சென்னையின் செம்பரம்பாக்கம் ஏரிக்கரையோரம் அந்தக் குடிசைகள் கண்ணில் பட்டன. நாலு குச்சியை நட்டு கந்தலான துணிகளால் மூடப்பட்டிருந்தது அக்குடிசை. குடிசையோரம் நூறு நூற்றைம்பது வாத்துகள் பட்டியில் அடைத்து வைக்கப்பட்டிருந்தன. அங்கே ஏழெட்டு பேர் சுற்றி நின்று கொண்டிருந்தனர். அருகில் சென்று பார்த்தோம். ஞாயிற்றுக்கிழமையென்பதால், அருகாமை பகுதி மக்கள் பலர் வாத்துக்கறி வாங்குவதற்காக வந்திருந்தார்கள்.

புரதச்சத்து மிகுந்த கறி வகைகள் – ஆட்டுக்கறி  ரூ 600, மாட்டுக்கறி ரூ 300, கோழிக்கறி ரூ 150 என சென்னையில விற்கப்படுகின்றன. இந்நிலையில் ஒரு வாத்துக்கறியை உறித்துக் கொடுத்தால் அதன் விலை ரூ. 200. கோழிக்கறியை விட சற்று கடினமாக இருப்பதால் ஆட்டுக்கறி வாங்க முடியாதோரும், ஊரில் வாத்துக்கறி சாப்பிட்டு பழகியோரும் இங்கு வாங்க வருகிறார்கள். எனினும் இதை சாப்பிட்டு பழகாதோர் இதன் கவிச்சி மணம் அதிகம் என்று தயங்கக் கூடும். உண்மையில் அது வாத்துக் கறியின் மணம். பழகிவிட்டால் உங்களுக்கு கண்டிப்பாக பிடிக்கும்.

பிராய்லர் கோழிகளை தவிர்க்க நினைப்போருக்கு இந்த வாத்துக்கறி ஒரு வரம். அதே போல வாத்து முட்டைகளையும் கறி விரும்பும் நண்பர்கள் அவசியம் வாங்கி உண்ணலாம். கோழி முட்டையை விட அளவில் பெரியதாக இருக்கும் இம்முட்டைகளை அவித்தும், வறுத்தம், ஆம்லேட் போட்டும் சாப்பிடலாம்.

”அண்ணே, வாங்க எத்தனை வாத்து வேணும்? உரிக்காம எடுத்திங்கன்னா 180 ரூபா, உரிச்சிகொடுத்தா 200 ரூபா” மூச்சிறைக்க நம்மை கூவியழைத்தார் அவர்.

”நமக்கு ரெண்டு உருப்படி கொடுப்பா…” நம்மை முந்திக்கொண்டு தமக்கான ஆர்டரை கொடுத்தார், ஒரு வாடிக்கையாளர். வாத்தின் கழுத்தைத் வினாடியில் திருகி தூக்கி போடுகிறார் ஒருவர். அதை லாவகமாக கேட்ச் செய்த படியே, வாத்தின் வெள்ளைநிற இறகுகளை மட்டும் பூப்போல பிடுங்கி கோணியில் போடுகிறார், மற்றொருவர்.

அண்ணே.. எதுக்காக இந்த வெள்ளை இறகு?
ஷட்டில் கார்க் (இறகு பந்து – பேட்மிட்டன் விளையாட்டில் பயன்படும் பந்து) தயாரிக்க, கல்கத்தா போகுது.

ஒரு இறகுக்கு எவ்வளோ கொடுப்பாங்க?
கிலோவுக்கு ரூ.1500லிருந்து 2000 ஆயிரம் ரூபாய் தருவாங்க.

ஒரு நாளைக்கு எத்தனை கிலோ இறகு எடுப்பீங்க?
அட நீங்க ஒன்னு., கால் கிலோவிலிருந்து அரை கிலோ வரைக்கும் சேக்கறதுக்கே, நந்தம்பாக்கம், சோமங்களம்னு கால்கடுக்க ஊர் பூரா சுத்தணும், என்று சலித்துக்கொண்டார், அந்த வடமாநிலத் தொழிலாளி.

வாத்துப்பண்ணை வைத்திருப்பவர்களைத் தேடிச்சென்று கைக்காசை போட்டு இறகுகளை வாங்கி பின்னர் தரம் பிரித்து பெருவியாபாரிகளிடம் விற்பது இவரது தொழில். இவரையும் இவரது பேச்சையும் வைத்து வடமாநிலத் தொழிலாளி என்றே கணிக்க முடியாத அளவுக்கு, இந்தத் தொழிலோடும் மக்களோடும் ஒன்று கலந்திருக்கிறார் இவர்.

வெள்ளை இறகுகள் பிடுங்கப்பட்ட வாத்துக்கள், அடுத்து கொதிக்கும் நீரில் மூழ்கி எடுக்கப்படுகிறது.

எஞ்சியிருக்கும் இறகுகளை நீக்கியபின்னர், மஞ்சள் தடவி வாட்டியெடுக்கிறார்கள். பின், வாடிக்கையாளர்களின் தேவைக்கேற்ப அவர்களே சிறு சிறு துண்டுகளாக்கியும் கொடுத்து விடுகிறார்கள்.

மொத்தக் குடும்பமுமே, ஆளுக்கொரு வேலை செய்து கொண்டிருந்தது. குடும்பத் தலைவர் குமாரிடம் பேச்சு கொடுத்தோம்.,

”இதே செம்பரம்பாக்கம்தான் சொந்த ஊரு. ஊருக்குள்ள வீடு இருக்கு. வாத்துங்களுக்காக இங்க குடிசை போட்ருக்கோம். இதுங்களுக்கு காவலா இங்கேயே தங்கியாகனும். ஒரு முப்பது வருசத்துக்கு முன்னாடி 500 வாத்துகளுக்கு மேல நாங்களே வச்சிருந்தோம். அப்போல்லாம், தண்ணி எப்போதும் கெடைக்கும். அறுவடை முடிஞ்ச வயல்ல விட்டோம்னா நெல்லு, நத்த, மீனு, தவளன்னு நல்லா தீனியை சாப்பிட்டு கொழுகொழுன்னு இருக்கும். அதெல்லாம் என் அப்பா, தாத்தாவோட முடிஞ்சுபோச்சு. இப்ப எப்படி நிக்குது பாருங்க, கொழுப்பே இல்லாம, வத்தலும் தொத்தலுமா!” என்று வருத்தத்தோடு வாத்துக் கூட்டத்தைக் காட்டினார் குமார்.

அப்போ, இந்த வாத்துங்களையெல்லாம் நீங்க வளர்க்கிறதில்லையா?

”வாத்த மேய்க்கிறதுக்கு வய வரப்பு எங்க இருக்கு? முன்ன மாதிரி, இப்பல்லாம் வாத்த சொந்தமா வளர்க்க முடியுமா? தீனி போட்டுத்தான் சமாளிக்க முடியுமா? அதெல்லாம் ஒருகாலம். ஏதோ வாத்து விக்கிறத பொறுத்து மாசத்துக்கு ஒன்னு ரெண்டு வாட்டி ஆந்திரா இல்லாட்டி கடலுர் போயி லோடு எடுத்து வருவோம். இங்க கொண்டாந்து அத விக்கிற வரைக்கும் ஒரு பத்து பதினஞ்சி நாளு அதுங்கள பாத்துப்போம்.

தோ… இங்கத் தேங்கிக்கிடக்கிற குட்டையில கொஞ்ச நேரம் நனையவுட்டு பட்டியில அடைச்சிருவோம். ஞாயித்துக்கிழமைன்னா சுத்துபட்டு ஊர்லருந்து கூட்டமா வருவாங்க… மத்த நாள்லலாம் ஏதோ ஒன்னு ரெண்டு வாத்துங்க விக்கும். வாத்து ஏத்தியாந்த வண்டிக்கூலி, வாத்துக்கு தீனி செலவுன்னு போக வாத்துக்கு 30 ரூபா கெடக்கிறதே பெரிய விசயம்.”

‘வாத்துக்கறியில் என்ன ஸ்பெஷல்?” வாத்துக்கறி வாங்க வந்திருந்த வாடிக்கையாளர்களை வழிமறித்துக் கேட்டோம். ”அட நீங்க வேற, ஆட்டுக்கறி வெல அதிகமுன்னு மாட்டுக்கறி வாங்கினோம், அதுவும் கட்டுப்படியாகாம ப்ராய்லர் வாங்கினோம். இருநூறு ரூபாய்க்கு வாத்துக்கறி கிடைக்கிது, அதான், இப்ப வாத்துக்கறிய வாங்கி சாப்பிட்டுக்கிட்டிருக்கோம். ” என்றார் ஒருவர்.

”ஏற்கெனவே, ப்ராய்லருல ஊசி போடுறான், மருந்து அடிக்கிறான்னு சொல்லி பிராய்லர் கோழிக்கறி சாப்டுறதுக்கு மக்கள் யோசிக்கிறாங்க. இதுல, வாத்துக்கறி சாப்ட்டா உடம்புக்கு நல்லது, இது ஸ்பெஷல்னு நீங்க மீடியாவுல போட்டீங்கனா, அதுக்கு ஒரு கூட்டம் வந்துரும். அப்புறம் இந்த விலைக்கும் வாத்து கிடைக்காம போயிடும்.” என்று புன்னகைத்ததும்ப நம்மை வழியனுப்பி வைத்தார், மற்றொரு வாடிக்கையாளர்.

– வினவு புகைப்படச் செய்தியாளர்கள்.