப்பரேட்டுகளின் வசம் கொண்டுசெல்வதற்காக “விதை மசோதா-2025”-ஐ அறிமுகப்படுத்தியுள்ளது.

நடைமுறையில் உள்ள “விதைகள் சட்டம், 1966” மற்றும் “விதைகள் (கட்டுப்பாட்டு) ஆணை, 1983” ஆகிய இரு சட்டங்களையும் தன்னிச்சையாக இரத்து செய்யும் இம்மசோதா, கார்ப்பரேட்டுகள் “வணிகம் செய்வதை எளிதாக்குவது” (Ease of business) என்பதையே அடிப்படை நோக்கமாகக் கொண்டுள்ளது.

விதை-விவசாயம்-உணவு என்ற சங்கலியை ஒட்டுமொத்தமாக கார்ப்பரேட்டுகளின் பிடியில் கொண்டுசெல்வதற்கான அடித்தளமாகவே இம்மசோதா கொண்டுவரப்பட்டுள்ளது. இது விவசாயிகளின் பிரச்சினையாக மட்டுமல்லாமல், ஒட்டுமொத்த இந்திய மக்களும் எதிர்கொண்டுள்ள பேரபாயமாக முன்னெழுந்துள்ளது.

இம்மசோதாவில் இடம்பெற்றுள்ள ஒவ்வொரு அம்சமும் பேரழிவை ஏற்படுத்தக்கூடியது என்றாலும், இயன்றவரை அவற்றில் சில முக்கியமான அம்சங்களை இங்கு குறிப்பிடுகிறோம்.

மாற்றப்படும் வரையறைகள்
பறிக்கப்படும் உரிமைகள்!

பழைய சட்டங்களுடன் ஒப்பிடும்போது மோடி அரசு தற்போது கொண்டுவந்துள்ள விதைகள் மசோதாவில் “விதை”, “விவசாயி” உள்ளிட்டு பலவற்றிற்கான வரையறைகளை மாற்றியுள்ளது.

சான்றாக, விதைகள் சட்டம், 1966-இன் படி, விதை என்பது “விதைப்பதற்கோ அல்லது நடுவதற்கோ பயன்படுத்தப்படும் உணவுப் பயிர்களின் விதைகள், பருத்தி விதைகள், கால்நடைத் தீவன விதைகள், சணல் விதைகள்…” என்று வரையறுக்கப்பட்டுள்ளது.

ஆனால், புதிய விதைகள் மசோதாவில் விதை என்ற வரையறைக்குள், உயிருள்ள கருக்கள் (Living embryos), இனப்பெருக்கம் செய்யும் தாவரங்கள் (Propogules), திசு வளர்ப்பு தாவரங்கள் (Tissue culture plants) மற்றும் செயற்கை விதைகள் (Synthetic seeds) என பலவற்றை கொண்டுவந்துள்ளது மோடி அரசு.

இதுநாள்வரை பொது சாகுபடி மற்றும் வர்த்தகத்திற்கான விதைகள் மட்டுமே அரசங்கத்தால் கட்டுப்படுத்தப்பட்டு வந்தது; விவசாயிகள் பயன்படுத்துகின்ற, தங்களுக்குள் பரிமாறிக் கொள்கின்ற விதைகள் சமூக சொத்தாகவே கருதப்பட்டு வந்தது.

ஆனால், புதிய மசோதாவில் விதை என்பதற்கான வரையறையை விரிவுப்படுத்தியுள்ளதன் மூலம், எல்லா விதைகளையும் வர்த்தக விதைக்கான வரையறைக்குள் கொண்டுவந்துள்ளது மோடி அரசு. இதன் மூலம், வர்த்தக விதைகளுக்கான கட்டுப்பாடு, நெறிமுறைகள் விவசாயிகளின் கையிலுள்ள விதைகளுக்கும் திணிக்கப்படும்.

இது, பன்னாட்டு ஏகபோக கார்ப்பரேட்டுகளின் பண்டமாக்கப்பட்ட விதைகளையும் எளிய விவசாயிகளிடமிருக்கும் மரபு விதைகளையும் ஒரே தராசில் நிறுத்துவதன் மூலம், விவசாயிகளிடமுள்ள மரபு விதைகளை ஒழித்துக்கட்டும் அயோக்கியத்தனமாகும். மரபணு மாற்றப்பட்ட விதைகளை

விதை என்பது சமூக சொத்து என்ற அடிப்படை ஒழித்துக் கட்டப்பட்டு ஒரு பண்டமாக மாற்றப்பட்டு, விதை மீதான விவசாயிகளின் உரிமை பறிக்கப்பட்டு கார்ப்பரேட்டுகளின் ஏகபோகத்திற்கு வித்திடும்.

மேலும், புதிய மசோதாவில் “செயற்கை விதைகள்” என்ற சொல் இணைக்கப்பட்டிருப்பது மரபணு மாற்றப்பட்ட விதைகளை திணிப்பதற்கான சதி என்று விவசாயிகள் அச்சம் தெரிவிக்கின்றனர்.

டிஜிட்டல்மயமாக்கம்:
இனி, கார்ப்பரேட்டுகளின் கட்டுப்பாட்டில் விதைச் சங்கிலி

விதைச் சங்கிலியை முழுமையாக கண்காணிப்பிற்குள் கொண்டுவருவதற்காக பல்வேறு டிஜிட்டல்மய நடவடிக்கைகளை இம்மசோதா நடைமுறைப்படுத்துகிறது. இதற்காக மோடி அரசு ஏற்கெனவே உருவாக்கி வைத்திருக்கும் “சதி” (SATHI) என்ற இணையதளம் பயன்படுத்தப்படும்.

மேலும், விற்பனை செய்யப்படும் விதை பைகளின் மீது கியூ.ஆர். குறியீடு (QR code) கட்டாயம் அச்சடிக்கப்பட்டிருக்க வேண்டும் என்று மசோதாவில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதன் மூலம், அதிகாரிகளும் நுகர்வோரும் விதையின் தோற்றம் (Origin), பதிவு நிலை (Registration status) மற்றும் விநியோகச் சங்கிலியில் அது எவ்வாறு நகர்ந்துள்ளது என்பதை சரிபார்க்க முடியும் என்கிறது.

ஆனால், இத்தரவு திரட்டலின் மூலம் கார்ப்பரேட்டுகள் விதைச் சங்கிலியை தங்களுடைய கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்து தங்கள் விருப்பம்போல் விவசாயிகளை ஆட்டுவிக்க முடியும்.

ஒழித்துக்கட்டப்படும் உள்ளூர் விதை அமைப்புகள்

புதிய மசோதாவில், உற்பத்தி செய்யப்படும் அனைத்து விதைகளும் குறைந்தபட்ச முளைப்பு மற்றும் தூய்மை தரநிலைகளைப் பூர்த்தி செய்வதற்கான சோதனைகளில் தேர்ச்சி பெற்று, அரசின் டிஜிட்டல் இணையதளத்தில் பதிவு செய்யப்பட்ட பிறகே விற்பனை செய்யப்பட வேண்டும்; விதை விற்பனையாளர்களும் (நர்சரி உரிமையாளர்கள் கூட) அரசிடம் பதிவு செய்திருக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

இதன் நோக்கம் கிராமப்புற விதை அமைப்புகளை ஒழித்துக்கட்டுவதே ஆகும். கிராமப்புற உள்ளூர் விவசாயிகளால் நடத்தப்படும் சமூக விதை வங்கிகள் (Community seed banks) உள்ளிட்ட பல்வேறு விதை பராமரிப்பு, விநியோக அமைப்புகள் முறைசாரா விதை அமைப்புகள் (Informal Seed System) என்று அழைக்கப்படுகின்றன. இந்திய விவசாயிகள் தங்களுடைய விதை தேவைகளுக்காக அரசு மற்றும் தனியார் நிறுவனங்களை விட, இந்த முறைசாரா விதை அமைப்புகளையே பெரிதும் சார்ந்திருக்கின்றனர்.

