Tuesday, May 6, 2025
முகப்பு பதிவு பக்கம் 739

சிதம்பரம் – இலவச கல்வி உரிமை மாநாடு: உரைகள், படங்கள்!

11

கடந்த 3-6-12 அன்று சிதம்பரத்தில் அனைவருக்கும் தரமான இலவச கல்வியை அரசே வழங்க போராடுவோம் என்ற முழக்கத்தின் கீழ் பேரணி மாநாடு நடத்தப்பட்டது. மாணவர்களின் கல்வி உரிமைக்கான பெற்றோர் சங்கமும், மனித உரிமைப் பாதுகாப்பு மையமும் இணைந்து நடத்திய இம்மாநாட்டில் பெற்றோர்கள் பெருந்திரளாகக் கலந்து கொண்ட நிகழ்வானது சிதம்பரம் நகர மக்களிடையே நம்பிக்கையையும், வரவேற்பையும் பெற்றுள்ளது.

மாலை 4-30 மணியளவில் புறப்பட்ட பேரணி ம.க.இ.க.வின் பறை இசை முழங்க எழுச்சிகரமாகப் புறப்பட்டது. பேரணியை மாவட்டத் தலைவர் வை.வெங்கடேசன் துவக்கி வைத்துப் பேசினார். வழி நெடுகிலும் பெற்றோர்கள் சேர்ந்து கொண்டனர். முன்வரிசையில் மாணவர்கள் ஆரவாரத்துடன் முழக்கமிட்டுச் சென்றது உயிரோட்டமாக இருந்தது . இலவசக் கல்வியை வென்றெடுக்க முடியும் என்ற நம்பிக்கையையும் பொது மக்களிடத்தில் ஏற்படுத்தியது.

மாநாட்டின் முதல் நிகழ்ச்சியாக கல்வி விற்பனைச் சரக்காகிப் போனது என்பதை விளக்குமுகமாக சரக்கு என்ற தலைப்பில் நாடகம் நடத்தப்பட்டது. சிறுவர்கள் பங்கேற்ற இந்த நாடகம் பொதுமக்களை வெகுவாகக் கவர்ந்தது. சாகும் தருவாயிலும் கலிலியோ உலகம் உருண்டை என்பதிலிருந்து பின்வாங்காமல் இருந்த நேர்மையையும், தற்போது கூடங்குளத்தில் அப்துல் கலாமின் கயமைத்தனத்தையும் அம்பலப்படுத்தியது இந்த நாடகம். தனியார்மயத்தை முறியடிக்கும் போராட்டத்தின் மூலமே தற்போதைய அரசை தரமான இலவசக் கல்வியை வழங்கச் செய்ய முடியும். என்பதை கலை நிகழ்ச்சி மூலம் விளக்கினர்.

கடலுர் மாவட்டத்தில் +2 தேர்வில் 85 சதவீதம் தேர்ச்சி பெற்று முதலிடம்  பெற்றதற்காக மாநாட்டில் சிதம்பரம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் கே. ராஜன் கௌரவிக்கப்பட்டார்.  அது போல சிதம்பரம் நகராட்சி நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியை பால சரஸ்வதி அவர்களும் தனியார் பள்ளிகளை விடத் தரமான கல்வியை வழங்கி வருவதற்காக கௌரவிக்கப்பட்டார்.

வரவேற்புரை ஆற்றிய மாணவர்களின் கல்வி உரிமைக்கான பெற்றோர் சங்க சிதம்பரம் நகரத் தலைவர் ராமகிருஷ்ணன் சிதம்பரம் காமராஜ் பள்ளியில் நடந்த போராட்டத்தைப் பற்றியும், தற்போது மனித உரிமைப் பாதுகாப்பு மையம் வழிகாட்டுதலால் அது சரியான திசையில் சென்று கொண்டிருப்பதையும் எடுத்துக் கூறினார்.

தலைமை ஏற்றுப் பேசிய நகரச் செயலாளர் கலையரசன், குறுகிய காலத்தில் முடிவு செய்து, நடத்தப்படும் இம்மாநாட்டிற்கு பெருந்திரளாக மக்கள் வந்திருப்பதைப் பார்க்கும் போது மக்கள் ஆதரவு பெருமளவில் இருப்ப தனியார்தாகவும், பள்ளி முதலாளிகளின் கட்டணக் கொடுமைக்கு எதிராக பெற்றோர் சங்கம் விடாது போராடியதற்கு அங்கீகாரமாகவும் பார்க்கிறோம். எந்த ஒரு பெற்றோரும் பாதிக்கப்பட விட மாட்டோம். கடலூர் தனியார் பள்ளியில் 5 வது படிக்கும் தன் மகனை 5 மணி நேரம் பெஞ்சில் நிற்க வைத்ததற்காக அவனது தந்தையான ஓய்வு பெற்ற ராணுவ வீரர் துப்பாக்கியால் சுடப் போகிறேன் என எங்களுக்கு தொலைபேசியில் தெரிவித்தார். சங்கத்தில் இணையுங்கள் நாங்கள் பார்த்து கொள்கிறோம் என அறிவுறுத்தினோம். சட்டப்படி போகவே  நாங்கள் விரும்புகிறோம் என்றார். முன்னதாக தனியார்மயக் கல்வியால் உயிரிழந்த கோவை சங்கீதா, சென்னை குருராஜன் உள்ளிட்ட அனைவருக்கும் 2 நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தபட்டு, மாநாடு துவக்கப்பட்டது.

மாநாட்டு துவக்க உரை ஆற்றிய மூத்த கல்வியாளர் ச.சீ.இராஜகோபாலன் “பெற்றோர்கள் இல்லையெனில் எந்தப் பள்ளியும் இல்லை. பெற்றோர்கள் தான் பள்ளியின் ஆணி வேர். வலிமை மிக்கவர்கள், தனியார் பள்ளிகளின் கட்டிடம் பெற்றோர்கள் பணத்தில்தான் உருவாக்கப்படுகிறது. ஆனால் அங்கு எடுக்கும் முடிவுகளில் உங்களுக்கு எந்தப் பங்கும் இல்லை. கூனிக் குறுகி அச்சமடைகிறீர்கள். அவ்வாறு அச்சப்படத் தேவையில்லை. வெளிநாடுகளில் பெற்றோர்களுக்கு மிகுந்த மரியாதை கொடுக்கின்றனர். சோவியத்தில் குழந்தைகளைப் பள்ளியில் சேர்க்க பெற்றோர்கள் வர மாட்டார்கள். முன்னரே பள்ளியில் படிக்கும்  குழந்தைகள் மேள தாளத்துடன் புதிய குழந்தைகளை அழைத்து வருவர். அந்தக் குழந்தைகளும் மகிழ்ச்சியாகப் பள்ளிக்கு வருவார்கள். நாம் என்ன செய்கிறோம் என்றால் பிள்ளைகள் பள்ளிக்கு செல்லவில்லையென்றால் நாலு போடு போடுகிறாம். அங்குள்ளது போல நடக்க வேண்டும் என்றால் எல்லாப் பள்ளிகளும் மக்கள் பள்ளிகளாக, நமது பள்ளிகளாக இருக்க வேண்டும் எனக் குறிப்பிட்டார்.

தனியார் பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு சுயேச்சையாக ஒரு பிரச்சினைக்கு தீர்வு காணத் தெரியாது. புத்தகத்தை மனப்பாடம் செய்து ஒப்பிக்க மட்டுமே தெரியும். கூட்டாகச் சேர்ந்து படிக்கவோ, நூலகத்தில் தகவல் சேகரித்து படிக்கவோ இயலாமால் தேர்வில் தோற்று விடுகின்றனர். பல்கலைக்கழக அளவில் முதல் 20 இடங்களில் கூட வருவதில்லை. தேவ்பாய் அரசு பள்ளியில் 9000 பெண்கள் படிக்கிறார்கள். அவர்கள் எல்லாத் துறைகளிலும் இந்திய துணைக்கண்டத்திலே மிகச் சிறந்து விளங்குகின்றனர். நாட்டில் தற்பொழுது நிலவும் அனைத்துப் பிரச்சினைகளுக்கும் தனியார்மய, தாராளமயக் கொள்கைகள்தான் காரணம் எனக் குறிப்பிட்டார். 1992 -இல் நரசிம்மராவ் காட் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட பிறகு நமது நாட்டின் கல்விக் கொள்கையை உலக வங்கி, உலக வர்த்தகக் கழகம்தான் நிர்ணியிக்கிறது என்றார்.

காமராஜ் காலத்தில் கல்விக்கு 35 சதவீதம் நிதி ஒதுக்கப்பட்டது. தற்பொழுது 14 சதவீதம் மட்டுமே நிதி ஒதுக்கப்படுகிறது. 2 லட்சம் ஆசிரியர் பணியிடங்கள் குறைக்கப்பட்டுள்ளது. 1100 அரசு உயர்நிலைப் பள்ளிகளில் தலைமை ஆசிரியர்கள் நியமிக்கப்படவில்லை.மக்கள் ரேசனுக்காகவும், குடிதண்ணீருக்காகவும் தெருவில் இறங்கிப் போராடுவது போல கல்விக்காகவும் போராட வேண்டும். அரசுப்பள்ளி சரியாக இயங்குகிறதா என மக்கள் கண்காணிக்க வேண்டும். இலவசங்கள் வேண்டாம், தரமான இலவசக் கல்வி வேண்டும். சிறந்த மருத்துவத்தை பெற மக்கள் போராட வேண்டும். போராடுவது உங்கள் கடமை எனப் பேசினார்.

அஞ்சலகம், ரயில்வே போன்ற மத்திய அரசு நிறுவனங்கள் திட்டமிட்டே நசுக்கப்படுகின்றன. 50 பைசாவுக்கு இந்தியா முழுமைக்கும் தகவல் தர முடியும். விளம்பரம் போட்ட அட்டையாக இருந்தால் 25 பைசாதான். கூரியருக்கு இன்று எவ்வளவு ஆகிறது. நம்மில் எத்தனை பேர் பி.எஸ்.என்.எல் வைத்திருக்கிறோம். தனியார் பேருந்துக்கு ரயில்வேயை விட மூன்று மடங்கு கட்டணம் வசூலிக்கப்படுகிறது. தபால் அலுவலகத்தில் ஆள் பற்றாக்குறையை நிரப்பாமல் கூடுதலாக பல பணிகளைக் கொடுத்து வேலைப்பளுவை அதிகரிக்கிறார்கள். 60 பைசாவுக்கு அரசுத்துறையில் IDPl மூலம் பென்சிலின் மருந்து தயாரித்துத் தந்த மத்திய அரசு நிறுவனம் இழுத்து மூடப்பட்டுள்ளது. இதே போல் அரசுப் பள்ளிகளும் திட்டமிட்டே மூடப்படுகின்றன. அரசுப் பள்ளிகள் மட்டுமே உள்ள டென்மார்க், நார்வே போன்ற நாடுகள் தன்னிறைவு பெற்ற நாடுகளாக விளங்குகின்றன.

தனியார் பள்ளிகளுக்கு அங்கீகாரம் வழங்குவதில் அதிக அளவு லஞ்ச, ஊழல் நடைபெறுவதால்  பள்ளி முதலாளிகள் அரசு அதிகாரிகளை மதிப்பதில்லை, ஏன் அரசாங்கத்தை மதிப்பதில்லை. எனவே மக்கள் புரட்சி செய்தால் தான் கல்வியில் மாற்றம் ஏற்படும். தனியார் பள்ளி ஆசிரியர்கள் பெற்றோர்களுடன் இணைந்து போராடினால்தான் தங்கள் உரிமைகளைக் கூடப் பெறலாம் எனக் கூறினார். ராணுவத்துக்கு ஒதுக்கும் நிதியில் அதிகம் ஊழல் நடைபெற ஏதுவாக இருப்பதால் அதற்கு அதிக நிதி ஒதுக்குகிறார்கள். கல்விக்கு ஒதுக்கப்படும் நிதியில் கமிசன் கிடைக்காது என்பதால் குறைந்த நிதி ஒதுக்குகிறார்கள். இது போன்ற மக்கள் போராட்டங்களே இலவசக் கல்வி உரிமையை நிலைநாட்டும். அடுத்த ஆண்டும் வெற்றி பெற்ற பிறகு என்னைப் பேசக் கூப்பிடுவீர்கள் என நம்புகிறேன் என்றார் ராஜகோபாலன்.

தனியார் பள்ளிகளில் 25 சதவீத ஒதுக்கீடு என்பது கட்டாய இலவசக் கல்வியை மறுக்கும் சூழ்ச்சியே என்ற தலைப்பில் பேராசிரியர் கருணானந்தன் பேசும் போது 1947-இல் நாம் பெற்ற சுதந்திரம் 47 ஆண்டுகள் கூட நிலைக்க வில்லை.1994 காட் ஒப்பந்தத்திற்குப் பிறகு நாம் பெற்ற சுதந்திரம் பயனற்றதாகி விட்டது. கல்வி விற்பனைச் சரக்காக மாறி விட்டது. வளரும் நாடுகள் மீது வளர்ந்த நாடுகள் கல்வித் துறையில் தங்கள் ஆதிக்கத்தைச் செலுத்த துடிக்கின்றன. ஆட்சி அதிகாரங்கள் கார்ப்பரேட்டுகளிடம் இருக்கின்றன. இதனை நாம் புரிந்து கொள்ள வேண்டும். மக்களின் கவனத்தைத் திசைதிருப்பவே RTI ,  RTE போன்ற சட்டங்கள் கொண்டுவரப் படுகின்றன. அனைத்தும் கார்ப்பரேட் கைகளுக்குப் போன பிறகு தகவல் உரிமைச் சட்டத்தால் என்ன பயன்.?

கட்டாய இலவசக் கல்வி உரிமைச் சட்டம் போன்றவற்றை ஊடகங்கள் வாயிலாக மக்களிடம் ஏதோ பெரிய நன்மை நடந்து விட்டது போன்ற மாயையை உருவாக்குகிறார்கள். அரசின் கொள்கை முடிவுகள் அரசியல் தளங்களில் விவாதிக்கப்படாமல் அறிவாளிகள் மற்றும் அதிகாரமளிக்கும் குழு என்ற பெயரில் கார்ப்பரேட்டுகளின் ஏஜெண்டுகளின் மூலம் தனியார் முதலாளிகளுக்குச் சாதகமாக நாட்டைச் சுரண்டும் வகையில் முடிவுகளை எடுத்து மத்திய அரசு அதனை அறிவிக்கும் நிலை என்று ஏற்பட்டதோ அன்றே நமது உரிமைகள் பறிபோக ஆரம்பித்து விட்டது. பெட்ரோல் விலை உயர்வு, தனியார் பள்ளிகளுக்கு அனுமதி போன்றவை இதுபோல் எடுக்கப்பட்ட முடிவுகள்தான். RTE சட்டத்தில் பல ஓட்டைகளுடன், அரசுகள் இதில் இருந்து விலகிக்கொள்ள வசதியாக பல திருத்தங்களுடன் கொண்டு வந்துள்ளனர்.

தனியார் பள்ளிகளைக் கட்டுப்படுத்தி இந்தச் சட்டத்தை செயல்படுத்தி அனைவருக்கும் 25 சதவீத ஒதுக்கீடு கல்வியை அமல் படுத்த முடியாது. தனியார் பள்ளிகளை ஊக்குவிக்கும் பொருட்டே அரசு பள்ளிகளில் ஆசிரியர்கள் நியமிக்கப்படுவதில்லை. கட்டிடங்கள் பராமரிக்கப்படாமல் தனியார் பள்ளிகள் சிறந்தவை என்ற மாயையை அரசாங்கமே உருவாக்குகிறது. இச்சட்டப்படி அரசின் பொருளாதர வசதிக்கேற்ப அமல்படுத்தலாம் என உள்ளதால் போதிய நிதி இல்லை என்று அரசு அமைதி காக்கும். இந்தச் சட்டம் கட்டாய இலவசக்கல்வியை வலியுறுத்தவில்லை. புதிய பள்ளிகளைத் திறக்க போதிய அழுத்தம் கொடுக்கப்படவில்லை. புதிய அட்மிசனுக்கு மட்டுமே 25 சதவீதம். மாற்று செய்துகொள்ள வாய்ப்பில்லை. ஆசிரியர் நியமனம் கட்டுமானங்கள் திட்டமிடல் எதுவும் இல்லாமல் கொண்டு வரப்பட்டுள்ள இச்சட்டம் தனியார்மயத்தை ஊக்குவிக்கும் ஒரு மோசடிச் சட்டம். நமது பொது எதிரி அரசின் இந்த தனியார்மய கொள்கைதான் என்பதைப் புரிந்து கொண்டு போரடினால் மட்டுமே அனைவருக்கும் இலவசக் கல்வி என்ற தமது இலக்கில் வெற்றி பெற முடியும் எனப் பேசினார்.

வாழ்த்துரை வழங்கிய தலைமை ஆசிரியர் கோ. பாக்கியராஜ் ஆதிதிராவிட, ஆதிவாசி ஆசிரிய காப்பாளர் நலச் சங்கத்தின் மாநிலத் தலைவர் பேசும்போது, அரசுப்பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் சுயசிந்தனையுடன் தற்சார்பு, கூட்டு மனப்பான்மை ஆகியவற்றுடன் கல்வி கற்று சுயசார்புடன் விளங்குகின்றனர். தனியார் பள்ளிகளில் பயின்று, பொறியியல் படிக்கும் மாணவர்கள் தற்கொலை செய்து கொள்வதும் படிப்பை விட்டு ஓடுவதும் அதிகரிக்கிறது. அரசுப் பள்ளிகளில் தேர்ச்சி விபரங்களை கல்வித் துறை விளம்பரப்படுத்த வேண்டும் என்ற மாநாட்டு தீர்மானத்தை ஆதரித்துப் பேசியவர், போதிய ஆசிரியர்கள் இல்லாமல் பொதுத்தேர்வில் தேர்ச்சி எப்படி அதிகரிக்க முடியும், இதற்காக ஆசிரியர்களைக் குறை சொல்வது நியாயமில்லை எனப் பேசினார். மேலும் தனியார் பள்ளிகளில் ஆண்டு விழாவிற்கு 2000 முதல் 3000 ரூபாய் வசூலித்து ஆடல் பாடல் நிகழ்ச்சிகளுட் ஆபாச விழாவாக நடத்துகின்றனர். ஆனால் அரசுப் பள்ளிகள் பலவற்றில் பணம் ஏதும் வசூல் செய்யாமல் மாணவர்களின் தனித்திறமையை வெளிப்படுத்தும் விழாவாக நடத்தி கொண்டிருக்கின்றோம். எனவே தனியார் பள்ளிகளை எதிர்க்கும் அதே வேளையில் உங்கள் பிள்ளைகளை அரசுப் பள்ளிகளில் சேர்த்து அங்கு போதிய ஆசிரியர்கள், உள் கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்த அரசை நிர்பந்தம் செய்திட மக்கள் போராடினால் மட்டுமே அனைவருக்கும் தரமான இலவசக் கல்வி கிடைக்கும் எனப் பேசினார்.

சட்டங்கள், நீதிமன்றத் தீர்ப்புகள், கமிட்டி உத்திரவுகள் தனியார் பள்ளிகளின் கட்டணக் கொள்ளையைத் தடுக்குமா? என்ற தலைப்பில் பேசிய உயர்நீதி மன்ற வழக்கறிஞர் மீனாட்சி, சிதம்பரம் காமராஜ் மெட்ரிக் பள்ளிக்கு சிங்காரவேலு கமிட்டி வரை சென்று தீர்ப்புப் பெற்ற பிறகும் அப்பள்ளி நிர்வாகம் பெற்றோர்களையும், மாணவர்களையும் துன்புறுத்துவது ஏன்? அம்பானி ரிலையன்ஸ் கறிவேப்பிலை, கொத்தமல்லி வியாபாரம் செய்வது ஏன்? முதலாளித்துவம் இலாபத்திற்காக எதையும் செய்யும். இலாப வெறி அவன் ரத்தத்தில் ஓடிக்கொண்டே இருக்கும். கல்வி அடிப்படை உரிமை வாழும் உரிமை என அரசியல் அமைப்புச் சட்டம் அடிப்படை உரிமையாகச் சொன்னாலும் அது பீஸ் போன பல்பு மாதிரிதான். தனியாகச் சட்டம் இயற்றினால் தான் அனைவருக்கும் இலவசக் கல்வியைக் கொடுக்க முடியும் என்று இருப்பதால் RTE  சட்டம் போட்டார்கள். 25 சதவீதம் பேருக்கு மட்டுமே இலவசக் கல்வியைப் பெற முடியும் என மக்கள் முதுகில் குத்துகிறது இச்சட்டம். முதலாளிகளின் அடிப்படை உரிமையாக பள்ளிகள் நடத்துவது அவர்கள் வியாபார உரிமை என உத்திரவிட 11 நீதிபதிகள் அமர முடிகிறது. கட்டணத்தை அவர்களே நிர்ணியிக்கலாம் எனத் தீர்ப்பு வழங்க முடிகிறது. ஆனால் சுரண்டப்படும் மக்களுக்காக ஒரு நீதிபதியால் வழக்கின் தன்மையைக் கூட காது கொடுத்து கேட்க முடியவில்லை. தனியார் பள்ளிகள் கட்டணம் நிர்ணயிக்கும்போது ஏற்படும் பிரச்சினைகள், மக்களின் எதிர்ப்புகள் இவற்றைத் திசைதிருப்பவே கட்டண நிர்ணயக் கமிட்டி என்று ஏற்படுத்தினார்கள். எனவே இந்த நீதிமன்றங்கள், சட்டங்கள், கமிட்டிகள் ஒருபோதும் மக்களின் நலன் கருதிச் செயல்படாது. எனவே நாம் பள்ளிகளை முற்றுகையிட்டுப் போராடினால் தான் தனியார் பள்ளிகளின் கட்டணக் கொள்ளையைத் தடுக்க முடியும். நமது பிள்ளைகளை அரசுப் பள்ளிகளில் சேர்த்து, அவற்றின் தரத்தை மேம்படுத்தப் போராடினால் மட்டுமே இதற்குத் தீர்வு காண முடியும். பன்னாட்டு கம்பெனிகளுக்கு தடையில்லா மின்சாரத்தை வழங்கிவிட்டு மக்களுக்கு 8 மணி நேர மின்வெட்டு. அது போல் அரசுப் பள்ளிகளை மூடிவிட்டு தனியார் பள்ளிகளைச் சார்ந்திருக்கும் நாம் நமது பிள்ளைகளுக்கு கல்வி வழங்க இயலாத நிலை ஏற்படும். அரசு செய்யும் என நம்பாமல் நாம் போராடினால் தான் இதற்குத் தீர்வு காண முடியும் என்றார்

அனைவருக்கும் இலவசக் கல்வி உரிமையை நிலை நாட்டுவோம் தனியார்மயக் கல்விக்கு முடிவு கட்டுவோம் என்ற தலைப்பில் பேசிய புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணியின் மாநில அமைப்பாளர் தோழர் கணேசன், கல்வி சரக்காக மாறியதன் விளைவுதான் சென்ற ஆண்டு கோவை சங்கீதா, சென்னை குருராஜன் போன்றவர்களின் தற்கொலைச் சாவு. இதுபோன்று தற்கொலை முடிவுகளை எடுக்காமல் தனியார் பள்ளி முதலாளிகள் உருவாக்கியிருக்கும் மனப்பாடக் கல்வியை என்கவுண்டர் செய்ய வேண்டும். அப்படி நடந்தால் பு.மா.இ.மு. ஆதரவு கொடுக்கும். தனியார்மயக் கொள்கையை விரட்டாமல் இப்பிரச்சினைக்குத் தீர்வு காண முடியாது. பேக்கேஜ்களாக வைத்து கல்வியை விலை பேசும் பள்ளி முதலாளிகளை நாம் பேக் அப் செய்து அனுப்ப வேண்டும். பிள்ளைகளைப் பணயக் கைதிகளாக வைத்துப் பணம் பிடுங்கும் தனியார் பள்ளிகள் சிறைச்சாலைக்கு ஒப்பானவை. அங்கு போலீசுக்கு பதிலாகப் பள்ளி ஆசிரியர்கள் மற்றும் தாளாளர்கள். 25 சதவீதம் இலவசக் கல்வி என்ற பெயரில் நவீன தீண்டாமையை உங்கள் பிள்ளைகள் தான் அனுபவிக்கும். கடுமையான மன அழுத்தத்திற்கும் நெருக்கடிகளுக்கும் ஆளாகும் பிள்ளைகள் தான் ஆசிரியரைக் கொலை செய்யும் அளவுக்கு செல்கின்றனர். நாமக்கல் உண்டு – உறைவிடப் பள்ளிகள் கறிக்காக வளர்க்கப்படும் பிராய்லர் கோழிகள் போல் மாணவர்களை உற்பத்தி செய்கிறது. சுயமாக சிந்திக்கும் திறன் இல்லாமல் வளர்க்கப்படும் பிள்ளைகள் கடுமையான மன அழுத்தத்திற்கு ஆளாகி மன தைரியம் இல்லாத கோழைகளாக, மெசினாக ரோபட்டாக வளர்க்கப்படும் கொடுமைகள்  அனைத்தும் அரசுக்குத் தெரியும். தனியார் பள்ளிகளின் கொடுமைகள் மீது அரசு நடவடிக்கை எடுக்காமல் இருப்பதற்குக் காரணம் அரசுகளின் தனியார்மயக் கொள்கைதான். காட், காட்ஸ் ஒப்பந்தத்தின் விளைவாக நாடே அடிமையானது. கல்வி சரக்கான பிறகு இலாபத்திற்குதான் எனத் தனியார் பள்ளி முதலாளிகள் கொக்கரிக்கின்றனர். வியாபாரம் என வந்து விட்ட பிறகு அதில் மோசடிகளும் வந்து விட்டன. நாமக்கல்லில் ஆசிரியர்கள் மாணவர்களுக்கு தேர்வில் விடை சொல்லித் தருகின்றனர். அதிக மதிப்பெண் என்ற பெயரில் அடுத்து வரும் மாணவர்களிடம் கொள்ளையடிக்க எதையும் செய்யத் துணிகின்றனர் .தனியார்மயக் கல்வி என்பது ஏமாற்று, மோசடி, கண்கட்டு வித்தை. இதற்கு ஒரே தீர்வு அரசுப் பள்ளிகள்தான். எல்லா அரசியல் கட்சிகளும் தனியார்மயக் கொள்ளையை ஏற்றுக் கொண்டுள்ளதால் இதனை மாற்ற ஒரே தீர்வு அன்பு, பாசம், நேசம், பண்பு, சக மனிதனை மதிக்கும் மாணவனை உருவாக்க அரசுப் பள்ளிகளே சிறந்தது எனக் கூறினார்.

நிறைவுரை ஆற்றிய மனித உரிமைப் பாதுகாப்பு மைய மாநில ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர் ராஜு பேசும் போது, தனியார்மயக் கல்வியின் தரம் என்ன? +2 பொதுத் தேர்வில் தேர்ச்சி காட்ட வேண்டும் என்பதற்காக மாணவர்களை இரண்டாண்டுகள் ஒரே பாடத்தைப் படிக்கச் சொல்லிக் கொடுமைப்படுத்துகிறீர்கள். மதிப்பெண்களை எடுத்தவுடன் 95 சதவீதம் 490 என விளம்பரம் செய்கிறீர்கள் .மாணவர்கள் மதிப்பெண்கள்  எடுத்தால் உனக்கு என்ன? MBBS,  ENGGINEERING -இல் இத்தனை பேர் சேர்ந்தார்கள் என விளம்பரம், எனப் பக்கம் பக்கமாக விளம்பரம் கொடுப்பது வியாபார விருத்திக்குதானே.

சினிமா பாடலை மாணவர்கள் ராகத்தோடு பாடுகிறார்களே. பாட்டுப் புத்தகம் வைத்து மனப்பாடம் செய்தார்களா? விருப்பம் இருக்கிறது, சுலபமாகப் பாடுகிறார்கள். ஜனகன மனகதி போல் மனப்பாடம் செய்வதுதானே தனியார்மயக் கல்வி. கூட்டத்தோடு சேர்ந்துதான் தேசிய கீதத்தைப் பாட முடியும். தனியாகப் பாட முடியாது. MBBS, ENGGINEERING-படித்தவர்கள்  மட்டுமே வாழத்  தகுந்தவர்கள் என்பது போன்ற விளம்பரம் கொடுக்கிற சூழலில் மற்றவர்கள் வாழத் தகுதியற்றவர்களர?. காடு, மலை கழனி, ஆறு எல்லாவற்றையும் விற்றவன் படித்த IAS ஆபிசர் தானே. குடிநீருக்காக, கல்வி உதவித் தொகைக்காக, கட்டணக் கொள்ளைக்கு எதிராக, கூலிக்காகப் போராடும் தொழிலாளிகள் மீது தடியடி நடத்துவது IPS ஆபிசர்தானே. என்ன படிச்சவன்? கடலூர் ரசாயன ஆலைகளுக்கு அனுமதி கொடுத்தவர் படித்தவர்தானே. இன்று அங்கு மீன்வளம் இல்லை, குடிநீர் இல்லை. இது தெரியாதா? பன்னாட்டு கம்பெனிக்கு ஆதரவாகச் சட்டம் வகுத்துக் கொடுப்பவன் படித்த IAS ஆபிசர்தானே?.

மூலிகைப் பண்ணை வைத்து பலமடங்கு ஈவுத்தொகை தருகிறேன் என மக்களிடம் 100 கோடி ரூபாய் ஏமாற்றியது போன்று தனியார்மயக் கல்வி தரம் எனப் பேசுகிறாய். ஏமாந்த மக்களை நினைத்து வருத்தப்படுவதா அல்லது ஏமாற்றியவன் அறிவைக் கண்டு வியப்பதா?. தனியார்மயக் கல்வியில் மட்டுமா தற்கொலை நடக்கிறது? விவசாயிகள் தற்கொலை செய்து கொள்ளவில்லையா ? சிறு வியாபாரிகள், நடுத்தரக் குடும்பங்கள் எத்தனை பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். தனியார்மயக் கொள்ளைதான் காரணம். தொழிற்சாலையில் தொழிலாளிக்குச் சட்டப்படி சேர வேண்டிய ஊதியம் கேட்டு சட்டப்படி போராடினால் தீர்வு கிடைத்ததாக வரலாறு இல்லை. கேட்டை இழுத்து மூடினால்தான் தீர்வு கிடைக்கும். அது போல் கட்டணக் கொள்ளைக்கு எதிராகப் பள்ளியை முற்றுகையிட்டால் தான் தீர்வு கிடைக்கும்.

சட்டமும், நீதிமன்றங்களும் முதலாளிக்கு ஆதரவாக உள்ளது. தனியார் பள்ளி முதலாளிகளின் அத்துமீறல் குறித்து, கட்டணக் கொள்ளை பற்றி நாங்கள் யாருக்கும்  புகார் அனுப்பவில்லை. பிரதமருக்கும், பிரதீபா பட்டீலுக்கும்தான் அனுப்பவில்லை. தமிழகத்திலேயே சிதம்பரத்தில்தான் கல்வித்துறை அதிகாரிகளுக்கு மரியாதை. அதற்குக் காரணம் நமது போராட்டம். தனியார் பள்ளியில் அவ்வளவு சுலபமாக எந்த அதிகாரியும் நுழைந்து விட முடியாது. சிறைப்பறவை போன்ற கல்வித்துறை அதிகாரிகளுக்குப் பறக்கக் கற்றுக் கொடுத்தது மனித உரிமைப் பாதுகாப்பு மையமும் மற்றும் மாணவர்களின் கல்வி உரிமைக்கான பெற்றோர் சங்கமும் நடத்திய மக்கள் போராட்டம் தான். மாவட்ட ஆட்சியர் பேசுகிறார், துணைக் கண்காணிப்பாளர் பேசுகிறார். மாவட்டக் கல்வித்துறை அதிகாரிகள் அனைவரும் பேசுகிறார்கள். தனியார் பள்ளி முதலாளிகளை ஒடுக்க சட்டத்தில் இடம் இல்லை. எனவேதான் இந்தப் பேச்சுவார்த்தை. தமிழகம் முழுவதும் கட்டணக்கொள்ளைக்கு எதிராகப் பெற்றோர்கள் போராடுகிறார்கள். இங்கு மட்டும்தான் சங்கமாகத் திரண்டு சரியான திசையில் போராடுகிறோம். குறிப்பிட்ட பள்ளியை மட்டும் ஏன் குறி வைக்கிறீர்கள், ம.க.இ.க ஏன் வருகிறது எனத் துருவித்துருவி கேள்வி கேட்கும் காவல் துறை மற்றும் கல்வித்துறை அதிகாரிகளிடம் நாங்கள் கேட்கிறோம், இவ்வளவு பெற்றோர்களை இரவு 10-00 மணி வரை உட்கார வைக்க யார் காரணம்? இவர்களை எங்களிடம் அனுப்பியது நீங்கள் தானே. இவர்கள் சங்கமாக திரண்டு வளர்வதற்கு தனியார் பள்ளி முதலாளிகள் தான் காரணம். இதே சிதம்பரத்தில் சிவனடியாரை ம.க.இ.க .விடம் அனுப்பியது உங்கள் அரசாங்கம் தானே. தனியார் பள்ளி முதலாளிகளும், அரசும் இல்லாமல் எங்களால் இப்படிக் குறுகிய காலத்தில் இரண்டு மாநாடு நடத்தி மாவட்டம் முழுவதும் செல்வாக்குப் பெற முடியுமா?. நாங்கள் கடுமையாக முயன்றாலும் எங்கள் வளர்ச்சிக்கு நீங்கள் தானே காரணம்.

கல்விச் சேவை செய்கிறேன் என்று டிரஸ்ட் சட்டப்படி பதிவு செய்து, பெற்றோர்களின் பணத்தால் வளர்ந்த இந்த பள்ளிக் கட்டிடம் ஒரு பொதுச் சொத்து. ஆனால், என் பள்ளி, விருப்பம் இருந்தால் படி, இல்லை யென்றால் வெளியே போ எனச் சொல்ல தனியார் பள்ளி முதலாளிகளுக்கு உரிமையில்லை. இவர்கள் மாணவர்களைச் செய்யும் துன்புறுத்தலைப் பட்டியல் இட முடியாது. கள்ளக்குறிச்சி ஏ.கே.டி.பள்ளிக்கு எதிராக சி.பி.ஐ விசாரணைக்கு உத்திரவிடும் அளவுக்கு தனியார் பள்ளி முதலாளிகள் அதிகார வர்க்கத்தில் செல்வாக்கு செலுத்துகிறார்கள் ஆர்பாட்டம் நடத்தக் கூட அனுமதி தர அரசு மறுக்கிறது.

சிதம்பரத்தில் பெற்றோர்கள் சங்கமாக இருப்பதால் தலைவர் ராமகிருஷ்ணனும், செயலாளர் கலையரசனும் ரோட்டிலே நடமாடுகிறார்கள் .இல்லையென்றால் ஆள்வைத்து அடிப்பார்கள்.  பிறகு நம் குடும்பத்தினர் நம்மைப் பின்னுக்கு இழுத்து விடுவார்கள். ஒரு பிரச்சினையைக் கையில் எடுத்து விட்டால் இறுதிவரை எந்த எல்லைக்கும் சென்று மனித உரிமைப் பாதுகாப்பு மையம் போராடும் என்பது அரசுக்கும், போலீசுக்கும் தெரியும். மக்கள் மன்றமானாலும், நீதிமன்றமானாலும் இறுதி வரை போராடுவார்கள். மாணவர்களை நாமக்கல், திருச்செங்கோடு சென்று விடுதியில் போடும் பெற்றோர்களே படித்து வந்து அவர்கள் உங்களை விடுதிக்கு அனுப்பி விடுவார்கள். பன்னாட்டு கம்பெனிகளுக்காக மலிவான கூலிக்கு ஆட்களை உற்பத்தி செய்யும் கல்வி முறைக்கு உங்கள் பிள்ளைகளை அனுப்பலாமா?. இந்த மாநாடு நமக்கு ஒரு மைல் கல் என முழுத் திருப்தியடைய முடியாது. அடுத்து வரும் போராட்டங்களுக்கு நம்மைத் தயார்படுத்த இது உதவும்.

வழக்கு, சிறை, நீதிமன்றம் என நாம் கடந்து விட்டால் நம்மை யாராலும் அசைக்க முடியாது. ஓட்டுச்சீட்டு அரசியல் கட்சிகள் நம்மிடம் மண்டியிடும். எதிர்கால சந்ததியினருக்கான நமது போராட்டத்தில் இறுதிவரை போராட வேண்டும். அதற்கு நாம் போராளியாக மாற வேண்டும். ராஜகோபால் அவர்கள் சுருக்கமாக புரட்சி வந்தால் தான் கல்வியில் மாற்றம் வரும் எனப் பேசினார். அனைவருக்கும் தரமான இலவசக் கல்வியை வென்றெடுக்கும் இந்தப் போராட்டம் தமிழகம் முழுவதும் பரவட்டும் என்று பேசி முடித்தார்.

மாநாட்டுத் தீர்மானங்கள்

1.கல்வி என்பது வாழும் உரிமையாக அரசியலமைப்பு சட்டத்தின் சரத்து 21-ஏ-வின் படி அடிப்படை உரிமையாக உள்ள போது, 8-ஆம் வகுப்பு வரை 25 சதவீதம் இலவசக் கல்வி என்பதை ரத்து செய்து +2 வரை அனைவருக்கும் தரமான இலவசக் கல்வி வழங்க சட்டமியற்ற வேண்டும் என மத்திய, மாநில அரசுகளை இம்மாநாடு வலியுறுத்துகிறது.

2.மாணவர்களின் சமத்துவத்திற்கான ஒரே பாடத்திட்டம், ஒரே பயிற்சி முறை, ஒரே தேர்வு முறை கொண்ட பொதுப் பள்ளி-அருகாமைப் பள்ளி முறையை உடனடியாக அமல்படுத்த வேண்டுமென இம்மாநாடு தமிழக அரசைக் கேட்டுக்கொள்கிறது.

3.அரசு ஆரம்பப் பள்ளிகளில் மழலையர் வகுப்புகள் ஆரம்பிக்கவும், அனைத்து அரசுப் பள்ளிகளிலும் தரமான கல்வி வழங்கத் தேவையான ஆசிரியர்களை நியமிக்கவும் உரிய நிதி ஒதுக்கி, அடிப்படை வசதிகளை உடனே செயல்படுத்த வேண்டும் என இம்மாநாடு கேட்டுக்கொள்கிறது.

4.அரசுப் பள்ளி ஆசிரியர்கள் தனியார் பள்ளிகளில் சென்று பகுதி நேர வேலை செய்தாலோ அல்லது கணவன்/மனைவி பெயரில் பள்ளிக்கூடம் நடத்தினாலோ அவர்களை நிரந்தரப் பணி நீக்கம் செய்ய தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், மேலும் இவர்கள் பிள்ளைகளை அரசுப் பள்ளியைப் புறக்கணித்து தனியார் பள்ளியில் படிக்க வைத்தால் இவ்வாசிரியர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கவும் இம்மாநாடு தமிழக அரசைக் கேட்டுக்கொள்கிறது.

5.அரசுப் பள்ளி மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பொதுத்தேர்வில் மாணவர்கள் தேர்ச்சி விகிதம் மோசமாகக் குறைவதற்கு காரணமான ஆசிரியர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தமிழக அரசை இம்மாநாடு கேட்டுக்கொள்கிறது.

6.கடந்த ஆண்டு கோவையில் சங்கீதா என்ற தாய் எல்.கே.ஜி.க்கான கூடுதல் கட்டணக் கொடுமையால் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார் .இன்று சென்னை அம்பத்துரில் உள்ள தனியார் பள்ளி நிர்வாகம் பணத்திற்காக மதிப்பெண் பட்டியல் தர மறுத்ததால் +2 தேர்வில் 1022 மதி்பபெண் எடுத்த குருராஜன் என்ற மாணவன் தற்கொலை செய்து கொண்டார். மாணவனைத் தற்கொலைக்குத் தூண்டிய பள்ளித் தாளாளர், முதல்வரை கிரிமினல் வழக்கில் கைது செய்து கட்டணத்திற்காக மாணவர்கள் துன்புறுத்தப்படுவதற்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்க சட்டம் இயற்றும்படி தமிழக அரசை இம்மாநாடு கேட்டுக் கொள்கிறது.

7.சமச்சீர் பாடத்திட்டம் அமல்படுத்திய பிறகும் மெட்ரிகுலேசன் என்ற பெயரைப் பயன்படுத்த தனியார் பள்ளிகளுக்கு தடை விதிக்கவும், சமச்சீர் பாடத்தைத் தவிர வியாபார நோக்கில் பிற புத்தகங்களைப் படிக்கச் சொல்லி மாணவர்களைத் துன்புறுத்துவதைத் தடை செய்யவும் தமிழக அரசு உரிய உத்திரவு பிறப்பிக்க வேண்டும் என இம்மாநாடு கேட்டுக்கொள்கிறது.

8.தனியார் உறைவிடப் பள்ளிகளில் பொதுத் தேர்வான 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பாடத்தை அதற்கு முந்தைய ஆண்டு முதல் அதாவது இரண்டு வருடங்கள் அதிகாலை 4 மணி முதல் இரவு வரை மாணவர்களைப் படிக்கச் சொல்லி கொடுமைப்படுத்துவதைத் தடுக்கவும், தேர்ச்சி பெற்ற மாணவ, மாணவிகளின் புகைப்படத்தை வருமானம் ஈட்ட விளம்பர பொருளாகப் பள்ளி நிர்வாகம் பிரசுரிப்பதையும் தடைசெய்ய வேண்டுமென தமிழக அரசை இம்மாநாடு கேட்டுக்கொள்கிறது.

9. பொதுத் தேர்வில் அரசுப் பள்ளி மாணவர்கள் அதிக மதிப்பெண் மற்றும் அதிக சதவிகித தேர்ச்சி பெற்றதை விளம்பரப்படுத்த உரிய நடவடிக்கை எடுக்குமாறு கல்வித்துறையை இம்மாநாடு கேட்டுக்கொள்கிறது. மேலும் அந்த மாணவர்களின் வெற்றிக்குக் காரணமான ஆசிரியர்கள் மற்றும் தலைமை ஆசிரியர்களை இம்மாநாடு மனதார வாழ்த்தி, பாராட்டுகிறது.

