மிழ் சமூக ஊடகங்களில் ‘தமிழர் பண்பாடு’ என்ற பெயரில் எதை உண்ண வேண்டும், எதை உடுத்த வேண்டும், எதை வணங்க வேண்டும் என ஆரம்பித்து ‘முன்னோர்கள் ஒன்றும் முட்டாள்கள் இல்லை’ என முடிக்கும் பதிவுகளை அதிகம் காண முடியும்.

இப்போது அவற்றையெல்லாம் தூக்கி சாப்பிடும் வகையில் ‘இந்துத்துவ’ கும்பல் அறிவியலை துணைக்கு அழைத்து பல கட்டுக்கதைகளை பரப்பத் தொடங்கியிருக்கிறது. அதில், முத்தாய்ப்பாய் எழுதப்பட்ட முகநூல் பதிவு ஒன்று கடந்த இரண்டு நாட்களாய் விவாதிக்கப்பட்டு, பகிரப்பட்டு வருகிறது. எழுதியவர் ஸ்ரீரங்கத்தான் என தன்னை விளித்துக்கொள்ளும் ராமன் ஐயங்கார் என்பவர்.

ராமன் ஐயங்கார் புகைப்படம் முகநூல் பக்கத்திலிருந்து.

இதுபோன்ற கட்டுக்கதைகள், அவதூறுகளை எழுதி, இழிபுகழ் பெற்று, சிறை சென்ற சங்கி கல்யாணராமன், ‘வேந்தர் டிவி’யின் விவாத நிகழ்ச்சியை நடத்தும் நெறியாளர் ஆகிவிட்டபடியால் இனிவரும் ஐந்தாண்டுகளில் ராமன் ஐயங்கார் மேன்மேலும் உயரத்துக்குச் செல்லக்கூடிய பிரகாசமான வாய்ப்பு அவருடைய பதிவுகளில் தெரிகிறது. எனவே, அவரை பதிவு செய்யும் வரலாற்று கடமையும் நமக்கு உள்ளது.

ராமன் ஐயங்கார் அப்படி என்ன எழுதிவிட்டார்? எதற்காக தமிழ் முகநூல் பதிவர்கள் அவருடைய பதிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்? பகடி செய்கின்றனர்?

ராமன் தன்னுடைய முகநூல் பக்கத்தில் இப்படி எழுதியிருக்கிறார்…

இந்து மதத்தில் மட்டுமே அறிவியலையே உணர முடியும். எவன் ஒருவன் இந்துவாக பிறந்து – இந்துவாக வாழ்கிறானோ அவனுக்குத்தான் நமது மத சடங்குகளில் உள்ள அறிவியல் புரியும். என் மூதாதயர்கள் நாசா விஞ்ஞானிகளை விட மேலானவர்கள்.

இதோ இதை படியுங்கள்:

கணவன் உண்ட அதே இலையிலோ அல்லது தட்டிலோ மனைவி உண்ண காரணம் !!

கணவனுக்கு பரிமாறப்பட்ட உணவை கணவன் உண்ணும்போது எல்லாவற்றையும் உண்ண மாட்டான், அவனுக்கு சில உணவுகள் பிடிக்கும் சில உணவுகள் பிடிக்காமல் இருக்கும் அப்படி பிடிக்காமல் இருக்கும் உணவை அவன் அப்படியே மிச்சம் வைத்து விடுவான்.

அவனுக்கு பின் அதே இலையில் அல்லது தட்டில் உணவு உண்ணும் மனைவிமார்கள் கணவன் மிச்சம் வைத்த அவனுக்கு பிடிக்காத உணவு வகைகளை எளிதாக அடையாளம் கண்டு மறுமுறை சமைக்கும் பொழுது அந்தந்த உணவுகளை சமைக்காமல் தவிர்த்து விடலாம். பிடித்ததை அடுத்த முறை நிறைய பரிமாறலாம். அதற்காக ஏற்படுத்தப் பட்டதே இந்த பழக்கம் ஆகும். கணவனில் எச்சிலில் இருக்கும் புதிய ஜீன்கள் சாப்பாட்டின் மூலம் மனைவியின் உடலில் கலந்து அது அவள் பாலூட்டும் குழந்தைக்கு கிடைக்கவே (ஜீன் அப்டேசன்) இந்த ஏற்பாடு.