ஏனென்றால், இந்த முறைசாரா விதை அமைப்புகள் சந்தையை விட மலிவான விலையில் விதைகளை விவசாயிகளுக்கு வழங்குகின்றன. பேரிடர்களால் பயிர்கள் நாசமடையும் போது, விவசாயிகள் மீண்டும் விளைச்சலை மேற்கொள்ள சேமிப்பு விதைகளிலிருந்து விதைகளை இலவசமாக வழங்கி விவசாயிகள் நொடித்துப் போகாமல் பாதுகாக்கின்றன. இவை நவதான்யா, சஹஜா சம்ருதா உள்ளிட்ட பல்வேறு சமூக மற்றும் அரசு சாரா அமைப்புகளாலும் நிர்வாகம் செய்யப்பட்டு ஊக்குவிக்கப்படுகின்றன என்பதே அதற்கான காரணங்களாகும்.

புதிய விதைகள் மசோதா சட்டமாக்கப்பட்டால் முறைசாரா விதை அமைப்புகள் தங்களுடைய அமைப்பையும், தாங்கள் பராமரிக்கும் விதைகளையும் அரசிடம் பதிவு செய்து ஒப்புதல் பெற வேண்டும். ஆனால், ஒரு குறிப்பிட்ட பகுதியின் விதைச் சந்தையை கைப்பற்ற விரும்பும் கார்ப்பரேட் நிறுவனங்கள், அதிகாரிகளுடன் கள்ளக்கூட்டு வைத்துக்கொண்டு விதை அமைப்புகளுக்கும் அவற்றின் விதைகளுக்கும் ஒப்புதல் அளிக்காமல் அவற்றை இல்லாதொழிக்க முடியும்.

மேலும், போலி மற்றும் பதிவு செய்யப்படாத விதைகளை விற்பனை செய்வது; விதை விற்பனை நிறுவனங்கள் பதிவு செய்யாமல் இருப்பது உள்ளிட்டவற்றுக்கு ரூ.5 லட்சம் வரை இருந்த அபராதத் தொகை ரூ.30 லட்சம் வரை அதிகரிக்கப்பட்டுள்ளது. ஓர் ஆண்டு வரை இருந்த சிறைத் தண்டனை மூன்று ஆண்டுகள் வரை அதிகரிக்கப்பட்டுள்ளது. முறைசாரா விதை அமைப்புகள் மீது அடக்குமுறை செலுத்தி அவற்றை அழித்தொழிக்க வேண்டும் என்ற நோக்கம் இதில் அடங்கியுள்ளது.

போலி விதைகளும்
பறிக்கப்படும் விவசாயிகளின் இழப்பீடும்

தரம் குறைந்த மற்றும் போலி விதைகள் என்பது இந்திய விவசாயிகள் எதிர்கொண்டுவரும் முக்கியமான பிரச்சினையாக உருவெடுத்து வருகிறது. இலட்சக்கணக்கான விவசாயிகள் இப்போலி விதைகளால் பாதிப்படைந்துள்ளனர். பல மாநிலங்களில் விவசாயிகள் இதற்கு எதிரான போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர்.

குறிப்பாக, 2022 முதல் 2025 வரை பரிசோதிக்கப்பட்ட சுமார் 6 லட்சம் விதை மாதிரிகளில், ஏறக்குறைய 43 ஆயிரம் மாதிரிகள் தர நிர்ணயங்களை பூர்த்தி செய்யவில்லை. மேற்குவங்கம், தமிழ்நாடு மற்றும் மத்தியப்பிரதேசம் போன்ற மாநிலங்களில் ஆயிரக்கணக்கான தரமற்ற விதைகள் கண்டறியப்பட்டதாகப் பதிவாகியுள்ளது.

