ந்திய ரிசர்வ் வங்கியின் முன்னாள் கவர்னர் ரகுராம் ராஜன் முதலாளித்துவம் தீவிர அச்சுறுத்தலுக்கு உள்ளாகியிருக்கிறது என கூறியுள்ளார்.   2013 செப்டம்பர் முதல் 2016 செப்டம்பர் வரை கவர்னராக பணியாற்றிய ரகுராம் ராஜன், மோடி அரசின் தவறான பொருளாதார நடவடிக்கைகளால் அதிருப்தியுற்று வெளியேறினார்.

தற்போது, சிகாகோ பல்கலைக்கழக பேராசிரியராக பணியாற்றும் ராஜன், பிபிசி வானொலி 4-க்கு அளித்த பேட்டியில் உலகெங்கிலும் உள்ள அரசுகளால் பொருளாதாரத்தை மட்டும் கருத்தில் கொண்டு, சமூக சமத்துவமின்மையை அவர்களால் புறக்கணிக்க முடியவில்லை என தெரிவித்துள்ளார்.

ரகுராம் ராஜன்.

“முதலாளித்துவம் தீவிர அச்சுறுத்தலுக்கு உள்ளாகியிருக்கிறது என நான் கருதுகிறேன். ஏனென்றால், அது பலருக்கு வழங்குவதை நிறுத்திவிட்டது. மேலும், அது நிகழும்போது, அந்த பலர் முதலாளித்துவத்துக்கு எதிரான கிளர்ச்சியில் ஈடுபடுவார்கள்” என அவர் தனது வானொலி பேட்டியில் குறிப்பிடுகிறார் ரகுராம் ராஜன்.

சமமான வாய்ப்புகளை வழங்க மறுப்பதால் முதலாளித்துவம் உடைந்து கொண்டிருப்பதாக ராஜன் தெரிவிக்கிறார்.  “அது சமமான வாய்ப்புகளை வழங்கவில்லை. உண்மையில் வீழ்ச்சியுறும் மக்கள் மிகவும் மோசமான சூழலில் இருக்கிறார்கள். அனைத்து உற்பத்தியை சமூகமயமாக்கும்போது சர்வாதிகார ஆட்சிகள் தோன்றும். ஒரு சமநிலை என்பது தேவை.  நீங்கள் தேர்ந்தெடுக்கவோ தேர்வு செய்யவோ முடியாது.  நீங்கள் செய்ய வேண்டியது என்னவென்றால் வாய்ப்பை மேம்படுத்துவதுதான்” என அவர் பேசினார்.

படிக்க:
பொள்ளாச்சி கொடூரம் : தெருவில் நிறுத்தி தண்டனை கொடு ! தீவிரமடையும் மாணவர் போராட்டம் !!
சிறப்புக்கட்டுரை : மூலதனத்தின் வரலாறும் வரலாற்றில் மூலதனமும்

முன்பு நடுத்தரமான கல்வி பெற்ற ஒருவரால் நடுத்தரமான பணியில் சேர முடிந்தது என்கிற ராஜன்,  2008-ம் ஆண்டு உலக பொருளாதார நெருக்கடிக்கு பிறகு இந்தச் சூழல் மாறி, சிக்கன நடவடிக்கைகளுக்கு இட்டுச் சென்றது என்கிறார்.

“இப்போது, நீங்கள் வெற்றி பெற வேண்டுமானால், உங்களுக்கு நல்ல கல்வி தேவை. எதிர்பாராதவிதமாக, உலகளாவிய வர்த்தகம் மற்றும் உலகளாவிய தகவல்களின் தாக்கத்தால் இந்த  சமூகங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.  இதனால் பள்ளிகளில் மோசமடைந்துள்ளன, குற்றங்கள் அதிகரிக்கின்றன, சமூக நோய்கள் அதிகரிக்கின்றன மேலும் இவற்றால் தங்களுடைய சமூக உறுப்பினர்களை உலக பொருளாதாரத்துக்கு தயார்படுத்த முடிவதில்லை”.

சமீபத்தில் வெளியான மதிப்பீடு ஒன்று  மேலும் ஒரு உலக கடன் சரிவு (global credit downturn-க்கு வாய்ப்பிருப்பதாக கூறியது. உலக நிதி நெருக்கடியிலிருந்து உலகளாவிய கடன்கள் 50% அதிகரித்துள்ளதாக அந்த மதிப்பீடு கூறியது.  2008-ம் ஆண்டிலிருந்து  அரசுகளின் கடன் 77% அதிகரித்திருப்பதாகவும் கார்ப்பரேட்டுகளின் கடன் 51% அதிகரித்திருப்பதாகவும் தெரிவித்தது.

2008-ம் ஆண்டு பொருளாதார நெருக்கடியைக் காட்டிலும் இது கடுமையானதாக இருக்கும் என திறனாய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். உலகப் பொருளாதாரம் குறித்து விவாதித்த ராஜன், வர்த்தகம் செய்யப்படும் பொருட்களுக்கான வரம்புகளை விதிப்பதில் சவால்கள் இருப்பதாக தெரிவிக்கிறார்.

உலக முதலாளித்துவம் இன்று தவிர்க்கவியலாமல் தனது மக்கள் நல அரசு எனும் வேடத்தைக் களைத்து தனது அசல் முகத்தில் பாசிச அரசாக நம் முன் நிற்கிறது. முதலாளித்துவம் என்றைக்குமானது, நிலையானது என்று பரப்பப்பட்டுவந்த கூற்றிற்கு எதிராக இன்று முதலாளித்துவ பொருளாதார அறிஞர்களே கூக்குரலிடுகின்றனர். ரகுராம் ராஜன் அதில் ஒரு குரலாய்க் கூறுகிறார். “முதலாளித்துவம் உடைந்து கொண்டிருக்கிறது”. அவர்கள் சொல்லிவிட்டார்கள்.. மாற்றை நோக்கி நாம் அடியெடுத்து வைக்க வேண்டிய நேரம் இது !


அனிதா
நன்றி: தி இந்து