10. அரசுப் பள்ளியில் தாய் மொழியில் படித்த மாணவர்களுக்கே அரசு மருத்துவக் கல்லூரி, அரசு பொறியியல் கல்லூரி, அரசு வேலைவாய்ப்பில் முன்னுரிமை கொடுக்க சட்டம் இயற்ற வேண்டும் எனத் தமிழக அரசை இம்மாநாடு ஒரு மனதாகக் கேட்டுக்கொள்கிறது.

___________________________________________________________________

படங்களை பெரியதாக பார்க்க அதன் மீது அழுத்தவும்

___________________________________________________________________

தகவல்: –மாணவர்களின் கல்வி உரிமைக்கான பெற்றோர் சங்கம்
சிதம்பரம், கடலூர் மாவட்டம்.
செல் நம்பர், 9790404031, 9443876977.

மனித உரிமை பாதுகாப்பு மையம் – தமிழ்நாடு
கடலூர் மாவட்டம்.
செல் நம்பர், 9360061121, 9345180948.

____________________________________________________________________________

வினவுடன் இணையுங்கள்

தொடர்புடைய பதிவுகள்:

_____________________________

_____________________________

_____________________________

_____________________________

நித்தியானந்தா:மதமா? சாதியா? சொத்தா? சி.டி.யா?

49

நித்தியானந்தா விவகாரம்: அசிங்கத்தில் விஞ்சி நிற்பது  மதமா? சாதியா? சொத்தா? சி.டி.யா?

நித்தியானந்தா-1
ஆதினமாக முடி சூட்டப்படும் நித்தியானந்தா

இலஞ்சம் கொடுத்து அரசுப் பதவிகளைப் பெறுவதைப் போல, ஆன்மீகப் பதவிகளையும் பெற முடியும் என எடுத்துக் காட்டியிருக்கிறார், நித்தியானந்தா.  மதுரை ஆதீனத்தின் 292வது குரு மகாசந்நிதானமான அருணகிரிக்குக் கோடி ரூபாய் பணம் கொடுத்து, தங்கக் கிரீடம் கொடுத்து, வெள்ளி செங்கோல் கொடுத்து இன்னும் என்னவோவெல்லாம் கொடுத்து, நித்தியானந்தா அடைந்துள்ள இந்தப் ‘பெரும் பேற்றை’ வேறெப்படிச் சொல்ல முடியும்?  மதுரை ஆதீனத்தின் 293வது பீடாதிபதியாக நித்தியானந்தா நியமிக்கப்பட்டுள்ள இந்த ‘ஆன்மீகப் புரட்சி’யைக் கண்டு சாதாரண பக்தர்களைவிட, மற்ற பிற ஆதீனங்களும், மடங்களும், இந்து மதத்தின் காவலர்கள் எனக் கூறிக் கொள்ளும் வானரப் படைகளும்தான் அதிர்ந்து நிற்கின்றன.

நாடாளுமன்ற ஜனநாயகத்தின் சீரழிவை,  தனிப்பட்ட ஓட்டுக்கட்சிகள், அரசியல்வாதிகளின் ஒழுக்கக்கேடாகக் குறுக்கிக்காட்டி, ‘ஆயினும் ஜனநாயகம் புனிதமானதே’ என்று முதலாளித்துவக் கும்பல் மக்களை ஏய்த்து வருவதைப் போலவே, ஆன்மீகச் சீரழிவான நித்தியானந்தா விவகாரத்தை, மதுரை ஆதீனத்தின் புத்தி சுவாதீனமற்ற செயலாகக் காட்டுவதன் மூலம் இந்து மதத்தின் புனிதத்தை நிலைநாட்டுவதற்கு முயற்சிக்கிறார்கள் இந்து மதக் காவலர்கள்.  ஆனால், தற்போதைய மதுரை ஆதீனமான அருணகிரி, “தான் நித்தியானந்தாவைத் தேர்ந்தெடுத்தது சிவபெருமானின் ஆணை” எனக் கூறி, சிவபெருமானையும்சாட்சிக் கையெழுத்துப் போட வைக்கிறார்.

பெங்களூருக்கு அருகேயுள்ள பிடதி கிராமத்தில் தனி மடம் நடத்திவரும் நித்தியானந்தா சித்தர் மரபைப் பின்பற்றுபவர்; அவருக்குச் சைவ மரபுகள் ஒத்து வராது என மென்மையான கண்டனம் தொடங்கி பாலியல் குற்றச்சாட்டுக்கு ஆளானவரை மதுரை ஆதீனமாகப் பட்டம் சூட்டக் கூடாது என்பதுவரை நித்தியானந்தாவின் தேர்வுக்கு எதிராகப் பல்வேறுவிதமான காரணங்கள் முன்வைக்கப்படுகின்றன.  இவற்றுக்கு நடுவே, ‘இந்து’க்களின் நலனைக் காப்பாற்றுவதற்காகவே அவதாரமெடுத்திருப்பதாகக் கூறிக் கொண்டு திரியும் இந்து முன்னணியும், அவர்களின் சித்தாந்த குருவான சோ ராமஸ்வாமி அய்யரும் மதுரை ஆதீனம் நித்தியானந்தாவை இளைய ஆதீனமாகத் தேர்ந்தெடுத்திருப்பதை எதிர்க்கக்கூடாதென அருளுரை வழங்கியிருக்கிறார்கள்.

‘‘இந்த நியமனம் தவறு என்று நாம் ஆரம்பித்தோமானால், ஒரு மடத்தின் ஒரு நியமனம் பற்றிப் பேசுவதோடு நாம் நின்றுவிடுவோமா?  அல்லது ஒவ்வொரு மடத்திலும் எப்படிபட்ட ஆதீனங்கள் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள், அவர்களுக்குள்ள தகுதிகள் என்ன என்றெல்லாம் ஆராயத் தொடங்குவோமா? அதன் பிறகு மடங்கள், முனிசிபாலிட்டிகள் மாதிரி விமர்சனத்துக்கு உள்ளாகுமே தவிர, மத ரீதியான அமைப்புகளாக மதிக்கப்படாது” எனக் கூறி, நித்தியானந்தா விவகாரத்தை ஜீரணித்துக் கொள்ள வேண்டுமென பக்தர்களுக்கும், பிற ஆதீனங்களுக்கும் அறிவுரை வழங்குகிறார், துக்ளக் சோ.

தன்னையும் நித்தியானந்தாவையும் இணைத்துப் பேசிய காஞ்சி மட சங்கரனை ஏற்கெனவே கோர்ட்டுக்கு இழுத்துவிட்டார், நடிகை ரஞ்சிதா.  தண்டத்தை மடத்திலேயே போட்டுவிட்டு, ஒரு பெண்ணுடன் தலைக்காவிரிக்கு ஓடிப்போன ஓடுகாலி சங்கராச்சாரிக்கு ஒரு நீதி, நித்தியானந்தாவுக்கு ஒரு நீதியா என்றெல்லாம் எதிர்க்கேள்விகள் எழத் தொடங்கிவிட்டன.  நித்தியானந்தாவை வம்புக்கு இழுத்தால், பார்ப்பன மடங்களின் யோக்கியதையும் சந்திக்கு வந்து விடும்; அதற்கும் மேலாக இந்து மதத்தின் ஆன்மீக ஒழுக்கமே கேள்விக்குள்ளாகிவிடும் என்பதால்தான் இவ்விவாகாரத்தில் இந்து முன்னணிக் கும்பல் அடக்கி வாசிக்கிறது.

அதேசமயம், திருவாடுதுறை, தருமபுரம், குன்னக்குடி உள்ளிட்ட பிற ஆதீனங்கள், காங்கிரசு பெருச்சாளியான நெல்லை கண்ணன், இந்து மக்கள் கட்சி, தேவர் தேசியப் பேரவை உள்ளிட்ட கும்பல் அமைத்துள்ள மதுரை ஆதீன மீட்புக் குழு நித்தியானந்தாவின் தேர்வை ஏற்றுக் கொள்ள மறுத்து வருகிறது.  மதுரை ஆதீன மடத்தில் ஏற்பட்டுவிட்ட ஒழுக்கக்கேட்டை எதிர்ப்பது போல இவர்கள் காட்டிக் கொண்டாலும், இக்கும்பலின் எதிர்ப்பின் பின்னே சைவ வேளாள சாதி வெறியும், சொத்து கைநழுவிப் போகிறதே என்ற ஆத்திரமும்தான் உண்மையில் அடங்கியுள்ளது.

மதுரை ஆதீன மடம் சைவ சமயக் குரவர்களுள் ஒருவரான திருஞானசம்பந்தரால் தோற்றுவிக்கப்பட்டது; 1,500 ஆண்டு கால பழமை வாய்ந்தது என்று கூறப்படுவதற்கெல்லாம் வரலாற்று ஆதாரம் இருக்கிறதோ, இல்லையோ, அம்மடத்தின் வசம் ஏறத்தாழ 1,500 ஏக்கர் அளவிற்கு வளமான விளைநிலங்கள் உள்ளன; மதுரை தெற்கு ஆவணி மூல வீதியில் மடத்திற்குச் சொந்தமான 80 கடைகள் மாத வாடகைக்கு விடப்பட்டுள்ளன.  கடை வாடகை, நிலம், மடத்தின் கட்டுப்பாட்டிலுள்ள கோயில் வருமானம் என ஆதீனத்தின் சொத்துக் கணக்கு 1,000 கோடி ரூபாயைத் தாண்டும் என்பதற்கு மறுக்கமுடியாத ஆதாரங்கள் உள்ளன.

ஆதீனத்தின் சொத்துக்களைக் கட்டுப்படுத்தி அனுபவித்து வரும் ஒரு ஏழு பேரிடமிருந்து அச்சொத்துக்களை மீட்கப் போவதாக நித்தியானந்தா சவால் விட்டிருப்பது; அவரது பட்டமேற்புக்குப் பிறகு மடத்திற்குள் எழுந்துள்ள பூசல்கள்; மடத்திற்குள் நடந்த வருமான வரிச் சோதனை; ஆதீனத்திற்குச் சொந்தமான அசையும் அசையா சொத்துக்களைக் கையாளவோ, அவைகளில் தலையிடவோ நித்தியானந்தாவிற்குத் தடை விதித்து அளிக்கப்பட்டுள்ள சென்னை உயர் நீதிமன்றத் தீர்ப்பு  என இவை அனைத்தும் ஆதீனம் அருணகிரிக்கு நெருக்கமாக இருந்த பழைய கும்பலுக்கும் புதிதாக மடத்திற்குள் புகுந்துள்ள நித்தியானந்தா கும்பலுக்கும் இடையே சொத்துத் தகராறு தொடங்கிவிட்டதையே காட்டுகின்றன.

ஆலயத்திற்குள் சாதி  தீண்டாமை பாராட்டக் கூடாது; அனைத்துச் சாதியினரையும் அர்ச்சகராக நியமிக்க வேண்டும் என்ற கோரிக்கைகள் வலுவாக எழுந்துவரும் 21ஆம் நூற்றாண்டில், தருமபுரம், திருவாடுதுறை உள்ளிட்ட ஆதீனங்களும், சைவப் பிள்ளைமார் சாதி வெறியர்களும், குறிப்பாக அச்சாதியைச் சேர்ந்த பிற்போக்கு நில உடைமைக் கும்பலும், “சைவ வேளாளர் பிரிவில் உள்ள 13 சாதிகளைச் சேர்ந்தவர்கள்தான் ஆதீனமாக வரமுடியும்; நித்தியானந்தா முதலியார் சாதியைச் சேர்ந்தவர். அதனால் அவரை ஆதீனமாக ஏற்க முடியாது” என வெளிப்படையாகவே சாதிவெறியைக் கக்குகிறார்கள்.  இச்சாதிவெறியை மரபு என்று கூறி நியாயப்படுத்துகிறார்கள்.  சைவத்திற்கும் தமிழுக்கும் தொண்டு செய்வதற்காகவே இந்த ஆதீன மடங்கள் தோற்றுவிக்கப்பட்டதாகப் பீற்றி, இச்சாதி ஆதிக்கத்திற்கு அங்கீகாரம் தேடிக் கொள்ள முயலுகிறார்கள்.

பீற்றிக் கொள்ளப்படும் சைவ மரபு என்பது பார்ப்பனியத்துக்கு வால்பிடிப்பது தவிர வேறென்ன?  தாழ்த்தப்பட்டோர் கோவிலுக்குள் நுழையக் கூடாது; பார்ப்பானைத் தவிர, வேறு சாதியைச் சேர்ந்த எவனும் மணியாட்ட மட்டுமல்ல, மடப்பள்ளிக்குள்ளும் வரக்கூடாது; கருவறைக்குள் தமிழ் நுழையக் கூடாது என்ற ஆகம விதிகள் அனைத்தும் நித்தியானந்தாவின் லீலைகளுக்கு இணையாக அருவெறுக்கத்தக்கவை.

சிதம்பரத்தின் சிற்றம்பல மேடையில் தேவாரம் ஒலிக்க வேண்டும் எனக் கோரி சிவனடியார் ஆறுமுகசாமி மனித உரிமைப் பாதுகாப்பு மையத்தின் ஆதரவோடு போராடிக் கொண்டிருந்தபொழுது, இந்த ஆதீனங்களுள் ஒருவர்கூடத் தமிழுக்காகக் குரல் கொடுக்கவில்லை. சிதம்பரம் கோயில் சொத்துக்களைத் தீட்சிதர் கும்பல் சுரண்டிக் கொள்ளையடித்து வந்ததைத் தட்டிக் கேட்க இந்த ஆதீனங்களோ, சைவப் பிள்ளைமார் சாதியைச் சேர்ந்த ஆதிக்க சக்திகளோ துணிந்ததில்லை.  மாறாக,  இவர்கள் சைவத்தின் பெயராலும் தமிழின் பெயராலும் பிழைப்பு நடத்தி வந்தார்கள்;  திருட்டு தீட்சிதர் கும்பலுடன் இரகசியமாக உறவு வைத்துக் கொண்டு, தமிழ் மக்களை ஏமாற்றினார்கள்.

சைவ மடங்களின் பெயரில் இருந்து வரும் பொதுச்சொத்துக்களைத் காலம்காலமாகத் தின்று கொழுத்து வரும் இந்தக் கூட்டத்துக்கும் நித்தியானந்தாவுக்கும் உள்ள வேறுபாடு ஒன்றுதான். நித்தியானந்தா மக்கள் முன் அம்பலப்பட்டுப் போன கயவன், அவரது நியமனத்தை எதிர்க்கும் மற்ற ஆதீனங்களும், ஆதீனங்களுக்கு நெருக்கமான சைவப் பிள்ளைமார் சாதிகளைச் சேர்ந்த ஆதிக்க சக்திகளும் அம்பலமாகாத கயவர்கள்!  ஆதீன மடங்களுக்குள் நுழைய முடியாமல் வீடியோ காமெராக்களை தடுத்து நிறுத்தியிருப்பதனால்தான், இந்த உருத்திராட்சப் பூனைகளின் புனிதம் இதுவரை பாதுகாப்பாக இருந்து வருகிறது.

காஞ்சி சங்கர மடம், மதுரை ஆதீனம் போன்ற பழைய மடங்களோ, நித்தியானந்தா, ஜக்கி வாசுதேவ் போன்ற நவீன குருமார்கள் உருவாக்கியுள்ள புதிய கார்ப்பரேட் மடங்களோ எதுவும் அவர்களே கூறிக்கொள்ளும் ஆன்மீக நெறியை வளர்ப்பதற்காக நடத்தப்படவில்லை.  இவர்கள் பக்தி, ஆன்மீகம் போன்றவற்றை மூலதனமாக்கி, கல்வி நிறுவனங்கள், மருத்துவமனைகள் உள்ளிட்ட பல வியாபாரங்களை நடத்தும் கார்ப்பரேட் முதலாளிகள்.  சாய்பாபா மடத்தில் நடந்த கொலைகள், சங்கராச்சாரிகள் மீதான பாலியல் மற்றும் கொலைக் குற்றச்சாட்டு, நித்தியானந்தா மீதான பாலியல் குற்றச்சாட்டு, திருவாடுதுறை ஆதீனத்தில் நடந்த கொலை முயற்சி என ஆன்மீக மடங்கள் இந்தியாவெங்கும் கிரிமினல் கூடாரங்களாகச் சந்தி சிரிக்கின்றன.

கொலைக் குற்றவாளியான சங்கராச்சாரி இன்றும் லோக குருவாக வலம் வருகிறார்; நித்தியானந்தா மதுரை ஆதீனமாக முடி சூட்டப்படுகிறார்.  ஊடகங்களுக்கு இது ஒரு விற்பனைச் சரக்கு. மதுரை ஆதீன மட விவகாரத்தில் நித்தியானந்தா, நடிகை ரஞ்சிதா, வைஷ்ணவி, கஸ்தூரி ஆகியோர் சம்பந்தப்பட்டிருப்பதை வைத்து, இந்த விவகாரத்தை ஒரு கிளுகிளுப்பான செய்தியாகத்தான் பத்திரிகைகள் தந்துள்ளன.

மதுரையில் நடந்த ஆதீன மீட்பு ஆலோசனை மாநாட்டில் மகா சந்நிதானங்கள் மற்றும் பலர்
மதுரையில் நடந்த ஆதீன மீட்பு ஆலோசனை மாநாட்டில் மகா சந்நிதானங்கள் மற்றும் பலர்

தாங்கள் போற்றிக் கொண்டாடும் மரபு, புனிதம் ஆகியவை புழுத்து நாறியபோதும், இந்நிகழ்வுகளை எட்ட நின்று வேடிக்கை பார்க்கும் ஜடங்களாகவே பக்தர்கள் நடந்து கொள்கின்றனர்.  பக்தி என்பதே ஆண்டவனுடன் நடத்தும் பேரமாகவும், மதம் என்பது அன்றாட வாழ்வின் தேவைகளுக்கு உடனுக்குடன் தீர்வு சொல்லும் ஆன்மீக கன்சல்டன்சியாகவும் மாறியுள்ள சூழ்நிலையில், இப்படிப்பட்ட அசிங்கங்களோடு சமாதான சகவாழ்வு நடத்துவதை பக்தர்கள் அறம் சார்ந்த பிரச்சினையாகவே  கருதுவதில்லை போலும்.

அரங்கேறிக் கொண்டிருக்கும் இந்தக் கூத்துகளைப் பற்றித் தமிழக அரசோ அறநிலையத்துறை அமைச்சரோ வாய்திறக்கவில்லை. தனக்கு அம்மாவின் ஆசி இருப்பதாக நித்தியானந்தா கூறியிருப்பதை வெறும் வாய்ச்சவடால் என்று ஒதுக்கவும் முடியவில்லை. மத உரிமை, மத நிறுவனங்களை நிர்வகிக்கும் உரிமை ஆகிய அரசியல் சட்ட உரிமைகளின் கீழ் தங்களுடைய சொத்துக்களின் மீது கேள்விக்கிடமற்ற அதிகாரத்தை மடங்களும் ஆதீனங்களும் பெற்றிருக்கின்றன.    இத்தகைய அதிகாரத்தின் காரணமாகத்தான் தில்லைச் சிற்றம்பலத்தில்  தமிழ் ஏறுவதற்கும், தீட்சிதர்களின் இடுப்பிலிருந்து கோவில் சாவியை இறக்குவதற்கும்  கடுமையாகப் போராட வேண்டியிருந்தது. அது மட்டுமல்ல, இந்து மத உரிமையின் பெயரால்தான் அனைத்து சாதியினரும் அரச்சகராகும் உரிமை இதுவரையிலும் தடுத்து நிறுத்தப்பட்டு வருகிறது.

நல்லொழுக்கத்தின் நாட்டாமைகளாக ஆளும் வர்க்கங்களால் சித்தரிக்கப்படும் இந்த மதபீடங்கள், தமது சொந்த நடவடிக்கைகள் மூலமாகத் தாமே அம்பலப்பட்டு நாறிய பின்னரும் ஆளும் வர்க்கங்கள் இவர்களைக் கைவிடுவதில்லை.  தங்கள் கைவசம் இருக்கும் பல்லாயிரம் கோடி சொத்துகள் மூலமும், ஆளும் வர்க்கங்கள் மற்றும் சாதி ஆதிக்க சக்திகளுடன் அவர்கள் வைத்திருக்கும் கூட்டணியின் மூலமும் தங்களுடைய இழந்த செல்வாக்கை இவர்கள் மீட்டுக் கொள்கின்றனர். சங்கராச்சாரி காலையில் கொலை கேஸ் வாய்தாவுக்குப் போய்விட்டு வந்து மாலையில் அருளாசி வழங்கும் காட்சியைப் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறோம். அதேபோல நித்தியானந்தாவைப் பொருத்தவரை நேற்று படுக்கையறைக் காட்சி! இன்று பட்டாபிஷேகம்!

இந்நிலை நீடிக்க அனுமதிக்கக் கூடாது. மத உரிமை என்ற பெயிரில் இவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள உரிமைகள் அனைத்தும் ரத்து செய்யப்படவேண்டும். மன்னர்களால் இந்த மடாதிபதிகளுக்குப் பிடுங்கித் தரப்பட்ட மக்கள் சொத்துகளான நிலங்கள் அனைத்தும் பறிமுதல் செய்யப்பட்டு மீண்டும் மக்கள் உடைமையாக்கப்படவேண்டும். மடாதிபதிகள் நியமனத்தில் கடைப்பிடிக்கப்படும் சாதி சார்ந்த மரபுகள் கிரிமினல் குற்றமாக்கப்பட்டுத் தடை செய்யப்படவேண்டும். நித்தியானந்தா, சங்கராச்சாரி, ஆதீனங்கள் உள்ளிட்ட  கும்பல்கள் ஒழிக்கப்பட்டால்தான் சமூகத்தின் ஒழுக்கம் மேம்படும் என்பதை நாம் மக்களுக்குப் புரியவைக்கவேண்டும்

_______________________________________________

புதிய ஜனநாயகம், ஜூன் – 2012

_______________________________________________

வினவுடன் இணையுங்கள்

தொடர்புடைய பதிவுகள்:

வழக்கு எண் 18/9 இரசிக்கப்பட்டதா?

34
வழக்கு-எண்-18-9-விமர்சனம்

வழக்கு-எண்-18-9-விமர்சனம்

ஆழமில்லாத பாராட்டும் நிராகரிப்பும்!

க்தி வாய்ந்த ஒரு கலை தன்னை நாடி வரும் மனிதர்களை, அறிமுகமான வாழ்க்கையினூடாக பழக்கப்பட்ட உணர்ச்சிகளில் ஆழ்த்தி பின்னர் மெல்ல மெல்ல அவர்கள் அறிந்திராத முரண்பாடுகளில் சிக்க வைத்து புத்தம் புதிய உணர்வுகளில் கரை ஒதுக்கி, சமூக உணர்வின் அறத்தை மேம்பட்ட நிலையில் பருக வைத்து ஆற்றுப்படுத்தும். அதனால் அந்தக் கலையின் பாதிப்பிலிருந்து  வாழ்வை உள்ளது உள்ளபடி கொஞ்சம் உறுதியோடு எதிர் கொள்ளும் புத்துயிர்ப்பான உற்சாகத்தை பெறுகிறோம். அந்தக் கலையின் செல்வாக்கிலிருந்து புதிய ஆளுமையின் குருத்துக்கள் உரத்துடன் நம்மிடம் முளை விடத் தொடங்கும். அது சமூக வாழ்வின் புதிய எல்லைகளை எண்ணிறந்த முறையில் திறந்து விடுகிறது. களைப்பூட்டும் வாழ்வின் நெடும் பயணம் இத்தகைய கலை உணர்ச்சியால் சாகசமும், இனிமையும், தோழமையும், போராட்ட உணர்வும் கொண்ட பயணமாகிறது.

அப்படி ஒரு கலை உணர்ச்சியை கொஞ்சம் வலியுடன் உணர்த்துகிறது வழக்கு எண் திரைப்படம். சமீபத்திய ஆண்டுகளில் கலையழகும், பொருளாழமும் கொண்ட இப்படியொரு தமிழப் படத்தை பார்த்திருக்கவில்லை. ஆனாலும் என்ன? “OK.OK” போன்ற குப்பைகளுக்குக் கூட தகுதியற்ற கசடுகள் ஓடும் காலத்தில் வழக்கு எண் எனும் வைரக்கல்லின் ஒளி சிறைபட்டிருப்பது மறுக்க முடியாத ஒரு உண்மை.

வழக்கு எண் திரைப்படம் பிடிக்கவில்லை என்போரை விடுங்கள், பிடித்திருப்பதாக  பாராட்டுபவர்களும் கூட மேலாட்டமான ஒரு மனித நேயம் என்பதாக மட்டும் முடித்துக் கொள்கிறார்கள். இன்னும் கொஞ்சம் வெளிப்படையாகக் கேட்பதாக இருந்தால் அப்படி பிடித்திருக்கிறது என்பவர்களும் வழக்கு எண் திரைப்படத்தை மீண்டும் ஒரு முறை பார்க்க விரும்புவார்களா?

***

வேலு அனாதையாக்கப்பட்ட ஒரு ஏழை. ஜோதி தந்தையை இழந்த சேரி மகள். ஆர்த்தி பள்ளிக்குச் செல்லும் நடுத்தர வர்க்க மாணவி. தினேஷ் ஆடம்பரத்தில் திளைக்கும் மேட்டுக்குடி மாணவன். நால்வரும் வயதில் விடலைப் பருவத்தினர் என்றாலும் வர்க்கத்தில் வேறுபட்டவர்கள். முதலிருவரும் வாழ்வதற்காக வேலை செய்கிறார்கள். பின்னிருவரும் வாழ்விருப்பதால் படிக்கிறார்கள். கூடவே களிக்கவும் செய்கிறார்கள். மாநகரத்தில் ஏழைகளும், பணக்காரர்களும் ஒருவரையொருவர் சார்ந்து வாழ வேண்டியிருக்கிறது. அந்தச் சார்பு பணத்தாலும், உழைப்பாலும் பறிமாறிக் கொள்ளப்பட்டாலும் அவர்கள் ஒரே பண்புகளைக் கொண்டவர்களாக இருக்க முடியுமா?

முடியும் என்று பலவீனமாக சொல்பவர்களும், முடியாது என்று வேகமாக மறுப்பவர்களும் கொண்டிருக்கும் விசாரணையற்ற பொதுப்புத்தியை வாழ்க்கை எனும் உலைக்களத்தில் உருக்கி உண்மையை உணர்ச்சியுடன் உள்ளத்தில் ஏற்ற முனைகிறார் இயக்குநர். எனினும் இந்த படம் பொதுவில் உள்ளே நுழைவதற்கு சிரமப்படும். இது படத்தின் பிரச்சினையா, பார்ப்பவரின் பிரச்சினையா?

இது ஏழைகளின் படமென்றாலும் ஏழைகளுக்கு பிடிக்க வேண்டியதில்லை!

வழக்கு-எண்-18-9-விமர்சனம்கர வாழ்க்கையின் வழமையாகிப் போன ஆம்புலன்ஸின் அலறலோடுதான் படத்தின் டைட்டில் காட்சி துவங்குகிறது. வாடிக்கையாகிப் போன வாழ்க்கைத் தருணங்களில் சாவி கொடுக்கப்பட்ட பொம்மைகளாக இயங்கும் மக்களின் ஓரிரு கணங்களையாவது இந்த துரித வண்டியின் அலறல் இடைமறிக்காமலில்லை. படத்தின் துவக்கத்திலேயே வாழ்வின் முடிவுக்கு முன்னுரையாக விளக்கும் ஆம்புலன்சின் வருகை கதையின் மர்மங்களுக்கு பீடிகை போடுகிறது.

உயரப் பார்வையிலிருந்து விரைந்தோடும் ஆம்புலன்சுக்கு அடுத்தபடியாக மருத்தவமனையின் நெருப்புக் காயங்களுக்கு சிகிச்சையளிக்கும் பகுதியின் மங்கலான தாழ்வாரத்தில் ஒரு தாயின் சக்தியற்ற வெடிப்பு அழுகையை நடுப்பார்வை காட்சியினூடாகக் கேட்கிறோம். சற்று தொலைவில் ஆர்த்தி பெற்றோருடன் பதட்டத்தோடும் விம்மலோடும் நிற்கிறாள். சூழ்நிலைகளின் உணர்ச்சிகளை ஈவிரக்கமின்றி ஒதுக்கிவிட்டு தொழில் நுட்ப கேள்விகளை தொடுக்கும் போலீசார். காவல் ஆய்வாளர் குமாரசாமியின் வருகைக்குப் பிறகு கதையின் ஓட்டம் காவல் நிலையத்திற்கு சென்று விடுகிறது.

அதிகாரமும், ஆணவமும், கேட்பார் கேள்வியின்றி குடி கொண்டிருக்கும் காவல் நிலையமும், காவல் ஆய்வாளரின் அறையும் மொத்தப் படத்தின் கதை சொல்லிக் களனாக, மேடையாக மாறுகிறது. அழைத்து வரப்படும் வேலு கறை படிந்த பற்களுடன், இனம் புரியாத தயக்கத்துடன், இருந்தே ஆக வேண்டிய பயத்துடனும் தனது கதையை ஆரம்பிக்கிறான். அனுசரணையான கேள்விகள் மூலம் குமாரசாமி முழுக் கதையையும் வெளிக் கொண்டு வருகிறார். நாற்காலியில் அமர்ந்திருக்கும் நாமும், அவரும், நின்று கொண்டிருக்கும் வேலுவின் பலவீனமான குரலிலிருந்து வரும் வரலாற்றினை கேட்கிறோம். நிற்க வைத்துக் கேட்கப்படும் கதை உட்கார்ந்திருப்பவர்களின் மனதை தைக்க வேண்டுமென்றால் நாமும் நிற்பவனோடு பயணிக்க வேண்டும்.

ஆம்புலன்சு, மருத்துவமனை, காவல் நிலையம் என்று நகரத்து வாழ்வின் இரகசியங்களை வெளிப்படையாக பறைசாற்றும் வேகமான காட்சிகளுக்குப் பிறகு, முடிவுகளின் புதிர்களை அவிழ்க்கும் வண்ணம் ஆரம்பத்திற்கு செல்கிறோம். வேலு அனாதையான கதை ஆரம்பிக்கிறது. இந்தக் கதை முடிவில் அவனது நிலை மாறிவிடவில்லை என்றாலும் அவனைப் போன்றதொரு உறவின் கை அவனோடு நட்பு பாராட்டுகிறது. முடிவும், ஆரம்பமும் மாறி மாறி நம்மை கதைக்குள் இழுத்துச் செல்கின்றன.

வழக்கு எண் ஒரு ஏழையின் கதை என்பதை விட பரம ஏழையின் கதை என்று சொல்வது பொருத்தமானது. பாதையோரம் வேலை செய்து, உண்டு, உறங்கி வாழும் தெருவோர மனிதர்கள் பொது வாழ்வின் நியதிகள் எதுவும் இல்லாமல் வாழ்பவர்கள். மூடுண்ட காரிலும், ஏ.சி அறையிலும் உலகை சிறை வைத்திருப்பவர்களுக்கு சாலையோர மனிதர்கள் என்ற ஜீவன்களுக்காக செலவில்லாமல் கொஞ்சம் கருணை காண்பிப்பார்களே ஒழிய அந்த உலகினுக்குள் நுழைந்து பார்க்கும் தைரியமோ தேவையோ அற்றவர்கள்.

இருப்பினும் இயக்குநரும், வேலுவும் அன்னிய வாழ்விலிருக்கும் விதேசி மனிதர்களை இழுத்து வந்து அந்த கையேந்தி பவனுக்குள் சாப்பிட அழைத்துச்  செல்கிறார்கள். அப்போது மூக்கை சுளிக்கிறோமா, முகத்தை, கண்களை, காதுகளை, நாக்கை கொடுக்கிறோமா என்பதிலிருந்து இந்தப் படத்தோடு நம்முடைய உறவு என்ன என்பது தீர்மானிக்கப்படுகிறது.

தரும்புரி, வட இந்திய முறுக்குக் கம்பெனி, இறுதியில் சென்னையின் கையேந்தி பவன் என்று அலைக்கழிக்கப்படும் வேலு கிராமப்புறங்களிலிருந்து விரட்டப்படும் மக்களின் ஒரு வகை மாதிரி. இடைவெளிக்கு முந்தைய பகுதியில் வேலுவின் கதையே அழுத்தமாகக் காட்டப்படுகிறது. விவேகமற்ற வேகத்தையும், கேலிக்குரிய திருப்பங்களையும், பொருளற்ற நகைப்புக்களையும், பெண்ணுடலை நுகர வைக்கும் குத்தாட்டத்தையும் கொண்ட ‘விறுவிறுப்பான’ படங்களில் சிக்குண்டிருக்கும் இரசிகர்கள் எவரையும் வேலுவின் கதை ஈர்ப்பது சிரமம்.

வழக்கு-எண்-18-9-விமர்சனம்வேலுவைப் போன்றே வாழ்வில் தத்தளிக்கும் வேலுக்களும் இந்தப் படத்தை இரசிப்பது கடினம்தான். ஏழைகளுக்கே இந்தப் படம் பெரிய அளவுக்கு பிடிக்காது என்ற உண்மையை ஆரம்பத்திலேயே சொல்லி விடுவோம். ஏழைகள் எவரும் தங்களது கதைகளை ஒரு சினிமாவில் காட்டப்படும் முக்கியத்துவம் கொண்டது என்று கருதுவதில்லை. நகரத்து பெப்சி-கோக் வாழ்வை உறிஞ்சிக் கொண்டே கிராமத்தில் இழந்த பதநீர் வாழ்வு குறித்து ஆட்டோகிராஃப் நினைவுகளாக பெருமையுடன் பீற்றும் நடுத்தர வர்க்கத்திற்கு ஊர் நினைவுகள் இனிக்குமென்றால் ஒரு ஏழைக்கு கசக்கவே செய்யும். அவனைப் பொறுத்த வரை ஊர் என்பது வாழ முடியாத, அன்னிய பிரதேசங்களுக்கு துரத்தியடிக்கும் ஒரு வெறுப்பான இருண்ட உலகம்.

அதனால்தான் ஒரு ஏழை, ஒரு பணக்காரப் பெண்ணை காதலிப்பது போன்ற படங்களையே உலகமெங்கும் காட்டுகிறார்கள். எம்.ஜி.ஆர் காலத்திலிருந்து காமரூனின் டைட்டானிக் வரையும் இந்த ஃபார்முலாவே வெற்றிகரமான கதை மாதிரி. நகரத்து நெரிசலில் உதிரிப் பாட்டாளியாக பிதுங்கி வாழும் அந்த விரட்டப்பட்ட ஏழைகளுக்கு ஒரு சிம்புவோ, தனுஷோ சேரியிலிருந்து நிறைய சேட்டைகளுடன் பணக்கார உலகத்திற்கு மாறும் கதைகளையே அவர்கள் விசில் பறக்க இரசிப்பார்கள்.

சொத்துடைமை வாழ்வால் ஏற்றத் தாழ்வாக பிரிந்திருக்கும் இந்த உலகை ஒரு இயற்கையான அமைப்பு போல மாற்ற முடியாது என்று கருதும் ஏழைகளின் ஆழ்மனத்திலிருக்கும் வாழ்க்கை குறித்த ஆசை இத்தகைய அபத்தமான ‘கனவு’ படங்கள் மூலம் தன்னைத் தணித்துக் கொள்கிறது.

கூடவே மனித சாரத்தை உறிஞ்சிக் கொள்ளும் அவல வாழ்விற்கு மசாலா நிறைந்த குத்தாட்டப் படங்களே பொருத்தமான போதையாக சிந்தனையில் இறங்குகின்றன. ஏழைக்களுக்கென்று குறைந்த பட்ச வாழ்க்கையை கிடைக்கச் செய்யாமல் இந்த போதை ரசனையை மாற்ற முடியுமா? சீசன் காலங்களில் தொடர்ந்து இரவு பகலென்று உழைப்பதற்கு பான்பராக்கும், மதுவும் கை கொடுக்கும் போது அவர்களிடம் சென்று போதைக்கு எதிரான விழிப்புணர்வு ஊட்ட நாம்  விரும்பினாலும் அதை நிறைவேற்றுவது சாத்தியமா?

எனினும் ‘மேன் மக்களின்’ இன்ப துன்பங்களையே கதையாக, செய்தியாக, நாட்டு நடப்பாக உணர்த்தப்படும் சூழ்நிலைக்கு இவர்களும் விதிவிலக்கல்ல. கஞ்சிக்கு வழியில்லை என்ற போதும் சீதையை மீட்க இராமன் கொண்ட துன்பங்களையும், திரௌபதியின் சபதத்தை நிறைவேற்றிய பாண்டவர்களும்தான் நெடுங்காலம் நமது மக்களின் கண்ணீரை வரவழைத்துக் கொண்டிருந்தார்கள். இந்த அடிமைத்தன வரலாறு இன்றும் மாறிவிடவில்லை.

ஆனால் சற்று வசதிகள் நிறைந்த மேம்பட்ட வாழ்க்கையை வாழும் நடுத்தர வர்க்கம் கூட வேலுவின் கதையை இரசித்து விடுமா என்ன? வழக்கு எண் திரைப்படம் பொதுவில் ஏழைகளை நல்லவர்களென்றும், பணக்காரர்களை கெட்டவர்களாகவே சித்தரிப்பதாகவும், இது பொதுப்புத்தியை கைப்பற்ற நினைக்கும் மலிவான உத்தியென நடுத்தர வர்க்க ‘அறிவாளிகள்’ பலர் அலுத்துக் கொள்கின்றனர்.

ஆனால் இயக்குநரோ, படமோ அப்படி ஒரு ‘மலிவான’ உத்தியைக் கையாளவில்லை. இருந்திருந்தால் அது அனல் பறக்கப் பேசும் விஜயகாந்த் படங்களாக சரிந்திருக்கும். மாறாக இரு வர்க்கங்களும் வாழ்க்கை குறித்த மதிப்பீடுகள், அறங்கள், சமூக உறவுகளை எப்படி உருவாக்கிக் கொள்கின்றது, பேணுகின்றது, அவற்றின் சமூக விளைவுகள் என்ன என்பதைத்தான் படம் இதயத்திற்கு நெருக்கமான குரலில் மறக்க முடியாத ஒரு பாடலைப் போல இசைக்கின்றது.

அந்தக் கவிதையை இரசிக்க முடியவில்லை என்ற பிரச்சினை நடுத்தர வர்க்கத்தின் பிரச்சினையோடு தொடர்புடையது. வேறு வார்த்தைகளில் சொல்வதென்றால் வர்க்கம்தான் ஒரு மனிதனுடைய வாழ்வையும், பண்பையும் தீர்மானிக்கிறது என்பதை, தன்னுடைய வாழ்க்கை தன்னுடைய அறிவால் மட்டும் உதித்த ஒன்று என்று பாமரத்தனம் கலந்த மேட்டிமைத்தனத்துடன் நம்பும் நடுத்தர வர்க்க அறிவாளிகள் இதை ஏற்க மாட்டார்கள். அல்லது தங்களது வாழ்க்கையை சமூகப் பேரியக்கத்தோடு ஒப்பிட்டு பார்த்து ஒரு மெல்லிய சுயவிமரிசனத்தைக் கூட அவர்களால் செய்ய முடியாது.

இதை படத்தோடும், குறிப்பான பாத்திரச் சித்தரிப்புகள் வரும் கதையோட்டத்தோடும் பரிசீலிப்போம்.

குடும்ப பாசத்தின் தரம், வர்க்கத்தில் வேறுபடுவது நிஜம்!

“தாயில்லாமல் நானில்லை” என்று ஓகேனக்கல் பாறையில் மேக்கப் போட்ட தாயை கிட்டப் பார்வையில் காட்டி, தூரப் பார்வையில் மலைகளின் பின்னணியில் எம்.ஜி.ஆர் பாடும் பாடல் நெடுங்காலம் செல்வாக்கு செலுத்திய தாய்மை குறித்த ஒரு சினிமா சித்திரம். உண்மையான தாய்மை, தந்தைமை குறித்து தமிழ் சினிமா இதுவரை சித்தரிக்கவில்லை. சித்தரித்ததெல்ல்லாம் பெற்றோரை தெய்வம் போல பணிந்து வணங்க வேண்டிய அடிமைத்தனமாகவும், மணிரத்தினம் போன்றோர் படத்தில் வயதுக்கு மீறிய அரட்டையடிக்கும் மேட்டுக்குடி குழந்தைகளின் செல்லத் தொந்தரவாகவும்தான்.

கந்து வட்டிக்கு கடன் வாங்கி விளையாத பயிரை வைத்துக் கொண்டு கடனை அடைக்க முடியாத அவலத்தில் வேலுவின் பெற்றோரை பார்க்கிறோம். கடனை அடைக்க வேலுவின் தாயாரை விபச்சாரத்தில் கூட ஈடுபடுத்த முடியாதபடி அசிங்கமானவள் என்று குதறும் கந்து வட்டியின் கோரமுகத்தைக் காண்கிறோம். கிட்னி விற்றாவது மானத்தை மீட்போம் என்கிறார் தந்தை. அதுவுமில்லை என்றால் விஷம் குடித்து மரிப்போம் என்பதோடு இது மகனுக்கு தெரியக்கூடாது என்றும் அந்த ஏழைப் பெற்றோர்கள் கவலைப்படுகிறார்கள்.

இவையெல்லாம் நாளிதழ்களில் நீர்த்துப் போகும் செய்தியாக கருதப் பழக்கப்படுத்தப்ட்டிருக்கும் வாசிப்பு மனங்களுக்கு ஒரு பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தப் போவதில்லைதான். ஆனால் இத்தகைய சூழலில் குழந்தைப் பாசம், பெற்றோர் அரவணைப்பு என்பது எப்படி இருக்க முடியும் என்பதைக் கூட அவர்கள் கவனித்திருக்க மாட்டார்கள். ஏனெனில் அந்தக் கவனிப்பு பின்னர் ஆர்த்தி, தினேசின் குடும்ப உறவுகளோடு ஒப்பிட்டு பார்க்க வேண்டியதற்கு முக்கியமானது.

பெற்றோரின் தற்கொலை பேச்சை தற்செயலாக கேட்கும் வேலு பள்ளி செல்லும் வயதென்றாலும் அழுதவாறு தானிருக்கும் போது அவர்கள் இறக்க நினைப்பது சரியா, தான் அந்தக் கடனை அடைப்பேன் என்று முறுக்கு கம்பெனி ஏஜெண்டிடம் தன்னை அடகு வைக்கிறான். கடனும் அடைக்கப்படுகிறது. ஆட்டு மந்தை போல வாழும் முறுக்குக் கம்பெனியின் அவலத்தை கடன், பெற்றோர் பாசம் பொருட்டு சகித்துக் கொள்கிறான்.

