Monday, August 4, 2025
முகப்பு பதிவு பக்கம் 588

கையில் வீணை வாயில் கீதை நெஞ்சில் அணுகுண்டு…

279

cartoon_abdul_kalamஅழுது முடித்த கண்களுக்கு..!

றப்பின் துயரம்
புரிந்து கொள்ளக் கூடியதுதான்,
ஆனால்
சாவின் விளம்பரம்
சகிக்க முடியவில்லை.

கண்களை பிழிந்தெடுத்தன
காட்சி ஊடகங்கள்
காதுகளில்
சோகத்தை காய்ச்சி ஊற்றின
பண்பலைகள்

சீரியலுக்காக
செதுக்கப்பட்ட காட்சிகளாய்
ஒரு மரணத்தை மாற்றமுடியும்
என்று
சாதித்துக் காட்டினார்கள்
ஊடக முதலாளிகள்.

அறிவியல் எம்.ஜி. ஆரின்
இருப்பை மட்டுமல்ல
இறப்பை வழங்கும் நிகழ்ச்சியின்
இலாபமும்
உடைய வர்க்கத்துக்கே உரித்தானது.

கேள்விக்கிடமின்றி
எல்லோரும் இடறப்படும்போது
மொத்த சிந்தனையும்
கலாம் போதையால்
நிரப்பப்படும் போது
மத்த போதை எதற்கு?
மதுக்கடைகளை ஒரு நாள்
துணிந்து மூடியது அரசு.
சோகத்தின் இலக்கை
அடுத்த நாள் எட்டலாம்,
குடிப்பவன் உடம்பு ( பாடி )
(முன்னாள் ) குடியரசு தலைவருக்காக
ஒரு நாள் தாங்காதா என்ன?
சாதாரண இழப்பா இது!

அம்பானிக்கும், அதானிக்கும்
அம்பானியால் சிறுவணிகம் இழந்த
இராமேசுவரம் மளிகைக் கடைக்காரருக்கும்
அதானியால் நிலத்தை இழந்த
குஜராத் விவசாயிக்கும்,

எல்லோருக்கும் நல்லவர்
இறந்துவிட்டார்
!

அமித்ஷாவுக்கும், மோடிக்கும்
ஆர்.எஸ். எஸ். கொலைவெறி மோகன்பகவத்துக்கும்
திரிசூலத்தால் குதறப்பட்ட
அப்பாவி முஸ்லீம்களுக்கும்

எல்லோருக்கும் நல்லவர்
இறந்து விட்டார்
!

மலைக்கள்வர்களுக்கும்
மணல் கொள்ளையர்க்கும்
ஏரிகளை விழுங்கிய
ரியல் எஸ்டேட் மாபியாக்களுக்கும்
இவர்களால் வாழ்வாதாரம் இழந்து
மண்ணை விட்டு விரட்டப்படும் மக்களுக்கும்

AKALAMஎல்லோருக்கும் நல்லவர்
இறந்து விட்டார்
!

கண்ட கனவில்
கல்லா பிதுங்கும்
கல்விக் கொள்ளையர்க்கும்
கல்விக் கண்ணை
காசுக்கு விற்றுவிட்டு
கனவும் கானும் மாணவர்களுக்கும்

எல்லோருக்கும் நல்லவர்
இறந்துவிட்டார்
!

பெருந்தகையின் கனவை உள்வாங்கி
பெருந்தொகையில் முன்னேறிய
ஜெயலலிதாவும், தளபதியும்
ஜி.கே. வாசனும், விஜயகாந்தும்
அன்புமனியும், எடியூரப்பாவும்
ஏக்கத்தில் துவள

எல்லோருக்கும் நல்லவர்
இறந்துவிட்டார்
!

மதங்களைக் கடந்த மாமனிதர்
கையில் வீணை
வாயில் கீதை
நெஞ்சில் அணுகுண்டு…
என
பக்காவான
பார்ப்பன வல்லரசு கனவு நாயகனாகி
ஆர்.எஸ்.எஸ் குருமூர்த்தியே
பாராட்டுமளவுக்கு
அப்துல்கலாம் மெய்யாலுமே
மதங்களைக் கடந்த மாமனிதர்தான்!

செத்தவரெல்லாம்
உத்தமரென்றால் – அவர்
செய்தது என்ன
கேட்கலாம் தானே?

அப்துல்கலாமின் பங்களிப்பு
நாட்டைக் காப்பற்ற
அணுகுண்டு சோதனை
அடுத்தடுத்து ஏவுகணை! – என
அடுத்தவனை மிரட்டும் அறிவியலில்
அடைந்தது என்ன நாடு?

மீனவரைக் காப்பாற்ற
ஒரு ‘மிசைல்’ உண்டா?
மாணவரின் கழுத்தறுக்கும்
‘அட்மிசன்’ கொள்ளையைய் தகர்க்க
ஒரு அணுகுண்டு உண்டா?
பழங்குடிகளின் காடுகளைப் பிடுங்கும்
வேதாந்தாவின் ஆக்கிரமிப்புக்கு எதிராக
ஒரு ஏவுகனை உண்டா?
‘அப்ரைசல்’ எறிகனைக்கு எதிராக
கனவு கானும்
ஐ.டி. ஊழியர்களை காப்பாற்ற
கலாமிடம் ஒரு கருவி உண்டா?

நிலங்களையும், வயல்களையும்
பிடுங்கும்
கார்ப்பரேட் எதிரிகளைத் தாக்க
ஏதேனும் உண்டா கலாமின் கண்டுபிடிப்புகளில்!
இயற்கை வளங்களை கண்டறியும்
செயற்கை கோள்களை தயாரித்து
சுரண்டும் முதலாளிக்கு வழங்கும்
நாட்டை அழிக்கும் வேலைக்கு எதிராக
நடையைக் கட்டியதுண்டா கலாமின் எளிமை!

பச்சை பிள்ளைகளிடம் போய்
மதிப்பீடுகள் பேசிய மாமனிதர்
பாராளுமன்ற உறுப்பினர்களை
கூட்டிவைத்து
‘லஞ்சம் வாங்க மாட்டோம்’ என்று
உறுதிமொழி ஏற்க வைத்ததுண்டா?

விண்ணுக்கு ஏவுகணை வீசிய
வெற்றி வீரர்
கண்ணுக்கு எதிரே இருக்கும்
ஜெயலலிதாவிடம்
கள்ளுண்ணாமை பற்றி பேசி
டாஸ்மாக்கை வீசச் சொன்ன
பேச்சு உண்டா!

தனியார் பள்ளி
மாணவர்களிடம்
உழைப்பு, நேர்மை என
வகுப்பெடுத்த அணுவாளர்
தாளாளரிடம் போய்
கட்டணக் கொள்ளைக்கு எதிராக
கொதித்தெழுந்த காலம் உண்டா!
ஏழ்மையில் பிறந்து
தமிழ்வழி பயின்று
அரசுப்பள்ளியில் படித்துவந்த
அப்துல் கலாம்,
எங்கெனும்
தாய்மொழியில் அரசுப்பள்ளி திறக்கச்சொல்லி
தப்பித்தவறி பேசியதுண்டா?

ஏழையாய் பிறந்தார்
தமிழராய் இறந்தார்
என்பதற்காய் மட்டும்
ஆளும் வர்க்க சேவை நாயகனை
ஏழை வர்க்கத்தினர் முன்னுதாரணமாக
ஏற்க முடியாது,
அவர் என்னவாய் இருந்தார்
யாருக்காய் உழைத்தார்!
என்பதிலிருந்தே அறிதல் வேண்டும்!
இருபத்தியோரு உழைப்பாளிகள்
ஆந்திரக்காட்டில் கரிக்கட்டயாய் கிடந்தபோது
ஓடி வராத கூட்டமெல்லாம்
கலாம் உடலை தேடி வந்த
வர்க்கத்திலிருந்தே
இவர் யாருக்காக வாழ்ந்தார்! புரியவேண்டும்!

உப்புக்காற்றில் பிறந்தவர்
கார்ப்பரேட் கப்புக் காற்றில் கரைந்தார்…
மீன்தோல் தழுவிய நாவினார்
பார்ப்பன பூணுலின்
மான்தோலாக மாறினார்…
ஈழப்படுகொலை, குஜராத் படுகொலை,தலித்துகள் படுகொலை,
எதர்க்கும் வாய் திறவாமல் நாறினார்
ஒடுக்கும் ஆளும் வர்க்க வீணைநரம்பின் சுரமாய் ஏறினார்!

பளிச்சென தெரியும்AbdulKalam
முதலாளி வர்க்க எதிரிகளை விடவும்,
ஆபத்தானவர்கள்
அவர்களை மூடி மறைக்கும்
அப்துல் கலாம்கள்!

புரிந்து கொள் உழைக்கும் வர்க்கமே!
எதர்க்காக உழைக்க வேண்டும்
என்பது மட்டுமல்ல
எதற்க்காக அழ வேண்டும்
என்பதும் நமக்கு தெரிந்திருக்க வேண்டும்

கண்ணீர்
அன்பின் ஈரமாக
சுரக்க வேண்டுமே ஒழிய,
அறியாமையின்
கோரமாக வழியக் கூடாது!

துரை.சண்முகம்

கணபதியின் தேநீர் இனி கிடைக்காதா ?

9

teaநீங்கள் சென்னை அம்பத்தூர் எஸ்டேட் பகுதியை காலை, மதியம், இரவு என ஏதேனும் ஒருவேளையில் கூட குறுக்கும் நெடுக்குமாக சாலையை கடந்து, சைக்கிளில் தேநீர் கொண்டு செல்லும் கணபதியை காணலாம்! பல தொழிற்சாலைகள், அலுவலகங்களுக்கு சுடச்சுட தேநீர் தருவது தான் கணபதியின் வேலை.

வேலைச்சுமையாலும், நிதிச்சுமையாலும் வாழ்க்கை கடலில் தத்தளித்துக் கொண்டிருக்கும் தொழிலாளிகளுக்கு கண நேரமாவது கணபதியின் தேநீர் ஆசுவாசமளிக்கும்.

எங்கள் அலுவலகத்திற்கும் கடந்த ஆறு வருடங்களாக கணபதி தான் தேநீர் தருகிறார்.  மெலிந்த தேகம், ஐந்தே கால் அடி உயரம், நல்ல களையான முகம்.  ஜீன்ஸ் பேண்டை வெட்டி தைத்து முக்கால் காலுக்கு போட்டிருப்பார்.  நானும் பல வருடங்களாக கவனித்து வருகிறேன். கணபதிக்கு வயது ஏறுவதேயில்லை.

எனக்கு பால் என்றால் அலர்ஜி. அதனால் பால் கலந்த தேநீர் சாப்பிடுவதில்லை. ஆனால், கணபதி தரும் தேநீர் குடித்தால் பிரச்சனையேயில்லை. அதில் பால் பெயரளவுக்கு தான் இருக்கும்!   பால் விலை கூடினால் உங்களுக்கு பிரச்சனையே கிடையாதுல்ல! என கிண்டல் செய்வேன். ஒரு புன்னகையுடன் கடந்து போய்விடுவார். ஆனால் அவரது தேநீரில் கலந்திருந்த பாலின் பின்னே ஒரு சோகம் இருந்தது எனக்குத் தெரியாது.

ஒருமுறை வார கணக்கை முடிக்கும் பொழுது, வேறு அலுவலகங்களின் கணக்கு அட்டையை அவர் கையில் வைத்திருந்ததை வாங்கிப் பார்த்தேன். ஒரு நிறுவனத்திற்கு தேநீர் விலை 5.50, ஒரு நிறுவனத்திற்கு ரூ. 5.45 என வெவ்வேறு விலைகளில் இருந்தது.  கணபதி கொண்டு வருவது ஒரே தரமான தேநீர் தான். விலை மட்டும் எப்படி வேறுபடுகிறது என குழம்பி போனேன்.

அதற்கு கணபதி ” எந்த முதலாளி சார் நல்ல விலை கொடுத்து, தங்கள் தொழிலாளிக்கு நல்ல தேநீர் வாங்கித் தர தயாரா இருக்காங்க. தேநீர் எந்த தரத்துல இருந்தாலும் விலையை மட்டும் குறைக்கணும்னு தரை ரேட்டுக்கு இறங்கி பேரம் பேசுறாங்க. ஒப்புக்கு வாங்கி கொடுக்கிறாங்க சார்! பால், டீத்தூள், சர்க்கரை எல்லாம் அப்பப்ப விலை கூடிட்டே இருக்கு.  நானும் முடிஞ்ச வரைக்கும் நல்ல தேநீரை கொடுக்க அல்லாடுறேன் சார்’ என்றார்.

Cycle tea 2கணபதியை பற்றி பேச்சு வரும்பொழுதெல்லாம் பல ஊழியர்கள், தொழிலாளிகள், “எனக்கு அவரை 8 வருசமா தெரியும், 12 வருசமா தெரியும்” என்பார்கள். ஒருநாள் கணபதியை நிறுத்தி, எத்தனை வருசமா தேநீர் விற்கிறீர்கள் என்றேன். “டவுசர் போட்ட காலத்திலிருந்தே விற்கிறேன். 17 வருசமா ஓடிட்டு இருக்கேன்!” என்றார்.  ’இப்ப என்ன வயசு’ என்றேன். ’இருபத்தொன்பது’ என்றார்.

ஞாயிறன்று வேலை இருந்தால் கூட கணபதி தேநீர் தருவார். ஏழுநாளும் ஓய்வில்லாத வேலை! அப்பொழுதிலிருந்து கணபதியின் கடும் உழைப்பில் உருவாகும் தேநீரில் அவரது செந்நீரும் கலந்திருப்பதாக தோன்றும்.

அப்பப்ப எங்க எம்.டியிடம் எங்கேயாவது ஒரு சின்ன இடம் இருந்தா சொல்லுங்க சார்! என சொல்லிக்கொண்டிருந்தார். ’கணபதி நிறைய பணம் சேர்த்திட்டீங்க போல! இடமெல்லாம் வாங்கி போடுறீங்க!’ என்றேன். ”எத்தனை வருசம் ராவும் பகலும் ஓடிட்டே இருக்கிறது? ஒரு நல்ல கூட்டம் கூடுற இடத்தில தேநீர் கடை ஒன்னு சொந்தமா போடணும். கையில உள்ள பணம் பத்தல! பல வருசம் உழைச்சு, சிறுக சிறுக சேர்த்தது! கையில வைச்சிருந்தா, ஏதாவது செலவு வந்துருது! ஒரு சின்ன இடத்தை வாங்கி போட்டுட்டு, பின்னாடி வித்து கடை போடலாம்னு ஒரு யோசனை” என்றார். ”விரைவில் சொந்த கடை போட வாழ்த்துக்கள்” என்றேன். முகம் மலர ’நன்றி’ என்றார்.

இன்னும் சில தொழிற்சாலைகள் கூடுதலாக கிடைக்க, வேகமாக கொண்டு செல்ல, சைக்கிளிலிருந்து டிவிஎஸ் 50க்கு மாறினார். கணபதிக்கு திருமணம் முடிந்ததை கேள்விப்பட்டு, ’ஏன் சொல்லல கணபதி? என்றேன்.  கொஞ்சம் தடுமாறி, சமாளித்தார். அவருக்கு தெரிஞ்சவுங்கள கூப்புட்டா முழு அம்பத்தூரும் கல்யாணத்துக்கு போக வேண்டியிருக்கும்.

பிறகு நான் அந்த அலுவலகத்தில் வேலையிலிருந்து நின்றுவிட்டேன். 9 மாதம் கழித்து அங்கு சென்ற பொழுது, வேறு ஒருவர் தேநீர் கொண்டு வந்து தந்தார். ” என்ன ஆச்சு? கணபதியை மாத்திட்டீங்களா? என்றேன்.

“இரண்டு மாதங்களுக்கு முன்பு மதியம் 3 மணியளவில் சாலையை கடக்கும் பொழுது, ஒரு வேன் மோதி, தலையில் அடிப்பட்டு ஸ்பாட்டிலேயே இறந்துவிட்டார், கணபதி அண்ணன்” என்றார் தம்பி. அதிர்ச்சியில் உறைந்து போனேன். கணபதிக்கு 6 மாத கைக்குழந்தை ஒன்று அம்மாவுடன் இனி ஆதரவின்றி காலம் தள்ள வேண்டும்.

இறந்த நாள் கூட ஒரு ஞாயிற்றுக்கிழமை தானாம்! உடல்நலம், உறவினர் திருமணம், சுற்றுலா, சொந்த ஊர் பயணமென்று நாம் அடிக்கடி விடுமுறை எடுக்கிறோம். கணபதியோ அதை கனவிலும் நினைத்து பார்க்க முடியாது. தேநீர் கொண்டு வரத் தவறினால் அவரையே தவிர்த்து விடுவார்கள். என்றாலும் அவர் விடுமுறையின்றி தேநீர் தருவதை சலிப்புடன் செய்து பார்த்ததில்லை.

tea boyபல அலுவலக ஊழியர்கள், தொழிலாளிகள் தேநீரைக் குடித்து விட்டு அவருடன் பேசுவார்கள். தான் தேநீர் கொடுக்கவில்லை என்றால் அவர்கள் இன்று குடிக்க முடியாதே என்று பொறுப்புணர்வோடும் அன்போடும் செய்தபடியால்தான் கணபதி அப்படி கடுமுழைப்பு செய்து வாழ முடிந்தது.

ஆனாலும் கணபதியை நினைத்துப் பார்க்காமல் அம்பத்தூர் தனது வழமையான வேலைகளுக்கு திரும்பி விட்டது. கணபதியை நினைத்துப் பார்க்க அவரொன்றும் அப்துல் கலாமில்லை.

“பிறப்பு சம்பவமாக இருக்கலாம், இறப்பு சரித்திரமாக இருக்க வேண்டும்” என்று உலகமெங்கும் பல்வேறு பன்ஞ் முழக்க எழுத்தாளர்களால் எழுதப்பட்ட நைந்து போன வாக்கியம்தான் அப்துல் கலாம் நினைவஞ்சலி பேனரில் இடம்பெற்ற இந்த சம்பவம், சரித்திர வகையறா.

அப்துல் கலாமுக்கு அம்பத்தூர் அஞ்சலி செலுத்துவதை ஆடம்பரத்துடன் செய்து முடித்தது. விடுமுறை என்ன, மெழுகுவர்த்தி என்ன, படங்கள் என்ன, சுவரொட்டிகள் என்ன என்று அமர்க்களப்படுத்தி விட்டார்கள். இதில் என்ன கொடுமை என்றால் பலருக்கு அப்துல் கலாம் யார் என்றே தெரியாது. ஏதோ மற்றவங்க மதிக்கிறாங்க நாமும் மதிச்சு வைப்போமே என்ற போலச் செய்தல்தான்.

ஆனால் தினசரி வாழ்க்கையில் கணபதியைப் போன்றோர் வெறும் சம்பவமாகத்தான் மறைந்து போகிறார்கள். இவர்களின்றி இந்த உலகத்தின் இயக்கம் இல்லை. சாதாரண மனிதர்களின், தொழிலாளிகளின் காலம் ஒன்று வரும் போது கணபதிகள் ஹீரோக்களாக போற்றப்படுவார்கள். அந்த வரலாற்று திருப்பத்திற்காகவேணும் கணபதியை நான் நினைத்துக் கொள்கிறேன்.

கடும் உழைப்பாளியான கணபதிக்கு எனது அஞ்சலிகள்!

– சாக்ரடீஸ்

டாஸ்மாக்கை நொறுக்குவது வன்முறையா – கலந்துரையாடல் வீடியோ

17

tasmac slider vinavuமதுவிலக்கு கோரும் மாணவரின் போராட்டம் குறித்து ஒரு கலந்துரையாடல்.

மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் மாநில செயலர் தோழர் மருதையன், புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணியின் மாநில அமைப்பாளர் தோழர் கணேசன், மக்கள் அதிகாரம் அமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர் தோழர் ராஜூ ஆகியோர் பங்கேற்கும் நிகழ்வு.

மது விலக்கு, போராட்டம், வன்முறை குறித்து விரிவான அலசல்கள். பாருங்கள், பரப்புங்கள்!

எல்லா அயோக்கியரையும் விஞ்சினார் தினமணி வைத்தி

9
dinamani 1
முறிந்த நடை, கூன் கொண்ட பார்வை, அம்மாவுக்கு அடிமைப்பட்ட கோழையின் கூற்று – தினமணி!

ரலாறு கண்ட அயோக்கியர்களை விஞ்சிவிட்டார் தினமணி வைத்தி. கொன்றவனுக்கு தீபாராதனைக் காட்டிவிட்டு செத்தவர் மீதே கத்தியைச் செருகும் ஆளைப் பார்த்ததுண்டா? பார்க்காதவர்கள் ( 03-08-15 ) தினமணி தலையங்கத்தில் பார்க்கலாம். ” தன்னை காந்தியவாதி என்று கூறிக்கொள்ளும் ஒருவர் செல்லிடைப்பேசி கோபுரத்தில் ஏறி அதன் உச்சிக்கு சென்று அமர்ந்ததும் , தற்கொலை செய்து கொள்வேன் என்று அச்சுறுத்தியதும் எப்படி சரி? சசிபெருமாள்… நடத்திய போராட்டம் அறப்போராட்டமும் அல்ல, காந்திய வழிமுறையும் அல்ல.. சசிபெருமாள் வன்முறையாளராக மாறிவிட்டது மிகப்பெரிய சோகம்..” குன்ஹாவின் தீர்ப்புக்குப் பிறகு ‘அகிம்சை வழியில்’ போராடிய அம்மாவின் வழிமுறையில் அமைந்த அரசு விளம்பரங்களை வாங்கிக்கொள்ளும் அப்பாடக்கர் ‘காந்தியவாதி’ வைத்தியின் வேத வாக்கியம் இது.

‘வாழும் காந்தி ‘ அம்மா இருக்கட்டும், வைத்தி வறண்டும் காந்தியே கூட அம்பேத்கார் தாழ்த்தப்பட்ட மக்களின் நலனுக்காக “இரட்டை வாக்குரிமை ” கோரிக்கையை முன்னெடுத்த போது எரவாடா சிறையில் ‘சாகும் வரை உண்ணாவிரத’மிருக்க சம்மணம் போட்டவர்தானே ! இப்படி பல ‘சாகும் வரைகளால்… ‘ பிரிட்டிஷ் அரசை வாழவைத்தவர் காந்தி. சசிபெருமாள் கையாண்ட நடைமுறை தன்னை வருத்திக்கொள்வது.

