சந்திரமோகன் | சிவாஜி கண்ட இந்துராஜ்யம் | நாடகம்

(இருண்ட நிலையில் குரல் ஒலி)
‘பாரத் வர்ஷம், பரத கண்டம், புண்யபூமி’ என்று புகழ்ந்தனர் புராணிகர்கள், புலவர்கள் சகலரும். எனினும் புண்ணிய பூமி அடிமைப்படுத்தப்பட்டது. எங்கும் காரிருள் சூழ்ந்து கொண்டது. எங்கும் திகைப்பு! கலக்கம். ஆனால், காரிருளைக் கிழித்துக் கொண்டு கிளம்பிற்று சுதந்திர ஜோதி. மராட்டியத்திலே ஏற்றி வைக்கப்பட்ட விடுதலை விளக்கு புதியதோர் எழுச்சியை உண்டாக்கிற்று. மாவீரன் சிவாஜி கிளம்பினான், சீறிப் போரிட, சிதறி ஓடினர் எதிரிகள். விடுதலை கிடைத்துவிடும் என்ற நம்பிக்கை பிறந்தது. ஆனால், சமூகம் ஜாதி பேதமெனும் சனியனுக்கு ஆளாகி அவதிப்பட்டது. வீரர்கள் விடுதலைப் போரை நடத்தினர். வீணர்கள் ஜாதியையும் மதத்தையும் காட்டிக் கொழுத்தனர். சமூகக் கொடுமை மராட்டியத்தை விட்டு ஒழியவில்லை. அந்த நிலையிலே……

♦ ♦ ♦ 

சி.என். அண்ணாதுரை

காட்சி – 1
இடம்: குளக்கரை

உறுப்பினர்கள் :
(கேசவப்பட்டர், பாலசந்திரப் பட்டர், பச்சை .)

(பட்டர்கள் இருவரும் தடிகளைத் தூக்கிக் கொண்டு ஓடி வருகிறார்கள். பச்சை அடிபட்டு ஒடிவருகிறான்)

கேசவப்பட்டர்: அடடே! எவ்வளவு திமிருடா உனக்கு. அடி, உதை, எவ்வளவு மண்டைக் கர்வம் இவனுக்கு ?

பாலச்சந்தர்: வெட்டு, குத்து.
(பச்சை ஒடி வந்த வேகத்தில் கீழே விழுகிறான். அவனைத் தடியால் தாக்குகிறார்கள். அவன் எழுந்து கும்பிட்டபடி)

பச்சை: ஐயோ! சாமி, சாமி கும்பிடுறேன்; அடிக்காதிங்க. தெரியாத்தனமா செய்துட்டேன். இந்தத் தடவை விட்டுடுங்க.

கேசவப் பட்டர்: (அடித்துக் கொண்டே திருக்குளத்தில் போயா குளிப்பது? எவ்வளவு திமிருடா உனக்கு சண்டாளா! பஞ்சாமப் பயலுக்கு ஆகுமோ இந்தப் பதட்டம்? பாவி
புண்ணிய தீர்த்தத்தையே பாழாக்கிவிட்டாயே.

பச்சை: (உடம்பைத் துடைத்துக் கொண்டு) இல்லிங்க; இனிமே செய்யலிங்க , உயிர் போகுதுங்களே… ஐயையோ!

பாலசந்தர்: பிடித்துக்கட்டி சவுக்கால் அடிக்கணும் நீச்சப்பயல். அடுக்குமாடா நீ செய்த அக்ரமம்? அடே, மதத்துரோகி எந்தக் காலத்திலேயாவது நடந்தது உண்டா இந்த மாதிரி அக்ரமம்? உன் தோலை உறிச்சுப் புடுறேன் பார் ,

பச்சை: வேணாங்க, வேணாங்க! இந்தப் பக்கமே வரமாட்டேன்.

கேசவப்பட்டர்: (மிரட்டும் குரலில்) வந்தா?

பச்சை: (பயந்து) தோலை உறிச்சுடுங்க.