ஆனால், இவ்வாறு போலி விதைகளால் நட்டமடையும் விவசாயிகளுக்கு பெரும்பாலான சந்தர்ப்பங்களில் எந்த இழப்பீடும் வழங்கப்படுவதில்லை. இந்நிலையை மேலும் மோசமாக்கும் விதமாக, “தரம் குறைந்த அல்லது போலியான விதைகளால் விவசாயிகள் நட்டமடைந்தால் அதற்கான நிவாரணத் தொகைகளை நீதிமன்றங்கள் மூலமே பெற்றுக்கொள்ள வேண்டும்” என்று இம்மசோதா கூறுகிறது. இது அப்பட்டமாக விவசாயிகளுக்கு நிவாரணத் தொகை வழங்கப்படுவதை ஒழித்துக்கட்டி, கார்ப்பரேட்டுகளை இழப்பீடு வழங்குவதிலிருந்து தப்பிக்க வைக்கும் சதியாகும்.

நாட்டிலுள்ள பெரும்பாலான சிறு-குறு விவசாயிகள் நீதிமன்றங்களை அணுகுவதற்கு வாய்ப்பில்லாதவர்கள் என்பது ஒருபுறம். மறுபுறம், பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு கார்ப்பரேட் நிறுவனங்களிடமிருந்து இழப்பீடுகளை பெற்றுத்தர வேண்டிய அரசு, அப்பொறுப்பிலிருந்து கைக்கழுவிக் கொள்வதாகும்.

பஞ்சாப்: விவசாயிகளும் மின் ஊழியர்களும் மின்சாரத் திருத்த மசோதா மற்றும் விதை மசோதாவின் பிரதிகளை எரித்து போராட்டம்.

இதுகுறித்து அகில இந்திய கிசான் சபா (AIKS) பொதுச் செயலாளர் விஜூ கிருஷ்ணன் கூறுகையில், “ஒரு விதை தோல்வியுற்றால், விவசாயி அப்பயிரை மட்டுமல்ல, ஒரு முழுப் பருவத்தையே இழக்கிறார். ஆனால், இம்மசோதா விவசாயியைப் பாதுகாக்காமல், பரிவர்த்தனையை மட்டுமே பாதுகாக்கிறது” என்கிறார்.

கேலிக்கூத்தாகும் ‘கூட்டாட்சி தத்துவம்’

இந்த புதிய விதை மசோதா விதைகளை பதிவு செய்வது, அங்கீகாரம் அளிப்பது, விலை நிர்ணயிப்பது உள்ளிட்ட அனைத்து உரிமைள், அதிகாரங்களையும் மாநில அரசுகளிடமிருந்து பறித்து, ஒன்றிய அரசிடமும், சொல்லபோனால் கார்ப்பரேட்டுகளின் கரங்களிலுமே குவிக்கிறது.

இம்மசோதாவில், 27 உறுப்பினர்களைக் கொண்ட மத்திய விதைக் குழு (Central Seed Committee – CSC) அமைக்கப்படும். இந்தியாவை ஐந்து “புவியியல் மண்டலங்களாக” (Geographical Zones) பிரித்து அம்மண்டலங்களுக்கு ஒருவர் என்ற அடிப்படையில் இக்குழுவில் ‘மாநில உறுப்பினர்கள்’ பங்கேற்பர். விதைச் சட்டம் – 1966, மத்திய விதைக் குழுவில் 22 மாநில பிரதிநிதிகள் இடம்பெற அனுமதியளித்த நிலையில், அது தற்போது வெறும் ஐந்தாக சுருக்கப்பட்டுள்ளது. அதேபோல், ஒவ்வொரு மாநில அரசுக்கும் 15 உறுப்பினர்களை கொண்ட மாநில விதைக் குழு (State Seed Committee – SSC) அமைக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

மேலும், இதுவரை சந்தையில் விற்கப்படும் ஒவ்வொரு விதையும், இந்திய வேளாண் ஆராய்ச்சிக் கழகம், விவசாயப் பல்கலைக்கழகங்கள் போன்ற அங்கீகாரம் பெற்ற மையங்களால் நடத்தப்படும் “சாகுபடிக்கும் பயன்பாட்டிற்குமான மதிப்பு” (VCU) சோதனைக்குப் பிறகே பதிவு செய்யப்படும்.