என்ன ! காந்தி உச்சியில் ஏற பிர்லாவின் உதவி கிடைத்தது, பரிதாபம்! சசிபெருமாளுக்கு ஒரே ஒரு செல்லிடப்பேசி கோபுரம்தான் கிடைத்தது. காந்தி தற்கொலைப் பாதைக்கு மிரட்டினால் அகிம்சை ! சசிபெருமாள் உயிரை பணயம் வைத்து தன்னை வருத்திக் கொண்டால் வன்முறையா? தள்ளாடும் தமிழகத்தை தூக்கி நிறுத்த தன்னுயிர்பாராது களம் புகுந்த பச்சையப்பன் கல்லூரி மாணவர்களை தாக்கிச் சிதைக்கும் போலீசின் அத்துமீறலை அனைத்து பத்திரிகைகளும் படத்தோடு போட்டு முகத்திரையை கிழிக்கையில் ‘வன்முறை எதிர்ப்பாளர்’ வைத்தி மட்டும் செய்தியை வேண்டா வெறுப்பாய் ‘உள்’ குத்து விட்டு, காக்கிகள் செய்த கொடுமையையும் தனது அகிம்சை அடிக்கட்டில் அமுக்கி விட்டார்.

SASI_PERUMAL
காந்தியவாதி சசி பெருமாளை வன்முறையாளர் என்று சொன்ன ஒரே ஆள் தினமணி வைத்திதான்!

சசிபெருமாள் கோபுரத்தில் ஏறியதையே சகிக்க முடியாத வன்முறையாக வரையறுக்கும் இந்த வாய்ப்பாட்டுக்காரர், போராடும் மாணவக் கழுத்தில் ஏறும் போலீசின் பூட்சை மட்டும் கண்டு கொள்ளாமல் ஒன்பது துவாரங்களிலும் ஊமையாகிக் கிடக்கிறார்.

தமிழகத்தை சாகடிக்கும் மதுவை ஒழிக்கும் கருவியாக சசிபெருமாளின் உடலைப் பயன்படுத்தும் போராட்டக்காரர்களை பார்த்து மட்டும் கச்சம் வரிந்து கட்டி கருவுகிறார், “உடலைப் பெற்றுக்கொள்ள மாட்டோம் என்று அடம் பிடிக்கிறார்கள், இப்படி ஒவ்வொரு பிரச்சனைக்கும் போராட்டம் என்ற பெயரில் தற்கொலை, தீக்குளிப்பது என்று எல்லோரும் தொடங்கி விட்டால் சட்டம்- ஒழுங்கு என்னவாகும்? நிர்வாகம் எப்படி நடைபெறும் ? ” ( தினமணி- தலையங்கம் ) வைத்தியின் வயித்தெரிச்சல் இது ! உலகமே குடிகார அரசுக்கு எதிராக காறித் துப்பும் வேளையில், அரசின் கருத்துக்கு ஒளியூட்ட ஜெயா டி. வி. க்கு தேடினாலும் கிடைக்காத ஒரே கொள்ளிக்கட்டை இந்தத் தலையங்கம்.

கைது செய்யப்பட்ட மாணவர்களின் சட்டையைக் கிழிப்பதும், கட்டையில் அடிப்பதும்தான் சட்டம்-ஒழுங்கா? வைத்தி அளந்து கொட்டும் சட்டப்படியே, கைது செய்ய பிடித்தவர்களை அடிப்பதும், ஆபாசமாய் பேசுவதும் , கல்லால் அடிப்பதும், கழுத்தை நெறிப்பதும் அகிம்சையின் அடையாளங்களா? மயக்கமடைந்த ஒரு மாணவிக்கு உதவி செய்யும் மாணவிகளையும் தடுத்து, அடித்து இழுப்பதுதான் நிர்வாக நடைமுறையா? இந்த பயங்கரவாத நிர்வாகத்துக்காகத்தான் வைத்தியின் வன்மனம் துடிக்கிறதே ஒழியே, தன்னை விட யோக்கியமாய், சமுகப் பொறுப்பாய் செயல்பட்ட மாணவர்கள் வதைபட்டற்காக ஒரு வருத்தமும் இல்லை. இப்பொழுதுதான் தெரிகிறது போலீசின் கைகளில் இருந்த முழுக்கல் ‘அகிம்சாமூர்த்தி ‘ வைத்தியின் மூளை!

மதுவை ஒழிக்க பாடுபடுவர்களிடம் வந்து ஒரு ‘நூல்’ பிசகாமல் “நீ அகிம்சாவாதியா? ” என்று அளவு பார்க்கும் இந்த யோக்கியர் ஆர்.எஸ்.எஸ். குருமூர்த்தி, ” அசோகர் போரை வெறுத்தது தவறு, அர்ச்சுனனுக்கு போர் உபதேசம் செய்த கிருஷ்ணனை போல வாய்ப்பில்லாமல் போயிற்று, அணுகுண்டு வேண்டும்! என்று வல்லரசு வன்முறைக்கு மனதை பிசையும் கட்டுரையை கட்டம் கட்டி பிரசுரிப்பது ஏன்? அமித்ஷாவுக்கும், மோடிக்கும் இந்த பூணூல் அளவு பொருந்துமா? அடிபட்டவனிடம் வந்து அகிம்சை உபதேசம்! அடிப்பவனிடம் போய் கீதா உபதேசம்! இதுதான் அவாளின் ‘தர்மம்’! மாக்யவல்லி, காந்தி , ராஜாஜி என்று சுற்றி வளைப்பதை விட பேசாமல் டாஸ்மாக் கடைக்கு போலீசோடு போய் காவலுக்கு உட்காரலாம் வைத்தி. பின்னே! நிர்வாகத்தை எப்படி நடத்துவது?!

editor
தலித்துக்களுக்கு உருவாக்கப்பட்ட சேரியிலேயே டாஸ்மாக் கடைகள் இருக்க வேண்டுமாம்! – தினமணி வைத்தியின் விச யோசனை!

போராடும் மக்களிடம் வந்து வன்முறை கூடாது என்று நிபந்தனை விதிக்கும் இந்த நியாயவான், சமூக வன்முறையான மதுவை இறக்கிவிடும் அரசுக்கு மட்டும் எந்த நிபந்தனையும் இல்லாமல் வழங்கும் ஆலோசனை என்ன தெரியுமா? ” இலவசத்துக்கு விடுதலை தரவேண்டும், கல்லூரி, பள்ளி, வழிபாட்டுத்தலங்கள் அருகிலிருக்கும் மதுக்கடைகளை அகற்றி மெல்ல, மெல்ல ஊருக்கு வெளியே ஒதுக்குப்புறத்துக்கு கடைகளை கொண்டு செல்ல வேண்டும்…”.

ஊருக்கு உள்ளே, வெளியே எங்குமே மதுக்கடைகள் வேண்டாம் என்று தமிழகம் வீறு கொண்டு போராடும் தருணத்தில், நத்தம் விசுவநாதன் பதவிக்கே ஆபத்து வரும் வகையில் அம்மாவுக்கு உடனடி ஆலோசனை வழங்குகிறார் வைத்தி.

” ஊருக்கு வெளியே.. ஒதுக்குபுறத்தில்” முன்பு தாழ்த்தப்பட்டவர்களை வைத்த வர்ண கொடூரம் இப்போது பாட்டிலை மட்டும் வைத்தால் போதும் என்கிறது. “செத்தாலும் விட மாட்டான் புரோகிதன்” என்று பெரியார் எவ்வளவு சரியாகச் சொல்லி இருக்கிறார். சசிபெருமாள் மரணத்தின் அரசியலை எல்லோரும் மக்களுக்காக விரிவுபடுத்தும் வேளையில், இந்தச் சந்தர்ப்பத்திலும் ‘ ஊருக்கு வெளியே.. ஒதுக்குப்புறத்தில்’ என்பது மீண்டும் உழைக்கும் மக்கள் , தாழ்த்தப்பட்டவர்கள் தலையில் போதையை ஏற்றுவதைத் தவிர வேறென்ன?

உங்களுக்கு மயிலாப்பூர் ஊர் என்றால், எங்களுக்கு மாங்கொல்லை குடிசைகள்தான் ஊர், உங்களுக்கு திருவல்லிக்கேணி ஊர் என்றால், அயோத்திகுப்பம்தான் எங்கள் ஊர்… உங்களுக்கு புரசைவாக்கம் ஊர் என்றால், எங்களுக்கு புளியந்தோப்பு ஊர்.. இப்படி ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒதுக்குப்புறத்தில், ஊருக்கு வெளியே உழைக்கும் மக்களின் வசிப்பிடங்கள்.. இதில் எந்த ஊருக்கு வெளியே வைப்பது?

கடை கூடவே கூடாது என்று மக்கள் களம் காணும் இந்தநேரத்தில் .. இப்போதைக்கு இப்படி ‘கடையை வைத்துக்கொள்ளலாம்’ என்று அம்மாவுக்கே யோசனை வழங்குவதை விட ஒரு கொடிய வன்முறை இருக்க முடியுமா? கொள்கைகள் வேறாக இருக்கலாம், ஒரு குடிகாரனின் காலைத்தொட்டு குடிக்காதீர்கள் என்று கேட்டுக்கொண்ட அறுபது வயது சசிபொருமாளையே வன்முறையாளர் என்று வாய்கூசாமல் கூறும் வைத்தியை விட ஒரு வன்முறையாளன் உலகில் உண்டா?

  • துரை.சண்முகம்

மக்கள் அதிகாரம்: போலிசை விரட்டியடித்த கோவை மக்கள்!

1

kovai tasmac police (4)கோவை மாநகரில் சாய்பாபா காலனி மிகவும் பரபரப்பான பகுதிகளுள் ஒன்று. அதில் காலனி ரோட்டை தாண்டி சற்றே இடது புறத்தில் தான் கருணாநிதி நகர் இருக்கிறது. இஸ்லாமிய மக்களும் ஒடுக்கப்பட்ட சமூகமான அருந்ததிய சமூக மக்களும் கணிசமான அளவில் நெருங்கிய நட்போடு வாழும் பகுதிகளுள் இதுவும் ஒன்று.

இந்து மதவெறி இயக்கங்களின் முக்கியப் பகுதியாக ஒரு காலத்தில் இருந்த பகுதி. எஸ்‌டி‌பி‌ஐ போன்ற இயக்கங்களும் ஆங்காங்கே அலுவலகங்கள் திறந்துள்ளன. எனினும் இப்பகுதி மக்களின் வாழ்நிலை என்னவோ தினக்கூலிகளின் சிரமமான நிலையிலேயே இருக்கின்றது.

இந்த மக்களது அதிகாரம் தான் நிறுவப் பட வேண்டும் என்ற நியாயமான ஆசையுடன் தான் கருணாநிதி நகருக்குள் மக்கள் அதிகாரம் சார்பில் “மூடு டாஸ்மாக்கை” பிரச்சாரத்திற்கு சென்றோம்.

பகுதிக்குள் நுழைந்த இருபதாவது நிமிடம் மூன்று உளவுத் துறை போலீசார் வந்து நம்மை மறித்தனர்.

யார் நீங்க…? (தெரியாத மாதிரியே..!)

சார், நாங்க மக்கள் அதிகாரம் என்கிற அமைப்பிலிருந்து வந்திருக்கிறோம். டாஸ்மாக்கை மூட வேண்டும் என மக்களிடம் பிரச்சார இயக்கம் செய்து கொண்டிருக்கிறோம்.

இந்த மாதிரி கொட்டு (பறை) அடிக்காரதுக்கெல்லாம் அனுமதி வாங்கணும். இது போல பிரச்சாரம் செய்வதற்கும் அனுமதி வாங்கணும், கிளம்புங்க.

சார் பிரச்சாரம் செய்வதற்கெல்லாம் அனுமதி வாங்க வேண்டியதில்லை. நாங்க தமிழ்நாடு முழுக்க பிரச்சாரம் செய்து கொண்டிருக்கிறோம்.

இப்போ இங்க பிரச்சாரத்துக்கு வந்துருக்கீங்கள்ல, இங்க பொறுப்பாளர் யாருன்னு சொல்லுங்க அவர் போன் நம்பர் சொல்லுங்க

‘ஏன் சார், மைக்கு வெச்சு பேசறதுக்கு தானே அனுமதி வாங்கணும் பறைக்கு வாங்க வேண்டியதில்லையே’ என ஒரு தோழர் கேட்க, ‘இல்ல தம்பி அதுக்கும் வாங்கணும் சட்டத்தில் அனுமதி இருக்கு’, ‘இது மாதிரி கேள்வியெல்லாம் கேட்க கூடாது, சரியா’

‘சரி சார் நாங்க பறை அடிக்கல’ ‘ஆனா, பிரச்சாரம் செய்வோம் அது எங்க உரிமை என்ன செய்ய முடியுமோ பண்ணிக்கங்க’

எனக் கூறிவிட்டு வாங்க தோழர் போலாம் என மீண்டும் பகுதிக்குள் நமது வேலையை தொடர்ந்தோம்.

அடுத்து என்ன சொல்லி நம்மை மடக்குவது எனப் புரியாமல் குழம்பியவாறு நின்று கொண்டிருந்தனர். சற்றே பணிந்தால் ஏறி மிரட்டலாம், இவனுக என்ன பேசுனாலும் எதிர்த்துப் பேசுறாங்களே என்று ரத்தினபுரி ஸ்டேசனுக்கு போன் பண்ணிவிட்டார்கள்.

நாம் அடுத்தடுத்து ஒரு நான்கைந்து வீடுகளை தாண்டுவதற்குள் அந்த குறுகலான சந்தில் பேட்ரோல் வண்டி டாடா சுமோ ஒன்றை கொண்டு வந்து நிறுத்தி நம்மைப் பின் தொடர்ந்தவாறே அங்கு பெருத்த நெருக்கடியை ஏற்படுத்தி கொண்டிருந்தார்கள். ஆனால் நம்மிடம் வந்து மேற்கொண்டு பேசுவதற்கு அவர்கள் யாரும் தயாரில்லை.

அடுத்து, நாம் மக்களிடம் பேசும் போது அருகில் ஒரு போலீஸ் வந்து நிற்பதும் நின்று கொண்டு நம்மையே உற்றுப் பார்ப்பதுமாக நடந்து கொண்டனர். பொது மக்கள் தர்ம சங்கடமான சூழ்நிலைக்குள்ளாக, நாம் பதிலுக்கு பொது மக்களிடம்,

‘பாருங்கம்மா, சாரு வந்து போலீஸ்காரரு. நாங்க டாஸ்மாக்கை மூடச் சொல்லி மக்கள் கிட்ட பிரச்சாரம் செய்யறோம். ஆனா, போலீஸ் வந்து எங்களை மிரட்டுது. இப்படியெல்லாம் பேசக் கூடாதுன்னு சொல்றாங்க,’ என ஆரம்பிக்க,

அடுத்த வீட்டிலிருந்து மறுபடியும் வண்டிக்கு சென்று விட்டனர்.

அடுத்து செல்லும் வீடுகளுக்கெல்லாம் இடையே இப்படியே பிரச்சாரம் செய்தோம். அடுத்து இன்னொரு ரோந்து வண்டி வந்தது. அதில் தான் யாரோ பெரிய அதிகார வரப்போகிறார் எனப் பார்த்தால், அதிலிருந்து ஒரு எஸ்‌ஐ இறங்கி வந்தார்.

அது போக இதர உளவுப் பிரிவினர் இந்த வாக்குவாதத்தை வீடியோ எடுப்பதில் முனைந்தனர். இந்த மொத்தக் கும்பலும் எங்களை சுற்றி நின்று கொண்டு வாக்கு வாதத்தை துவங்கினர்.

நீங்க மக்களை தூண்டுறீங்க, கேன்வாஸ் பண்ணுறீங்க வன்முறைய தூண்டுறீங்க – டாஸ்மாக் முன்னாடி குழி வெட்டு ஒண்ணுக்கு அடின்னு எல்லாம் போட்ருக்கீங்க

இதுல என்ன சார் வன்முறை…?

தம்பி, இது கவர்மெண்டு கொள்கை. அதனால நீங்க அங்க போயி கேளுங்க.

சார் நூறு மனுக் கொடுத்தாச்சு. நூறு போராட்டம் பண்ணியாச்சு. உயர் நீதி மன்றமே இது அரசாங்கத்தோட கொள்கை முடிவுன்னு சொல்லிருச்சு. இனி எங்க போக சொல்றீங்க…

இல்ல, நீங்க சட்டவிரோதமாக கூடியிருக்கீங்க.

எது சட்டவிரோதம்?

இவர்களிடம் எவ்வளவு நேரம் பேசுவதென்று மக்களிடம் பதில் சொல்லத் துவங்கினோம். போலிசார் நம்மிடம் இது சட்ட விரோதமான கூட்டம் எனக் கூறினால், நாம் மக்களைப் பார்த்து நீங்களே சொல்லுங்க டாஸ்மாக்கை மூடச் சொல்லுறது சட்ட விரோதமா…? சொல்லுங்க என பேச வீடுகளுக்குள் இருந்த மக்கள் அனைவரும் வெளியே வந்து இதனை வேடிக்கை பார்க்கத் துவங்கிவிட்டனர். தெருவே திரண்டுவிட்டது. தோழர்களின் பேச்சுக்கள் மக்களுக்கு காவல் துறையின் இயல்பை புரிய வைத்தது. காவல் துறை காமெடி துறை ஆனதை பொறுக்காது உடனே நடவடிக்கையில் இறங்கினர்.

எல்லாம் ஸ்டேசனுக்கு நடங்க, நாங்க உங்களை அரெஸ்ட் பண்றோம்.

‘எதுக்கு அரெஸ்ட் பண்றீங்க, நாங்க என்ன தப்பு பண்ணினோம் நாங்க அரெஸ்ட் ஆக முடியாது’ என்று எதிர்த்து நின்றோம்.

உடனே, நம்மை வலுக்கட்டாயமாக இழுத்து ஜீப்பில் ஏற்ற முயன்றனர். நமது தோழர்கள் உடனே கைகளைக் கோர்த்துக் கொண்டு கைதாக மாட்டோம் என நிற்க, அதே சமயம் சுற்றி நின்றிருந்த மக்களில் சிலர்

‘அந்த பசங்க என்ன தப்பா சொல்லிட்டாங்கன்னு இப்பிடி போட்டு இழுக்கறீங்க…? அவங்க சரியாதான் சொல்றாங்க இங்க டாஸ்மாக்னால நாங்க படுற கஷ்டம் உங்களுக்கென்ன தெரியும்’ எனப் பேசத் துவங்க ஒரு உளவுப் போலிசு உடனே அந்த பெண்ணிடம் சென்று, ‘ஏம்மா, உனக்கு என்னமா தெரியும் போம்மா உள்ள’ என மிரட்டத் துவங்கினார்.

அடுத்தடுத்து சில பெண்களும் நமக்கு ஆதரவாக பேசத் துவங்க, தோழர்கள் மீதிருந்து கையை எடுத்து விட்டு எஸ்‌ஐ உயரதிகாரிக்கு போன் பண்ணப் போய் விட்டார்.

பொது மக்களில் நமக்கு ஆதரவாக பேசிய சிலரிடம் சென்று, ‘அவங்க மாவோயிஸ்டு’ ‘தீவிரவாதி’ என உளவுப் போலிசு கூற நம் தோழர் சத்தமாக ‘பாருங்கம்மா, நாங்க டாஸ்மாக்கை மூடச் சொல்லி பிரச்சாரம் பண்றோம் இவரு ஏதோ சம்பந்தமில்லாம மாவோயிஸ்டுனு சொல்லிகிட்டு இருக்காரு’ எனக் கூற மக்களும் ஆமோதித்தனர்.

இளவயது தோழர் ஒருவரிடம் உளவுப் பிரிவு, ஏன் தம்பி படிக்கிற வயசில உனக்கு எதுக்கு இதெல்லாம் என கேட்க, நம் தோழர், ’சார், நான் சின்ன வயசுனாலும் சரி எது தப்பு எதுன்னு பகுத்துப் பார்க்க தெரியும். நான் எல்லாம் தெரிஞ்சு தான் பண்றேன். உங்க வேலை என்னவோ அதை பாருங்க’ எனக் கூறிவிட்டார். “கால் வெக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி வெக்கிராணுகளே” என நினைத்து விட்டார் போலும் அந்த உளவுப் பிரிவு தனது பழைய வேலையான வீடியோ எடுக்கும் வேலைக்கே திரும்பி விட்டார்.

தேமே வென வேடிக்கை பார்க்கும் 10 போலீசார் வளைச்சு வளைச்சு வீடியோ எடுக்கும் 5 உளவுப் பிரிவு போலீசார் 2 பேட்ரோல் வண்டிகள் இன்னும் இரண்டு இருசக்கர பேட்ரோல் வண்டிகள் முன்னிலையில் அந்த தெருவே திரண்டு நின்று வேடிக்கை பார்க்க அந்தச் சின்ன தெருவில் நாம் மக்களை நோக்கிப் பிரச்சாரத்தை சத்தமாக செய்து கொண்டிருக்கிறோம். இடையில் எஸ்‌ஐ அருகே ஓடி வந்து,

‘இந்தாங்க இந்தாங்க ஏ‌சி சார் பேசுராரு’ என செல்போனை நீட்டினார்.

ஏ‌சி கிட்ட நீங்க பேசுங்க சார், நாங்க எதுக்கு பேசணும்..?, எனக் கேட்க மீண்டும் அவர் போய் விட்டார். அடுத்து, நமது பெண் தோழரை கைது செய்ய இன்னொரு பெண் போலீசை வரவழைத்தனர்.

அந்த பெண் போலீஸ், நம் தோழரையும் இந்த சம்பவங்களையெல்லாம் படம்பிடித்துக் கொண்டிருந்த அதே பகுதியில் வசிக்கும் தினசரி நாளிதழ் பெண் நிருபரையும் துணியை பிடித்து இழுத்து மூர்க்கத்தனமாக இழுக்க ஆரம்பித்தார்.

kovai kk nagar tasmac police (4)வெளியே வேடிக்கை பார்த்துக் கொண்டு நின்றிருந்த பகுதியைச் சேர்ந்த பெண்கள் இருவரையும் தங்கள் காம்பவுண்டுக்குள் இழுத்துக் கொண்டு, ‘ஏம்மா, இப்பிடி புடிச்சு இழுக்கறியே, உனக்கெல்லாம் அறிவில்ல நீயும் ஒரு பொம்பள தானா…’ எனக் கேட்க அந்த பெண் போலீஸ் அமைதியாக போய் ஜீப்பருகே நின்று கொண்டார்.

இறுதியாக, மூன்றாவது பேட்ரோல் வண்டியில் வந்த ரேஸ்கோர்ஸ் இன்ஸ்பெக்டர் சூழலின் மனநிலை என்னவென அவதானிக்காமலே கூட்டமாக இருப்பதைப் பார்த்துவிட்டு வேனுக்குள் இருந்தவாறே மைக்கில்

‘இந்த இடத்தில் சட்டவிரோதமாக கூடியிருக்கிறீர்கள், எல்லோரும் உடனே கலைந்து போங்க’ என அறிவித்தார்.