ஆர்த்தியை பிட்டுப் படமாக எடுத்து நண்பர்களிடம் தனது ஆண்மையை காண்பிக்க வேண்டிய ஹீரோ சாகசத்தில் இருக்கும் தினேஷ் தனது தாயிடம் எள்ளும் கொள்ளுமாக வெடிக்கிறான். தனது கணக்கில் 50,000 ரூபாய் போடுமாறு எரிச்சலுடன் உத்திரவிடுகிறான். தாயோ அப்பனைப் போல மகனும் காசு காசு என்று அலைகிறானென சலித்துக் கொள்கிறாள். அப்படி அவன் என்னதான் செலவு செய்கிறான் என்று வியக்கவும் செய்கிறாள். ஆனாள் அவளும் நன்கொடைக் கொள்ளை மூலம்தான் பள்ளி நடத்தும் பிரபலமான வாழ்கையை கட்டியமைத்திருக்கிறாள். தொலைக்காட்சி விவாதத்தில் தான் நன்கொடை வாங்குவதாக யாராவது நிரூபிக்க முடியுமா என்று சவாலும் விட்டு நடிக்கிறாள். அவர்களுக்கிடையே இருக்கும் உறவு எத்தகையது?

ஊழல் பணத்தை மேலிருந்து கீழ் வரை பங்கு போடும் ஒரு ஆர்.டி.வோ அலுவலக குமாஸ்தாக்களிடம் எத்தகைய நட்பு இருக்குமோ அப்படித்தான் தினேஷ், அவனது தாயின் உறவும் இருந்தாக வேண்டும். இங்கே இரத்த உறவு இருந்தாலும் அது மரபோடு மாசுகளடங்கிய உறவுதான். இரத்த உறவை வைத்து தாழ்த்தப்பட்ட மக்கள் மீது வன்முறையை கட்டவிழ்த்து விடும் ஆதிக்க சாதி வெறியர்கள் தங்களுக்குள் அன்னியோன்யமாய் இருப்பார்கள். அந்த அன்னியோன்னியத்தின் யோக்கியதை என்ன என்பது அவர்களது இரத்த உறவு கொண்ட பெண்ணை ‘கீழ்’ வகை இரத்தம் கலந்து கொள்ள முனையும் போது வெட்டிக் கொல்வதிலிருந்து தெரிய வரும். அது சாதிவெறியின் விளைவு என்றால் இது பொருள் வெறியின் விளைவு. இரண்டு விளைவுகளிலும் அடிப்படை மனித நேயம் இருப்பதில்லை. அதனாலேயே சொந்த உறவும் வெற்று ஜம்பத்தின் பால் வேர் கொண்டிருக்கும்.

தினேஷும் அவனது தாயும் ஒருவருக்கொருவர் அறிந்து கொள்ள விரும்பாத வாழ்க்கையை வாழ்கிறார்கள். அந்த வாழ்க்கையை நடத்துவதற்கு பெரும் பணம் தேவை என்ற அளவில் அவர்களுக்கிடையே ஒத்த புரிதல் இருக்கும். தேவைப்பட்ட பணம் வந்த பிறகு அதன் விளைவு என்ன என்பதும் கூட நல்லறங்களின் பால் இருக்கவேண்டியதில்லை. ஆசிட் அடித்த மகனை காப்பாற்றுவதற்கு பள்ளி பிரமுகர் என்ற அந்தஸ்தோடு கொஞ்சம் தாய்ப்பாசமும் கூட இருக்கலாம். ஆனாலும் மகனது கிரிமினல் நடவடிக்கை ஊடகங்களில் வெளிவந்தால் தனது பள்ளியின் பெயர், தனது வி.ஐ.பி அந்தஸ்து எல்லாம் போய்விடும் என்றுதான் அவள் கவலைப்படுகிறாள். அந்த அந்தஸ்துதான் அவளுக்கென்று வசதியான ஒரு மேட்டுக்குடி வாழ்வை வழங்கியிருக்கிறது. எனில் இந்த ‘பாசத்தை’த் தீர்மானிப்பது எது?

கணவனை இழந்து வயதுக்கு வந்த மகளை வேலை செய்ய வைத்து சேரி வாழ்க்கைதான் என்றாலும் எப்போதும் சிடுசிடுத்தவாறு இருக்கிறாள் ஜோதியின் தாய். விதவை மகளென்றால் சமூகத்திலிருக்கும் காளை ஆண்கள் சுலபத்தில் அடக்க முடியும் என்று அலைவார்கள். அந்த சூழ்நிலையை தனது இரட்டை எச்சரிக்கை உணர்வு மூலம் எப்போதும் எதிர் கொள்கிறாள் அந்த தாய். தற்செயலாய் ஜோதியை சந்திக்கும் வேலுவை அவள் எப்போதும் பொறுக்கி என்றே வசைபாடுகிறாள்.

ஏழ்மை என்பதினாலேயே இங்கு தாய்ப்பாசம் எப்போதும் அன்பை வெளிப்படுத்த வேண்டுமென்பதில்லை. பாதுகாப்பற்ற சமூகத்தில் வசைகளே பாதுகாப்பாக இருக்குமென்பதை இந்தத் தாயின் மூலம் உணர்கிறோம். ஆனாலும் அந்த தாய் என்றாவது புன்முறுவலுடன் தனது மகள் வாழ்க்கை அழகை ஆராதிப்பாளா என்பது ஒரு புதிரான கேள்வி. ஜோதியுடன் குடும்பம் நடத்துவதாய் கனவு காணும் வேலுவின் குறு நாவலில் அந்தத் தாயின் சிரிப்பை ஒரு முறை மட்டும் காண்கிறோம். அதுவும் அவன் அவளைப் போல பொறுக்கி என்று பேசிக்காட்டி அந்த புன்முறுவலை தாய், மகள் இருவரிடமும் வரவழைக்கிறான்.

ஆர்த்தியின் நடுத்தர வர்க்கத்தைப் பொறுத்தவரை பெற்றோர் பாசம் என்பது மேற்கண்ட இரண்டு எதிர்மறை வர்க்கங்களின் கலவையும் ஏதோ ஒரு விகிதத்தில் கலந்த ஒன்று. எனினும் அந்தக் கலவையில் மேலோங்கி இருக்கும் மதிப்பீடுகள் எந்த வர்க்கத்திற்குரியவை? மாதத்திற்கு ஒரு முறை பிறந்த நாள் கொண்டாடும் தினேஷ், ஆர்த்திக்காகவும் கொண்டாடுகிறான். அவளோ, பார்ட்டிக்கு போகக் கூடாது என்று சினம் கொண்ட தந்தையின் சீற்றத்தால் வெறுப்படைகிறாள். 12-ம் வகுப்பு படிக்கும் மாணவன் அதுவும் மவுண்ட் ரோடு ஓட்டல் ஒன்றில் பார்ட்டி கொடுத்து தனது மகளையும் இரவில் அழைக்கிறான் என்று எல்லா அப்பாக்களையும் போல அவர் கோபப்படுகிறார். அவர் கோபப்பட்டு கத்துவதை ஒரு அநாகரீகமான செயலாக எண்ணி முகம் சுளிக்கிறார் ஆர்த்தியின் தாய்.

ஆர்த்தியோ தனது வயதினையொத்த பருவத்தினரின் சின்ன சின்ன சந்தோஷங்களைக் கூட பெற்றோர் புரிந்து கொள்வதில்லை என்பது போல எரிச்சலடைகிறாள். நவநாகரீகத்தையும், கேளிக்கைகளையும் எண்ணிறந்த முறையில் பெருக்கி வரும் மாநகரத்து வாழ்க்கையில் இந்த வேறுபாட்டின் விரிசல் அதிகரிக்குமா, மங்கிப் போகுமா?

தினேஷுடன் காதல் மலரும் நேரத்தில் அவனது திருட்டு கேமரா நடவடிக்கைகளால் அதிர்ச்சியுறும் ஆர்த்தி அதை தன்னுடன் நெருக்கமாக இருக்கும் தாயுடன் கூட பகிர்ந்து கொள்ள முடியவில்லை. தனது பிரமோஷனை இனிப்புடன் மகளிடம் பகிர்ந்து கொள்ளும் தாய், ஆர்த்தி 12-ம் வகுப்பு முடித்தவுடன் மேற்படிப்பு, அமெரிக்கா என்று கனவுகளை நனவாக்கும் மற்ற நடுத்தர வர்க்க தாய்கள் போலப் பாசம் கொண்டவள்தான். ஆனால் மேலே முன்னேறத் துடிக்கும் படிநிலை, வாழ்க்கை குறித்த மதிப்பீடுகளையும் அப்படி முன்னேற்றிச் செல்லாமல் வெளிப்படையான சுயநலத்தை மட்டும்தான் கற்றுக் கொடுக்கிறது. அதனால்தான் ஆர்த்தி தனது தவறினை, பிரச்சினையை, தினேஷின் ஆபாசத்தைக்கூட தாயிடம் நெருக்கமாக வெளிப்படையாக பகிர்ந்து கொள்ள முடியவில்லை.

வேலுவின் பெற்றோர் கூட தனது தற்கொலை முடிவை மகனிடம் மறைக்க வேண்டுமென்று கருதுகிறார்கள். வேலுவும் தனது பெற்றோர் முகங்களையே மறக்க செய்யும் அளவு நெடுங்காலம் முறுக்குக் கம்பெனியில் வேலை பார்த்த கொடிய வருடங்களை அதே பெற்றோரிடம் மறைக்கவே செய்கிறான். அவர்களும் கற்பாறைகளின் மத்தியில் கடுமுழைப்பு வேலை செய்வதை மறைக்கவே செய்கிறார்கள். இங்கே மற்றவர் நலத்திற்க்காக ஒருவருக்கொருவர் துன்பப்படுவதை மறைக்கிறார்கள். இந்த மறைத்தல் ஆர்த்தியின் மறைத்தலோடு வேறுபடுகிறது. ஆர்த்தியின் சுயநலத்தால் வரும் போலித்தனமும், வேலுவின் சுயநலமற்ற வாழ்வால் வரும் பொறுப்புணர்வையும் புரிந்து கொண்டால் இந்த வேறுபாட்டை புரிந்து கொள்ள முடியும்.

பள்ளிக் கல்வி, சமூகக் கல்வி – எது வலிமையானது?

ழக்கு எண் திரைப்படத்தின் பிரதான உணர்ச்சி எது? வேலுவின் காதலும் காதலின் அவலமும்தான் படத்தின் இறுதியில் பார்வையாளரை அதிகமும் சோகம் கொள்ள வைக்கும் உணர்ச்சி என்றால் மறுப்பதற்கில்லை. விடலைப் பருவத்தின் காதலை வியந்தோதும் படங்களை ஏராளம் பார்த்திருக்கிறோம். இங்கும் கூட அத்தகைய விடலைப் பருவத்தின் காதல்தான் வேலுவின் காதலும். ஆனால் இங்கே வழமையாக தமிழ் சினிமா சித்தரிக்கும் காதலின் அற்பவாதத்திலிருந்து வேறுபடும் ஒரு காதலை பார்க்கிறோம்.

கிராமத்து ஏழைகளும், நகரத்து சேரி மைந்தர்களும்  மிகு இளம் வயதிலேயே திருமணம் செய்து விடுகிறார்கள். அதனால் காதலும் கூட அத்தகைய வயதுகளில் சகஜம்தான். இதை வயதுக் கோளாறு என்று பார்ப்பதை விட வாழப் போராடும் துன்பத்தை தனியொருவனாக சுமப்பதை விட இருவராக எதிர்கொள்ளும் ஒரு தேவையும் இருக்கிறது. தருமபுரி வீட்டிலிருந்து விடைபெறும் போது வேலுவின் காதுக்கும், நம்முடைய காதுகளுக்கும் பள்ளியில் அடிக்கும் மணி ஒலிக்கிறது.

“தாயின் மணிக்கொடி பாரீர், அதை தாழ்ந்து பணிந்து புகழ்ந்திட வாரீர்” என்று அவனது பள்ளித் தோழர்கள் பாடும் பாட்டைக் கேட்டவாறே முறுக்கு ஏஜெண்டின் இரு சக்கர வாகனத்தில் ஏக்கத்தோடு பயணிக்கிறான் வேலு. “பள்ளி செல்வோம் பயன்பெறுவோம்” என்ற பள்ளி சுவரெழுத்தை ஒரு எருமைமாடு கத்தி கேலி செய்கிறது. ஆயினும் இதை ஒரு குழந்தை உழைப்பாளர் பிரச்சினையாக மட்டும் பார்ப்போருக்கு படம் வேலு, தினேஷ் கதைகளின் மூலம் வேறு ஒன்றை உணர்த்துகிறது. வேலு பள்ளிக்கூடம் செல்லவில்லை என்றாலும் இந்த சமூகத்தின் பொறுப்பான குடிமகனாக வளர்கிறான். தினேஷ் பள்ளிக்கூடம் செல்வதால் ஒரு பொறுக்கியாகத்தான் உருப்பெறுகிறான். ஆகவே பள்ளிக் கல்வியை விட சமூகக் கல்வி என்பதுதான் முக்கியம். அதை வேலுவுக்கு வாழ்க்கை கற்றுக் கொடுக்கிறது, தினேஷுக்கு வாழ்க்கை கெடுத்து கற்பிக்கிறது. இரண்டு வாழ்க்கைகளின் அடிப்படை நியதிகளும் அப்படி வேறுபடுகின்றன.

ஆர்த்தியோ இந்த இரண்டுக்குமிடையிலான போராட்டத்தில் இருக்கிறாள். அவளது பள்ளி வாழ்க்கையும், தோழிகளின் நட்பும், புதிய செல்போன்கள் பற்றியும், அதை பரிசாகத் தரும் தினேஷின் அன்பையும் ஒட்டியே பேசப்படுகிறது. சைக்களில் செல்லும் ஆர்த்தி, காரில் செல்லும் தினேஷின் வாழ்க்கையை ஏக்கமாகக் கொண்டிருக்கிறாள். செல்பேசி வக்கிரத்தை கண்டிக்கும் பெற்றோர்கள் இந்த ஏக்கத்தினை நிச்சயம் தவறு என்று சொல்ல மாட்டார்கள்.

தாய்மைக் காதலும், வக்கிரக் ‘காதலு’ம்!

டத்தில் வேலுவின் காதல் வலிந்து திணிக்கப்படும் ஒன்றாக இல்லை. அந்த வகையில் இது காதலுக்காக தனிச்சிறப்பாக கட்டியமைக்கப்பட்ட கதை அல்ல. பெற்றோர் மரணத்தையே மறைத்துவிட்ட முறுக்கு கம்பெனி முதலாளியோடு சண்டையிட்டு சென்னை வரும் வேலுவை ரோஸி எனும் விலை மாது இரக்கம் கொண்டு ஒரு கையேந்தி பவனில் சேர்த்து விடுகிறாள். கையேந்தி பவனின் அன்றாட வேலைகளின் போது தற்செயலாக அவன் ஜோதியைச் சந்திக்கிறான். அவளது அம்மா ஒருசிடு மூஞ்சி என்றால் மகளோ உணர்ச்சிகளையும், வார்த்தைகளையும் காட்டாதபடி, அழுத்தமானவள். அவளுண்டு அவள் வேலையுண்டு என்று இருப்பவள். அந்த அமைதியான பெண்ணோடு ஏற்பட்ட தற்செயலான சந்திப்புகள் வேலுவை ஒரு பொறுக்கி போல காட்டி விடுகின்றன. இதனால் அவன் ஜோதியையும், அவளது தாயையும் ஒரு தொந்தரவு போலவே கருதுகிறான்.

கொஞ்ச நாட்களாக ரோஸி அக்காவைக் காணாமல் வருத்தப்படும் வேலு அவளைத் தேடி சேரிக்குச் செல்கிறான். அங்கு தற்செயலாக ஜோதியின் குடிசையைப் பார்க்கிறான். அவளோ அடுத்த வீட்டிலிருக்கும் மன வளர்ச்சியற்ற குழந்தையோடு அன்பாக பழகுகிறாள். அடுத்த காட்சியில் அவள் அந்தக் குழந்தையை சுமந்து சென்று பள்ளியில் விடுகிறாள். மனித உறவுகளில் மற்றவருக்கு பணிவிடை செய்யும் போது பதிலுக்கு நன்றியை முகத்திலோ, வார்த்தைகளிலோ, நடத்தையிலோ காட்டத் தெரியாதவர்கள் இந்த மனவளர்ச்சி குன்றிய குழந்தைகள். அவர்களோடு உறவாடுவதற்கென்று ஒரு பெரிய மனம் வேண்டும். பலனை எதிர்பார்க்காத பெருங்கருணை இல்லாமல் அந்த உறவு சாத்தியமில்லை. ஜோதிக்கு அது இருக்கிறது என்பதை கண்டறியும் வேலு முதன்முறையாக அவளை நேசத்துடன் பார்க்கிறான்.

அப்போது நினைவுக் காட்சியில் அவனது அம்மா வந்து போகிறாள். மண் சரிந்து தருமபுரியில் புதையுண்ட தனது தாயை மீண்டும் கண்டெடுத்தது போன்ற ஒரு உற்சாகத்தை அடைகிறான். காட்சியின் கருப்பொருளை பார்வையாளர்கள் கண்டு கொள்ளாமல் போகும் அபாயம் இருக்குமென கருதும் இயக்குநர் பின்னர் இதையே வேலுவின் வார்த்தைகள் மூலம் மீண்டும் சொல்கிறார். “யாரு என்ன்னன்னு பாக்காம என் அம்மாவும் இப்படித்தான் பலருக்கும் உதவும், ஜோதி மட்டும்  கிடைத்தால் எனக்கு எங்கம்மாவே கிடைச்ச மாதிரி” என்று அவன் உடன் வேலை பார்க்கும் சின்னச்சாமியிடம் பகிர்ந்து கொள்கிறான். பிடிக்காத பெண் பிடித்துப் போகும் சூட்சுமத்தை அறிந்து கொண்ட சின்னச்சாமியும் உடனே காதலை தெரிவிக்குமாறு கூறுகிறான். ஆனாலும் அந்க் காதலை இறுதிக் காட்சிக்கு முன்பு வரை அவனே நேரிட்டு தெரிவிக்கவில்லை.

ஜோதியின் பேசாத விழிகளில் தனது தாயின் நேசத்தை அடையாளம் காணும் வேலுவின் காதல் தமிழ் சினிமாவுக்கு புதிதில்லையா? அழகு, ரசனை, அந்தஸ்து போன்றவற்றின் பொய்யானக் கற்பிதத்திலிருந்து கொசுக்களைப் போல உற்பத்தி செய்யும் தமிழ் சினிமா மற்றும் சமூகக் காதலிலிருந்து வேறுபட்டு, அந்த அலங்கார படிமங்களை உடைத்துக் கொண்டு மனித நேயத்தின் அழகிலிருந்து ஒரு காதல் உருப்பெறுகிறது என்பதை எத்தனை பேர் இரசித்திருப்பார்கள்?

வழக்கு-எண்-18-9-விமர்சனம்தினேஷூக்கு காதல் ஒரு பிரச்சினை அல்ல. வம்படியாக ஒரு பெண்ணை துரத்தி, அடிமைத்தனத்துடன் வற்புறுத்தி, காதலித்தே ஆகவேண்டுமென தெறிக்கும் தமிழ் சினிமாவின் டார்ச்சர் காதல் தற்போதைய விடலைகளிடம் கொஞ்சம் மாறி வெளிப்படுகிறது. எத்தனை பெண்களை வீழ்த்தினோம், மடியாத மாட்டை படிய வைத்த ஆண்மை என்று எண்ணிக்கையில் பெருமிதம் பார்க்கும் அவர்களை தொழில்நுட்பம் வேறு உசுப்பி விடுகிறது. விளைவு  செல்பேசிகளில் அவர்களது வேட்டை வக்கிரங்கள் படங்களுடன் தமது பேராண்மையை பறை சாற்றுகின்றன.

இத்தனை நாளைக்குள் ஆர்த்தியின் குளியலறை காட்சியை மட்டுமல்ல, படுக்கையறைக் காட்சியைக் கூட கொண்டு வர முடியும் என்பதிலிருந்து தினேஷின் ஆளுமை நிரூபித்துக் கொள்ளத் துடிக்கிறது. தாயிடம் எரிந்து விழும் தினேஷ், ஆர்த்தியிடம் அத்தனை நல்லவன் போல இங்கிதமாக நடிக்கிறான். அவளது தந்தை திட்டுவதைக் கூட சரியானது என்றே வலை வீசுகிறான். அவனது மலிவுத்தனத்தை காட்டும் விதமாக “மாமா நீங்க எங்க இருக்கீங்க” என்ற ஆர்த்திக்காக அவன் தெரிவு செய்திருக்கும் அழைப்பு ட்யூனே சொல்லி விடுகிறது.

ஆர்த்தியை வீழ்த்துவதற்கு காஸ்ட்லியான செல்போன், காஃபி ஷாப், ஹாட் அன்ட் கியூட் எம்.எம்.எஸ், பீச் ரிசார்ட் போன்றவையே அவனுக்கு போதுமானவையாக இருக்கின்றன. எல்லாம் காசை விட்டெறிந்தால் கிடைத்து விடும் சமாச்சாரங்கள். ஆர்த்தியின் கோணத்திலிருந்து பார்க்கும் போதும் இவையே அவள் அவன் மீது கொள்ளும் ஈர்ப்பு அல்லது காதலுக்கு போதுமானவையாக இருக்கின்றன. முதல் சந்திப்பிலேயே கெமிஸ்டிரி சந்தேகத்தோடு வரும் அவன் பேசும் காஸ்ட்லியான செல்போன் அவளது கவனத்தை ஈர்க்கிறது.

அவனது செட்டப் பிறந்த நாள் பார்ட்டிற்கு போக முடியவில்லை என்று வருத்தப்படும் ஆர்த்தியை அவளது தோழிகள் மேலும் குற்ற உணர்வு அடைய வைக்கிறார்கள். பின்னர் அவன் புத்தம் புதிய செல்பேசியை பரிசாக தரும்போது ஆர்த்தி மட்டுமல்ல, அவளது தோழிகளும் சரணடைந்து விடுகிறார்கள். ஆர்த்திக்கு ஆரம்பத்தில் சிறிது தயக்கம் இருக்கும் போது பழகிப்பாரு, பணக்க்காரன்தானே, நல்ல வாய்ப்பில்லையா, பிடிக்கவில்லை என்றால் பின்னர் உறவை முறித்துக் கொள் என்று ஆர்த்தியின் வகுப்புத் தோழி ஸ்வேதா ஆலோசனை கூறுகிறாள்.

ஆர்த்தியும், தினேஷும் சந்தித்துக் கொள்ளும்போது இருவரது மனக் கிடைக்கையும் என்னவென்று நாம் அவர்களது பின்னணிக் குரல் மூலம் அறிகிறோம். தினேஷின் கவன ஈர்ப்பு நடவடிக்கைகள் மீது ஆர்த்திக்கு சற்று அலுப்பு, ஆர்த்தியின் நல்லொழுக்க கவச நடவடிக்கைகள் மீது தினேஷுக்கு வெறுப்பு. ஆனாலும் கவன ஈர்ப்பு சாகசம் ஒரு நடுத்தர வர்க்க மாணவியை வீழ்த்திவிடப் போதுமானது. அதேநேரம் ஆர்த்தி ஒரு கெட்ட பெண் இல்லை என்பதையும் சொல்ல வேண்டும்.

ஆனால் அவள் நல்ல விதமான பெண் என்பதற்கு என்ன முகாந்திரம்? படத்தில் வரும் இந்த செல்பேசி ஆபாசம் பார்வையாளர்களில் இருக்கும் நடுத்தர வர்க்க பெற்றோர்களுக்கு ஒரு பாடம் என்ற வகையில் தமது வாரிசுகளுக்கு எடுத்து சொல்லப் பயன்படலாம். அதை சாக்கிட்டு ஆர்த்தியின் விடலைக் காதல் ஒரு இன்பாச்சுவேசன் என்று உபதேசிக்கவும் வாய்ப்பு தரலாம். ஆர்த்தி கூட தினேஷின் செல்பேசி பொறுக்கித்தனத்தை கண்டுபிடித்த பிறகு மறக்கத்தான் முயற்சிக்கிறாள்.

இருப்பினும் அவள் எதிர்காலத்தில் கொஞ்சம் முதிர்ச்சியடைந்த வயதிலும் காதலிப்பதாகவோ, இல்லை மணமுடிப்பதாகவோ இருந்தால் என்ன மதிப்பீடுகளைக் கொண்டு முடிவெடுப்பாள்? இருக்கும் வாழ்க்கையை பொருளால் உயர்த்தும் எதுவும், அது ஒரு மணமகனாக இருந்தால் கூட சரிதாதான் என்ற அணுகுமுறை அப்போதும்தானே இருக்கும்? அப்படி இருக்கும் பட்சத்தில் இந்த படத்தின் நீதியை வெறும் ஒரு செல்பேசி விரசம் என்று மட்டும் சுருக்கிப் பார்ப்பது அத்தகைய நடுத்தர வர்க்கத்தினர் செய்யும் பிழை. அது பிழைதான் என்பதை எது சரி என்பதினூடாகவும் புரிந்து கொள்ள முடியும். அதற்குத்தான் வேலுவின் காதல் உதவி செய்கிறது.

ரோசி அக்காவுக்கு பணம் கொடுப்பதை தப்பான பொருளில் பார்த்து தன்னை கீழாக நினைக்கும் ஜோதியிடம் எப்படிக் காதலைத் தெரிவிப்பதென அவன் தயங்குகிறான். பின்னர் அவளது முகம் அமிலத்தால் குதறப்பட்டிருக்கிறது என்று தெரிந்ததும் காதலும், தாய்மையும் கலந்து அலறுகிறான். அவளது சிகிச்சைக்காக அந்த கொலைப் பழியை ஏற்றுக் கொள்ளுமாறு காவல் ஆய்வாளர் குமாரவேலு கூறும்போது மறுப்பேதுமில்லாமல் ஏற்றுக் கொள்கிறான்.

பின்னர் இந்தக் கதை தெரிந்ததும், குமாரசாமியின் கயமைத்தனத்தை அறியும் கையோடு ஜோதி, வேலுவின் மாசற்ற காதலை புரிந்து கொள்கிறாள். அதற்கு பணயமாக தனது வாழ்க்கையையும் அளிக்கிறாள். இறுதிக் காட்சியில் அவளது முகத்திரை பறந்து அமில வீச்சால் சிதறுண்ட முகம் தெரிகிறது. வேலு உடைகிறான். ஆனாலும் அங்கே காதல் முதல் முறையாக சிறைக்கம்பிகளுக்கு பின்னால் பறிமாறிக் கொள்ளப்படுகிறது.

தினேஷ் ஆர்த்தியின் காதல் ஜோடனையான விலையுயர்ந்த பொருட்களாலும், வாழ்க்கையாலும் கட்டியமைக்கப்படுகிறது என்றால் வேலு ஜோதியின் காதல் விலைமதிப்பில்லாத தன்னல மறுப்பு உணர்விலிருந்து முளை விடுகிறது. சமூகத்தின் பொறுப்பான குடிமக்களாக இருப்பதற்கு இதில் எந்த ஜோடி தகுதியைக் கொண்டிருக்கிறது என்பதும் அந்த தகுதி எதிலிருந்து வருகிறது என்பதும் முக்கியமானது. தன்னை மட்டும் ஆராதிக்க வேண்டும் என்று சுயநலத்திலிருந்து இயல்பாக எழும் காதல் எதன் பொருட்டு எழுகிறது, எதனால் கலைகிறது என்பதற்கு ஆர்த்தியின் காதலும், நீதிக்காக காதல் வாழ்க்கையையே பலிகொடுப்பது என்ற அளவில் ஜோதியின் காதலும் இரண்டு இலக்கணங்களை முன்வைக்கின்றன. இந்த இலக்கணங்களில் உரசிப் பார்த்துக் கொள்வது மூலம் நமது தரம் என்னவென்று பரிசீலிக்க முடியும்.

சமூக உறவுகளால் புடம் போடப்படும் நேயமும், நேர்மையும்!

வழக்கு-எண்-18-9-விமர்சனம்வேலு – ஜோதியின் காதல் தரம் இன்னதுதான் என்று அவர்களது காதலிலிருந்து மட்டுமல்ல அவர்களது ஏனைய சமூக இயக்கத்திலிருந்தும் அறிய முடியும்.

போலிஸ் ஸ்டேசன் விசாரணைக்காக நெடுநேரம் இருக்கும் வேலு தானில்லாமல் முதலாளி சிரமப்படுவார், அனுப்புங்கள் என்று கோருவான். அந்தக் கையேந்தி பவனுக்காக வேலை செய்ய சிறுவனாக வரும் சின்னச்சாமிக்கும் அவனுக்கும் மலரும் நட்பு ஒரு அழகிய கவிதை. உண்மையில் கூத்துக்குழுவில் நடித்திருக்கும் அந்த சிறுவனது நடிப்பை மனமாரப் பாராட்டுவதோடு சினிமாவிற்கும் முயற்சி செய்யுமாறு கூறி, புகைப்படம் எடுக்கவும் உதவுகிறான்.

பணத்துக்காக ரோசி அக்கா இழிவுபடுத்தப்படும் போது அவளைத் தேடிச் சென்று பணம் கொடுக்கிறான். தயங்கும் அவளிடம் தன்னை ஒரு தம்பி போல நினைத்துக் கொண்டு தேவைப்படும் போது கேட்கவும் சொல்கிறான். குடிக்காமல் ஏதாவது நல்லதா வாங்கிச் சாப்பிடச் சொல்லிவிட்டு சென்று விடுகிறான். பின்னாளில் ரோஸி அந்த தொழிலை தலை முழுகியும் தொந்தரவு குறையவில்லை என்பதால் ஊரை விட்டு செல்வதாகவும் அறிகிறான். வேலு பட்டினியால் மயங்கிய நிலையில் ரோஸிதான் அவனுக்கு இட்லி வாங்கிக் கொடுத்து வேலையும் வாங்கிக் கொடுக்கிறாள். எளிய மனிதர்களின் இயல்பான இத்தகைய நட்பு வேறு எப்படி இருக்கும்?

அம்மாவின் செகரட்டரி ஐம்பதாயிரம் ரூபாய் போடுவதா என்று கேட்கும் போது தினேஷ் சீறுகிறான். அவர் தனது செகரட்டரி, மரியாதையுடன் பேசு என்று கூறும் அம்மாவிடம் அதெல்லாம் ஆபிசோடு வைத்துக் கொள் என்று ஏறுகிறான். மொட்டை மாடியிலிருந்து கீழே வாட்ச்மேனிடம் பணத்தை விட்டெறிந்து குழந்தைகளுக்கு சாக்லெட் வாங்கிக் கொடுத்து விட்டு மீதியை வைத்துக் கொள் என்று ஆணையிடுகிறான். அந்த வாட்ச்மேன் தினேஷைப் பார்க்கும் போதெல்லாம் சல்யூட் வைக்கிறார். ஜோதியை பின்தொடர்ந்து அதே அப்பார்ட்மெண்ட் வளாகத்திற்கு வரும் வேலுவை அதே வாட்ச்மேன் பொறுக்கி என்று ஜோதியிடம் விசாரிக்கிறார்.

ஆர்த்தியோ தனது வயதினையொத்த ஜோதி தங்களது வீட்டுப் பணிகளை சலிக்காமல் பார்ப்பதை ஒரு பொருட்டாகவே மதிப்பதில்லை. அவள் படத்தில் ஜோதியை நேரடியாக இழிவுபடுத்தவில்லைதான். காணாமல் போன மோதிரத்தை கண்டெடுத்த ஜோதியை ஆர்த்தியின் தாய் கூட பலரிடம் பாராட்டுகிறாள். ஆனால் ஜோதி வீட்டு வேலை செய்யும் போது ஆர்த்தி முகக் கண்ணாடியில் அலங்காரம் செய்கிறாள், ஹெட்போனை மாட்டி விட்டுக் கொண்டு பாடல் கேட்கிறாள், குப்புறப்படுத்தவாறு தினேஷிடம் பேசுகிறாள். பொருளாதாரத்தால் விளைந்த இந்த சோம்பேறித்தனம் சமூக உறவுகளிலும் ஒரு வித மேட்டிமைத்தனத்தை உருவாக்கவே செய்கிறது.

மனித உறவுகளில் நாம் கொண்டிருக்கும் நேசம் என்பது எப்படி வெளிப்படுகிறது? சக மனிதர்கள் தமது வாழ்க்கைக்காக இத்தகைய உழைப்புகளை விற்கும் காலத்தில் அதை வாங்கும் வர்க்கம் இத்தகைய அடிப்படையை இழந்து விடுகிறது. நடுத்தர வர்க்கமோ, மேட்டுக்குடி வர்க்கமோ தங்களுக்கிடையில் உள்ள உறவை பணத்தால், பொருளால், படிப்புக் கனவுகளால் பரிமாறிக் கொள்கிறதே அன்றி உழைப்புச் சேவையினால் அல்ல. அதாவது அவர்களது வயதான தாயாரோ, தந்தையோ படுத்த படுக்கையில் இருந்தால் கூட முதியோர் இல்லமோ, காஸ்ட்லியான பிரைவேட் நர்சிங்கோதான் அவர்களால் செய்யக்கூடிய பெரிய உதவி. படுக்கையில் கழிக்கும் முதியவர்களை சொந்தக் கைகளால் சுத்தப்படுத்தும் பணியினை அவர்கள் செய்யாமல் பண வலிமையால் செய்யும் போது இந்த உறவில் நேசம் எந்த அளவுக்கு இருக்கும்?

வழக்கு-எண்-18-9-விமர்சனம்ஆக உழைப்பிலிருந்து அன்னியப்படும் அளவிற்கு சுற்றியிருக்கும் சமூக உறவுகளில் அகங்காரம் கலந்த போலித்தனமான பரிமாற்றமே சாத்தியமாகிறது. உழைப்பு என்பதன் பரிமாணத்தை உடலுழைப்பை வைத்து மட்டுமல்ல, மூளையுழைப்பையும் சேர்த்தேதான் சொல்கிறோம். தான் எழுதும் எழுத்தின் மூலம் அளவு கடந்த புகழ் கிடைக்கும் என்று செயல்படும் ஒருவனுக்கும், தனது எழுத்து மாறத்துடிக்கும் சமூகத்தின் ஒரிரு தருணங்களுக்காவது பயன்படட்டும் என்று கருதும் ஒருவருக்கும் பாரிய வேறுபாடுகளுண்டு.

வேலு காதலிலோ, தோழமையிலோ, மனித நேயத்திலோ, பெற்றோரிடத்திலோ அத்தகைய நேயத்தை ஏன் கொண்டிருக்கிறான் என்பதற்கும், ஆர்த்தியும், தினேஷும் அத்தகைய நேயத்தை ஏன் கொண்டிருக்கவில்லை என்பதோடு கொண்டதெல்லாம் பொருள்களின் மதிப்பால் வரும் வெற்று ஜம்பம் என்பதற்கும் அடிப்படை இதுவே.

அந்த வகையில் அமிலத்தால் சிதைக்கப்பட்ட இன்னமும் காதலை தெரிவிக்காத அந்த முகத்திற்காக தனது இளைமையின் பத்து வருடங்களை அர்ப்பணிக்க வேலுவால் முடிந்தது. செய்யாத குற்றத்தினை ஏற்கச் சொல்லி போலிசு மிருகவெறியுடன் அடிக்கும் போதும் அவனால் பணியாமல் உறுதியாக போராட முடிந்தது. ஆனால் மெமரி கார்டை எடுத்து விட்டு தனது வக்கிர முயற்சியை முட்டாளிக்கி விட்டாள் என்ற கோபத்திற்காக ஆர்த்தியின் முகத்தை அமிலத்தால் சிதைப்பதற்கு தினேஷால் நினைக்கவும், செய்யவும் முடிகிறது. அந்தக் கருணைக்கும், இந்த வெறுப்புக்கும் ஊற்று மூலம் எது?

உழைப்பிலும், செல்வத்திலும் வேறுபடும் வர்க்கங்கள் தாங்கள் கற்றுக் கொண்டு நடைமுறைப்படுத்தும் சமூக மதிப்பீடுகளிலும் மாறுபடும் என்பதை இதற்கு மேல் விரிக்கத் தேவையில்லை. இதனால் ஏழைகள் எல்லோரும் ‘நல்லவர்கள்’ என்றும் நடுத்தர வர்க்கம் முழுவதும் ‘கெட்டவர்கள்’ என்றோ பொருளல்ல. ஏழைகள் நடுத்தர வர்க்கத்தையும், நடுத்தர வர்க்கம் முதலாளி வர்க்கத்தையும் ரோல்மாடலாக கொண்டு இயங்குகின்றனர். குறுக்கு வழியில் பணத்தையும், கேளிக்கைகளையும் நுகரத்துடிக்கும் பாதைக்கு பழகியவர்கள் சேரியிலிருந்துதான் பின்னாளில் ரவுடிகளாக மாறுகிறார்கள். ஆனால் பெரும்பான்மை சேரி மக்கள் நேர்மையாக உழைத்து வாழவேண்டும் என்ற எண்ணம் கொண்டவர்கள்.

போலவே நடுத்தர வர்க்கம் வாழ்க்கையளவில் தொழிலாளியின் தரத்தையும், இலட்சியத்தில் முதலாளியின் இடத்தையும் அடையத் துடிக்கிறது. பிரச்சினைகளது வீரியத்தின் முன்னால் தாக்குபிடிக்காத உண்மை நிலை அறியும் போது அவர்களும் சமூக விழுமியங்களை அறிய விரும்புகிறார்கள். இந்த நெடிய கட்டுரை முழுவதும் நடுத்தர வர்க்கத்தை நாம் விமரிசித்திருப்பது இந்தப் பார்வையிலிருந்துதான். சமூகத்தின் பொதுவான வகை மாதிரிகளையே மேலே விரிவாக பரிசீலித்தோம். அந்த வகையில் உழைக்கும் மக்கள் என்ற பிரிவில் நடுத்தர வர்க்கமும் வருவார்கள். மாய மானைப் போல மேலே போகத் துடிக்கும் அவர்களது கனவின் அபத்தத்தை கட்டுடைக்கும் அளவுக்கு அவர்களை மண்ணிற்கு இழுத்து வர முடியும். இந்த இழுத்து வருதல் ஒரு நல்ல விளைவு தரும் சிகிச்சை என்பதால் விமரிசனத்தை பொறுத்தருள்க.

படக்குழுவினருக்கு பாராட்டுக்கள்!

வழக்கு-எண்-18-9-விமர்சனம்மௌனகுரு படத்தில் ஒரு அடாவடியான போலீசைப் பார்த்திருக்கிறோம். இங்கு நேர்மாறாக இங்கிதமாக பேசும் குமாரவேலைப் பார்க்கிறோம். உண்மையில் இவர்களிருவரும் போலிசு உலகத்தில் ஒரு நாணயத்தின் இருபக்கமாக உலவுபவர்கள். அறியாமை அச்சத்தோடு பிரச்சினைகளுக்கு தீர்வுமில்லாமலும் வரும் மக்களை ‘வழி’க்கு கொண்டு வருவது அடிதடியின் மூலம் மட்டுமல்ல, குமாரவேலு போன்ற அமைதியான மிருகங்கள் மூலமும் நடக்கும். இனிக்க இனிக்கப் பேசும் இத்தகையவர்கள் லத்தி இல்லாமலே காரியத்தை சாதித்துக் கொள்வார்கள்.

தமிழக போலிசின் தத்ரூபமான சித்தரிப்பாக வரும் குமாரவேலுதான் கதையின் திருப்பங்களை முடிவு செய்கிறார். தினேஷின் தாய் தனது தொலைபேசியை துண்டித்து விட்டாள் என்றதும் அவரது சீற்றம் நைச்சியமாக வருகிறது. பின்னர் அவளிடம் பத்து இலட்சத்தை வாங்கிக் கொண்டதும், சாதி அபிமானம், இனி நேரடியாக தன்னை தொடர்பு கொள்ளலாம் என்று மனதுக்கு இனியவர் போல மாறுவது எல்லாம் கச்சிதமான உருவாக்கம். படத்தில் முகமற்று வரும் மந்திரி எல்லா மந்திரிகளையும் நினைவு படுத்துவதற்காக அப்படி வருகிறார் போலும்.

ஒரு நல்ல கால்பந்து வீரனுக்குரிய சக்தி எது? அவன் பந்தை வேகமாக அடிப்பதை விட எந்த வேகத்திலும் வரும் பந்தை கட்டுக்குள் கொண்டு வருவதையும், அணி வீரன் சுலபமாக பெறும் வகையில் அந்த பந்தை கட்டுப்பாடாக கடத்தும் கலையும்தான் முக்கியமானது. அதாவது பந்தை கட்டுப்படுத்தும் திறன். அது போல ஒரு நல்ல படத்தின் பாத்திரச் சித்தரிப்பு எல்லை தாண்டாமல் கச்சிதமாக கட்டுப்பாடாக பேசவிடுவது சவாலான ஒன்று. இந்த சவாலில் இயக்குநரும், படக்குழுவினரும் வெற்றி பெற்றிருக்கிறார்கள்.

அதனால்தான் வழக்கு எண்  படத்தை பார்க்கும் போது நேரடியாக ஒரு வாழ்க்கையை பார்த்தது போல உணர்கிறோம். அந்த வகையில் நடிப்பு மிக மிக யதார்த்தமாக, சற்றும் மிகைப்படுத்தல் இல்லாமல் வெளிக் கொணரப்பட்டிருக்கிறது. இன்ஸ்பெக்டர் குமாரவேல், கையேந்தி பவன் உரிமையாளர், ரோஸி, சின்னச்சாமி, ஜோதியின் தாய், ஆர்த்தியின் தாய், தினேஷின் தாய் என்ற முக்கியமான துணைக் கதாபாத்திரங்களும் சரி, சின்ன சின்ன பாத்திரங்களாக வரும் ஸ்வேதா, கஞ்சா விற்பனையாளர், ரோசியின் தோழி, எல்லோரும் கச்சிதமாக நடித்திருக்கிறார்கள். மூன்று சக்கர சைக்கிளை லாகவமாக ஓட்டும் வேலு, வீட்டு வேலைப் பெண் போல ஜோதி, மேட்டுக்குடி மாணவனது உடல்மொழியை அனாயசமாக கொண்டு வரும் தினேஷ் அனைவரும் இயக்குநரின் கைவண்ணத்தில் ஜொலித்திருக்கிறார்கள்.