ஆனால், ​​இந்த வரைவு மசோதா, விதைகளை சோதனை செய்வதற்கான அதிகாரத்தை தனியார் அமைப்புகளுக்கும் வழங்குகிறது. இதன்மூலம், கார்ப்பரேட் நிறுவனங்கள் குறுக்குவழியில் இச்சோதனைகளை கடந்துவிடும்.

அதேபோல், புதிய மசோதாவின் பிரிவு 17(8)-இன் படி, பல மாநிலங்களில் செயல்படும் விதை நிறுவனங்களுக்காக ஒன்றிய அரசு தகுதி அடிப்படையிலான “மத்திய அங்கீகார அமைப்பை” (Central Accreditation System) உருவாக்கும் என்றும் ஒரு கார்ப்பரேட் நிறுவனம் இந்த அமைப்பில் அங்கீகாரம் பெற்றுவிட்டால், அவை மாநிலப் பதிவேட்டிலும் பதிவு செய்யப்பட்டவையாகக் கருதப்படும் என்றும் குறிப்பிட்டுள்ளது.

அதாவது, ஒன்றிய அரசு விதை நிறுவனத்திற்கு அங்கீகாரம் அளித்தால் போதும், மாநில அரசுகளிடம் அங்கீகாரம் பெறத் தேவையில்லை என்று கூறுகிறது. இந்தியாவின் ஒவ்வொரு மாநிலத்தின் சூழலியல், தட்பவெப்ப நிலை, மண்ணின் தன்மை, மக்களின் உணவு பண்பாடு வேறுபட்டதாக இருக்கும் சூழலில் மாநில அரசு சோதிக்காமல் விதை அனுமதிக்கப்படுவது நாசகர விளைவுகளையே ஏற்படுத்தும்.

அதேபோல், ‘அவசர சூழ்நிலைகளில்’ (emergent situations) மட்டுமே ஒன்றிய அரசு விதைகளின் விலை நிர்ணயத்தில் தலையிடும் என்று இம்மசோதா கூறுகிறது. அதாவது, இனி கார்ப்பரேட் நிறுவனங்கள் தங்கள் விரும்பும் போல் விதைகளின் விலையை தீர்மானித்துக் கொள்ளலாம். இது தொலைதொடர்புத் துறையில் ஜியோ, ஏர்டெல் ஆகிய நிறுவனங்கள் எவ்வாறு தங்களுடைய ஏகபோக ஆதிக்கத்தை நிறுவினவோ அதேபோல் விதை சந்தையிலும் ஒரு சில கார்ப்பரேட் நிறுவனங்களின் ஏகபோகத்தை நிலைநாட்டுவதை நோக்கி இட்டுசெல்லும்.

காற்றில் பறக்க விடப்படும் ‘இறையாண்மை’

பாசிச மோடி அரசின் கார்ப்பரேட் சேவையின் உச்சமாக, இந்தியாவில் விற்பனை செய்யப்படும் விதைகளுக்கு வெளிநாட்டு விதை பரிசோதனை ஆய்வகங்களால் அளிக்கப்படும் தரச் சான்றிதழ்களும் ஏற்றுக்கொள்ளப்படும் என்று இம்மசோதாவில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதன் மூலம், கார்ப்பரேட் நிறுவனங்கள் தாங்களே தரச் சான்றிதழ் அளித்துக்கொண்ட விதைகளை, ஒன்றிய-மாநில அரசுகளின் எந்தவித சோதனை உட்படுத்தாமல் நம் நாட்டிற்குள் திணிக்கும்.