நம் தோழர்கள் மீண்டும் ஆளுக்கொரு திசையில் நின்று கொண்டே சத்தமாக, ‘பாருங்கம்மா, பாருங்கையா இத்தனை நாளா நீங்க நின்னுக்கிட்டும் பேசிக்கிட்டும் இருந்த உங்க வீட்டு வாசலிலே நீங்க நிற்பது சட்ட விரோதம்னு போலீஸ் சொல்லுது, ஏன் அப்பிடி சொல்லுது ஏன்னா, டாஸ்மாக்கை மூடணும்னு சொல்றது நாம தானே, அப்ப போலீஸ் யாருக்கு சப்போர்ட்டு டாஸ்மாக்குக்கா மக்களுக்கா’ எனப் பேசத் துவங்க இன்ஸ்பெக்டர் உடனே வண்டியில் இருந்து இறங்கி வந்துவிட்டார்.

‘நீங்க அனுமதி வாங்கிட்டு தான் இது போலச் செய்யனும் அனுமதி வாங்காமா செய்யுறீங்க‘

‘எங்க கிட்ட அனுமதி வாங்கிட்டா டாஸ்மாக் வெச்சிங்க..? இவ்வளவு நேரம் இங்க என்ன நடந்துதுன்னே தெரியாம மறுபடியும் மொதல்ல இருந்து ஆரம்பிக்கறீங்க’

‘இல்லைங்க, நீங்க எழுதிக் குடுங்க., நானே கூட இருந்து உங்களுக்கு அனுமதி வாங்கித் தரேன்’ சொல்லுங்க நாளைக்கு காலைல எப்பவாறீங்க சொல்லுங்க உங்க கூடயே ஸ்டேசனுக்கு நானும் வரேன் உங்க ஏரியா இன்ஸ்பெக்டர் கிட்ட சொல்லி நானே வாங்கித் தாரேன் சரியா தோழர்’ என பேசிக் கொண்டே போய்க் கொண்டிருந்தார்.

அதற்குள் பகுதிப் பெண்கள் சிலர் இன்ஸ்பெக்டரிடம், ‘உங்க கூட இருந்த பொம்பள போலீசு அந்த பெண்ணைப் போட்டு அப்பிடி இழுக்குது, துணியெல்லாம் வெளிய தெரிய போட்டு வெரு வெருன்னு இழுக்குது இதுக்கு அந்த பெண் போலீசு மன்னிப்பு கேட்கணும்’ எனக் கோரிக்கை வைத்தனர்.

‘எல்லார் சார்பிலேயும் நான் மன்னிப்பு கேட்டுக்கறேன்’ எனக் கூறி பிரச்சினையை எப்படியாவது காவல் துறைக்கு சாதகமாக மாற்ற இன்ஸ்பெக்டர் சாந்தமான முறையில் பெருமுயற்சி எடுத்துக் கொண்டிருந்தார்.

இறுதியில் ‘பறையெல்லாம் அடிக்க வேண்டாம் சும்மாவே பேசுங்க’ என அவர் கூற, கண்டுகொள்ளாமல் பறையை முழங்க விட்டு, சத்தமாக அறிவித்தோம். பிரச்சாரம் ஆரம்பித்தது முதல் இப்போது வரை காவல் துறை எப்படியெல்லாம் அணுகியது காவல் துறை யாருக்கு சாதகமாக இருக்கிறது என்றும் மீண்டும் டாஸ்மாக்கை மூடும் வரை பிரச்சாரம் செய்வோம் என்றும் அறிவித்து விட்டு கலைந்தோம்.

அந்த தெரு முழுவதும் இருக்கும் மக்கள் அனைவரும் வெளியே நின்று நம்மை வழியனுப்பினர். ‘மீண்டும் கட்டாயம் வாங்க, நாளைக்கு வரும்போது பகலிலே வராதீங்க, நாங்கல்லாம் வேலைக்கு போயிருவோம். சாயங்காலமா வாங்க..!’ என மக்கள் கூறினார்கள். பகுதியில் இருந்த பல்வேறு கட்சியினரும் தோழர்களை வாழ்த்தினர்.

டாஸ்மாக் கடைகளுக்கு பாதுகாப்பு கொடுப்பது மட்டுமல்ல, டாஸ்மாக் எதிர்ப்பு பிரச்சாரத்தை தடுப்பதும் போலிசின் கடமை போலிருக்கிறது. ஆனாலும் என்ன? அடுத்த நாள் காலையில் கோவை சாய்பாபா காலனி டாஸ்மாக் கடை மக்கள் அதிகாரம் தோழர்களால் நொறுக்கி மூடப்பட்டது. இந்த முறை கடை நொறுக்கும் போது போலிசு இல்லை. ஆனால் போலிசு வரும் வரை தோழர்கள் இருந்தார்கள் – கைது செய்யப்படுவதற்கு!

இன்று பிரச்சாரத்தை முடக்க நினைத்த போலீசின் அடக்குமுறையை முறியடித்த மக்கள் இறுதியில் அதிகாரத்தையும் கையில் எடுப்பார்கள்.

kovai pp tasmac (7)
கோவை சாய்பாபா காலனி டாஸ்மாக்கை அடித்து நொறுக்கிய மக்கள் அதிகாரம்

போலீசின் உடம்பில் ஓடுவது சாராயம் !

5

மக்கள் அதிகாரமே வெல்லும்!

pachayappa students rsyf (6)போராடும் மாணவரை
ஒரு புழுவைப் போல் மிதிப்பதா?
தீராத புழுக்கத்தை தீர்க்க
வாராது வந்த மாணவக் காற்றை
வன் குருதியிலே நனைப்பதா!
போலீசின் அராஜகத்தை
பொது மக்கள் சகிப்பதா?

மாணவர் மேல் விழுந்த அடி
இந்த மாநிலம் மேல் விழுந்த அடி!
காவியங்கள் முடிவதில்லை…
கண்ணகி மதுரையை எரித்தது
சிலபதிகாரம் – எங்கள்
கண்மணிகள் மதுக்கடையை எரிப்பது
மக்கள் அதிகாரம்!

போராடும் தமிழகமே
நம் உதிரக்கொடியை உயர்த்திப்பிடி!

குடிமக்கள் சொல்கிறோம்pachayappa students rsyf (5)
குடி வேண்டாமென்று!
எதற்குத் திறக்கிறாய்
மதுக்கடையை?
மக்களின் கருத்தை
மதிக்காதற்குப் பெயர் மக்களாட்சியா!

பச்சையப்பன் கல்லூரி
மாணவர் உடம்பில் வழியும் ரத்தம்
உலகுக்கே உணர்த்துகிறது
இது குடியாட்சி அல்ல
பச்சையான தடியாட்சி!

ஊருக்கே தெரிந்துவிட்டது
போராடுவனின்
உடம்பில் ஓடுவது ரத்தம்.
போலீசின் உடம்பில் ஓடுவது
சாராயம்.

படிக்கும் மாணவரைப் பிடித்து
சட்டையைக் கிழிப்பதும்
துடிக்கும் இளம் மாணவனின்
குரல் வளையை நெறிப்பதும்,
கிடக்கும் மாணவியரை
பூட்ஸ் காலால் உதைப்பதும்,
வளைத்து இளம் தளிரை
முகத்தில் குத்துவதும்,
இந்த வெறியாட்டத்திற்குப் பெயர்தான்
சட்டம் – ஒழுங்கு!

pachayappa students rsyf (1)எம் செல்வங்கள்
செய்த தவறென்ன?
உயிர் குடிக்கும் பாட்டிலை
உடைப்பது வன்முறை என்றால்,
மக்கள் உயிர்காக்கும் மாணவரை
கல்லால் அடிப்பதும்
பாட்டிலால் அடிப்பதும்
பயங்கரவாதம் இல்லையா?

மயங்கி விழுந்த மாணவிக்கு
தண்ணீர் கொடுக்கும்
மாணவிகளையும் தடுத்து
அடித்து இழுப்பது
போலீசின்
மனிதாபிமான பயிற்சிக்கு
ஒரு மாதிரி!

மதுவை எதிர்க்கும்
மாணவ – இளைஞர்களை
கொலைவெறியோடு தாக்கும்
சீருடை அணிந்த சாராய ரவுடிகள்
செம்மரம் கடத்திய
டி.எஸ். பி. மீது
இவ்வளவு மும்முரம் காட்ட வில்லையே!
குற்றக் கும்பலுக்கு பாதுகாப்பு
குடியை எதிப்பவனுக்கு தடியடி….
இதுதாண்டா போலீசு – என
எடுத்துக் காட்டுகிறது அரசு!

pachayappa students rsyf (3)இங்கே மட்டுமல்ல,
குடிதண்ணிர் கேட்டால் தடியடி…
மணல் கொள்ளை தடுத்தால் தடியடி…
கல்விக் கொள்ளை தடுத்தால் தடியடி….
போலீசு ஆளும் வர்க்கத்தின் மிதியடி
புரிந்து கொள்வோம்
மக்கள் அதிகாரம் ஒன்றே பதிலடி!

துரை. சண்முகம்.  

கிளிசரின் வெட்கப்படுகிறது !

4

ழகின் உயிர்ப்பு கண் என்றால்
உணர்ச்சியின் துடிப்பு கண்ணீர்…

கண்ணீர் எனப்படுவது
இரண்டு வகைப்படும்.

செந்நீரை பறிகொடுத்தும்
கண்ணீரை பரிதவித்தும்
சோகத்தில் குடியிருக்கும் மாந்தருக்கு
காலந்தோறும் உடனோடும் ஜீவநதி
கண்ணீர்…

வேடிக்கை பார்ப்போர்
அழுதாலொழிய
வேஷம் கட்டியோருக்கு
வயிறு நிரம்பாது!
அந்தக் கூத்தாடிகள்
பிதுக்கும் கண்ணீர்
ஒரு நடிப்புக் கலை!

சினிமாவில்
கண்ணீர் அருவியை
திறக்கும்
மந்திரப் பொருள்
கிளிசரின்.

பிகினி காலத்து
மாடல் பொம்மைகளுக்கு
கிளிசரின்கள்
டன் கணக்கில் தேவைப்படும்.

கிளிசிரினுக்கு
செலவு வைக்காமல்
கண்ணை குழாயென
திறந்து விடும்
பீம்சிங் காலத்து
கதை மாந்தர்களும்
ஒரு காலத்தில் இருந்தார்கள்.

ஆனால் நண்பா,

சோகத்தோடு சங்கிலி போட்ட
உழைக்கும் மக்களின் கண்ணீரோ
வேடத்திற்காக மை போட்ட
நடிகர்களின் மேக்கப் கண்ணீரோ
மட்டும் கண்ணீர் அல்ல!

புரட்சிக்கு புது ரூட்டு போட்டு
தலைவன் ஆண்ட
தலைவி ஆளும்
மண்ணில்
மற்றுமொரு கண்ணீர் உண்டு.

இவர்கள் ஏழைகளில்லை.
ஆனால் ஏழைகள்தான் இவர்களது மூலதனம்.
இவர்கள் நடிகர்களில்லை.
ஆனால் நடிப்புதான் இவர்களது சுபாவம்.

கிளிசரின் வாங்காமலே
கூத்துப் பட்டறை பயிற்சி இல்லாமலே
கேமரா கோணம் அறியாமலே
அழுகிறார்கள்…..அழுகிறார்கள்…..அழுகிறார்கள்….

எப்படிச் சாத்தியமிது?

புரட்சித் தலைவி
வரும் பாதையில்
கட்டவுட்கள் வைத்தார்கள்.
அவை காலாவதியாகி
பிளக்ஸ் பேனர்கள் வந்தன.
பிறகு தொலைக்காட்சி விளம்பரங்கள்….

துட்டை இறைத்து
காக்காய்களை காட்சிப்படுத்தும்
இந்த ஜோடனைகளெல்லாம்
அம்மாவின் அருளை
பெற்றுத் தர போதுமானதா?

இது குறித்து அவர்களுக்கு
யாரும் பாடம் எடுக்கவில்லை.

குனிந்தார்கள், வளைந்தார்கள்,
தொழுதார்கள், வாய் மூடீனார்கள்,

ஆயினும்,

ஊழல் திருட்டுக்காக
தலைவி சிறை சென்ற போது
முதன் முறையாக
அவர்கள் அதிகம் பயன்படுத்தியிராத
அழுகைக்கு வேலை வந்தது.

கவனியுங்கள் நண்பர்களே,

குறுகிய காலத்தில்
எங்கு அழ வேண்டும்?
எப்பொழுது அழ வேண்டும்?
எத்தனை லிட்டர் அழ வேண்டும்?
அழுதார்கள்,
அழுது காட்டினார்கள்.

சேக்ஸ்பியர் நாடக மைந்தர்களோ
செவாலியர் விருதுக் கலைஞர்களோ
ஒரு போதும்
நிகழ்த்த முடியாத அழுகை இது.

இந்த அழுகையின்
இரகசியம் அடிமைத்தனம்!
இந்த அழுகையின்
வெகுமானம் அமைச்சர் பதவி!
இந்த அழுகையின்
காப்புரிமை புரட்சித் தலைவி!

JAYA-OATH-WEEPING-ALL 650 pix

– காளமேகம் அண்ணாச்சி

யார் செத்தா என்ன இது அம்மா டாஸ்மாக்குடா : கேலிச்சித்திரம்

3

amma.cartoon -vinavu 700 pix

கேலிச்சித்திரம் – ஓவியர் முகிலன்

sasi perumal plf poster

சிறுகதை : எங்கள் பிதாவே

4

“… எங்கள் பிதாவே”

“எனக்குத் தூக்கம் வருது, குளிருது.”

women-children“அட கடவுளே! எனக்குந் தான் தூக்கம் வருது. ஊம், உடை மாட்டிக்கொள். தொப்பியைப் போட்டுக்கொள். கம்பளிக் காலணிகளை அணிந்துகொள். கையுறைகள் எங்கே? அசையாமல் நில். நெளியாதே.”

பையன் உடை அணிந்துகொண்டதும், அவனது கையைப் பிடித்துக்கொண்டாள். இருவரும் வீட்டை விட்டு வெளியே கிளம்பினார்கள். பையனுக்கு இன்னும் முழுவதும் விழிப்பு வரவில்லை. அவனுக்கு நான்கு வயது. நடக்கையில் நடுங்குவதும் இடறுவதுமாக இருந்தான். பொழுது அப்போதுதான் புலரத் தொடங்கியிருந்தது. கூதல் நிறைந்த வெளிர் நீல மூடுபனி வெளியில் அடர்ந்திருந்தது. தன் பையனின் கழுத்தைச் சுற்றி லேஞ்சியை இன்னும் இறுகக் கட்டி காலரை நிமிர்த்துவிட்டாள், தூங்கி வழியும், முரண்டு ததும்பும் முகத்தில் முத்தமிட்டாள்.

உடைந்த கண்ணாடிகள் கொண்ட வெளித் தாழ்வாரத்தின் மரச் சட்டங்களில் தொங்கிய காட்டு முந்திரி கொடியின் உலர்ந்த தண்டுகள் கடும் பனியின் காரணமாகச் சர்க்கரையால் ஆனவைப் போலத் தோற்றமளித்தன. குளிரோ உறை மட்டத்துக்கு இருபத்தைந்து டிகிரி கீழே இருந்தது. அவர்களது வாய்களிலிருந்து அடர் ஆவி வெளிவந்து. முற்றத்தில் கழிவு நீர் கண்ணாடியாய் உறைந்து கிடந்தது.

“அம்மா, நாம் எங்கே போறோம்?”

“அதுதான் சொன்னேனே: உலாவப் போறோம்.”

“அப்படியானால் பெட்டி எதற்கு?”

“வேண்டும், அதனால்தான். சும்மா இரு. பேசாதே. வாயை மூடிக்கொள். இல்லாவிட்டால் தடுமல் பிடித்துக் கொள்ளும். குளிர் எப்படியிருக்கிறது, பார்த்தாயா. தரையைப் பார்த்து நட. இல்லையோ, வழுக்கி விழுந்துவிடுவாய்.”

வெளி வாயிலின் அருகே காவலாளி ஆட்டுத்தோல் கோட்டும் வெள்ளை ஏப்ரனும் அணிந்து, ஏப்ரன் மார்பில் உலோகப் பட்டயம் துலங்க நின்றுகொண்டிருந்தான். அவனை ஏறெடுத்தும் பார்க்காமல் கடந்து சென்றாள். அவர்கள் வெளியேறியதும் அவன் பக்கக்கதவை மௌனமாகச் சாத்தி, பெரிய இரும்புத் தாழ் இட்டான். அவர்கள் தெருவோடு நடந்தார்கள். தரையில் வெண்பனி இல்லை. நாற்புறமும் பனிக்கட்டியும் ஊசிமுனை பனியும் மட்டுமே இருந்தன. பனிக்கட்டியோ ஊசிமுனைப் பனியோ இல்லாத இடங்களில் மழுமழுப்பான கற்கள் அல்லது கற்கள் போன்றே மழுமழுவென்று கடினமாயிருந்த மண் தரை தென்பட்டன. இலைகள் அற்ற மொட்டைக் கருவேல மரங்களின் அடியே அவர்கள் நடந்தார்கள். கடுங்குளிரில் இழுவிசையுடன் அம்மரங்கள் சடசடத்தன.

தாயும் மகனும் அநேகமாக ஒரே மாதிரி உடை அணிந்திருந்தார்கள். ஓரளவு நல்ல, செயற்கை மென்மயிர்க் கோட்டுகளும் நமுதா காலணிகளும் பலநிறக் கம்பளிக் கையுறைகளும் அணிந்திருந்தார்கள். ஒரே வித்தியாசம், தாயார் கட்டம் போட்ட கம்பளிக் குட்டையைத் தலையில் கட்டியிருந்தாள், மகனோ காதுமூடிகள் உள்ள வட்ட மென்மயிர்த்தோல் தொப்பி அணிந்திருந்தான். தெரு வெறிச்சோடிக் கிடந்தது. நாற்சந்தியை அவர்கள் அடைந்ததும் அங்கு பொருத்தியிருந்த ஒலிபெருக்கி உரக்கச்சீறவே தாய் திடுக்கிட்டாள். மறு கணமே, இது வானொலியின் காலை நிகழ்ச்சித் தொடக்கம் என்று ஊகித்துக்கொண்டாள். வழக்கம் போலவே சேவலின் கூவலுடன் தொடங்கியது வானொலி நிகழ்ச்சி. சேவலின் மிக உரத்த கூவல் தெருக் கோடிவரை ஒலித்து, புது நாளின் ஆரம்பத்தை அறிவித்தது. சிறுவன் ஒலிபெருக்கிப் பெட்டியை நிமிர்ந்து நோக்கினான்.

“அம்மா, இதென்ன, சேவலா?”

“ஆமாம், குழந்தாய்.”

“சேவலுக்கு அங்கே குளிராதா, அம்மா?”

“இல்லை. கொஞ்சங்கூடக் குளிராது. இழுக்காதே, தரையைப் பார்த்து நட.”

பின்பு ஒலிபெருக்கி இன்னொரு முறை சீறியது. அதைத் தொடர்ந்து ஒரு குழந்தையின் மென் குரல், “காலை வணக்கம்! காலை வணக்கம்! காலை வணக்கம்!” என்று தெய்வீக நயத்துடன் மூன்று முறை கூறியது.

அப்புறம் அதே குரல் ருமேனிய மொழியில் நிதானமும் பயபக்தியுமாக கர்த்தரின் செபத்தைப் படித்து:

“பரமண்டலத்திலுள்ள எங்கள் பிதாவே! தெய்விகம் பொலிக நின் திரு நாமம். நினது அரசாட்சி நிலவுவதாக. நினது சித்தமே நிறைவேறுவதாக…”

jewish-womenதெரு மூலையில் அந்தப் பெண் காற்றின் போக்கிலிருந்து திரும்பி, சிறுவனைத் தன்னோடு இழுத்துக் கொண்டு, சந்து வழியாக அநேகமாக ஓடினாள் – ஒலி பெருக்கியிலிருந்து வந்த மிகவும் உரத்த, மிக மென்மையான குரல் தன்னை விரட்டிக்கொண்டு தொடர்வது போல. விரைவில் குரல் அடங்கிவிட்டது. செபம் முடிந்து விட்டது. தெருவின் பனிப்பாதை வழியே கடற்காற்று வீசியது. முன்னே, செம் மூடுபனி சூழ்ந்த நெகிடி நெருப்பு எரிந்து கொண்டிருந்தது. அதன் அருகே குளிர்காய்ந்து கொண்டிருந்தனர் ஜெர்மானிய ரோந்துக்காரர்கள். அதைக் கண்ட அவள் திரும்பி வேறு திசையில் நடந்தாள். கம்பளிக் காலணிகளுடன் அவள் அருகே ஓடி வந்தான் சிறுவன். அவன் கன்னங்கள் கொவ்வையாய் கன்றிச் சிவந்திருந்தன. மூக்கின் அடியில் பனியாலுறைந்த துளி ஒன்று தொங்கியது.

“அம்மா, நாம் உலாவுகிறோமா?” என வினவினான் சிறுவன்.

“ஆமாம். உலவுகிறோம்.”

“இவ்வளவு வேகமாக உலாவ எனக்குப் பிடிக்கவில்லை.”

“பொறுத்துக்கொள்.”

இரு வாயில்கள் கொண்ட முற்றம் ஒன்றினுள் புகுந்து அவர்கள் வேறொரு தெருவை அடைந்தார்கள். கிழக்கு வெளுக்கத் தொடங்கிவிட்டது. வெண் நீல மேகங்களுக்கும் குளிர்பனி மூட்டத்துக்கும் இடையே மெல்லிய ரோஜா வானம் உதய ஒளி காட்டியது. அதன் இளஞ் செந்நிறத்திலிருந்து வெளிப்பட்ட கடுங்குளிரினால் தாடைகள் ஒட்டி கொண்டன. தெருவில் ஆள் நடமாட்டம் தொடங்கி இருந்தது. எல்லாரும் ஒரே திக்கில் சென்று கொண்டிருந்தார்கள். அநேகமாக அனைவருமே சாமான்களைச் சுமந்து சென்றார்கள். சிலர் கைவண்டிகளைத் தள்ளியவாறு நடந்தர்கள். வேறு சிலர் சுமை நிறைந்த ஸ்லெட்ஜூகளை இழுத்துச் சென்றார்கள். சாலையின் பனிபடியாத இடங்களை ஸ்லெட்ஜ் அடிகள் தேய்த்தன.

