சிறுமி கற்பழிப்பை வேடிக்கை பார்த்த திருப்பதி வெங்கட்
மொதல்ல இந்தாளை தூக்கி உள்ள போடனும்
சிறுமி கற்பழிப்பை வேடிக்கை பார்த்த திருப்பதி வெங்கட்
முதல்ல இந்தாளை தூக்கி உள்ள போடனும்

சென்னை தி.நகர் தெய்வநாயகம் பள்ளியில் நடந்த கூட்டம் ஒன்றில் கலந்துவிட்டு திரும்புகையில் வெளியே சாலையில் டிராபிக் ஜாம்! ஜாம் என்றால் வாகனங்கள் என்று நினைத்துவிடாதீர்கள்! இது மனிதர்கள் நீண்ட க்யூ வரிசையில் நிற்பதால் ஏற்பட்ட ஜாம். வாகனங்கள் செல்வதற்கு உரிய சாலையை அடைத்துவிட்டு வெள்ளையும் சொள்ளையுமாக நீண்ட வரிசையில் சீமான்களும், சீமாட்டிகளும் திவ்யமாக நிற்பதற்கு என்ன காரணம்? எட்டிப் பார்த்தால் திருப்பதி தேவஸ்தான கோவிலின் சென்னை பிரான்ஞ்ச் முன்னால்தான் இந்த கூட்டம். திருப்பதியைத்தான் கெடுத்தார்கள் என்று பார்த்தால் இப்போது சென்னையிலுமா?

ஜெயாவின் நகர உலாவுக்காக நிறுத்தப்படும் டிராபிக்கை வைத்து ஹிந்து பத்திரிகைக்கு வாசகர் கடிதம் எழுதும் மிஸ்டர் கோபக்கார அம்பிகள் இதை கண்டு கொள்ளாமல் போகும் மர்மம் என்ன? மிஸ்டர் வெங்கடாசலபதியின் பவரும், பந்தாவும் அந்த அளவுக்கு பக்தகோடிகளை கட்டிப் போட்டிருக்கிறதோ?

தமிழகத்தில் இருக்கும் பெரிய கோவில்களில் ஒரு ஐம்பது சதவீதம் தஞ்சை மாவட்டத்தில் இருக்கும். பல ஏக்கர் பரப்பளவில் மலைக்குன்று போல ஆக்கிரமித்திருக்கும் அந்த சிவன் கோவில்கள் பலவற்றை பார்த்திருக்கிறேன். கற்பாறையோ, மலையோ இல்லாத தஞ்சை மாவட்டத்தில் தொலைவிலிருந்து சிகரங்களை கொண்டு வந்து கோவில் கட்டி எத்தனை பேர் குடியை அழித்தார்களோ தெரியவில்லை. ஆனால் இப்படி மனித உழைப்பை, இரத்தத்தை உறிஞ்சி வீற்றிருக்கும் இந்தக் கோவில்களில் மக்கள் கூட்டத்தை என்றுமே பார்க்க இயலாது. வௌவால்களும், காணிக்கைக்கு வழியில்லாமல் சிவனே என்று காலத்தை ஓட்டும் டுபாக்கூர் ஐயர்களையும் தவிர ஒரு காக்கா குஞ்சைக் கூட அங்கே காண இயலாது.

இப்படி இந்தியாவில் பல கோவில்களும், கடவுளர்களும் கஞ்சி குடிப்பதற்கே காய்ஞ்சி போயிருக்கையில், வெங்கி மட்டும் ஒய்யாரமாக ஸ்காட்சு குடித்து வருகிறார். பக்தர்களில் ஏழை, பணக்காரன் என்ற பாகுபாட்டை கடவுள் ஏன் படைத்தான் என்று நாத்திகர்கள் இனியும் கேட்க முடியாது போலும். கடவுளர்களிலேயே இப்படி அப்பட்டமான கார்ப்பரேட் முதலாளிகள், ஏதுமில்லாத அனாதைகள் என்று வந்துவிட்ட போது நாம் எப்படிப் பிரச்சாரம் செய்வது?

இந்தியாவின் கருப்புப் பணம் ஐந்து இலட்சம் கோடி ரூபாய் வெளிநாடுகளில் பதுங்கியிருப்பது இருக்கட்டும். இங்கேயே அந்தக் கருப்புப் பணம் திருட்டு முதலாளி பக்தர்களால் திருப்பதிக்கு வாரி வழங்கப்படுவதை யாரும் கண்டு கொள்ளவில்லையே? திருப்பதி உண்டியலில் கருப்புப் பணம் போடுபவன் பரலோகம் போவான் என்று சும்மானாச்சும் எழதிக்கூட வைக்க வில்லையே? அல்லது திருப்பதிக்கு பணம் தருபவன் அதை கணக்கு காண்பிக்க வேண்டும் என்று சொன்னால் அடுத்த கணமே மிஸ்டர் வெங்கட் லிபர்டி தியேட்டர் வாசலில் பிச்சையெடுக்கும் நிலைக்கு தள்ளப்படுவது உறுதி.

சாலையோரம் இருக்கும் தொந்திப் பிள்ளையாரையெல்லாம் போகிற போக்கில் விஷ் பண்ணிவிட்டு கன்னத்தில் ரெண்டு போட்டுக் கொள்ளும் காரியவாத பக்தர்கள் திருப்பதியில் மட்டும் கால்கடுக்க நிற்கிறார்கள். வார இறுதி நாட்களில் சராசரிரியாக ஒரு இலட்சம் பக்தர்கள் வந்து சேவித்து விட்டு செல்கிறார்களாம். அதிலும் மிஸ்டர் வெங்கட்டை பார்ப்பதற்கு பணத்திற்கேற்ற தரிசன முறை வைத்திருக்கிறார்கள். இலவச தரிசனம் செய்யும் பக்தர்கள் 22 மணி நேரம் காத்திருக்க வேண்டுமாம். ரூ.300 கட்டணத்தில் கும்பிட விரும்புவர்கள் ஆறு மணி நேரம் காத்திருக்க வேண்டுமாம். திவ்ய தரிசனம் செய்பவர்கள் ஐந்து மணிநேரம் காத்திருக்க வேண்டுமாம்.

இப்படி வேலை வெட்டி இல்லாமல் தினமும் ஆயிரக்கணக்கான மனிதர்கள் சும்மா நின்று பொழுதை விரயமாக்கும் விசயம் உலகில் எங்காவது உண்டா? இந்த பக்தர்கள் இதே நேரத்தில் ராஜஸ்தானில் புல் வளர்க்கும் திட்டத்தில் உழைப்பைச் செலவிட்டால் தார் பாலைவனம் சோலைவனம் ஆகுமே? இதில் கைக்குழந்தை வைத்திருக்கும் தாய்மார்கள் வரிசையில் நிற்கும் போது தாய்ப்பால் கொடுக்க முடியவில்லையாம். அதற்காக இனி அந்த வரிசை கம்பார்ட்மெண்டுகளில் தாய்ப்பாலுக்கென்று தனியறை கட்டப் போகிறார்களாம். ஒரு வேளை அந்ந கியூ வரிசை நெரிசலில் யாராவது மண்டையை போட்டுவிட்டால் வைகுண்டத்துக்கு ஷார்ட் கட்டாக அங்கேயே சுடுகாட்டையும் ஏற்பாடு செய்வார்களோ? இதையெல்லாம் சுருக்கென்று தட்டிக் கேட்க பெரியாரில்லையே?

சரி, இனி தலைப்பில் உள்ள கொடூரமான சம்பவத்திற்கு வருவோம்.

மாலை முரசில் வந்த செய்தி இது. ஆந்திரா, பிரகாசம் மாவட்டம் பெஸ்டவாரிபேட்டையைச் சேர்ந்த பதினான்கு வயது சிறுமி, எட்டாம் வகுப்பு படிப்பவள், பெற்றோரோடு ஏதோ சண்டை போட்டுவிட்டு வீட்டை விட்டு வெளியேறி விட்டாள். பேருந்து நிலையம் வந்தவள் அங்கு இருந்த திருப்பதி பஸ்ஸில் ஏறி வெங்கட் வசிக்கும் ஊருக்கு வந்துவிட்டாள்.

திருப்பதியில் தகவல்மையம் அருகே என்ன செய்வதென்று விழித்துக் கொண்டிருந்த அந்த சிறுமியை, திருப்பதி தேவஸ்தான பாதுகாவலர் டில்லி பாபு என்ற ஐம்பது வயதுக்காரன் அழைத்துச் செல்கிறான். வீட்டிலிருந்து ஓடி வந்திருக்கும் அவளது நிராதாரவான நிலையை புரிந்து கொண்டு ஒரு ஓட்டலில் டிபன் வாங்கிக் கொடுக்கிறான்.  பின்பு தேவஸ்தான செக்யூரிட்டிகள் ஓய்வு எடுக்குமிடத்திற்கு அழைத்துச் சென்று பாலியல் வன்முறை செய்து அதாவது கொடூரமாக கற்பழித்து விடுகிறான்.

பின்பு அந்தச் சிறுமி அங்கிருந்து எப்படியோ தப்பித்து வெளியே வருகிறாள். அங்கு ஒரு ஏட்டு விசாரித்து என்ன நடந்திருக்கிறது என்பதை அறிகிறார். பிறகு அந்தச் சிறுமி போலிஸ் நிலையம் அழைத்து செல்லப்பட்டு, பெற்றோரும் அழைக்கப்பட்டு ஒப்படைக்கப்படுகிறாள். போலிசாரும் வழக்கு பதிவு செய்து  மிஸ்டர் வெங்கட்டின் செக்யூரிட்டி டில்லி பாபுவை கைது செய்கிறார்கள். அவனது வேலையும் சஸ்பெண்ட் செய்யப்படுகிறது.

இதனால் மிஸ்டர் வெங்கட்டின் இமேஜூக்கு பங்கம் வந்துவிடக் கூடாது என்று தேவஸ்தான அதிகாரிகள் உடனடியாக இரண்டு இலட்சம் ரூபாயை அந்த சிறுமிக்கு வழங்குகிறார்கள். மேலும் அவளது பெற்றோருக்கு திருப்பதி கோவிலில் ஒரு கடையை ஒதுக்கி வியாபாரம் செய்வதற்காக கொடுக்கவும் முடிவு செய்திருக்கிறார்கள்

திருப்பதியில் கற்பழிக்ப்பட்டால் இவ்வளவு சன்மானம் கிடைக்கும் என்று இப்போதுதான் தெரிகிறது. என்ன இருந்தாலும் பணக்காரக் கடவுள் இல்லையா?

டில்லி பாபு யார்? லார்டு லபக்தாஸ் பெயரால் அவரது சொத்துக்களையும், கும்பிட வரும் பக்தர்களையும் பாதுகாப்பதற்கு நியமிக்கப்பட்ட ஒரு செக்யூரிட்டி. வழிதவறி வந்த ஒரு பச்சப்புள்ளயை சமாதானப்படுத்தி வீட்டுக்கு அனுப்ப வேண்டிய ஒரு பாதுகாவலன் கொடூரமாக கற்பழித்திருக்கிறான் என்றால்? அந்த கற்பழிப்பை தடுத்து நிறுத்த வக்கில்லாத மிஸ்டர் வெங்கட் அந்த நேரத்தில் என்ன மயிரா பிடுங்கிக் கொண்டிருந்தார்? இதில் உலகளந்த பெருமாள், உக்காந்து முழுங்குன திருமால் என்ற பில்டப் வேறு.

ஒருவேளை மிஸ்டர் வெங்கட் தனது ஒன்னுவிட்ட மைனர் அவதாரம் புகழ் கிருஷ்ணன், கோகுலத்தில் செய்த லீலையாக நினைத்து மகிழ்ந்திருப்பாரோ? பிட்டுப் படம் பார்ப்பவனெல்லாம் எப்படியைய்யா கடவுளாக இருக்க முடியும்? ஆக்கல், காத்தல், அழித்தல் என்று மூன்று வத்தல் வெங்காயங்களில் முக்கியமான காத்தலை டூட்டியாகக் கொண்டிருக்கும் இந்த வெங்கட்டின் கோவிலிலேயே இப்படி கொடுமைகள் நடக்கிறது என்றால் இந்த பரம்பொருள்தான் உலகைக் காத்து இரட்சிப்பாரோ?

ஒன்று கடவுள் பவர் உள்ளவர் என்றால் இந்த கொடுமையை தடுத்து நிறுத்தியிருக்க வேண்டும். இல்லையேல் அவர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்து உள்ளே தள்ளப்பட வேண்டும். ஏனெனில் இங்கே குற்றமிழைத்திருப்பது மிஸ்டர் வெங்கட்டின் பாடிகார்டுகளில் ஒருவன். சீதையை தொட்டுக்கூட துன்புறுத்தாத இராவணனுக்காக இலங்கையையே எரித்த ராமன், திரௌபதி கூந்தலையும், சேலையையும் இழந்தாள் என்பதற்கு கௌரவர்களது நாட்டை பூண்டோடு அழித்த கிருஷ்ணன் இன்னபிற அவதார அம்பிகளெல்லாம் இப்போது எங்கே போனார்கள்?

அந்த 14 வயதுச் சிறுமி ஒரு ஏழை என்பதால் கண்டுகொள்ளவில்லையா? இல்லை தேவநாதன் போன்ற மன்மதன்களெல்லாம் காமபூஜை செய்யும் நாட்டில் ஒரு செக்யூரிட்டி கற்பழிப்பையெல்லாம் பெரிது படுத்தக்கூடாது என்ற சங்கோஜமா? என்ன எழவாக இருந்தாலும் மிஸ்டர் வெங்கட் பதிலளிக்க வேண்டும். இல்லையேல் குற்ற வழக்கில் உள்ளே போகவேண்டும்.

டில்லிபாபுவை சஸ்பெண்ட் செய்தும் இரண்டு இலட்சம் ரூபாயை வீசியும் வாயை அடைக்க முயன்ற தேவஸ்தான அதிகாரிகள் முதலில் திருப்பதி வெங்கட்டை கைது செய்திருக்க வேண்டும். “நானே கடவுள், நானே மனிதன், நானே டில்லி பாபு, நானே செக்யூரிட்டி, நானே கற்பழிப்பு” என்ற கீதை லாஜிக்படியும் அந்த ஆளை கைது செய்திருக்க வேண்டும். சோத்தில் உப்பைப் போட்டு சாப்பிடும் சுரணையுள்ள பக்தர்கள் இதற்கு பதில் அளிக்க வேண்டும். இல்லையேல் அவர்களது பக்தி என்பது காலணாவுக்குக்கூட அருகதை இல்லாத வெத்து வேட்டு என்பதை ஒத்துக் கொள்ள வேண்டும்.

இனிமேல் வீட்டில் சண்டையிட்டுவிட்டு பஸ்ஸேரும் பிள்ளைகள் யாரும் திருப்பதிக்கு சென்று விடாதீர்கள். ஏதாவது கோவில் இல்லாத ஊருக்குச் சென்று விடுங்கள். குறைந்தபட்சம் மானமாவது மிஞ்சும்.