ஒரு விதையின் செயல்திறனை உள்ளூர் மண் நிலைமைகள், மழைப் பொழிவு, பூச்சி மற்றும் நோய்கள் மற்றும் விவசாய நடைமுறைகள்தான் பிரதானமாக தீர்மானிக்கின்றன. ஆனால், அந்நிய மண்ணில் பரிசோதிக்கப்பட்ட ஒரு விதையை எந்தவித பரிசோதனையுமின்றி உள்நாட்டில் அனுமதிப்பது என்பது நிச்சயம் பேரழிவை ஏற்படுத்தும்.

முழுமையான பரிசோதனை இல்லாமல் அனுமதிக்கப்படும் விதைகளால், பயிர் விளைச்சலும் பல்லுயிர்ப் பெருக்கமும் பாதிக்கப்படும், நம் தாய் மண் மலடாகும். மேலும், விதைகள் என்பது உணவுப் பாதுகாப்புடன் பிணைந்தது என்பதால் பிஞ்சுக் குழந்தைகள் முதல் வயதானவர்கள் வரை உண்ணும் உணவை நஞ்சாக்கும் அபாயம் இதில் அடங்கியுள்ளது. ஒட்டுமொத்தத்தில், கார்ப்பரேட் நிறுவனங்களின் இலாபவெறிக்காக இந்திய ‘இறையாண்மை’யை காற்றில் பறக்கவிட்டுள்ளது மோடி அரசு.

கார்ப்பரேட்மயமாகும் விதை சந்தை

இந்தியாவில் 1990-களில் தனியார்மயம்-தாராளமயம்-உலகமயம் என்ற மறுகாலனியாக்கக் கொள்கைகள் அமல்படுத்தப்பட்ட பிறகு, இந்திய விதை சந்தையை தங்களுக்கு திறந்துவிடக்கோரி பன்னாட்டு கார்ப்பரேட்டுகள் தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வந்தன. அதனடிப்படையில் 2004, 2010 மற்றும் 2019 ஆகிய ஆண்டுகளில் விதை சட்டங்களில் கார்ப்பரேட்டுகளுக்கு சாதகமாகத் திருத்தங்களை மேற்கொள்வதற்கான முயற்சிகள் நடந்துள்ளன. ஆனால், விவசாயிகளின் கடும் எதிர்ப்பினால் அவற்றை நடைமுறைப்படுத்த இயலவில்லை.

ஆனால், “தாவர வகைகள் மற்றும் விவசாய உரிமைகள் சட்டம், 2001” இந்திய விதைச் சந்தையை கார்ப்பரேட்டுகளுக்கு திறந்துவிடுவதற்கான வழியை ஏற்படுத்திக் கொடுத்தது. இச்சட்டம் ஒரு குறிப்பிட்ட விதையை உற்பத்தி செய்யக்கூடிய நிறுவனத்திற்கு மட்டும், அதனை விற்பனை, மறு உற்பத்தி செய்யக்கூடிய பிரத்தியேக காப்பு உரிமைகளை அளிக்கிறது.

மரபணு மாற்றப்பட்ட கொடிய நச்சு விதையான பி.டி. பருத்திக்கான (BT Cotton) காப்புரிமையை அமெரிக்காவை சார்ந்த பகாசுர கார்ப்பரேட் நிறுவனமான மான்சாண்டோ இச்சட்டத்தின் அடிப்படையிலேயே பெற்றிருக்கிறது. இந்தியாவில் பயிரிடப்படும் பருத்தி விதைகளில் 90 சதவிகிதத்திற்கும் மேற்பட்டவை பி.டி. பருத்தி விதைகள் எனும் அளவிற்கு தன்னுடைய ஏகபோக ஆதிக்கத்தை நிலைநாட்டி இருக்கிறது.

எனவே, இம்மசோதா சட்டமாக்கப்படும் பட்சத்தில் மான்சாண்டோ போன்ற பன்னாட்டு கார்ப்பரேட் நிறுவனங்களின் ஆதிக்கம் இந்திய விதைச் சந்தையில் நிலைநாட்டப்படும்.