என்னதான் கணவனின் ஜீன் குழந்தைக்குள் இருந்தாலும் அது லேட்டஸ்டாக அப்டேட் ஆகவே இந்த ஏற்பாடு. மேலும் இது வயிற்றிற்குள் இருக்கும் குழந்தையின் முதல் ஆறு மாதத்திற்குள் உண்டாகும் வளர்சிதை மாற்றங்களுக்கும், பிறந்தபின் முதல் ஆறு மாதங்களுக்கு ஏற்படும் வளர்ச்சிக்கும் மிக மிக அத்தியாவசமாகிறது என்று மேல்நாட்டு அறிவியல் வல்லுனர்கள் கண்டறிந்து ஆச்சரியப்படுகின்றனர்.

இபொழுது சொல்லுங்கள் கணவன் உண்ட அதே இலையில் மனைவி உண்டால் ஆணாதிக்கமா?.

அக்மார்க் சங்கியின் குரலாக ஒலிக்கும் இவருடைய பதிவில் 600-க்கும் மேற்பட்டோர் பின்னூட்டம் இட்டு கழுவி ஊற்றிய பிறகும், ராமன் தன்னுடைய அறிவிலித்தனத்தைப் பற்றி கிஞ்சித்தும் கவலைப்படவில்லை.

***

இந்தப் பதிவுக்கு பத்திரிகையாளர் கார்த்திகா குமாரி எச்சிலை உண்டால் பாக்டீரியாதான் பகிரப்படும் என அறிவியல் விளக்கம் தர முயற்சித்திருக்கிறார்.

“Dna வை அவ்வளவு எளிதாக மாற்ற முடியாது. சாப்பாடு, kissing மூலமா dna, பாக்டீரியா மட்டும் பகிரப்படும். ஆனால் நம் digestive system ல இருக்கற enzymes and acidic nature அதை எளிதில் கரைச்சிடும். அதிகபட்சம் 1 மணி நேரம் அதன் ஆயுள். வைரஸ்கள் மட்டுமே நம்முடைய dna வை உடைச்சு அதன் rna வை புகுத்தி genome sequence இல் மாற்றம் செய்யக் கூடியவை.

கேன்சருக்கான human pappilloma வைரஸ், hepatitis வகைகள் இதெல்லாம் நம்ம genome sequence ஐ மாற்றி அடுத்தடுத்த தலைமுறைக்கும் தாவக் கூடியவை… if we survive from them. உணவில் இருந்து dna போகுதோ இல்லையோ rotovirus போக நிறையவே வாய்ப்பு இருக்கு… அப்படின்னா முன்னோர்கள் முட்டாள்களா ஐயா?

டிஸ்கி 1: இதை எல்லாம் இப்பவே வெளக்கலைன்னா, எதிர்க்கலைன்னா cbse பாடத்திலேயே சேர்த்திருவாங்களோன்னு பயம் தான்… எச்சிலில் dna கிடையாதான்னு கேட்கிற நிறைய பின்னுட்டங்களை பார்த்திட்டேன்.

டிஸ்கி 2: ஆனாலும் இவனுக போற போக்கிலே அடிச்சு வுடறதுக்கெல்லாம் நாம கொஞ்சம் அதிகம் மெனக்கெட வேண்டி இருக்குன்ற வருத்தம் இல்லாம இல்ல”

***

அனைத்து மதங்களும் ஆணாதிக்க குப்பைகள் என்கிறார் மருத்துவர் ஷாலினி, தன்னுடைய முகநூல் பதிவில்,

“கணவன் எச்சிலை சாப்பிடுவதில் ஆரம்பித்திருக்கிறார்கள்… அப்படியே, பதிவிரதா தர்மம், பாலிய விவாகம், விதவை முறை, சதி ஏறுதல், முக்காடு அணிதல், பெண் கல்விக்கு தடை என்று படிப்படியாக நம்மை “இந்துத்துவா” என்கிற பெயரில் அப்படியே பின்னால் இழுத்துக்கொண்டு போய்விடுவார்கள்.