இந்தப் படத்திற்கு அதிகமும் தேவைப்படும் குளோசப், மிட்ஷாட்டுகளுக்கு விஜய் மில்டன் பயன்படுத்தியிருக்கும் கேனன் 5D  கேமரா பொருத்தமாகவே இருக்கிறது. பின்னணி இசையும் படத்தின் கதையோட்டத்திற்கு இணையாக சற்று அடக்கமாகவே வந்து போகிறது. கையேந்தி பவன் காட்சிகளின் போது எஃப் எம் ரேடியோவை பொருத்தமாக பயன்படுத்தியிருக்கிறார்கள். முன்னும் பின்னும் வந்து போகும் கதை சொல்லலுக்கு இடையூறு இல்லாத அளவில் வேகமான படத்தொகுப்பும் துணை நிற்கிறது. இப்படி படக்குழுவின் ஒட்டு மொத்த ஆதரவையும் தனதாக்கிக் கொண்டு இயக்குநர் பாலாஜி சக்தி வேல் ஒரு நேர்த்தியான படத்தை நிறைவுடன் அளித்திருக்கிறார். அந்த நிறைவு பார்வையாளருக்கும் ஏற்பட வேண்டுமென்பது நமது அதிகப்படியான ஆசை என்றாலும் அது நிறைவேற முடியாத ஒரு கசப்பான உண்மை.

மாணவர்களின் செல்பேசி வக்கிரம் என்பதுதான் இந்தப்படத்தின் ஒன்லைனாக ஆரம்பித்தோமென இயக்குநர் கூறியிருப்பதாக நினைவு. ஆனால் அந்த ஒரு வரி பின்னர் முழு நீளப் படமாக நிலைநிறுத்திக் கொண்ட போது அதன் எல்லைகளும், வீச்சும் வேறு பட்ட களங்களோடு அதிகரித்திருக்கின்றன. குறிப்பிட்ட கதை, பாத்திரங்களோடு உண்மையாக பயணம் செய்யும் போது ஒரு கலைஞன் தான் ஆரம்பத்தில் நினைத்திராத களங்களையும், கண்டுபிடிக்கப்படாத யதார்த்தத்தையும் உணர்கிறான். கலைக்கு உண்மையாக இருக்கும் எவருக்கும் இது நடக்கும். ஆகவே இத்திரைப்படத்தை இயக்குநரின் எண்ணத்திற்கு அப்பாற்பட்டும் நாம் விரித்துப் புரிந்து கொள்ள வேண்டிய அவசியமிருக்கிறது. அதற்கு வழி கோலியவர் என்ற முறையில் அவரைப் பாரட்டுகிறோம்.

வழக்கு எண்ணை இரசிப்பதற்கு ‘பயிற்சி’ வேண்டும்!

வழக்கு-எண்-18-9-விமர்சனம்
இயக்குநர் பாலாஜி சக்திவேல்

ழக்கு எண் திரைப்படத்தோடு ஒன்றுவதற்கு கொஞ்சம் வாழ்க்கை குறித்த தத்துவக் கண்ணோட்டம் வேண்டும். ஆனால் அத்தகைய பயிற்சி கொண்டிருக்கும் எமது தோழர்களும் சற்று முங்கி விட்டு ஆழத்திற்கு போகாமல் களைப்புடன் மீண்டு விடும் அபாயம் இருக்கிறது. இதில் த.மு.க.எ.ச வினர் பாராட்டு விழா நடத்தி வருவதாக அறிகிறோம். சாதாரணமாக மணிரத்தினம், பாரதிராஜா, வீ.சேகர் போன்றோரது படங்களில் ஏதாவது மத நல்லிணக்கம், சிவப்புத் துண்டு என்று இருந்து விட்டால் இவர்களின் பாராட்டு நிச்சயம் உண்டு.

அப்படி இந்தப் படத்திலும் ஜோதியின் தந்தை தோழர் பாலன், அவரது கம்யூனிச நூல்கள் என்று ஒரு அடையாளம் இருக்கிறது. தோழர்கள் அதை வைத்துத்தான் பாராட்டியிருக்க மாட்டார்கள் என்றாலும், செல்பேசி வக்கிரம், குழந்தை வளர்ப்பு என்று பொதுவான ‘மதிப்பீடுகளை’ வைத்தும் பாராட்டியிருக்கலாம்.

ஆனால் படத்தில் வரும் தோழர் பாலன், லெனினது புத்தகங்கள் கொண்ட ஷாட்டின் குறியீட்டில் ஒரு யதார்த்த மீறல் இருக்கிறது. சிறு முதலாளிகள் தங்களது கடைப் பையன்களை சுறுசுறுப்புடன் வேலை வாங்குவதற்கு பயன்படுத்தும் உத்தி, அவர்களும் நாளைக்கு தனிக்கடை கண்டு குடும்பம், குழந்தை என்று செட்டிலாக வேண்டாமா என்று உசுப்பி விடுவதுதான். கையேந்தி பவன் உரிமையாளர் அப்படி சொன்னதும் அதை நினைத்தவாறு பூங்காவில் படுத்துறங்கும் வேலுவும் கனவு காண்கிறான்.

தாளமும், ஏனைய இசைக்கருவிகளுமற்று ஆண்குரல் மட்டும் பாடும் பாடலின் வரிகளோடு அந்த கனவுக்காட்சி விரிகிறது. அதில் ஜோதியுடன் திருமணம் ஆகிறது. திருமணத்தில் ரோஸி அக்கா, சின்னச்சாமி உள்ளிட்டு அத்தனை பேரும் புத்தாடை அணிந்து மலர்ச்சி பொங்க காட்சி அளிக்கிறார்கள். குழந்தையும் பிறக்கிறது. தனி கையேந்தி பவன் கூட ஆரம்பிக்கிறார்கள். குளித்து விட்டு தலையை துவட்டியவாறு வீட்டினுள் நுழையும் வேலு கதவுக்கருகில் இருக்கும் ஜோதியின் அப்பா தோழர் பாலன் என்ற புகைப்படத்தின் அருகில் இருக்கும் கம்யூனிசப் புத்தகங்களை எடுத்து யாருடையது என்று கேட்கிறான். அப்பாவினுடையது என்று கூறும் ஜோதி அதைப் பறித்து மீண்டும் அடுக்குகிறாள். தந்தையின் நினைவை அவள் அந்த புத்தகங்களின் வழியாக பராமரிக்கிறாள் போலும்.

இந்தக் கனவில் வரும் மற்ற காட்சிகளெல்லாம் அவனுக்குத் தெரிந்த விசயங்கள், பாத்திரங்கள் எனும் போது ஜோதியின் வீட்டில் நுழைந்தே இராத வேலு இந்த புத்தகங்களை பார்த்து யாருடையது என்று எப்படிக் கேட்கிறான்? உண்மையான இருப்பு, அதை அறிந்தே இராத கனவின் காட்சியில் வந்தது எப்படி? நல்லது இந்த எளிய மக்களைக் கடைத்தேற்றும் தத்துவம் கம்யூனிசமாகத்தான் இருக்கும் என்று இயக்குநர் ஒரு கவித்துவக் கனவை அழகோடு காட்ட விரும்பியிருக்கலாம். அந்த அழகினால் இந்த லாஜிக் மீறல் ஒரு கவிதை போல பொருள் பொதிந்ததாக இருக்கிறது.

இறுதிக் காட்சியில் இன்ஸ்பெக்டர் குமாரவேலுவிடம் தனது கடிதத்தை கொடுத்து படிக்கச் செய்கிறாள் ஜோதி. அதில் ஏழை என்பதால் எதுவும் செய்ய மாட்டார்கள், சகித்துக் கொள்வார்கள் என்றுதானே நீ நினைத்தாய், எனது அப்பா அப்படி வளர்க்கவில்லை, நீதிக்காக உயிரையும் துறக்குமாறு வளர்த்திருக்கிறார் என்று அமிலத்தை அவர் மீது வீசுவாள். அந்த சிறிய கடிதம் அளவான வார்த்தைகளால் திருத்தமாக எளிமையாக வெளிப்படையாக எழுதப்பட்டிருக்கும். எந்தச் சூழ்நிலையிலும் போராட்டக் குணத்தை விட்டுக் கொடுக்காத உழைக்கும் மக்களின் வீரமும், அந்த வீரத்தை அமைப்பாக்கி புரட்சி நடத்தும் அருகதை உள்ள தத்துவமும் ஜோதி எனும் சேரிமகளின் நடவடிக்கையில் இணைந்திருக்கின்றன.

படக்குழுவினருக்கு பாராட்டுக்களும் நன்றியும்.

___________________________________________________________________

வினவுடன் இணையுங்கள்

தொடர்புடைய பதிவுகள்:

லீனா மணிமேகலை பிடிபட்டார்!

120

காலச்சுவடு ஜூன் – 2012 இதழில் அதன் ஆசிரியர் கண்ணன் பத்தியொன்றில் லீனா மணிமேகலையைப் பற்றி “புரட்சித் தலைவி” எனும் தலைப்பில் எழுதியிருக்கிறார். முதலில் அதை படியுங்கள்,

______________________________________________

புரட்சித் தலைவி

டாடா ஸ்டீல் நிறுவனம் தனது பல்வேறு திட்டங்களுக்கு ஆதிவாசிகளிடமிருந்து பல இடங்களில் எதிர்ப்புகளைச் சந்தித்து வருகிறது.

1907இல் சாக்சி – காலிமட் பகுதியில் 24 கிராமங்கள் அழிக்கப்பட்டு ஜாம்ஷெட்பூர் நகரமும் டாடா ஸ்டீல் தொழிற்கூடமும் உருவாயின. தற்போது ஒரிசா மாநிலத்தில் ஜாஜ்பூர் மாவட்டத்தில் கலிங்கா நகரில் ஏற்பட இருக்கும் இரும்புத் தொழிற்கூடத் திட்டமும் ஜார்கண்ட் மாநிலத்தில் சாரைக் கேலா – கார்சாவான் மாவட்டத்தில் டொண்டோபாசியில் ஏற்பட இருக்கும் டாடா ஸ்டீலின் கிரீன்பீல்ட்ஸ் திட்டமும் சத்தீஸ்கர் மாநிலத்தில் பஸ்தர் மாவட்டத்தில் டாடா ஸ்டீல் தொழிற்கூடத் திட்டமும் ஆதிவாசிகளால் வன்மையாக எதிர்க்கப்படுகின்றன.

டாடா போன்ற ஒரு கார்ப்போரேட் நிறுவனம் இவ்வாறு எதிர்ப்புகளைச் சந்திக்கும்போது, எதிர்ப்பின் காரணங்களை, மக்கள் பிரச்சினைகளை, அவர்கள் வாழ்வாதாரங்கள், வசிப்பிடங்கள் அழிக்கப்படுவதைக் கருதுவதில்லை. மாறாகத் தனது பிம்பம் போராட்டங்களால் சிதைக்கப்படுவதைப் பற்றிக் கவலை கொள்கிறது. தேசத்திற்குச் சேவைசெய்யும் மக்கள் நலனில் அக்கறை கொண்ட, உயரிய மதிப்பீடுகளைப் பின்பற்றும் நிறுவனம் டாடா என்ற காலங்காலமாக உருவாக்கப்பட்ட கருத்தாக்கம் மாசுபடுவதைத் தவிர்க்க விரும்புகிறது. இதற்குச் சிறந்த வழிமுறை விளம்பரப் படங்களைத் தயாரிப்பது. இதில் இரண்டு நோக்கங்கள் உண்டு. ஒன்று, நடுத்தர வர்க்கத்திடம் டாடா நிறுவனம் பற்றிய உன்னதக் கருத்தாக்கத்தைக் கட்டமைப்பது. இரண்டு, விளம்பரங்கள் வழி ஊடகங்களுக்குப் பெருந்தொகையைக் கொடுத்து போராட்டங்கள் செய்தியாகாமல் தடுப்பது. விளம்பரம் கையூட்டாக மாறும் சாகசம். மேற்படி ஆதிவாசியின் போராட்டங்களுக்கு எதிர்வினையாகப் பல விளம்பரங்களை டாடா நிறுவனம் தயாரிக்க முடிவுசெய்து அப்பணியை ஒகில்வி & மாத்தர் என்ற 120 நாடுகளில் அலுவலகங்களுடைய பன்னாட்டு விளம்பர நிறுவனத்திடம் ஒப்படைத்தது. அவர்கள் தயாரித்த விளம்பரங்களில் ஒன்றின் தலைப்பு ‘தேஜஸ்வினி.’ ஆதிவாசிப் பெண்களின் முன்னேற்றத்திற்காக டாடா ஸ்டீல் நிறுவனத்தால் தொடங்கப்பட்ட அமைப்பு ‘தேஜஸ்வினி’. பிரகாசம் அல்லது ஒளிமயம் என்று பொருள்.

2006 ஜனவரி 2இல் கலிங்க நகரில் டாடா ஸ்டீல் நிறுவனத்திற்கு எதிராகப் போராடிய ஆதிவாசிகள் 14 பேர் போலீஸ் துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்டனர். 31 பேர் படுகாயமடைந்தனர். டாடாவின் கூலிப்படையும் போராடிய ஆதிவாசிகளைத் தாக்கியதாகக் குற்றஞ்சாட்டப்பட்டது. போஸ்ட் மார்டம் செய்யப்பட்ட நான்கு உடல்களின் கைகள் மணிகட்டிற்கு மேல் வெட்டப்பட்டு இருந்தன. இந்தியாவின் கார்ப்பொரேட் – அதிகார வர்க்க – ஊடக ஊடாடல் பற்றிப் பல புரிதல்களை நமக்குத் தந்த அரிய ஆவணம் நீரா ராடியா ஒலிப்பதிவுகள். இதில் பத்திரிகையாளர் வீர் சிங்வியிடம் டாடாவின் அதிகாரப்பூர்வ ஏஜெண்டாகப் பணிபுரிந்த ராடியா, கலிங்க நகர் ‘மாவோயிஸ்டுக’ளுக்கு எதிரான தனது போராட்டம் பற்றிக் குறிப்பிடுகிறார். ஆதிவாசிகளின் எதிர்ப்பை மாவோயிஸ்டு பிரச்சினையுடன் இணைத்திட ஊடகங்கள் வழி டாடா ஒரு பிரச்சாரத்தை மேற்கொண்டதற்கு இது சான்றாகிறது. கலிங்க நகரில் போராடும் மக்கள் துணை ராணுவத்தினர் மீது மக்கள் சில கற்களை வீசியதும் அவர்கள் அம்மக்களின் தானியங்களை அழித்து, பாத்திரங்களை உடைத்து, நீரில் மண்ணெண்ணெயைக் கலந்த அராஜகத்தையும் இந்த ஒளிப்பதிவில் பாருங்கள்

ஆதிவாசிகளுக்கு எதிரான தனது வன்செயல்பாடுகள் ஊடகங்கள் வழி வெளிக்குத் தெரியாமல் டாடா தடுத்து நிறுத்தினாலும் மக்கள் தாங்களே எடுத்த பதிவுகளை you-tube இல் பகிரங்கப்படுத்தினார்கள். அப்பதிவுகளை ( http://www.youtube.com/samadrusti ) இங்கே காணலாம்.

ஆதிவாசிகளின் வாழ்விடங்களை அழிக்கும் பல திட்டங்களைச் செயல்படுத்தி வரும் டாடா ஸ்டீல் தன்மீதான கறையை நீக்க உருவாக்கிய ஆதிவாசிப் பெண்கள் மேம்பாட்டுத் திட்டம்தான் ‘தேஜஸ்வினி.’ தேஜஸ்வினி எனும் விளம்பரப் படம் அத்திட்டத்தின் சிறப்பை முன்னிறுத்துவதாக உள்ளது. அன்றாட வேலைகளிலும் நடனமாடியும் ‘சாதாரண’மாக வாழ்ந்த ஆதிவாசிப் பெண் ஒருவர் டாடா ஸ்டீலில் சேர்ந்த பிறகு பேண்ட் சட்டை அணிந்து, ஸ்கூட்டர் ஓட்டி, வாகன ஓட்டுநராகி வாழ்க்கையில் முன்னேறிச் சமூகத்தின் மதிப்பைப் பெறுவதாக விளம்பரக் ‘கதை’ அமைந்துள்ளது. டாடா ஸ்டீல் ஆதிவாசிப் பெண்ணுக்கு உதவுவதாக மட்டும் காட்டுவது இன்று ‘சரியான அரசியல்’ அல்ல. ஆதிவாசிப் பெண்ணும் டாடாவுக்குப் பங்களிப்பதாகக் காட்ட வேண்டும். ஆகவே விளம்பரக் கதையின்படி இந்தப் பெண்ணிடமிருந்து டாடா ஸ்டீலும் கற்றுக்கொள்கிறது. அது ‘துணிச்ச’லைக் கற்கிறது. இது விளம்பரம்.

டாடாவிடம் ஆதிவாசிகளின் வாழ்க்கை முறையை, அவர்களின் சுற்றுச்சூழலை அழிக்கும் பலப்பல திட்டங்கள். அத்திட்டங்களின் ரத்தக் கறையை மூடிமறைக்க ‘தேஜஸ்வினி’ என்று ஒரு நலத்திட்டம். அந்நலத்திட்டத்திற்கு ஒரு விளம்பரம். இந்த விளம்பரத்தைச் ‘சரியான அரசியல்’ கூறுகளுடன் இயக்கப் பொருத்தமான நபராக யார் இருக்க முடியும்? களப் பணியாளர், போராளி, பெண்ணியவாதி போன்ற பிம்பங்களை உடைய ஒருவர்தான் சரியான தேர்வாக இருக்கும். அத்தோடு நாய் விற்ற காசு குரைக்காது என்ற நெஞ்சுறுதி கொண்டவராகவும் இருக்க வேண்டும். டாடா ஸ்டீலும் ஒகில்வியும் சரியான நபரைத் தேர்வுசெய்தன. தமிழகத்தைச் சேர்ந்த கவிஞர், இடதுசாரிக் குடும்பத்தைச் சேர்ந்தவர், ஆவணப்பட இயக்குநர், கிட்டத்தட்ட நக்சலைட் லீனா மணிமேகலை. இவ்விளம்பரப் படத்தை இங்கே பார்த்து ரசிக்கலாம். (இத்தகவலை கேம்பெயின் இந்தியாவும் உறுதி செய்திருக்கிறது -வினவு)

‘ஆதிவாசிப் பெண்களை மேம்படுத்தும் நிறுவனம் டாடா’ என்று காட்டிடும் இந்தப் பிரச்சாரப்படத்தை இயக்கிட எத்தனை லட்சம் கிடைத்தது லீனா?

இது வெறும் விளம்பரம்தானே என்று நீங்கள் நினைக்கலாம். விளம்பரத்தின் கடைசி வாசகம் இது: “இது விளம்பரம் அல்ல, வாழ்க்கை.”

– நன்றி காலச்சுவடு
_____________________________________

படித்து விட்டீர்களா?

லீனா-மணிமேகலை
லீனா மணிமேகலை

சீமாட்டி லீனா மணிமேகலை மார்க்சியத்தையும், மார்க்சிய ஆசான்களையும், பொதுவில் அனைத்து வகை அடக்குமுறைகளையும் எதிர்த்துப் போராடும் போராளிகளையும், மக்களையும் கொச்சைப்படுத்தி எழுதிய கவிஜைகளை அம்பலப்படுத்தியும், அவரது “செங்கடல்” படப்படிப்பின் போது உதவி இயக்குநர் தீபக்கை, ஷோபா சக்தியை வைத்து அடித்து அவமானப்படுத்தியதை உலகறியச் செய்தும், பின்னர் லீனாவுக்காக அ.மார்க்ஸ் ஏற்பாடு செய்த கூட்டத்தில் எமது தோழர்கள் கேள்வி கேட்டதால் வெளியேற்றப்பட்டது குறித்தும் வினவில் எழுதியிருக்கிறோம்.

எனினும் ஒரு சில ‘அறிவாளிகள்’, ‘நடுநிலையாளர்கள்’ லீனாவுக்காக நீர்த்துப் போன வார்த்தைகளால் வக்காலத்து வாங்கி வந்தனர். அது குறித்தும் வினவில் நீண்ட விவாதங்கள் நடைபெற்றிருக்கின்றன. சீமாட்டியின் பெண்ணுரிமை போராளி வேடத்தில் இத்தகைய சிரிப்பு போலீஸ்கள் அடித்துச் செல்லப்பட்டது ஆச்சரியமல்ல. இத்தனைக்கும் அவர் சில ஆவணப்படங்கள் எடுத்தார், சில கவிதைகள் எழுதியிருக்கிறார், ஆபத்தில்லாத முறையில் சில பல குட்டி ஆர்ப்பாட்டங்களில் பங்கேற்றிருக்கிறார், அந்த பங்கேற்றலில் தனது பங்கை அதிகமாக காட்டி ஏமாற்றியிருக்கிறார் (இது அவரது சக பெண் கவிஞர்களது குற்றச்சாட்டு), ஈழத்தமிழர்களை காசு வாங்கி ஏமாற்றியிருக்கிறார் (இதுவும் ஏமாந்த ஈழத்தமிழர்களின் குற்றச்சாட்டு) தமிழ் சினிமாவில் ஏதாவது ஒரு உயரம் குறைந்த இடமென்றாலும் பரவாயில்லை என்று முயற்சி செய்திருக்கிறார்…. இவைதான் இந்த சீமாட்டியின் ஆளுமை அடையாளங்கள்.

இவற்றினைச் சுருக்கிப் பார்த்தால் காரியவாதமும், பிழைப்புவாதமும், சுயநலவாதமும், விளம்பரவாதமும்தான் சீமாட்டியின் சாரம். இந்தப் பிழைப்பினை வெற்றிகரமாக ஓட்டவே அவர் முற்போக்கு விசயங்கள் கொண்ட, குறிப்பாக பெண்ணுரிமை போராளியாக, அதுவும் கவிதைகள் எனும் சுலபமான வழி மூலம் முன்னிறுத்திக் கொண்டார். எனினும் அந்த முன்னிறுத்தலிலேயே அவரது உட்கிடக்கை அதாவது மேட்டிமைத்தனம் கலந்த மனித குல விரோதம் வெளிப்பட்டிருக்கிறது என்பதுதான் சீமாட்டி எழுதிய கவிதைகள் குறித்த எமது விமரிசனம். இரண்டும் வேறு வேறு அல்ல, ஒரு நாணயத்தின் இருபக்கங்கள்தாம்.

அதற்கு வலு சேர்க்கும் விதமாகவே லீனாவின் இந்த தேஜஸ்வினி எனும் கார்ப்பரேட் கைக்கூலித்தனம் வெளிப்பட்டிருக்கிறது. தேஜஸ்வினி என்றால் ஒளிமயமாம். இந்த ஒளிமயத்தின் உதவியால் சீமாட்டியின் இருண்ட பக்கம் தாரை தப்பட்டைகளுடன் தெரிய வந்திருக்கிறது.

லீனா-மணிமேகலை-காலச்சுவடு-
நன்றி காலச்சுவடு

பழங்குடி மக்களை அப்புறப்படுத்தி, சில பல இலட்சங்களை வாங்கிக் கொண்டு டாடாவின் பாகாசுர சுரண்டலுக்கு ஒரு மனித நேய முகமூடியை ஏற்படுத்த வேண்டுமென்றால் அதற்கு ஒரு பாசிச மனம் வேண்டும். அந்த வகையில் சீமாட்டி தான் ஒரு பாசிஸ்ட் என்பதை உலகறியச் செய்திருக்கிறார். தண்டகராண்யாவிலும், ஒரிசாவிலும், ஜார்க்கண்டிலும் கொல்லப்படும் ஒவ்வொரு ஆதிவாதி மக்களின் இரத்தத்தை குடிக்கும் நரவெறிக்கும் சீமாட்டியின் நடத்தைக்கும் வேறுபாடில்லை.

அவரது கவிமனமும், பெண்ணுரிமை போராளி துடிப்பும், ஆவணப்பட அனுபவமும் ஒன்று சேர்ந்து டாடவின் தேஜஸ்வினி விளம்பர படையெடுப்பிற்கு பயன்பட்டிருக்கிறது. தமிழகத்தில் முற்போக்கு வேடதாரியாக அறியப்பட்ட ஒருவர், டாடாவை எதிர்க்கும் முற்போக்கு சக்திகளை வேரறுக்கப் பயன்படுகிறார் என்றால் இந்த இழிவினை என்னவென்று அழைப்பது?

இதில் சீமாட்டி லீனாவின் ஞான குரு அய்யா அ.மார்க்ஸ் சட்டீஸ்கரெல்லாம் போய் வந்தவர், இனி என்ன சொல்லி நியாயப்படுத்துவார்? தொழில் வேறு, கொள்கை வேறு என்று சப்பைக் கட்டு கட்டுவாரா? முடியாது என்றால் லீனாவின் வேடத்தை அம்பலப்படுத்திய எமது தோழர்களை வெளியேற்றினாரே அதற்கு என்ன பதில்? தொழிலும், கலை மனமும் இறுதியில் பழங்குடி மக்களை கொன்று போடுவதற்குத்தானே பயன்படுகிறது? அறிவாளிகளின் அந்தரங்கம் மட்டுமல்ல அவர்களது வெளிப்படையான வாழ்க்கையே இப்படித்தான் ஒரு நாள் நாறியே தீரும். போக, லீனாவுக்காக சப்பைக்கட்டு கட்டிய காணாமல் போன ‘முற்போக்காளர்கள்’, கொட்டை போட்ட ‘பெருச்சாளிகள்’ , போலி கம்யூனிஸ்டு ‘தோழர்கள்’ மற்றும் பெயர் தெரியாத ‘இலக்கியவாதிகள்’ அனைவரும் இப்போது என்ன சொல்வார்கள? ஒன்றும் சொல்லவோ, செய்யவோ முடியவில்லை என்றால் டாடாவின் கைக்கூலி லீனா மணிமேகலையின் அல்லக்கைகள் என்று வரலாற்றில் அழைக்கப்படுவீர்கள். சீமாட்டி நடத்தும் கேளிக்கை விருந்துகளில் கலந்து கொண்டு டாடாவின் காசை குடித்தவர்கள் என்றும் அழைக்கப்படலாம். மொத்தத்தில் அல்லக்கை பட்டம் உறுதி. முடிவு செய்யுங்கள்.

காலச்சுவடு இந்த அம்பலப்படுத்தலை உலகறியச் செய்ததன் காரணம் என்ன? சீமாட்டி லீனா, அறிஞரய்யா அ.மார்க்ஸ் அணியைச் சேர்ந்தவர். அ.மார்க்ஸ் கும்பலுக்கும், காலச்சுவடுக்கும் ஒத்துக் கொள்ளாது. இதில் பெரிய கொள்கை பிரச்சினை எதுவும் இல்லை என்பதோடு எல்லா அறிஞர்கள், இலக்கியவாதிகளிடம் நீக்கமற நிரம்பியிருக்கும் ஈகோ ஃபேக்டரிதான் மூலம். ஆனால் அதற்கு கொள்கை என்ற பெயரில் ஏதாவது சப்பைக் கட்டு கட்டுவார்கள். எனினும் இதில் அ.மார்க்ஸ் அணி காலச்சுவடு அணியிடம் நிறையவே தோற்றிருக்கிறது. அ.மார்க்ஸின் வலது கை, இடது கை என்று அறியப்பட்ட இரவிக்குமார், பொ.வேல்சாமி போன்றோரே காலச்சுவடு அணியில் சேர்ந்து விட்ட பிறகு அறிஞர் சில சில்லறைகளை வைத்துக் கொண்டு காலத்தை ஓட்டுகிறார்.

டாடாவிடம் காசு வாங்கியதை அம்பலப்படுத்தியிருக்கும் காலச்சுவடு கண்ணன் தனது முகத்தையும் கொஞ்சம் கண்ணாடியில் பார்த்துக் கொள்ள வேண்டும். தமிழகத்தின் ஆகப் பிற்போக்கான தினமலரிடம் இருந்து இதுவரை காலச்சவடு பெற்ற உதவித் தொகை மட்டும் போற்றத் தக்கதா? இல்லை  ஸ்ரீராம் சிட் பண்ட்டின் பணம் மட்டும் புனிதமானதா? சீமாட்டி டாடாவிடம் பெரிய தொகை வாங்கினார், நாங்கள் சிறிய தொகை என்றெல்லாம் சமாளிக்க முடியாது. தொகை அல்ல பிரச்சினை, தொகையின் பின்னே உள்ள ‘அறம்’தான் முக்கியம்.

ஆளும் வர்க்கங்களின் ஊழல், முதலாளிகளுக்கிடையே உள்ள போட்டியினால் வரும் என்பதற்கு நீரா ராடியா விவாகாரம் ஒரு சான்று. டாடவைப் போட்டுக் கொடுக்க விரும்பிய போட்டி முதலாளிகளின் கைங்கரியத்தால் அந்த ஊழல் வெளிவந்திருக்கிறது. அது போல இலக்கியவாதிகளின் கைக்கூலித்தனத்தையும் அவர்களுக்கிடையே நிலவும் இத்தகைய போட்டிகள்தான் வெளிக் கொண்டு வருகிறது. ஒருவேளை அ.மார்க்ஸ் அணிக்கும், காலச்சுவடுக்கும் தோழமையான உறவிருந்தால் சீமாட்டியின் இந்த ஊழல் வெளிவந்திருக்காது. அதே நேரம் இலக்கியவாதிகள், அறிஞர் பெருமக்கள் எவரும் எப்போதும் ஓரணியாக இருப்பது ‘இயற்கை’க்கு விரோதமானது. முதலாளிகளுக்கும் அதே விதிதான்.

எது எப்படியோ இனி சீமாட்டியை நாம்  கார்ப்பரேட் கைக்கூலி என்று அழைப்பதோடு கூடுதலாக பெண்ணுரிமைப் போராளி   என்றும் அழைத்துக் கொள்ளலாம்.

_________________________________________________

வினவுடன் இணையுங்கள்

தொடர்புடைய பதிவுகள்:

நேபாளப் புரட்சி : பின்னடைவு அளிக்கும் படிப்பினை!

5

நேபாள்-புரட்சி-பின்னடைவு-படிப்பினை!இந்தியாவின் அண்டை நாடான நேபாளத்தில், நேபாள ஜனநாயகக் குடியரசுக்கான புதிய நகல் அரசியல் சட்டமியற்றும் பணி, தீர்மானிக்கப்பட்ட காலக்கெடுவாகிய மே 27ஆம் தேதிக்குள் நிறைவுறாமல் போனது; அதனால், அச்சபை கலைக்கப்படுவதாகவும் புதிய அரசியல் நிர்ணய சபைக்கான தேர்தல் மீண்டும்  நடைபெறும் என்றும்  இடைக்கால அரசாங்கத்தின் பிரதமரான பாபுராம் பட்டாராய் அறிவித்துள்ளார். நேபாள மக்கள் எழுச்சிக்குப் பின்னர் கடந்த 2008ஆம் ஆண்டில் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசியல் நிர்ணய சபையின் பதவிக்காலம் கடந்த 2010ஆம் ஆண்டு மே 28 ஆம் தேதி முடிவடைந்திருக்க வேண்டும். இந்தக் காலத்திற்குள் இந்த அவை அரசியல் சட்டத்தை எழுதி முடித்திருக்க வேண்டும். ஆனால் அரசியல் நிர்ணய சபையில் அங்கம் வகிக்கும் நேபாள காங்கிரசு, போலி கம்யூனிஸ்டு கட்சியான ஐக்கிய மாலெ கட்சி மற்றும் பிற கட்சிகள் நேபாளத்தின் எதிர்கால அரசியல் சட்டம் எத்தகையதாக இருக்க வேண்டும் என்பதில், இச்சபையில் அதிக இடங்களைக் கைப்பற்றியுள்ள பெரிய கட்சியான மாவோயிஸ்டுகளுடன் தொடர்ந்து முரண்பட்டதால், அரசியல் சட்டத்தை இயற்றும் பணி கடந்த நான்காண்டுகளாக இழுத்தடிக்கப்பட்டு வந்தது. இப்போது அந்த சபையைக் கலைத்துவிட்டு மறுதேர்தல் நடத்தும் நிலைக்கு நேபாளம் பின்னோக்கிச் சென்றுள்ளது.

நான்காண்டுகளுக்கு முன்பு அரசியல் நிர்ணய சபைக்கான தேர்தல் நடந்தபோது,நேபாள மாவோயிஸ்டு கட்சியிடம் செம்படை இருந்தது. அது இப்போது கலைக்கப்பட்டு, அப்படையின் ஒரு சிறுபிரிவு நேபாள இராணுவத்தின் கட்டுப்பாட்டின் கீழ்  இணைக்கப்பட்டுள்ளது. கடைசியில், இருப்பதையும் இழந்து புதிதாக எதையும் பெறாத நிலைக்கு நேபாள மாவோயிஸ்டு கட்சி தள்ளப்பட்டுள்ளது. புரட்சியை முன்னெடுத்துச் செல்ல விழையும் தோழர் கிரண் தலைமையிலான சிறுபான்மைக் குழுவாகவும், பிரசந்தா – பட்டாராய் தலைமையிலான சட்டவாத சமரசவாதப் பெரும்பான்மைக் குழுவாகவும் மாவோயிஸ்டு கட்சி பிளவுபட்டுள்ளது. நேபாளத்தில் மாவோயிஸ்டு கட்சியின் அரசியல் செல்வாக்கையும், மக்கள் ஆதரவையும் வற்றச் செய்து, அதன் புரட்சிகர ஆற்றலை வலுவிழக்கச் செய்ய உலக ஏகாதிபத்தியமும், இந்திய மேலாதிக்க அரசும், நேபாள பிற்போக்கு அரசியல் கட்சிகளும் மேற்கொண்ட சதிகளும் சூழ்ச்சிகளும் இறுதியில் வெற்றி பெற்றுள்ளன. தற்போதைய அரசியல் நெருக்கடியைப் புரட்சிக்கான வாய்ப்பாகப் பயன்படுத்தி முன்னெடுத்துச் செல்லக்கூட முடியாமல்,  மாவோயிஸ்டு கட்சி பிளவுபட்டு நிற்கிறது.

நேபாளத்தின் கிராமப்புறங்களில் மாவோயிஸ்டுகளின் மக்கள் யுத்தம் குறிப்பிட்ட கட்டத்துக்கு முன்னேறியிருந்த நிலையில், மன்னராட்சிக்கு எதிராக நகர்புறங்களில் இலட்சக்கணக்கில் மக்கள் திரண்டு போராடினர். மன்னராட்சியின் கீழிருந்த நாடாளுமன்றத்தின் அரசியல் கட்சிகள் என்னசெய்வது என்று புரியாமல் கையைப் பிசைந்து கொண்டிருந்த நிலையில், மன்னராட்சியை வீழ்த்தும் போராட்டத்துக்கு மாவோயிஸ்டுகளைத் தலைமை தாங்குமாறு மக்கள் கோரியதைத் தொடர்ந்து, மக்கள் சக்தியின் முன்னே மண்டியிட்ட நேபாள அரசியல் கட்சிகள் மன்னராட்சியை வீழ்த்தவும் அரசியல் நிர்ணய சபைக்கான தேர்தலை நடத்தவும் முன்வந்து, மாவோயிஸ்டுகளுடன் ஒப்பந்தம் போட்டன. இந்தச் சூழலைச் சரியாகப் பயன்படுத்திக் கொண்டு, நேபாளத்தில் மன்னராட்சியைத் தூக்கியெறிந்து ஒரு ஜனநாயகக் குடியரசை நிறுவுவது என்ற முக்கியத்துவம் வாய்ந்த செயல்தந்திரத்தை வகுத்து நேபாள மாவோயிஸ்டு கட்சி செயல்படுத்தியது. அன்றைய பருண்மையான நிலைமையை ஒட்டி மாவோயிஸ்டு கட்சி வகுத்துக் கொண்ட அச்செயல்தந்திரம் சரியானதும், அவசியமானதுமாகும்.

நேபாள்-புரட்சி-பின்னடைவு-படிப்பினை!

அரசியல் நிர்ணய சபைக்கான தேர்தலில் போட்டியிட்டு, இடைக்கால அரசில் பங்கேற்று, அரசியல் சட்டத்தை நிறைவேற்றுவதற்கான போராட்டத்தில் ஈடுபட்டிருந்த மாவோயிஸ்டுகள், மறுபுறம் கூட்டுத்துவ ஜனநாயகக் குடியரசுக்கான அரசியல் சட்டத்தை இயற்றவிடாமல் சதிகளில் இறங்கிய நேபாள ஆளும் வர்க்க அரசியல் கட்சிகள் மற்றும் அவற்றின் எஜமானரான இந்திய மேலாதிக்கவாதிகள் ஆகியோரை எதிர்த்து மக்களைத் திரட்டித் தொடர்ந்து போராடி வந்தனர். நேபாள மன்னர் ஞானேந்திராவை அரண்மனையை விட்டு வெளியேறக் கோரி இலட்சக்கணக்கில் மக்கள் திரண்டு நடத்திய மிகப் பெரிய போராட்டம், போலி கம்யூனிஸ்டு ஐக்கிய மாலெ கட்சியைச் சேர்ந்த நேபாள அதிபர் ராம்பரண் யாதவும், முன்னாள் மன்னாராட்சியின் ராயல் நேபாள இராணுவத்தின் தலைமைத் தளபதி ருக்மாங்கத் கடுவாலும் இந்திய மேலாதிக்கவாதிகளின் ஆசியுடன் ஆட்சிக் கவிழ்ப்பில் ஈடுபட்டபோது, அதற்கெதிரான மாவோயிஸ்டு கட்சியின் இளைஞர் அமைப்பினர் நடத்திய தொடர் ஆர்ப்பாட்டங்கள், இந்திய மேலாதிக்கச் சதிகளுக்கு எதிராகவும் குடியாட்சியின் உயரதிகாரத்தை நிலைநாட்டவும் மாவோயிஸ்டு கட்சியினர் நடத்திய கடையடைப்பு ஆர்ப்பாட்டங்கள்  எனத் தொடர்ச்சியாக போராட்டங்கள் நடந்தன.

“கூட்டுத்துவ மக்கள் ஜனநாயகக் குடியரசை நிறுவுவதை உடனடி செயல்தந்திரத் திட்டமாகக் கொள்ள வேண்டும். அமைதி ஒப்பந்தத்தைச் சீர்குலைப்பது, அரசியல் நிர்ணய சபையைக் கலைப்பது, மக்கள் மீது சர்வாதிகாரத்தைத் திணிப்பது, மக்கள் யுத்தத்தின் சாதனைகளைப் பறித்துக் கொள்வது என்ற ஏகாதிபத்தியவாதிகள், இந்திய விரிவாக்கவாதிகள் மற்றும்  அவர்களது விசுவாச பிற்போக்கு அரசியல் கட்சிகளின் சதிகளுக்கு எதிராக மக்களின் போராட்ட எழுச்சிகளை உறுதிப்படுத்த வேண்டும்” என்று  கோர்க்கா மாவட்டத்திலுள்ள பலுங்டார் கிராமத்தில் கடந்த நவம்பர் 2010இல் நடந்த நேபாள மாவோயிஸ்டு கட்சி மத்தியக் கமிட்டியின் 6வது விரிவாக்கப்பட்ட பிளீனத்தில் தீர்மானிக்கப்பட்டது. ஆனால், அம்முடிவுகளுக்கு மாறாகவும் எதிராகவும்  மாவோயிஸ்டு கட்சித் தலைவர் பிரசந்தாவும் துணைத்தலைவர் பட்டாராயும் செயல்படத் தொடங்கினர்.

நேபாள்-புரட்சி-பின்னடைவு-படிப்பினை!அந்த விலகலை எதிர்த்து, 2010 டிசம்பரில் பாரிஸ்தண்டாவில் நடந்த மத்தியக் கமிட்டி கூட்டத்தில், முந்தைய பிளீன முடிவுப்படி மக்கள்திரள் புரட்சிப் போராட்டங்களை முன்னெடுத்துச் செல்லாமல் கட்சித் தலைமை திசை விலகிச் செல்வதாகக் குற்றம் சாட்டி, கட்சியின் துணைத் தலைவர்களுள் ஒருவரான தோழர் கிரண், மக்களின் எழுச்சியை முன்னெடுத்துச் சென்று அரசியல் சட்டத்தை நிறைவேற்றுவது என்ற திட்டத்தைச் செயல்படுத்தக் கோரி அறிக்கை வைத்தார். “சமூக  அரசியல் மாற்றங்களை உறுதி செய்யாமல், பிற்போக்கு அரசியல் கட்சிகளுடன் சமரசம் செய்து கொண்டு அரசியல் சட்டத்தை நிறைவேற்றத் துடிப்பது, மக்களின் புரட்சிகரப் போராட்டத்தையும் தியாகத்தையும் கொச்சைப்படுத்துவதாகும். இன்றைய இடைக்கால அரசாங்கத்தின் கையாலாகாத்தனத்தைக் கண்டு மக்கள் வெறுப்புற்றிருக்கிறார்கள். பிற்போக்கு அரசியல் கட்சிகள் தீராத நெருக்கடியில் சிக்கியுள்ளன.  மக்கள் எழுச்சிக்கு உகந்த நேரம் கனிந்துள்ள போதிலும், கட்சியானது அதற்கான போராட்டத்தை முன்னெடுத்துச் செல்லவில்லை”  என்று அந்த அறிக்கையில் குற்றம் சாட்டியுள்ளார்.

கட்சியின் மற்றொரு துணைத்தலைவரான பாபுராம் பட்டாராய் அரசியல் சட்டத்தை நிறைவேற்றுவதையே முதன்மைப் பணியாகக் கொள்ள வேண்டும் என்று அறிக்கை வைத்தார். நேரெதிரான இவ்விரு பாதைகளைக் கொண்ட அறிக்கைகளை இணைத்து,  அரசியல் சட்டமியற்றுவதை முதன்மையாகவும், அதற்குத் துணையாக மக்கள் போராட்டங்களை நடத்த வேண்டும் என்று சமரசப்படுத்தி, கட்சித் தலைவர் பிரசந்தா முன்வைத்த அறிக்கை அந்த மத்தியக் கமிட்டி கூட்டத்தில் பெரும்பான்மையுடன் நிறைவேற்றப்பட்டது.

