இந்தோனேசியாவில் கடந்த டிசம்பர் மாதம் 22–ம் தேதி, ஜாவா, சுமத்ரா தீவுகளுக்கு இடையே ஜாவா கடலை, இந்தியப் பெருங்கடலுடன் இணைக்கிற சுந்தா ஜலசந்தியில் அமைந்துள்ள அனக் கிரகட்டாவ் எரிமலையில் ஏற்பட்ட வெடிப்பைத் தொடர்ந்து, கடலுக்கடியில் ஏற்பட்ட நிலச்சரிவால் சுனாமி ஏற்பட்டு சுமார் 430 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
இந்த நிலையில் பிலிப்பைன்ஸ் நாட்டில் கடந்த சனிக்கிழமையன்று (29.12.2018) ஏற்பட்ட நிலநடுக்கத்தின் காரணமாக அண்டை நாடான இந்தோனேசியாவுக்கும் எச்சரிக்கை விடப்பட்டு சுமார் 40 ஆயிரம் மக்கள் பாதுகாப்பான இடங்களை நோக்கி இடம் பெயர்ந்திருக்கின்றனர்.
தீவுகளின் நாடு என்றழைக்கப்படும் தென்கிழக்கு ஆசிய நாடான இந்தோனேசியா, இந்தியப் பெருங்கடல் மற்றும் பசிபிக் பெருங்கடலுக்கு நடுவில் அமைந்துள்ளது. சுமார் 17,000-க்கும் அதிகமான தீவுகளைக் கொண்ட இந்தோனேசியாவில் சுமார் 26 கோடிக்கும் அதிகமான மக்கள் வசித்து வருகின்றனர். எரிமலை வளையத்தில் அமைந்திருப்பதால் இங்கு சுமார் 150 எரிமலைகள் இருக்கின்றன. இதன்காரணமாக நில நடுக்கம், சுனாமி, எரிமலை வெடிப்பு போன்ற இயற்கைப் பேரிடர்கள் தொடர்ந்து நடந்தபடி உள்ளன.
மீண்டும் ஒரு சுனாமி வரப்போகிறது என்ற வதந்தியால் ஜாவா தீவில் சுனாமி தாக்கிய இடமான பாண்டெக்லாங்கில் மக்கள் பீதியுற்று உயரமான இடங்களில் தஞ்சம் புகும் வீடியோ
2018-ம் ஆண்டில் மட்டும் இந்தோனேசியாவில் சுமார் 2,000-க்கும் மேற்பட்ட இயற்கைப் பேரழிவுகள் ஏற்பட்டு, 4,000 பேருக்கும் மேலானோர் உயிரிழந்தது மட்டுமன்றி சுமார் 30 இலட்சம் பேர் குடிபெயர்ந்துள்ளனர்.
இப்படிப்பட்ட சூழ்நிலையில் சுனாமி குறித்த எச்சரிக்கைக் கருவிகள் 2012-ம் ஆண்டிலிருந்தே செயல்படவில்லை என்பதை உங்களால் நம்பமுடிகிறதா? ஆம், அதுதான் உண்மை. ஊழல், போதிய நிதி ஒதுக்கீடு இல்லாமை, கருவிகள் பழுதடைதல் போன்ற பிரச்சினைகளால்தான் 22.12.2018 அன்று வந்த சுனாமி குறித்து மக்களை எச்சரிக்க முடியவில்லை என்று டிவிட்டரில் தெரிவிக்கிறார் தேசிய பேரிடர் நிறுவனத்தின் தகவல் தொடர்பாளர் சுடோபோ புர்வோ நுக்ரோகோ.