அன்று காலை நகரின் எல்லா மூலைகளிலுமிருந்து மக்கள் சுமைகளுடன் ஒரே திசை நோக்கி மெல்ல ஊர்ந்த வண்ணமாயிருந்தார்கள். இவர்கள் யூதர்கள். ‘கெட்டோ’ எனப்படும் யூதர் முகாமுக்குப் போய்க்கொண்டிருந்தார்கள். ‘கெட்டோ’ அமைக்கப்பட்டிருந்த பெரேஸீப் என்னும் இடம் நகரின் ஆளரவம் அற்ற, தாழ்நிலப் பகுதி. எரிந்து போன எண்ணெய் டாங்கிகள் கடல் மட்டத்திற்குச் சரியாக நாடோடி சர்க்கஸ் கூடாரங்களை ஒத்த தோற்றத்துடன் அங்கே நின்று கொண்டிருந்தன. பாசிஸ்டுகள் அழுக்கடைந்த சில பகுதிகளை வளைத்து, துருப்பிடித்த முள்கம்பிகளின் இரட்டை வரிசைகளால் வேலி போட்டு, அதில் எலிப்பொறி போன்று ஒரே வாயில் அமைத்திருந்தார்கள். யூதர்கள் இருப்புப் பாதைப் பாலங்களின் அடி வழியாகச் சென்றார்கள். பனிப்பாளம் இறைந்த நடைபாதைகளில் வழுக்கினார்கள். நடக்க மாட்டாத தொண்டு கிழவர்களும் டைபாய்டு நோய் கொண்டவர்களும் அவர்களில் இருந்தார்கள். இவர்கள் தூக்கு படுக்கைகளில் எடுத்துச் செல்லப் பட்டார்கள். சிலர் நடக்கையில் விழுந்தவர்கள், எழுந்து நடக்கத் திராணியின்றி, விளக்குக் கம்பங்களில் சாய்ந்தவாறோ, தெருவோரமாக நட்டிருந்த இரும்புக் கால்களைப் பற்றிக் கொண்டோ கிடந்தார்கள். யூதர்களுடன் யாரும் வரவில்லை. அவர்கள் காவலர் எவரும் இன்றித் தாமாகவே நடந்தார்கள். வீடுகளில் தங்கியிருப்பவர்கள் சுடப்படுவார்கள் என்பது அவர்களுக்குத் தெரியும். அதனால்தான் கிளம்பிச் சென்றார்கள்.

womenயூதர்களை மறைத்துவைப்பவர்களுக்கு மரணதண்டனை அறிவிக்கப்பட்டிருந்தது. மறைத்துவைக்கப்பட்ட ஒரு யூதனுக்காக, அந்த வீட்டில் உள்ள எல்லாரும் ஒருவர் பாக்கியில்லாமல் கொல்லப்படுவார்கள் என்பது உத்தரவு. எனவே நகரின் எல்லாப் பகுதிகளிலிருந்தும், இருப்புப் பாதைப் பாலங்களின் அடியேயும், கைவண்டிகளைத் தள்ளிக்கொண்டும் இறுகப் போர்த்து மூடிய குழந்தைகளைக் கைபிடித்து அழைத்துக் கொண்டும் ‘கெட்டோ’வை நோக்கி நடந்தார்கள். ஊசி போன்ற பனி மூடிய மரங்களுக்கும் வீடுகளுக்கும் இடையே அவர்கள் எறும்புகள் போன்று ஒருவர் பின் ஒருவராகச் சென்றார்கள். அவர்கள் பூட்டிய கதவுகளையும் வாயில்களையும் கடந்து, புகையும் நெகிடி நெருப்புக்களைக் கடந்து ஏகினார்கள். இந்த நெகிடிகளின் அருகே ஜெர்மானிய, ருமேனியப் படைவீரர்கள் குளிர்காய்ந்து கொண்டிருந்தார்கள். யூதர்களைக் கவனிக்காமலே, கால்களைத் தொப்புத் தொப்பென்று அடிப்பதும் கையுறைகளால் காதுகளைத் தேய்த்துச் சூடேற்றிக்கொள்வதுமாகக் குளிர்காய்வதில் ஈடுபட்டிருந்தனர்.

பயங்கரக் குளிர். வடபகுதி நகரங்களில்கூட இத்தகைய குளிர் கடுமையானதாகவே கருதப்பட்டிருக்கும். ஒதேஸ்ஸா நகருக்கோ இது நம்ப முடியாத விந்தை நிகழ்ச்சி. இம்மாதிரிக் குளிர் ஒதேஸ்ஸாவில் முப்பது ஆண்டுகளுக்கு ஒரு முறை மட்டுமே அடிப்பது வழக்கம். வெண்ணீலமும் கருநீலமும் பசுமையுமாகக் குமைந்த ஆவிப் படலங்களின் வழியே கதிரவனின் சிறு வட்டம் மங்கலாக ஒளிர்ந்தது. பறக்கும் போதே குளிர் தாக்கியதால் இறந்த குருவிகள் பாதையில் விழுந்து கிடந்தன. தொடுவானம் வரை வெள்ளை வெளேரென்று கடல் உறைந்திருந்தது. காற்று அங்கிருந்து வீசியது.

இவளோ பார்வைக்கு ருஷ்யப் பெண் போன்று காணப்பட்டாள். சிறுவனின் தகப்பன் ருஷ்யன் போலத் தோற்றமளித்தான். சிறுவனின் தகப்பன் ருஷ்யன்தான். எனினும் இதனால் ஒன்றும் பயனில்லை. அவன் தாய் யூதப் பென். ஆகவே ‘கெட்டோ’ செல்வது தவிர அவர்களுக்கு வேறு வழியில்லை. சிறுவனின் தந்தை செஞ்சேனையில் அதிகாரி. இவளோ தனது பாஸ்போர்ட்டைக் கிழித்து, அன்று காலை கழிவறைக் குழாயில் எறிந்துவிட்டாள். இந்தச் சந்தடி எல்லாம் ஓய்ந்துபோகும் வரை நகரில் அலைந்து திரிவது என்ற தீர்மானத்துடன் தன் மகனை அழைத்துக் கொண்டு வீட்டை விட்டுக் கிளம்பினாள். எப்படியாவது சமாளிக்கலாம் என்று நினைத்தாள். ‘கெட்டோ’ செல்வது அறிவீனம். அது நிச்சயமான சாவைக் குறித்தது. ஆகவே அதிக மக்கள் நடமாட்டமுள்ள வீதிகளிலிருந்து ஒதுங்கிச் செல்ல முயன்றவாறு மகனுடன் நகரில் சுற்றி அலைந்தாள். தாங்கள் உலாவுவதாக ஆரம்பத்தில் எண்ணிய சிறுவன் அமைதியாக இருந்தான். ஆனால் விரைவிலேயே அவன் முரண்டு பண்ணத் தொடங்கினான்.

“அம்மா, நாம் ஓயாமல் நடக்கிறோமே, ஏன்?”

“நாம் உலாவுகிறோம்.”

“இவ்வளவு வேகமாக நாம் ஒருபோதும் உலாவியது கிடையாதே. நான் களைத்து விட்டேன்.”

“பொறுத்துக்கொள், மகனே. நானுந்தான் களைத்துவிட்டேன். நான் முரண்டு பண்ணுகிறேனா?”

Budapest, Festnahme von Judenதான் உண்மையிலேயே மிக விரைவாக, யாரோ தன்னை விரட்டிக் கொண்டு வருவதுபோல, நடப்பதை அவள் கவனித்தாள். தன்னைக் கட்டுப்படுத்திக் கொண்டு மெதுவாக நடக்கத் தொடங்கினாள். தாயை நிமிர்ந்து பார்த்த சிறுவன், அவள் அடையாளம் தெரியாதபடி மாறிப் போயிருப்பதைக் கண்டான். கடித்துக் கடித்தது வீங்கியிருந்த உதடுகளையும், சால்வைக்கு வெளியே அலங்கோலமாக நீட்டிக் கொண்டிருந்த, பனியால் வெளிறிய கூந்தல் புரிகளையும், கூர்த்த பாவைகள் கொண்ட அசைவற்ற கண்ணாடிக் கண்களையும் திகிலுடன் நோக்கினான். பொம்மை மிருகங்களில் இத்தகைய விழிகளை அவன் பார்த்ததுண்டு. அவள் கடிகாரத்தைப் பார்த்தாளே தவிர அவனை நோக்கவே இல்லை. குழந்தையின் சின்னக் கையை இறுகப் பிடித்துத் தன்னோடு இழுத்துச் சென்றாள். பையன் கலவரமடைந்து அழ ஆரம்பித்தான்.

“வீட்டுக்குப் போவோம். எனக்குப் பசிக்கிது…”

சிறுவனை ஓர் அருந்தகத்திற்குத் தாய் அழைத்துப் போனான். ஆனால் நாய்த்தோல் காலர்கள் வைத்த அகன்ற மேலங்கிகள் அணிந்த ருமேனிய போலீஸ்காரர்கள் அங்கே உணவு அருந்திக் கொண்டிருந்தார்கள். அவளிடமோ தஸ்தாவேஜூகள் எவையும் இல்லை. ஆகவே, தன்னைக் கைது செய்து ‘கெட்டோ’வுக்கு அனுப்பிவிடுவார்களோ என்று அவள் அஞ்சினாள். ஆகவே ஏதோ தவறுதலாக நுழைந்துவிட்டது போன்று பாவனை செய்து, மன்னிப்பு கேட்டுக்கொண்டு, மணிகள் பூட்டிய கதவைப் படாரென அறைந்து சாத்தினாள். சிறுவன் ஒன்றுமே புரியாமல் அவள் பின்னே ஓடியவாறே அழலானான்.

அடுத்த அருந்தகத்தில் ஒருவரும் இல்லை. குதிரை லாடம் பதித்த அதன் நிலைவாயிலுக்குள் நிம்மதியுடன் புகுந்தார்கள். மகனுக்கு ஒரு புட்டி தயிரும் வட்ட ரொட்டியும் வாங்கித் தந்தாள். இறுக்கமாக உடையணிந்த சிறுவன் உயர்ந்த முக்காலியில் அமர்ந்து தனக்கு மிகப் பிடித்த தயிரைக் குடித்து ரொட்டியைத் தின்பதில் முனைந்தான். அவளோ மேற்கொண்டு என்ன செய்வது என்று பதைபதைப்புடன் யோசிக்கலானாள். எதுவுமே அவள் மூளையில் உதிக்கவில்லை. அருந்தகத்தில் இரும்புக் கணப்பு எரிந்து கொண்டிருந்தது. அதனருகே சென்று குளிர்காய வாய்ப்பாயிருந்தது. குளிர்காய்கையில் கடைக்காரி தன்னை மட்டுமீறிய கவனத்துடன் நோட்டமிடுவதாக அவளுக்குப் பட்டது. அவள் அவசர அவசரமாகக் கணக்கை முடித்தாள்.

கடைக்காரி சன்னல் வழியே கலவரத்துடன் பார்த்துவிட்டு இன்னும் சற்று நேரம் கணப்பருகே அமர்ந்து கதகதப்பு உண்டாக்கிக்கொண்டு போகும்படி அவர்களிடம் சொன்னாள். கணப்பு செஞ்சூடாகத் தகதகத்தது. கருமையோடிய கொவ்வைச் சிவப்பாக ஒளிர்ந்த அதன் மீது பொறிகள் பறந்தன. அதன் வெம்மை சிறுவனை அயர்த்தியது. அவன் கண்கள் செருகிக்கொள்ளலாயின. ஆனால் அவன் தாய்க்கு நிற்க நேரமில்லை. கடைக்காரிக்கு நன்றி தெரிவித்து, அவசரமாயிருப்பதாகச் சொன்னாள். இருந்த போதிலும் அவர்கள் அங்கே சுமார் ஒரு மணி நேரம் உட்கார்ந்திருந்தார்கள்.

வயிறார உண்டு, தூக்க மயக்கத்தில் சொக்கிய சிறுவன் நிற்க அரும்பாடுபட்டான். அவள் அவன் தோள்களைக் குலுக்கி, காலரைச் சரிப்படுத்தி இறுக்கி, வாயிற் பக்கம் மெல்லத் தள்ளினாள். பையனோ நிலையில் பதித்திருந்த குதிரை லாடத்தில் தடுக்கிக் கொண்டான். பின்பு அவன், தாயார் தன் கையைப் பிடித்துக்கொண்டு விட்டான். அவள் மீண்டும் அவனை அழைத்துக்கொண்டு தெருவில் நடந்தாள். முதிர்ந்த பிளேன் மரங்கள் சாலையின் இரு மருங்கிலும் வளர்ந்திருந்தன. பனி படிந்த பட்டைகள் கொண்ட அவற்றின் மென்மையான அடிமரங்களின் அருகாக அவர்கள் சென்றார்கள். பனிக்கட்டிபோல் குளிர்ந்த காற்றில் உடல் நடுங்க, “எனக்குத் தூக்கம் வருது” என்றான் சிறுவன்.

அது தன் காதில் படாதது போல அவள் நடித்தாள். தங்களது நிலைமை புகலற்றது என்பதை அவள் அறிந்திருந்தாள். நகரில் அவர்களுக்குத் தெரிந்தவர்கள் அநேகமாக எவரும் இல்லை. போருக்கு இரண்டு மாதங்களுக்கு முன்புதான் அவள் இங்கு வந்தாள், வெளியேற வகையின்றி மாட்டிக்கொண்டாள். முற்றிலும் தனியளாய் இருந்தாள்.

“என் முழங்கால்கள் குளிரில் விறைத்துப் போச்சு” என்று தேம்பினான் பையன்.

அவனை ஓரமாக அழைத்துச் சென்று அவனது முழங்கால்களைத் தேய்த்துவிட்டாள். அவன் சமாதானமடைந்தான். நகரில் தனக்கு அறிமுகமான குடும்பம் ஒன்று இருப்பது சட்டென அவள் நினைவுக்கு வந்தது. நோவரஸ்ஸீய்ஸ்க்கிலிருந்து ‘கரூஸியா’ என்ற கப்பலில் ஒதேஸ்ஸாவுக்கு வருகையில் இந்தக் குடும்பத்தினர் அவர்களுக்கு அறிமுகமானார்கள். பிறகு சில தடவை அவர்கள் சந்தித்தார்கள். அவர்கள் பாவ்லோவ்ஸ்கிய் என்ற குடும்பப் பெயர் கொண்ட புதுமணத் தம்பதிகள். கணவன் பல்மானத் தொழிற்பள்ளியில் அப்போதுதான் படிப்பை முடித்திருந்தான். அவள் பெயர் வேரா.

இரண்டு பெண்களுக்கும் ஒருவரையொருவர் மிகப் பிடித்துவிட்டது. கப்பல் நோவரஸ்ஸீய்ஸ்க்கிலிருந்து ஒதேஸ்ஸா போய்ச் சேர்வதற்குள் இருவரும் மிக நெருங்கிப் பழகிவிட்டார்கள். ஒதேஸ்ஸாவிலும் அவர்கள் இரண்டொரு முறை ஒருவர் வீட்டுக்கு மற்றவர் விருந்தினராகச் சென்று வந்திருந்தார்கள். அவர்களது கணவர்களுக்கிடையிலும் நட்பு ஏற்பட்டது. ஒரு தடவை கார்க்கவ் நகருக்கும் ஒதேஸ்ஸா நகருக்குமிடையே நடந்த காற்பந்தாட்டப் போட்டியைக் காண இரண்டு குடும்பத்தினரும் சேர்ந்தாற் போலச் சென்றார்கள். பாவ்லோவ்ஸ்கிய் குடும்பத்தினர் ஒதேஸ்ஸா தரப்பை ஆதரித்தார்கள். அவளும் அவளது கணவனும் கார்க்கவ் குழுவுக்கு ஆதரவாயிருந்தார்கள். முடிவில் ஒதேஸ்ஸாவே வெற்றி பெற்றது.

அடக் கடவுளே, கடலோரத்தில் புதிதாகக் கட்டப்பட்டிருந்த விசாலமான புதிய விளையாட்டரங்கில் மக்கள்தான் என்னவாகக் கொந்தளித்தார்கள்! கூச்சல்கள், கத்தல்கள், புழுதிப் படலங்கள். அப்போது இரு குடும்பத்தினரும் விளையாட்டின் பொருட்டு சச்சரவு இட்டுக்கொள்ளாததுதான் குறை. இப்போதோ, அதையெல்லாம் நினைத்துப் பார்க்கவே இன்பமாயிருந்தது. பாவ்லோவ்ஸ்கிய் இப்போது ஒதேஸ்ஸாவிலேயே அகப்பட்டுக்கொண்டாள். சமீபத்தில்தான் அவள் வேராவை சந்தையில் கண்டு கொஞ்சம் உரையாடக் கூடச் செய்தாள். ஆனால் சந்தையில் நெடு நேரம் நிற்பது அபாயமானது, ஏனேனில் ஜெர்மானியர்கள் அநேகமாகத் தினந்தோறும் சோதனையிடுவதும் கைது செய்வதும் நடத்திவந்தார்கள். ஆகவே வேராவும் அவளும் ஐந்து நிமிடங்கூடப் பேசிக்கொள்ளவில்லை. பிறகு அவர்கள் சந்திக்கவில்லை.

ஆயினும் வேரா நகரில்தான் இருக்க வேண்டும். வேறு அவளுக்குப் போக்கிடம் ஏது? பாவ்லோவ்ஸ்கிய் தம்பதிகள் ருஷ்யர்கள். வேரா வீட்டில் சிறிது காலம் தங்க முயற்சி செய்யலாம். மகனை மட்டுமாவது அங்கே வைக்கலாம். பாவ்லோவ்ஸ்கிய் தம்பதிகள் வெகுதொலைவில், பிரெஞ்சு வீதியின் கோடியில் வசித்து வந்தார்கள். எனவே அவள் திரும்பினாள்.

“அம்மா, நாம் எங்கே போறோம்? வீட்டுக்கா?”

“இல்லை கண்ணே, ஒருவரைப் பார்க்கப் போறோம்.”

“யாரை?”

“வேரா அத்தையை நினைவிருக்கா உனக்கு? அவள் வீட்டுக்குத்தான் போகிறோம்.”

“சரி” என்று பையன் சமாதானமடைந்தான். மற்றவர்கள் வீட்டுக்குப் போவதில் அவனுக்கு விருப்பம். அவனது மகிழ்ச்சிக்கு அளவேயில்லை.

ஸ்த்ரோகனொவ்ஸ்கிய் பாலத்தின் வழியாக, துறைமுகம் செல்லும் தெருவை அடைந்தார்கள். அது குவாரன்டைன் சரிவு என்று அழைக்கப்பட்டது. தெருவின் கீழ்ப்புறத்தில் சரளைக் கல்லால் கட்டப்பட்ட அழகற்ற சதுர வீடுகள் நின்றன. அவற்றில் சில வெறும் இடிபாட்டுக் குவியல்களாக ஆக்கப்பட்டிருந்தன. சில தீக்கிரையாகி இருந்தன. தெருவின் கோடியில் வேறொரு பாலத்தின் வளைந்த கமான்கள் தென்பட்டன. அந்தப் பாலத்துக்கு மறுபுறம், துறைமுகத்தின் கூர்த்த சிதைவுகள் தெரிந்தன. இன்னும் தொலைவில், எரிந்து தகர்ந்த முகடுகளுக்கு அப்பால், தொடுவானம் வரை உறைந்து கிடந்தது வெண்கடல். தொடுவான விளிம்பில் உறையா நீர் ஆழ் நீலப் பட்டை போன்று காட்சி அளித்தது. புகழ்பெற்ற ஒதேஸ்ஸாக் கலங்கரை விளக்கத்தின் வெண்ணிற இடிபாடுகளைச் சுற்றிலும் கரீயச் சாம்பல் நிறம் தீட்டிய சில ருமேனியத் துருப்புக் கப்பல்கள் நின்றன. இடப்புறம் தூரத்திலிருந்த மலையின் மேல், ரோஜா நிறமும் மென் நீல வண்ணமும் கொண்ட மூடுபனிக்கு இடையே, நகரத்தின் உயரே சங்கு போன்று கவிழ்ந்து விளங்கியது நாடக அரங்கின் கும்மட்டம். ஸ்த்ரோகனொவ்ஸ்கிய் பாலத்தின் இரும்புக் கிராதிகள் உயரமான ஈட்டி வரிசை போலக் காணப்பட்டன. அவை கருத்துக் காணப்பட்டன. கீழே, வாளிகளை ஏந்தியவாறு மக்கள் குவாரன்டைன் சரிவின் மேலே ஏறி வந்து கொண்டிருந்தார்கள். வாளிகளிலிருந்து ததும்பிய நீர் வழியிலேயே பனிக்கட்டியாய் உறைந்து, ரோஜா வெயிலின் மங்கிய ஒளியில் கண்ணாடி போலப் பளிச்சிட்டது. இவை எல்லாமே எழிலுடன் பொலிந்தன. என்ன இருந்தாலும் வேரா வீட்டில் கொஞ்ச நேரம் தங்குவது சாத்தியந்தான். அடுத்து நடப்பதை அப்புறம் பார்த்துக் கொள்ளளலாம் என எண்ணினாள்.

அவர்கள் வெகு நேரம் நடந்தார்கள். சிறுவன் களைத்துப் போனான், எனினும் சிணுங்கவில்லை. சின்னக் கம்பளிக் காலணிகளைத் தொப்புத் தொப்பென அடித்தவாறு விரைவாக நடந்து, தாயின் பின்னே சிரமத்துடன் வந்துகொண்டிருந்தான். போக வேண்டிய வீட்டைச் சீக்கிரமாக அடை அவனுக்கும் ஆசையாய் இருந்தது. மற்றவர்களைச் சென்று காண்பதை அவன் எப்போதுமே விரும்பினான். வழியில் பல தடவை தாயார் அவனது வெளிறிய கன்னங்களைத் தேய்த்து விட்டுச் சூடேற்றினாள். வேரா வசித்துவந்த வீட்டருகே நடைபாதை மீது நெகிடித் தீ எரிந்து கொண்டிருந்தது. படைவீரர்கள் குளிர் காய்ந்து கொண்டிருந்தார்கள். வீடு பெரியது, பல பகுதிகள் கொண்டது. வாயில் கதவு சங்கிலியுடன் சேர்ந்துப் பூட்டப்பட்டிருந்தது. சோதனை நடந்துகொண்டிருந்தது. உள்ளே போகிறவர்களும் வெளியவருபவர்களும் தஸ்தாவேஜூகளைக் காட்ட வேண்டியிருந்தது. இவளோ அவசரமாகச் செல்பவள் போன்ற தோற்றத்துடன் வாயிலின் அருகாக முன்னே சென்றாள். அவளை யாருமே கவனிக்கவில்லை.

பையன் மறுபடியும் முரண்டு பிடிக்க ஆரம்பிக்கவே அவள் அவனைத் தூக்கிக்கொண்டு ஓடினாள். நடைபாதையில் பாவியிருந்த கருநீல உருக்காங்கற்கள் மீது அவளது காலணிகள் சடசடத்தன. பையன் அமைதியாக இருந்தான். அவள் மறுபடியும் நகரில் சுற்றித் திரியலானாள். தான் ஒரே இடங்களையே அடிக்கடி கடந்து சென்று கொண்டிருப்பதாகவும் மக்கள் தன்னைக் கூர்ந்து நோட்டமிடுவதாகவும் அவளுக்குத் தோன்றியது. சில மணி நேரத்தைத் திரையரங்கில் கழிக்கலாமே என்ற யோசனை அவள் மனத்தில் உதித்தது. மாலை எட்டு மணிக்கு மேல் தெருவில் நடமாடுவது தடுக்கப்பட்டிருந்தது. மீறுபவர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது, ஆகவே திரைப்படக் காட்சிகள் வெகு முன்னதாகவே ஆரம்பிக்கப் பட்டன.