பின்னர், கடந்த ஏப்ரல் 20,2011இல் நடந்த கட்சியின் அரசியல் தலைமைக் குழுவில் “உடனடி அரசியல் உத்தேசத் திட்டம்” எனும் சமரசவாத ஆவணத்தை பிரசந்தா முன்வைத்து நிறைவேற்றினார். மக்கள்திரள் எழுச்சிகளைக் கட்டியமைக்கும் கட்சியின் முடிவுக்கு மாறாக, சட்டவாதசமரசவாத நடவடிக்கைகள் மூலம் அரசியல் சட்டத்தை எப்படியாவது நிறைவேற்றுவதற்கான நடவடிக்கைகளை பிரசந்தாவும் பட்டாராயும் முனைப்புடன் செயல்படுத்தத் தொடங்கினர். “செம்படையை நேபாள இராணுவத்துடன் இணைப்பதும், அரசியல் நகல் சட்டத்தை இயற்றுவதுமே முதன்மையான பணி என்றும், அரசியல் சட்டம்தான் பிற்போக்குவாதிகளின் சதிகளை முறியடிக்கும் என்றும் அவர்கள் வாதிட்டனர். மக்கள் போராட்டங்கள் பெருகினால், அதைக் காட்டி அரசியல் நிர்ணய சபையிலுள்ள இதர அரசியல் கட்சிகள் முரண்பட்டு இழுபறி நீடிக்கும்;  இதனால் அரசியல் சட்டத்தை நிறைவடையச் செய்ய முடியாமல் போய்விடும் என்று பிரசந்தா வாதிட்டார். இதற்கெதிரான கருத்துக்களைப் புறக்கணித்து, இருவழிப் போராட்டத்தை நிராகரித்து, ஒரு குடைக் கவிழ்ப்பு நடவடிக்கையை நடத்தி பிரசந்தாவும் பட்டாராயும் கட்சித் தலைமையைக் கைப்பற்றிக் கொண்டனர். யாருடனும் கலந்தாலோசிக்காமல் இந்தியாவுடன் இருதரப்பு முதலீடு மற்றும் பாதுகாப்பு ஒப்பந்தத்தில் பிரதமர் பட்டாராய் தன்னிச்சையாக கையெழுத்திட்டுள்ளார்” என்று குற்றம் சாட்டுகிறார், தோழர் கிரண்.

தீராத அரசியல் நெருக்கடிகள்  இழுத்தடிப்புகளால் நேபாள மக்களை, குறிப்பாக நடுத்தர வர்க்கத்தைச் சோர்வடையச் செய்து நம்பிக்கையின்மையை ஏற்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு இந்திய மேலாதிக்கவாதிகள் காய்களை நகர்த்தினர். அதற்கேற்ப ஊடகங்களும் ஒத்தூதின. இந்திய மேலாதிக்கவாதிகளின் திட்டப்படி, நாடாளுமன்ற முட்டுக்கட்டைகள் மூலம் நாட்டை தீராத அரசியல் நெருக்கடியில் தள்ளும் நோக்கத்துடன் நேபாளத்தின் பிற அரசியல் கட்சிகள் செயல்பட்டன. அந்தச் சதிவலையில் சிக்கி, அக்கட்சிகளின் இழுத்த இழுப்புக்கெல்லாம் பிரசந்தாவும் பட்டாராயும் வளைந்து கொடுத்துச் செல்லத் தொடங்கினர். மக்கள் சமாதானத்தையே விரும்புகிறார்கள், போராட்டத்தை அல்ல  என்ற ஊடகங்களின் பொய்ப்பிரச்சாரத்தை நம்பிக் கொண்டு, அமைதி நடவடிக்கைதான் முதன்மையானது என்ற திசையில் இவர்கள் கட்சியை இழுத்துச் சென்றனர். எப்படியாவது அரசியல் சட்டத்தை நிறைவேற்றுவதற்காக அக்கட்சிகளின் இழுத்த இழுப்புக்கெல்லாம் வளைந்து கொடுத்து சந்தர்ப்பவாதமாக நடந்து கொண்டு துரோகமிழைப்பதாக கட்சித் தலைமை சீரழிந்து போனது. எதிர்க்கட்சிகளின் நிர்ப்பந்தங்களுக்கு விட்டுக் கொடுப்பதன் மூலம் அவர்கள் அரசியல் சட்டத்தை இயற்ற ஒத்துழைப்பார்கள் என்று பிரசந்தாவும், பட்டாராயும் பெரிதும் நம்பினர். மேலும்மேலும் இறங்கிவந்து சமரசமாகப் போவதும், அக்கட்சிகளுடன் பேரங்கள், பேச்சுவார்த்தைகள் நடத்துவதும் இரகசிய ஒப்பந்தங்கள் போடுவதுமாக பிரசந்தா-பட்டாராய் தலைமை துரோகத்தில் இறங்கியது.

நேபாள்-புரட்சி-பின்னடைவு-படிப்பினை!கட்சியின் அரசியல் தலைமைக்குழு தோழர்களையோ, ஏன் கட்சியின் செயலாளரும், கட்சியின் பாதுகாப்புத் துறை பொறுப்பாளருமான பாதலையோ கலந்தாலோசிக்காமல் பிரசந்தாவும் பட்டாராயும் கடந்த ஆண்டு செப்டம்பரில் செம்படை முகாம்களிலுள்ள ஆயுதப் பெட்டகங்களின் சாவியை ராயல் நேபாள இராணுவத்திடம் ஒப்படைத்தனர். கடந்த ஏப்ரல் 10ஆம் தேதியன்று நடந்த ராயல் நேபாள இராணுவத்துடன் செம்படை இணைப்பு என்பது அப்பட்டமான சரணாகதியாகவே நடந்துள்ளது. ஏறத்தாழ 19,000 பேர் கொண்ட செம்படையில் வெறும் 6,500 பேரை மட்டும் நேபாள இராணுவத்தில் சேர்க்கலாம் என்று பிற அரசியல் கட்சிகள் நிர்ப்பந்தித்ததை அப்படியே பிரசந்தாவும் பட்டாராயும் ஏற்றுக் கொண்டனர். எஞ்சியோரைக் கட்டாயமாக விருப்ப ஓய்வு பெறச் செய்து செம்படையிலிருந்து வெளியேற்றியுள்ளனர். இச்சரணடைவை ஆதரிப்போருக்கும் எதிர்ப்போருக்குமிடையே சக்திகோர் செம்படை முகாமில் மோதல்கள் நடந்தன. அதைத் தொடர்ந்து, ராயல் நேபாள இராணுவத்தை 15 செம்படை முகாம்களுக்கும் அனுப்பி ஆயுதங்களைக் கைப்பற்றி நடவடிக்கை எடுக்குமாறு பட்டாராய்  உத்தரவிட்டார். இதை எதிர்த்து, “நீங்களும் சரி, நாங்களும் சரி; இப்போது பாதுகாப்பற்ற அபாய நிலையில் உள்ளோம்” என்று செம்படையின் ஏழு டிவிஷனல் தளபதிகள்  நேபாள மாவோயிஸ்டுக் கட்சித் தலைவர் பிரசந்தாவுக்கு வெளிப்படையாகவே எச்சரிக்க விடுத்தனர். ஆனால், பிரசந்தா இதனை ஒரு பொருட்டாக மதிக்காமல், “அமைதி நடவடிக்கையை முழுமைப்படுத்துவதற்காகவே நான் தைரியமான சில முடிவுகளை எடுத்தேன்” என்று  இந்தச் சரணாகதி நடவடிக்கையைப் பெருமையுடன் குறிப்பிடுகிறார்.

இறுதியில், பிரசந்தாவும் பட்டாராயும் கட்சியின், புரட்சியின் துரோகிகளாக அம்பலப்பட்டுப் போனார்கள். செம்படை கலைக்கப்பட்டு ஆயுதங்களும் பறிக்கப்பட்ட பிறகு, பிரசந்தாவும் பட்டாராயும் இதர கட்சிகளுடன் பேரம் பேசுவதற்கான ஆற்றலையே இழந்து விட்டனர். இதர கட்சிகளின் நிர்ப்பந்தங்களுக்குப் பணிந்து அவர்கள் முன்வைக்கும் முடிவுகளை ஏற்றுக் கொள்வதைத் தவிர, பிரசந்தா  பட்டாராயிடம் வேறு அரசியல் பலமோ, ஆயுத பலமோ இல்லாமல் போய்விட்டது. இதனால்தான், இந்தியாவும் அமெரிக்காவும் இச்சரணாகதியை வாழ்த்தி வரவேற்கின்றன. “மாவோயிஸ்டு கட்சியைச் சட்டவாதக் கட்சியாக மாற்றும் நடவடிக்கையில் இது முக்கியமான நடவடிக்கையாகும்” என்று நேபாள காங்கிரசுக் கட்சியின் தலைவரான ராமச்சந்திர பவுதேல் வாழ்த்துகிறார்.

மன்னராட்சிக்கு எதிரான மக்களின் பேரெழுச்சியையும், அதைத் தொடர்ந்து உருவான அரசியல் ஆதரவையும், ஒரு உந்துவிசையாகக் கொண்டு, அடுத்த கட்டத்துக்குப் புரட்சியை முன்னெடுத்துச் செல்வதற்கான அடிப்படைகளைக் கொண்டதாக, அதற்கான தயாரிப்பாக நேபாள மாவோயிஸ்டுகளின் செயல்தந்திரத்  திட்டமும் அரசியல் நடத்தை வழியும் இருந்திருக்க வேண்டும்.

“தற்காலிகப் புரட்சி அரசாங்கத்தில் பாட்டாளி வர்க்கக் கட்சி பங்கேற்றாலோ, இல்லாவிட்டாலோ, எப்படியிருந்த போதிலும் தற்காலிக புரட்சி அரசாங்கத்தின் மீது நாம் கீழிருந்து நிர்ப்பந்தம் கொண்டுவர வேண்டும். கீழிருந்து இந்த நிர்ப்பந்தத்தைச் செயல்படுத்துவதற்குப் பாட்டாளி வர்க்கம் ஆயுதமேந்தியிருக்க வேண்டும்  —  ஏனெனில், புரட்சிகரமான நிலைமைகளில் விவகாரங்கள் அசாதரணமான வேகத்துடன் பகிரங்க உள்நாட்டுப் போர் கட்டத்துக்கு வளர்கின்றன  — மற்றும் சமூக ஜனநாயகக் கட்சி பாட்டாளி வர்க்கத்துக்குத் தலைமை வகித்திருக்கவும் வேண்டும். அது ஆயுதமேந்திச் செலுத்தும் நிர்ப்பந்தத்தின் நோக்கம் ‘புரட்சியின் ஆதாயங்களைப் பாதுகாப்பது, கெட்டிப்படுத்துவது, விரிவாக்குவது’  அதாவது, பாட்டாளி வர்க்க நலன் நிலையிலிருந்து பார்க்கும் போது அந்த ஆதாயங்கள் நம் குறைந்தபட்ச வேலைத் திட்டம் முழுவதையும் நிறைவேற்றுவதாக அமைந்திருக்க வேண்டும் ” ( ஜனநாயகப் புரட்சியில் சமூக ஜனநாயகத்தின் இரு செயல்தந்திரங்கள்) என்றார் லெனின்.

பாட்டாளி வர்க்கத் தலைமையும் ஆயுதப்படை பலமும் எனும் இரு மையமான நிபந்தனைகளை மாவோயிஸ்டு கட்சித் தலைவர்களான பிரசந்தாவும் பட்டாராயும் கைவிட்டதன் விளைவாக, இன்று நேபாளப் புரட்சி பின்னடைவைச் சந்தித்துள்ளது.

நேபாள்-புரட்சி-பின்னடைவு-படிப்பினை!மேலும், தொழிலாளர்  விவசாயி இயக்கங்களையும் கட்சியின் தலைமையிலான ஆயுதப்படை சக்திகளையும் விரிவுபடுத்த முயற்சி எடுக்காமல், ஒரு தற்காலிகக் கூட்டாளியாகிய கோமிங்டாங்கையே முற்றும் முழுதாகச் சார்ந்திருக்கும்படியான சந்தர்ப்பவாதப் பாதை கட்சியில் ஆதிக்கம் செலுத்தியதால், 1927 புரட்சியில் சீனக் கம்யூனிஸ்ட் கட்சி தோல்வியைத் தழுவியது என்று (ஜப்பானிய ஏகாதிபத்தியத்துக்கு எதிரான செயல்தந்திரம் பற்றி எனும் நூலில்) மாவோ குறிப்பிடுகிறார்.

இத்தகைய நிலைமையில்தான் பிரசந்தா-பட்டாராய் தலைமையும் உள்ளது. மன்னராட்சிக்கு எதிரான தற்காலிகக் கூட்டாளிகளான இதர பிற்போக்கு அரசியல் கட்சிகளைச் சார்ந்திருக்கும் சந்தர்ப்பவாதப் பாதைக்கு அப்பால், கட்சி தனது சொந்த திட்டத்தை முன்வைத்து உழைக்கும் மக்களை அணிதிரட்டவோ, செம்படையைக் கட்டியமைத்து விரிவாக்கவோ அத்தலைமையிடம் திட்டம் ஏதுமில்லை. நேபாள மாவோயிஸ்டு கட்சி இதர 7 கட்சிகளுடன் போட்டுகொண்ட ஒப்பந்தம் மன்னராட்சியை வீழ்த்துவதற்கும் ஒரு ஜனநாயகக் குடியரசை நிறுவுவதற்குமான ஒரு தற்காலிக ஐக்கிய முன்னணி செயல்தந்திரம்தான். ஒருவேளை, இந்த ஐக்கிய முன்னணி நாளை முறிந்து போகலாம் என்ற எதிர்பார்ப்பில் கட்சியைத் தயார் நிலையில் வைப்பதும், மக்களைத் திரட்டுவதும் வேண்டும். ஆனால் அத்தகைய திட்டம் ஏதுமில்லாமல், முழுக்கவும் சட்டவாத நடவடிக்கைகளில் பிரசந்தா -பட்டாராய் தலைமை மூழ்கிப் போனது.

“ராயல் நேபாள இராணுவத்தின் போர்வீரர்களைப் போல முறைப்படி போர்ப்பயிற்சி பெற்றிராத, தகுதியில்லாத செம்படை வீரர்களை நேபாள ராணுவத்தில் இணைத்தால் ராணுவத்தின் ஆற்றல் குறைந்துபோகும்” என்றும், “செம்படையின் ஆயுதங்களை ஒப்படைக்க வேண்டும்; மாவோயிஸ்டுகளின் தலைமையிலான வன்முறைக் கும்பலான கம்யூனிஸ்டு இளைஞர் கழகத்தைக்  கலைக்க வேண்டும்’’என்றும்  எதிர்க்கட்சிகள் நிர்ப்பந்தங்களைக் கொடுத்து, அரசியல் சட்டத்தை இயற்றவிடாமல் சதிகளில் இறங்கிய  நிலையில், பிரசந்தா-பட்டாராய் தலைமை இக்கட்சிகளின் சதிகளை அம்பலப்படுத்தி, இக்கட்சிகளின் நிர்பந்தங்களை ஏற்க மறுத்து, எதிர் நிர்ப்பந்தங்களை முன்வைக்கவில்லை. “செம்படையின் ஆயுதங்களைக் கையளிக்க மாட்டோம்; நாட்டுப் பற்றும் அர்ப்பணிப்பும் கொண்ட, மக்களுக்கும் புரட்சிக்கும் சேவை செய்யும் செம்படை வீரர்களின் தகுதியானது, மக்களை ஒடுக்கும் ராயல் நேபாள ராணுவத்தின் படைவீரர்களை விட மிக உயர்வானது; மக்களுக்கும் புரட்சிக்கும் சேவை செய்யும் போர்க்குணமிக்க இளைஞர் கழகத்தைக் கலைக்க மாட்டோம்; நிலப்பிரபுக்களிடமிருந்து கைப்பற்றப்பட்ட நிலங்களைத் திருப்பி ஒப்படைக்கமாட்டோம்; நாடு முழுவதும் நிலச்சீர்திருத்தத்தை நடைமுறைப்படுத்துவோம்” என எதிர்நிர்ப்பந்தங்களை முன்வைத்து, மக்களின் கோரிக்கையை நிறைவேற்ற முன்முயற்சியுடன் கட்சி செயல்பட்டிருக்க வேண்டும். அவ்வாறு செய்திருந்தால், புரட்சியின் பலன்கள் மக்களைச் சென்றடைவதை கண்கூடாகக் காணும் மக்கள், புரட்சியையும் கட்சியையும் காக்கும் போரில் மாவோயிஸ்டுகளுடன் கைகோர்த்திருப்பார்கள்.

மறுபுறம், நேபாளப் புரட்சியின் பின்னடைவைக் காட்டி, ‘மன்னராட்சிக்கு எதிரான மக்கள் எழுச்சிக்குப் பின்னர் மாவோயிஸ்டு கட்சி தனது செயல்தந்திரத்தை மாற்றிக் கொண்டு ஆயுதப் போராட்டத்தைக் கைவிட்டு அமைதி நடவடிக்கைக்குச் சென்றதுதான் தவறு. நீண்டகால மக்கள் யுத்தத்தை தொடர்வது என்ற பழைய செயல்தந்திரத்தை தொடர்ந்து பின்பற்றியிருந்தால், இத்தகைய சந்தர்ப்பவாதத் தவறுகள் நிகழாமல் தடுத்திருக்கலாம்’ என்று  சிலர் கருதுகின்றனர். நேபாள மக்கள் எழுச்சியும், அதைத் தொடர்ந்த புதிய அரசியல் நிலைமையும் கோரியபடி மாவோயிஸ்டுகள் புரட்சியை முன்னெடுத்துச் செல்ல புதிய செயல்தந்திரத்தை வகுத்துச் செயல்படுத்தியது அவசியமான, பருண்மையான நிலைமைக்கேற்ற சரியான வழிமுறையாகும். மாறிய நிலைமைகளைக் கணக்கில் கொள்ளாமல், தொடர்ந்து ஆயுதப் போராட்டத்தை நடத்திக் கொண்டிருக்க வேண்டும் என்று கருதுவதுதான் மார்க்சிய லெனினியத்துக்கு எதிரான வறட்டுத்தனமாகும்.

நேபாள மாவோயிஸ்டு கட்சியின் மூத்த துணைத் தலைவர்களில் ஒருவரான கிரண் எனப்படும் மோகன் வைத்யா, “நாங்கள் வகுத்துக் கொண்ட புதிய செயல்தந்திரம் சரியானது. ஆனால் கட்சித் தலைவர் பிரசந்தாவும், துணைத் தலைவர்களில் ஒருவரான பாபுராம் பட்டாராயும் அதைப் புறக்கணித்துவிட்டு, புரட்சிக்கும் நாட்டுக்கும் மக்களுக்கும் துரோகமிழைத்து, செம்படையை ராயல் நேபாள ராணுவத்திடம் சரணடைய வைத்துவிட்டனர். இந்திய மேலாதிக்கத்தின் கைக்கூலிகளாகிவிட்டனர். முதலாளித்துவ நாடாளுமன்ற சட்டவாதக் கட்சியாக, மாவோயிஸ்டு கட்சியை மாற்ற முயற்சிக்கின்றனர்” என்று வெளிப்படையாகக் குற்றம் சாட்டுகிறார்.

“இது, பிரசந்தா  பட்டாராய் துரோகக் கும்பல் நடத்தியுள்ள ஒருவகையான  குடைக்கவிழ்ப்பு நடவடிக்கையாகும். கட்சியில் ஜனநாயக மத்தியத்துவம் என்பது செயலிழந்து போய்விட்டது. கட்சியின்  அரசியல் சித்தாந்த சீரழிவுக்கும் பிளவுக்கும் பிரசந்தாவும் பட்டாராயும்தான் முதன்மைக் காரணம். நாங்கள் பிரசந்தா மீது பெரிதும் நம்பிக்கை வைத்திருந்தோம். இது எங்களின் பலவீனம். அவரது வலது விலகலைப் புரிந்து கொண்டு நாங்கள் விழிப்புற்று போராடுவதற்குள் மிகுந்த தாமதமாகிவிட்டது ” என்கிறார்,  அரசியல் தலைமைக்குழு உறுப்பினரான தோழர் பசந்தா. “இந்தியாவின் தலையாட்டிப் பொம்மைகளாக பிரசந்தாவும் பட்டாராயும் மாறிவிட்டனர்” என்று சாடுகிறார், கிரண் குழுவைச் சேர்ந்த கட்சியின் செயலர்களுள் ஒருவரான தோழர் கஜுரேல்.

நேபாள்-புரட்சி-பின்னடைவு-படிப்பினை!தோழர் கிரண் தலைமையிலான சிறுபான்மையினர் முன்வைத்துள்ள குற்றச்சாட்டுகளுக்கு விளக்கமளிக்க முன்வராமல், “அமைதி நடவடிக்கையைத் திசை திருப்பி சீர்குலைக்கும் வகையில் கட்சியில் சிலர் அதிருப்தியைக் காட்டுகின்றனர்” என்று  அக்குழுவினர் மீது குற்றம் சாட்டும் பிரசந்தா, இச்சிறுபான்மைக் குழுவினர்தான் அமைதி நடவடிக்கைக்கு முட்டுக்கட்டையாக இருப்பதாகப் பொய்க்குற்றம் சாட்டி,  தொடர்ந்து அவர்களை வறட்டுவாதிகள், கடுங்கோட்பாட்டுவாதிகள் என்று சாடி அலட்சியப்படுத்துகிறார். இன்னொருபுறம், பிரசந்தாபட்டாராய் பாதையை எதிர்க்கும் தோழர் கிரண் தலைமையிலான குழுவினரிடம் வெறும் விமர்சனங்கள்தான் இருக்கிறதே தவிர, மாற்றுத் திட்டம் இல்லை என்பதாக ஒரு கருத்து உள்ளது. ஆனால், தோழர் கிரண் தலைமையிலான குழுவினர், மக்கள்திரள் எழுச்சிகளின் மூலம் குடியாட்சியின் உயரதிகாரத்தை நிறுவி அரசியல் சட்டத்தை இயற்ற வேண்டும் என்ற பலுங்டார் பிளீனத் தீர்மானத்தை காட்டி, அதுதான் கட்சியின் செயல்தந்திரத் திட்டம் என்றும், அதை நிறைவேற்றக் கோருவதையே தங்களது நோக்கமாகக் கொண்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.

தோழர் கிரண் தலைமையிலான குழுவினர், நீண்டகாலமாக பிரசந்தா-பட்டாராய் குழுவினரின் சமரசசரணாகதிப் பாதைக்கு எதிராக கட்சிக்குள் போராடி வந்துள்ளனர். இருப்பினும், கட்சி ஐக்கியத்தைப் பாதுகாக்க வேண்டும் என்ற நோக்கில்,  இருவழிப் போராட்டத்தை உறுதியாக முன்னெடுத்துச் செல்லாமல் இருந்துள்ளனர்.  இப்போது, பிரசந்தா-பட்டாராய் குழுவினரின் துரோகம் மேலும்மேலும் அம்பலப்பட்டுள்ள நிலையில், அத்துரோகப் பாதையை எதிர்த்து தனியாக மேதினப் பேரணியும் பொதுக்கூட்டமும் நடத்தியுள்ளதோடு, பட்டாராய்க்கு எதிராகக் கருப்புக் கொடி ஆர்ப்பாட்டமும், பிரசந்தாவின் கொடும்பாவி எரிப்புப் போராட்டமும் நடத்தியுள்ளனர். கிரண் குழுவினருக்கு ஆதரவாக மாவோயிஸ்டு கட்சியின் மாணவர் சங்க, தொழிற்சங்க அமைப்புகளும் பிளவுபட்டுள்ளன. இளங்கம்யூனிஸ்டு கழகத்திலிருந்து வெளியேறிய தோழர்களைக் கொண்டு “மக்கள் சேவை கழகம்” எனும் புதிய இளைஞர் அமைப்பை கிரண் குழுவினர் கட்டியமைத்துள்ளதாகவும்,  தோழர் கிரண் தலைமையிலான குழுவினர் தேர்தல் கமிஷனில் புதிய கட்சியாகத் தங்களைப் பதிவு செய்து கொள்ள முயற்சித்து வருவதாகவும், அரசியல் நிர்ணய சபையிலும் கட்சியின் மத்தியக் கமிட்டியிலும் மூன்றிலொரு பங்கினரும், செம்படை வீரர்களில் ஆகப் பெரும்பான்மையினரும் தோழர் கிரண் குழுவினரை ஆதரிப்பதாகவும் செய்திகள் வருகின்றன.  தோழர் கிரண் தலைமையிலான குழுவினர் பிரசந்தா-பட்டாராய் குழுவினரின் சரணடைவுப் பாதையை முறியடித்து, கட்சியை ஐக்கியப்படுத்திப் புரட்சியை முன்னெடுத்துச் செல்வார்கள் என நம்புவோமாக!

நேபாள்-புரட்சி-பின்னடைவு-படிப்பினை!இடர்ப்பாடுகளால் சுற்றி வளைக்கப்பட்ட சவாலாகவும், அவற்றை முறியடித்து எழும் நம்பிக்கை நட்சத்திரமாகவும்  தோன்றிய நேபாள புரட்சி இன்று பெரும் பின்னடைவில் சிக்கித் தவித்துக் கொண்டிருக்கிறது. உலக முதலாளித்துவம் இதனைக் காட்டி, இனி கம்யூனிசப் புரட்சி சாத்தியமே இல்லை என்று எகத்தாளம் செய்வதற்கான நிலைமை ஏற்பட்டுள்ளது.

ஆளும் வர்க்கங்களின் அரசியல் சமூகப் பொருளாதாரத் திட்டங்களுக்கு எதிரான மாற்றுத் திட்டங்களை முன்வைத்துப் போராடுவதன் மூலம்தான் கட்சியின் செல்வாக்கும் மேலாண்மையும் நிலைநாட்டப்பட்டு புரட்சி முன்னேறுகிறது; பாட்டாளி வர்க்கக் கட்சிக்கும் இதர முதலாளித்துவக் கட்சிகளுக்குமிடையே கொள்கை, சித்தாந்தம், வேலைத்திட்டம், நடைமுறை என அனைத்திலும் வேறுபாடு உள்ளதை அலட்சியம் செய்து, முதலாளித்துவக் கட்சிகளைப் போல நாமும் இருக்க வேண்டும் என்று கருதும் வலது விலகலை எதிர்த்துப் போரிடுவதுதன் மூலம்தான் புரட்சி முன்னேறுகிறது என்ற நேபாளப் புரட்சியின் அரிய படிப்பினையைப் பெற்று, உலகெங்குமுள்ள பாட்டாளி வர்க்கம் போராடுவதன் மூலம்தான், பிற்போக்கு முதலாளித்துவவாதிகளின் அவதூறுகளையும் பொய்ப்பிரச்சாரத்தையும் முறியடிக்க முடியும்

_______________________________________________

புதிய ஜனநாயகம், ஜூன் – 2012

_______________________________________________

அமெரிக்க சொர்க்கத்தில் ஆசிய அடிமைகள்!

33

அமெரிக்க-கொத்தடிமை-கூடாரம்வியர்வை நாற்றம்; அழுகிய குப்பைகளிலிருந்து கிளம்பும் நெடி; கழிப்பறையில் சிறுநீர் கழிக்கும் ஒலி; அருகிலேயே அடுப்பில் மீன் வறுக்கும் வாசம்; தலை மேலே குறட்டைச் சத்தம்; இன்னொரு மூலையில் தொலைக்காட்சியின் இரைச்சல்; எங்கும் கவிந்திருக்கும் சிகரெட் புகை; சாராய நெடி.

பத்தடிக்குப் பத்தடி அளவுள்ள இந்த அறையினுள் 8 பேர்; அறைக்கு சன்னலில்லை; சுவரின் உச்சியில் அரை அடி விட்டத்தில் ஒரு ஓட்டை – காற்று வெளியே போகவும் உள்ளே வரவும் அவ்வளவுதான் இடம்.

இது சிறைக் கொட்டடியில்லை; பம்பாய், கல்கத்தாவின் குடிசைப் பகுதியில்லை – நியூயார்க்.

மண்ணுலக சொர்க்கமான அமெரிக்காவின் மாபெரும் நகரம். 100 மாடி 150 மாடிக் கட்டிடங்கள் நிரம்பிய அந்த கான்கிரீட் காட்டின் ஏதோ ஒரு கட்டிடத்தில் இது ஒரு பொந்து.

இந்தப் பொந்தில் வசிப்பவர்கள் காலை 5 மணிக்கு எழுந்திருக்க வேண்டும். காலைக் கடன்களை முடித்துக் கொண்டு 7 மணிக்கு வேலை செய்யத்துவங்க வேண்டும்.

வேலை செய்யும் தொழிற்கூடமோ பக்கத்து அறைதான். 15 அடிக்கு 18 அடி அளவுள்ள அறைக்கு 15 தையல் எந்திரங்கள். ஒரு நாளைக்கு 16 மணி நேரம் வேலை. வாரத்தில் ஏழு நாட்களும் வேலை.

இந்தச் சித்திரவதைக் கூடங்களுக்கு அமெரிக்கப் பத்திரிகைகள் சூட்டியிருக்கும் பெயர் வியர்வைக் கடைகள். நியூயார்க், லாஸ் எஞ்செல்ஸ் போன்ற அமெரிக்காவின் பெருநகரங்கள் அனைத்திலும் நிரம்பியுள்ள இத்தகைய ‘வியர்வைக்கடை’களில் பணியாற்றும் ஆண்கள், பெண்கள், குழந்தைகள் ஆகிய அனைவரும் தாய்லாந்து, சீனா போன்ற ஆசிய நாடுகளைச் சேர்ந்தவர்கள் – கொத்தடிமைகள்.

துபாய்க்கும் சிங்கப்பூருக்கும் வேலை தேடிச் சென்று ஏமாந்து கொத்தடிமைகளாகும் நம்மூர் மக்களின் கதையைக் காட்டிலும் கொடியது இவர்களது கதை.

”லாஸ் எஞ்செல்ஸ் நகரிலுள்ள அதி நவீன தையற்கூடம் ஒன்றின் புகைப்படத்தை எங்களுக்குக் காட்டினார்கள். பார்ப்பதற்கே மிகவும் கவர்ச்சிகரமாய் இருந்தது. காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரை வேலை; வாரத்தில் 5 நாட்கள் வேலை. மாதம் 2400 டாலர் சம்பளம். விடுமுறை நாட்களில் டிஸ்னிலாந்து போன்ற இடங்களுக்குக் கூட்டிச் செல்வோம் என்று ஆசை காட்டினார்கள்; நம்பி வந்தோம்.”

“லாஸ் ஏஞ்செல்ஸ் விமான நிலையத்திலிருந்து நேரே இந்தப் பொந்துக்குத்தான் கொண்டு வந்தார்கள். எங்களிடமிருந்து பாஸ்போர்ட், பணம் அனைத்தையும் பிடுங்கிக் கொண்டார்கள். அதிகம் பேசாதே – கேள்வி கேட்காதே – யாரோடும் நட்பு சேராதே – என்ற எச்சரிக்கையுடன் இங்கே அடைக்கப்பட்டோம்”.

”தாய்லாந்தில் 8 மணி நேரம் உழைத்துச் சம்பாதித்ததை இங்கே 16 மணிநேரம் உழைத்துச் சம்பாதிக்கிறோம்.”

இது லே போதாங் என்ற தாய்லாந்துப் பெண்ணின் கதறல்.

அமெரிக்க-கொத்தடிமை-கூடாரம்

யூலி என்ற சீனப்பெண்ணின் கதை இன்னும் கொடூரமானது.

”அமெரிக்காவில் வேலை வாங்கித் தருகிறோம், அங்கே சம்பாதித்து எங்கள் கடனைக் கொடுத்தால் போதும்” என்று சொன்ன ஏஜெண்டுகளின் பேச்சை நம்பி, தன் கணவனை அமெரிக்காவுக்கு அனுப்பி வைத்தாள் யூலி.

1991-இல் அமெரிக்கா போன கணவனிடமிருந்து பணம் வரவில்லை; கடிதமும் இல்லை; ஆளையும் காணவில்லை. அனுப்பி வைத்த ஏஜென்டுகளைக் கேட்டால் ”இன்னும் கடன் அடையவில்லை” என்றார்கள். தன்னந்தனியாக 3 குழந்தைகளை வைத்துக் கொண்டு 5 ஆண்டுகளாக வாழ்வதற்குப் போராடி வந்த யூலி ஒரு முடிவுக்கு வந்தாள்.

மிச்சமிருந்த எல்லா உடைமைகளையும் விற்றுத் தன் கணவன் வாங்கிய கடனை அடைத்தாள். ”என்னையும் என் பிள்ளைகள் மூன்று பேரையும் என் கணவனுடன் நியூயார்க்கில் சேர்த்துவிடுங்கள்” என்று ஏஜென்டுகளிடம மன்றாடினாள்.

அதற்கு 1,32,000 டாலர் செலவாகும்; நீங்கள் வேலை செய்து அடைக்க வேண்டும் என்றார்கள் ஏஜெண்டுகள். யூலி ஒப்புக் கொண்டாள்.

இப்போது யூ லியும் 3 பிள்ளைகளும் நியூயார்க் நகரில். மூன்றாண்டுகள் ஆகிவிட்டன. கணவனைப் பார்த்துவிட்டாள். ஆனால் குடும்பம் சேர்ந்து வாழமுடியவில்லை. ஆளுக்கோரிடத்தில் வேலை. சேர்ந்து வாழவேண்டும் என்ற கனவுக்காகத் தனித்தனியாக உழைக்கிறார்கள்.

ஐந்து பேரும் ஒரு நாளைக்கு 17 மணிநேரம் உழைக்கிறார்கள். மாதந்தோறும் 3000 டாலர் கடன் கட்டுகிறார்கள்: ஆனால் கடன் அடையவில்லை; அடையப் போவதுமில்லை.

படிக்க வேண்டிய பிள்ளைகளைக் கொத்தடிமையாக்கி விட்டதற்காக வருந்தி அழுகிறாள் யூலி.

ண்ணீர்க் கதைகளுக்குப் பஞ்சமில்லை.

அமெரிக்க-கொத்தடிமை-கூடாரம்இந்தத் தொழிலாளர்களெல்லாம் ஆசிய நாடுகளிலிருந்து மாஃபியாக் கும்பல்களால் கொண்டுவரப் பட்டவர்கள். முறையான கடவுச்சீட்டு (பாஸ்போர்ட்) இருந்தால் அதை இத்தொழிலாளர்களிடமிருந்து பறித்து வைத்துக் கொள்கின்றன இந்த மாஃபியா கும்பல்கள். ஆனால் பெரும்பாலான தொழிலாளர்கள் கள்ளத் தோணியில் கொண்டுவரப்பட்டவர்கள்.

ஒவ்வொர் ஆண்டும் அமெரிக்காவிற்குள் சட்டவிரோதமாகத் குடியேறும் சீனர்களின் எண்ணிக்கை ஒரு லட்சம் என்கிறது அமெரிக்க உளவு நிறுவனம். தாய்லாந்திலிருந்தோ 24,000 பேர். சட்ட பூர்வமாகவே தாய்லாந்திலிருந்து அமெரிக்காவில் குடியேறுவோர் ஆண்டுக்கு ஒரு லட்சம் பேர். இந்தச் சட்டவிரோதக் குடியேற்றங்களை அமெரிக்க அரசு ஏன் தடுத்து நிறுத்த வில்லை என்று கேட்டால், அந்தக் கேள்விக்கான விடைகளில் ஒன்றுதான் இந்த வியர்வைக் கடைகள். பலமாடிக் கட்டிடங்களின் இடுக்குகளிலும், காற்றுப் புகாத பரண்களிலும், நிலவறைகளிலும் இயங்கும் இத்தகைய வியர்வைக் கடைகள். நியூயார்க் நகரில் மட்டும் 400.

”வேலை நிலைமைகளைப் பற்றியோ, கூலியைப் பற்றியோ யாராவது புகார் செய்தால் மறுகணமே அவர்கள் அமெரிக்காவை விட்டுத் துரத்தப்படுவார்கள். எனவே யாரும் வாய்திறக்கவே அஞ்சுகிறார்கள்” என்கிறார் சீனத்தொழிலாளர்கள் சங்கத்தின் தலைவர் விங்லாம்.

அமெரிக்காவை விட்டு ஓடத் தயாராக இருப்பவர்களையும் அப்படி ஓடிவிடுவதற்கு அனுமதிப்பதில்லை மாஃபியா கும்பல்கள். ”எங்களுக்குச் சேரவேண்டிய தொகையை கொள்ளையடித்தாவது கொடுத்துவிட்டுப் போ” என்று மிரட்டுகிறார்கள். கிரிமினல் நடவடிக்கைகளில் ஈடுபடுத்துகிறார்கள். கொத்தடிமையாக நீடிப்பதா, கிரிமினலாக மாறுவதா என்ற கேள்வி வந்தால் முதலாவதைத்தான் தெரிவு செய்கிறார்கள் அந்த ஏழைத்தொழிலாளர்கள்.

நியூயார்க் நகரின் தொழிலாளர் சடப்படி ஒரு மணி நேரத்திற்கான குறைந்தபட்ச ஊதியம் 5.15 டாலர். இந்தக் கொத்தடிமைகளுக்குக் கொடுக்கப்படுவதோ ஒரு டாலர். அந்தச் சம்பளமும் ஒழுங்காகக் கொடுக்கப்படுவதில்லை. இரண்டு மாதச் சம்பளத்தைப் பிடித்து வைத்துக் கொள்வதென்பது மிகவும் சகஜம். அமெரிக்காவின் காவல்துறை, குடியேற்றத் துறை, தொழிலாளர்துறை ஆகிய மூன்றுமே இந்த இரகசிய உலகத்தைக் கண்டு கொள்வதில்லை.

அமெரிக்க-கொத்தடிமை-கூடாரம்

மே தினப் போராட்டத்தின் மூலம் உலகத்தொழிலாளர்களுக்கு ”8 மணி நேர வேலை” எனும் அடிப்படை உரிமையைப் பெற்றுத்தந்த நாட்டில், மே தினப் போராட்டத்திற்கு முன்னால், சென்ற நூற்றாண்டில் நிலவியதைக் காட்டிலும் கொடூரமான சுரண்டலும் ஒடுக்கு முறையும் தொடர்கிறதே இதற்குக் காரணம் என்ன?

வியர்வைக் கடைகள் குறித்து ஒரு கட்டுரை வெளியிட்டிருக்கும் அமெரிக்காவின் ரீடர்ஸ் டைஜஸ்ட் பத்திரிகை இதற்குப் பதில் சொல்கிறது. ”அவர்கள் தங்கள் சொந்த நாட்டினராலேயே இரக்கமில்லாமல் சுரண்டப் படுகிறார்கள்.” உண்மைதான், தமது சொந்த நாட்டைச் சேர்ந்த மாஃபியாக் கும்பல்களால்தான் அவர்கள் கடத்தப்படுகிறார்கள்; அவர்களால்தான் துன்புறுத்தப்படுகிறார்கள். ஆனால் யாருக்காக? அந்த வியர்வைக் கடைகளின் பொந்துகளிலிருந்து அவர்கள் உற்பத்தி செய்யும் காற்றோட்டமான சட்டைகளை அணிபவர்கள் யார்? அவற்றை விற்று ஆதாயம் அடைவர்கள் யார்? அமெரிக்காவின் மிகப்பிரபலமான ஆயத்த ஆடை விற்பனை நிறுவனங்களும், ஏற்றுமதி நிறுவனங்களும்தான் இந்த வியர்வைக் கடைகளின் சரக்கைக் கொள்முதல் செய்பவர்கள்.

இந்தியாவிலிருந்தும் பிற ஏழை நாடுகளிலிருந்தும் ஆயத்த ஆடைகளை இறக்குமதி செய்யும் அமெரிக நிறுவனங்களின் பிரதிநிதிகள், நேரடியாக சென்னைக்கும், பம்பாய்க்கும் வந்திறங்கி, தங்களது ஆடைகள் எங்கே தைக்கப்படுகின்றன, எப்படித் தைக்கப்படுகின்றன என்று சோதனை செய்கிறார்களே – துணை ஒப்பந்தத்தில் வேலை செய்யும் சிறிய முதலாளிகளின் தையலகங்களைக் கூட அவர்கள் விட்டுவைப்பதில்லையே – அத்தகைய அமெரிக்க முதலாளிகள் தங்கள் நாட்டின் வியர்வைக் கடைகளை மட்டும் பார்வையிடாதது ஏன்?

”கலிஃபோர்னியாவில் இத்தகைய வியர்வைக் கடையொன்றை தொழிலாளர் துறை அதிகாரிகள் சோதனையிட்ட போது அங்கே உற்பத்தியாகும் ஆடைகளெல்லாம் அமெரிக்காவின் மிகப்பெரும் ஆடை விற்பனையகங்களுக்குச் சொந்தமானவை எனத் தெரியவந்தது” என்கிறது ரீடர்ஸ் டைஜஸ்ட்.

அமெரிக்க-கொத்தடிமை-கூடாரம்நியூயார்க்கின் மிகப்பெரும் நிறுவனங்களான வால் மார்ட், கே மார்ட் ஆகியோரது ஆடை விற்பனையில் பாதி நியூயார்க் கொத்தடிமைகளின் தயாரிப்புதான் என்கிறது – டைம் வார ஏடு. வால் – மார்ட், கே – மார்ட் ஆடைகள் இந்தியா உள்ளிட்ட உலக நாடுகள் பலவற்றுக்கும் ஏற்றுமதியும் செய்யப்படுகின்றன.

சதாம் உசேனின் கழிப்பறையில் இரசாயன ஆயுதத்தின் நெடி வீசுவதை வானத்திலிருந்தே மோப்பம் பிடிக்கத் தெரிந்த கிளிண்டனின் நாசியில் வால் மார்ட் சட்டைகளில் வீசும் வியர்வையின் நெடி ஏறாதது ஏன்?

இது ஒரு வர்த்தகத் தந்திரம். மலிவான உழைப்புச் சந்தை என்ற ஒரே காரணத்தினால்தான் இந்தியா போன்ற ஏழை நாடுகளிலிருந்து ஆயத்த ஆடைகளை இறக்குமதி செய்கிறார்கள் அமெரிக்க முதலாளிகள். இந்த ஆயத்த ஆடை ஏற்றுமதி தொழிலில் இந்தியா உள்ளிட்ட பல ஆசிய நாடுகளில் உள்ள பல லட்சம் தொழிலாளர்களின் தலைவிதி பிணைக்கப்பட்டு விட்டது. மலிவு விலையில் உழைப்பை இறக்குமதி செய்த அமெரிக்கா, இப்போது உழைப்பாளிகளையே மலிவு விலையில் இறக்குமதி செய்கிறது.