குறிப்பாக, அமெரிக்க கார்ப்பரேட் விதை நிறுவனங்களின் ஆதிக்கத்தை இந்திய விதைச் சந்தையில் நிலைநாட்ட வேண்டும் என்ற நோக்கத்திலிருந்தே இம்மசோதாவை பாசிச மோடி அரசு கொண்டு வந்திருக்கிறது.

அமெரிக்க-இந்திய காம்பாக்ட் திட்டத்தின் அடிப்படையில், இந்தியாவின் விவசாயம், பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு துறைகளை திறந்துவிடக் கோரி அமெரிக்க டிரம்ப் அரசு மோடி அரசிற்கு நிர்பந்தம் கொடுத்துக் கொண்டிருக்கிறது. இச்சூழலில் இம்மசோதா தாக்கல் செய்யப்பட்டுள்ளது இதன் பின்னணியில் அமெரிக்க கார்ப்பரேட்டுகளின் நலன் உள்ளதை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது.

மேலும், பி.டி. கத்திரிக்காய் போன்ற மற்ற பி.டி. விதைகளை இந்தியாவிற்குள் கொண்டு வருவதற்கான முயற்சிகளில் பன்னாட்டு கார்ப்பரேட் நிறுவனங்கள் ஈடுபட்டு வருவதும், பி.டி. விதைகளை இந்தியாவிற்குள் அனுமதிப்பதற்கான வழக்கு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளதும் இங்கு குறிப்பிடத்தக்கது. வருங்காலங்களில் பி.டி. விதைகளை அனுமதிப்பதற்கான விதிகளும் மோடி அரசால் திருத்தப்படலாம்.

அதேபோல, இம்மசோதா சட்டமாக்கப்படும் பட்சத்தில் பன்னாட்டு கார்ப்பரேட் கும்பல்கள் மட்டுமின்றி, ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க. கும்பல் பிரதிநிதித்துவப்படுத்தும் அம்பானி, அதானி வகையறா கார்ப்பரேட்டுகளும் இந்திய விதை சந்தையில் ஆதிக்கம் செலுத்துவதற்கான நடவடிக்கைகளில் வருங்காலங்களில் ஈடுபடலாம்.

இவ்வாறு, இந்திய விதை சந்தையில் பன்னாட்டு மற்றும் உள்நாட்டு கார்ப்பரேட் கும்பல்களின் ஆதிக்கம் நிலைநாட்டப்படுவது இந்திய நாட்டின் கோடானுகோடி மக்களின் உணவு உரிமையின் மீது தொடுக்கப்படும் பயங்கரவாதமாகும். ஏனென்றால், கார்ப்பரேட் கும்பல்களின் ஆதிக்கத்தால் இந்திய விவசாயிகளும் மக்களும் தங்களுடைய உணவிற்காக ஒரு சில கார்ப்பரேட் நிறுவனங்களை சார்ந்திருக்க வேண்டிய அபாயகரமான நிலைமை உருவாகும்.

இந்நிறுவனங்கள் தங்களுடைய இலாப நோக்கத்திற்காக கலப்பு (ஹைபிரிட்) மற்றும் மரபணு மாற்றப்பட்ட விதைகளை இந்திய விவசாயிகளிடையே திணிப்பதற்கான முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்றன. இவ்விதைகள் மக்களின் ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கக் கூடியவை என்பதை பல்வேறு சூழலியல் செயற்பாட்டாளர்களும் ஆய்வுகளும் நிரூபித்திருக்கின்றன. இவ்விதைகள் பயன்படுத்தப்பட்டால் உரத்தேவைகள் அதிகரித்து, மண் வளம் நாசமாகும் என்பதும் நிரூபிக்கப்பட்டுள்ளன.