கேசவப்பட்டர் : நடிப்போ ? நீச்சப்பயலே, இனி இந்தப் பக்கம் தலை காட்டவே கூடாது. தெரிஞ்சுதா.

(பச்சை ஓடிவிடுகிறான். கேசவப்பட்டர் தனிமையில்) பயல்களுக்கு எவ்வளவு கர்வம். லோகம் என்ன ஆவது, இப்படி, இதுகள் நடக்க ஆரம்பித்தால்?

♦ ♦ ♦ 

காட்சி – 2
இடம் : வீதி
உறுப்பினர்கள் : (பச்சை, பிச்சை, ஆண்டி , சாது)

(அடிபட்ட பிச்சை காயங்களைப் பார்த்துக் கண்ணீர் விடுகிறான்)

பச்சை: ஆண்டவனே! வயலிலே வேலை செய்ததாலே உடலிலே அழுக்கு. அதைக் கழுவக் குளத்திலே இறங்கினேன். குளித்தது பாவமாமே பாவிப்பயல்க படுகொலை செய்துட்டானுங்க. குளிக்கப் போனவன் சேத்தப் பூசிக்கிட்ட கதை மாதிரின்னு ஊரிலே உலகத்திலே சொல்லுவாங்க என் கதி குளிக்கப் போயி ரத்தாபிஷேகமாச்சு. தெய்வமே! உனக்குக் கண்ணில்லையா. இந்த தேசத்திலே பிறந்தவன், இதிலேயே உழைக்கிறவன், இங்கேயே இருக்கிற குளத்திலே நான் குளிக்கக் கூடாதாம். எங்கப்பன் சொல்லுவார் முன்பெல்லாம் இந்தக் குளத்தை எங்கப் பாட்டன் வெட்டினானாம். இதுலே குளிச்சா புண்ணியமாம் இதோ, வழியுது புண்ணியம்.

(ரத்தக் கறையைத் துடைத்துக் கொள்கிறான். பச்சையின் கூக்குரல் கேட்டு ஆண்டி ஒடி வந்து…)

ஆண்டி: பச்சை ! நீயா ஐயோ, ஐயோன்னு கூவினது. என்னடப்பா நடந்தது. உடம்பெல்லாம் காயம், ரத்தம் என்ன அநியாயமிது.

பச்சை: ஆண்டி பார்த்தாயா இந்தக் கோரத்தை கேட்டியா இந்த அக்ரமத்தை? நீ என்னமோ நம்ம சாதியிலே யாரும் படிக்காத படிப்பு படிச்ச வேண்ணு ஊரு, நாடெல்லாம் உன்னைப் புகழுதே இந்த அக்ரமத்தைக் கேட்க வேண்டாமா நீ?

ஆண்டி: பச்சை ! என்ன நடந்தது? முரட்டு மாடு ஏதாவது இடித்துக் காயப்படுத்தினதா? வெறிநாய் மேலே விழுந்து கடித்ததா? கொள்ளைக்காரப் பசங்க தடியாலே தாக்கினாங்களா? அழாமே சொல்லு பச்சை .

பச்சை: ஆமாம் முரட்டு மாடுதான் மேலே விழுந்து முட்டுச்சி. வெறி நாய்தான் கடித்தது. கொள்ளைக்காரனுங்கதான் என்னைத் தடியாலே தாக்கினாங்க.

ஆண்டி: இப்படி ஜன்னி கண்டவன் போலப் பேசினா நான் என்னான்னு நினைக்கிறது. முரட்டு மாடான்னா அதுக்கும் ஆமாங்கிறே. வெறி நாயான்னா அதுக்கும் ஆமாங்கிறே! கொள்ளைக்காரனுங்காளன்னா அதுக்கும் ஆமாங்கிறேன் நான் என்ன செய்யறது? யார் செய்தா இந்த அக்கிரமத்தை

பச்சை : அந்தக் கும்பல்தான். ஆளை ஏச்சுப் பிழைக்குதே, அந்தக் கூட்டந்தான்.

ஆண்டி : யாரு? ஐயமாரா ?