அன்று ஆப்பிரிக்கக் கறுப்பின மக்களை விலங்குகளைப் போல வலைவீசிப் பிடித்து, தாயை கரும்புத் தோட்டத்திலும், பிள்ளையை நிலக்கரிச் சுரங்கத்திலும் பிரித்துப் போட்டு, அவர்களின் ரத்தத்தை உறிஞ்சி அமெரிக்க சொர்க்க பூமியை உருவாக்கிக் கொண்டார்கள். இன்று அந்தச் சொர்க்கத்தின் நியான் விளக்குகளில் சொக்கி விழும் விட்டில் பூச்சிகளான யூலி போன்றோரைக் கள்ளத்தோணியின் மூலம் கவர்ந்திழுக்கிறார்கள்.

து ஒரு ராஜ தந்திரம். தமக்கு ஆடை ஏற்றுமதி செய்யும் இந்தியா, சீனா, பாகிஸ்தான், இலங்கை, தாய்லாந்து போன்ற நாடுகள் கிளின்டனின் அரசியல் ஆணைக்குப் பணிய மறுத்தால், ஆடை இறக்குமதி நிறுத்தப்படும். ஒரே நொடியில் இந்நாடுகளின் இலட்சக்கணக்கான தொழிலாளர்கள் தெருவில் வீசப்படுவார்கள்.  ஆசியாவின் ஆடை இறக்குமதியாகாத அத்தகைய தருணங்களில் ஆசியாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட இந்தக் கொத்தடிமைகள் அமெரிக்காவின் நிர்வாணத்தை மறைத்து நாகரிகப் படுத்துவார்கள். ஆசியத் தொழிலாளிக்கெதிராக ஆசியத் தொழிலாளிகள்!

து ஒரு வர்க்கத் துவேசம்! மருத்துவர்களையும், பொறியியலாளர்களையும் கணினி வல்லுநர்களையும் குடியுரிமை தந்து இறக்குமதி செய்து கொள்ளும் அமெரிக்கா இந்த உழைப்பாளிகளுக்கும் குடியுரிமை தரலாமே! சட்டப்படி குடியுரிமை தந்தால், சட்டப்படி ஊதியம் கேட்பார்கள். அவர்களைக் கள்ளத் தோணிகளாகவே வைத்திருந்தால்தான், தேவை முடிந்தபின், அவர்களது இளமை முடிந்தபின், அவர்களைக் கந்தல் துணியைப் போலக் கடலில் வீச முடியும். வீசிவிட்டுக் கள்ளத் தோணியைத் தடுக்கத் தவறியதாக அந்த நாட்டைக் குற்றம் சாட்டி மிரட்டவும் முடியும்.

துதான் சுதந்திர வர்த்தகம்! தேசங்கடந்து அமெரிக்கா, ஐரோப்பாவிலிருந்து வரும் மூலதனத்திற்கு இங்கே ரத்தினக் கம்பளம்; மாலை மரியாதைகள். தேசங்கடந்து செல்லும் நம் உழைப்புக்கு அங்கே கொத்தடிமைத் தனம்! குழந்தைத் தொழிலாளர் ஒழிப்பை எதிர்க்கிறது பென்டகன். ஏனென்றால் அமெரிக்க ராணுவத்தின் சீருடைகள் ஆசியக் குழந்தைகளால் தைக்கப்படுகின்றன. பிள்ளைக்கறி தின்னும் இந்த நாயன்மார்கள்தான் தாங்கள் சுத்த சைவமென்றும், பரீதாபாத்திலிருந்து (டில்லி) அனுப்பப்படும் கம்பளங்களில் ”இது குழந்தைகளால் நெய்யப்பட்டதல்ல” என்று முத்திரை குத்தி அனுப்ப வேண்டுமென்றும் கோருகிறார்கள். இந்த நாயன்மார்களிடம் எச்சில் பிரசாதம் வாங்கும் தன்னார்வத்தொண்டு நிறுவனங்கள் ”சிவகாசி மத்தாப்பூ கொளுத்தமாட்டோம்” என்று நாளைய அமெரிக்கக் குடி மக்களான பத்மா சேஷாத்ரி, சர்ச் பார்க் கான்வென்டு பிள்ளைகளை வைத்து மனிதச் சங்கிலி நடத்துகிறார்கள்.

அப்படியா

அப்படி ஓர் இடம் இருக்கிறதா?

ஒன்றுமே தெரியாதது போல

பாசாங்கு செய்கிறார்கள்

ஒப்புக் கொள்ள மறுக்கிறார்கள்.

அப்படியொரு ரகசிய உலகம்

இருக்கிறது என்பதை.

சகமனிதர்கள் உழிழும் கழிவிலும்

குப்பை கூளத்திலும்தான் – அங்கே

சிலர் வாழ்கிறார்கள் என்பதை

ஒப்புக் கொள்ள மறுக்கிறார்கள்.

-என்று அமெரிக்காவில் கறுப்பின மக்கள் வாழும் சேரிகளைப் பற்றி மனம் குமுறிப் பாடினார் கறுப்பினப் பாடகி டிரேஸி சாப்மன்.

அமெரிக்க-கொத்தடிமை-கூடாரம்விண்ணை முட்டும் 150 மாடிக் கட்டிடத்தின் மொட்டை மாடியில் நின்று கொண்டு, கியூபா முதல் சீனம் வரை, உலக மக்கள் அனைவருக்கும் ஜனநாயகமும் மனித உரிமையும் வழங்கப்பட வேண்டும் என்று முழங்குகிறார் கிளின்டன்.

அந்தக் கட்டிடத்தின் நிலவறையில் புதைந்திருக்கும் வியர்வைக் கடையிலிருந்து ஒரு குரல் கேட்கிறது. ” நாங்கள் நாய்களைப் போலத் தின்கிறோம்; பன்றிகளைப் போல வாழ்கிறோம்” என்கிறார் 66 வயதான சோன் லீ என்ற சீனத் தொழிலாளி.

வால் – மார்ட் சட்டை அணிந்து, கென்டகி சிக்கன் தின்று, கோக் குடித்து ஏப்பம் விட்ட பாமரேனியன்களும், சீமைப் பன்றிகளும் ”மனித உரிமை வாழ்க” என்று கைதட்டுகின்றன.

_________________________________________

புதிய கலாச்சாரம், அக்டோபர் 1999.

_________________________________________

வினவுடன் இணையுங்கள்

தொடர்புடைய பதிவுகள்

சென்னைக்கு வருகிறது ”டிராபிக் ஜாம்” வரி!

51
டிராபிக் ஜாம் வரி

டிராபிக் ஜாம் வரிசென்னை நகரிலும், அதன் புறநகர் சாலைகளிலும் ஏற்பட்டு வரும் போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்தத் தனியார் வாகனங்கள் மீது நெரிசல் வரி விதிக்கும் திட்டத்தைக் கொண்டுவரப் போவதாகவும்; இத்திட்டத்தின் முதல் கட்டமாக, சென்னை மாநகருக்குள் அமைந்துள்ள அண்ணா சாலை, பூந்தமல்லி நெடுஞ்சாலை, ஜவஹர்லால் நேரு சாலை ஆகிய மூன்றிலும் இவ்வரி விதிக்கும் நடைமுறை அடுத்த இரண்டு ஆண்டுகளுக்குள் தொடங்கிவிடுமென்றும் தமிழக அரசு அறிவித்திருக்கிறது.

இந்த வரி விதிப்பைத் தவிர்க்க எண்ணும் தனியார் வாகன ஓட்டிகள், இந்தச் சாலைகளுக்குள் நுழையாமல் சுற்றிச் செல்ல வேண்டும்; இல்லையேல், அவர்கள் இந்தச் சாலைகளில் செல்லப் பொதுப் போக்குவரத்தைப் பயன்படுத்த வேண்டியிருக்கும்.  இதன் மூலம் இச்சாலைகளில் போக்குவரத்து நெரிசலைக் குறைத்துவிட முடியும் என அரசு வாதிடுகிறது.

‘‘ஒவ்வொரு காரிலும் ஒரு சில்லு (Chip) பொருத்தப்படும்; அதன் மூலம் அந்த கார் இந்தச் சாலைகளுக்குள் நுழைந்தவுடனேயே, காரின் உரிமையாளரின் வங்கிக் கணக்கிலிருந்து வரி பிடித்தம் செய்யப்படும்” என இந்தத் திட்டத்தின் நடைமுறை சாத்தியப்பாடு பற்றி அரசு விளக்கமளித்திருக்கிறது, தமிழக அரசு.  இதனைக் கேட்பதற்கு ஹை-டெக் படம் பார்ப்பது போலத்தான் இருக்கிறது.  ஒருவேளை, கார் உரிமையாளரின் வங்கிக் கணக்கில் பணம் இல்லாவிட்டால், காரைத் துரத்திக் கொண்டு போலீசு போகும் போலும்.  இப்படி டிமிக்கி கொடுக்கும் கார்காரர்களை நடுவழியில் நிறுத்தி வரி வசூலிக்கத் தொடங்கினால் அல்லது போலீசு தனது “மாமூல்” கடமையை ஆற்ற வண்டிகளை ஓரங்கட்டச் சொன்னால் இத்திட்டமே கோமாளித்தனமாகிவிடும்.

இவ்வரி மூலம் போக்குவரத்து நெரிசல் குறையுமோ, இல்லையோ, அரசாங்கத்தின் கஜானைவை நிரப்பிக் கொள்ளுவதற்குப் புதிய வழி கிடைத்திருக்கிறது; குறிப்பாக, போக்குவரத்தை ஒழுங்குபடுத்தும், கண்காணிக்கும் போலீசாரின் பாக்கெட்டுகள் நிரம்புவதற்கு உத்திரவாதம் ஏற்பட்டுள்ளது. எந்தவொரு பிரச்சினையையும் புதிதாகச் சட்டங்களைப் போட்டும், அதிகாரங்களைக் குவித்துக் கொண்டும் தீர்த்துவிட முடியும் என்ற ஆளும் கும்பலின் பாசிச குரூரப் புத்தி இதிலும் வெளிப்பட்டுள்ளது.

நகரமயமாக்கம் அதிகரித்ததற்கு ஏற்ப பொதுப் போக்குவரத்து வசதிகளை நவீனப்படுத்தாமல்,  அச்சேவையை அதிகரிக்காமல் திட்டமிட்டுச் சீர்குலைத்ததன் மூலமும், சாதாரண அடித்தட்டுப் பிரிவைச் சேர்ந்தவர்கள்கூட வேலைக்குப் போய்த் திரும்புவதற்குச் சொந்தமாக வாகனம் வைத்துக் கொள்ள வேண்டும் என்ற நிலைக்குத் தள்ளப்படுகிறார்கள்.  இன்னொருபுறமோ, தனியார்மயம்  தாராளமயத்தின் செல்லப் பிள்ளைகளான புதுப் பணக்கார மேட்டுக்குடி கும்பலின் நுகர்வு வெறிக்குத் தீனி போடுவதற்கு ஏற்ப, விதவிதமான வெளிநாட்டு கார்களை உள்நாட்டிலேயே உற்பத்தி  விற்பனை செய்வதற்கு ஏற்றவாறு இத்துறையில் தாராளமயம் புகுத்தப்பட்டது.  குறிப்பாக, கார்கள், இரு சக்கர வாகனங்களின் விற்பனையைத் தூக்கி நிறுத்துவதற்காகவே,  வங்கிகளில் கார், பைக் லோன் வாங்குவது மிகவும் எளிமையாக்கப்பட்டது.

அரசின் இந்தக் கொள்கை சாலைகளில் கால்வைப்பதற்குக்கூட இடமில்லாத வகையில் தனியார் வாகனப் பெருக்கத்தை ஏற்படுத்தி வருகிறது.  உதாரணமாக சென்னை நகரை எடுத்துக்கொண்டால், 2000ஆம் ஆண்டில் 8,48,118ஆக இருந்த இருசக்கர வாகனங்களின் எண்ணிக்கை, 2011இல் 25,81,534 ஆகவும்; இதேகாலகட்டத்தில் கார்களின் எண்ணிக்கை 1,99,848லிருந்து 5,67,568 ஆகவும் அதிகரித்திருக்கிறது.  இதனால் சென்னை நகரின் போக்குவரத்து நெரிசல் எட்டு மடங்கு அதிகரித்திருப்பதாகக் கூறப்படுகிறது.

டிராபிக் ஜாம் வரிசென்னையில் மட்டுமல்ல, போக்குவரத்து நெரிசல் ஏற்படும் எந்தவொரு இடத்தை அவதானித்தாலும், பொது வாகனங்களைவிட, தனியாருக்குச் சொந்தமான மோட்டார் வாகனங்கள்தான் முண்டியடித்துக்கொண்டு உருமி நிற்பதைக் காணமுடியும்.  இந்தத் தனியார் வாகனங்களின் பெருக்கத்தைக் கட்டுப்படுத்தவோ, அவைகள் நகரத்தின் நெரிசல் நிறைந்த பகுதிகளில் வந்து போவதற்கு கட்டுப்பாடு விதிக்கவோ விரும்பாத அரசு, போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்துவது என்ற பெயரில் கைரிக்ஷாக்கள், மாட்டு வண்டிகள் போன்ற சாதாரண வண்டிகள் சென்னை நகரின் முக்கிய தெருக்களில் வந்து போவதற்குத் தடை விதித்திருக்கிறது.  பின்னர், இந்தத் தடையுத்தரவு சரக்கு போக்குவரத்திற்குப் பயன்படும் லாரிகள் காலை நேரத்தில் நகரின் முக்கியத் தெருக்களின் வழியாகச் சென்று வருவதற்கு நீட்டிக்கப்பட்டது.

இத்தடையுத்தரவுகளுக்கு அப்பால், போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்த ஒருவழிப் பாதை, புறவழிச் சாலை, விரைவுச் சாலை, மேம்பாலங்கள் என நகர்ப்புற மேம்பாட்டுத் திட்டங்கள் அடுத்தடுத்து  அமல்படுத்தப்பட்டன.  இந்தத் திட்டங்கள் அனைத்தும் எதிர்பார்த்த பலனை அளிக்கவில்லை என்பதோடு, எதிர்மறையான விளைவுகளைத்தான் ஏற்படுத்தி வருகின்றன.  குறிப்பாக, சென்னை நகருக்குள் போக்குவரத்து நெரிசலைக் குறைக்க ஏற்படுத்தப்பட்ட ஒருவழிப் பாதைகள், கால விரயத்தையும் போக்குவரத்துச் செலவையும்தான் அதிகப்படுத்தியிருக்கிறதேயொழிய, சாலை நெரிசலைக் குறைக்கவில்லை.

சென்னையில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்க கட்டப்பட்ட பாலங்களுக்காக, புறவழி மற்றும் விரைவுச் சாலைகளுக்காக, தற்பொழுது உருவாக்கப்பட்டு வரும் மெட்ரோ ரயில் திட்டத்திற்காகப் பல ஆயிரக்கணக்கான ஏழைக் குடும்பங்கள் தமது வாழ்விடத்திலிருந்து துரத்தியடிக்கப்பட்டுள்ளனர்.  இந்த வலுக்கட்டாய வெளியேற்றத்தை நியாயப்படுத்துவதற்காகவே, அவர்கள் பொது இடத்தை ஆக்கிரமித்து வைத்திருப்பதாகக் குற்றஞ்சுமத்தப்பட்டனர்.

இந்த ஏழைகள் கூவம் நதிக் கரையோரத்திலும், தெருவோர நடைபாதைகளிலும் குடிசைகள் போட்டு ‘ஆக்கிரமித்திருந்ததை’ விட தனியாருக்குச் சொந்தமான கார்களும், பேருந்துளும்தான் சென்னை நகரின் முக்கிய தெருக்கள், நெடுஞ்சாலைகள் அனைத்திலும் மிகப்பெரும் ஆக்கிரமிப்பை நடத்தி வருகின்றன.  தமது வீட்டில் காரை நிறுத்தும் வசதி கிடையாது எனத் தெரிந்தும் காரை வாங்கும் மேல்தட்டு நடுத்தர வர்க்கம், தமது வீட்டு அருகிலுள்ள பொதுச் சாலைகளைத்தான் காரை நிறுத்தும் இடமாகப் பயன்படுத்தி வருகிறது.  இவர்களைப் போலவே, தனியார் பொறியியல் கல்லூரி பேருந்துகள் மற்றும் ஹுண்டாய், நோக்கியா, இன்ஃபோசிஸ் போன்ற தனியார் நிறுவன ஊழியர்களை ஏற்றிச் செல்லும் பேருந்துகள் யாவும் பொது இடங்களைத்தான் இரவு நேர “பார்கிங்கிற்கு’’ப்பயன்படுத்தி வருகின்றன.  அண்ணா சாலையிலிருந்து பீட்டர்ஸ் சாலை வழியாக இராயப்பேட்டை செல்லும் வழியில் கட்டப்பட்ட மேம்பாலம், அங்குள்ள சரவண பவன் ஹோட்டலுக்குச் சாப்பிடவரும் வாடிக்கையாளர்கள் தங்கள் வாகனங்களைப் பாதுகாப்பாக நிறுத்தப் பயன்படுகிறதேயொழிய, அப்பாலத்தால் ஆயிரம் விளக்குச் சந்திப்பில் போக்குவரத்து நெரிசல் குறையவில்லை.

சென்னையில் மக்கள் நடமாட்டம் மிக்க 49 இடங்களில் சாலையோரக் கடைகள் போடுவதற்கு அனுமதி கிடையாது எனத் தடை போட்டு அதனைக் கண்காணிக்கும் அதிகாரிகளும், போலீசும் இப்படிபட்ட கெடுபிடிகளை சாலைகளை ஆக்கிரமித்து நிறுத்தப்படும் கார்கள், ஆம்னி பஸ்கள் மீது காட்டுவதில்லை.  மக்கள் நடமாட்டம் நிறைந்த சாலையோரத்தில் பிழைப்புக்காக கடை போடுவதை ஆக்கிரமிப்பு எனச் சாடும் மேட்டுக்குடி கும்பல், தாம் “ஷாப்பிங்” போவதற்காக, சாலைகளின் பக்கவாட்டில் தமது வாகனங்களை நிறுத்திவிட்டுச் செல்வதை ஆக்கிரமிப்பாகக் கருதுவதில்லை.  விதவிதமான சொகுசுக் கார்களில் வந்திறங்கும் அவர்கள், “இங்கே நிறுத்தக்கூடாது” என அறிவிக்கும் கம்பங்களுக்குத் தெரு நாய்கள் தரும் மதிப்புக்கு மேல் தருவதில்லை.  போலீசு தமது காரை இழுத்துச் சென்றால், அபராதம் கட்டியோ, இலஞ்சம் கொடுத்தோ காரை மீட்டுவிடலாம் என்ற பணக்கொழுப்புதான், அவர்களுக்குப் போக்குவரத்திற்கு இடையூறாக காரை நிறுத்தும் அகங்காரத்தைக் கொடுக்கிறது.  இக்கும்பலைப் போலவே ரியல் எஸ்டேட் மாஃபியாக்கள் நடைபாதையிலும், தெருக்களிலும் ஜல்லி, செங்கல், மணலைக் கொட்டி வைத்துப் பொது இடத்தை அடாவடித்தனமாக ஆக்கிரமித்து, போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுத்தி வருகிறார்கள்.

டிராபிக் ஜாம் வரிசென்னையின் புறநகர்ப் பகுதிகளில் வசிக்க வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டுள்ள உழைக்கும் மக்கள் வேலைக்காக நகரத்திற்குள் வந்து செல்ல போதுமான போக்குவரத்து வசதிகள் இல்லாமல் தவித்துக் கொண்டிருக்கும்பொழுது, மேட்டுக்குடி  புதுப்பணக்காரக் கும்பல் பேய்த்தனமான வேகத்தில் தமது கார்களை ஓட்டிச் செல்வதற்காகவே புறவழிச் சாலைகள், விரைவு வழிச் சாலைகள், தங்க நாற்கரணச் சாலைகள் அமைக்கப்படுகின்றன.  இந்தச் சாலைகள் ஒருபுறம் சுங்க வரி என்ற பெயரில் தனியார் நடத்தும் கொள்ளைக்கான வாய்ப்பாகவும் இன்னொருபுறம் மரணச் சாலைகளாகவும் உள்ளன.  ஒவ்வொரு ஆண்டும் தமிழகத்தில் நடந்துவரும் சாலை விபத்துக்களின் எண்ணிக்கை 20 சதவீதம் அதிகரித்துக் கொண்டே செல்வதாகவும், சாலை விபத்துக்களில் மரணமடைபவர்களில் 38 சதவீதம் சாலைகளில் நடந்து செல்வோர் என்றும் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

குடித்துவிட்டும், பேய்த்தனமான வேகத்தில் வாகனங்களை ஓட்டிச்செல்வதும்தான் விபத்துக்களுக்கு முக்கிய காரணங்களாக அமைகின்றன.  சென்னையில் தொடங்கி பாண்டிச்சேரி வழியாகச் செல்லும் கிழக்குக் கடற்கரைச் சாலையில் மற்ற நெடுஞ்சாலைகளைவிட விபத்துக்கள் அதிகம் நடப்பதைக் கண்டுபிடித்த போலீசார், அச்சாலையில் பறந்து செல்லும் வாகனங்களின் வேகத்திற்குக் கட்டுப்பாடு விதிக்கவில்லை.  மாறாக, அச்சாலையையொட்டி அமைந்துள்ள கிராம மக்களிடம், “சாலையைக் கடக்கும்பொழுது ஜாக்கிரதையாகக் கடக்க வேண்டும்” என்ற அறிவுரையைத்தான் அள்ளி வீசியுள்ளனர்.

குடித்துவிட்டு வாகனங்களை ஓட்டி மரணத்தில் முடியும் விபத்துக்களை ஏற்படுத்தும் ஓட்டுநர்களுக்கு வெறும் இரண்டு ஆண்டுகள்தான் தண்டனை வழங்கப்படுகிறது.  இத்தண்டனையைப் பத்து ஆண்டுகளாக உயர்த்த வேண்டும்.  அப்பொழுதுதான் குடித்துவிட்டு வாகனங்களை ஓட்டக் கூடாது என்ற பயம் ஏற்படும் என உச்ச நீதிமன்றம் சமீபத்தில் எச்சரித்துள்ளது.  இந்த எச்சரிக்கையைக் கண்டு பிழைப்புக்காக ஓட்டுநர் வேலை பார்க்கும் போக்குவரத்துத் தொழிலாளர்கள் வேண்டுமானால் பயப்படலாமே தவிர, குடி, கும்மாளம், உல்லாசம் என நவநாகரீகப் பொறுக்கி கலாச்சாரத்தில் மூழ்கிப் போயுள்ள மேட்டுக்குடி கும்பல் இதைக் கண்டு மிரண்டு போகாது.

இதுவொருபுறமிருக்க, பி.எம்.டபிள்யூ. போன்ற வெளிநாட்டுக் கார்களைப் பேய்த்தனமாக ஓட்டிச் சென்று பாதசாரிகளைக் கொன்றுபோட்டுள்ள வழக்குகளில் போலீசாரே மேல்தட்டுக் குற்றவாளிகளுக்குச் சாதகமாக நடந்துகொண்டு, அவர்களைத் தப்பவைத்து வருகின்றனர்.  டெல்லியிலும், மும்பயிலும், அகமதாபாத்திலும் நடந்துள்ள பல சாலை விபத்துக்களை இதற்கு ஆதாரமாகத் தரலாம்.

தனியார்மயமும் தாராளமயமும் கொண்டுவந்துள்ள “பப்” கலாச்சாரம்தான், குடித்துவிட்டு பேய்த்தனமாக வாகனங்களை ஓட்டிச் செல்லும் குரூரமான களிவெறியாட்டத்தை இளைஞர்கள் மத்தியில் வளர்த்துவிட்டுள்ளது.  இக்கேடுகெட்ட பொறுக்கிக் கலாச்சாரத்தை ஒழிக்க முயலாமல் தண்டனையை அதிகப்படுத்தலாம் என்ற ஆலோசனை, வழக்குப் பதியும் அதிகாரம் கொண்ட போலீசாரின் மாமூல், இலஞ்ச வேட்டைக்கும், குற்றவாளிகளைத் தப்பவைக்கும் அதிகார முறைகேடுகளுக்கும் பயன்படுமேயொழிய, விபத்துக்களின் எண்ணிக்கையைக் குறைத்துவிடாது.

டிராபிக் ஜாம் வரி

போக்குவரத்து நெரிசலைக் குறைக்க வரி போடும் திட்டம் ஏற்கெனவே சிங்கப்பூர், ஹாங்ஹாங், இலண்டன், நியூயார்க் போன்ற நகரங்களில் செயல்படுத்தப்படுகிறது.  அக்கொள்ளையைத் தமிழகத்திலும் இறக்குமதி செய்ய எத்தணிக்கிறது, பாசிச ஜெயா கும்பல்.  இன்று தனியார் வாகனங்கள் மீது விதிக்கப்படும் இவ்வரி நாளை பொதுப் போக்குவரத்து வாகனங்கள் மீதும் விதிக்கப்படும் நிலை உருவாகலாம்; மேலும், டெல்லி, மும்பய் நகரங்களில் உள்ளது போன்று ஆட்டோ போன்ற பொதுப் போக்குவரத்து வாகனங்கள் நகரின் சில முக்கிய பகுதிகளுக்கு வந்துபோவதற்கும் தடை விதிக்கப்படலாம்.

காலை நேரங்களில் நிலவும் போக்குவரத்து நெரிசலைக் காட்டி, வெளியூர் பேருந்துகள் சென்னை நகருக்குள் நுழைந்து கோயம்பேடு பேருந்து நிலையத்திற்குச் செல்வதற்கும், அங்கிருந்து வெளியேறுவதற்கும் ஏற்கெனவே கட்டுப்பாடுகள் விதித்து, அவற்றைப் புறவழிச் சாலையாகத் திருப்பிவிட்டுள்ள அரசு, இது போன்ற கட்டுப்பாடு எதையும் தனியார் கார்களுக்கு, குறிப்பாக ஸ்கார்பியோ, சுமோ, இனோவா போன்ற பெரிய சொகுசு கார்களுக்குக்கூட விதிக்கவில்லை என்பது இங்கு கவனிக்கத்தக்கது.

கூவம் நதிக்கரை ஓரமும், குப்பங்களிலும் குடிசை போட்டு வாழ்ந்து வந்த உழைக்கும் மக்கள் சிங்கார சென்னையை உருவாக்குவதற்காக அங்கிருந்து பிடுங்கி எறியப்பட்டுவிட்டனர்.  ரியல் எஸ்டேட் துறையின் வளர்ச்சியால் சென்னை நகர்ப்புறப் பகுதியில் நடுத்தர வர்க்கம்கூட வீட்டு வாடகை கொடுத்து வாழ முடியாத சூழலும் உருவாகிவிட்டது.  இப்படி பல்வேறு காரணங்களால் புறநகர்ப் பகுதிக்குத் துரத்தப்பட்ட நடுத்தர, அடித்தட்டு மக்கள் தமது பிழைப்புக்காக நகரின் மையத்திற்கு வந்து செல்ல வேண்டுமானால், நெரிசல் வரி கட்ட வேண்டும் என்ற அடுத்த தாக்குதலைத் தொடுக்க தயாராகி வருகிறது, ஆளுங்கும்பல்.  அதாவது, காசுள்ளவன்தான் இனி நகரத்திற்குள் அடியெடுத்து வைக்க முடியும்; நகர்ப்புறமும், அதன் தெருக்களும் இனி பணக்காரர்களுக்குச் சொந்தம் என்பதுதான் இந்த நெரிசல் வரியின் பின்னே மறைந்துள்ள திட்டமாகும்

_______________________________________________

புதிய ஜனநாயகம், ஜூன் – 2012

_______________________________________________

வினவுடன் இணையுங்கள்

தொடர்புடைய பதிவுகள்:

வீரப்பன் வேட்டை அட்டூழியம்: பிதாரிக்குப் பதவி உயர்வு!

4
சங்கர்-பிதாரி
சங்கர் பிதாரி

வீரப்பன் தேடுதல் வேட்டை என்ற பெயரில் தமிழகத்தின் மலைவாழ் மக்களைப் பிடித்துச் சென்று சித்திரவதை செய்த கர்நாடக அதிரடிப்படைத் தலைவர் சங்கர் பிதாரி, அம்மாநிலத்தின் காவல்துறை டி.ஜி.பி.யாக நியமிக்கப்பட்டதை எதிர்த்து, பிதாரியை விடப் பணியில் மூத்தவரான இன்ஃபான்ட் என்ற போலீசு அதிகாரி மத்திய நிர்வாகத் தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

பணி மூப்புக் காலத்தில் தன்னைவிட இளையவர் என்பது மட்டுமின்றி, வீரப்பன் வேட்டை என்ற பெயரில் சங்கர் பிதாரியின் தலைமையிலான அதிரடிப்படை, பழங்குடி மக்களுக்கும் பெண்களுக்கும் எதிராக இழைத்த வன்முறைகளைத் தேசிய மனித உரிமை ஆணையமும், சதாசிவம் கமிட்டியும் உறுதி செய்துள்ளன. அவ்வாறிருக்கத் தன்னைப் பின்னுக்குத் தள்ளிவிட்டு, தகுதியற்ற நபரான பிதாரியை கர்நாடக அரசு எப்படி டி.ஜி.பியாக நியமிக்க முடியும் என்பதே இன்ஃபான்ட் தொடுத்திருந்த வழக்கு. இவ்விரு ஆட்சேபங்களையும் ஏற்று, பிதாரியின் நியமனத்தை ரத்து செய்தது, நிர்வாகத் தீர்ப்பாயம்.

இதனை எதிர்த்து கர்நாடக உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார் சங்கர் பிதாரி. “பழங்குடி மக்களுக்கு எதிராக இழைக்கப்பட்டதாகக் கூறப்படும் குற்றங்களுக்கு நான் பொறுப்பேற்க முடியாது. நான் சதாம் உசேன், கடாபியைப் போல எல்லாம் வல்லவனோ எங்கும் இருப்பவனோ அல்ல; தமிழக-கர்நாடகக் கூட்டு அதிரடிப் படையின் துணைக் கமாண்டராக மட்டுமே நான் இருந்தேன்” என்று திமிர்த்தனமாக  அவர் தனது மனுவில் குறிப்பிட்டிருந்தார். பிதாரியின் நியமனத்தை எதிர்த்து மனு தாக்கல் செய்திருந்த பாதிக்கப்பட்ட பழங்குடிப் பெண்களும், தாங்கள் அனுபவித்த சித்திரவதைகளைப் பிரமாண வாக்குமூலமாகத் தாக்கல் செய்திருந்தனர்.

இவற்றைப் பரிசீலித்த நீதிபதிகள் குமார், கெம்பண்ணா ஆகியோர் அடங்கிய உயர் நீதிமன்ற அமர்வு, “அவர் சதாமோ, கடாபியோ அல்ல என்றால், நிச்சயம் அவர்களைவிட மோசமானவராகத்தான் இருக்க வேண்டும் என்றே அந்தப் பெண்களின் வாக்குமூலத்திலிருந்து தெரிகிறது” என்று கூறி , சட்டத்தின் ஆட்சி, பெண்மை, மனித உரிமைகள், ஏழைகள்பழங்குடி மக்கள் மீது அக்கறை போன்றவற்றின் மீது இந்த அரசுக்குச் சிறிதளவேனும் மரியாதை இருக்குமானால், டி.ஜி.பி., ஐ.ஜி. ஆகிய இரு பதவிகளிலிருந்தும் பிதாரியை உடனே நீக்கவேண்டும்” என்று உத்தரவிட்டது.

இந்தத் தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் முறையீடு செய்தார் பிதாரி. உயர் நீதிமன்றத்தின் ஆணைக்கு இடைக்காலத் தடை வழங்கிய உச்ச நீதிமன்றம், வழக்கை மீண்டும் ஆழமாக விசாரித்து மே 31க்குள் தீர்ப்பளிக்குமாறு உயர் நீதிமன்றத்திற்கு உத்தரவிட்டது.

“தேசிய மனித உரிமை கமிசன் சங்கர் பிதாரி மீது நேரடியாகக் குற்றம் சாட்டவில்லை. அவரது ஊழியர்கள் செய்த தவறுக்கு அவர் பொறுப்பாக முடியாது. நிவாரணத் தொகையை அதிகமாகப் பெற வேண்டும் என்பதற்காகப் பழங்குடி மக்கள் பொய்யான குற்றச்சாட்டுகளைக் கூறியிருக்கிறார்கள். பதவி உயர்வு குறித்து முடிவு செய்வதற்குத் தேசிய மனித உரிமை ஆணையத்தின் கூற்றுகளை கணக்கில் கொள்ளத் தேவையில்லை” என்று பிதாரிக்கு ஆதரவாக வாதங்களை அடுக்கியிருக்கிறது, கர்நாடக அரசு.

அதிரடிப்படையின் அட்டூழியமென்பது மறுக்கவியலாத உண்மை. நூற்றுக்கணக்கானவர்களது சாட்சியங்களைப் பரிசீலித்த நீதிபதி சதாசிவம் கமிட்டி, மனித உரிமை மீறல்கள் நடந்ததை உறுதி செய்திருக்கிறது. பழங்குடியினர் 89 பேருக்கு இடைக்கால நிவாரணமாக 2.80 கோடி ரூபாய் வழங்கப்பட வேண்டும் எனப் பரிந்துரைத்திருக்கிறது. தமிழக, கர்நாடக அரசுகள் பழங்குடியினருக்கு நிவாரணத் தொகையையும் வழங்கியுள்ளன. தேசிய மனித உரிமை ஆணையமும் அதிரடிப்படையினரின் மனித உரிமை மீறல்களை உறுதி செய்திருக்கிறது.

இருந்தபோதிலும் சங்கர் பிதாரிக்கு ஜனாதிபதி விருது இருமுறை கொடுக்கப்பட்டுள்ளது. மூத்த அதிகாரியைப் பின்தள்ளிவிட்டுப் பதவி உயர்வும் வழங்கப்பட்டுள்ளது. பிதாரியின் மீது உச்ச நீதிமன்றம் அனுதாபம் காட்டுகிறது. பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணத்தொகை! பாதிப்பை ஏற்படுத்திய காக்கி உடை கிரிமினல்களுக்குப் பதவி உயர்வு! ராஜபக்சே பரிந்துரைக்கும் நீதி வழங்குமுறையும் இதுதானே!

_______________________________________________

புதிய ஜனநாயகம், ஜூன் – 2012

_______________________________________________

வினவுடன் இணையுங்கள்

தொடர்புடைய பதிவுகள்:

இந்துஸ்தான் யூனிலீவர்: இனி இந்த முதலாளிகளை என்ன செய்யலாம்?

20

கோலெடுத்தால் குரங்காடும் என்ற பழமொழி போன்று சாலையை மறித்தால்தான் அரசு ஆடும் என்பது புதுமொழி. இது உழைக்கும் மக்களுக்கு தெரிந்த அனுபவ மொழி. புதுவை வடமங்கலத்தில் இயங்கிவரும் இந்துஸ்தான் யூனிலீவர் (டெட்ஸ்) தொழிலாளர்களின் ஊதிய உயர்வு சம்பந்தமான போராட்டத்தை அனைவரும் அறிந்திருப்பீர்கள். கடந்த ஒரு ஆண்டு காலமாக ஊதிய உயர்வு வழங்கக் கோரி போராடியும் இதுவரையிலும் வழங்காமல் தொழிலாளர்களை அலைக்கழித்து வருகிறது இந்நிறுவனம்.

ஊதிய உயர்வு பற்றிய பேச்சுவார்த்தையில் முறையாக பங்கெடுக்காமல் இழுத்தடித்து தொழிலாளர்களின் உழைப்பின் பலனை அபகரித்துக் கொண்டிருக்கும் இந்நிறுவனத்தைக் கண்டித்து தொழிலாளர்கள், புதுவையின் முதல்வர், கலெக்டர், தாசில்தார், தொழில்துறை ஆணையர், தொழில்துறை அமைச்சர் என அனைத்து ஆளும் கும்பல்களுக்கும் மனு கொடுத்தனர். மனு கொடுத்ததன் விளைவாக அரசிடமிருந்து எந்த ஒரு சிறு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. ஆனால் அதன் பின்விளைவாக நிர்வாகமானது உற்பத்தி குறைந்துள்ளதாக பொய்யான காரணம் காட்டி அனைத்து தொழிலாளர்களுக்கும் 4 மாத சம்பளம் பிடித்தம் செய்தது.

தொழிலாளர்களை பட்டினியில் தள்ளுவதன் மூலம் தொழிலாளர்களில் சிலரை பலவீனப்படுத்தவும் சங்கத்தை உடைக்கவும் முயற்சித்தது. இந்நிலையில் அனைத்து தொழிலாளர்களும் ஒன்றுபட்டு 10-5-12-ல் சட்டவிரோத சம்பள பிடித்தத்தை உடனே வழங்கக் கோரியும், 7 தொழிலாளர்களின் பணியிடை நீக்கத்தை ரத்து செய், ஊதிய உயர்வு பேச்சுவார்த்தையை நடைமுறைப்படுத்து என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி 152 தொழிலாளர்களுடன் வில்லியனூர் வட்டாட்சியர் அவர்களை முற்றுகையிட்டு மனு கொடுத்தனர்.

படத்தை பெரியதாக பார்க்க அதன் மீது அழுத்தவும்

இதிலும் எந்த பயனும் ஏற்படாததால் மே 18 அன்று கலெக்டர் அலுவலகம் முன்பு சுமார் 350 தொழிலாளர்கள் தங்களது குடும்பத்துடன் சாலை மறியலில் ஈடுபட்டு கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். இதன் காரணமாக சங்க முன்னனியாளர்களை பேச்சுவார்த்தைக்கு வருமாறு அலுவலக அதிகாரிகள் அழைப்பு விடுத்தனர். பேச்சுவார்த்தைக்கென்று சென்ற சங்க முன்னணியாளர்களை மிரட்டி பணியவைக்க முயன்றனர். இதனால் ஏற்பட்ட வாக்குவாதத்தையடுத்து வெளியேறிய தொழிலாளர்கள் போராட்டத்தை வீச்சாக எடுத்துச் சென்றனர். பின்னர் காவல்துறை அனைவரையும் கைது செய்தது.

ஓட்டுப்போட்டு மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் இந்த அரசானது மக்கள் நலனுக்கானது அல்ல என்பதை அனுபவப் பூர்வமாக உணர்ந்த தொழிலாளர்கள் அதை உழைக்கும் மக்களுக்கும் புரியவைக்கும் விதமான முழக்கங்களை எழுப்பி கைதாகினர். அன்று மாலையே சங்க முன்னனியாளர்களை சந்திப்பதாக கலெக்டர் கூறியதை அடுத்து அனைவரும் விடுதலை செய்யப்பட்டனர். தொழிலாளர்கள் கலெக்டரைச் சந்தித்து, நிர்வாகமானது தான் கூறும் விதிமுறைகளையே அப்பட்டமாக மீறும் அதன் அயோக்கியத்தனத்தை விளக்கிக் கூறினார்கள். இதனையடுத்து .வரும் 21-5-12 அன்று HUL ல் ஆய்வு செய்வதாக கலெக்டர் தெரிவித்தார்.

21-5-12 அன்று HULன் நிர்வாக மேலாளர் மற்றும் அலுவலக மேலாளரையும் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினார். அதன்பிறகு ஊதிய உயர்வு சம்பந்தமாக கலெக்டர் முன்னிலையில் பேச்சுவார்த்தை நடத்தப்படுவதற்கு இருதரப்பிற்கும் அழைப்பு விடுக்கப்பட்டது. ஆனால் HUL நிர்வாகமோ அரசின் உத்தரவை அலட்சியப்படுத்தி பேச்சுவார்த்தையில் கலந்துகொள்ளாமல் இன்றளவும் புறக்கணித்து வருகிறது. நிர்வாகத்தின் அடாவடித்தனத்திற்கு எதிராக புதுவை அரசும் ஒரு மயிரையும் பிடுங்கிப் போடவில்லை. நியாயம் கிடைக்கும் வரையில் தொழிலாளர்களும் போராட்டத்தை கைவிடப்போவதுமில்லை என தொழிலாளர்களின் போராட்டம் தொடர்ந்துகொண்டிருக்கிறது.

அம்பானிகளுக்காக நள்ளிரவில் பெட்ரோல் விலையை ஏற்றும் அரசு, தொழிலாளர்கள் தங்களின் உயிர்வாழும் கோரிக்கைகளுக்காக உச்சி வெயிலில் சாலையில் நின்று போராடினாலும் சிறிதும் அசைந்து கொடுப்பதில்லை. இனி இந்த முதலாளிகளையும் அவர்களின் ஊதுகுழலாக செயல்படும் அரசையும் என்ன செய்யலாம்?

_______________________________________________________________

தகவல்: புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி, புதுவை.

_______________________________________________________________

வினவுடன் இணையுங்கள்

தொடர்புடைய பதிவுகள்:

ரூபாய் வீழ்ச்சி: வல்லரசுக் கனவுக்குச் சங்கு!

40

ரூபாய் வீழ்ச்சி : வல்லரசுக் கனவுக்குச் சங்கு !

பாதாளத்தை நோக்கி உருண்டோடிக் கொண்டிருக்கிறது ரூபாயின் மதிப்பு. வளர்ச்சி, வல்லரசு என்ற வெற்று ஜம்பங்களையும், முறுக்கேற்றிவிடப்பட்ட முட்டாள்தனங்களையும் நிலை தடுமாற வைத்திருக்கிறது இந்த வீழ்ச்சி. டாலருக்கு எதிராக ரூபாயின் மதிப்பு கடந்த 7 மாதங்களில் மட்டுமே 25% வீழ்ச்சியடைந்து, 56க்கும் 57க்கும் இடையில் ஊசலாடிக் கொண்டிருக்கிறது. கிரீஸின் நிலைகுலைவும் ஐரோப்பிய ஒன்றியத்தின் பொருளாதார நெருக்கடியும்தான் ரூபாயின் வீழ்ச்சிக்குக் காரணமென்றும், ஐரோப்பிய நாடுகள் மட்டுமின்றி ஜப்பானும் நெருக்கடியிலிருந்து மீண்டு முன்னேறினால்தான், இந்தியாவும் மீளமுடியும் என்றும் கூறியிருக்கிறார், நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி.  இந்தியாவின் எதிர்காலம் குறித்து இதைவிட நம்பகமானதொரு விளக்கத்தை நாம் கிளி ஜோசியக்காரனிடம் கேட்டுத் தெரிந்து கொள்ளமுடியும்.

