இன்றைய காலகட்டத்தில் இந்துத்துவ பாசிசம், நாடு முழுவதிலும் மட்டுமல்ல கல்லூரிகளிலும், பல்கலைக்கழகங்களிலும் ஆதிக்கம் செலுத்தி மாணவர்களிடமும் ஒரு பிரிவினையை ஏற்படுத்துகின்றது.
கடந்தகால நிகழ்வாக டெல்லி பல்கலைக்கழகத்தில் ஏ.பி.வி.பி. மாணவர் அமைப்பு சாவர்க்கரின் சிலையை வைத்து சாவர்க்கரை ஒரு தியாகி போல சித்தரித்து மாணவர்களிடம் பிரிவினைவாத கருத்துக்களைத் தெரிவிக்கின்றன.
அதைப்போல கோவை அரசு கலைக் கல்லூரியில் அரசியல் அறிவியல் துறை சுவற்றில் விவேகானந்தர் படத்தை வரைந்து அதற்கு காவி வண்ணம் அடித்து சமூக வலைத்தளங்களில் பிரிவினைவாத கருத்துக்களை தொடர்ந்து பதிவிடுகின்றன.
கடந்த ஒரு வருட காலமாக கோவை அரசு கலைக் கல்லூரி சுவற்றில் மார்க்ஸ், அம்பேத்கர், பெரியார், போன்ற தலைவர்களின் உருவப்படங்கள் அந்தத் துறையை சேர்ந்த மாணவர்களால் வரையப்பட்டுள்ளது. அது அந்தத் துறையில் உள்ள மாணவர்களின் விருப்பத்தினால் வரையப்பட்டது. ஆனாலும் அதற்கு அத்துறைத்தலைவர் அனுமதி அளிக்கவில்லை. தடைகளை மீறி மாணவர்களின் விருப்பத்தின் பேரில் மூன்று வரலாற்று முக்கியத்துவம் மிக்க தலைவர்களின் படத்தை வரைந்தனர் மாணவர்கள்.
கோவை அரசு கலைக் கல்லூரி அரசியல் அறிவியல் துறை என்பது முற்போக்குக் கருத்துக்கள் நிறைந்த இடமாக இருந்து வந்தது. அதை சீர்குலைக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் செயல்பட்டது ஏபிவிபி மாணவர் அமைப்பு .
அவர்களின் திட்டத்தின் ஒரு பகுதியாக முதுகலை முதலாம் ஆண்டு படிக்கும் ஏ.பி.வி.பி அமைப்பை சேர்ந்த கணேசன் (கலை கணேசன்), மற்றும் கல்லூரியை சாராத மற்ற சில காவி குண்டர்களுடன் சேர்ந்து கொண்டு கல்லூரி விடுமுறை நாளான சனிக்கிழமை (28.09.2019) அன்று, மார்க்ஸ் படத்தை பாதி அழித்து விவேகானந்தர் காவி உடையில் நிற்பது போலவும், அதற்கு பின்புறம் கோவிலில் காவிக்கொடி பரப்பது போலவும் வரைந்துள்ளனர்.
( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )
இது குறித்து சமூக வலைத்தளங்களிலும் மதரீதியான கருத்துக்களையும், மற்ற முற்போக்கு மாணவர் அமைப்பிற்கும், முற்போக்காளர்களுக்கு மிரட்டல் விடுவது போல தவறான கருத்துக்களை தொடர்ந்து பதிவிட்டுள்ளனர்.
இந்தக் காவி விவேகானந்தரின் படம் வரைந்தால் சர்ச்சை ஏற்படும் என்று தெரிந்தே இதற்கு அனுமதி வழங்கியுள்ளார் துறைத் தலைவர் கனகராஜ்.
இவர் இலவச IAS பயிற்சி நடத்துவதாக தெரிவித்துக் கொண்டு, கல்லூரியில் உள்ள கட்டிடத்தில் மேலே உள்ள ஒரு பகுதியை வளைத்துப் போட்டு அதற்கு தன் பெயரை வைத்துக்கொண்ட ‘யோக்கியமானவர்’ ஆவார்.
படிக்க:
♦ டெல்லி பல்கலையில் சாவர்க்கர் சிலை : அத்துமீறும் ஏ.பி.வி.பி. !
♦ யோகி அரசின் வன்மம் : மருத்துவர் கஃபீல்கானுக்கு புதிய விசாரணை !
அவர் பயிற்சியளிக்கும் இடம் உள்ளிட்டு, கல்லூரி முழுமையும் மாணவர்களின் சொத்து. அவர்களுடைய கட்டணத்தில் உருவான கல்லூரியின் வளாகத்தைப் பயன்படுத்திக் கொண்டு, தன்னை விளம்பரப்படுத்திக் கொள்கிறார்.
அதுமட்டுமல்ல இவர்தான் கல்லூரியில் ஏற்படும் சலசலப்புகளுக்கு முக்கிய காரணமானவர். அதிகார வர்க்கத் தாழ்வாரத்தில் தனது நெருக்கத்தை அதிகரித்துக் கொள்வதற்காக பல பிற்போக்கு, பாசிச சிந்தனை உள்ள நபர்களை பேச்சாளர்களாக அழைத்து நிகழ்ச்சிகளையும் நடத்துகிறார். இவரின் ஒப்புதலுடன் தான் காவி உடை அணிந்த விவேகானந்தர் படம் வரையப்பட்டுள்ளது.
கடந்த 30.09.2019 அன்று இது குறித்து துறையில் உள்ள மாணவர்கள் ஒரு புகார் கடிதம் எழுதி, அதில் மாணவர்கள் கையெழுத்திட்டு சர்ச்சைக்குரிய படமான காவி விவேகானந்தரை எடுக்கவேண்டும், என்ற புகார் கடிதத்தை துறைத் தலைவரிடம் கொடுத்தனர். ஆனால் அதை அவர் ஏற்கவில்லை. நாங்கள் பேசி முடிவெடுத்து சொல்கிறோம். கமிட்டி அமைத்து முடிவு செய்கிறோம் என்றார்.
பின்பு மாணவர்கள் அந்த புகார் கடிதத்தை கல்லூரி முதல்வரிடம் கொடுத்தனர். வரும் வியாழன் விசாரணை குழு அமைக்கப்படும் என்றார். அதில் முடிவெடுத்து சொல்கிறோம் என துறைத் தலைவரும், கல்லூரி முதல்வரும் கூறியுள்ளனர். ஆனால் இன்னும் முடிவு எதையும் தெரிவிக்கவில்லை.
தகவல் :
புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி,
கோவை மாவட்டம். தொடர்புக்கு : 94451 12675.