விதை: விவசாய கார்ப்பரேட்மயமாக்கத்தின் கண்ணி

இந்திய விவசாயிகளிடமிருந்து விதைகளின் மீதான உரிமைகளைப் பறிப்பது என்பது விவசாயத்தின் மீதான விவசாயிகளின் கட்டுப்பாட்டை பறிப்பதாகும். இது விவசாயிகளை விதைகளுக்காக கார்ப்பரேட்டுகளிடம் கையேந்தச் செய்து ஒப்பந்த விவசாயத்தையே ஊக்குவிக்கும். இது, விவசாயிகள் விவசாயத்திலிருந்து வெளியேறுவதை மிகப்பெரிய அளவில் தீவிரப்படுத்தி, அதனை கார்ப்பரேட்டுகள் கைப்பற்றுவதை எளிதாக்கும்.

மேலும், விவசாய இடுபொருட்களுக்கான விலை உயர்வு, டீசல் விலை உயர்வு, அரசின் மானிய வெட்டு, விளைபொருட்கள் உரிய விலைகளில் கொள்முதல் செய்யப்படாமை உள்ளிட்ட காரணங்களால் விவசாயம் என்பதே நட்டமான தொழிலாக மாறிக்கொண்டிருக்கும் சூழலில், விதைகளின் விலை உயர்வு அதனை மேலும் தீவிரப்படுத்தும். விவசாயிகளின் தற்கொலைகளை அதிகரிக்கும்.

அதாவது, விதைகள் மசோதாவானது இந்தியாவின் ஒட்டுமொத்த விவசாயிகளில் 80 சதவிகிதத்திற்கும் மேல் உள்ள சிறு, குறு விவசாயிகளை விவசாயத்திலிருந்து வெளியேற்றி, கார்ப்பரேட் கும்பல்களின் பண்ணை வடிவிலான விவசாயத்தை நிலைநாட்டுவதற்காக மோடி அரசால் அமல்படுத்த முயன்ற மூன்று பாசிச வேளாண் சட்டங்களின் நோக்கத்தை கொண்டுள்ளது.

இம்மசோதாவின் பின்னணியில் இத்தகைய பேரபாயம் ஒளிந்திருப்பதால்தான் விவசாய சங்கங்களும் ஜனநாயக சக்திகளும் இதனை தீவிரமாக எதிர்த்து வருகின்றன. கடந்த டிசம்பர் 8-ஆம் தேதி இம்மசோதா மற்றும் மின்சார சட்டத் திருத்த மசோதா, 2025-இன் நகல்களை கிழித்தெறியும் போராட்டங்களை நாடு முழுவதும் விவசாய சங்கங்கள் நடத்தியிருக்கின்றன.

பா.ஜ.க-வின் பாசிச நடவடிக்கைகளை எதிர்ப்பதாகக் கூறிக்கொள்ளும் எதிர்க்கட்சிகள் தங்களுடைய வர்க்க சார்பிலிருந்து இம்மசோதாவிற்கு பெயரளவிலான எதிர்ப்புடன் தங்களை வரம்பிட்டுக் கொண்ட போதிலும் விவசாய சங்கங்கள் இப்பாசிச சட்டங்களை அமல்படுத்த விடக்கூடாது என்பதில் உறுதியாக உள்ளனர்.

தங்களின் நெஞ்சுறுதிமிக்க போராட்டங்களே மோடி அரசை பணிய வைக்கும் என்று தங்களது சொந்த அனுபவத்தின் மூலம் உணர்ந்திருக்கும் விவசாயிகள் இப்பாசிச சட்டங்களுக்கெதிராக போராட்டங்களை கட்டியமைத்துக் கொண்டிருக்கிறார்கள். போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக ஒட்டுமொத்த மக்களையும் அணிதிரட்ட வேண்டியது புரட்சிகர-ஜனநாயக சக்திகளின் கடமையாகும்.


அமீர்

(புதிய ஜனநாயகம் – பிப்ரவரி 2026 இதழ்)

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram



விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க