சர்வதேச நிதிமூலதனம் ஐரோப்பிய நெருக்கடியின் காரணமாக  டாலரைத் தஞ்சமடைகிறது. இதன் காரணமாக டாலருக்கான தேவை அதிகரித்து உலகளவில் அதன் மதிப்பு உயர்வதென்பது, ரூபாயின் வீழ்ச்சிக்கான காரணங்களில் ஒன்று. ஆனால், அது மட்டுமே காரணமல்ல. இருந்த போதிலும், பஞ்சத்தைப் பயன்படுத்தி மக்களைச் சூறையாடும் வணிகனைப் போல, இந்தியாவைச் சூறையாடுவதற்கான இன்னொரு வாய்ப்பாக இந்த சர்வதேச நெருக்கடியைப் பயன்படுத்திக் கொள்கின்றனர் ஏகாதிபத்திய முதலாளிகள்.

“நடப்புக் கணக்கு பற்றாக்குறையைக் குறைத்து டாலர் கையிருப்பை அதிகமாக்கு, வரி வருவாய்ப் பற்றாக்குறையைக் குறைக்க மானியங்களை வெட்டு, வளர்ச்சி விகிதத்தை அதிகரிக்க பொருளாதார சீர்திருத்தங்களை முடுக்கி விடு  இல்லையேல் இந்தியப் பொருளாதாரம் குறித்த எமது மதிப்பீட்டை (Sovereign Credit Rating) கீழிறக்க வேண்டியிருக்கும்” என்று சர்வதேச தரநிர்ணய நிறுவனமான ஸ்டாண்டர்டு அண்டு புவர் இந்திய அரசை எச்சரித்திருக்கிறது.

இந்த எச்சரிக்கையின் விளைவுதான் தற்போதைய பெட்ரோல் விலையேற்றம். பிற துறைகளிலான மானிய வெட்டுகள் இனித் தொடங்கும். தனியார்மய-தாராளமய நடவடிக்கைகளைப் பொருத்தவரை, “வங்கி, காப்பீடு மற்றும் பென்சன் நிதி தனியார்மயம் தொடர்பான நிதிச் சீர்திருத்த மசோதாக்கள், இந்த ஆண்டு இறுதிக்குள் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு விடும்” என்று அமெரிக்க நிதித்துறை செயலருக்கு வாக்களித்திருக்கிறார் பிரணாப் முகர்ஜி. சில்லறை வணிகத்தில் அந்நிய முதலீடு, டீசல்,எரிவாயு மானியங்களை முற்றாக வெட்டுவது போன்றவற்றை ஆறு மாதங்களில் முடித்து விடுவதாகக் கூறியிருக்கிறார் நிதித்துறை ஆலோசகர் கௌசிக் பாசு. அந்நிய முதலீட்டாளர்களுக்கான சலுகைகளை அதிகரிப்பது, மக்கள் எதிர்ப்பால் தாமதப்படுத்தப்படும் சுரங்கங்கள், தொழிற்சாலைகள் போன்ற திட்டங்களை அதிரடியாக முடுக்கிவிடுவது ஆகிய நடவடிக்கைகளின் மூலம் டாலர் முதலீட்டைக் கவர்ந்திழுக்கச் சொல்கிறார்கள் இந்தியத் தரகு முதலாளிகள். சர்வதேச நிதி நிறுவனங்களின் நம்பிக்கையைப் பெறுவதன் மூலம் டாலர் முதலீட்டைக் கவர்ந்து, அதன் மூலம் ரூபாயின் மதிப்பை உயர்த்திக் கொள்வதுதான் இந்த அரசின் நோக்கமேயொழிய, இந்திய மக்களின் நம்பிக்கையைப் பெறுவது அல்ல.  இப்பொருளாதாரக் கொள்கையின் அரசியல் மொழிபெயர்ப்புதான் அமெரிக்காவின் காலை நக்கி வல்லரசாவது என்ற கனவு.

பெட்ரோல், மின் கட்டணம், பேருந்துக் கட்டணம் என அனைத்தையும் உயர்த்தி சராசரி இந்தியனின் வாழ்க்கைத் தரத்தை வீழ்த்தினால்தான், ரூபாயின் மதிப்பு உயரும் என்பதுதான் ஏகாதிபத்திய மூலதனம் முன்வைக்கும் பொருளாதாரக் கொள்கை. அதன் ஆலோசனைப்படி கிரீஸ் அரசு எடுத்த நடவடிக்கைகள்தான் அந்நாட்டைப் படுகுழியில் வீழ்த்தின. இந்தியாவும் அதே படுகுழியை நோக்கித்தான் பயணத்தைத் தொடங்கியிருக்கிறது. இந்த உண்மை சராசரி ஐ.பி.எல். இந்தியர்களுக்குப் புரிகிறதோ இல்லையோ, என்.ஆர்.ஐ இந்தியர்களுக்குப் புரிந்திருக்கிறது. அவர்கள் இந்திய வங்கிகளில் போட்டிருக்கும் டாலர் முதலீடுகளுக்குக் கூடுதல் வட்டி தருவதாக  அரசு ஆசை காட்டியும் மயங்காமல், தமது முதலீடுகளை அமெரிக்காவுக்கு கொண்டு செல்கிறார்கள் இந்த இந்தியர்கள். நாட்டை நெருங்கிவரும் அபாயத்தினை அறிவிக்கின்ற எச்சரிக்கைச் சங்காக இதை எடுத்துக் கொள்ளலாம். ‘வல்லரசுக் கனவுக்கு சங்கு’ என்றும் இதனை விளங்கிக் கொள்ளலாம்.

_______________________________________________

புதிய ஜனநாயகம், ஜூன் – 2012

_______________________________________________

வினவுடன் இணையுங்கள்

தொடர்புடைய பதிவுகள்:

என்.எல்.சி.யின் ஆண்டைத்தனத்துக்கு எதிராகத் தொழிலாளர்களின் தொடர் போராட்டம்!

5

என்-எல்-சி தொழிலாளர் போராட்டம்

பணி நிரந்தரம், சம வேலைக்குச் சம ஊதியம் உள்ளிட்ட 10 அம்சக் கோரிக்கைகளை முன்வைத்துத் தொடங்கிய நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவன (என்.எல்.சி.) ஒப்பந்தத் தொழிலாளர்களின் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டம், கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக தொடர்ந்து வருகிறது. ஏ.ஐ.டி.யு.சி.யின் ஜீவா ஒப்பந்தத் தொழிலாளர்கள் சங்கம் ஒருங்கிணைத்து நடத்தும் இவ்வேலை நிறுத்தப் போராட்டத்துக்கு, தொ.மு.ச., சி.ஐ.டி.யு., பா.ம.க., யு.டி.யு.சி., எல்.எல்.எஃப்., ஐ.என்.டி.யு.சி உள்ளிட்ட பிற தொழிற்சங்கங்களும் ஆதரவு தெரிவித்துள்ளன.

விரிவாக்கப்பட்ட சுரங்கம் மற்றும் மின்உற்பத்தித் தேவைகளுக்கேற்ப, கடந்த 20 ஆண்டுகளில் படிப்படியாக 14,000 ஒப்பந்தத்தொழிலாளர்களைப் பணியமர்த்தியிருக்கிறது, என்.எல்.சி. நிறுவனம். இங்கு பணியாற்றும் 19,000 நிரந்தரத் தொழிலாளர்களுடன் சேர்த்து ஒப்பிட்டால், மொத்த தொழிலாளர்களுள் 40%க்கும் அதிகமான தொழிலாளர்கள் ஒப்பந்தத் தொழிலாளர்களாகப் பணியாற்றுகின்றனர். ஆண்டொன்றுக்கு ஆயிரத்து ஐநூறு கோடி ரூபாய்க்கு மேல் இலாபத்தை ஈட்டக்கூடிய நிறுவனமாக, நவரத்னா தகுதியைப் பெற்றுள்ள நிறுவனமாக என்.எல்.சி. உயர்ந்திருக்கிறதென்றால், அதில் குறிப்பிடத்தக்க பங்களிப்பு இவ்வொப்பந்தத் தொழிலாளர்களுடையது. ஆனால், இத்தொழிலாளர்களின் வாழ்க்கையோ இருள் கவ்வியதாகயிருக்கிறது.

குறைந்த கூலியில் தொழிலாளர்களின் உழைப்பைச் சுரண்டும் நோக்கத்திற்காகவே, சொசைட்டி தொழிலாளி, ஒப்பந்த தொழிலாளி, பி ஷெட்யூல், ஏ ஷெட்யூல், ஏ.எம்.சி. தொழிலாளி, “நான்ஏ.எம்.சி.” (Non-A.M.C.) தொழிலாளி என்று பல பிரிவுகளாக ஒப்பந்தத் தொழிலாளர்களைப் பிரித்துவைத்துள்ளது, என்.எல்.சி. நிர்வாகம். இதில் “நான்ஏம்.எம்.சி.” தொழிலாளியின் ஒரு ஷிப்டு சம்பளம் ரூ.180/ தான் என்பதிலிருந்தே, இந்தச் சுரண்டலின் கொடூரத்தைப் புரிந்து கொள்ளலாம்.

‘‘ஒரு தொழிற்சாலையின் மையமான மற்றும் தொடர்ச்சியாக நடக்கக்கூடிய உற்பத்திப் பணிகளில்  ஒப்பந்தத் தொழிலாளர்களை ஈடுபடுத்தக் கூடாது” என்று கூறுகிறது, ஒப்பந்தத் தொழிலாளர்களை முறைப்படுத்துதல் மற்றும் ஒப்பந்தமுறை ஒழிப்புச் சட்டம் (1970). ஆனால், என்.எல்.சி.யின் மையமான பணியும் தொடர்ச்சியாக நடக்கக்கூடிய உற்பத்திப் பணியுமாகிய நிலக்கரி வெட்டுதல், கண்வேயர் பெல்ட் மூலம் நிலக்கரியை மின் உற்பத்தி நிலையம் கொண்டு செல்லுதல் மற்றும் கனரக இயந்திரங்களை இயக்குவது உள்ளிட்ட பணிகளைச் சட்டவிரோதமாக ஒப்பந்தத் தொழிலாளிகளைக் கொண்டே நிறைவேற்றி வருகிறது, என்.எல்.சி. நிர்வாகம்.

என்.எல்.சி. நிறுவனம், தனது மையமான பணிகளில் பெரும்பாலானவற்றை, ஒப்பந்ததாரர்களின் மூலமாகத்தான் மேற்கொண்டு வருகிறது. தலையில் தினத்தந்தி பேப்பரை கவிழ்த்துக்கொண்டு வெட்டவெளியில் நின்று கொண்டு பணிகளை மேற்பார்வையிடும் பொதுப்பணித்துறையின் ஒப்பந்ததாரர் போன்றவர்களல்ல இவர்கள். இவர்களுக்கு நிலக்கரிச் சுரங்கமும் தெரியாது, மின் உற்பத்தி நிலையமும் தெரியாது. மாத இறுதியில், இவ்வொப்பந்தத் தொழிலாளர்கள் நிறைவேற்றிய மொத்த வேலைக்குரிய தொகையை நிர்வாகத்திடமிருந்து காசோலையாகப் பெற்று அதன் பெரும்பகுதியைச் சுருட்டிக்கொண்டு, எஞ்சியதை ‘தலை’க் கணக்கில் தொழிலாளிக்கு ரொக்கமாகப் பிரித்துக் கொடுப்பதொன்றுதான் இந்த ஒப்பந்த தாரர்கள் மேற்கொள்ளும் ஒரே பணி. இத்தகைய, மாஃபியா கூட்டத்தின் எடுபிடியாகவே செயல்படுகிறது என்.எல்.சி.  நிர்வாகம்.

என்-எல்-சி தொழிலாளர் போராட்டம்‘சட்டப்படி ஒப்பந்தத் தொழிலாளிக்கு வழங்க வேண்டிய குறைந்தபட்ச கூலியைக் கொடு! பணிப்பாதுகாப்பு, பணி நிரந்தரம் உள்ளிட்ட சட்டப்படியான உரிமைகளை வழங்கு!” என்ற கோரிக்கையை முன்வைத்துத் தொழிலாளர்கள் ஆண்டுதோறும் போராட்டங்களை முன்னெடுப்பதும், இப்போராட்டத்தை முடிவுக்குக் கொண்டுவருவதற்காக நயவஞ்சகமான முறையில், சமரச ஒப்பந்தத்தை ஏற்றுக்கொள்வதாய் கையெழுத்திடும்  என்.எல்.சி.நிர்வாகம், அதனை நடைமுறைப்படுத்துவதற்கான முயற்சியை எள் முனையளவும் மேற்கொள்ளாமல், போராடிய தொழிலாளர்களைப் பழிவாங்கும் விதமாகவே இதுவரை செயல்பட்டு வந்திருக்கிறது. ஏ.ஐ.டி.யு.சி. சங்கத்தின் பொதுச்செயலாளரையும், பொருளாளரையும் வேலைநீக்கம் செய்தது; சங்க அலுவலகத்திற்கு மின் இணைப்பு, குடிநீர் குழாய் இணைப்பைத் துண்டித்து, அலுவலகத்தைப் பூட்டி சீல் வைத்தது எனச் சல்லித்தனமாகவும் நடந்து கொண்டுள்ளது, நிர்வாகம்.

2008ஆம் ஆண்டில் 16 நாட்கள் நடைபெற்ற தொடர் வேலைநிறுத்தப் போராட்டத்தையடுத்து, என்.எல்.சி. நிர்வாகத்திற்கும் ஒப்பந்தத் தொழிலாளர் சங்கத்திற்குமிடையே ஓர் ஒப்பந்தம் கையெழுத்தானது. பணிமூப்பை அடிப்படையாகக் கொண்டு 5000 ஒப்பந்தத் தொழிலாளர்களை முதல்படியாக “இன்ட் கோ சர்வ்” பட்டியல் தொழிலாளர்களாக ஏற்றுக்கொண்டு, பின்னர் என்.எல்.சி. நிறுவன ஊழியராக முறைப்படுத்திக்கொள்ள வேண்டுமென்பது, அவ்வொப்பந்தத்தின் மையமான அம்சம்.

இவ்வொப்பந்தத்தை நடைமுறைப்படுத்த மறுத்தது என்.எல்.சி. நிர்வாகம். நிர்வாகத்திற்கெதிராகத் தொழிற்சங்கங்கள்  உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தன. 2008 ஆம் ஆண்டு ஒப்பந்தத்தை என்.எல்.சி. நிர்வாகம் அமல்படுத்த வேண்டுமென  உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது, நிர்வாகம். மேலும், “இன்ட் கோ சர்வ்” பிரிவின் கீழ் தொழிலாளர்களை நியமிப்பது தொடர்பாகத் தனது கைக்கூலி சங்கத்தைத் தூண்டிவிட்டு உச்ச நீதிமன்றத்தில் மற்றொரு வழக்கையும் போட வைத்தது.

2008ஆம் ஆண்டு போட்டுக்கொண்ட ஒப்பந்தத்தை நிறைவேற்றக் கோரி, 2010ஆம் ஆண்டில் 39 நாள் தொடர் வேலைநிறுத்தப் போராட்டத்தை ஒப்பந்தத் தொழிலாளர்கள் நடத்தினர். இதனைத் தொடர்ந்து அக்30, 2010 அன்று டெல்லியில் நடைபெற்ற முத்தரப்பு பேச்சுவார்த்தையின் முடிவில், “2 வருடத்தில், 480 நாட்கள் பணிமுடித்த அனைத்துத் தொழிலாளர்களையும் நிரந்தரப்படுத்த வேண்டும்; சம வேலைக்குச் சம ஊதியம்; ஒய்வு பெறும் வயதை 60ஆக உயர்த்துவது” உள்ளிட்ட கோரிக்கைகளை நடைமுறைப்படுத்துவதாக உறுதியளித்து ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது, என்.எல்.சி. நிர்வாகம்.

இவ்வளவுக்குப் பிறகும், 2008 மற்றும் 2010இல் போட்டுக்கொண்ட ஒப்பந்தங்களின்படி பணிமூப்பு அடிப்படையிலான தொழிலாளர்களின் பெயர்ப்பட்டியலைக்கூட வெளியிடாமல் இழுத்தடித்தது நிர்வாகம். ஒப்பந்தத்தில் ஏற்றுக்கொண்டதை வழக்காக்கிவிட்டு, நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையிலிருப்பதால் ஒப்பந்த சரத்தை அமல்படுத்த முடியாது எனத் தெனாவெட்டாக அறிவிக்கவும் செய்தது. இந்நிலையில், 2011இல் உச்ச நீதிமன்றமும், பணி நிரந்தரம் தொடர்பாக உயர் நீதிமன்றத்தின் முந்தைய தீர்ப்பை அமல்படுத்த வேண்டுமென்று இரண்டு இடைக்காலத் தீர்ப்புகளை வழங்கியது. எத்தனை தீர்ப்புகள் வந்தபோதும், அவற்றை அமல்படுத்த தயாரில்லை எனத் திமிராகச் செயல்பட்டது, நிர்வாகம்.

2008 மற்றும் 2010ஆம் ஆண்டுகளில் போடப்பட்ட ஒப்பந்தங்கள் மற்றும் அவற்றையொட்டி வழங்கப்பட்டுள்ள தீர்ப்புகளின்படி என்.எல்.சி. நிர்வாகம் ஒப்பந்தத் தொழிலாளர்களைப் பணி நிரந்தரம் செய்யும் நடவடிக்கைகளைத் தொடங்க வேண்டும் எனக் கோரித்தான் தற்பொழுது ஒப்பந்தத் தொழிலாளர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தை நடத்தி வருகின்றனர்.  இக்கோரிக்கையினை ஏற்க மறுத்து வரும் நிர்வாகம், பழைய ஒப்பந்தங்களையொட்டித் தனது கைக்கூலி சங்கம் உச்ச நீதிமன்றத்தில் தொடுத்த வழக்கை காட்டி, இவ்வேலைநிறுத்தப் போராட்டத்தைச் சட்டவிரோதமானது என அறிவிக்கக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தது.

இப்பிரச்சினை தொடர்பாகத் தாமும் உச்ச நீதிமன்றமும் ஏற்கெனவே அளித்த தீர்ப்புகளை நடைமுறைப்படுத்த மறுத்துவரும் நிர்வாகத்தைக் கண்டித்துத்தான் சென்னை உயர் நீதிமன்றம் என்.எல்.சி. யின் வழக்கில் தீர்ப்பளித்திருக்க வேண்டும்.  இந்த நியாயத்திற்கு மாறாக, உச்ச நீதிமன்றத்தில் நிர்வாகம் வேண்டுமென்றே போட்டுவைத்துள்ள வழக்குகளைக் காட்டி, தற்பொழுது நடைபெற்று வரும் போராட்டத்தைச் சட்டவிரோதமானது என அறிவித்து, ஒரு அநீதியான தீர்ப்பை அளித்திருக்கிறது, சென்னை உயர் நீதிமன்றம்.

என்-எல்-சி தொழிலாளர் போராட்டம்

கடந்த 20 ஆண்டுகளாகவே நீருபூத்த நெருப்பாய் எந்நேரமும் கனன்று கொண்டேயிருக்கும் இத்தொழிலாளர்களின் போராட்டம் தீர்க்கமான எந்தவொரு முடிவையும் எட்ட முடியாமல், ஒப்பந்தம்நீதிமன்றம்சட்ட வரம்பிற்குட்பட்ட போராட்டம் எனத் திரும்பத் திரும்பச் செக்குமாட்டுச் சுழலில் சிக்கித் தவிக்கிறது.

தான் வகுத்துக்கொண்ட சட்டத்தை தானே மதிக்காமல் செயல்படக்கூடிய அரசுத்துறை நிறுவனத்தை எதிர்த்து, அரைநிர்வாணப் போராட்டம், கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் என சட்டவரம்புகளுக்குட்பட்ட போராட்டங்களின் மூலமே இப்பிரச்சினையை முடிவுக்கு கொண்டுவந்து விடலாம் என தொழிற்சங்கங்கள் நம்புவதும், அவ்வாறே தொழிலாளர்களையும் நம்பிக்கை கொள்ள வைத்திருப்பதும், இப்போராட்டத்தின் மிகப்பெரும் பலவீனமாகும்.

என்.எல்.சி. யின் உற்பத்தியினை முடக்கச் செய்யுமளவிற்குப் போர்க்குணம் கொண்ட, சட்டவரம்புகளையும் மீறிய போராட்டங்களைக் கட்டியமைக்காமல், தொழிலாளி வர்க்க விரோத என்.எல்.சி. நிர்வாகத்தை அடிபணியச் செய்ய முடியாது என்பதைப் போராடும் தொழிலாளர்கள் உணர வேண்டிய தருணமிது.  போராட்ட முறைகளையும், உத்திகளையும் மாற்றுவோம்!  அடிப்படை உரிமைகளை வென்றெடுப்போம்!!

_______________________________________________

புதிய ஜனநாயகம், ஜூன் – 2012

________________________________________________

வினவுடன் இணையுங்கள்

தொடர்புடைய பதிவுகள்:

புதிய ஜனநாயகம் – ஜூன் 2012 மின்னிதழ் (PDF) டவுண்லோட்!

6

புதிய-ஜனநாயகம்-ரூபாய்-வீழ்ச்சி

புதிய ஜனநாயகம் ஜூன் 2012 மின்னிதழ் (PDF) பெற இங்கே அழுத்தவும்

இதழில் இடம்பெற்றுள்ள கட்டுரைகள்

  1. உழைக்கும் மக்களின் விடுதலைக்காக தனது இறுதிக்காலம்வரை அயராது உழைத்த தோழர் சீனிவாசனுக்கு வீரவணக்கம்!
  2. ரூபாய் வீழ்ச்சி: வல்லரசுக் கனவுக்குச் சங்கு!
  3. நேபாளப் புரட்சி: பின்னடைவு அளிக்கும் படிப்பினை
  4. நித்தியானந்தா விவகாரம்: அசிங்கத்தில் விஞ்சி நிற்பது மதமா? சாதியா? சொத்தா? சி.டி.யா?
  5. புரட்சிகர அரசியலைப் பரப்பிக் கொண்டே மரணமடைந்த தோழர் செல்வராசுக்கு வீரவணக்கம்!
  6. கறுப்புப் பணம்: கறுப்புக்கும் வெள்ளைக்கும் இடையில்….
  7. தமிழ்த் தேசியத்தின் பெயரால் பாசிச இனவெறி! மீண்டும் உறுதிப்படுத்துகிறது மணியரசன் கும்பல்
  8. என்.எல்.சி.யின்  ஆண்டைத்தனத்துக்கு எதிராகத் தொழிலாளர்களின் தொடர் போராட்டம்
  9. குளோபல் ஃபார்மாடெக் தொழிலாளர்கள் மீதான போலீசின் கொலைவெறித் தாக்குதலை எதிர்த்து பு.ஜ.தொ.மு.வின் ஆர்ப்பாட்டங்கள்!
  10. வீரப்பன் வேட்டை அட்டூழியம்: பிதாரிக்குப் பதவி உயர்வு!
  11. மோடியின் மதவெறிப் படுகொலைகள்: நரியைப் பரியாக்கியது சிறப்புப் புலனாய்வுக் குழு
  12. நின்னா வரி… நடந்தா வரி…. நெரிசல் வரி!

புதிய ஜனநாயகம் ஜூன் 2012 மின்னிதழ் (PDF) பெற இங்கே அழுத்தவும்

கோப்பின் அளவு 5 MB இருப்பதால் தரவிரக்கம் செய்ய நேரம் ஆகும். கிளிக் செய்து காத்திருக்கவும் அல்லது சுட்டியை ரைட் கிளிக் செய்து சேவ் லிங்க் ஏஸ் ஆப்டன் மூலம் முயற்சிக்கவும் (RIGHT CLICK LINK – SAVE TARGET AS or SAVE LINK AS)

__________________________________

வினவுடன் இணையுங்கள்

ஹூண்டாய் ஹவாசின்: ஆறு தொழிலாளிகள் பலி! அதிர்ச்சி ரிப்போர்ட்!

7
ஹூண்டாய்-நரபலி
சம்பவ இடத்திலேயே உயிரிழந்த தொழிலாளர்கள்
ஹூண்டாய்-நரபலி
சென்னை அரசு பொதுமருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சைப் பலனின்றி இறந்து போன சிரமன், திலோத் மத்வான். இதில் சிரமனின் வயது 16 மட்டுமே.

ஸ்ரீபெரும்புதூர் அரசு பொதுமருத்துவமனை வளாகத்தில் இரத்தச் சகதியில் கிடத்தப்பட்டிருந்த நான்கு உயிரற்ற உடல்கள். சென்னை அரசு பொதுமருத்துவமனையின் சவக்கிடங்கில் வெள்ளைத்துணி போர்த்தப்பட்டிருந்த இரு உடல்கள். அதே மருத்துவமனையின், தீவிர சிகிச்சைப் பிரிவில் நாசி வழியே வழிந்தோடும் இரத்தத்தை துடைத்தெடுக்கக்கூடத் துணை எவருமின்றி, சுயநினைவற்றுப்போன நிலையில் உயிருக்குப் போராடிக் கொண்டிருக்கும் இரு உடல்கள். விபத்து சிகிச்சைப் பிரிவின் படுக்கையொன்றில் கிடத்தப்பட்டிருக்கும் ஒர் உயிரிருள்ள உடல். இந்தப் பரிதாபக் காட்சிகளைப் பார்க்கவே பதறுகிறது மனம். யாரையேனும் பிடித்து கதறி அழுது தீர்க்க வேண்டுமென உந்தித்தள்ளுகிறது, அதிர்ச்சியிலும், காட்சிகளிலும் வெடித்துக் கிளம்பும் உணர்ச்சி.

கவனிப்பார் யாருமின்றி, கேள்வி கேட்பாரற்ற அனாதைப் பிணங்களாய் கிடத்தப்பட்டிருக்கும் இவர்களெல்லாம் இருங்காட்டுக்கோட்டை சிப்காட் வளாகத்தில் ஹூன்டாய் நிறுவனத்திற்கு உதிரிபாகங்கள் தயாரித்து வழங்கும் “ஹவாசின்” என்ற நிறுவனத்தில் பணியாற்றிய வடமாநிலத் தொழிலாளர்கள். பீகார், ஒரிசாவைச் சேர்ந்த இந்த சடலங்கள் அனைத்தின் வயதும் 16 தொடங்கி 26க்குள் அடக்கம்.

நள்ளிரவில் பணிமுடித்து வீடு திரும்ப பேருந்துக்காக இவர்கள் காத்திருந்ததாகவும்; அப்போது அவ்வழியே சென்ற காய்கறி ஏற்றிச்செல்லும் சரக்குந்தை வழிமறித்து 15 தொழிலாளர்கள் ஏறிச்சென்ற பொழுது, சாலையோரம் நின்றிருந்த வாகனம் ஒன்றில் மோதி விபத்திற்குள்ளாகி பலியாகிவிட்டனர் என்றும் பச்சையாய் புளுகுகிறது, போலீசும் பத்திரிக்கைகளும்.

உண்மையில், இரவுநேரப்பணிக்கு போதுமான ஆட்கள் இல்லாததால், அறையில் பணிமுடித்தக் களைப்பில் உறங்கிக்கொண்டிருந்த வடமாநிலத் தொழிலாளர்களைத் தட்டியெழுப்பி, ஆடுமாடுகளைப் போல லோடு ஆட்டோவில் அள்ளிப் போட்டுக்கொண்டு செல்லும் வழியில்தான் இந்த விபத்தும் கோரச்சாவும் நிகழ்ந்திருக்கிறது. சம்பவ இடத்திலேயே 4 பேர் உடல் நசுங்கி இறந்திருக்கின்றனர். இதுவரை கிடைத்த தகவலின் படி, சிகிச்சை பலனின்றி மருத்துவமனையில் இருவர் இறந்தது உள்ளிட்டு மொத்தம் 6 பேர் இறந்து போயிருக்கின்றனர். எதிர்பாராத விதமாய் நிகழ்ந்துவிட்ட விபத்தல்ல இது. பச்சையான படுகொலை. முதலாளித்துவ இலாபவெறிக்கு நரபலியாக்கப்பட்டிருக்கிறார்கள் இவ்விளந் தொழிலாளர்கள்.

ஹூண்டாய்-நரபலி
மூக்குவழியே இரத்தம் கசிந்து உறைந்து போனநிலையில் சம்போ. தீவிர சிகிச்சைப்பிரிவில் தொடர் கண்காணிப்பில் வைக்கப்பட்டிருக்கும் இவரது வயது 16க்குள்தான் இருக்க வேண்டும்.

ஆடுமாடுகளைப்போல, எந்நேரம் வேலைக்குப் பணிக்கப்பட்டாலும் சிறு முணுமுணுப்பையும் வெளிக்காட்டாமல் பணியாற்றும் வடமாநிலத் தொழிலாளர்கள் 40-50 பேரை ஒரே அறையில் அடைத்து வைத்து தனக்கு தேவைப்பட்ட நேரத்திலெல்லாம் அழைத்து வேலை வாங்கியிருக்கிறது, ஹவாசின் நிர்வாகம். இயந்திரங்களை கையாளுவதற்கேற்ப போதுமான கல்வித் தகுதியோ, அனுபவமோ அற்ற இத்தொழிலாளர்களை வலுக்கட்டாயமாக அத்தகைய வேலைகளிலும் ஈடுபடுத்தியிருக்கிறது, நிர்வாகம். இவ்வாறு “வெல்டிங் மற்றும் பிரஸ்ஸிங் மிஷினில் கை சிக்கி உடல் உறுப்புகள் சின்னாபின்னமாகி சிதைந்து போன தொழிலாளர்களின் எண்ணிக்கை மிக அதிகம், இது இங்கே சர்வ சாதாரணம்” என்கின்றனர் ஹவாசின் நிறுவனத்தில் பணியாற்றும் தொழிலாளர்கள்.

“வழக்கமா ஷிப்ட்டுக்கு ஆள் பத்தலைன்னா, ரூம்ல இருக்கிற ஹிந்தி காரங்களை கூட்டிட்டு வர்றதுக்கு கம்பெனியிலிருந்தே வண்டியை அனுப்புவாங்க. ஹிந்தி கார பசங்களை “டாடா ஏஸ்” வண்டியிலதான் வேலைக்கு கூட்டிட்டு வருவாங்க, கொண்டுபோய் விடுவாங்க. இது வழக்கமா நடக்குறதான். அன்னிக்கு நைட்டும் ஷிப்ட்டுக்கு ஆள் பத்தலை, அதனால ஒரு டாடா ஏஸ் வண்டியும் கம்பெனி ஆம்புலன்சையும் அனுப்பி வச்சாங்க. ஆம்புலன்ஸ்ல வந்தவங்களுக்கு ஒன்னும் ஆகலை. டாடா ஏஸ் வண்டிதான் ஆக்சிடென்ட் ஆச்சு. அதுவும் அந்த டாடா ஏஸ் டிரைவர் மூனுநாளா வீட்டுக்கு போகாம டூட்டி பார்த்திட்டு இருந்தார் சார் ” என்கிறார், பெயர் குறிப்பிட விரும்பாத ஹவாசின் நிறுவனத்தில் பணியாற்றும் தொழிலாளி.

சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த தொழிலாளர்களை சந்திக்க சென்னை அரசு மருத்துவமனைக்கு சென்றோம். தீவிர சிகிச்சைப் பிரிவில் இரு தொழிலாளர்கள் அனுமதிக்கப்பட்டிருந்தனர். விபத்தில் சிக்கி கந்தலாகிப் போன துணியோடு அப்படியே கிடத்தப்பட்டிருந்த 16 வயது மதிக்கத்தக்க இளந்தொழிலாளி சம்போ, சுயநினைவற்ற நிலையில் மூச்சை இழுத்து வாங்கிக் கொண்டிருந்தார். அவரது இதயத்துடிப்பு மிகவேகமாய் அலை பாய்ந்து கொண்டிருந்தது. நாசிவழியே இரத்தம் வழிந்தோடிக்கிடந்தது. அருகில் இருந்தவர்களிடம் விசாரித்தோம், “காலையில இருந்து பச்சைத்தண்ணி கூட உள்ள போகல தம்பி, ஒரு பய கூட எட்டிப்பார்க்கல, மூக்கு வழியா ரத்தம் வழிஞ்சிகிட்டே இருந்துச்சு. நர்சு அம்மாகிட்ட சொன்னேன், “அப்படித்தான் வரும் போ”ன்னு சொல்லிட்டாங்க. பார்க்கவே பாவமா இருக்கு தம்பி” என்றனர், அவர்கள்.

ஹூண்டாய்-நரபலி
21 வயதேயான பனிஸ்டோ, அவரை கவனித்துக்கொள்ளும் ராஜம்.

மண்டை பிளந்தும் கைமணிக்கட்டில் இரத்தக் காயங்களோடும் விபத்து சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருக்கும் ஒரிசாவை சேர்ந்த 21 வயதான பனிஸ்டோவின் நிலையோ பரிதாபம். தன்னோடு பயணித்த சக தொழிலாளர்களில் எத்தனை பேர் இறந்து போயினர், தப்பிப்பிழைத்தவர்களின் கதியென்ன என்பதைக் கூட இதுவரை அறிந்துகொள்ள முடியாத துர்பாக்கியசாலியாய், தனிமையும் வெறுமையும் மட்டுமே துணையாய்க் கொண்டு துவண்டுக் கிடக்கிறார் அவர். படுக்கையில் கிடத்தியதோடு சரி, உடனிருந்து உதவிசெய்ய எவரும் வரவில்லை. கண்ணெதிரிலே சக தொழிலாளர்களை பலிகொடுக்க நேர்ந்த பரிதவிப்பும் அதன் தாக்கத்திலிருந்து மீளாத மிரட்சியுமே அப்பியிருந்தது, அவரது கண்களில்.

சம்பவம் குறித்து விசாரிக்கச் சென்ற நம்மை சூழ்ந்து கொண்டனர், அதே மருத்துவமணையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் பிற நோயாளிகளின் உறவினர்கள். அவர்களிடம் இவர் யார், எப்படி இங்கு வந்து சேர்ந்தார் என்பதை சொன்னோம். “நாடு வுட்டு நாடு பொழைக்க வந்தவனுங்கள இப்படியா கொடுமை பண்ணுறது, அவனுங்களாம் நல்லா இருக்க மாட்டானுங்க. அவனுங்க கிடக்குறானுங்க தம்பி நீங்க சொல்லுங்க, இந்த பையனுக்கு இன்னா பண்ணனும் சொல்லு. நாம இருந்து நம்மலால முடிஞ்சத செய்வோம்” என்றார், வள்ளுவர் கோட்டத்தை சேர்ந்த வயதான பெண்மணி ராஜம்.

வடமாநிலத்தைச் சேர்ந்த இந்த இளைஞன் யாரென்றே தெரியாத போதும், அவர் பேசும் மொழி புரியாதபோதும், உடனிருந்து உதவி செய்யக்கூட எவருமில்லாத அவலநிலையை உணர்ந்து, தானாக முன்வந்து தண்ணீர், உணவு, மருந்து மாத்திரைகளை வழங்கி பனிஸ்டோவை கவனித்துவருகிறார், ராஜம்.

அடையாளம் தெரியாத நபர்களால் அனுமதிக்கப்பட்ட “அடையாளம் காணப்படாத உருப்படிகளாய்” சவக்கிடங்கிலும், மருத்துவமனையின் படுக்கைகளிலும் அநாதைகளாய் கிடத்தப்பட்டிருக்கும் பேரவலத்தை இனியும் விவரிக்க மனம் ஒப்பவில்லை.

ஹூண்டாய்-நரபலி
தீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டிருக்கும் பரோதன் மற்றும் சம்போ

உயிருக்குப் போராடிக்கொண்டிருக்கும் தொழிலாளர்களை கவனிக்க ஒரு நாதியுமில்லை. உயிரற்ற சடலத்தின் அருகே ஒட்டியிருந்து காதும் காதும் வைத்தாற் போல அவற்றை அப்புறப்படுத்துவதிலேயேதான் முனைப்பு காட்டியது, ஹவாசின் நிர்வாகம். இந்தப் பணிக்காகவே ஒதுக்கப்பட்ட இரண்டு நிர்வாகிகள், ஸ்ரீபெரும்புதூர் காவல் ஆய்வாளர் ராமமூர்த்தியின் உதவியுடன் இந்தக் காரியத்தை கச்சிதமாக செய்தும் முடித்தனர். வெற்றுத்தாளில் மிரட்டி கையெழுத்தை வாங்கிக் கொண்டு, வெள்ளைத்துணி போர்த்தப்பட்ட உயிரற்ற சடலத்தை வடமாநிலத் தொழிலாளர்களிடம் திணித்தது நிர்வாகம். சொந்த ஊருக்குக் கொண்டு செல்ல வாகன ஏற்பாட்டை செய்துகொடுத்து, வழிச்செலவுக்கு சில ஆயிரங்களை கொடுத்தும் ‘மனிதாபிமான’ அடிப்படையில் நடந்து கொள்வதைப் போல தொழிலாளர்களிடம் காட்டிக்கொண்டது, நிர்வாகம். நிர்வாகத்தின் இந்த நயவஞ்சக நாடகத்தை அம்பலப்படுத்தி தொழிலாளர்களிடையே அரசியல் பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகிறது, புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி.

“இந்த பச்சைப் படுகொலையை செய்தது “ஹவாசின்” நிர்வாகம். கைது செய்து தூக்கிலிட வேண்டிய கொலைக்குற்றவாளிகள் அவர்கள். முதலாளித்துவப் பயங்கரவாதத்திற்கெதிராக தொழிலாளர்கள் அணிதிரள வேண்டும்” என்ற  இவ்வமைப்பின் பிரச்சாரத்தை வரவேற்று ஆதரித்துள்ளனர், இருங்காட்டுக்கோட்டை சிப்காட் வளாகத்தில் பணியாற்றும் இளம் தொழிலாளர்கள். கனவிலும், இது விபத்து என்று ஒப்புக்கொள்ள அவர்கள் தயாராயில்லை.

ஹூண்டாய்-நரபலிநீங்கள் என்ன சொல்கிறீர்கள்? அய்யோ பாவம் என்ற அனுதாப வார்த்தைகளும், உண்மையாய் மனம் வருந்தி இறந்துபோன தொழிலாளிக்கு நாம் செலுத்தும் இரங்கலும் இயல்பான ஒன்றுதான். இது மட்டுமே போதுமா, என்ன?  சொந்த ஊரில் வாழ வழியற்று மொழி, உணவு, பண்பாடு தெரியாத மண்ணில் ஆட்டுமந்தைகளைப் போல அவதிப்படும் இந்த தொழிலாளிகளின் வாழ்க்கை மட்டுமல்ல, மரணமும் கூட யாரும் கவனிப்பாரின்றி முடிந்திருக்கிறது. உயிர் பிழைத்தோரும் என்ன ஏது என்று தெரியாமல் அனாதைகளாய் படுக்கையில் மயங்கிய நிலையில் இருக்கின்றனர்.

அழகான ஹூண்டாய் காரை என்ன கலரில் வாங்கலாம், எந்த வங்கியில் வட்டி குறைப்புடன் கடன் வாங்கி வாங்கலாம் என்று கனவு இல்லத் திட்டத்தோடு வாழும் வர்க்கம் தனது காருக்கு பின்னே இத்தனை இரத்தமும், சதையும் சிந்தப்பட்டிருக்கிறது என்பதை உணருமா? பன்னாட்டு நிறுவனங்களின் வருகை சொந்த மண்ணின் பொருளியல் வளத்தை மட்டுமல்ல, சொந்த மக்களின் உயிரையும் உறிஞ்சித்தான் இலாபத்தை பறித்தெடுக்கிறது என்பதை இப்போதாவது ஏற்கிறீர்களா? இல்லை எனில் அரசு மருத்துவமனைக்கு வாருங்கள், தொழிலாளிகளின் சொந்தக் கதைகளிலிருந்து சொந்தக் குரலிலிருந்து கதைகளை கேளுங்கள்! கல் நெஞ்சத்தையும் கரைக்கும் அந்தக் கண்ணீர் உங்களது பாவங்களை கழுவட்டும்!

__________________________________________________

சி.வெற்றிவேல் செழியன் உதவியுடன்,
இளங்கதிர்.

_________________________________________________________

வினவுடன் இணையுங்கள்

தொடர்புடைய பதிவுகள்

_______________________________________________________________________________

_______________________________________________________________________________

_______________________________________________________________________________

_______________________________________________________________________________

_______________________________________________________________________________

கோட்டு சூட்டு கனவான்களின் எளிய வாழ்க்கை – பி.சாய்நாத்

18
கோட்டு-சூட்டு-கனவான்களின்-எளிய-வாழ்க்கை
"திட்டக் கமிஷனைப் பொறுத்த வரை கிராமப் புறங்களில் வாழும் ஒருவர் நாளைக்கு ரூ 22.50க்கு மேல் செலவழித்தால் அவர் ஏழை என்று கருதப்படமாட்டார். ஆனால், அதன் துணைத் தலைவர் சென்ற ஆண்டு மே மாதத்துக்கும் அக்டோபர் மாதத்துக்கும் இடையே மேற்கொண்ட வெளிநாட்டு பயணங்களில் அவரது ஒரு நாளைக்கான சராசரி செலவு ரூ 2.02 லட்சம்." - படம் www.thehindu.com

எளிய வாழ்க்கையின் அவசியம் பற்றிய பிராணாப் முகர்ஜியின் வேண்டுகோளில் இருந்த உருக்கம் நாட்டில் கண்ணீரை பெருக்கியது. பிரதமர் மன்மோகன் சிங் கடந்த காலத்தில் எளிமைக்காக மன்றாடிய போது அவரது சகாக்கள் அதை படைப்பாக்க உணர்வுடன் தழுவி கொண்டார்கள். நிதி அமைச்சகம் கூட 2009 ஆம் ஆண்டிலேயே டாக்டர் சிங்கின் வேண்டுகோளை செயல்படுத்த ஆரம்பித்து விட (எகானமி வகுப்பு விமான பயணம், செலவுக் குறைப்பு) அந்த புனிதத் தேடலின் நான்காவது ஆண்டை நாம் அடைந்திருக்கிறோம்.