ராமசாமியும், அம்பேட்கரும், நேருவும் போராடி எமக்கு பெற்றுத்தந்த வாழ்வை இந்த கழிசடைகள் கெடுத்துவிடும் போலிருக்கிறது! எல்லா மதங்களும் பெண்களுக்கு எதிரானவை…இந்து மதமாவது பொந்து மதமாவது” என்கிறார்.

***

கணவன் உண்ட தட்டில் மனைவி உண்டால் ஜீன் அப்டேட் ஆகும் என சொல்வது கலாச்சார, பண்பாட்டு அயோக்கியத்தனம் என்கிறார் ஆனந்தி. முகநூலில் அவர் எழுதியுள்ள பதிவில்,

“பெண்ணின் பிறப்புறுப்பில் செலுத்தப்படுகிற ஆணின் விந்துதான் குழந்தை பிறப்பிற்கு காரணம் என்ற அறிவியலை கண்டுபிடித்தவர்கள் ஆண்வழி சமுதாய மக்கள். பெண்ணின் மாதவிடாய் சுழற்சிக்கும் குழந்தை பிறப்பிற்கும் சம்பந்தம் உண்டு என்ற அறிவியல் ஆறாவது அறிவிற்கு எட்டினாலும் அதை லாவகமாக ஓரங்கட்டி வைத்து,  பெண்ணிற்கு அவள் வயிற்றில் பிறக்கும் குழந்தை மீது உரிமை இல்லை என்று ஆணாதிக்க ஆண்வழித் திமிரை நிலைநாட்ட மதங்கள் அத்தை மகளையும், சித்தி மகளையும் திருமணம் செய்ய வழிவகுத்தது.

அதாவது பெண் வெறும் குழந்தை பெறும் carrier உடல் மட்டுமே… பொருள் வாங்க எடுத்து செல்வோமே plastic bag, கூடை… அதுபோல. வெறும் பொருள். Object. Sex object.

ஒரே குடும்பத்தில், ஒரே பகுதியில், ஒரே சாதியில் திருமணம் செய்யாதீர்கள்; மந்தமான பிள்ளைகள் பிறப்பார்கள் என்று அறிவியல் அறிவுறுத்திக்கொண்டே இருக்கிறது. ஆனாலும் பணக்காரர்கள், ஏழைகள் என்ற பாகுபாடின்றி அறிவியல், சமூக அறிவியல் பாடங்களில் மனப்பாடம் செய்து மார்க் வாங்கிய மடையர்கள் இன்றும்கூட சொத்து விட்டுப் போகக் கூடாது, சொந்தம் விட்டுப் போகக் கூடாது என்று அத்தை, மாமா மகள்களை, ஒரே சாதிப் பெண்ணை வளைத்துப் போடும் முட்டாள்தனமே தொடர்கிறது.

இவனுங்க அறிவு எச்சில் இலை gene updateல் நின்று விடுவது வெறும் அறியாமை அல்ல. அயோக்கியத்தனம். இந்த கலாச்சார, பண்பாட்டு அயோக்கியத்தனத்தை எதிர்ப்போம் பெண்களே.” என்கிறார்.

படிக்க:
♦ மீண்டும் கும்பல் வன்முறைகளைத் தொடங்கிய இந்துத்துவ கும்பல் !
♦ “ராடாரேந்திர மோடி !” – மோடியை வறுத்தெடுத்த வலைத்தளவாசிகள் !