அவளைப் போலவே கடுங்குளிரிலிருந்து தப்பும் பொருட்டு வந்திருந்த போர் வீரர்களாலும் வேசிகளாலும் நிறைந்திருந்த திரையரங்கில் ஒரே இறுக்கமும் நாற்றமுமாயிருந்தது. ஆகவே அவளுக்குக் குமட்டலெடுத்து, தலை சுற்றியது. எனினும் குறைந்த அளவேனும் அங்கே கதகதப்பாவது இருந்தது, உட்கார்ந்திருக்க முடிந்தது. பையனது கழுத்தைச் சுற்றிக் கட்டியிருந்த லேஞ்சியை அவிழ்த்து விட்டாள். தாயின் முழக்கைக்கு மேல் இருகரங்களாலும் பற்றியபடி அக்கணமே பையன் உறக்கத்தில் ஆழ்ந்தான்.

hitler-mussoliniதிரையில் நடப்பது என்னவென்று புரிந்து கொள்வதே கடினமாயிருந்தது, எனினும் அவள் தொடர்ச்சியாக இரண்டு காட்சிகள் முடியும் வரை உள்ளே உட்கார்ந்திருந்தாள். ஒருவேளை முதலில் போர் பற்றிய செய்திப்படமும் அப்புறம் வேடிக்கைப் படமோ அது போன்ற ஏதேனுமோ காட்டப்பட்டிருக்கலாம். கதை தொடர்ச்சி குழம்பியது. சில வேளைகளில் நேர்த்தியான ஒருத்தியின் தலை திரை முழுவதையும் வியாபித்துக் கொண்டிருந்தது. கொம்புகள் போலச் சிங்காரிக்கப்பட்ட வெளிர்முடியுடன் இருந்த அவள், தலையற்ற உயரமான ஆடவன் ஒருவனது தட்டை மார்பின்மீது முகத்தை வைத்து அழுத்துவதும் அவனுடன் சேர்ந்து பாட்டுப் பாடுவதுமாயிருந்தாள். பின்பு இதே பெண் தாழ்வான பந்தய மோட்டாரில் ஏறி அமர்ந்துகொண்டாள். அப்புறம் வெடிகள் கறுத்த ஊற்றுக்கள் போன்று சிதறின – ஒன்று, இரண்டு, மூன்று, நான்கு பட்டைகளாகப் – பிய்க்கப்பட்டு விட்டன போன்று தடதடவென்ற உலோகச்சத்தத்துடன் சிதறின. கரு மண்கட்டிகள் ஆலங்கட்டிகள் போல விழுந்து இரும்பு முரசு அதிர்வது போலக் கணகணத்தன. பீரங்கிக் குண்டுகளால் உழப்பட்ட தரையில், இழவுக்குறியான கருஞ் சிலுவைகளுடன் டாங்கிகள் ஊர்ந்தன. அவை கடகடத்தன, நொடிகளில் எகிறி விழுந்தன. அவற்றின் நீண்ட பீரங்கிக் குழாய்களிலிருந்து நீண்ட தீ நாக்குகளும் சுருளும் வெண்புகைப் பெருக்கும் கிளம்பின.

செப்பனிட்ட காலணிகளும், காதுமூடிகள் கொண்ட ருஷ்ய மென்மயிர்த் தொப்பியும் அணிந்திருந்த ஜெர்மானியப் படைவீரன் ஒருவன் அவளது தோள்மீது கனமாகச் சாய்ந்து, சிறுவனை எழுப்புவதற்காக அழுக்கடைந்த பெரிய விரல்களால் அவன் கழுத்தில் கிச்சுக் கிச்சு மூட்டினான். வெள்ளைப்பூண்டின் மணமும் பட்டைச் சாராய நெடியும் அவனிடமிருந்து குப்பென்று அடித்தது. அவன் ஓயாமல் சுமுகமாகச் சிரித்துக்கொண்டு, “தூங்காதே, புபே, தூங்காதே, புபே” என்று திரும்பத் திரும்பச் சொல்லிக் கொண்டிருந்தான்.

ஜெர்மன் மொழியில் புபே என்றால் பையன் என்று அர்த்தம். பையன் தலையைத் திருப்பி, தூக்கத்தில் ஏதோ முனகினானே தவிர விழித்துக்கொள்ளவில்லை. அப்போது ஜெர்மனியன் கனத்த தலையை அவளது தோள் மேல் சாத்திக்கொண்டு, அவளை ஒரு கையால் அணைத்தவாறு மற்றொரு கையால் பையனது முகத்தைப் பிசையத் தொடங்கினான். சிப்பாய் கோபித்துக் கொண்டு விடுவானோ என்ற அச்சத்தால் அவள் ஒன்றும் சொல்லவில்லை. தஸ்தாவேஜூகளைக் காட்டுமாறு அவன் கேட்டுவிடக் கூடாதே எனப் பயந்தாள். ஜெர்மானியனிடமிருந்து மற்ற நாற்றங்களுடன் கருவாட்டுக் கவிச்சும் சேர்ந்து அடித்தது. அவளுக்கு வயிற்றைப் புரட்டிக்கொண்டு வந்தது. மீண்டும் சீற்றத்தை வெளிக்காட்டிக் கொள்ளாதிருக்க அரும்பாடு பட்டாள். பதற்றப்படாமல் சமாதானமாயிருக்கும்படி தன்னையே தேற்றிக்கொண்டாள். பார்க்கப் போனால் ஜெர்மானியன் அப்படி அதிகக் கெடுதல் எதுவும் செய்துவிடவில்லை. காட்டான், அவ்வளவுதான். ஜெர்மானியர்களுக்குள் நல்லவன் என்றே சொல்ல வேண்டும். இவனைப் பொறுத்துக் கொள்ளலாம். இவ்வாறு அவள் எண்ணிக் கொண்டிருக்கையிலேயே ஜெர்மானியன் அவள் தோள்மேல் வைத்த தலையுடன் உறங்கிவிட்டான். அவள் அசையாது வீற்றிருந்தாள். ஜெர்மானியன் மிகக் கனமாயிருந்தான். நல்ல வேளை, தூங்கிப்போனான்.

கொம்பு நெளிகள் கொண்ட வெளிர் கூந்தல் அழகி திரையில் மறுபடி வளையவந்தாள். வெண்மையும் கறுப்புமான நீண்ட கதிர்க் குச்சங்கள் அவளோடு கூட அரங்க முழுவதிலும் அசைந்தாடின. கருப்பு ஊற்றுக்கள் உலோகத் தடதடப்புடன் கொங்கிச் சிதறின. டாங்கிகள் ஊர்ந்தன. ஜெர்மானியப் பட்டாளங்கள் பாலை மணலில் அணி நடை போட்டன. பாரிஸிலுள்ள ஐபல் கோபுரத்தின் உச்சியில் பெரிய பாசிஸ்ட் கொடி ஏற்றப்பட்டது. கூரிய சிறு மூக்கும் பெண்ணினது போன்ற மேவாயும் கொண்ட ஹிட்லர், பெண்ணுடையது போன்ற பின்பக்கத்தைத் துருத்தியவாறு விழிகளைச் சுழற்றுவதும் வாயை விரைவாக மூடிமூடித் திறப்பதுமாகத் திரையிலிருந்து நாயாய்க் குரைத்தான். தாடைகளை அவன் வெகு விரைவாக அசைத்தபடியால் ஒலி சற்றுப் பொறுத்தே காதில் பட்டது: வள், வள், வள், வள்… என்று.

படைவீரர்கள் இருளில் பெண்களைச் சீண்டினார்கள். பெண்கள் கீச்சிட்டார்கள். திரையரங்கில் ஒரே புழுக்கமும் இறுக்கமுமாக இருந்தது. உள்ளிப்பூண்டு, கருவாடு, பட்டைச் சாரயம், ருமேனிய ‘ஷா-நுஆர்’ அத்தர் எல்லாம் கலந்த வாடை அடித்தது. ஆயினும் வெளியே குளிரில் நடுங்குவதைவிட இங்கே இருப்பது மேலாயிருந்தது. அவளும் கொஞ்சம் களையாறினாள். சிறுவன் உறங்கிவிட்டான். ஆக, கடைசிக் காட்சியும் முடிந்தது. அவள் மீண்டும் வெளியே செல்ல வேண்டியதாயிற்று. குழந்தையின் கையைப் பிடித்துக்கொண்டாள். இருவரும் வெளியேறினார்கள்.

நகரில் கும்மிருட்டு. குளிர்ந்த மூடுபனி மட்டுமே இருளடைந்த வீடுகளுக்கிடையே திரளாக எழுந்தது. அதனால் இமைமயிர்கள் ஒட்டிக்கொண்டன. தெருக்களில் புகை மண்ட எரிந்த நெகிடி நெருப்புக்கள் கடுங்குளிராக தழல் வீச முடியாது அநேகமாக அவிந்தன. தனித் துப்பாகிக் குண்டுகள் எங்கேயோ வெடிக்கும் ஒலி எப்போதாவது கேட்டடது. ரோந்துச் சிப்பாய்கள் தெருவழியே நடந்தார்கள். எட்டு மணி அடித்தாகி விட்டது. ரோந்துக்காரர்கள் தங்களைத் தடுக்கக்கூடும் என்ற ஒரே எண்ணத்தால் அவள் சிறுவனைத் தூக்கிக் கொண்டு ஓடினாள். பொதுவில் வெறுமையாக இருந்த சந்துகளாகத் தெரிந்தெடுத்து விரைந்தாள்.

churchபிளேன் மரங்களும் கருவேல மரங்களும் கண்ணாடிப் பனியால் மூடப்பட்டு, தெருவோரங்களில் பூதங்கள் போல நின்றன. நகரம் வெறிச் சோடி இர்ண்டு கிடந்தது. திடீரென்று இருளில் ஒரு வீட்டின் கதவு திறக்கும். வாயிலருகே பளிச்சிடும். விபசார விடுதிக்குள்ளிருந்து முறையிடும் பிடிலின் மோகாவேசம் தொனிக்கும் இசை அதைத் தொடர்ந்து வரும். இவ்வாறாக நடந்து அவள் ஷெவ்சேன்கோவின் பெயர் கொண்ட பூங்காவை அடைந்தாள். இந்தப் பிரமாண்டமான பூங்கா கடற்கரையோரமாக நீண்டிருக்கிறது. இங்கே ஒரே கும்மிருட்டும் நிசப்தமும் நிலவின. கீழே குத்துப் பாறைகளின் அடியில், தொடுவானம் வரை உறைந்த கடல் மீதோ, இன்னும் ஆழ்ந்த அமைதி குடிகொண்டிருந்தது. கடலின் நிசப்தம் சுவர் போன்று பருமை கொண்டு இலகியது. சில பெரிய விணமீன்கள் மரங்களின் வெண் கிளைகளுக்கு மேல் மினுமினுத்தன. சர்ச் விளக்கின் நீலக் கதிர் தாரகைகளுக்கிடையே வழுக்கிச் சென்றது.

அகன்ற தார் சாலை வழியாக அவள் நடந்தாள். அவளது இடப்புறம் இருந்தது விளையாட்டரங்கம், ஒதேஸ்ஸா – கார்க்கவ் காற்பந்தாட்டப் போட்டியை அவர்கள் சேர்ந்து பார்த்த இடம். தகர்ந்து சிதைந்த விளையாட்டரங்கிற்கு அப்பால் இருந்தது கடல். இருளில் அது அவள் கண்ணுக்குப் புலப்படவில்லை. ஆயினும், அமைதியிலிருந்து அது இருக்குமிடத்தை ஊகிக்க முடிந்தது. அவளது வலப்புறம் பூங்கா இருந்தது. அகன்ற தார் சாலை நட்சத்திர வெளிச்சத்தில் உப்புத்தாள் போல பளபளத்தது. பல்வகை மரங்கள். அவற்றின் காய்க் குமிழ்கள் கயிறுகள் போன்ற நீண்ட காம்புகளில் தரை வரையில் தொங்கின. மற்ற இடங்களில் கோபுர வடிவான கருவேல மரங்கள், பிளேன் மரங்கள், காடி மரங்கள் ஆகியன இருந்தன. ஒன்றோடு ஒன்று பின்னிப் பிணைந்து அடர்ந்த கண்ணாடிப் பனியால் மூடப்பட்டிருந்த அம்மரங்கள் மேகத்திரள்கள் போன்று தரைமீது கவிந்திருந்தன.

அவள் மூச்சைப் பிடித்துக் கொண்டு முன்னிலும் மெதுவாக நடந்து எல்லையற்ற நீண்ட வரிசையாக நின்ற காலி பெஞ்சுகளை ஒட்டினாற் போலச்சென்றாள். ஒரு பெஞ்சின் மீது மட்டும் யாரோ உட்கார்ந்திருப்பது தெரிந்தது. இதயம் படபடவென்று அடித்துக்கொள்ள அவள் அந்த உருவத்தின் அருகாகப் போனாள். பெஞ்சின் பின்பக்கம் தலையைச் சாய்த்தவாறு கூனி அமர்ந்திருந்த அக்கரிய உருவம் அசையவேயில்லை. அந்த ஆள் மரங்களைப் போலவே கண்ணாடிப் பனியால் பாதிவரை மூடப்படிருப்பை அவள் கவனித்தாள். பூங்காவின் வெண் மரங்களுக்கு நடுவே உயரந்து நின்ற வானிலை ஆராய்ச்சி நிலையத்தின் கரிய கும்மட்டத்துக்கு மேலே சப்தரிஷி மண்டலத்தின் பல் கோண விண்மீன்கள் கண்சிமிட்டின. அந்த இடம் ஒரே அமைதியாக, முற்றிலும் அச்சம் விளைக்காததாக இருந்தது. அவளுக்குத் திகில் உண்டாகாதது ஒருகால் அவள் மிகவும் களைத்திருந்ததனால்தான் போலும்.

மறுநாள் புலர்காலை வேளையில், முந்திய இரவில் குளிரால் விறைத்து மடிந்தவர்களின் உடல்களைச் சேகரிப்பதற்காக லாரிகள் நகர் முழுவதிலும் சுற்றிவந்தன. அவற்றில் ஒன்று ஷெவ்சேன்கோ பூங்காச் சாலையில் மெதுவாக ஊர்ந்தது.

லாரி இரண்டு முறை நின்றது. ஒரு தடவை, குளிரில் விறைந்துப்போன கிழவன் உட்கார்ந்திருந்த பெஞ்சின் பக்கத்தில் நின்றது. இரண்டாந் தரம் அது ஒரு பெண் சிறுவனுடன் அமர்ந்திருந்த பெஞ்சுக்கு அருகே நின்றது. அவள் பையன் கையைப் பற்றியிருந்தாள். இருவரும் அருகருகே உட்கார்ந்திருந்தார்கள். இருவரும் அநேகமாக ஒரே மாதிரி உடை அணிந்திருந்தார்கள். ஓரளவு நல்ல, செயற்கை மென்மயிர்க் கோட்டுகளும், நமுதா காலணிகளையும் பலநிறக் கம்பளி கையுறைகளையும் இருவருமே அணிந்தார்கள். உயிருள்ளவர்கள் போலவே வீற்றிருந்தார்கள்.

முந்திய இரவு கண்ணாடிப் பனியால் மூடப்பட்டிருந்த அவர்களது முகங்கள் மட்டும்தாம் ஒரேயடியாக வெளிறியிருந்தன. அவர்களது கண்ணிமைகளில் உறைபனி விளிம்பு கட்டியிருந்தது. படைவீரர்கள் தூக்கிய போது இருவரது உடல்களும் நிமிரவேயில்லை. அமர்ந்த பாங்கிலிருந்த அவளது உடலைப் படைவீரர்கள் வீசியாட்டி லாரிக்குள் எறிந்தார்கள். அது கிழவனின் உடல் மீது கட்டை போலச் சொத்தென்று மோதியது. பின்பு, உட்கார்ந்த நிலையிலிருந்த சிறுவனுடைய உடலைப் படைவீரர்கள் சுலபமாக லாரியில் வீசிப் போட்டார்கள். அது அவளது உடல் மேல் கட்டை போல மோதியதுடன் கொஞ்சம் துள்ளவும் செய்தது.

லாரி புறப்பட்டதும் தெரு ஒலி பெருக்கி வழியாகச் சேவல் கூவி, புது நாள் புலர்வதை அறிவித்தது. பின்பு மென்மையான குழந்தைக் குரல், தெய்வீக நயத்துடன் மூன்று முறை பின்வருமாறு கூறியது:

“காலை வணக்கம்! காலை வணக்கம்! காலை வணக்கம்!”

அப்புறம் அதே இனிய குரல் ருமேனிய மொழியில் நிதானமும் பயபக்தியுமாகக் கர்த்தரின் செபத்தைப் படித்தது:

“பரமண்டலத்திலுள்ள எங்கள் பிதாவே! தெய்வீகம் பொலிக நின் திரு நாமம். நினது அரசாட்சி நிலவுவதாக….”

______________________________________________

கதை : ருஷ்ய அமர இலக்கிய வரிசை – ருஷ்யச் சிறுகதைகள்
படங்கள் : இணையத்திலிருந்து

 

கருப்பாயிருப்பவர் காரோட்டினால் மரண தண்டனை

5

மெரிக்காவில் “கருப்பாக இருப்பவர் கார் ஓட்டினால்” என்ன நடக்கும்? அவரை சந்தேக கேஸ் என்று போலீஸ் தடுத்து நிறுத்தும். அப்படி தடுத்து நிறுத்தப்பட்ட பிறகு அவரிடம் சந்தேகத்துக்குரிய வஸ்துகள் உள்ளனவா என்று தேடிப் பார்க்கப்படுவார். போலீசுக்கு போதுமான பணிவையும், அடிபணிதலையும் காட்டா விட்டால், அவர் கைது செய்யப்படுவார். சிறையில் சில நாட்கள் அடைக்கப்பட்டு உயிரிழப்பார்.

சாந்த்ரா பிளாண்டுக்கு “கருப்பாக இருப்பவர் கார் ஓட்டினால்” என்ன நடக்கும் என்று நன்றாக தெரியும். அவர் கருப்பின மக்களுக்கு எதிரான தாக்குதல்கள் தொடர்பாக தொடர்ந்து இணையத்தில் எழுதி வந்தவர். “கருப்பர்களின் உயிருக்கும் மதிப்புண்டு” என்ற இயக்கத்தில் செயல்பட்டு வந்தவர்.

சிக்காகோவைச் சேர்ந்த சாந்த்ரா, ஜூலை 10-ம் தேதி டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள பிரெய்ரீ வியூ பல்கலைக் கழகத்தில் வேலை நேர்முகத்துக்காக போயிருக்கிறார். கருப்பின மக்களுக்கு எதிரான தாக்குதல்களும், வெறுப்பு உணர்வும் வலுவாக உள்ள மாநிலங்களில் ஒன்று டெக்சாஸ்.

காரில் போய்க் கொண்டிருக்கும் போது, அவரைப் பின்தொடர்ந்து வேகமாக ஒரு போலீஸ் கார் வருவதை கவனித்திருக்கிறார் சாந்த்ரா. அந்தக் காருக்கு வழி விட்டு ஒதுங்குவோம் என்று தான் சென்ற பாதையை விட்டு விலகியிருக்கிறார். உடனே, துரத்தி வந்த போலீஸ் காரில் இருந்த பிரையன் என்சினியா என்ற காவலர், சாந்த்ராவின் காரை நிறுத்தியிருக்கிறார்.

சாந்த்ரா பிளாண்ட்
சாந்த்ரா பிளாண்ட்

சாலையில் பாதை மாறும் போது இன்டிகேட்டர் போடவில்லை என்பதற்காக குற்றப் பதிவு செய்யப் போவதாக சாந்த்ராவிடம் கூறுகிறார் பிரையன்.

இது போன்று போக்குவரத்து காவலர்களால் தேவையின்றி நிறுத்தப்பட்டு அவமானப்படுத்தப்படுவது சாந்த்ராவுக்கு முதல்முறை அல்ல. போக வேண்டிய இடத்துக்கு தாமதமாகும் எரிச்சலுடன் அவர் பிரையன் தனது வேலையை முடிக்க காத்திருந்திருக்கிறார்.

பிரையனுக்கு அது வேடிக்கையாக இருந்திருக்கிறது. “என்ன ரொம்ப எரிச்சலா இருக்கறாப்ல” என்று கேட்டிருக்கிறார்.

“ஆமா, நான் உங்களுக்கு வழி விட்டு ஒதுங்கினா, அதில சிக்னல் பண்ணலன்னு நிறுத்தி வெச்சிருக்கீங்க. எப்ப என்ன போக விடுவீங்க. எவ்வளவு நேரம் நிக்கணும். அதான் எரிச்சல்” என்று விளக்கியிருக்கிறார் சாந்த்ரா.

தன்னை எதிர்த்து ஒரு கருப்பினப் பெண் பேசுவது பிரையனுக்கு கடுப்பேற்றியிருக்கிறது. சாந்த்ரா பிடித்துக் கொண்டிருந்த சிகரெட்டை அணைக்கும்படி சொல்கிறார்.

“என் காரில் நான் சிகரெட் பிடிக்கிறேன். ஏன் அணைக்கணும்” என்று கேட்கிறார் சாந்த்ரா.

“அப்படீன்னா, காரை விட்டு கீழே இறங்கு” என்று உத்தரவிட ஆரம்பித்திருக்கிறார், பிரையன்

“என்ன? லேன் மாறுவதற்கு சிக்னல் காட்டலைன்னுதானே என் தப்பு. அதுக்கான சீட்டை எழுதிக் கொடுங்க. அதுக்கு எதுக்கு நான் காரை விட்டு கீழ இறங்கணும். அப்படிச் சொல்ல உங்களுக்கு அதிகாரம் இல்லை” என்று மறுத்திருக்கிறார், சாந்த்ரா.

“எனக்கு எல்லா அதிகாரமும் இருக்கு. நீயா இறங்குறியா, நான் வெளியே இழுத்து போடவா” என்று காருக்குள் கையை விட்டிருக்கிறார், பிரையன்.

“என்னைத் தொட்டா நடக்கிறதே வேற.” என்று சீறியிருக்கிறார் சாந்த்ரா.

“மரியாதையா கீழே இறங்கிரு” என்று ஸ்டன் துப்பாக்கியை நீட்டியிருக்கிறார் பிரையன்.

தன்னை என்ன செய்தாலும் கேட்க ஆளில்லை என்று தெரிந்த சாந்த்ரா, காரிலிருந்து கீழே இறங்குகிறார்.

“அந்தா அங்க போய் நில்லு. ஃபோனை ஆஃப் பண்ணு” என்று உத்தரவிடுகிறார் பிரையன்.

“நான் ஃபோன்ல பேச ஒண்ணும் செய்யல, இங்க நடக்கிறத பதிவு செய்றேன். அதுக்கு எனக்கு உரிமை இருக்கு” என்று கூறிய சாந்த்ராவுக்கு மீண்டும் ஒரு உத்தரவு பிறப்பிக்கப்படுகிறது. சாந்த்ரா செல்பேசியை காரின் மேல் அடித்து வைக்கிறார்.

