ரோப்பாவை ஒரு பூதம் பிடித்து ஆட்டிக் கொண்டிருக்கிறது – அது கம்யூனிசம் எனும் பூதம். போப்பாண்டவரும் ஜார் அரசனும், மெட்டர்னிக்கும், கிஸோவும், பிரெஞ்சுத் தீவிரக் கொள்கையினரும் (radicals) ஜெர்மன் போலீஸ் ஒற்றர்களும் எனப் பழைய ஐரோப்பாவின் அதிகார சக்திகள் அனைத்தும் இந்தப் பூதத்தை விரட்டுவதற்காக ஒரு புனிதக் கூட்டணியை அமைத்துள்ளன.”

–  கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கையின் தொடக்கத்தில் மார்க்சும் எங்கெல்சும் குறிப்பிட்ட இந்தப் பூதம் இன்றும் அடங்க மறுக்கிறது. அன்று ஐரோப்பாவை ஆட்டிப் படைத்த பூதம் இன்று சோசலிச முகாம் என்ற ஒன்று இல்லையென்றாலும் உலகம் முழுவதிலும் பரவியிருக்கிறது.

ஒவ்வொரு நாட்டிலும் வீதிகளில் இறங்கி, அமெரிக்க ஏகாதிபத்தியமே வெளியேறு ! ஐ.எம்.எஃப், உலக வங்கியே வெளியேறு என்ற முழக்கங்களோடு போராட்டங்கள் வீதியில் அரங்கேறுகின்றன. “ஏழைகளே பணக்காரர்களைத் தின்று பசியாறுங்கள்” என்று அமெரிக்காவின் வால்வீதியில் முழக்கம் கேட்கிறது.

இன்றும் கூட மார்க்ஸ் – ஏங்கெல்ஸ் பெயர்களைக் கேட்டாலே முதலாளித்துவத்தின் முகம் இருளக் காரணம் என்ன ? ஏனெனில் தரணியில் இனி தனது ராஜ்ஜியம்தான் என எண்ணி இருமாந்திருந்த முதலாளித்துவத்தின் செவிப்பறையில் அதன் இறுதி நாட்கள் நெருங்கிக் கொண்டிருப்பதை உறைக்கும்படி சொன்னவர்கள் அவர்கள்தான்.

மார்க்சும் எங்கெல்ஸும் கம்யூனிச சித்தாந்தத்தை வந்தடைந்தது எப்படி ? உலகில் இருக்கும் ஒவ்வொன்றையும் அது இருப்பதற்கான அவசியத்தைக் கேள்விகளாகக் கேட்டு விடை தேடியவர்கள். ஒவ்வொன்றையும் ஈவிரக்கமின்றி விமர்சனம் செய்தவர்களாக விஞ்ஞானத்தை ஆதாரமாகக் கொண்டு அவர்கள் சமூகத்தை மாற்றும் முனைப்போடு வாழ்ந்ததன் விளைவாகவே மார்க்சியம் என்றொரு புரட்சிகர சித்தாந்ததை நாம் பெற்றிருக்கிறோம்.

இன்று (28-11-2019) தோழர் எங்கெல்ஸின் 200-ம் ஆண்டு துவங்குகிறது. மார்க்ஸ் இன்றி எங்கெல்ஸ் இல்லை; எங்கெல்ஸ் இன்றி மார்க்ஸ் இல்லை என்று சொன்னால் அது மிகையல்ல. ஜெர்மனியில் ஒரு தொழிலதிபரின் மகனாகப் பிறந்த எங்கெல்ஸ் ஒரு பொருள்முதல்வாதியாக – கம்யூனிஸ்ட்டாக மாறிய காலகட்டம் – அது அவர் மார்க்ஸை சந்திப்பதற்கு முந்தைய காலகட்டம். இக்காலகட்டத்தில் எங்கெல்சின் சமூகப் பார்வை மாற்றமடைந்ததன் அடிப்படை என்ன ?

எ.ஸ்தெபனாவா எழுதிய “பிரெடெரிக் எங்கெல்ஸ் வாழ்க்கைச் சுருக்கம்” என்ற நூலில் பிரெடெரிக் எங்கெல்ஸ் ஒரு பொருள்முதல்வாதியாக – கம்யூனிஸ்டாக மாறிய பின்னணி குறித்த பகுதியை மட்டும் வாசகர்களுக்கு வழங்குகிறோம் !

***

1842-ம் ஆண்டு நவம்பர் மாதம் மூட்டம் நிறைந்த நாள் ஒன்றில் பிரெடெரிக் எங்கெல்ஸ் லண்டனுக்கு வந்து சேர்ந்தார். சரியான முதலாளித்துவ நாடும் பெரும் இயந்திரத் தொழிலின் தாயகமுமான பிரிட்டன் பிரதானமாக விவசாய நாடாக இருந்த பின்தங்கிய ஜெர்மனியிலிருந்து எந்த அளவுக்கு வேறுபட்டிருந்ததோ, அதே அளவுக்கு இங்கிலாந்தின் தலைநகர் பிரஷ்யத் தலைநகரிலிருந்து அந்தக் காலத்தில் வேறுபட்டிருந்தது.