***

உயிரியல் படித்திருக்கும் ஷோபா நாராயணன்,

“திரு ராமன் ஐயங்காரே… கண்ண தொறந்திட்டிங்க. ஏழு வருசம் உயிரியல் படிச்சேன். பாழாப்போன புரபசருங்க விந்தணுவில் இருக்கற ஜீன்கள் தான் குழந்தைக்கு போகும்னு பொய்ய சொல்லி நானும் அதையே எழுதி யுனிவர்சிட்டி ராங்கெல்லாம் வாங்கிட்டேனே.. மேலும் தனக்கு எது புடிக்காதுனு சொல்லக்கூட தெரியாத ஒரு வாயில்லாப் பூச்சிகளான ஆணினத்தை தவறா பேசிட்டேனே.. எச்சில் இலையில சாப்பிடறது சுகாரதக்கேடுனு வேற டாக்டருவோ தப்பு தப்பா சொல்லிட்டாங்கோ.. அதெல்லாம் கிடக்கட்டும் ரெண்டே டவுட்டு.. கிளியர் பண்ணுங்க சார்.

என் கணவரோட எச்சில் இலைல சாப்பிட்ட பசு மாடு போட்ட கன்னுக்குட்டி எங்க வீட்டு சொத்தா? கோனாருதா? ஏன் ஜீன் பாருங்க.. அடுத்து சார்வாள் நாசாவில் என்ன போஸ்ட்டில இருக்கிங்க? ஏன்னா அறிவு வேஸ்ட் பண்ணப்பிடாது.” என பகடி செய்திருக்கிறார்.

***

அதிஷா

“வீட்டில் நாய்சாப்பிட்ட தட்டில் இருக்கிற மிச்சத்தை நாமும் சாப்பிட்டால் அந்த நாய்க்கு என்ன பிடித்திருக்கிறது என்பதை ஈஸியாக தெரிந்துகொள்ளலாம். அதுக்கு எந்தெந்த ஐட்டங்கள் பிடிக்கவில்லை என்பதை புரிந்துகொண்டு இனி வரும் காலங்களில் அதையெல்லாம் நாம் சமைக்கும்போது தவிர்த்துவிடலாம்.

அதோடு, அந்த நாயின் எச்சில் பட்ட அந்த உணவை சாப்பிடும்போது நாயின் ஜீன் நம் உடம்புக்கு ட்ரான்ஸ்பர் ஆகி அதன் நன்றியுணர்வு நாயின் எனர்ஜி பவர் எல்லாம் நமக்கும் வந்துவிடும் என்று ரமணன் ஐயங்கார் எனும் அறிவியல் அறிஞர் வேத சாஸ்திரங்களை வைத்து கண்டுபிடித்துள்ளார். ”நன்றியுள்ள இந்துமதம்” என்கிற நூலில் இதை பதிவு செய்துள்ளார்.

இந்த அரிய கண்டுபிடிப்பை மறைக்கும் முயற்சிகளில் நாசா விஞ்ஞானிகள் இறங்கியுள்ளார்கள். அதிகம் ஷேர் செய்து இந்த தமிழனின் சாதனையை பரப்புங்களேன் பிரண்ட்ஸ்.” என கேலி செய்து எழுதியுள்ளார்.

***

ராஜ் சிவா

“எனக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை. நான் வாழும் ஒட்டுமொத்த சமூகத்திடமிருந்தே சமூக ரத்து (விவாகரத்து போல சமூக ரத்து) கோரலாமா என்று சிந்திக்கிறேன். இதுபோல, என்னை அப்பப்போ சிந்திக்க வைக்கும் செயல்கள் நடக்கும்.

கடந்த சில நாட்களுக்கு முன்னர், திருநள்ளாறு சனீஸ்வரன் கோவில்-சாட்லைட் விவகாரம் பாடசாலை பாடநூலில் இணைக்கப்பட்ட அபத்தம் நடந்தது. இதுபற்றி நான் ஃபேஸ்புக்கில் இணைந்த சில நாட்களிலேயே, அதாவது பல வருடங்களுக்கு முன்னரே தெளிவாக எழுதியிருந்தேன். ஆனால், இவ்வளவு வருடங்கள் கடந்தும் உயிருடன் இந்தக் கருத்து இருக்கிறது. அடுத்த சந்ததிக்கும் கடத்தப்படுகிறது.

இப்போ, எச்சிலால் மனைவிக்கு ஜீன் மாற்றம் நடைபெறுமாம். அடப்பாவிகளா! நீங்கள் சொல்வது சரியென்றால், இப்படிக்கூட யோசிக்க மாட்டீர்களா? அவர்கள் கணவன் மனைவி என்றால், உடலுறவு கொள்வார்களே! எதுக்கு எச்சில் உணவை உண்ணனும்? கொஞ்சம்கூட யோசிக்க மாட்டீங்களா? இதில் நாஸாவை வேறு சாட்சிக்கு அழைத்து..” என நொந்து கொள்கிறார்.

***

முனைவர் அன்புசெல்வம் எழுதியுள்ள பதிவு…

“புருசன் சாப்பிட்ட இலையில் மனைவி சாப்பிட்டா குழந்தைக்கு அப்பாவின் ஜீன் அப்டேட் ஆகுதாம்யா?? இதப் படிச்ச ஒரு இந்துவிரோதி கேட்கிறார்… இதுக்கு எதுக்கு எச்சில் இலை… தகப்பனார் நேரடியாவே தெனமும் கொழந்த வாயிலயே மூணுதடவ துப்பலாமேன்னு… சரியாத்தான கேட்கிறார்…”

படிக்க:
♦ ஆரியபட்டரின் அறுபதாவது சீடர் ஸ்டீபன் ஹாக்கிங் !
♦ ஆர்.எஸ்.எஸ் மாட்டு மூத்திர விஞ்ஞானிகளின் அரிய கண்டுபிடிப்புகள் !

***

ஆவணப்பட இயக்குநர் திவ்ய பாரதி, மனைவி உண்ட தட்டில் கணவன் உண்டு வந்தால் கிடைக்கும் ‘நன்மை’களை பட்டியலிட்டுள்ளார்.

“மனைவி உண்ட இலையில்/தட்டில் கணவன் உண்டு வந்தால் கிடைக்கும் நன்மைகள்…

1) முதலில் ஒரு இலை/தட்டு மிச்சமாகும்
2) அந்த தட்டை கடைசியில் கணவன் மட்டும் கழுவி வைத்தால் போதுமானது. (தண்ணீர் சிக்கனம்)
3) “பஞ்சு மிட்டாய் அஞ்சு ரூபாய் நீ பாதி தின்று மீதி தந்தால் லட்ச ரூபாய்” என்ற பாடலுக்கிணங்க மனைவி மிச்சம் வைத்ததையும் சேர்த்து உண்டு வந்தால் அந்த கணவன் மோட்சம் அல்லது உச்சம் பெறுவான்.
4) மனைவி சாப்பிட்ட எச்சில் இலையில் மீந்து இருக்கும் அவளின் Nail polish/மெஹந்தி/மருதாணி துகள்களையும் சேர்த்து உண்டு வருவதால் “”ஆண்மை*#**” அதிகரிக்கும். மேல்நாட்டு அறிவியல் வல்லுநர்கள் கண்டுபிடித்து உரைத்தது…

இப்போது சொல்லுங்கள் மனைவி உண்ட அதே இலையில் கணவன் உண்டால் பெண்ணாதிக்கமா….? ” எனவும் கேட்கிறார்.

***

வடமாநில சங்கிகளைப் போல இந்து மத போர்வையில் அறிவிலித்தனத்தை திணிக்க இங்கேயிருக்கும் சங்கிகள் தொடங்கியிருக்கிறார்கள்.

ஊடகங்கள் இந்த சங்கிகளுக்கு வாய்ப்பளித்து இவர்களுடைய மூடக் கருத்துக்களுக்கு அங்கீகாரம் அளிக்கும் கூத்துக்களும் நடக்கலாம். முற்போக்கு மரபு சொல்லிக் கொள்வதோடு மட்டுமல்லாது இந்த விச கருத்துக்களை ஒருமித்துக் களைவது நம் முன் உள்ள கடமை.


தொகுப்பு : அனிதா