“என்னை ஏன் கைது செய்றீங்க, அதுக்கு காரணம் என்ன” என்று கேட்கிறார் சாந்த்ரா.

அதற்கு பதில் சொல்லாமல், “நீ அந்தப் பக்கமா நில்லு, தள்ளி நில்லு” என்று அங்குமிங்கும் அலைக்கழிக்கிறார் பிரையன்.

இதுவரை நடந்தவை பிரையனது போலிஸ் காரில் இருந்த காமராவில் பதிவாகியிருக்கின்றன. அதன் பிறகு பிரையன் சாந்த்ராவை காமராவின் பார்வைக்கு வெளியே பக்கவாட்டு நடைபாதைக்கு தள்ளிச் செல்கிறார்.

“என்னை கீழே தள்ளிட்டீங்க, என் தலையை தரையில மோதுகிறீர்கள். எனக்கு தலை சுத்துது” என்று கதறுகிறார் சாந்த்ரா.

“நான் சொன்னதை கேக்கலேன்னா இப்படித்தான், மரியாதையை மண்டியிட்டு உட்காரு, கையை பின்னால கட்டு” என்று போலீஸ் அடாவடி செய்கிறார் பிரையன்.

அதைத் தொடர்ந்து இன்னொரு பெண் காவலரை ரேடியோவில் அழைக்கிறார், பிரையன். அவர் வந்த பிறகு, கைது செய்வதை தடுக்க முயற்சித்ததால்தான் சாந்த்ராவை கைது செய்ய வேண்டி வந்தது என்கிறார் பிரையன். அதாவது, கைது செய்வதை எதிர்த்த காரணத்தால் கைது செய்கிறாராம்.

சாந்த்ராவை போலீஸ் காரில் ஏற்றி விட்டு என்ன நடந்தது என்று தனது மேலதிகாரிக்கு சொல்கிறார், பிரையன். போக்குவரத்து விதியை மீறியதால் காரை நிறுத்தியதாகவும், வாக்குவாதம் ஆரம்பிக்கவே இறங்கச் சொன்னதாகவும், கைது செய்வதை தடுக்க முயற்சித்ததால், தாக்கியதாகவும், தன்னை அடிக்கவில்லை, ஆனால், தரையில் அழுத்திப் பிடித்த போது கையையும் காலையும் உதறினார் என்றும் விளக்குகிறார். இந்தக் குற்றங்களுக்காக சாந்த்ராவை கைது செய்வது என்று முடிவு செய்கிறது காவல்துறை.

டெக்சாஸ் மாநில போலீஸ் துறை சாந்த்ராவை ஜெயிலில் அடைக்க முடிவு செய்கிறது. அவரை விடுவிக்க $5,000 பிணைத் தொகை விதித்திருக்கிறது அந்த நாட்டு நீதிமன்றம். சிறையில் அடைக்கப்பட்ட சாந்த்ரா மூன்றாவது நாள் காலையில் ஒரு பிளாஸ்டிக் பையால் கழுத்து இறுக்கப்பட்டு இறந்து கிடந்தார்.

சாந்த்ரா தற்கொலை செய்து கொண்டதாக அமெரிக்க நீதித்துறை முடிவு செய்திருக்கிறது. இது தற்கொலை அல்ல, ஒரு நிறவெறி படுகொலை என்று கொதிக்கின்றனர் கருப்பின மக்கள்.

ஆனால், அமெரிக்காவில் கருப்பின மக்களுக்கு இருக்கும் ஜனநாயகம் இதுதான். அமெரிக்காவில் கருப்பின மக்கள் போக்குவரத்து காவலர்களால் நிறுத்தப்படுவதற்கான வாய்ப்பு அதிகம். அப்படி நிறுத்தப்பட்ட பிறகு சட்டவிரோதமாக கஞ்சா மற்றும் பிற போதை மருந்துகள் இருக்கிறதா என்று தேடப்படுவதும் அந்த சாக்கில் தாக்கப்படுவதும் அதிகம்.

அமெரிக்காவின் காவல்துறை அதிகாரிகள் அதிவேக காரில் கிரிமினல்களை துரத்திக் கொண்டு செல்லும் அதிரடிக் காட்சிகள் தொடராகவே தொலைக்காட்சியில் காட்டப்படுகின்றன. ஆனால் கருப்பின மக்களைப் பொறுத்த வரை இதில் திகிலோ, சாகசமோ எதுவும் இல்லை, இது வெள்ளை நிறவெறித்திமிரின் ஆயுதம்.

அமெரிக்காவில் சிக்னல் மாறிச்செல்லும் கருப்பின மக்களுக்கு மரண தண்டனை சாந்த்ராவின் சோக முடிவு உலகுக்கு அறிவித்திருக்கிறது.

தொடர்புடைய செய்தி

விழுப்புரம் சாராய ரவுடிகளுக்கு எதிரான ஆர்ப்பாட்டம் – படங்கள், செய்தி

0
DCCver0077
  • விழுப்புரம் வி.மருதூர்- நரசிங்கபுரம் சாராய ரவுடிகளின் கொட்டத்தை அடக்குவோம்!
  • கள்ளச்சாராய விற்பனைக்கு முடிவு கட்டுவோம்!

என்ற தலைப்பில் கண்டன ஆர்ப்பாட்டம் 28-07-2015 அன்று மாலை 4 மணிக்கு விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு எதிரில் நடத்தப்பட்டது.

vpm-demo-against-tasmac-posterதமிழகம் முழுவதும் பெண்கள், மாணவர்கள், இளைஞர்கள் வாழ்வை சூறையாடுவதற்கு அரசே டாஸ்மாக் கடைகளை நடத்தி வருகிறது. மற்றொரு புறம் ஊர்தோறும் கள்ளச்சாராய விற்பனையும் போலிசின் ஆசியோடு படுஜோராக நடந்த கொண்டிருக்கிறது.

இந்த சூழலில் கடந்த மாதம் 29-ம் தேதி அன்று வி.மருதூரில் கள்ளச்சாராயம் விற்று கொண்டிருந்த ரவுடி கும்பலை அப்பகுதி இளைஞர்கள் எதிர்த்தனர். இதனால் ஆத்திரம் அடைந்த ரவுடி கும்பல் அப்பகுதி இளைஞர்களை தாக்கியதோடு இதனை தட்டிகேட்ட புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி தோழர்களையும் தாக்கினார்கள். அதோடு மட்டுமில்லாமல் அந்தப் பகுதி மக்கள் அனைவரையும் ஆபாசமாக திட்டி கொலை மிரட்டலும் விடுத்துள்ளனர். தொடர்ந்து தோழர் வீடு மற்றும் பகுதி இளைஞர்களின் வீட்டையும் அடித்து நொறுக்கி எரித்தும் விட்டனர். இந்தச் சம்பவத்தால் அப்பகுதி மக்கள் அச்சத்துடனே வாழ்ந்து வந்தனர்.

விழுப்புரம் சாராய ஒழிப்பு ஆர்ப்பாட்டம்இச்சூழலில் இப்பகுதி மக்களின் பயத்தை போக்குவதற்கும், ரவுடி கும்பலை ஒழித்துக் கட்ட, அவர்களின் அராஜகத்திற்கு முடிவு கட்ட 22-07-2015 அன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தலாம் என திட்டமிட்டு 16-07-2015 அன்று ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி கோரி காவல்துறையிடம் விண்ணப்பித்தோம்.

அப்பொழுது பணியில் இருந்த உதவி ஆய்வாளர் மணி, “DSP கிட்ட கேட்டு தாங்க சொல்ல முடியும் நீங்க 3 மணிக்கு வாங்க” என்று கூறினார். மீண்டும் 3 மணிக்கு சென்றோம்.

அப்பொழுது காவல் நிலையத்தில் ஒரு பெண் காவலர் மட்டும் தான் பணியில் இருந்தார். அவரிடம் கேட்டதற்கு, “SI சார் இப்ப தான் DSP- யை பார்க்க சென்றிருக்கிறார். உங்களை 5 மணிக்கு வரச் சொன்னார்” என்று கூறினார்.

தோழர்கள் மீண்டும் 5 மணிக்கு சென்றனர். தோழர்களை பார்த்த SI மணி, “உங்கள் ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி மறுக்கப்படுகிறது” என்றார்.

“ஏன், அதற்கான காரணத்தை ரிட்டனாக எழுதி கொடுங்கள்” என்று கேட்டதற்கு

“அதெல்லாம் எழுதி தர முடியாது நீங்கள் ஹையர் ஆபிசரை கூட பார்த்துக்கொள்ளுங்கள்” என்று திமிராக கூறி சென்று விட்டார்.

பிறகு DSP –யிடம் அனுமதி கேட்கலாம் என்று DSP பீமராஜை சந்தித்தோம். அவரோ தனது வண்டியில் இருந்தபடியே, “உங்கள் ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி மறுக்கிறோம்” என்று கூறினார்.

விழுப்புரம் சாராய ஒழிப்பு ஆர்ப்பாட்டம்

ஏன் என்று கேட்டதற்கு “இந்து – முஸ்லீம் கலவரம் நடக்கிறது இந்தச் சூழலில் தர முடியாது என்று கலவரத்திற்கும் நமது ஆர்ப்பாட்டத்திற்கும் சம்பந்தமே இல்லாத பதிலை கூறினார்.

“அப்படி என்றால் நீங்கள் ரிட்டனாக எழுதி கொடுங்கள்” என்று கேட்டதற்கு

“நான் ஒரு கண்காணிப்பு அதிகாரி மட்டும் தான். நீங்க என்னையே எழுதி தர சொல்லுறிங்களா? அதெல்லாம் தர முடியாது” என்று அதிகார போதையில் பேசிவிட்டு வண்டியை எடுத்து கொண்டு ஓடி விட்டார்.

அப்பொழுதே தெரிந்து விட்டது DSP பீமராஜ் கள்ளச்ச்சாராய கூட்டுக் களவாணி, இவர்களிடம் நின்று நேரத்தை வீணடிக்க வேண்டாம் என்று. நகர காவல் நிலையத்திற்கு பதிவுத் தபாலில் மனு அனுப்பினோம். 18-ம் தேதி நம்மை அழைத்து DSP மறுப்பு கடிதம் கொடுத்தார்.

அதைத் தொடர்ந்து சென்னை உயர்நீதி மன்றத்தில் ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி கேட்டு மனு போட்டோம். திட்டமிட்ட தேதியில் ஆர்ப்பாட்டம் என மக்கள் மத்தியில் பிரச்சாரம் செய்தோம். சுதாரித்துக் கொண்ட காவல் துறை 22–ம் தேதி நம்மை அழைத்து “ ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி தருகிறோம் வேறு இடத்தில் வைத்துக்கொள்ளுங்கள்” என்றனர்.

விழுப்புரம் சாராய ஒழிப்பு ஆர்ப்பாட்டம்

நாமும் பரிசீலித்து 28-07-2015 அன்று ஆர்ப்பாட்டம் நடத்துவது என்று முடிவு செய்தோம்.

ஆர்ப்பாட்டத்திற்கு மக்களை திரட்டுவதற்காக அப்பகுதி மக்களிடம் பெருந்திரளான தோழர்கள் 26, 27 –ம் தேதிகளில் வி.மருதூர் மற்றும் நரசிங்கபுரம் ஒட்டியுள்ள அனைத்து பகுதியிலும் செங்கொடி ஏந்தி வீடு வீடாக பிரச்சாரம் செய்தனர்.

திட்டமிட்டவாறு 28-07-2015 செவ்வாய் அன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு தலைமை தாங்கி பேசிய புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணியின் செயலர் தோழர் மோகன்ராஜ், “கள்ளச்சாராயத்தால் மாணவ இளைஞர்கள், பெண்கள், குடும்பங்கள் என சகலமும் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தச் சூழலில் கள்ளச்சாராயத்தையும், கள்ளச்சாராய ரவுடிகளையும் பாதுகாப்பது காவல்துறை தான்” என்பதை அம்பலப்படுத்தி பேசினார்.

அடுத்ததாக கண்டன உரையாற்றிய விவசாயிகள் விடுதலை முன்னணி விழுப்புரம் மாவட்ட அமைப்பாளர் தோழர் அம்பேத்கர், “கள்ளச்சாராய ரவுடிகள் தாக்கப்பட்டதற்கும் தோழர் செல்வக்குமார் குடும்பத்தினருக்கும் சம்பந்தமே இல்லை. ரவுடிகள் தாக்கப்பட்ட இடத்தில் தோழர் செல்வக்குமார் இல்லவே இல்லை. அப்படி இருக்கும் பொழுது செல்வக்குமார் தான் அடித்தார் என ரவுடிகள் சொல்வதற்கு காரணமென்னவென்றால், காவல்துறைக்கும், கள்ளச்சாராய ரவுடிகளுக்கும் தோழர் மீதுள்ள காழ்ப்புணர்வு வெறி தான் காரணம்.

விவசாயிகள் விடுதலை முன்னணி விழுப்புரம் மாவட்ட அமைப்பாளர் தோழர் அம்பேத்கர்
விவசாயிகள் விடுதலை முன்னணி விழுப்புரம் மாவட்ட அமைப்பாளர் தோழர் அம்பேத்கர்

தொடர்ந்து மாணவர், இளைஞர்களை கல்வி உரிமைக்காகவும், அநீதிக்கெதிராகவும் போராட மாணவர்களை நல்வழிப்படுத்துவது காவல்துறைக்கு பிடிக்கவில்லை. அந்தப் பகுதியில் கள்ளச்சாராய விறபனையை தொடர்ந்து எதிர்த்து வருகிறார். இது தான் தோழர் மீதும், வீட்டின் மீதான கொலைத் வெறித்தாக்குதலுக்கு அடிப்படை. இவ்வாறு தாக்கினால் அமைப்பையும் தோழர்களையும் சிதைத்து விடலாம் என்று கோட்டை கட்டுகின்றனர். அது மட்டும் முடியாது.

1997-ல் திடீர் பணக்கார அரசியல் ரவுடிகள் இயக்கம் எடுத்து ரவுடிகளின் கொட்டத்தை அடக்கினோம். நாங்கள் யாருக்கும் பயந்தவர்கள் அல்ல. வெள்ளையனை எதிர்த்த வீரபாண்டிய கட்டபொம்மனின் வாரிசுகள், ஏகாதிபத்திய எதிர்ப்புப் போராளி பகத்சிங்கின் வாரிசுகள். கீழ்வெண்மணி படுகொலைக்கு காரணமான கோபாலகிருஷ்ணுக்கு தண்டனை வழங்கிய நக்சல்பாரிகளின் வாரிசு நாங்கள்” என்று கூறி முடித்தார்.

இறுதியாக கண்டன உரையாற்றிய மக்கள் அதிகாரம் மாநில ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர்.தோழர் ராஜு பேசுகையில், “அம்மா டாஸ்மாக்கிற்கு நிகராக விழுப்புரத்திலே கள்ளச்சாராயம் ஆறாக பெருக்கெடுத்து ஓடுகிறது. ஒரு நாளைக்கு 30 கேஸ் நீதிமன்றத்திற்கு வருகிறது. இருப்பினும் கள்ளச்சாராய விற்பனை குறையவில்லை என்றால் காவல்துறை என்ன செய்து கொண்டிருக்கிறது.

மக்கள் அதிகாரம் மாநில ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர்.தோழர் ராஜு
மக்கள் அதிகாரம் மாநில ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர்.தோழர் ராஜு

ஒரு கள்ளச்சாராய ரவுடியால் பாதிக்கப்பட்டவர்கள் புகார் கொடுக்க காவல் நிலையத்திற்கு சென்றால், பாதிக்கப்பட்டவர்கள் மீதே, காவல் துறை வழக்கு பதிகிறது. DSP பீமராஜ் கட்டுப்பாட்டில் உள்ள காவல் நிலைய எல்லையில் தான் கள்ளச்சாராய விற்பனை நடக்கிறது அதனை ஒழிக்க துப்பில்லை. ஆனால் தோழர்கள் மீது பொய் வழக்கு போட்டுள்ளார்.

இப்பொழுது நேர்மையானவர்கள் காவல் நிலையத்திற்கு தனியாக செல்ல பயப்படுகிறார்கள். ஆனால்,ரவுடி, கிரிமினல் எல்லாம் சர்வ சாதாரணமாக போலிஸ் ஸ்டேசனுக்கு செல்கிறார்கள். ரவுடிகளை பாதுகாக்கக் கூடிய இடமாக மாறிவிட்டது காவல் நிலையம். செம்மரக் கடத்தலில் ஈடுபட்ட கிரிமினல் DSP யை பாதுகாப்போடு மாஜிஸ்ரேட்டிடம் கொண்டு சென்றது காவல்துறை.

நாடு முழுவதும் நடக்கும் கிரானைட் கொள்ளை, தாது மணல் கொள்ளை, ஆற்று மணல் கொள்ளை என அனைத்தும் அந்தந்த மாவட்ட நிர்வாகத்துக்கு தெரிந்து தானே நடக்கிறது. பொதுப்பணித்துறையில் இருந்து அனைத்து துறைகளும் மணல் கொள்ளைக்கு ஆதரவாக தானே செயல்படுகிறார்கள். இதனை தடுக்க முடிந்ததா காவல் துறையால் என்றால் இல்லை. ஆனால் ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி கேட்டால் மட்டும் சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படும் என்று மறுக்கிறதே யாரை ஏமாற்றுவதற்கு?

வெள்ளாற்றிலே மணல் கொள்ளைக்கு எதிராக மக்களை திரட்டி நாங்கள் போராடும் பொழுது நூற்றுக்கணக்கிலே போலிசை குவித்து மக்களை மிரட்டுகிறார்கள். மாவட்ட நிர்வாகமும் பொதுப்பணி துறையும் சட்டப்படி தான் மணல் அள்ளுகிறார்கள் என்கிறது. சட்டவிரோத மணல் கொள்ளைக்கு அதிகாரிகள் அத்துணை பேரும் துணை போகிறார்கள். இருப்பினும் மக்களின் துணையோடு அந்த மணல் குவாரியை நிரந்தரமாக நாங்கள் மூடினோம். அரசோ,காவல் துறையோ மூடவில்லை.

மத்திய பிரதேசத்திலே “வியாபம்” ஊழல், தமிழகத்திலே 43 DSP நியமனத்தில் ஊழல் என்று அரசு நிர்வாகமே ஊழலில் நாறுகிறது. நீதிபதிகள் முதல் தலையாரிகள் வரை மக்களுக்கு எதிராகவே செயல்படுகிறார்கள். இந்த அரசுக் கட்டமைப்பு எனும் இந்த வீடே சிதைந்து போய் விட்டது. இதனை இடித்து விட்டு புதிய வீடு கட்ட வேண்டும். அதுபோல் நமக்கான அரசை நாமே உருவாக்க வேண்டும்” என்று கூறி முடித்தார்.

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு பெண்கள், பாதிக்கப்பட்ட பகுதி மக்கள் மற்றும் அரசு ஊழியர்கள், மாற்றுக்கட்சியினர், சுமை தூக்கும் தொழிலாளர்கள், டூ வீலர் பழுது பார்ப்போர் சங்கம் என பலரும் கலந்து கொண்டனர்.

மொத்தத்தில் இந்த ஆர்ப்பாட்டம் கள்ளச்சாராயம், டாஸ்மாக் கடைகளை ஒழித்துக் கட்டும் விதமாகவும், மக்களுக்கு உதவாத வெற்று சதைப்பிண்டமான இந்த அரசுக் கட்டமைப்பை தகர்த்தெறியும் விதமாகவும் மக்கள் மத்தியில் ஓர் நம்பிக்கையை ஏற்படுத்தி உள்ளது.

தகவல்
புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி,
விழுப்புரம்

 

யாகூப் மேமன் கொலை – இந்து மனசாட்சிக்கு இன்னொரு பலி !

10

யாகூம் மேமன்யாகூப் மேமன் தூக்கிலிடப்பட்டு விட்டார். இன்று – 30.07.2015 – காலை 7 மணிக்குள் மேமனைத் தூக்கிலிடாவிட்டால், நீதி செத்துவிடும் என்று பதறிய உச்ச நீதிமன்றம் இரவோடு இரவாக நீதி வழங்கி விட்டது.

“பவானிசிங்கின் நியமனம் செல்லாது, ஆனால் அவரை அரசு வழக்குரைஞராக அங்கீகரித்து குமாரசாமி நடத்திய விசாரணை செல்லும்” என்று ஜெயலலிதாவுக்கு தீர்ப்பு வழங்கிய நீதியரசர் தீபக் மிஸ்ராவின் தலைமையிலான அமர்வுதான் இந்தத் தீர்ப்பையும் வழங்கியிருக்கிறது.

இந்த மரண தண்டனை வார்த்தைகளால் விவரிக்க முடியாத ஒரு கீழ்மை ! அநீதி, இந்து வெறி, நயவஞ்சகம், நம்பிக்கைத் துரோகம் என எந்தவொரு சொல்லுக்குள்ளும் அதனை அடக்க முடியாது. பாரதிய ஜனதா மட்டுமல்ல காங்கிரசும், விசாரணை நீதிமன்றம் முதல் உச்ச நீதிமன்றம் வரையிலான அனைவரும் இந்தக் குற்றத்தின் கூட்டாளிகள்.

1994-ல் சி.பி.ஐ-இன் பிடியில் இருந்த யாகூப் மேமனை முதன் முதலில் சந்தித்த பத்திரிகையாளர் மஸீ ரஹ்மான், (தற்போது கார்டியன் பத்திரிகையில் பணியாற்றுகிறார்) அவுட் லுக் வார இதழில் எழுதியுள்ள கட்டுரையில் இவ்வாறு குறிப்பிடுகிறார் – “இந்திய நீதியின் மீது அப்பாவித்தனமாக பெரு நம்பிக்கை வைத்திருந்த குற்றத்துக்காக யாகூப் தூக்கில் தொங்க வேண்டியவன்தான்!”

நெஞ்சைப் பிழியும் இந்தச் சொற்கள் ஈரம் கசியாத இந்து மனசாட்சியை அசைக்கப் போவதில்லை. இந்த தேசத்தின் மனசாட்சியை திருப்திப்படுத்துவதற்காகத்தான் அப்சல் குரு என்ற நிரபராதி காவு கொடுக்கப்பட்டார். நாடாளுமன்றத் தாக்குதல் என்ற அந்தக் கபட நாடகத்தின் உண்மைக் கதையை உலகுக்குச் சொல்லியிருக்கக்கூடிய அந்த ஒரேயொரு மனிதனைக் கொலை செய்த பின்னர்தான், அத்வானியாலும் இந்த தேசத்தின் கூட்டு மனச்சாட்சியாலும் அமைதியாக உறங்க முடிந்தது.

0000000

யாகூப் மேமன் இன்னொரு அப்சல் குரு.

