நியூசிலாந்தின் தொழிலாளர் கட்சியை சேர்ந்த 37 வயதான ஜேசினா ஆர்டர்ன் (Jacinda Ardern) அந்நாட்டின் புதிய பிரதமராக கடந்த 2017-ம் ஆண்டு தெரிவு செய்யப்பட்டிருந்தார். அப்போது நாட்டிலுள்ள ஏழைகளின் வாழ்க்கையை முன்னேற்றுவதில் முதலாளித்துவம் அப்பட்டமாக தோற்றுவிட்டதாகவும் வீடற்றவர்களின் எண்ணிக்கை அதிகரித்ததற்கும் தொழிலாளர்களின் குறைவான கூலிக்கும் சந்தைப் பொருளாதாரம் தான் காரணம் என்றும் விமர்சித்தார்.

ஜேசினா ஆர்டர்ன் (Jacinda Ardern).

பொருளாதாரத்தை அளவிடுவதில் புதிய மாற்றங்கள் தேவை மற்றும் மக்கள் பொருள் பொதிந்த வாழ்க்கை வாழும் வகையில் புதிதாக மாற்றங்கள் கொண்டு வரப்படும் என்றும் கூறினார். குறைந்தபட்ச கூலியை உயர்த்துதல், குழந்தைகள் வறுமையை ஒழிக்க சட்டத் திருத்தம் மற்றும் குறைந்த செலவில் ஆயிரக்கணக்கான வீடுகளை கட்டித் தருவதாகவும் ஆர்டர்ன் வாக்குறுதிகளை கொடுத்திருந்தார்.

நியூசிலாந்தில் 2017-ம் ஆண்டு நடந்த தேர்தலில் அறுதி பெரும்பான்மை யாருக்கும் கிடைக்காததால் நாட்டை யார் வழி நடத்துவது என்பது குறித்து தெரிந்து கொள்ள செப்டம்பர் மாதம் 23-ம் தேதி முதல் நியூசிலாந்து மக்கள் காத்திருந்தனர். இந்நிலையில் ஆர்டர்னின் தொழிலாளர் கட்சிக்கு பல்வேறு கட்சிகளும் ஆதரவு தெரிவித்துள்ளன.

பிரதமராக தேர்வு செய்யப்பட்ட பிறகு, ‘தி நேசனு’க்கு அளித்த பேட்டியில் முதலாளித்துவம் மக்களை ஏமாற்றி விட்டதாக ஆர்டர்ன் கூறியிருந்தார். “நம்முடைய பல்லாயிரக்கணக்கான குழந்தைகள் வறுமையில் தள்ளப்பட்டிருப்பதை முற்றிலும் முதலாளித்துவத்தின் தோல்வி என்று குறிப்பிடாமல் வேறு எப்படி குறிப்பிடுவது ?” என்றார்.

“சந்தைப் பொருளாதாரத்தை நம்பி நீங்கள் (முதலாளித்துவ ஆதரவு எதிர்க்கட்சிகள்) இருக்கும் போது அதில் உள்ள பிரச்சினைகளையும் எங்கெல்லாம் சீர்திருத்தம் தேவைப்படுகிறது என்பதையும் நீங்கள் வேண்டுமென்றால் ஒப்புக்கொள்ளாமல் இருக்கலாம். ஆனால், இது நம்முடைய மக்களை ஏமாற்றியிருக்கிறதா என்றால், ஆம்.. ஏமாற்றி இருக்கிறது” என்றார் ஆர்டர்ன்.

பொருளாதாரத்தை முன்னேற்றுவதற்கு மொத்த உள்நாட்டு உற்பத்தி என்ற அளவுகோலைத் தாண்டி வேறு முறைகளையும் மேற்கொள்ள தன்னுடைய அரசாங்கம் முயற்சி செய்யும் என்றும் கூறினார்.

நியூசிலாந்தில் கிறிஸ்ட்சர்ச் நகரில் சமீபத்தில் இரண்டு பள்ளிவாசல்களில் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 50 முஸ்லீம்கள் கொல்லப்பட்டனர். இப்பயங்கரவாத தாக்குதலை கடுமையாக சாடினார் ஆர்டர்ன் “தாக்குதல்களில் கொல்லப்பட்ட பலர் நியூசிலாந்திற்கு அகதிகளாக வந்தவர்களாகக் கூட இருக்கலாம். அவர்கள் நியூசிலாந்தை தாய்நாடாக நம்பி வந்துள்ளனர். அவர்களுக்கு நியூசிலாந்துதான் தாய்நாடு. அவர்கள்தான் நாம். அவர்களுக்கு எதிராக தாக்குதல் நடத்தியவன் கண்டிப்பாக நம்மில் ஒருவன் கிடையாது” என்று கடுமையாக அத்தாக்குதலை சாடியுள்ளார்.

படிக்க:
தீஸ்தா செதால்வாட் : அரசியலமைப்புச் சட்டத்தின் காலாட்படை வீரர்
நாடார் வரலாறு கறுப்பா ? காவியா ? அச்சு நூலை ஆன்லைனில் வாங்கலாம்

முதலாளித்துவ நெருக்கடி ஒருபுறத்தில் பாசிசத்தை வளர்த்து வருகிறது. இடதுசாரிகளும் மற்றும் பாசிச எதிர்ப்பாளர்களும் ஒருபுறத்தில் வளர்ந்து வருகின்றனர். அரசியல் சித்தாந்தம் மட்டுமல்ல, சமூகம், கட்சிகள் என அனைத்திலும் முரண்பாடுகள் கூர்மையடைந்து வருகின்றன. நாம் எந்தப் பக்கம் நிற்கப் போகிறோம் ?


கட்டுரையாளர் : Chris Baynes
தமிழாக்கம் : சுகுமார்
நன்றி : independent

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க