பச்சை : அந்தப் பாழாய்ப்போன பட்டாச்சாரிக் கூட்டந்தான்.

ஆண்டி : ஏன்? நீ என்ன செய்தே?

பச்சை : நானா? குளிக்கப் போனேன்.

ஆண்டி : எங்கே?

பச்சை : அவுங்க வீட்டுக்காப் போனேன் ; குளத்துக்குத்தான்.
அது புண்ணிய தீர்த்தமாம். அதிலே குளிக்கலாமான்னு பாவிப் பயலுங்க இந்த அநியாயம் செய்துட்டானுங்க.

பச்சை : நீ ஏண்டப்பா அங்கே போகணும்? அதுவோ, ஐயமாரு கொளம்; நாம் ஈன சாதி.

மாதிரிப் படம்

ஆண்டி : (கோபத்துடன்) அடே முட்டாளே போனால் என்னடா குளத்திலே நாய் தண்ணீர் குடிக்கிறதேடா நாய். நாம் என்ன நாயை விடக் குறைவா? மலம் தின்னும் நாயாடா நாம். அது உரிமையோடு தண்ணீர் குடிக்கிறது குளத்தில் பச்சை, நாய்க்கும் கேடு கெட்டவனா? சேற்றிலே புரளுகின்ற எருமை குளித்தால் விரட்டவில்லை. மனிதன் தலைமுறை தலைமுறையாக மற்றவர்க்குப் பாடுபட்டு மேனி கருத்துப் போன சாதி நாம். நாம் குளித்தால் குளம் தீட்டாகிவிடுமா? என்ன அக்ரமம்? அடுக்குமா இந்த அநீதி?

பச்சை : அநீதியோ, அக்ரமமோ! இது இன்று நேற்று ஏற்பட்டதா? நம்ம பாட்டன் முப்பாட்டன் காலத்திலே இருந்து நடக்குது. நாம் என்ன செய்யலாம்.

ஆண்டி : என்ன செய்யலாம். இந்தக் கொடுமையாவது தொலைய வேண்டும். அல்லது நாமாவது ஒழிய வேண்டும்.

பச்சை : பதறாதே ஆண்டி. நாம பாவம் செய்தவங்க. அதனாலேதான் இந்தப் பாழான ஈனக் குலத்திலே பிறந்தோம். ஆண்டி மடையன் ஈன சாதி என்று எவனோ சொன்னால் அதை நம்பி நாசமாகிறாயே. நாம் எந்த விதத்திலே தாழ்வு? உழைக்கவில்லையா? நாம் மனிதரில்லையா? ஊரை ஏய்த்தா பிழைக்கிறோம்?

பச்சை : ஆண்டி! நீ நம்ம சாதியிலே படிச்சவன். என்னென்னமோ பேசறே. நீ சொல்றதை கேட்கிறபோது எனக்கென்னவோ தலை சுற்றுவது போல் இருக்கு.

ஆண்டி : உன்னைப் போன்ற ஜென்மங்கள் நம் சமூகத்தில் இருப்பதால் தான் இந்த இழிவு பச்சே! பாழான சமூகக் கொடுமையை நான் இப்போது பார்த்தது மட்டுமல்ல! அனுபவித்துமிருக்கிறேன். (சட்டையைக் கிழித்துப் பழைய தழும்புகளைக் காட்டி )
பார், தழும்புகளை! அந்தப்பாவிகள் செய்த அக்ரமம். என் பத்தாம் வயதிலே நேரிட்டது. இந்தத் தழும்பும் என் உடலை விட்டுப் போகாது. இந்த மமதையை அழிக்க வேண்டும் என்ற உறுதியும் என் உள்ளத்தை விட்டுப் போகாது. நம்மைப் படுத்துகிற பாடு இருக்கிறதே, இதற்கெல்லாம் ஒருநாள் அவர்கள் பதில் சொல்லித் தீர வேண்டும். வா போகலாம்.

(சாது பாடியபடி வருகிறார்… பாட்டு முடிந்ததும்) சாது அப்பா, பாட்டாளி மக்களே! அண்டசராசரத்தைப் படைத்த ஐயன் உங்களைக் காப்பாற்றுவாராக.