படிக்க:
♦ இந்தோனேசியாவை உலுக்கிய பேரழிவு சுனாமியும், நிலநடுக்கமும் | படக்கட்டுரை
♦ சென்னை: இயற்கையை அழித்த குற்றத்தின் தண்டனை
எங்கள் நாட்டிற்கு இப்போதைய அதிமுக்கியமான, அத்தியாவசிய தேவையாயிருப்பது கடலுக்கடியில் உண்டாகும் நிலச்சரிவினால் ஏற்படும் சுனாமியைக் கண்டுபிடிக்கும் எச்சரிக்கைக் கருவிதான். இது ஒன்று மட்டுமல்ல; எல்லா இயற்கைப் பேரிடர்களையும் முன்கூட்டியே கண்டறியும் நவீன கருவிகளும் தேவை என்கிறார் அவர்.
இன்றைய சூழ்நிலையில் எங்கள் நாட்டில் உள்ள அதிநவீன முன்னெச்சரிக்கைக் கருவி என்று சொன்னால் அது தரையில் ஏற்படும் நிலநடுக்கத்தைக் கண்டுபிடிக்கும் கருவிதான். 2008-ம் ஆண்டு ஏற்பட்ட நிலநடுக்கத்திற்கு( 9.3 ரிக்டர்) பிறகே இது அறிமுகப்படுத்தப்பட்டது என்கிறார்.
இந்தோனேசியாவில் 2018-ம் ஆண்டு மட்டும் நடந்த இயற்கைப் பேரிடர்களில் மிக முக்கியமானவைகளும் அதனால் ஏற்பட்ட இழப்புக்களும்..
தேதி | இயற்கை பேரிடர் – இடம் | உயிர் பலி |
காயம் | காணாமல் போனோர் | இடம்பெயர்ந்தோர் / வீடுகளை இழந்தோர் |
22.12.18 | சுந்தா ஜலசந்தி சுனாமி | 429 | 1485 | 154 | 20,000 |
28.11.18 | சுலாவேசி பூகம்பம் | 2073 | 10000 + | 5000 | 90,000 |
29.07.18 | லோம்போக் பூகம்பம் – | 324 | 100+ | 1,50,000 | |
22.02.18 | நிலச்சரிவு/வெள்ளம் – ஜகார்த்தா | – | – | – | 6500 |
06.12.18 | சூறாவளி – மேற்கு ஜாவா | 1 | – | – | – |
மேற்குலக நாடுகளில் வார இறுதிகளில் மழை பொழியுமா என்பதைக் கூட துல்லியமாகக் கணிக்கும் கருவிகளும், இயற்கைப் பேரிடர்களைக் கணிக்க பல்வேறு வகையான கண்டுபிடிப்புக்களும் நடைமுறையில் செயல்பாட்டில் இருக்கின்றன. இந்தோனேசியா, இந்தியா போன்ற மூன்றாம் உலக நாடுகளில் நடக்கும் ஊழல் மற்றும் அறிவியல் கண்டுபிடிப்புகளை புறந்தள்ளுவது போன்ற நடவடிக்கைகளே இத்தகைய இயற்கைச் சீற்றத்திலிருந்து மக்களைக் காக்க முடியாமல் போவதற்கு முக்கியக் காரணங்களாக அமைகின்றன.
இந்தியாவைப் பொருத்தவரையில் சரஸ்வதி நதியைத் தேடுவது, மாட்டு மூத்திரத்தில் மருந்தைத் தேடுவது போன்றவற்றிற்கு நிதி ஒதுக்கும் நிலைமைதான் நீடிக்கிறது. இது போன்ற நிலைமையில், இந்தோனேசியாவில் மட்டுல்ல, இந்தியாவிலும் இயற்கைப் பேரிடர்களின் போது ஏற்படும் உயிரிழப்புகளும் வெறும் எண்ணிக்கைகளாகத்தான் பார்க்கப்படுமே அன்றி உயிர்களாக அல்ல.
வரதன்
செய்தி ஆதாரம் :
♦ Indonesia’s tsunami buoy warning system not working since 2012: Official
♦ The five most deadly natural disasters in Indonesia this year