சத்தீஸ்கர் மாநிலம் பிஜாப்பூர் மாவட்டத்தில் உள்ள இந்திராவதி தேசிய பூங்காவில் ஜூன் 5-ஆம் தேதி முதல் தொடர்ந்து மூன்று நாட்களாக மாவோயிஸ்ட் தோழர்கள் மீதான தாக்குதல் நடந்து வந்தது. இதில் ஏழு மாவோயிஸ்ட் தலைவர்கள் கொடூரமாக சித்திரவதை செய்து கொல்லப்பட்டுள்ளனர். இதனை சிவில் உரிமைகள் குழு (Civil Liberties Committee) என்ற அமைப்பு வெளிச்சத்திற்குக் கொண்டு வந்துள்ளது.
சிவில் உரிமைகள் குழுவின் தெலுங்கானா தலைவர் கடாம் லட்சுமணன், பொதுச் செயலாளர் எம். நாராயண ராவ் மற்றும் பிற அலுவலக நிர்வாகிகள் தெரிவிக்கையில், “1,250 சதுர கிலோமீட்டர் பரப்பளவு கொண்ட தேசிய பூங்காவின் பர்ஷாகர் கிராமத்திலிருந்து பத்து மாவோயிஸ்ட் தோழர்களை போலீசு கைது செய்து இழுத்துச் சென்றது. ஜூன் 5-ஆம் தேதி ஒருவர், ஜூன் 6-ஆம் தேதி நான்கு பேர் மற்றும் ஜூன் 7-ஆம் தேதி இரண்டு பேர் என தினமும் மனிதாபிமானமற்ற முறையில் சித்திரவதை செய்து ஏழு மாவோயிஸ்ட் தலைவர்கள் கொடூரமாகக் கொல்லப்பட்டுள்ளனர்; மீதமுள்ள மூன்று மாவோயிஸ்டுகள் போலீசிடம் உள்ளனர்” என்று அம்பலப்படுத்தியுள்ளனர்.
ஜூன் 5-ஆம் தேதி கொல்லப்பட்ட சி.பி.ஐ. (மாவோயிஸ்ட்) மத்தியக் குழு உறுப்பினர் டெண்டு லட்சுமி நரசிம்மா மற்றும் ஜூன் 6-ஆம் தேதி கொல்லப்பட்ட சி.பி.ஐ. (மாவோயிஸ்ட்) தெலுங்கானா மாநிலக் குழு உறுப்பினர் மைலாரபு அடேலு என்ற பாஸ்கர் ஆகிய இருவரின் சடலங்கள் மட்டுமே அடையாளம் காணப்பட்டுள்ளதாக போலீசு தெரிவித்துள்ளது. ஆனால், போலீசின் பிடியிலிருந்த பத்து மாவோயிஸ்டுகளின் பெயர்களையும் சிவில் உரிமைகள் குழு வெளியிட்டு போலீசின் கபட நாடகத்தை அம்பலப்படுத்தியுள்ளது.
மேலும், ஜூன் 7-ஆம் தேதி மற்றொரு தெலுங்கானா மாநிலக் குழு உறுப்பினர் பண்டி பிரகாஷ் மற்றும் தண்டகாரண்யா சிறப்பு மண்டலக் குழு உறுப்பினர் பாப்பா ராவ் ஆகியோரின் மரணம் குறித்து தங்களுக்குத் தெரிய வந்ததாகவும் அவ்வமைப்பின் தெலுங்கானாத் தலைவர் லட்சுமணன் தெரிவித்துள்ளார். மேலும், பிரதேசக் குழு உறுப்பினர் ராமண்ணா, தேசிய பூங்கா பகுதிக் குழு செயலாளர் திலீப், தண்டகாரண்யா பகுதிக் குழு பெண் செயலாளர் சித்து மற்றும் தேசிய பூங்கா பகுதிக் குழு உறுப்பினர்கள் சுனிதா, மகேஷ் மற்றும் முன்னா ஆகியோர் போலீசின் பிடியில் இருப்பதாகவும் அவ்வமைப்பு அம்பலப்படுத்தியுள்ளது.
படிக்க: மாவோயிஸ்டுகள் படுகொலை: பாசிஸ்டுகளின் பயங்கரவாதம்
முன்னதாக, ஜூன் 5-ஆம் தேதி அன்று மாலையில் இப்படுகொலைகள் குறித்து சிவில் உரிமைகள் குழுவின் தெலுங்கானா தலைவர் கடாம் லட்சுமணன் தெரிவிக்கையில், “ஜூன் 5 ஆம் தேதி அன்று போலீசு தகவல் தொடர்பு வலையமைப்பு மூலம் அவர்கள் (மாவோயிஸ்டுகள்) இருக்கும் இடத்தை கண்டறிந்தனர். அதனை அறிந்து உடனடியாக, சிவில் உடையிலிருந்த பத்து மாவோயிஸ்டுகள், தங்கள் ஆலிவ் பச்சை சீருடைகளை மாற்றிக்கொண்டு, பாஷாகர் கிராமத்தில் தஞ்சம் புகுந்தனர். காலை 7 மணியளவில் அவர்களைக் கைது செய்வதற்காக போலீசு வந்தது. பின்னர் அவர்கள் ஒருவர் பின் ஒருவராகக் கொடூரமான முறையில் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர்” என்று தெரிவித்தார்.