மஸீ ரஹ்மான் எழுதுகிறார். “ஆகஸ்டு 1994-ல் சிபிஐ-இன் கட்டுப்பாட்டில் இருந்த யாகூப் மேமனைப் பார்த்துவிட்டு நான் வெளியே வரும்போது ஒரு மூத்த சி.பி.ஐ அதிகாரி, சில முகவரிகள் கிறுக்கப்பட்ட ஒரு காகிதத்தை என் கையில் திணித்து, இந்த இடங்களை புகைப்படம் எடுக்க முடியுமா என்று என்னைக் கேட்டார். அவையனைத்தும் கராச்சி முகவரிகள். தாவூத் இப்ராகீம், 1993 மும்பை குண்டுவெடிப்பின் கருவியாக செயல்பட்ட டைகர் மேமன், ஐ.எஸ்.ஐ-ன் தொடர்பாளராக இருந்து குண்டுவெடிப்பை நடத்திய தௌபீக் ஜாலியன்வாலா ஆகியோர் தங்கியிருந்த வீடுகள். இந்த முகவரிகள் அனைத்தும் யாகூப் மேமனால் சி.பி.ஐக்கு கொடுக்கப்பட்டவை. கராச்சியில் உள்ள ஒரு புகைப்படக்காரர் மூலம் அந்த இடங்களையெல்லாம் நான் புகைப்படம் எடுத்தேன். அவை இந்தியா டுடேவில் வெளியிடப்பட்டவுடன் பெரிதும் மகிழ்ந்த அந்த அதிகாரி மறுநாளே என் வீட்டுக்கு வந்து முழுக்கதையையும் சொன்னார்’’

‘’பாகிஸ்தானில் ஐ.எஸ்.ஐ-ன் கண்காணிப்பில் இருந்த யாகூப் மேமன், தன் உயிரைப் பணயம் வைத்து, பாகிஸ்தானில் எடுத்திருந்த வீடியோக்களை சி.பி.ஐ அதிகாரிகள் எனக்கு காட்டினர். தனக்கும் டைகர் மேமனுக்கும் நடந்த உரையாடலின் ஒலிப்பதிவுகள், தங்களை பாங்காக்கிற்கும் பின்னர் கராச்சிக்கும் ஐ.எஸ்.ஐ அழைத்து வந்தது குறித்த ஆதாரங்கள், மேமன் குடும்பத்தினரைக் கண்காணிக்க நியமிக்கப்பட்டிருந்த பாக் இராணுவ அதிகாரியின் பெயர் – என யாகூப் மேமன் தங்களிடம் தந்த பல ஆவணங்களை சி.பி.ஐ அதிகாரிகள் எனக்கு காட்டினார்கள். யாகூப் மேமன் கொண்டு வந்த முக்கியத்துவம் வாய்ந்த இந்த ஆவணங்கள் அனைத்தையும் அவருக்கு எதிராகவே நாங்கள் நீதிமன்றத்தில் பயன்படுத்தினோம் என்று கூறினார் அந்த சி.பி.ஐ அதிகாரி.”  என்று தனது கட்டுரையில் குறிப்பிடுகிறார்  மஸீ ரஹ்மான்.

யாகூப் மேமன் தூக்கிலிடப்பட இருப்பதாக மகாராட்டிர அரசு அறிவித்த பின்னர், ‘’ரீ டிஃப். காம்’’ என்ற இணையப் பத்திரிகையில் “யாகூப் மேமனைத் தூக்கிலிடக் கூடாது – ஏன்?” என்று தலைப்பிட்டு ஜூலை 24 அன்று ஒரு கட்டுரையை வெளியிட்டிருக்கிறார் பத்திரிகையாளர் ஷீலா பட்.

27-07-2007 அன்று யாகூப் மேமனுக்கு தடா நீதிமன்றம் தூக்குத் தண்டனை விதித்த சில நாட்களில் ’ரீ டிஃப். காம்’’ க்கு உளவுத் துறை (“ரா”) அதிகாரி பி.ராமன் அனுப்பிய கட்டுரை அது. அன்று கட்டுரையை அனுப்பி வைத்த ராமன், “இக்கட்டுரையை வெளியிட்டால், மேல் முறையீட்டில் உச்ச நீதிமன்றம் எல்லோரையுமே விடுதலை செய்து விட வாய்ப்பிருக்கிறதாகையால் கட்டுரையை வெளியிட வேண்டாம்” என்று அக்கட்டுரையின் கீழேயே ஒரு குறிப்பு எழுதியிருந்தாராம். அதன் காரணமாக அன்று இதனை வெளியிட முடியவில்லை என்று கூறும் ஷீலா பட், தற்போது யாகூப் மேமனைத் தூக்கிலிடுவதற்கான தேதி குறிக்கப்பட்டுவிட்ட நிலையில், ராமனின் கட்டுரையை வெளியிட வேண்டுமென்று கருதியிருக்கிறார். ஜூன், 16, 2013 அன்று ராமன் இறந்து விட்டபடியால், ராமனுடைய சகோதரரிடம் ஒப்புதல் பெற்று அதனை வெளியிட்டிருக்கிறார் ஷீலா பட்.

02-08-2007-ல் உளவுத்துறை அதிகாரி ராமன் அனுப்பிய கட்டுரை இப்படித் தொடங்குகிறது. ‘’என்னை நானே திரும்பத் திரும்பக் கேட்டுக் கொள்கிறேன். இதை நான் எழுதலாமா? எழுதவில்லையென்றால் நான் அறம் கொன்ற கோழையாகி விடுவேனா? இதன் காரணமாக குற்றவாளிகள் தப்பி விடுவார்களா?…. இது நீதிமன்ற அவமதிப்பாகுமா? இந்தக் கேள்விகளுக்கு தீர்மானமான விடை காண முடியாது. தூக்கில் போடக்கூடாத நபர் என்று நான் கருதும் ஒரு மனிதனை, தூக்குமேடைக்குச் செல்ல விடாமல் தடுப்பது முக்கியம் என்று நான் கருதுகிறேன். எனவே, இதனை எழுத வேண்டும் என்று இறுதியாக நான் முடிவு செய்து விட்டேன். எழுதுகிறேன்.’’ என்ற பீடிகையுடன் தொடங்குகிறார் ராமன்.

மத்திய உளவு நிறுவனமான “ரா” வின் பயங்கரவாத எதிர்ப்புப் பிரிவுக்கு தலைவராக இருந்த ராமன், காத்மாண்டுவிலிருந்து யாகூப் மேமனை இந்தியாவுக்கு அழைத்து வந்திருக்கிறார். (மேமனை தில்லி ரயில் நிலையத்தில் மடக்கிப் பிடித்தோம் என்கிறது சி.பி.ஐ-ன் குற்றப்பத்திரிகை) விசாரணைக்கு யாகூப் மேமன் முழு ஒத்துழைப்பு வழங்கியது, ஐ.எஸ்.ஐ-க்குத் தெரியாமல், பாகிஸ்தானிலிருந்து தனது குடும்ப உறுப்பினர்களை இந்தியாவுக்கு வரவழைத்து எல்லோரையும் சரணடைய வைத்தது ஆகியவற்றைத் தனது கட்டுரையில் விவரிக்கிறார்.

“இந்த உண்மைகளைக் கணக்கில் கொண்டு யாகூப் மேமன் மற்றும் அவரது குடும்பத்தினரின் தண்டனையைக் குறைக்குமாறு அரசுத் தரப்பு வக்கீலே கோரியிருக்க வேண்டும். ஆனால் எப்படியாவது தூக்கு தண்டனை வாங்கித் தந்துவிடவேண்டும் என்பதே அரசுத் தரப்பின் நோக்கமாக இருந்திருக்கிறது. எனவேதான், மேற்கூறிய உண்மைகளை நீதிமன்றத்தின் பார்வைக்கே அவர்கள் கொண்டு செல்லவில்லை” என்று தனது கட்டுரையில் குறிப்பிட்டிருக்கிறார் ராமன்.

மும்பை குண்டுவெடிப்பில் ஐ.எஸ்.ஐ க்கு இருந்த தொடர்பு உள்ளிட்ட பல விவரங்கள் யாகூப் மேமன் கொடுத்தவை என்றும், இல்லையென்றால் இவற்றில் பத்து சதவீத ஆதாரங்களைக்கூடத் தங்களால் திரட்டியிருக்க முடியாது என்றும் சி.பி.ஐ வழக்குரைஞர் தன்னிடம் கூறியதாகச் சொல்லியிருக்கிறார் மேமனின் வழக்குரைஞர் ஷ்யாம் கேஸ்வானி. “மேமனை பிணையில் விடுவதற்கு தாங்கள் எதிர்ப்புத் தெரிவிக்க மாட்டோம்” என்று கூறி விட்டு, மறுநாள் டில்லி உத்தரவு என்று கூறி மேமனை பிணையில் விடுவதற்கு அவர் எதிர்ப்பு தெரிவித்தார் என்று கூறி, சி.பி.ஐ-ன் இரட்டைவேடத்தையும் அவர் அம்பலப்படுத்தியிருக்கிறார்.

தனது கட்டுப்பாட்டில் இருந்த கைதியான யாகூப் மேமனை தொலைக்காட்சிக்கு பேட்டி கொடுக்க வைத்து, குண்டுவெடிப்பில் ஐ.எஸ்.ஐ-க்கு உள்ள தொடர்பை உலகுக்கு தெரிய வைத்தது இந்திய அரசு. அப்சல் குருவும் இப்படித்தான் தொலைக்காட்சி காமெராவின் முன் நிறுத்தப்பட்டார் என்பதை நினைவிற் கொள்ளுங்கள்.

0000000

திகம் விவரிக்கத் தேவையில்லை. யாகூப் மேமனை நம்ப வைத்துக் கழுத்தறுத்திருக்கிறது இந்திய அரசு. தான் கைதானது மட்டுமின்றி, தந்தை, சகோதரிகள், மனைவி, அப்போதுதான் பிறந்த கைக்குழந்தை ஆகிய பத்து குடும்ப உறுப்பினர்களையும் யாகூப் வரவழைத்ததற்குக் காரணம், குற்றத்தில் நேரடித் தொடர்பு இல்லாத தன்னை சி.பி.ஐ சிக்கவைக்காது என்ற நம்பிக்கை. நீதிமன்றம் விடுவித்து விடும் என்ற நம்பிக்கை.  மஸி ரஹ்மான் கூறுவது போல, இந்திய அரசின் மீதும் நீதியின் மீதும் அவர் கொண்டிருந்த முட்டாள்தனமான நம்பிக்கை.

தனது அண்ணன் டைகர் மேமன், அயூப், தாவூத் இப்ராகிம் ஆகியோர்தான் குண்டுவெடிப்பின் குற்றவாளிகள் என்பது யாகூபின் கூற்று. தனது அண்ணன் டைகர் மேமன் ஐ.எஸ்.ஐ-ன் கைக்கருவியாக இருந்து குண்டு வைத்தார் என்ற உண்மை தெரிந்தவுடன், தனது தந்தை, பாக் அதிகாரிகளின் கண் முன்னாலேயே தனது கைத்தடி முறியும் வரை டைகர் மேமனை அடித்தார் என்றும், நிரபராதிகளான தாங்கள் விடுவிக்கப்படுவோம் என்ற நம்பிக்கையினால்தான் அங்கிருந்து இங்கே வந்ததாகவும் கூறியிருக்கிறார் யாகூப் மேமன்.

மேமன் மீது போடப்பட்ட வழக்கு காலாவதியாகிப்போன தடா சட்டத்தின் கீழானது. சித்திரவதை செய்து போலீசு பெறுகின்ற பொய் வாக்குமூலத்தை ஏற்றுக் கொள்ளும் தடா சட்டத்தின் கீழ்தான் யாகூப் தண்டிக்கப்பட்டிருக்கிறார். அதிலும் யாகூபுக்கு எதிராக சாட்சி சொன்னவர்கள் ஆறில் ஐந்து பேர் தங்கள் சாட்சியத்தை மறுத்து விட்டனர். “தனக்கு குண்டு வைக்கும் சதியைப் பற்றி எதுவும் தெரியாது” என்ற யாகூப் மேமனின் கூற்றை பொய்ப்பிக்கும் வகையில் ஒரு நேரடி சாட்சியம்கூட இல்லை என்கிறார்கள் வழக்குரைஞர்கள்.

supreme-court-yakub-memonஇழிபுகழ் பெற்ற இந்தியாவின் “கூட்டு மனச்சாட்சி”க்குக் கொடுக்கப்படும் இன்னொரு ரத்தக்காவுதான் இந்தத் தண்டனை. ஆனால் இதை “நீதி” என்று சொல்கிறது உச்ச நீதிமன்றம். “எய்தவன்” யாகூப் மேமன் என்றும் குண்டு வைத்தவர்கள் வெறும் அம்புகள்தான் என்றும் கூறுகிறது உச்ச நீதிமன்றம். டைகர் மேமனின் தம்பி என்ற ஒரு காரணத்தைத் தவிர எய்தவன் என்று யாகூபை குற்றம் சாட்டுவதற்கு வேறு எந்தச் சாட்சியமும் இல்லை என்பதைப் பல சட்ட வல்லுநர்களும் கூறி விட்டார்கள்.

பாபர் மசூதி இடிப்பு, 1992-93 மும்பை படுகொலைகள் ஆகியவற்றை “எய்தவர்கள்” அமைச்சர் நாற்காலிகளை அலங்கரிக்கிறார்கள். குஜராத் இனப்படுகொலையை “எய்தவர்” பிரதமர் நாற்காலியில் அமர்ந்திருக்கிறார். மும்பை குண்டு வெடிப்புக் குற்றத்துக்கு ரத்தக்காவு கேட்கும் துவிவேதிகளும், சதுர்வேதிகளும், மிஸ்ராக்களும் இதற்குப் பதில் சொல்வதில்லை.

1992-93 மும்பை கலவரத்தில் கொல்லப்பட்ட 900 பேரில் மூன்றில் இரண்டு பங்கினர் முஸ்லிம்கள் என்பது அரசின் கணக்கு. கொள்ளையடித்தவர்கள், பெண்களைக் கடத்தியவர்கள், சூறையாடியவர்கள் என்று கலவரத்தில் ஈடுபட்ட 31 போலீசாரின் பெயர் குறிப்பிட்டுக் குற்றங்களைப் பட்டியலிட்டிருக்கிறது ஸ்ரீகிருஷ்ணா கமிசன். ஆனால் ஒரு போலீஸ்காரனும் ஒரு நாள் கூட சிறை செல்லவில்லை. மாறாக எல்லோரும் பதவி உயர்வு பெற்றிருக்கிறார்கள். ராம் நாயக், கோபிநாத் முண்டே போன்றவர்கள் நேரடியாக வன்முறையைத் தூண்டியதாகவும், பால் தாக்கரே ஒரு தளபதியைப் போல நின்று கலவரத்தை வழிநடத்தியதாகவும் குற்றம் சாட்டியிருக்கிறார் நீதிபதி ஸ்ரீகிருஷ்ணா. தாக்கரே அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டார். மற்றவர்கள் மத்திய அமைச்சர்களானார்கள்.

கலவரத்தின் எதிர்வினைதான் குண்டுவெடிப்பு என்பதை ஸ்ரீகிருஷ்ணா கமிசன் அழுத்தந்திருத்தமாக கூறியிருக்கிறது. கலவரக்காரர்கள் தண்டிக்கப்படவில்லை என்பது மட்டுமல்ல, யாகூப் மேமனுக்குத் தீர்ப்பெழுதும் நாற்காலிகளில் வெவ்வேறு பெயர்களில் பாபு பஜ்ரங்கிகள் அமர்ந்திருக்கிறார்கள் என்தே உண்மை.

சிறையில் இருக்கும் தூக்கு தண்டனைக் கைதிகளில் 94% பேர் முஸ்லிம்கள் மற்றும் தலித்கள் என்கிறது தேசிய சட்டப்பல்கலைக் கழகத்தின் ஆய்வு. முஸ்லிம்களைக் கொன்றதற்காக ஒரு இந்து வெறியனோ, தலித்துகளைக் கொன்றதற்காக ஒரு சாதி வெறியனோ இதுவரை இந்த நாட்டில் தூக்கிலிடப்பட்டதில்லை. 29-ம்தேதியன்று யாகூபின் மனுவை நிராகரித்த உச்சநீதிமன்ற நீதிபதி தவே, தனது முடிவுக்கு வலுச்சேர்க்க, மனு சாத்திரத்திலிருந்து ஒரு சுலோகத்தைச் சொல்லியிருக்கிறார். வழங்கப்படும் நீதியின் தன்மை குறித்து இதற்கு மேலுமா விளக்கம் வேண்டும்?

0000000

ந்தக் கபட நாடகத்தின் கடைசிக் காட்சியில், ராமன் என்ற ஒரு இந்துத்துவ சார்பு உளவுத்துறை அதிகாரியின் மனச்சாட்சி (மனச்சாட்சியின் ஆவி) அரங்கினுள் நுழைகிறது. யாகூப் மேமனை “தூக்குமேடைக்குச் செல்ல விடாமல் தடுப்பது முக்கியம்” என்ற காரணத்தினால்தான் எழுதுவதாக பீடிகை போடுகிறார் ராமன்.

மேமனைக் காப்பாற்ற வேண்டும் என்பதை விட, தான் நல்லவன் என்று தனக்குத் தானே உறுதி செய்து கொள்ள அவர் இதனை எழுத வேண்டியிருக்கிறது. ஆனால் கட்டுரையை எழுதி முடிப்பதற்குள் விழித்துக் கொண்ட அவரது மூளை, “கட்டுரையை வெளியிடாமல் தடுப்பதே முக்கியம்” என்று அவருக்கு உணர்த்துகிறது.

அதனால்தான் 2007 ஆகஸ்டில் எழுதிய இந்தக் கருத்தை ஒரு பிரமாண வாக்குமூலமாக ஒருபோதும் ராமன் தாக்கல் செய்யவில்லை. மார்ச் 21, 2013 அன்று உச்ச நீதி மன்றம் மேமனின் தூக்கை உறுதி செய்து தீர்ப்பளிக்கும் வரை கட்டுரையாகவும் அதனை வெளியிடவில்லை. 02-08-2007 அன்று மேலெழும்பிய அவரது “அறவுணர்ச்சியை” அந்தக் கணமே தூக்கிலேற்றி விட்டார் உளவுத்துறை அதிகாரி ராமன்.

இப்போது ஷீலா பட்டினால் பிரசுரிக்கப்பட்டிருக்கும் ராமனின் கடிதம், யாகூப் மேமனின் தண்டனையை நிறுத்த உதவவில்லை. மாறாக, தகுதியற்ற அந்த மனிதனை மனச்சாட்சியுள்ள மனிதாபிமானியாக காட்டுவதற்கு மட்டுமே பயன்பட்டிருக்கிறது.

ராமனின் கட்டுரையும், பேரறிவாளனின் வாக்குமூலத்தை தணிக்கை செய்து எழுதிய சி.பி.ஐ எஸ்.பி தியாகராசனின் பேட்டியும் ஒரே ரகத்தைச் சேர்ந்தவை.

“சிவராசன் பாட்டரி வாங்கி வரச்சொன்னார்” என்ற வாக்கியத்தை மட்டும் பதிவு செய்து, “எதற்காக என்று தெரியாது” என்ற வாக்கியத்தை எழுதாமல் விட்டதற்கு தியாகராஜன் கூறும் காரணமும், ராமன் தனது கட்டுரையை “வெளியிட வேண்டாம்” என்பதற்கு கூறியிருக்கும் காரணமும் ஒன்றுதான்.

அஜ்மல் கசாப் வழக்கிலும், யாகூப் மேமன் வழக்கிலும் அரசுத் தரப்பு வழக்குரைஞராகப் பணியாற்றிய உஜ்வல் நிகாம் சமீபத்தில் ஒரு உண்மையை வெளியிட்டார். “ஒரு நாள் அஜ்மல் கசாப் கலங்கிய கண்களுடன் நீதிமன்றத்தில் அமர்ந்திருந்தான். இச்செய்தியை ஊடகங்கள் வெளியிட்டதால், கசாபின் மீது அனுதாப அலை உருவாகத் தொடங்கியது. உடனே அஜ்மல் கசாப் சிறையில் மட்டன் பிரியாணி கேட்டதாக ஒரு கட்டுக்கதையை அவிழ்த்து விட்டேன். ஊடகங்களில் அது விவாதப் பொருளாகிவிட்டது. உண்மையில் கசாப் பிரியாணி கேட்கவுமில்லை, நாங்கள் வாங்கித் தரவுமில்லை’’ என்று சொல்லியிருக்கிறார் உஜ்வல் நிகாம்.

தமது குற்றத்துக்கு நியாயம் கற்பிக்கும் தோரணையில் இவர்களிடையே என்ன வேறுபாட்டைக் காண்கிறீர்கள்? இந்த தேசத்தின் “கூட்டு மனச்சாட்சி” இவர்களுடன் ஒன்றுபடும் இடத்தை கவனியுங்கள். அறம் கொன்ற இந்து மனச்சாட்சி குறித்த அம்பேத்காரின் அவதானிப்பை இங்கே நினைவுபடுத்திக் கொள்ளுங்கள்.

மோடியின் மனச்சாட்சி, “குஜராத் படுகொலை அநீதியானது” என்று அவரை உறுத்துவதாகவும், ஜெயலலிதாவின் மனச்சாட்சி, “ஊழல் தவறு” என்று அவரைச் சுடுவதாகவும், தங்கள் குற்றவுணர்வை மறைத்துக் கொண்டுதான் அவர்கள் பதவியில் அமர்ந்திருப்பதாகவும் நீங்கள் நம்பும் பட்சத்தில், உங்களுக்கும் ராமனை நம்பிய யாகூப் மேமனுக்கும் அதிகம் வேறுபாடில்லை.

யாகூப் மேமன் தூக்கிலிடப்பட்டுவிட்டார் என்பதைத் தவிர.
____________________
–    மருதையன்

____________________

ஜப்பான் புகழ் தோசிபா நிறுவனத்தின் மோசடிகள்

1
தோஷிபா முதலாளித்துவ கலாச்சாரம்
முதலாளித்துவக் கலாச்சாரம் எப்படிப்பட்டது?

2008-ல் முதலாளித்துவ சூதாட்டத்தால் விளைந்த உலகப்பெருமந்தத்தில் சந்தைகளும், சிறுமுதலீட்டாளர்களும், பலநாட்டின் அரசுகளும், லேமன் பிரதர்ஸ் போன்ற நிதி நிறுவனங்களும் கவிழ்ந்த பொழுது ஜப்பானைச் சேர்ந்த தோசிபா நிறுவனம் மட்டும் வாடாமல்லியாக காட்சிளித்தது!

காரணம் என்ன? தோசிபா கம்பெனியின் இலாபம் அபரிதமாக ஊதிப்பெருக்கியும் (Inflated Profit), கம்பெனியின் நட்டக்கணக்கு இத்துணை ஆண்டுகளாக போலியாகவும் காட்டப்பட்டு வந்துள்ளது.

