தாது மணல் கொள்ளையும் போராட்டம் கடந்து வந்த பாதையும்

தொடர்ச்சியான மக்கள் போராட்டங்களின் விளைவாக தற்போது இவ்வழக்கு அபராதம் விதிப்பது, சி.பி.ஐ விசாரணை என்று ஒரு கட்டத்தை அடைந்துள்ளது.

நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் தாது மணல் கொள்ளையன் வைகுண்டராஜனின் வி.வி. மினரல்ஸ் மற்றும் டிரான்ஸ்வேர்ல்டு, கார்னெட், பீச் மினரல்ஸ், இண்டஸ்ட்ரியல் மினரல்ஸ் உள்ளிட்ட ஏழு நிறுவனங்களுக்கு தாது மணலை கொள்ளையடித்து அரசுக்கு நட்டத்தை ஏற்படுத்தியதாக கடந்த பிப்ரவரி மாதம் சென்னை உயர்நீதிமன்றம் ரூபாய் 5,832 கோடியே 44 லட்சத்து 23 ஆயிரத்து 835 ரூபாய் அபராதம் விதித்தது.

இந்த அபராதமும், சிபிஐ விசாரணைக்கு நீதிமன்றம் உததரவிட்டதும் உழைக்கும் மக்களின், குறிப்பாக மீனவ மக்கள் உயிரைப் பணயம் வைத்து நடத்திய போராட்டம், புரட்சிகர, ஜனநாயக சக்திகள் துணிச்சலுடன் தடைகளை கடந்து மக்களுடன் கரம் கோர்த்து களம் கண்டது ஆகியவற்றின் விளைவாகவே ஏற்பட்டது‌.

இந்த 5,832 கோடி ரூபாயில் வைகுண்டராஜனின் வி.வி. மினரல்ஸ் நிறுவனத்தின் பங்கு மட்டும் 2,295 கோடி ரூபாய் என்றால், வைகுண்டராஜன் சாம்ராஜ்யம் எத்தனை பரந்து விரிந்தது என்பதை நாம் உணர முடியும். ஆயினும் இது ஊசி முனை அளவு தான் என்பதையும் நாம் இங்கே கவனிக்க வேண்டும்.

2015 ஆம் ஆண்டு சட்டவிரோதமாக தாது மணல் எடுத்து வெளிநாட்டுக்கு கடத்துவதாக தொடுக்கப்பட்ட வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் தானாக முன்வந்து விசாரித்தது.

அப்போது ஆட்சியில் இருந்த ஜெயா அரசு நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்தது. அந்த மனுவில் 2013 ஆம் ஆண்டிலேயே தாது மணல் அள்ளுவதற்கு தடை விதிக்கப்பட்டதாகவும், தடைக்கு பின்னரும் தாது மணல் எடுக்கப்பட்டதாகவும், இவ்வாறு தடைக்கு முன்னரும் பின்னரும் எடுத்து வெளிநாட்டுக்கு கடத்தப்பட்ட தாதுமணல் மூலம் தமிழ்நாடு அரசுக்கு 5,832 கோடி ருபாய் இழப்பு ஏற்பட்டிருக்கிறது என்றும் இதை தனியார் நிறுவனங்களிடமிருந்து வசூலிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது எனவும் தெரிவித்தது.

2013 ஆம் ஆண்டில் தடை விதிக்கப்பட்ட பின்னரும் எப்படி தாது மணல் எடுக்கப்பட்டது, எப்படி வெளிநாட்டிற்கு கடத்தப்பட்டது என ஜெயா அரசு பதில் அளிக்கவில்லை. நீதிமன்றமும் ஜெயா அரசையோ, மாவட்ட நிர்வாகத்தையோ, துறைசார்ந்த அதிகாரிகளையோ இந்த சட்டவிரோத மணல் கடத்தலுக்கு பொறுப்பேற்கச் சொல்லி குற்றவாளிக் கூண்டில் நிறுத்தவில்லை.

ஜெயாவின் ஆசியோடு அவரது தொழில் கூட்டாளியான தாது மணல் கொள்ளையன் வைகுண்டராஜன் அதிகாரிகளையும், அரசியல்வாதிகளையும் கைக்குள் போட்டு நடத்திய கூட்டுக் கொள்ளை இது. இந்த கூட்டுக் கொள்ளையை மூடி மறைத்து தான் ஜெயா அரசு தனக்கு சம்பந்தமில்லாதது போல் அரசுக்கு நட்டம், அபராதம் என மக்களின் காதுகளில் பூ சுற்ற முயற்சி செய்தது. இந்த இழப்பீட்டு அபராத தொகையைத்தான் தற்போது நீதிமன்றம் வசூலிக்க உத்தரவிட்டிருக்கிறது. இன்று வரை வைகுண்டராஜன் பல்வேறு பெயர்களில் தனது தாதுமணல் கொள்ளை சாம்ராஜ்யத்தை நடத்திக் கொண்டு தான் இருக்கிறார்.

இவ்வழக்கு நீதிமன்றத்தில் நடைபெற்று 2018 இல் ஆய்வு செய்யப்பட்ட போது  திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் இருந்து 234.5 ஹெக்டேர் பரப்பில் ஒரு கோடியே ஒரு லட்சம் டன்னுக்கும் மேலாக தாது மணல் சட்ட விரோதமாக அனுப்பி வைக்கப்பட்டது தெரிய வந்தது. ஒரு கோடியே 50 லட்சம் மெட்ரிக் டன் இருப்பில் இருந்ததும் தெரிய வந்தது. அப்போது குடோன்களில் இருந்த மணல்கள் கணக்கிடப்பட்டு குடோன்கள் சீல் வைக்கப்பட்டது. அப்படி சீல் வைக்கப்பட்ட குடோன்களில் இருந்து 2021 – 22 இல் மீண்டும் ஆய்வு செய்தபோது 16 லட்சம் டன் மணல் காணாமல் போனது. சீல் வைக்கப்பட்ட குடோன்களில் இருந்து மணல் எப்படி காணாமல் போனது? மணல் அள்ள தடை செய்யப்பட்ட பின்னர் மேலும் 6 லட்சம் டன் புதியதாக வந்துள்ளது. தடை செய்யப்பட்ட பின்னும் இது எப்படி கிடைத்தது? ஆய்வு, சீல் வைப்பு, தடை, வழக்கு, விசாரணை இதுவெல்லாம் வைகுண்டராஜனின் சாம்ராஜ்யத்தை ஆட்டவோ, அசைக்கவோ முடியாது என்பதையே இச்சம்பவம்  அறிவிப்பதாக உள்ளது.

தாது மணல் கொள்ளையன் வைகுண்டராஜன் தனது கொள்ளைக்காக மக்களுக்கு இழைத்த அநீதி மிகக் கொடூரமானது. வைகுண்டராஜனின் தாது மணல் கொள்ளையை எதிர்த்து மீனவர்கள் புகார் கொடுத்தால் அப்புகார் அதிகாரிகளால் வைகுண்ட ராஜனுக்கு தெரிவிக்கப்பட்டு, விசாரிக்க வந்த அதிகாரிக்கு முன்பே புகார் கொடுத்தவர்கள் வைகுண்டராஜனின் அடியாட்களால் அடித்து உதைக்கப்பட்டனர். 1996 இல் பெருமணல் கிராமத்தில் மக்கள் போராடியபோது எஸ்.பி ஜாங்கிட் தலைமையிலான போலீஸ் படை ஏவப்பட்டு மக்கள் அடித்து நொறுக்கப்பட்டனர். கூத்தங்குழியில் மணல் கொள்ளையை எதிர்ப்பவர்கள் மீது நாட்டு வெடிகுண்டு வீசி அவர்கள் ஊரில் இருந்து விரட்டியடிக்கப்பட்டனர். கடற்கரை கிராம மக்களை பிளவுபடுத்தி கலவர சூழலை உருவாக்கி அமைதி, நிம்மதியான சூழல் குலைக்கப்பட்டது. இவ்வளவையும் மீறி மக்களின் தொடர் முயற்சியின் காரணமாக கலெக்டர் ஆஷிஸ் குமார் தூத்துக்குடி மாவட்டம் வைப்பாரில் மணல் கொள்ளை பற்றி ஆய்வு செய்ய உத்தரவிட வேண்டி வந்தது. இந்த செய்தி பத்திரிகையில் வந்ததுமே அவர் தூக்கி அடிக்கப்பட்டார்.

இதில் மக்கள் போராட்டம் முக்கியமானது. மக்கள் தங்கள் உயிரை பணயம் வைத்து தாது மணல் அள்ளிச்சென்ற லாரிகளை சிறை பிடித்து போராட்டம் நடத்தினர்.


படிக்க: டங்ஸ்டன் கனிம சுரங்க திட்டத்தை எதிர்த்து 2000 பேர் ஆர்ப்பாட்டம்!


மக்களின் தொடர்ச்சியான போராட்டம் மற்றும் கலெக்டர் ஆஷிஸ் குமார் அறிக்கை பத்திரிகையில் வெளிவந்து அம்பலமானது ஆகியவற்றால் வேறு வழியின்றி, ஜெயா அரசு தூத்துக்குடி மாவட்டத்தில் தாது மணல் கொள்ளை சம்மந்தமான விதி மீறல்களை ஆய்வு செய்ய ககன்தீப்சிங் பேடி தலைமையில் ஆய்வு குழுவை அறிவித்தது. நெல்லை மாவட்ட கடற்கரையில் தான் அதிகமாக தாதுமணல் சூறையாடப்பட்டிருந்தது. ஆனால் இக்குழு தூத்துக்குடி மாவட்டத்தில் மட்டும் ஆய்வு செய்யும் என குறிப்பிடப்பட்டது. அனுமதி பெறாத இடங்களில் டன் கணக்கில் மணல் அள்ளப்பட்டிருக்க, அனுமதி பெற்ற இடங்களில் நடைபெற்ற முறைகேடுகளை மட்டுமே இக்குழு ஆய்வு செய்யும் என்றும் அறிவிக்கப்பட்டது. மக்களின் தொடர்ச்சியான போராட்டத்தினால் தமிழ்நாடு முழுவதும் இக்குழு ஆய்வு செய்யும் என பின்னர் அறிவிக்கப்பட்டது. ஆனால் இக்குழு பாதிக்கப்பட்ட மக்களின் கருத்துகளைக் கேட்கவோ, அவர்களை சந்திக்கவோ தயாராக இல்லை. பெரியதாழையில் போலீசின் தடுப்புக்களை உடைத்து எறிந்து ஆய்வு குழுவை நெருங்கி முழக்கமிட்டு புகார் தெரிவித்தனர் மீனவ மக்கள்.

மீனவ மக்களை பிளவுபடுத்தும் விதமாக பல கிரிமினல் வேலைகளை செய்த வைகுண்டராஜன் கொலை வரைக்கும் அதை கொண்டு சென்றார். தனது எடுபிடிகளை தூண்டிவிட்டு தடை செய்யப்பட்ட மணல் ஆலையை திறக்க வேண்டும் என நெல்லை மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுக்க வைத்தார். மீனவ சமுதாயத்தைச் சேர்ந்த ஜோசப் பெர்னாண்டோ என்பவரை வைத்து ஒரு சில இளைஞர்களை கூட்டி போய் மனு கொடுக்க வைத்தார்‌. மீனவ மக்கள் ஜோசப் பெர்னாண்டோவை கண்டித்தனர். இதனால் மனமுடைந்து விசம் குடிப்பது போல் நடிக்கச் சொன்ன வைகுண்டராஜன் கும்பல் ஜோசப் பெர்னாண்டோவுக்கு தெரியாமலே அதிக அளவு விசத்தை கொடுத்ததால் அவர் இறந்துவிட்டார். இந்த பழியை மீனவர் தலைவர்கள் மீது போடுவதற்கான சதி நடந்தது.

மேற்கண்ட அனைத்து பிரச்சனைகளிலும் மக்கள் உறுதியோடு நின்று போராடினர். மக்களோடு அன்றைய மனித உரிமை பாதுகாப்பு மைய வழக்கறிஞர்கள் மற்றும் ம.க.இ.க உள்ளிட்ட புரட்சிகர அமைப்புகள், ஜனநாயக சக்திகள் இணைந்து போராடி வைகுண்டராஜனின் சதிகளை அம்பலப்படுத்தினர்.

வைகுண்ட ராஜனுக்கு எதிராக ம.க.இ.க உள்ளிட்ட புரட்சிகர அமைப்புகள் தொடர்ச்சியான போராட்டங்களை மேற்கொண்டன. தோழர்கள் வைகுண்ட ராஜனுக்கு எதிராக விரிந்த அளவில் பிரச்சாரத்தை தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய மூன்று மாவட்டங்களிலும் மேற்கொண்டனர். தோழர்களின் பிரச்சாரம் புரட்சிகர அமைப்புக்கு உரிய துணிச்சலான நடவடிக்கையாக மக்கள் மத்தியில் பார்க்கப்பட்டது. 2013 அக்டோபரில் தூத்துக்குடி நீதிமன்றத்தில் இருந்து பேரணியாக சென்று கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிடுவது என்று போராட்டம் அறிவிக்கப்பட்டது. முதலில் அனுமதி வழங்கிய போலீஸ் அதன் பின் அனுமதி மறுத்தது. போலீசு தடையை மீறி பேரணி நடத்தி சாலை மறியல் செய்து 150க்கும் மேற்பட்ட தோழர்கள் கைதாகினர். இது வைகுண்ட ராஜனுக்கு எதிரான முதல் அடியாக இருந்தது. தாது மணல் கொள்ளை என்று மட்டும் குறிப்பிட்டு வைகுண்டராஜனின் பெயரை சொல்லாமல் கட்சிகள் கண்டன அறிக்கை வெளியிட்டுக் கொண்டிருக்க, ”தாது மணல் கொள்ளையன் வைகுண்ட ராஜனை கைது செய்! தாது மணல் குவாரிகளை இழுத்து மூடு!” என்ற தலைப்பில் நவம்பரில் தூத்துக்குடியில் பொதுக்கூட்டம் நடத்தப்பட்டது. திரளான மக்கள் இப்பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு வைகுண்ட ராஜனுக்கு எதிரான தமது எதிர்ப்பை பதிவு செய்தனர். தூத்துக்குடியில் மனித உரிமைப் பாதுகாப்பு மையத்தின் சார்பாக நடந்த பொதுக்கூட்டத்தால் உந்தப்பட்ட பெரியதாழை ஊர்க்கமிட்டியினரும் மீனவர்களும் தமது ஊரிலும் இது போன்று பொதுக்கூட்டம் போட்டு மக்களுக்கு போராட்ட உணர்வூட்ட வேண்டும் என முடிவெடுத்தனர். அன்றைய ஊர்க்கமிட்டி தலைவர் கான்சியஸ் அவர்களின் கோரிக்கையை ஏற்று ம.உ.பா. மையத்தினரின் பங்கேற்புடன் பெரியதாழையில் கூட்டம் நடத்தப்பட்டது.

வைகுண்டராஜனின் தம்பியான சுகுமாரால் இயக்கப்படும் பி.எம்.சி. எனும் மணல் ஆலையால் பாதிக்கப்பட்டு 2005 ஆம் ஆண்டிலேயே போராட்டக்களத்துக்கு வந்துவிட்ட பெரியதாழை மக்களுக்கு ”அடுத்து எப்படி முன்னேறிச்செல்வது? ஆலையை நிரந்தரமாக மூடவைப்பதற்கு எத்தகைய போராட்டம் தேவை? போலீசை ஏவி தாக்குவதையும், பொய் வழக்கு போடுவதையும் எதிர்கொள்வது எப்படி?” என்பதை விளக்கும் விதமாக பேச்சாளர்கள் விளக்கினர். தனியார்மயத்தை – மறுகாலனியாக்கத்தை முறியடிக்க உழைக்கும் வர்க்கமாக கரம் கோர்க்க வலியுறுத்தினர்.

வி.வி-யின் சொந்த ஊருக்கு அருகிலேயே ஏற்பாடு செய்யப்பட்ட பொதுக்கூட்டத்தால் கைக்கூலிகள் கொதித்தனர். இரவில் சுவரொட்டியை மேய்ந்தனர். சில ஊர்களில் பொதுக்கூட்ட சுவரொட்டியை கிழித்த கைக்கூலிகளை ஊர் மக்களே விரட்டியடித்தனர். உடனே “நோட்டீச கொடுங்க, மீண்டும் ஒட்டுகிறோம், எவன் வந்தாலும் பாத்துடறோம்” என தகவலும் அனுப்பினர்.