மேலும், “சி.பி.ஐ. (மாவோயிஸ்ட்) தெலுங்கானா மாநிலக் குழு உறுப்பினர் பிரகாஷ் மற்றும் போலீஸ் பிடியில் உள்ளவர்களின் உயிருக்கு ஆபத்து உள்ளது; அவர்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாமல் உடனடியாக நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த வேண்டும். மோடி அரசு போர்நிறுத்தத்தை அறிவித்து மாவோயிஸ்டுகளுடன் அமைதிப் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். போலீசின் மனிதாபிமானமற்ற நடவடிக்கைக்கு எதிராக தேசிய மனித உரிமைகள் ஆணையமும் உச்சநீதிமன்றமும் தாமாக முன்வந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று அவர் கேட்டுக்கொண்டார். ஆனால், தோழர் பிரகாஷ் உட்பட போலீசு பிடியிலிருக்கும் ஒவ்வொரு மாவோயிஸ்டுகளையும் போலீசு சித்திரவதை செய்து கொன்று வருகிறது.
இந்நிலையில், மாவோயிஸ்டுகளின் தரப்பு மத்தியஸ்தர் பேராசிரியர் ஜி. ஹரகோபால் மற்றும் பிறரைக் கொண்ட “அமைதிக்கான ஒருங்கிணைப்புக் குழு”, சி.பி.ஐ. (மாவோயிஸ்ட்) கட்சியின் 18 மூத்த தோழர்கள் போலீஸ் பிடியில் இருப்பதாகத் தெரிவித்துள்ளது. இந்தத் தலைவர்களின் உயிருக்கு போலீசிடமிருந்து கடுமையான அச்சுறுத்தல் உள்ளதாகவும் “சத்தீஸ்கரில் உருவாகிவரும் அரசியலமைப்பு நெருக்கடி, ஜனநாயகக் கொள்கைகள் சிதைக்கப்படுவது ஆகியவற்றைத் தடுக்க நீதிமன்றத்தின் அவசரத் தலையீடு தேவை” என இவ்வமைப்பு வலியுறுத்தியுள்ளது.
பல்லா ரவீந்திரநாத் தலைமையிலான அரசியல் கைதிகளை விடுவிப்பதற்கான குழுவும், சுதாகர் மற்றும் பாஸ்கர் ஆகிய இரு தோழர்களும் போலி என்கவுண்டர்களில் கொல்லப்பட்டதாகக் குற்றஞ்சாட்டியுள்ளது.
படிக்க: இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மாவோயிஸ்ட்) பொதுச்செயலாளர் தோழர் பசவராஜ் அவர்களுக்கு வீர வணக்கம்!
அதேபோல், இந்திய மக்கள் வழக்கறிஞர்கள் சங்கத்தின் உறுப்பினர் பிச்சுகா சுதாகர், சத்தீஸ்கர் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு ஒரு கடிதம் எழுதியுள்ளார். அதில் மற்றொரு பிரேதப் பரிசோதனை நடத்தப்படும் வரை அவர்களின் உடல்களைப் பாதுகாக்க உத்தரவு பிறப்பிக்குமாறு தெரிவித்துள்ளார்.
ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க. பாசிச கும்பல் ‘நக்சல் ஒழிப்பு’ என்கிற பெயரில் “ஆபரேஷன் ககர்” நடவடிக்கையின் மூலம் மாவோயிஸ்டுகளை நரவேட்டையாடிக் கொண்டிருக்கிறது. மலைகளில் உள்ள கனிம வளங்களை அதானி, அம்பானி, அகர்வால் போன்ற கார்ப்பரேட் கும்பல்கள் கொள்ளையடிப்பதற்காக மலைகளில் வாழும் பழங்குடி மக்களை விரட்டியடிக்கும் திட்டத்தை நிறைவேற்றுவதற்காக மாவோயிஸ்ட் தோழர்களையும் பழங்குடியின மக்களையும் கொடூரமான முறையில் சித்திரவதை செய்து கொன்று வருகிறது.
மோடி அரசு அமைதி பேச்சுவார்த்தைக்கு உடன்பட வேண்டுமென இந்தியா முழுவதுமுள்ள ஜனநாயக சக்திகளும் மனித உரிமை ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்து வந்தாலும் அதற்கு செவிமடுக்காமல் பாசிச திமிர்த்தனத்துடன் தனது நரவேட்டையை தொடர்ந்து கொண்டிருக்கிறது. “பழங்குடி மக்கள், மாவோயிஸ்டுகள் மீதான உள்நாட்டுப் போரை நிறுத்து” என இந்தியா முழுவதிலுமிருந்து குரலெழுப்புவதும் போராட்டங்களைக் கட்டியமைப்பதுமே பாசிச கும்பலைப் பணிய வைக்கும்.
இன்குலாப்
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram