செய்தி-67
“கல்விக் கட்டணத்தை ஒழி”, “அரசு பள்ளிகளுக்கு போதிய நிதி ஒதுக்கு” என்ற முழக்கங்களோடு அரசின் கல்வி கொள்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து சிலி நாட்டில் ஊர்வலம் நடத்திய லட்சக்கணக்கான மாணவர்கள் மீது போலிஸ் கண்ணீர் புகை வீச்சு நடத்தி தண்ணீர் பீரங்கிகளால் தாக்கியது.
புதன் கிழமை சிலி தலைநகரம் சான்டியாகோவில் நடந்த இந்த ஊர்வலத்தில் சுமார் 1.5 லட்சம் மாணவர்கள் கலந்து கொண்டனர். சிலி நாட்டின் மற்ற நகரங்களிலும் சிறிய அளவிலான ஆர்ப்பாட்டங்களை நடந்தன. மாணவர் போராட்டத்துக்கு கல்வியாளர்களும் தொழிலாளர் சங்கங்களும் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
சிலியின் கல்வித் துறை கொடுங்கோலன் அகஸ்டோ பினாக்கியோவின் ஆட்சியில் 1982ம் ஆண்டு தனியார் மயமாக்கப்பட்டது. பல்கலைக் கழகங்கள் லாப வேட்டை ஆடும் தனியார் வியாபார நிறுவனங்களாக மாற்றப்பட்டுள்ளன. பல்கலைக் கழக, கல்லூரிக் கட்டணங்கள் பெருமளவு உயர்ந்துள்ளன. பட்டப்படிப்பு படித்து முடிப்பதற்குள் ஒரு மாணவன் பெருமளவு கடனில் சிக்கி கொள்கிறான்.
அரசு பள்ளிகள், பல்கலைக் கழகங்களுக்கு தேவையான அடிப்படை கட்டுமானம், ஆசிரியர்கள், புத்தகங்கள் போன்ற வசதிகளுக்கு அரசாங்கம் நிதி ஒதுக்குவதில்லை. வளர்ந்து வரும் தேவைக்கு ஏற்ப புதிய கல்லூரிகள், பல்கலைக் கழகங்கள் கட்டப்படாததால் படிக்கும் மாணவர்களின் எண்ணிக்கை குறைந்து கொண்டு வருகிறது.
இந்த பிரச்சனைகளுக்கு தீர்வாக ‘கல்வியில் தனியார் மயத்தை ஒழித்து அனைவரும் கல்வி பெறும்படி அரசே கல்வி நிலையங்களை நடத்த வேண்டும். கல்விக் கட்டணங்களை ஒழிக்க வேண்டும், கல்வித் துறையில் அடிப்படை மாற்றங்களை கொண்டு வர வேண்டும்’ என்று கோரி சிலி மாணவர்கள் கடந்த ஒரு ஆண்டாக போராடி வருகின்றனர். ‘கல்வி உதவித் தொகைகளை அதிகரிப்பதாகவும், கல்விக் கடன்கள் மீதான வட்டியை குறைப்பதாகவும்’ அரசாங்கம் உறுதியளித்தாலும், மாணவர்கள் கல்வி அமைப்பில் அடிப்படை மாற்றங்களுக்காக போராட்டத்தை தொடர்கின்றனர்.
கடந்த ஜூன் மாதம் நடந்த மாணவர்கள் ஊர்வலமும் போலீஸ் நடவடிக்கை மூலம் கலைக்கப்பட்டது. ஆகஸ்ட் 19-ம் தேதி சான்டியாகோ பள்ளிகளில் ஒரு வாரமாக உள்ளிருப்பு போராட்டம் நடத்திய மாணவர்களை தாக்கி 139 மாணவர்களை கைது செய்தது போலீஸ். அதைத் தொடர்ந்து புதன் கிழமை சான்டியாகோவில் மாணவர்கள் பேரணி நடத்தினர். அரசின் ஏவல் படையான போலிஸ் மாணவர்களை தாக்கி திட்டமிட்டு வன்முறையை தூண்டியது. கண்ணீர் புகை குண்டுகளை வீசுவது, மாணவர்களை வெறிகொண்டு தாக்குவது என வழக்கமான அடக்குமுறைகளை அவிழ்த்து விட்டு விட்டு, இறுதியில் மாணவர்கள் வன்முறையை தூண்டியதாக 300 பேர் வரை கைது செய்தது.கைது செய்த மாணவர்களை “பொது அமைதிக்கும் பங்கம் விளைவித்த்வர்கள்“ என்று சொல்லுகிறது போலிஸ்.
“மக்கள் பிரச்சனைகளை அரசு காது கொடுத்து கேட்பதாயில்லை. பல்கலைக் கழகங்களில் லாப வேட்டை நடப்பதை நாடாளுமன்ற குழு ஒன்றே அம்பலப்படுத்திய பிறகும் அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவில்லை’ என்கிறார் கத்தோலிக் பல்கலைக் கழக மாணவர் கூட்டமைப்பின் தலைவர் நோம் டிடல்மேன்.
உலகமயமாக்கல் கால கட்டத்தில் பல்வேறு நாட்டு அரசுகள் உலக வங்கியின் மகுடிக்கு ஆடும் பாம்புகளாக மாறியிருக்கின்றன. கல்வித் துறையில் தனியார் மயத்தை வளர்க்க அரசு பள்ளிகளின் தரத்தை குறைப்பது, போதிய நிதி ஒதுக்காமல் இழுத்தடிப்பது, கல்விக் கட்டணத்தை உயர்த்துதல், தனியார் கல்வி முதலாளிகளுக்கு வால் பிடிப்பது போன்ற வேலைகளை செய்து வருகின்றன. இதை எதிர்த்து சிலி மாணவர்கள் நடத்தும் போர்க்குணமிக்க போராட்டம் உலகெங்கிலும் உள்ள மாணவர்களுக்கு முன்னுதாரணமாக உள்ளது.
கனடா நாட்டு மாணவர்கள் எழுச்சி, வால் வீதி ஆக்கிரமிப்பு போரட்டத்த்துக்கு அமெரிக்க மாணவர்களின் ஆதரவு, இங்கிலாந்து மாணவர்களின் எழுச்சி மிக்க பேரணி என்று உலக நாடுகள் பலவற்றிலும் மாணவர்கள் பொங்கி வீதிக்கு வந்து போராடுகிறார்கள்.
தமிழகத்தில் கல்வி தனியார் மயத்தை எதிர்த்து போராடி வரும் புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணியினரின் போராட்டங்கள் போலிஸ் ரவுடிகளால் தாக்குதலுக்கு உள்ளாகிறது. தனியார்மயத்திற்கு சாவு மணியடிக்க உலகம் முழுவதும் எழுச்சியுடன் மாணவர்களுடன் நம்மை இணைத்துக் கொள்வோம்.
கனேடிய மற்றும் சிலி மாணவர் போராட்டக் காட்சிகள்
______________________________
வினவுடன் இணையுங்கள்
- வினவின் பதிவுகளை மின்னஞ்சலில் பெற…
- பேஸ்புக்கில் வினவு
- வினவை டிவிட்டரில் தொடர்க
- கூகிள் +’ஸில் வினவை தொடர
- உங்கள் கேள்விகள் இங்கே…
தொடர்புடைய பதிவுகள்:
seeli poratampol tamilagathulum or kalvi thaneyarmaya poratam nadathuvom.
seeli manava poraligaluku puratchagara valthukal.
உலகெங்கும் ஏகாதிபத்தியத்தின் அடிவருடிகளான முதலளித்துவ அரசுகள் தங்கள் நாடுகளின் கல்வியை வியாபாரமாக ஆக்கிவருகின்றன. இலங்கையிலும் அவ்வாறுதான். ஆனாலும் பல்கலைக் கழக கல்வி இன்னும் மோசமாக தனியார் மயம் ஆகவில்லை. ஆனாலுமென்ன அதற்கான ஏற்பாடுகள் நடக்க முற்போக்களாரின் போராட்டங்களால் அது பின்னடைகிறது.
இந்தியாவில் உள்ள மாணவர்கள் அனைவரும் ஒன்று திரண்டு போராடினால் அன்றி அவர்களுக்கு கல்வி வியாபார மயமாவதில் இருந்து விடுதலை இனி இல்லை.