தூத்துக்குடி பொதுக்கூட்ட குறுந்தகடு இப்பொதுக்கூட்டத்தில் வெளியிடப்பட்டு மேடைக்கு அருகில் விற்பனை செய்யப்பட்டது. சிலர் 5 – 10 என்று வாங்கி தன் நண்பர்களுக்குத் தந்தனர்.


படிக்க: வனம், கனிமப் பாதுகாப்பு சட்டத் திருத்தங்கள்: கார்ப்பரேட் கொள்ளையின் முகமூடி!


தொடர்ச்சியான மக்கள் போராட்டங்களின் விளைவாக தற்போது இவ்வழக்கு அபராதம் விதிப்பது, சி.பி.ஐ விசாரணை என்று ஒரு கட்டத்தை அடைந்துள்ளது. அது மட்டுமன்றி அமலாக்கத்துறை, வருமானவரித்துறை, சுங்கம் மற்றும் கலால் துறை, வணிகவரித்துறை அதிகாரிகளும் கூட்டாக இதை விசாரிக்க வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.

உலகிலேயே பிரேசில், துருக்கி ஆகிய நாடுகளுக்கு அடுத்தபடியாக தோரியம் மிகுதியாக உள்ள நாடு இந்தியா. இதில் தமிழ்நாடு மோனோசைட் – தோரியம் உற்பத்தி களஞ்சியமாக உள்ளது. நாட்டின் இயற்கை வளத்தை சட்ட விரோதமாக ஏற்றுமதி செய்ய அனுமதி அளித்த கனிமவளத்துறை, சுங்கத்துறை, சுற்றுச்சூழலியல் துறை, பாதுகாப்பு துறை சம்பந்தப்பட்ட மத்திய, மாநில அரசு அதிகாரிகள் மீது துறை ரீதியாகவும், குற்றவியல் ரீதியாகவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஆனாலும் இது முழுமையானது அல்ல.

இந்த கொள்ளையர்கள் தாது மணலை திருடி விற்று கொள்ளை லாபம் சம்பாதித்தது மட்டுமல்ல, ஈரக்குலையை அறுப்பது போல் கடல்வளம், இயற்கை வளம், சுற்றுச்சூழல் பாதிப்பு, மீனவர்கள் வாழ்வாதாரத்தை அழித்தது, கொலைபாதகச் செயலில் ஈடுபட்டது, போராடிய மக்கள் மீது தாக்குதல் நடத்தியது, அதிகாரத்தை வளைத்து காரியத்தை சாதித்தது உள்ளிட்டவற்றை கணக்கிட்டால் இந்த விசாரணைகள், அபராதத் தொகை எல்லாம் சாதாரணமே.

இன்னும் போராட்டம் ஓயவில்லை. தூத்துக்குடி மாவட்டம் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்திற்கு முன்னோடி வைகுண்ட ராஜனின் தாது மணல் கொள்ளைக்கு எதிரான போராட்டம்.  சட்டவிரோத தாது மணல் கொள்ளையால் புற்றுநோயினாலும் மற்ற பிற உடல் நலக் கோளாறாலும் பலர் இறந்தனர். பலர் தங்களது வாழ்வாதாரத்தை இழந்தனர். இயற்கை வளம் அழிக்கப்பட்டுள்ளது. இக் கொடுமைகளுக்கும் போராடிய மக்களுக்கும் நீதி கிடைக்க வேண்டுமானால் ”தாது மணல் கொள்ளையன் வைகுண்டராஜன் சொத்துக்களை பறிமுதல் செய்து, அவரைக் கைது செய்ய வேண்டும்.

அனைத்து தாது மணல் குவாரிகளையும் நிரந்தரமாக மூட வேண்டும்”

போன்ற கோரிக்கைளை முன்வைத்து மக்கள் போராட்டங்களை கட்டியமைப்பது ஒன்றே தீர்வாக இருக்கும்.


ரஞ்சித்

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram



விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க