எளிய வாழ்க்கையில் பல வகைகள் இருக்கின்றன என்பதில் யாருக்கும் சந்தேகம் வேண்டாம். என்னைக் கேட்டால் திட்டக் கமிஷன் துணைத் தலைவர் மான்டேக் சிங் அலுவாலியா பாணி எளிமையைத்தான் தேர்ந்தெடுப்பேன். எளிய வாழ்க்கையின் மீது டாக்டர் அலுவாலியாவுக்கு இருக்கும் பற்றை யாரும் கேள்வி கேட்டு விட முடியாது. ‘நடைமுறைக்கு ஏற்ற மட்டத்தில் வறுமைக் கோட்டை நிர்ணயிக்க வேண்டும்’ என்ற மக்களின் கோரிக்கையை அவர் எதிர் கொண்ட விதத்தை பாருங்கள். மக்களுக்கு சும்மா செல்லம் கொடுத்து கெடுப்பது என்பது அவரிடம் இல்லை. ‘நகர்ப்புறத்தில் ஒரு நாளைக்கு 29 ரூபாய் அல்லது கிராமப் புறத்தில் 23 ரூபாய் உங்களால் செலவழிக்க முடிந்தால், நீங்கள் ஏழை இல்லைதான்’. இத்தகைய கறாரை கோடிக்கணக்கான தனது சக குடிமக்கள் மீது சுமத்துவதை அங்கீகரிக்கும்படி உச்சநீதிமன்றத்திடமும் அவர் கோரினார். திட்ட கமிஷன் தாக்கல் செய்த ஆவணத்தில் நகர்ப்புறத்தில் ரூ 32, கிராமப் புறத்தில் ரூ 26 ஒரு நாளுக்கான நாள் செலவு என்று பரிந்துரைக்கப்பட்டிருந்தது. அப்போதிருந்தே பத்ம விபூஷண் பெற்ற அவரும், அவரது சகாக்களில் சிலரும் அதை இன்னும் குறைப்பதற்கு தமது தலையையும் அடகு வைக்க தயாராக இருந்தனர்.

தகவல் பெறும் உரிமை வினவல்கள்

டாக்டர் அலுவாலியா எளிய வாழ்க்கையைத்தான் கடைப்பிடிக்கிறார் என்பது இரண்டு தகவல் பெறும் உரிமை வினவல்கள் மூலம் தெளிவாக தெரிய வருகிறது. தகவல் பெறும் உரிமையை பயன்படுத்தும் சிறந்த ஊடக செயல்பாடாக அவை இருந்தும் அவற்றுக்கு உரிய கவனம் கிடைக்கவில்லை. அந்த இரண்டும் அலுவாலியாவின் எளிய வாழ்க்கையை பகுத்து ஆராய்கின்றன. அவற்றில் ஒன்று ஜூன் 2004-க்கும் ஜனவரி 2011-க்கும் இடையே டாக்டர் அலுவாலியா வெளிநாடுகளுக்கு போன பயணங்களைப் பற்றி இந்தியா டுடேவில் ஷ்யாம்லால் யாதவ் எழுதிய கட்டுரை. இந்த பத்திரிகையாளர் (இப்போது இந்தியன் எக்ஸ்பிரஸ்சில் பணிபுரிகிறார்) இதற்கு முன்பும் தகவல் பெறும் உரிமையைப் பயன்படுத்தி மிகச் சிறந்த கட்டுரைகளை எழுதியிருக்கிறார்.

மற்றது, இந்த ஆண்டு பிப்ரவரியில் ஸ்டேட்ஸ்மேன் செய்தி சேவையில் நிருபர் பெயர் குறிப்பிடப்படாமல் வந்த அறிக்கை. 2011 மே மாதத்துக்கும் அக்டோபர் மாதத்துக்கும் இடையில் டாக்டர் அலுவாலியாவின் உலகளாவிய பாய்ச்சல்களை பற்றிய விபரங்களை அது வெளிக் கொணர்ந்தது. அந்த கால கட்டத்தில், அவர் “18 இரவுகள் அடங்கிய நான்கு பயணங்களை மேற்கொண்டார். இதற்கு அரசு செலவழித்த தொகை ரூ 36,40,140, அதாவது ஒரு நாளுக்கு சராசரியாக ​​ரூ 2.02 லட்சம் செலவு” என்று சொல்கிறது ஸ்டேட்ஸ்மேன் செய்தி சேவை அறிக்கை.

அந்த பயணங்கள் நிகழந்த கால கட்டத்தில், ஒரு நாளைக்கு ரூ 2.02 லட்சம் என்பது டாலர் மதிப்பில் $4,000 ஆகும். (ஹிஹி! மான்டேக் சிக்கன வாழ்க்கையை கடைப்பிடித்துக் கொண்டிருந்தார். இல்லையெனில் அவரது செலவு எப்படி இருந்திருக்கும் என்று கற்பனை செய்து பாருங்கள்) அந்த தினசரி செலவினம், கிராமப்புற இந்தியர்கள் ஒரு நாளைக்கு செலவிட வேண்டியதாக அவர் கருதும் வரையறையான 45 சென்டை விட 9,000 மடங்கு அதிகமாகும். அல்லது டாக்டர் அலுவாலியா நடைமுறையில் போதுமானது என்று கருதும் நகர்ப்புற இந்தியர்களுக்கான வரையறையான 55 சென்ட்டுகளை விட 7,000 மடங்கு அதிகம்.

இப்ப பாருங்க, அவர் 18 நாட்களில் செலவழித்த ரூ 36 லட்சத்தை (அல்லது $72,000) உலக சுற்றுலா துறைக்கு அவர் அளித்த தனிப்பட்ட ஊக்குவிப்பாக எடுத்துக் கொள்ளலாம். எல்லாவற்றையும் கூட்டிக் கழித்துப் பார்க்கும் போது, ஐநாவின் சுற்றுலா நிறுவனம் சுட்டிக் காட்டுவது போல அந்த துறை 2008-09-ன் இழப்புகளிலிருந்து 2010-ல்தான் மீண்டு கொண்டிருந்தது. அதே நேரத்தில் 2011-ம் ஆண்டு உலகளாவிய சுற்றுலா வருமானம் $1 டிரில்லியனைத் தாண்டியது என்று அந்த நிறுவனம் தெரிவித்தது. மிக அதிக வருவாய் அதிகரிப்பு அமெரிக்காவிலும் ஐரோப்பாவிலும் இருந்தது. இந்த 18 நாட்களில் பெரும்பாலானவை அந்த இடங்களில்தான் செலவழிக்கப்பட்டன. உள்நாட்டில் சிக்கன வாழ்க்கையின் சூட்டை அனுபவித்துக் கொண்டிருந்தாலும், இந்த பொருளாதார மீட்சியில் தமது பணமும் ஒரு சிறு பங்காற்றியிருப்பதை நினைத்து இந்திய மக்கள் மகிழ்ச்சி கொள்ளலாம்.

வறுமைக்கோடு-1

ஷ்யாம்லால் யாதவின் தகவல் பெறும் உரிமை மனுவிலிருந்து கிடைக்கும் புள்ளிவிபரங்கள் இன்னும் கலக்கலாக இருக்கின்றன. டாக்டர் அலுவாலியா தனது ஏழு வருட பணிக்காலத்தில் 42 முறை உத்தியோகபூர்வமாக வெளிநாடுகளுக்கு பயணம் செய்திருக்கிறார். மொத்தம் 274 நாட்களை வெளிநாடுகளில் கழித்திருக்கிறார் என்ற அவரது கண்டுபிடிப்பை முதலில் எடுத்துக் கொள்வோம். அதாவது “ஒன்பது நாட்களில் ஒரு நாள்” அவர் வெளிநாட்டில் கழித்திருக்கிறார். இந்தியாவிலிருந்து பயணம் செய்த நாட்களை இதில் சேர்க்கவில்லை. அவரது மகிழ்வுலாக்கள் இந்திய கஜானாவுக்கு ரூ 2.34 கோடி செலவு வைத்தாக இந்தியா டுடேயின் ஆய்வுகளில் தெரிய வந்தது. ஆனால், அவரது பயணங்களுக்கான செலவுகள் பற்றி மூன்று வெவ்வேறு மதிப்பீடுகளை பெற்றதாகவும், பாவம் பார்த்து உள்ளதில் குறைந்ததை எடுத்துக் கொண்டதாகவும் இந்தியா டுடே அறிக்கை குறிப்பிடுகிறது. “வெளிநாடுகளில் இருக்கும் இந்திய தூதரகங்கள் சொகுசு கார்களை வாடகைக்கு எடுத்தது போன்ற செலவுகள் சேர்க்கப்பட்டதா தெரியவில்லை” என்றும் இந்தியா டுடே அறிக்கை சொல்கிறது. “உண்மையான செலவுகள் இன்னும் அதிகமாக இருக்க வேண்டும்”.

இந்த பயணங்கள் அனைத்தையும் “பிரதமரின் அனுமதியுடனே”யே மேற்கொண்டிருந்தாலும், அவர் வகிக்கும் பதவிக்கு வெளிநாட்டு பயணம் பெரிதளவு தேவைப்படுவதில்லை என்பதால், கொஞ்சம் புதிராகவே இருக்கிறது. அந்த 42 பயணங்களில் 23 பயணங்கள் திட்டமிடலில் மீது நம்பிக்கையே இல்லாத அமெரிக்காவுக்கு (டாக்டர் அலுவாலியாவுக்கும் திட்டமிடலில் நம்பிக்கை இல்லைதான்) மேற்கொள்ளப்பட்டது என்பது இன்னும் மர்மமாக இருக்கிறது. இந்தப் பயணங்களின் நோக்கம் என்ன?

எளிய வாழ்க்கை பற்றிய விழிப்புணர்வை உலகம் முழுவதும் பரப்புவதா? அப்படியானால், அவரது பயணங்களுக்காக நாம் இன்னும் அதிகம் செலவிட வேண்டும்: ஏதென்சின் தெருக்களில் சிக்கன பொருளாதாரக் கொள்கைகளை ஒழிப்பதற்காக போராடும் அசிங்கமான கிரேக்கர்களை பாருங்கள்! பணக்காரர்களின் எளிய வாழ்க்கை இன்னும் வெளிப்படையாக தெரியும் அமெரிக்காவுக்கு அதிகம் செலவானாலும் அவர் இன்னும் பல முறை பயணிக்க வேண்டும். வால் தெரு உலக பொருளாதாரத்தை குட்டிச் சுவராக்கிய 2008-ம் ஆண்டில் கூட அந்த நாட்டின் நிறுவன தலைமை அதிகாரிகள் பில்லியன் கணக்கில் போனஸ்களை எடுத்துக் கொண்டார்கள். இந்த ஆண்டு, அமெரிக்காவின் பெரும்பணக்காரர்களின் ஊடக பத்திரிகைகள் கூட, தலைமை நிர்வாகிகள் தமது நிறுவனங்களையும், வேலை வாய்ப்புகளையும், இன்னும் பலவற்றையும் அழிப்பதையும் அதன் மூலம் தனிப்பட்ட முறையில் ஆதாயம் பெறுவதையும் குறித்து எழுத ஆரம்பித்திருக்கிறார்கள். வீட்டுக் கடன்களை அடைக்க முடியாமல் போனவர்கள் உள்ளிட்ட கோடிக்கணக்கான அமெரிக்கர்கள் இன்னொரு வகையான எளிய வாழ்க்கையை பார்த்தார்கள். பிரெஞ்சு மக்கள் காலப் போக்கில் பயப்படுவதும், எதிர்த்து வாக்களித்ததுமான வகை.

திட்டக் கமிசன் துணைத்தலைவர் மான்டெக் சிங் அலுவாலியா - படம் www.thehindu.com

டாக்டர் சிங் 2009-ல் எளிய வாழ்க்கைக்காக மன்றாடிய போது அவரது அமைச்சரவை பிரமாதமாக அந்த அழைப்புக்கு செவி சாய்த்தது. அடுத்த 27 மாதங்களில் ஒவ்வொரு அமைச்சரும் ஒரு மாதத்திற்கு சராசரியாக பத்து லட்சம் ரூபாய் மட்டும் தனது சொத்துக்களில் ஆரவாரமில்லாமல் சேர்த்துக் கொண்டார்கள். முழு நேரமும் அமைச்சர்களாக கடுமையாக உழைத்துக் கொண்டிருக்கும் போதுதான் அதை செய்தார்கள். ( “மத்திய அமைச்சரவை, இன்னும் செழிப்பாகிறது” தி இந்து, செப்டம்பர் 21, 2011). அவர்களில் தலை சிறந்தவர் பிரஃபுல் படேல். அந்தக் கால கட்டத்தில் ஒவ்வொரு 24 மணி நேரத்திலும் 5 லட்சம் ரூபாய் என்ற வீதத்தில் தனது சொத்துக்களை அதிகரித்துக் கொண்டிருந்தார். அவரது பொறுப்பில் இருந்த அமைச்சகத்தின் கீழ் இயங்கிய ஏர் இந்தியாவின் தொழிலாளர்கள் சம்பளம் பெறுவதற்கு பல வாரங்கள் காத்திருக்க வேண்டியிருந்தது அதே காலகட்டத்தில்தான். இப்போது பிரணாப் சவுக்கை சுழற்றி விட, இன்னும் கடுமையான சிக்கனம் எல்லா இடங்களையும் ஊடுருவப் போகிறது.

இந்த சிக்கன வாழ்க்கையின் இருதரப்பு உணர்வையும் கவனிக்க வேண்டும். கடந்த சில ஆண்டுகளில் பிரபுல் பட்டேலும் (ஐக்கிய ஜனநாயக முன்னணி – தேசியவாத காங்கிரஸ் கட்சி), நிதின் கட்காரியும் (தேசிய முற்போக்கு கூட்டணி-பாரதீய ஜனதா கட்சி) இதுவரையில் காணாத அளவுக்கு அதிக செலவிலான திருமணங்களை நடத்தினார்கள். எந்த ஒரு ஐபிஎல் இறுதிப் போட்டியில் கலந்து கொண்டதை விட அதிகமான விருந்தினர்கள் அவர்கள் நடத்திய திருமண விழாக்களில் கலந்து கொண்டார்கள். அத்தகைய எளிய வாழ்க்கையில் பாலின சமத்துவமும் இல்லாமல் போய் விடவில்லை, அந்த திருமண விழாக்கள் திரு படேலின் மகளுக்கும் மற்றும் திரு கட்காரியின் மகனுக்குமாக நடந்தன.

அவர்களது கார்பொரேட் சகாக்கள் எளிய வாழ்க்கையை இன்னும் தீவிரமாக செயல்படுத்தினார்கள். 27 மாடியிலான (ஆனால் 50 மாடிகளை விட உயரமான) நமக்குத் நினைவு தெரிந்து அதிக செலவில் கட்டப்பட்ட அவரது வீட்டுடன் முகேஷ் அம்பானி. கிங்பிஷர் ஊழியர்கள் சம்பளம் பெறுவதற்காக போராடிக் கொண்டிருக்கும் போது – மே 5 அன்று டுவிட்டரில் “துபாயில் பூர்ஜ் காலிபாவின் 123வது மாடியில் அட்மாஸ்பியரில் சாப்பிட்டுக் கொண்டிருக்கிறேன். என் வாழ்க்கையில் இவ்வளவு உயரத்தில் இதுவரை இருந்தது இல்லை. வியப்பளிக்கும் காட்சி” என்று ட்வீட் செய்த விஜய் மல்லையா. அது கிங்ஃபிஷர் இப்போது பறக்கும் உயரத்தை விட அதிகமாயிருக்கலாம். இரண்டு பேரும் ஐபிஎல் அணிகளை வைத்திருக்கிறார்கள். ஐபிஎல் கேளிக்கை வரி சலுகை முதலாக அரசு மானியங்களை பெற்றிருக்கிறது.  அதாவது, பம்பாய் உயர் நீதிமன்றத்துக்கு விஷயம் எடுத்துச் செல்லப்பட்டது வரை. பொதுமக்கள் பணத்தில் நடத்தப்படும் ஐபிஎல் போன்று இன்னும் பல சிக்கன நடவடிக்கைகள் இருக்கின்றன. காத்திருங்கள்.

வால் தெரு மாதிரி

இங்கு உள்ள கார்பொரேட் உலகம் வால் தெருவின் சிக்கன நடவடிக்கை மாதிரியை பின்பற்றுகின்றன.  சிட்டி குரூப் மற்றும் மெர்ரில் லிஞ்ச் உள்ளிட்ட ஒன்பது வங்கிகள் “2008-ம் ஆண்டு மக்கள் வரிப்பணத்தில் $175 பில்லியன் மானியமாக பெற்றுக் கொண்ட போது தமது ஊழியர்களுக்கு $32.6 பில்லியன் போனஸ்கள் வழங்கினார்கள்” என்று ப்ளூம்பர்க் 2009-ல் தெரிவித்தது. நியூயார்க் அரசு வழக்கறிஞர் ஆண்ட்ரூ கூமோவின் அறிக்கையை அது மேற்கோள் காட்டியது : “வங்கிகள் நன்றாக செயல்பட்ட போது, அவற்றின் ஊழியர்களுக்கு நிறைய பணம் கொடுக்கப்பட்டது. வங்கிகள் மோசமாக செயல்பட்ட போது அவற்றின் ஊழியர்களுக்கு நிறைய பணம் கொடுக்கப்பட்டது. வங்கிகள் மிகவும் மோசமாக செயல்பட்ட போது, அவை மக்களின் வரிப்பணத்தால் காப்பாற்றப்பட அதே நேரத்தில் அவர்களது ஊழியர்களுக்கு அப்போதும் நிறைய பணம் கொடுக்கப்பட்டது. லாபம் பெருமளவு குறைந்துவிட்ட போதும் போனஸ்களும் மொத்த வருமானம் பெருமளவு மாறுபடவில்லை.”

பிரணாபின் சிக்கன வேண்டுகோளைத் தொடர்ந்து நிதி நெருக்கடி “அடுத்தடுத்த இலவச திட்டங்களால்தான்” ஏற்படுகிறது என்று பெரும் பணக்காரர்கள் தொலைக்காட்சிகளில் கொதிப்பதை பார்க்க முடிந்தது. அதாவது மக்களுக்கு வேலை கொடுக்க முயற்சிப்பது, பட்டினியை குறைப்பது, குழந்தைகளை பள்ளிக்கு அனுப்புவது போன்ற முட்டாள்தனமான விஷயங்கள். பிரணாபின் அதே பட்ஜெட்டில் பணக்காரர்களுக்கும் பெரு நிறுவனங்களுக்கும் கார்பொரேட் வரி, கலால் வரி, சுங்க வரி சலுகைகள் மூலம் வழங்கப்பட்ட ரூ 5 லட்சம் கோடி அளவிலான பணக்காரர்களுக்கான ஜனரஞ்சகம் பற்றி எந்த முனகலும் இல்லை. (“பிபிஎல்லை சரி செய்ய சி.பி. எல்லை ஒழியுங்கள்” தி இந்து, மார்ச் 26, 2012). அந்த தள்ளுபடிகள் அரசின் நிதிப் பற்றாக்குறையை விட 8,000 கோடி கூடுதல் என்று நாடாளுமன்றத்தில் சீதாராம் யெச்சூரி சுட்டிக் காட்டினார். ஆனால் ஏழைகளுக்கான ‘ஜனரஞ்சக நடவடிக்கைகள்’ தான் தாக்கப்பட்டன.

அமர்த்தியா சென் ( தி இந்து, ஜனவரி 7, 2012) “தங்கத்துக்கும் வைரத்துக்கும் சுங்கவரி விலக்கு அளிப்பது போன்ற வருமானம் தொடர்பான பிரச்சனைகளைப் பற்றி ஊடகங்களில் ஏன் வாதம் நடைபெறுவதே இல்லை. நிதி அமைச்சக மதிப்பீடுகளின்படி அது உணவு பாதுகாப்பு மசோதாவுக்கு தேவைப்படும் கூடுதல் பணத்தை (Rs.27, 000 கோடி) விட அதிகமான வருமான இழப்பை ஏற்படுத்துகிறது (வருடத்திற்கு ரூ .50, 000 கோடி)” என்று சோகமாக கேட்கிறார்.

மெச்சத்தக்கவர்களின் ஒளிரும் வட்டத்துக்கு வெளியில் வாழும் இந்தியர்களுக்கு தெரிந்தது இன்னொரு வகையான எளிய வாழ்க்கை. அந்த வாழ்க்கையில் உணவுப் பொருட்கள் விலை ஏற்ற வீதம் இரண்டு இலக்கங்களில் பறக்கிறது. காய்கறி விலைகள் ஒரு ஆண்டில் 60 சதவீதம் உயர்கின்றன. குழந்தைகள் ஊட்டச் சத்து குறைவு வீதம் துணை சகாரா ஆப்பிரிக்காவை விட இரண்டு மடங்காக இருக்கிறது. குடும்பங்கள் பால் மற்றும் அத்தியாவசிய பொருட்களை பெருமளவு குறைத்துக் கொள்ள வேண்டியிருக்கிறது. பெருமளவு அதிகரித்து விட்ட மருத்துவச் செலவுகளால் திவலாகிப் போகின்றனர் பல லட்சம் பேர். விவசாயிகள் உள்ளீடுகளை வாங்க முடியாத, கடன் பெற முடியாத நிலைமை. உயிர் கொடுக்கும் பொருளான தண்ணீர் மேலும் மேலும் பிற தேவைகளுக்காக திருப்பப்படுவதால் குடிதண்ணீர் தட்டுப்பாடு நெரிக்கிறது.

மேல் தட்டினரின் எளிய வாழ்க்கையை கடைபிடிப்பது எவ்வளவு சுகமான ஒன்று.

_________________________________________________

– பி.சாய்நாத், நன்றி தி இந்து

தமிழாக்கம்: அப்துல்.

____________________________________________

வினவுடன் இணையுங்கள்

தொடர்புடைய பதிவுகள்

இந்து – முஸ்லிம் – தமிழ் கூட்டணியில் 5 வயது சிறுமி நரபலி!

51
நரபலி சிறுமி ராஜலட்சுமி
கொல்லப்பட்ட சிறுமி ராஜலட்சுமி

அலகு குத்துவதும், கங்கு மிதிப்பதும், காவடி தூக்குவதும் என்றெல்லாம் இருக்கும் மூடநம்பிக்கைகள் தன்னையே வருத்திக் கொள்ளும் வரை தொலையட்டும் என்று விடலாம். ஆனால் இந்த மூடநம்பிக்கைகள் குடி கொண்டிருக்கும் அடித்தளமெது? குறிப்பிட்ட சடங்கையோ, பரிகாரத்தையோ, வலி நேர்த்திக்கடனையோ செய்து விட்டால் சம்பந்தப்பட்ட வாழ்க்கைப் பிரச்சினைகள் தீர்ந்து விடுமென்று மக்கள் நம்புகிறார்கள். இந்த நம்பிக்கைக்கு எந்த மதத்தவரும் விதிவிலக்கல்ல. ஆனால் அந்தப் பரிகாரம் ஒரு குழந்தையை நரபலி கொடுத்துத்தான் தீரும் என்றால்? அதையும் செய்திருக்கிறார்கள் சில கொடியவர்கள். இந்தக் கொடூரத்தில் இந்து, முசுலீம் என இரு மதங்களோடு தமிழ் உணர்ச்சியும் கலந்திருக்கிறது.

மதுரை மாவட்டம், வாடிப்பட்டி அருகே உள்ள கச்சகட்டி கிராமத்தைச் சேர்ந்த தொத்தன் கூலி வேலை செய்து பிழைக்கும் ஒரு தாழ்த்தப்பட்டவர். இவரது 5 வயது மகள் ராஜலட்சுமி கடந்த 2011 ஜனவரி 1-ம் தேதியன்று காணாமல் போகிறாள். எங்கு தேடியும் கிடைக்காத நிலையில் அதே ஊரைச் சேர்ந்த வீரணன் என்பவரின் மாட்டுத் தொழுவத்தில் கொலை செய்யப்பட்ட நிலையில் அவள் கண்டெடுக்கப்படுகிறாள். சிறுமியின் கழுத்து அறுக்கப்பட்டு கொலை செய்யப்பட்டதால் இது நரபலியாக இருக்கலாமென்று போலிசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

முதலில் மலபார் என்ற கருப்பு மீது சந்தேகமேற்பட்டு கைது செய்யப்படுகிறார். அவரைத் தொடர்ந்து கருப்புவின் தந்தை மகாமுனியும்(65) கைது செய்யப்பட்டார். அவரோ உடல்நலக்குறைவு காரணமாக மதுரை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டவர் இறந்து போகிறார். நாக்கை அறுத்துக் கொண்டு அதே மருத்துவமனையில் சேர்ந்த கருப்புவும் மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்து கொள்கிறார். இது கொலையா, தற்கொலையா, தற்கொலைக்கு நெருக்கடி கொடுத்த நிர்ப்பந்தமா என்பதெல்லாம் தெரிய வருமா என்பது சந்தேகம்தான்.

சிறுமியின் கொலை கண்டிப்பாக நரபலிதான் என்பதோடு தேடப்படும் நபர்களின் மர்ம மரணம் காரணமாக இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டிக்கு மாற்றப்பட்டது. சிறுமி கொலை செய்யப்பட்ட 16 மாதங்களுக்குப் பிறகு தற்போது கொலையாளிகள் கைது செய்யப்பட்டிருக்கின்றனர். சிறுமி அணிந்திருந்த கொலுசு வாடிப்பட்டி அடகுக் கடையில் இருந்ததை வைத்து அதைக் கொடுத்த முருகேசன் என்பவரை பிடித்து கைது செய்த போது இந்த அதிர்ச்சியூட்டும் நரபலியின் முழுக்கதையும் தெரிய வந்திருக்கிறது.

முருகேசன் கொடுத்த தகவலின் படி கச்சகட்டியைச் சேர்ந்த பொன்னுசாமி மற்றும் அயூப்கான் இருவரும் கைது செய்யப்பட்டிருக்கின்றனர். இந்த நரபலியின் முதன்மைக் குற்றவாளியான அயூப்கான் திமுகவின் பொதுக்குழு உறுப்பினராக இருப்பதோடு முன்னர் மாவட்ட ஊராட்சி மன்றத் துணைத் தலைவராகவும் இருந்திருக்கிறார். தி.மு.கவில் பொதுக்குழு உறுப்பினராக இருப்பவரெல்லாம் காமா சோமா நபர்களாக இருக்கமாட்டார்கள் என்பது உடன்பிறப்புகளின் நம்பிக்கை. நாமும் நம்புவோம். அதன்படி அயூப்கானுக்கு இந்தி எதிர்ப்பு போராட்டம், திராவிட இயக்க வரலாறு எல்லாம் கொஞ்சம் தெரிந்திருக்குமென்பதால் இவரது தமிழ் உணர்வை குறைத்து மதிப்பிட முடியாது.

அடுத்து ஐந்து வேளையும் தவறாமல் அல்லாவைத் தொழும் முன்னுதாரணமான இசுலாமியனாகவும் இருந்திருக்கிறார். எனினும் அல்லா உணர்ச்சியையும், தமிழ் உணர்ச்சியையும் கட்டுப்படுத்துகின்ற ஒரு பெரிய உணர்ச்சி ஒன்று உண்டு. வருமானத்தைக் கொடுக்கும் பொருளாதர உணர்ச்சிதான் இவரது வாழ்வின் அடிப்படையான உணர்ச்சி. சுயநிதிக் கல்லூரி முதலாளிகளாக இருக்கும் ஏனைய ஒட்டுக்கட்சி பிரமுகர்களைப் போல அயூப்கானும் மதுரை எல்லீசு நகரில் ஆசிரியை பயிற்சிப் பள்ளி நடத்தி வந்த ஒரு முதலாளி. பொறியியில் கல்லூரி முதலாளிகளின் வருமானம் இலட்சங்களில் இருக்குமென்றால் ஆசிரியர் பயிற்சிப் பள்ளி முதலாளிகளின் வருமானம் ஆயிரங்களில் இருக்கும். கூடவே ஊராட்சி பதவி, கட்சிப் பதவி மூலம் வருமானங்கள் தனி.

நாளொரு மேனியும் வளர்ந்து வந்த கல்வித் தொழிலுக்கு சொந்தமாக கட்டிடம் வேண்டுமென்று தனிச்சியம் பகுதியில் கட்டிடம் கட்ட ஆரம்பித்தார் அயூப்கான். அதன் பெயர் ராயல் மகளிர் கல்வியியல் கல்லூரியாம். இருப்பினும் அயூப்கான் நினைத்த வேகத்தில் கட்டிடம் எழவில்லை. வழக்கமாக கட்டிடம் கட்டுவதற்கு முன்னும் கட்டிய பின்னும் கோழியை பலி கொடுத்து அதன் ரத்தத்தை தெளித்து கட்டிடம் இடியாமல் இருப்பதற்கு கொத்தனார் ஒரு சடங்கு செய்வார். ஆனால் அயூப்கானுக்கு கோழி போதவில்லை. ஆகவே விரைவில் கட்டிடம் முடிக்கப்பட்டு தனது கல்வி வியாபரம் கொடிகட்டிப் பறக்க வேண்டுமென்று நினைத்ததால் ஒரு குழந்தையை நரபலி கொடுக்க முடிவு செய்தார்.

கோழி என்றால் நூறு இருநூறில் முடிந்து விடும். ஆனால் கைமேல் பலன் தரும் நம்பிக்கை என்றாலும்  குழந்தைக்கு எங்கு போவது? இதனால் கச்சைக் கட்டி கிராமத்தைச் சேர்ந்த கருப்பு, பொன்னுசாமி, முருகேசன் ஆகிய மூவரையும் தொடர்பு கொண்டு தனது கொடூர ஆசையை தெரிவித்து எத்தனை இலட்சம் செலவானாலும் தருகிறேன் என்று பேசி முடிக்கிறார். நரபலிக்காக மொத்தம் ஆறு இலட்ச ரூபாய் ரேட் பேசுகிறார், அயூப்கான்.

ஆறு இலட்சமா என்று வாய்பிளந்த அந்த கும்பல் உடனே காரியத்தில் இறங்கியது. அன்றலர்ந்த மலர் போல விளையாடிக் கொண்டிருந்த குழந்தை இராஜலட்சுமியை கடத்தி கருப்பின் வீட்டில் வைத்தனர். பின்னர் அதிகாலை 2 மணியளவில் சிறுமியின்  கழுத்தை துடிக்கத் துடிக்க அறுத்து இரத்தத்தை தூக்கு வாளியில் பிடித்துக் கொண்டனர். சிறுமி இறந்து போகிறாள். பின்னர் உடலை வீரணன் என்பவரின் மாட்டுத் தொழுவத்தில் போட்டுவிடுகின்றனர். கருப்புவின் தந்தை மகாமுனி மட்டும் இரத்தம் அடங்கிய தூக்குவாளியை அயூப்கானை சந்தித்து கொடுக்கிறார். அல்லாவைத் தொழும் அயூப்கானும் கல்லூரிக் கட்டிடத்தை சுற்றி அந்த ரத்தத்தை தெளிக்கிறார். பின்னர் அந்த மூவர் கும்பல் அயூப்கானிடம் ஆறு இலட்ச ரூபாயை பெற்றுக் கொள்கிறது.

இவையெல்லாம் முதலில் கைது செய்யப்பட்ட முருகேசன் மூலம் படிப்படியாக மற்றவர்கள் பிடிபட்டு போலிசிடம் தெரிவித்த தகவல்கள். அதன் பின்னரே அயூப்கான் கைது செய்யப்படுகிறார். இப்போது மகாமுனி, கருப்பு ஆகிய இருவரின் மர்ம மரணங்கள் எப்படி நடந்திருக்குமென்பதை நாம் யூகிக்கலாம்.

நரபலி

மனித குல வரலாற்றின் ஆரம்பத்தில் புராதான இனக்குழு சமூகமாக இருந்த மனிதர்கள் பின்னர் அடிமையுடமை சமூகத்தில் நுழையும் போது நரபலியும் தோன்றுகிறது. இயற்கை சீற்றங்கள், பருவ கால மாற்றங்கள், இனக்குழுச் சண்டைகள் அனைத்தையும் புரிந்து கொள்ள வாய்ப்பில்லாத மனித சமூகம் அவற்றை நிறுத்த வேண்டி இனக்குழு கடவுளர்களுக்கு பலியிடலை செய்கிறது. ஆரம்பத்தில் விலங்குகள் பிறகு மனிதர்கள் என்று அது மாறுகிறது.

பார்ப்பனியத்தின் வரலாற்றிலும் விலங்குகளைப் பலியிடும் சடங்குகள் தீவிரமாக இருந்தது. கூடவே மனிதர்களை பலியிடுவதும் நடக்கிறது. மகாபாரதத்தில் வரும் அரவான் பலி அதற்கோர் சான்று. இந்த வழக்கம் இருபதாம் நூற்றாண்டு வரை பரவலாகவே இந்தியா முழுவதும் இருந்திருக்கிறது. அன்றைக்கு இயற்கைக்கு அஞ்சிய மனிதகுலம் செய்த நரபலி, இன்று இயற்கையை மனிதன் கட்டுப்படுத்தும் காலத்திலும் தொடர்வதற்கு காரணமென்ன?

இன்னும் பின்தங்கிய நிலவுடமைச் சமூகங்களாக இருக்கும் நாடுகளில் இந்த வழக்கம் நீடிக்கிறது. குறிப்பாக ஆப்ரிக்கா, இந்தியா இரண்டிலும் இத்தகைய செய்திகள் அவ்வப்போது வந்த வண்ணமிருக்கின்றன. வாழ்க்கைப் பிரச்சினைகளை வெளிப்படையான ஜனநாயத்தில் தீர்த்துக் கொள்ளும் சூழலில்லாத நிலையில் அந்த இடத்தை மதமும், மூடநம்பிக்கைகளும் கைப்பற்றிக் கொள்கின்றன. என்னதான் தொழில் நுட்ப புரட்சியும், நவநாகரீகமும் வந்தாலும் இந்தியாவைப் பொறுத்தவரை பார்ப்பன இந்து மதம் உருவாக்கியிருக்கும் மூடநம்பிக்கைகள் கருவறை முதல் கல்லரை வரை செல்வாக்கு செலுத்துகின்றது.

இதில் ஏழை, பணக்காரன் என்ற வித்தியாசமில்லை. பார்ப்பனியத்தின் அடிப்படை விதிகளை விடாத பல முதலாளிகள் இந்தியாவில் உண்டு. மேலும் குறுக்கு வழியில் அதிக பணம் சேர்க்க வாய்ப்புகளை வழங்கும் இந்த மறுகாலனியாக்க சூழ்நிலையில் அந்த மூடநம்பிக்கைகள் முன்னிலும் வலுவாக பின்பற்றப்படுகின்றன. எனில் இந்த அடிமை சமூகத்தை மாற்றி அமைப்பதற்கு பெரியார் செய்த பணிகளை இன்னும் எத்தனை வீச்சில் செய்ய வேண்டும் என்பதை புரிந்து கொள்ள முடியும். ஆனால் பெரியார் இயக்க வழியில் வந்த ஒரு உடன்பிறப்பே இத்தகைய கொடூர செயலை செய்திருக்கிறது என்பதிலிருந்து திராவிட இயக்கத்தின் தோல்வியையும் ஒத்துக் கொள்ள வேண்டும்.

மதுரை மாவட்ட திமுக செயலாளர் பி.மூர்த்தி வெளியிட்டிருக்கும் அறிக்கையின் படி அயூப்கான் முற்றிலும் தி.மு.கவிலிருந்து நீக்கப்படவில்லை. இது பொய்க்குற்றச்சாட்டு என்று அயூப்கான் மறுத்திருப்பதால் அவர் சட்டரீதியாக விடுதலையாகும் வரை தி.மு.க நிகழ்ச்சிகளுக்கு அழைப்பதில்லை, அவரை அன்றாட நடவடிக்கைகளிலிருந்து நீக்கி வைப்பது என்பதுதான் தி.மு.கவின் முடிவு.

ஒன்றரையாண்டுகளாக நடந்து வரும் வழக்கு, கைது செய்யப்பட்டவர்களின் வாக்குமூலம் எல்லாவற்றையும் வைத்துப் பார்க்கும் போது அயூப்கானின் பங்கையும் குற்றத்தின் முகாந்திரத்தையும் மேலோட்டமாகக்கூட உணரலாம். ஆனால் ஊரேல்லாம் சொத்தை கைப்பற்றிய தி.மு.க பிரமுகர்கள் தற்போது கைது செய்யப்பட்டு வரும் நிலையில் இத்தகைய சொத்துக்கள் கைவிட்டுப் போகக்கூடாது என்று அவர்கள் ஏதாவது சடங்கு, பரிகாரங்களை கண்டிப்பாக செய்வார்கள். அதன்படி அந்த சடங்கை கொஞ்சம் வரம்பு மீறினார் என்றாலும் அயூப்கான் செய்திருப்பதை உடன்பிறப்புகள் அதிர்ச்சியாகப் பார்க்கவில்லை.

நரபலிதான் என்று முடிவான பிறகு அயூப்கான் தனது வீட்டு இளைஞர்களையோ, பெண்களையோ, குழந்தைகளையோ நினைக்கவில்லை. சொந்த பந்தங்களை பார்க்காத அந்தக் கால நரபலி இன்று அப்படி பார்த்து சம்பந்தமில்லாத நபரை அதுவும் குழந்தையை கொல்லலாம் என்று முன்னேறியிருப்பதுதான் பரிணாம வளர்ச்சி போலும். அதிலும் ஒரு தலித் சிறுமி என்றால் கேட்பார் நாதியில்லை அல்லவா?

ஊரை விட்டு விலக்கி வைக்கப்ப்ட்ட தாழ்த்தப்பட்ட மக்களின் ரத்தம், ஊரை கொள்ளையடித்து சேர்த்த சொத்தை காப்பாற்றுவதற்கு மட்டும் வேண்டும். ஒரு பச்சைப் பிஞ்சைக் கொன்று தனது கல்லூரியை இலாபகரமாக நடத்த வேண்டுமென்றால் எவ்வளவு வெறி வேண்டும்? இத்தகைய பிரமுகர்கள்தான் அரசியலிலும், ஊராட்சி பதவிகளிலும், பள்ளி – கல்லூரிகளை நடத்தும் தொழிலும் செல்வாக்கு செலுத்துகிறார்கள் என்றால் இன்னும் என்னவெல்லாம் செய்யத் துணிவார்கள்? அந்த துணிச்சலுக்கு மத நம்பிக்கை இருக்க வேண்டுமென்பதில்லை. அதைத்தானே போபால் படுகொலையில் பார்த்தோம்.

ஆரம்பத்தில் பார்ப்பனியத்தின் ஏற்றத்தாழ்வான சமூக அமைப்பிற்கு மாற்று என்று தோன்றிய இசுலாமும், கிறித்தவமும் கூட இறுதியில் இந்து மதத்தின் செல்வாக்கில் கரைந்து விட்டிருக்கின்றன. பார்ப்பனியத்திடம் சரணடைந்த இசுலாம் என்ற கட்டுரைக்கு இணையத்தில் இருக்கும் இசுலாமிய ‘அறிவாளிகள்’ பொங்கினார்கள். இதற்கு மதத்தை குற்றம் சாட்டாதீர்கள் என்ற நழுவல் வேறு. இவர்களெல்லாம் இணையத்தில் பாதுகாப்பாக நன்னெறி மார்க்கத்தை போதித்து தமக்குத்தாமே சுய இன்பம் காணும் சுயநலவாதிகள். நேரிட்டு ஒரு ஆர்.எஸ்.எஸ் காரனை பார்த்தால் பார்த்த மாத்திரத்திலேயே சிறுநீர் கழிக்கும் கோழைகள். கிறித்தவர்களை வம்புக்கிழுத்து பைபிள் ஒரு ஆபாச நூல் என்று சவால் விடுவார்கள். ஆனால் இந்து புராணங்கள் ஒரு ஆபாசக் குப்பை என்று ஆர்.எஸ்.எஸ் காரனை நேருக்கு நேர் விவாதத்திற்கு அழைக்க வக்கற்றவர்கள். அப்படி அழைத்தால் புரட்சித் தலைவியின் நெருப்பு இவர்களை சுட்டெரிக்கும் என்பதை தெரிந்தவர்கள்.

ஒருவேளை இந்து மதத்தை அம்பலப்படுத்தி நாம் அப்படி எழுதினாலும் இது மதநம்பிக்கையை புண்படுத்துகிறது என்று ஓடிவருவார்கள். இறுதியில் இவர்கள் மதநம்பிக்கை கொண்ட அயூப்கான் அதுவும் போறாது என்று ஒரு நரபலி செய்திருக்கிறாரே இதை எப்படி நியாயப்படுத்த முடியும்? அமெரிக்காவை அண்டிப் பிழைக்கும் சவுதி ஷேக்குகள் உலக இசுலாத்தின் காவலர்கள் என்றால் பார்ப்பனியத்தின் நரபலியை பின்பற்றும் அயூப்கான்கள் போன்றோர்தான் உள்ளூர் இசுலாத்தின் பாதுகாவலர்கள். அமெரிக்காவிடமும், இந்து மதவெறியிடமும் சிக்கிக் கொண்டு துன்பப்படும் இசுலாமிய மக்கள் இந்தக் காவலர்களிடம் இருந்தும் விடுதலை பெற வேண்டும்.

தொன்மங்கள், நம்பிக்கைகள், படிமங்கள் வாயிலாக தொன்று தொட்டு வரும் இந்து ஞான மரபின் வேரை யாரும் அழிக்க முடியாது என்று பீற்றிக் கொள்ளும் ஜெயமோகன்கள் இந்த நரபலியின் தொடரும் தொன்மம் குறித்து விளக்கம் அளிப்பார்களா? எப்படி விளக்கினாலும் இந்த நரபலி இந்து ஞானமரபின் நீட்சிதான். அந்த நீட்சி இந்திய சமூகத்தை சின்னாபின்னாமாக்கியிருக்கும் யதார்த்தத்தை என்னதான் தரிசனம், அகம், உள்ளொளி என்று கீறிட்டாலும் யாரும் மறைக்க முடியாது.

இராஜலட்சுமி எனும் அந்த ஐந்து வயது தாழ்த்தப்பட்ட சிறுமி இன்று இல்லை. அவளைக் கொன்ற கொடியவர்கள் தண்டிக்கபடுவார்கள் என்பதும் நிச்சயமில்லை. ஊரறியக் கொன்ற ரன்வீர் சேனா கொலையாளிகளையே விடுவித்த நாடில்லையா? ஆனால் இந்து, இசுலாம், தி.மு.க, தமிழுணர்வு என்று சொல்லிக் கொள்பவர்களெல்லாம் தங்களது அகத்தை கொஞ்சம் கீறி சுய விமரிசனம் செய்து கொள்ளட்டும். இராஜலெட்சுமி சிந்திய இரத்தத்தை அப்படியாவது வீணாகாமல் காட்டுங்கள். பார்க்கலாம்.

________________________________________

வினவுடன் இணையுங்கள்

தொடர்புடைய பதிவுகள்: