சென்னை மதுரவாயலை அடுத்துள்ளது வானகரம் மீன் சந்தை. இந்த சந்தைக்கு ஆந்திரா, கேரளா, குஜராத், மகாராஷ்டிரா என இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்து மீன்கள் கொண்டு வரப்படுகிறது. ஞாயிறு, புதன் என வாரத்தில் இரண்டு தினங்களில் மீன்கள் அதிகமாவும் மற்ற நாட்களில் மீன் வரத்து குறைவாகவும் இருக்கும்.

வானகரம் மீன் சந்தை இருபக்கமும் தூண்கள் எழுப்பி மேலே கூரை அமைக்கப்பட்டுள்ளது. கட்டிடத்தின் இரு பக்கமும் அமைக்கப்பட்ட சரிவான திண்ணையில் தான் கடைகள் உள்ளன. இரு தூண்களுக்கு இடைப்பட்ட தூரம் தான் ஒரு கடையின் அளவு. அதற்குள் அவரவர் மீன்களை வைத்துக் கொண்டு எந்த பிரச்சனையும் இல்லாமல் ஒருவரோடு ஒருவர் இணக்கமாக வியாபாரம் செய்கின்றனர்.

“ஒரு கடைக்கி வாடகை இருவதாயிரம். என்னால அம்புட்டு துட்டு தரமுடியல. பாதி கடைய 1,0000-த்துக்கு வாடைக்கி எடுத்துனுருக்கேன். சில பேரு காசிமேடு, சிந்தாதரிப்பேட்டன்னு மீனு வாங்கினு வந்து யாவாரம் பாப்பாங்க. நம்மால வண்டி வாடக குடுத்து அவ்ளோ தொலவு செட்டாகாது. நா.. இங்கியே சந்தைக்கி வர்ர மீனுகளையே ஏலத்துக்கு எடுத்து யாவாரம் பாப்பேன். ஆமா இன்னாத்துக்கு இதெல்லாம் கேட்டுனுகிறிங்க” என்றார் மீன் வியாபாரி மணி.

படிக்க :
♦ கன்னியாகுமரி மீனவர்களுடன் ஒரு உரையாடல்!
♦ கறிக்கோழி வளர்ப்பு: சுகுணா கொழுக்கிறது, விவசாயி போண்டியாகிறான்!

மீன் வியாபாரி மணி மற்றும் தொழிலாளி வினாயகம் (வலது)

“இன்னாது! படம் புடிச்சு பேப்பர்ல போடபோறிங்கலா!. போடுங்க போடுங்க எங்களுக்கு விளம்பரம்தான். ஆன புரட்டாசி மாசத்துல வந்துகிறிங்கோ கூட்டமே இல்லியே! எங்களுக்கு விளம்பரம் இல்லாமபுடுமே” என சிரித்தார் அருகில் இருந்த தொழிலாளி வினாயகம்.

“என்னப்போல சில பேரு மீனவக் குடும்பத்த சேந்தவங்க. மத்தவங்க வன்னியரு, நாயக்கரு, முதலியாருங்க எல்லா சாதிக்காருமே இருக்காங்க. சீலா, கொடுவா, வஞ்சிரம், கட்லா, பன்னா, சங்கரா, இறா, சுதும்பு, சுறா இப்படி பல வக மீனும் ஒன்னா கடல்ல வாழ்ராப்போல சந்தைக்குள்ள பல சாதியும் கலந்து பாகுபாடு இல்லாமெ ஆளுக்கொரு வேல பாத்துனுருக்கோம். எல்லா வேலையும் செஞ்சாதான் பத்துருவா காசு பாக்க முடியும்.

மீனவப் பெண்மனி கலா

நானு பொறந்ததுலேருந்து இதே தொழில்தான். நானு வெளியூரு (வெளிமாநிலம்) மீனுங்கள விக்க மாட்டேன். காசிமேடு, பழவேற்காடு, மீனுங்கதான் யாவாரத்துக்கு எடுத்துகினு வருவேன். மத்தவங்கள விட எம்மீனு பத்துருவா கூடத்தான் இருக்கும். விக்காத மீன கெட்டுப் போற வரைக்கும் வேடுகட்டி வச்சு விக்க மாட்டேன். கருவாடு போட்டு வித்துருவேன்”. என்றார் மீனவப் பெண் கலா.

“நீங்க ரெண்டு மணிக்கு மேல வந்து பாருங்க இங்கயே சோறு போட்டு சாப்புடலாம் அத்தன சுத்தமா இருக்கும். இங்க கிளினிங் வேல பாக்குற எங்களுக்கு சம்பளம்னா 100 ரூபாதான். ஆனா சரக்கு வரும் லாரியில மீன்கூட எறக்குறது, ஐஸ்பார் தூக்குறது இந்த வேலையில ஒரு நாளைக்கி 500 குறையாமெ சம்பாதிச்சுருவோம். ” என்றார் மீன் சந்தை பராமரிப்பாளர் சரவணன்.

மீன் சந்தை பராமரிப்பாளர் சரவணன்

சரவணன் சொன்னதை ஒப்புக் கொண்டு பேசினார் மீன் சுத்தம் செய்துகொண்டிருந்த ராஜலட்சுமி. “நானும் கிளினிங்கு வேலதான் பாத்துனுருக்கேன். சந்தைக்கி வர்ர மீன இறக்குனதும் வெளிய சுத்தம் செஞ்சு பிளிச்சிங் பவுடரெல்லாம் போட்ட பெறகு மதியத்துக்கா வந்து மீனு ஆஞ்சு குடுக்கலாம். அதுவரைக்கும் கட்டடத்துக்கு வெளியில மீனு ஆயிரதுக்குன்னு இருக்குற உறுப்பினருதான் மீனு ஆயனும். ஒரு நாளைக்கி 500 சம்பாதிப்பேன்”. என்றார் ராஜலட்சுமி.

ராஜலட்சுமி

“விடியகாத்தால மீனு வாங்க கெளம்புவோம். கடலுக்கு போன மீனவங்க வந்து தரம்பிரிச்சு மீன ஏலம் விடசொல்லோ… நீங்க எப்புடி எங்கிட்ட பேரம் பேசுரிங்களோ அத போல நாங்களும் பேரம் பேசி மீனு வாங்கினு வருவோம். நேத்து ரெண்டு பொட்டி எறா எடுத்துனு வந்தேன். கிலோ 120 போட்டாதான் கட்டுபடி ஆகும். புரட்டாசின்னு யாவரமே இல்ல. வச்சுருந்தா அழுகிபுடும். கிலோ 70-துக்கு குடுத்துனுருக்கேன். ஐஸ்கட்டியில மீனு அள்ளி அள்ளி கை ரேக தேஞ்சதுதான் மிச்சம்.” என்றார் வியாபாரி மஞ்சு.

மீன் வியாபாரி மஞ்சு

“இந்த மீன் மார்கெட்ட நம்பி ஆயிரம் குடும்பம் பொழப்பு நடத்தினுக்குது. எங்களுக்கு துரையண்ணே முதலாளி இல்ல எங்கள்ள ஒருத்தரு. நமக்கென்னென்னு குந்திகினு இருக்க மாட்டாரு. எங்க கூட வந்து நின்னு கவிச்சி நாத்தத்துல நனச்சுகினு வேல பாப்பாரு. தொடப்பக் கட்டய எடுத்துகினு தேச்சு கழுவுவாரு. மீன்மார்கெட்டு தொறந்து பதிமூணு வருசமாச்சு யாரையும் அண்ணெ அசிங்கமா பேசுனதே கெடையாது” என்றார் தொழிலாளி மாலா.

தொழிலாளி மாலா

“வெளி மாநிலத்து மீனுங்களுக்கு இங்க ஏஜென்ட்டு இருப்பாங்க. வெளியிருந்து மீன் அனுப்பும் ஆளுங்க கூட இவங்க தொடர்புல இருப்பாங்க. இங்க சந்த நெலவரத்துக்கு தகுந்தபடி மீன் வரத்த கூட்டி கொறச்சு வரவைப்பாங்க. அவங்கதான் ஏலத்தையும் விடுவாங்க. அதேப் போல உள்ளூர் மீனுங்கள வாங்கி வந்து வியாபாரம் செய்றவங்களும் இருக்காங்க. யாரும் யாருக்கும் பிரச்சனையா இருக்க மாட்டாங்க. எங்களுக்குள்ள எந்த பிரச்சனையும் வராமெ துரையண்ணெ பாத்துப்பாரு.

மீன் வெட்டும் தொழிலாளி ஸ்டிபன்

இப்ப பாருங்க நானு ஒங்க கூட பேசினுருக்கேன் எனக்கு வந்த மீனெல்லாம் பக்கத்துல உள்ளவன் வெட்டுறான். இப்ப நான் உக்காந்தேன்னா அவம்பக்கம் வர்ர மீன எனக்கு விட்டுக் குடுத்துடுவான். இங்க கெட்டுப் போன மீன விக்க கூடாதுங்கற முறை வச்சுருக்கோம். கெட்டுப் போன மீன உள்ள வித்தாங்கன்னா வெளிய வெட்டுற நாங்க மீன திருப்பி அனுப்பிடுவோம்.” என்றார் மீன் வெட்டும் ஸ்டிபன்.

படிக்க :
கருவாடுக்கு எதிராக ‘தி இந்து’வின் பார்ப்பனத் திமிர் !
இணையத்தில் கருவாடு ஆவணப்படம்

“நானு தெனக்கூலி வேலதான் பாத்துனுருந்தேன். மீன் மார்கெட் வந்ததுலேருந்து இங்கனக்குள்ளதான் வேல. எம்மகனுக்கு படிப்பு வரல எங்கூட இட்டாந்துட்டேன். மீனுக்கு செதிலெடுப்பான்.. எறா உரிப்பான் அப்புடியே தொழில கத்துனுருக்கான்.” என்றார் ஆனந்த் தன் மகன் பப்லுவை அணைத்தபடி.

ஆனந்த் – பப்லு

புரட்டாசி கார்த்திகை மாசத்துலயும் மீன் பிடி தடைக்காலத்துலயும் எங்களுக்கு விற்பனை பாதிக்கும். வாங்குற மீன் விற்பனை ஆகலன்னா பாதுகாக்குறது பெரிய வேல. தேவைக்கான ஐஸ் கட்டி வாங்கனும். ஐஸ்கட்டி உருகி போகாத தரமான பொட்டி வேணும் அப்படியே உருகினாலும் தண்ணி வெளியேர வழி இருக்கனும். அப்புடி இப்புடி கொஞ்சம் அசால்டா இருந்துட்டாலும் நாத்தம் எடுத்துக்கும், என்றார் தெருக்களில் வியாபாரம் செய்யும் வியாபாரி.

கொஞ்சம் அசால்டா இருந்துட்டாலும் எல்லாம் நஷ்டம் தான்.

“சந்தைக்குள்ள மீன் வெட்ட போகனுன்னா உறுப்பினரா இருக்கனும். சந்தக்குள்ள இருக்கவங்க பெரும்பாளும் சிந்தாதரிப்பேட்ட, புளியந்தோப்பு ஆட்களா இருப்பாங்க. அவங்க பேச்சு கொஞ்சம் அடாவடியா தெரியும். அதுக்காக அவங்க கெட்டவங்கன்னு சொல்லல, அவங்க பேச்சே அப்படிதான். அது என்னவோ கொஞ்சம் மரியாத கொறச்சலா தெரியிது, அதனாலதான் இங்குனக்குள்ள வர்ர மீன மட்டும் வெட்டுனா போதுன்னு இருந்துக்கிட்டேன்.” என்றார் ரேட்டோரம் மீன் வெட்டும் ஜமுனா.