பச்சை : ஐயா, சாமி நாங்க தீண்டாதவங்க

ஆண்டி : ஆம்; ஐயா! ஆம்! நாங்க தீண்டாதவர்கள் தான்! ஊரார் சொத்தைத் தீண்டியதில்லை. வஞ்சனையைத் தீண்டியதில்லை. சூது, சூழ்ச்சியை நாங்கள்
தீண்டியதில்லை பாவத்தைத் தீண்டாதவர்கள் நாங்கள்.

சாது : தம்பி! உன் மதி கண்டு மகிழ்கிறேன். மகான் குலமானலும், பிரபு குலமானாலும், ராவ் குலமானாலும், எல்லோரும் மனிதர் குலம். பேதம் ஏது? நீ அறிவாளி.

ஆண்டி : அறிந்ததால் தான் என் அல்லல் அதிகமாகிறது. இதோ பச்சை! யாவும் தெய்வ சம்மதம் என்று நம்புகிறான். அதனால், அவனுக்கு ஜாதி வெறியரின் செயல் ஆத்திரமூட்டவில்லை.

சாது : ஆத்திரமல்ல! அநேக காலமாக இருந்து வந்த அக்ரமத்தைக் கண்டு சத்தியம் கோபிக்கிறது என்று பொருள். நீ சலிப்படையாதே. சமரசக் கீதத்தை இந்த மராட்டியத்திலே பல ஜீவன் முக்தர்கள் பரப்பிக் கொண்டு வருகிறார்கள். ஆண்டவன் சன்னிதானத்தின் முன்பு, அனைவரும் சமம், சாதி, மதம், உயர்வு தாழ்வெனும் தீது, சமரச ஞான மகான்களுக்கேது என்ற தத்துவம் தழைத்து வருகிறது.

ஆண்டி : ஐயா, சாது! உம்முடைய சமரச ஞானம் அத்தி பூத்தது போல் இருக்கிறது. சேற்றிலே ஒரு செந்தாமரை போல் இருக்கிறீர், ஆனால் என் மேல் கோபிக்காதீர். உம்முடைய முயற்சி உத்தமமானதுதான்; ஆனால், அது பலிக்காது. வேண்டுமானால் உம்மை ஒரு அவதார புருஷர் என்று கொண்டாடுவார்கள்; கோவில் கட்டுவார்கள், கூத்தாடுவார்கள். ஆனால், எல்லோரும் சமம்; பிறவியிலே உயர்வு தாழ்வு இல்லை என்று பேசுகிறீரே, அதை மட்டும் நடைமுறையிலே கொண்டு வரமாட்டார்கள். நான் பதட்டமாகப் பேசுவதாக எண்ண வேண்டாம். ஐயா! காவியும், கமண்டலமும் எங்கள் குலத்தின் கஷ்டத்தைப் போக்காது. முக்திக்கு வழிதரக்கூடும். உங்களுக்குள்ள இழிவைத் துடைக்காது; எங்கள் சமூகத்தை இந்தக் கொடுமை செய்கிறவர்கள் தங்களைக் கடவுள், உயர்ந்த சாதியராகப் படைத்ததாகக் கூறுகிறார்கள். அது கொடுமை. இதோ பச்சை. அதை உண்மைதான் என்கிறான். இது மடமை. இந்த மடமையும், அந்தக் கொடுமையும் ஒழிய வேண்டுமே ஐயா! கீதம் பாடினால் போதுமா?

சாது : அப்பா நெறியற்றவரின் வெறிச் செயலால் நீ மிகவும் வாடியிருக்கிறாய். கடவுளின் லட்சணமும், குணமும், அக்கயவரின் மொழிப்படியல்ல என்பதை அறிந்து கொள். கடவுள் என்றால் மனம், வாக்கு, காயம் என்பனவற்றைக் கடந்தவர் என்று பொருள்.