மிகச் சமீபத்தில் தோசிபாவில் நடைபெற்ற விசாரணைக் கமிட்டி, கிட்டத்தட்ட 120 கோடி அமெரிக்க டாலர் (சுமார் ரூ 7,200 கோடி)  அளவிற்கு இலாபக் கணக்கு மோசடியாக உயர்த்தப்பட்டுள்ளதைக் கண்டறிந்துள்ளது.

தோசிபாவின் 140 வருட வரலாற்றில் கறைபடிந்துவிட்டதாக முதலாளித்துவ கண்ணியவான்கள் கதறுகிறார்கள்!

சப்பானின் நிதியமைச்சர் டாரோ அசோ, “தோசிபாவின் ஊழல் மிகவும் துரதிர்ஷ்டவசமானது” என பேட்டியளிக்கிறார்.

தோஷிபா ஊழல்
“முதலீட்டாளர்களின் நம்பிக்கையைக் காப்பாற்ற வேண்டுமானால் “கார்ப்பரேட் கவர்னன்ஸ்” தீவிரமாக செயல்படுத்தப்பட வேண்டும்”

முதலீட்டாளர்களின் நம்பிக்கையைக் காப்பாற்ற வேண்டுமானால் “கார்ப்பரேட் கவர்னன்ஸ்” தீவிரமாக செயல்படுத்தப்பட வேண்டுமென முதலாளித்துவ வெஞ்சுருட்டிகள் வெஞ்சினம் கொள்கிறார்கள்!

பங்குச் சந்தையில் தோசிபா போன்ற ஏகபோக முதலாளி, ஏன் இலாபத்தைக் கூட்டிக் காட்ட வேண்டும்? இந்தியாவில் சத்யம் ராஜூ இதே வேலையைத்தான் செய்தார் என்பதை நினைவில் கொள்க.

சத்யம் ராஜூ
பங்குச் சந்தையில் தோசிபா போன்ற ஏகபோக முதலாளி, ஏன் இலாபத்தைக் கூட்டிக் காட்ட வேண்டும்?

பங்குச் சந்தை என்பது முழுக்கவும் சூதாட்டம் தான். முதலாளிகள் ஒருதரப்பினர் இன்னொருவரிடமிருந்து மூலதனத்தை கொள்ளையிடுவதற்கான களம்தான். அதே போன்று பங்குகளை வாங்கி பணக்காரர்களாக மாறலாம் என்று நடுத்தர வர்க்கத்தை கொள்ளையிடும் இடமும் கூட.

உலகப்பெருமந்தத்தால் பங்குச் சந்தை வீழ்ச்சியடைந்த உலகவரலாற்றின் எந்தக் காலத்திலும் உலகப் பெருமுதலாளிகளின் மூலதனத்திற்கு எந்தபங்கமும் வந்ததில்லை. பொருளியலாளர் தாமஸ் பிக்கெட்டி, கடந்த 200 வருட வரலாற்றில் பணக்காரர்கள் மிகப்பெரும் பணக்காரர்களாகவும் ஏழைகள் மேலும் பஞ்சப்பராரிகளாகவும் இருக்கும்படி ஏற்றத்தாழ்வு பெருகிவருவதை அம்பலப்படுத்தியிருக்கிறார். 140 வருட வரலாற்றுப் பின்னணி கொண்ட தோசிபா மட்டும் தனது மூலதனத்தை எளிதில் விட்டுக் கொடுக்குமா என்ன?

இருக்கும் வாய்ப்புகளே இரண்டு இரண்டு தான். ஒன்று கூலியைக் குறைத்து தொழிலாளிகளை கசக்கிப் பிழிவது; இரண்டு- இலாபத்தை கைப்பற்றுவதில் பிற முதலாளிகளுடன் போட்டியிடுவது. இரண்டு பிரிவிலும் பல வாய்ப்புகளை முதலாளித்துவம் மேற்கொண்டுவருகிறது.

இலாபத்தை ஊதிப்பெருக்கிக் காட்டுகிற இந்த முதலாளித்துவ வித்தை பொருளியல் வரையறைப்படி முதலாளித்துவ கருப்புச்சந்தையின் ஒரு வகைதான். ஆங்கிலத்தில் இதை Unreported economy எனவும் unrecorded economy எனவும் பிரிக்கிறார்கள்.

டாடா குழுமத்தின் கோர முகம்
டாடா போன்றவர்கள் கஞ்சா விற்றுத்தான் பெரிய முதலாளிகளாக வந்தார்கள்

அறிவிக்கப்படாத பொருளாதாரம் அல்லது பதிவுசெய்யப்படாத பொருளாதாரம் என்பதற்கு நூலிழை வேறுபாடுதான் உண்டு. சான்றாக விபச்சாரம், ஆயுத பேரம் போன்றவற்றால் கிடைக்கும் பொருளாதாரத்தை அறிவிக்கப்படாத பொருளாதாரம் என அழைப்பர். சான்றாக டாடா, அம்பானி போன்றவர்கள் கஞ்சா விற்றுத்தான் பெரிய முதலாளிகளாக வந்தார்கள். உலகின் மிகப்பெரும் வங்கிகளுள் ஒன்றான HSBC (Hongkong shanghai banking corporation) யும் கஞ்சா விற்று மூலதனம் சேர்த்த வங்கி தான். இத்தகைய பண்டங்கள் வாங்கி விற்பது சட்டப்படி தடை செய்யப்பட்டுள்ளது.

பதிவு செய்யப்படாத பொருளாதாரத்தைப் பொறுத்தவரை, வாங்கி விற்கும் பண்டம் சட்டப்படி அனுமதிக்கப்பட்ட ஒன்று. ஆனால் உற்பத்திச் செலவுகளில், இலாபங்களில், கூலியில் கணக்கு மோசடி செய்வதன் மூலம் பெரும் கொள்ளையடிக்க முடியும்.

சான்றாக, முட்டைதிருடி வளர்மதி-ஜெயலலிதா கும்பல் நாளொன்றுக்கு 69 இலட்சம் ரூபாய் சத்துணவு முட்டையில் மட்டும் ஒதுக்குகிறார்கள். எப்படி? மொத்த முட்டை கொள்முதலை ஒரு தனியார் கம்பெனியிடம் கொடுத்துவிட்டு முட்டையின் விலையை நான்கு ரூபாய் என்று குறிப்பிட்டுவிட்டு கம்பெனிக்கு மூன்று ரூபாய் தமக்கு ஒரு ரூபாய் என்று பிரித்துக்கொள்வது.

அதானியின் சூரியமின்சாரக் கொள்ளையிலும் அ.தி.மு.க அரசு யூனிட் ஒன்றை 7 ரூபாய் என நிர்ணயித்து 25 வருட ஒப்பந்தத்தை உருவாக்கியிருக்கிறது. ஆனால் மத்திய பிரதேசத்தில் அதானி குழுமம் ஆறு ரூபாய்க்குத்தான் விற்கிறது. இதன்படி தமிழக அரசுக்கு 25,000 கோடி ரூபாய் அரசுக்கு நட்டம் ஏற்படும். அது எங்கே போகும்? அம்மா ஒரு ரூபாய் சம்பளம் வாங்குவதாக அறிவித்திருக்கிறார், ஒருவேளை இது அதுவாக இருக்குமோ?

அதானி - மோடி
சூரியமின்சாரக் கொள்ளையிலும் அ.தி.மு.க அரசு அதானி குழுமத்துடன் யூனிட் ஒன்றை 7 ரூபாய் என நிர்ணயித்து 25 வருட ஒப்பந்தத்தை உருவாக்கியிருக்கிறது. (அதானி, மோடியுடன்)

மீண்டும் தோசிபாவிற்கு திரும்புவோம். பணவாட்டம் அதிகம் உள்ள காலங்களில் அதாவது மக்களிடம் பணம் புழங்காமல் நசிந்துபோயிருக்கும் பொழுது சந்தைகள் தோற்றுப்போயிருக்கும் பொழுது தோசிபாவின் குறியீட்டு எண் மட்டும் எல்யிடி டிஸ்பிளேயில் 2008-லிருந்து தற்பொழுது இந்த மோசடி கண்டுபிடிக்கப்பட்டது வரைக்கும் எகிறிக் கொண்டிருந்தது!

தோசிபா போன்ற திறமையான பெருநிறுவனங்கள் இப்படி மோசடி செய்வதன் மூலம் பி முதலாளிகளின் நிலைமை என்னவாக இருந்திருக்கும் என்று யோசிக்கமுடிகிறதா? அதாவது நியாயமாக பொருள் சம்பாதித்து முதலாளியாகி வெற்றி பெற வேண்டும் என நினைக்கிற முனைவர்களைக் கொல்வது வேறுயாரும் அல்ல முதலாளித்துவம் தான்.

தோசிபாவில் சோதனை மேற்கொண்ட விசாரணைக் கமிட்டியின்படியே தைவானின் உதிரி கம்ப்யூட்டர் பாகம் வாங்கும் சிறு முதலீட்டாளர்களுக்கு வழக்கத்திற்கு மாறாக அதிக விலையில் பொருட்களை விற்றிருக்கின்றது தோசிபா நிர்வாகம்.

“முதலாளித்துவம் பல முதலாளிகளைக் கொல்கிறது” என்று மார்க்சிய ஆசான்கள் கூறுவதற்கு மற்றுமொரு இரத்த சாட்சியாக நிற்கிறது கால்குலேட்டரிலிருந்து கம்ப்யுட்டர் ஈறாக அணு உலை வரை விற்பனை செய்யும் பன்னாட்டு கம்பெனி தோசிபா.

செயற்கையாக ஊதிப்பெருக்கிக் காட்டிய இலாபத்தை எப்படி சரிக்கட்டுவது? அதையும் தோசிபா இயக்குநர்களே சொல்லியிருக்கிறார்கள்.

தோஷிபா லாபப் பெருக்கம்
செயற்கையாக ஊதிப்பெருக்கிக் காட்டிய இலாபத்தை எப்படி சரிக்கட்டுவது? அதையும் தோசிபா இயக்குநர்களே சொல்லியிருக்கிறார்கள்.

அடுத்த செயல்பாட்டு காலத்தில் சாத்தியமேயில்லாத உற்பத்தி இலக்குகளை தொழிலாளிகளுக்கு நிர்ணயிப்பது, சம்பளத்தைக் குறைப்பது, வேலை நேரத்தை அதிகரிப்பது. இதன் மூலமாக மோசடி லாபத்தை நடைமுறையில் ஈட்டி விட முடியும் என்று நினைத்த முதலாளிகள் முதலாளித்துவத்தின் துலக்கமான முரண்பாட்டு நெருக்கடியில் கொண்டுவந்துவிட்டிருக்கிறார்கள்.

அதாவது தோசிபாவின் இந்த ஊழல் விவகாரம் தன்னை எப்படி பாதிக்கும் என்று கருதுபவர்கள் எங்கோ முகம் தெரியாத ஒரு தொழிலாளி முதலாளித்துவ ஊழலை வெள்ளையாக மாற்றுவதற்காக தன் நிணத்தை பிய்த்துப்போட்டிருக்கிறார் என்பதை எண்ணிப்பார்க்க வேண்டும்.

தோசிபா போன்ற பன்னாட்டு கம்பெனிகள் தாங்கள் அடைய வேண்டிய ஊதிப்பெருக்கப்பட்ட இலாபங்களுக்காக

  • ஹிசாவ் தனாகா
    வேலையிழப்பால் உள்நாட்டில் தொழிலாளிகள் செத்தால் சப்பானியர்கள் ரோசம் மிக்கவர்கள் என்று புகழ்பாடுகின்றனர் முதலாளித்துவ கூஜாக்கள். (தோஷிபாவின் ஹிசோ தனாகா)

    இந்தியா போன்ற நாடுகளில் மோடி போன்ற கைக்கூலிகளை வைத்துக்கொண்டு தொழிலாளர் நலச்சட்டங்களையே திருத்துகின்றன.

  • குறைந்த கூலிக்கு ஆட்கள் கிடைக்கும் நாடுகளை நோக்கி இரத்த வெறியுடன் படையெடுக்கின்றன.
  • வேலையிழப்பால் உள்நாட்டில் தொழிலாளிகள் செத்தால் சப்பானியர்கள் ரோசம் மிக்கவர்கள் என்று புகழ்பாடுகின்றனர் முதலாளித்துவ கூஜாக்கள்.
  • நாடுகளின் அரசுகள் வழங்கும் மானியங்கள் இவர்களின் அட்டூழியங்களை சரிகட்டுவதற்காக வெட்டப்பட்டிருக்கின்றன.
  • வேலை நேர அதிகரிப்பால் எத்தனையோ நாட்டு தொழிலாளிகள் பைத்தியங்களாக அலைகின்றனர்.
  • சிறுநாடுகளின் பணமதிப்பு பீதுடைத்த காகிதமாக சரிந்து நிற்கிறது.
  • முதலாளித்துவத்தின் முரண்பாடு ஏகாதிபத்தியமாக நாடுபிடிக்கும் நாய்ச்சண்டையாக வந்து நிற்கிறது.

தோசிபாவின் தனித்த எடுத்துக்காட்டு மெய்ப்பிக்கும் களநிலைமைகள் இதுதான்.

இதைச் சொன்னால் முதலாளிகள் செய்த தவறுக்கு முதலாளித்துவமா காரணம் என்று சிலர் வழக்கமாக கேட்பார்கள்.  சோசலிசத்தில் ஒரு கம்பெனியின் மேலாளர் இதே போன்று உற்பத்தியை ஊதிப் பெருக்கிக்காட்டுகிறார் என்று வைப்போம். அப்பொழுது சோசலிசம் தவறு என்று சொல்லலாமா? இதுவும் ஒரு கேள்வி.

தோஷிபா தவறு
இன்றைக்கு தோசிபா நிறுவனத்தைப் பொறுத்தவரை அதன் விசாரணைக்கமிட்டியே ஊழலைக் கண்டுபிடித்து இருக்கிறது.

இப்படிக்கேள்வி கேட்பவர்கள் அடிப்படையில் ஒரு கோட்பாட்டுடனே நம்மை அணுகுகிறார்கள். இந்தக் கோஷ்டியின் கோட்பாட்டின்படி “ஆசை என்பது மனிதனின் இயல்பு. ஆசைகள் இருக்கிற இடத்தில் இதுபோன்று தவறுகள் நடக்கும். பொதுவுடமைச் சமூகம் தனிமனித ஆசைகளைக் கட்டுப்படுத்துகிறது. ஆகையால் அத்தகைய சமூகமே நீடிக்காது” என்று கம்யூனிஸ்டுகளை புத்தம் சரணம் கச்சாமி என்று புத்தர்களாக காட்டுகிறார்கள். மறுபக்கம், “இப்படி தவறுகள் நடப்பது இயல்பு” என்கிறார்கள்.

நாம் அவர்கள் பார்வையின் படியே சற்று அணுகுவோம். ஒரு கம்பெனியில் ஆசையின் பொருட்டு மனிதன் ஊழல் செய்கிறான் என்று வைப்போம். இதைத் தீர்ப்பதற்கு அல்லது தவறுகளை களைவதற்கு கம்யுனிசமோ கம்யுனிஸ்டுகளோ தேவையில்லை. இன்றைக்கு தோசிபா நிறுவனத்தைப் பொறுத்தவரை அதன் விசாரணைக்கமிட்டியே ஊழலைக் கண்டுபிடித்து இருக்கிறது என்று வைப்போம். சோசலிச நடைமுறை சுட்டிக்காட்டுவது இதைத்தான். தங்களுக்குள் ஏற்படும் தவறுகளை, ஆசை உணர்வுகளை மனிதர்கள் தங்கள் குழுக்களுக்குள்ளாகவே தீர்த்துக்கொள்ள இயலும்.

ஆனால், மனித உணர்வுக்கு அப்பால், குழு செயல்பாட்டுக்கு வெளியே தன்னிச்சையாக செயல்படும் மூலதனம் தோற்றுவிக்கும் முரண்பாட்டிற்கு எது தீர்வு? இது தான் கம்யுனிஸ்டுகள் முதன்மையாகக் கேட்கிற கேள்வி!

இதற்கு விடையளிக்க வேண்டிய முதலாளித்துவ சட்டமும் அரசும் தோசிபாவின் விசயத்தில்  என்ன செய்து கொண்டிருக்கின்றன?

அரசு என்பது யாருக்கானது?

கார்ப்பரேட் கவர்னன்ஸ் வேண்டும் என்று கேட்கிற வர்க்கங்களின் பிரதான நலன்கள் என்ன? இதுபற்றி மறந்தும் மூச்சுக்கூட விடமாட்டார்கள் முதலாளிகளும் அவர்தம் அடிப்பொடிகளும்.

ஏனெனில் ஓர் உற்பத்தி சமூகமயமாகிருக்கிறபொழுது, இலாபத்தை அடிப்படையாகக் கொண்ட முதலாளித்துவ முறையில் இலாபம் கிடைக்க வேண்டுமானால் சுரண்டுபவன் ஒருவனாக சுரண்டப்படுபவன் ஒருவனாக இருப்பதை உறுதிப்படுத்த வேண்டும்.

தொழிலாளர்கள்
குறைந்த கூலியைப் பெறும் தொழிலாளிகள் இருக்க வேண்டும்.

அதாவது தோசிபாவின் இலாபவெறியை நிறைவு செய்ய,

  • குறைந்த கூலியைப் பெறும் தொழிலாளிகள் இருக்க வேண்டும்.
  • கைப்பாவை அரசு இருக்க வேண்டும்.
  • கைக்கூலி மோடி இருக்க வேண்டும்! மானியங்கள் வெட்டப்பட வேண்டும்.
  • அரசும் சட்டமும் நீதி எந்திரங்களும் வளைக்கப்படவேண்டும்.

ஆக இங்கு தெளிவாக நிரூபணமாகியிருப்பது விசாரணைக் கமிசன்களின் தேவையல்ல. அது எந்த உற்பத்தி சமூகத்திலும் செயல்பட முடியும்.

ஆனால் தொழிலாளிகளுக்கென்று சட்டமும் அரசும் அதிகாரமும் இல்லையென்றால் நடப்பது என்ன என்பதுதான் கேள்வி? அல்லது ஆசைக் கோட்பாட்டை சற்று மாற்றிப்போடுவோம். தொழிலாளிகள் தங்களது ஆசையை நிறைவேற்றிக்கொள்ள தடுப்பது எது? ஏன் இங்கு மட்டும் முதலாளிகள் தொழிலாளிகளின் அதிகாரத்தைக் கண்டு பயப்படவேண்டும்?

இங்கே தான் அரசு என்பதன் தார்மீக நிலைப்பாட்டை புரிந்துகொண்டு நாம் முதலாளித்துவத்தை அம்பலப்படுத்துகிறோம்.

கைக்கூலி மோடி
கைக்கூலி மோடி இருக்க வேண்டும்! மானியங்கள் வெட்டப்பட வேண்டும்.

ஒவ்வொரு நாட்டிலும் மூன்று பிரதான வர்க்கங்கள் இருக்கின்றன. பெரும்பான்மையாக தொழிலாளிகள், விவசாயிகள் மற்றும் சுயதொழில் செய்வோர் முதல் வகை. இவர்தம் நலன்களைப் பிரதிநிதித்துவப்படுத்துவதற்கு இங்கு அரசோ, நீதிமன்றமோ, காவல்துறையோ பத்திரிகைகளோ கிடையாது. பாட்டாளி வர்க்கம் தன்னை விடுவித்துக்கொள்ள தம்மைத் தாமே அமைப்பாக்கிக் கொண்டு போராடுவதைத் தவிர வேறு யாரையும் நம்பியிருக்க முடியாது.

இரண்டாவது வகையில் வருபவர்கள் நடுத்தரவர்க்கம். அறிவுத்துறையினர், நடுத்தர அரசு அலுவலர்கள், நடுத்தர வணிகர்கள், பெருமளவில் நிலம் வைத்திருக்கும் விவசாயம் செய்யும் விவசாயிகள். இவர்கள் ஒன்று இரங்கத்தக்க சீர்திருத்தங்களுக்கான கோரிக்கைகளை முன்வைப்பது; அல்லது சமூகத்தில் இழிநிலையில் தான் மட்டும் தப்பித்தால் போதுமானது என்று வாழ்பவர்கள்.

தண்ணீர் தனியார்மயமும் விவசாயிகளின் தற்கொலையும் இவர்களை ஒருபோதும் அசைத்ததில்லை. பங்குச்சந்தையில் முதலீடு, வாழ்நாள் முழுவதும் வீட்டு லோன், கார் லோன் கட்டுவது என்று சமூகத்திலிருந்து தம்மை துண்டித்துக் கொண்டு உதிரிகளாக இருப்பவர்கள்.

மூன்றாவதாக வருபவர்கள்; பன்னாட்டு நிறுவனங்கள், தரகு முதலாளிகள், அரசின் அங்கங்கள், இராணுவம், காவல் துறை, பன்னாட்டு நிதி முனையங்கள், ஏகாதிபத்திய அரசுகள்.

இதில் தோசிபாவின் விசயத்தில் தீர்மானம் செய்பவர் யார்? கார்ப்பரேட் கவர்னென்ஸ் வேண்டுமென்று கேட்டவர் யார்? சப்பானின் நிதியமைச்சர் முதலீட்டாளர்களுக்கு சாதகமான நிலைமை உருவாக்கப்படும் என்று சொன்னது யாருடைய நலன்களுக்காக? தொழிலாளிகள் விசயத்தை இதில் யார் பிரதிநிதித்துவப்படுத்தியது? பத்திரிகைகள் எங்கே போயின? நீதிமன்றங்கள் எங்கே?

இந்தக் கேள்விகளுக்கான விடைகளை எந்தப் பாசாங்கும் இன்றி நம்மால் எளிதில் கண்டுபிடிக்க முடியும். மூலதனத்தின் முரண்பாட்டை தீர்க்க வேண்டுமென்றால், நாம் மேலடுக்கை அப்புறப்படுத்த வேண்டும். முதலாளிகளுக்கு முட்டுக்கொடுக்கும் நான்கு தூண்களும் நமக்கானதல்ல. இதுதான் தோசிபாவின் விசயத்தில் நாம் அடையாளம் காண்கிற விசயங்கள்.

இப்பொழுது முடிவுரைக்கு வருவோம். முதலாளித்துவமா? சோசலிசமா? என்பது பட்டிமன்ற தலைப்பல்ல. ஏனெனில் முதலாளித்துவம் அனைவருக்குமானதல்ல என்பதை தோசிபாவின் கணக்கு காட்டுகிறது.

மீதி நாம் செய்ய வேண்டியது, மார்க்சின் போதனையின் படி சொல்வதென்றால் : உடமை பறித்தவனை உடமை நீக்கம் செய்வது!

– இளங்கோ

குறிப்புகள் எடுக்கப் பயன்பட்டவை

  1. Toshiba CEO quits over accounting scandal
  2. Toshiba scandal grew from numbers ‘too embarrassing’ to show
  3. Comparing and Contrasting the Class Struggle in Latin America: 2000-2015 James Petras