ரேட்டோரம் மீன் வெட்டும் ஜமுனா

“நாங்க வெளியூர சேந்தவங்க. உள்ளூர் ஆளுங்களுக்கதான் சந்தைக்கி பக்கத்துலயும் அடுத்தடுத்தும் கடை போட்டுருக்காங்க. எங்கள தள்ளித்தள்ளி ஊரோட கடைசிக்கி வந்துட்டோம். புரட்டாசி பொறந்துட்டதால மீனு வெட்டுக்கு வரவே இல்ல. மணி ரெண்டாயிடுச்சு அஞ்சுகிலோ மீனுதான் ரெண்டு பேரு வெட்டியிருக்கோம்.” என்றனர் கணவன் மனைவியான சுந்தரம்மாள் நடராஜன்.

சுந்தரம்மாள் – நடராஜன் தம்பதியினர்

நேரம் மதியத்தை தாண்டியதும் நம்மிடம் யாரும் பேசத் தயாராக இல்லை. ஏனென்றால் விற்காத மீன்களை எடுத்து பக்குவப்படுத்துவதில் மும்முரமாக இருந்தனர் வியாபாரிகள். கழிவுகளை வேளியேற்றுவதும் கட்டிடத்தை கழுவுவதுமாக துரிதமானார்கள் தொழிலாளிகள். அதிகாலை நேரத்தில் தொடங்கிய சுறுசுறுப்பான உழைப்பு பிற்பகல் கடந்தும் எந்த சுணக்கமும் இல்லாமல் தொடர்வதை பார்த்தால் சோம்பேறிகளும் வெட்கமடைவார்கள்.

மீன்களை ஐஸ் பெட்டிகளில் அடுக்கி வைக்கும் தொழிலாளி.

இங்குள்ள மக்களிடம் பேசியதை வைத்து பார்க்கும் போது சந்தைக்கு மீன் கொண்டு வருபவர்கள், ஏலமிடுபவர்கள், வாங்கும் வியாபாரிகள், விற்பனையாளர்கள், மீனை சுத்தம் செய்பவர்கள், ஏலமிடும் வெளிப்புறத்தை சுத்தம் செய்பவர்கள், விற்பனை கூடத்தை சுத்தம் செய்பவர்கள், கழிவுகளை எடுத்து செல்பவர்கள், வாகனத்தை பாதுகாப்பவர்கள் என ஆயிரம் பேருக்கும் மேல் இந்த சந்தையை நம்பி வேலை செய்வதாக கூறினர். எது எப்படியோ சமூகத்தின் அடிதட்டு மக்கள் வாழ்வாதாரத்துக்கு ஒரு வழிவகை செய்திருக்கிறது வானகரம் மீன் சந்தை!

இருந்தாலும் இந்த மகிழ்ச்சி இன்னும் எத்தனை நாளைக்கு என்ற கேள்வியும் இருக்கிறது. ஏற்கனவே இந்த இடத்தில் மீன் நாற்றம் என புகார்கள் பலவற்றை அருகாமை நிறுவனங்களில் உள்ளவர்கள் (முக்கியமாக பார்ப்பன மற்றும் பிற ‘மேல்’ சாதியினர்) கொடுத்து சந்தையை காலி செய்ய முனைந்திருக்கின்றனர். அந்தப் பிரச்சினை பிறகு பேசி முடிவானாலும், தற்போது சந்தை மாறுவதற்காக காத்திருக்கிறது. அந்த சந்தை எங்கே போகும், எந்த இடம், வேலை எப்படி கிடைக்கும் என்ற கேள்விகளும் இருக்கின்றன. என்றாலும் வியாபாரிகளும், தொழிலாளிகளும் அந்த மாற்றத்தை எதிர் கொண்டே ஆகவேண்டும். அது அவர்களின் வாழ்வாதாரப் பிரச்சினை.

குறிப்பு: இந்தக் கள ஆய்வு புரட்டாசி மாசத்தில் எடுக்கப்பட்டது.

மீன்களை சுத்தம் செய்து கொடுக்கும் தொழிலாளிகள்

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

சந்தையை சுத்தம் செய்யும் தொழிலாளிகள்

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க