ஆண்டி : இருக்கலாம் அய்யா ! எதையும் கடந்தவராக இருப்பார். ஆனால், அந்த ஆரியர் போடும் கோட்டினை மட்டும் அவரால் கடக்க முடிவதில்லை . லோகம் மந்ராதீனம், மந்திரம் ப்ராமணாதீனம், ப்ராமணம் தேவதாதீனம் என்பது கீதையல்லவா! கடவுளுக்கே அவர்கள் எஜமானர்களாமே….?

சாது : வெறும் புரட்டு ; மமதை; அகம்பாவம் ; கடவுள் வாக்கல்ல அது ; கபட மொழி.

ஆண்டி: கண்ணன் காட்டிய வழியாமே?

சாது : இல்லை ; கயவர் வெட்டிய படுகுழி. அப்பா! மராட்டியத்திலே புதிய சக்தி பிறந்திருக்கிறது. மறுமலர்ச்சி ஏற்பட்டிருக்கிறது. வர்ணாஸ்ரமம் வீழ்கிறது. சமரசம் பிறந்துவிட்டது. சண்டாளன், சர்மா என்னும் பேதம் இனி இராது. அனைவரும் சமம் அனைவரும் சமம்.

ஆண்டி : அழகான ஆரூடம். ஆனால், அது பலிக்காது. இன்பக் கனவு காண்கிறீர் ஐயா தங்களுடைய உபதேசத்தையும் ஒரு நூலாக்கி வைத்துக் கொள்வார்கள். ஏட்டுச்சுரை, காதுக்கு இனிப்பு, வாய்க்குப் பயனில்லை.

படிக்க:
புல்வாமா தாக்குதல் முதல் அபிநந்தன் விடுதலை வரை மோடி என்ன செய்தார்?
பள்ளி திறக்கப் போகிறது – ஆசிரியர் தயாராவது எப்படி ?

சாது : தம்பி! விதை தூவி வருகிறோம். விளையும் பயிர் முளையிலே என்பது போல, இப்போதே சமரச மணம் வீச ஆரம்பித்து விட்டது. நிச்சயம் மாறுதல் ஏற்படும்
என் மொழி கேள். பொறுமை கொள்.

ஆண்டி : பொறுமை? ஐயா! பொல்லாங்கு ஏதும் செய்யாது, பிறருக்காக உழைத்துவிட்டு, உருமாறி, உள்ளங்குமுறி , ஒண்டக் குடிசையின்றி, ஒட்டாண்டியாகி ஓலமிட்டுக் கிடக்கிறோம். இன்று நேற்று முதல் அல்ல; பல தலைமுறைகளாகக் கொடுமைகளைச் சகித்தோம்; வறுமையால் வாடினோம். வஞ்சகரால் வீழ்ந்தோம். வாழ்வே பெரும் சுமை எங்களுக்கு? இம்சிக்கப்படும் நாங்கள், இழிவாக நடத்தப்படும் நாங்கள், ஊரிலே உரிமையோடு உலவ அனுமதிக்கப்படாத நாங்கள், மனித உரிமையும் தரப்படாது, குளத்திலே குளிக்கவும், உரிமையும் பெற முடியாத நாங்கள், பொறுமையாய் இருக்க வேண்டும் பொறுத்துக் கொள்ள வேண்டும்! காலின் கீழ் நசுக்கப்படும் நாங்கள் பொறுத்துக் கொள்ள வேண்டும்.

காலில் வெள்ளெலும்பு முளைத்த நாளாய் அடிமைக்காரனாக இருந்து பாடுபட்டுக் கிடக்கும் நாங்கள் பொறுமையாக இருக்க வேண்டும். அற்புதமான யோசனை, பாம்பின் வாயிலே சிக்கிய தேரைக்கும், புலியின் பிடியில் சிக்கிய மானுக்கும், போய்ச் செய்யும் இந்தப் போதனையை! பொறுமையாம் பொறுமை. பொறுத்ததெல்லாம் போதாதா? இவ்வளவு தாம் உம்மால் முடியும். எங்களிடம் பொறுமையின் அருமையைப் பற்றி உபதேசிப்பீர். எம்மை மிருகங்களினும் கேவலமாக நடத்தும் கொடியோருக்கு அன்பின் பெருமையைப் பற்றிப் பேசுவீர். இருவரிடமும் மறுமையின் மேன்மையைப் பற்றிப் பேசுவீர். ஆனால் உரிமைப் போருக்கான வழி உரைக்க அறியீர். அது அறிந்திருந்தால் இந்தக் காவியும், கமண்டலமும் கையிலிராது.
(போகிறான்.)

சாது : தம்பி கொஞ்சம் நில்!
(போனவன் திரும்பி வந்து சற்றுக் கோபத்துடன்)

மாதிரிப் படம்

ஆண்டி : ஆமாம் இன்னும் ஒன்று சொல்ல வேண்டும் உமக்கு . மிருகங்களிலே பொறுமையைப் பூஷணமாகக் கொண்ட கழுதையைக் கண்டவர் அடிப்பர்.
ரோஷத்துடன் உறுமும் புலியிடமோ கிலி கொள்வர். அய்யா எங்களை பூதேவர்கள் என்ற புரட்டர்கள், தங்கள் ஆகமம் என்னும் அரக்கு மாளிகைக்கு அழைத்துச் சென்று கைகால்களைக் கட்டிப்போட்டு விட்டார்கள். தாங்கள் அந்த அரக்கு மாளிகையிலே ஒரு அகல் விளக்கு ஏற்றி வைக்கிறீர்கள்! ஆபத்துதான் உண்டாகும் அதனால், ஐயா சாது! சன்னியாசிக் கூட்டதவராகிய நீங்கள் உபதேசம் செய்கிறீர்கள். சகித்துக் கொள்ளப்பா சமரசம் உதயமாகும் பாரப்பா! சகலரும் சர்வேஸ்வரன் கண்முன் ஒன்றுதானப்பா என்று உபதேசம் செய்கிறீர்கள்.

நாட்டு விடுதலைப் போர் வீரர்களோ அடிமைத்தனம் அழிந்து பட்டதும், எதிரி விரட்டப்பட்டதும், சுய ஆட்சி கிடைத்ததும் ஏழையென்றும், அடிமையென்றும் எவனுமில்லை சாதியில் எல்லோரும் ஓர் குலம் ஒருவரை ஒருவர் தாழ்வாகக் கருதும் மடமையும், கொடுமையும் ஒழிக்கப்படும். உறுதியாக இதை நம்பு என்று நல்வாக்கு கொடுக்கின்றார்கள். உங்கள் உபதேசமும், அவர்கள் உறுதிமொழியும் இதோ இந்தக் கொடுமையைப் போக்கவில்லையே, அய்யா! நாடு விடுதலை பெற்று என்ன பயன்? என்ன பயனைக் காண்கிறோம்? அன்னிய ஆதிக்கம் ஒழிக்கப்பட்டு என்ன பயன்? என்ன பயனைக் காண்கிறோம் நாங்கள் ? எங்களுடைய இழிவு போகவில்லையே எங்கள் நிலை உயரவில்லையே. அய்யா !
(போகிறான்.)

(தொடரும்)

நன்றி: Project Madurai

3 மறுமொழிகள்

  1. இன்று இந்த கொடுமையை செய்வது பிராமணர்கள் இல்லை, மறு சாதிக்காரர்கள்தான். இதற்கு என்ன செய்வது??

    • அதற்க்கு காரணம் பாப்பான்கள் தான், அவர்கள் தொடங்கியதை இப்போ மற்றவர்கள் பின்பற்றுகின்றனர்

  2. வினவில் மாக்சீம் கார்க்கியின் ”தாய்” நாவல் தொடராக வந்தபோது அண்ணாவின் இந்த நாடகத்ததை தொடராக வெளியீட வேண்டும் என பின்னூட்டத்தில் சொல்லியிருந்தேன். இப்பொழுது அது நடந்திருக்கிறது. வினவுக்கு என் நன்றிகள்

Leave a Reply to ashak பதிலை ரத்து செய்க

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க