திருக்குறள் – புகழ்பெற்ற பழைய உரையாசிரியர்கள் அனைவருடைய உரைகளும் ( பரிமேலழகர் உரைக்கு விளக்கமும்) PDF வடிவில் 3400 பக்கங்கள் உங்கள் கைகளில்…

நண்பர்களே…

பொ.வேல்சாமி

திருக்குறளுக்கு பழங்காலத்திலேயே பல வேறுபட்ட கருத்துக்களைக் கொண்ட ஆசிரியர்கள் உரை எழுதி இருந்தனர். அவர்களுள் 1917-ம் ஆண்டு வரை பரிமேலழகர் உரையைத் தான் அச்சிட்டார்கள், படித்தார்கள். 1917-ல் மணக்குடவர் உரையை வ.உ.சிதம்பரம் பிள்ளை வெளியிட்டார். பரிமேலழகருக்கு அடுத்தப்படியாக அச்சில் வந்த உரை இதுதான்.

1925-ல் பொன்னுசாமி நாட்டார் என்பவரால் மணக்குடவர் உரை குறிப்பிடத்தக்க சில விளக்கங்களுடன் வெளியிடப்பட்டது. 1945, 1948-ல் திருப்பதியிலிருந்து காளிங்கர் மணக்குடவர் உரை வெளியிடப்பட்டது. திருப்பதியிலிருந்து வெளியிடப்பட்ட இந்தப் பதிப்பில் அறத்துபால் முழுமையாக இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

இந்நிலையில் சிறப்புமிக்க எல்லா பழைய உரைகளையும் முழுமையாக மகாவித்துவான் தண்டபாணி தேசிகர் தன்னுடைய குறிப்புகளுடன் 1950, 1951, 1952-ல் எழுதியதை தருமபுர ஆதினம் 3 தொகுதிகளாக வெளியிட்டது. இத்தொகுதிகளின் திருக்குறள் பரிமேலழகர் உரையில் வந்துள்ள நுட்பமான இலக்கண குறிப்புகளுக்கு சுமார் 500 ஆண்டுகளுக்கு முன்பே காரிரத்தின கவிராயரால் தெளிவான விளக்கம் எழுதப்பட்ட “திருக்குறள் நுண்பொருள்மாலை” நூலும் இணைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

பரிமேலழகர் உரைக்கு நுட்பமாகவும் தெளிவாகவும் ( தங்களுடைய சனாதனத்தையும் விடாமல் ) எழுதப்பட்டு மாணவர்களுக்கு பல ஆண்டுகள் பாடமாக வைக்கப்பட்டிருந்த வை.மு.கோபால கிருஷ்ணமாச்சாரியார் பதிப்பான முழு நூலின் PDF யையும் இத்துடன் இணைத்துள்ளேன். திருக்குறள் முழுமைக்கும் வை.மு.கோபால கிருஷ்ணமாச்சாரியார் விளக்கம் எழுதவில்லை. வை.மு.சடகோப இராமானுாச்சாரியார் 108 அதிகாரங்களுக்கும் மீதியுள்ள பகுதிகளுக்கு வை.மு.கோ எழுதியது காலபோக்கில் நூல் முழுமைக்கும் வை.மு.கோ தான் எழுதியதாக தமிழ் உலகம் ஏற்றுக்கொண்டது.

திருக்குறள் – உரைவளம் : அறத்துப்பால் (பக்.575)

திருக்குறள் – உரைவளம் : பொருட்பால் (பக்.1130)

திருக்குறள் – உரைவளம் : காமத்துப்பால் பக்.539

திருக்குறள் : அறத்துப்பால் மூலமும் பரிமேலழகருரையும் (பக்.316)

திருக்குறள் : பொருட்பால் காமத்துப்பால்களின் மூலமும் பரிமேலழகருரையும் (பக்.840)

பொ.வேல்சாமி : தஞ்சாவூர் கரந்தைத் தமிழ்க் கல்லூரியில் பயின்று புலவர் பட்டம் பெற்றவர். தமிழக வரலாற்று ஆய்வில் ஈடுபாடு கொண்டவர். வரலாற்றுத் தரவுகளை மறுவாசிப்பு செய்வதும் மாற்று வரலாற்றை உருவாக்குவதும் இவரது எழுத்தின் முக்கிய நோக்கம். முகநூலில் தொடர்ச்சியாக எழுதுகிறார்.
எழுதிய நூல்கள்:

  • பொற்காலங்களும் இருண்ட காலங்களும்
  • கோவில் நிலம் சாதி
  • பொய்யும் வழுவும்