தோழர் எங்கெல்ஸ்

18-ம் நூற்றாண்டின் மத்தியில் பிரிட்டன் சிறு நகரங்களை உடைய, அதிக வளர்ச்சியற்ற தொழில் துறையையும் பெரும்பாலும் விவசாய மக்களையும் கொண்டிருந்த நாடாயிருந்தது. 18-ம் நூற்றாண்டின் இரண்டாம் பாதியில் தொடங்கிய தொழிற் புரட்சி நாட்டை மாற்றியது. காகித, கம்பள நெசவுத் துறை, இன்னும் பிற துறைகளில் இயந்திரங்கள் கண்டுபிடிக்கப்பட்டு நீராவி இயந்திரம் தோன்றி ஆலைகள் உருவானதும் பிரிட்டன் தொழில்துறை நாடாக மாறியது.

தலைநகரோடு கூட ஏராளமான தொழிலாளர்களுடன் பெரிய ஆலை நகரங்கள் வளர்ந்தன. தொழில் துறை முதலாளி வர்க்கம், “இந்தத் தொழிற் புரட்சியின் மிக முக்கியக் குழந்தையான” (எங்கெல்ஸ்) ஆங்கிலேயப் பாட்டாளி வர்க்கம் ஆகிய இரண்டு புதிய வர்க்கங்கள் தோன்றின.

ஒருபுறத்தில் தொழிலாளர்களின் ஏழ்மையும் துன்பங்களும், மறுபுறத்தில் உடைமையாளர் வர்க்கங்களின் செல்வமும் ஆடம்பரமும் பிரிட்டனைப் போல் வேறெங்கும், எந்த ஒரு நாட்டிலும் இவ்வளவு வெளிப்படையாகத் தெரியவில்லை; பாட்டாளி வர்க்கத்திற்கும் முதலாளி வர்க்கத்திற்கும் இடையில் இருந்த முரண்பாடுகள் பிரிட்டனில் இருந்தது போல வேறெங்கும், உலகத்தின் வேறெந்த நாட்டிலும் இவ்வளவு தெளிவாகக் காணப்படவில்லை. இந்த நாட்டில் நிலவிய வர்க்க முரண்பாடுகளின் கூரிய தன்மை எங்கெல்சைப் பெருமளவிற்கு வியப்பிற்குள்ளாக்கியது.

இதனால் பிரிட்டனுக்கு வந்தவுடன் அவர் எழுதிய முதல் கட்டுரைகளில் ஒன்றையே, பிரிட்டனில் புரட்சி வருவதற்குச் சாத்தியமுண்டா, வாய்ப்பு உண்டா? என்ற கேள்வியுடன் துவக்கினார். இந்தக் கேள்விக்குப் பதிலளிக்கையில், உடைமை அற்றவர்கள் என்ற ஒரு வர்க்கத்தை இங்கிலாந்தின் இயந்திரத் தொழில்துறை தோற்றுவித்திருக்கிறது என்றும் இந்த வர்க்கம் நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக வளர்ந்து நிலவி வரும் உறவுமுறைகளைப் பலவந்தமாகத் தூக்கியெறிவதன் மூலமாகவும் பிரபுக்கள், இயந்திரத் தொழிலதிபர்கள் ஆகியோரடங்கிய உயர் வகுப்பை வீழ்த்துவதன் மூலமாகவும்தான் பாட்டாளிகளின் பொருளாயத நிலையை மேம்படுத்த முடியும் என்ற உணர்வைப் பெற்று வருகிறது என்றும் எங்கெல்ஸ் எழுதினார். சமூக மாற்றத்தை ஏற்படுத்தவல்ல ஒரு சமுதாயச் சக்தி பாட்டாளி வர்க்கத்திற்குள் அடங்கிக் கிடப்பதை எங்கெல்ஸ் தெளிவாகக் கண்டார்.

படிக்க :
மார்க்சியம் ஒரு மனிதரின் பெயரில் இருந்தாலும் அது உண்மையில் இரண்டு மனிதர்களின் பணியாகும்
♦ மார்க்ஸ் – எங்கெல்ஸ் : இணைபிரியா இரட்டையர்கள் !

தொழிலாளர்களின் நிலைமையையும் அவர்களது வாழ்க்கை முறை, கண்ணோட்டங்கள், அவர்கள் நடத்தும் போராட்ட வடிவங்கள், வழிமுறைகள் ஆகியவற்றையும் மிகக் கவனத்துடனும் ஆழ்ந்த அனுதாபத்துடனும் ஆய்வு செய்தார் எங்கெல்ஸ். வெறும் புத்தகங்களையும் அதிகாரபூர்வமான ஆவணங்களையும் படிப்பதுடன் அவர் நின்றுவிடவில்லை. பிரிட்டிஷ் தொழிலாளி வர்க்கத்தின் நிலைமை என்ற புத்தகத்தை எங்கெல்ஸ் பிரிட்டிஷ் தொழிலாளர்களுக்கு அர்ப்பணித்தார்;

பிரிட்டிஷ் தொழிலாளர்களுக்கு விடுத்த அறிக்கையில் அவர் பின்வருமாறு எழுதினார்: “…உங்களை உங்களுடைய இல்லங்களில் காண, உங்களது அன்றாட வாழ்க்கையைப் பார்க்க, உங்களது நிலைமையையும் தேவைகளையும் பற்றி உங்களுடன் பேச, உங்களை அடக்கி ஆள்வோரின் சமுதாய, அரசியல் ஆட்சிக்கு எதிராக நீங்கள் தொடுக்கும் போராட்டத்தைக் காண நான் விரும்புகிறேன்… நான் மேற்குடியினரையும் விருந்துகளையும் பூர்ஷ்வாவின் மதுபானங்களையும் ஒதுக்கிவிட்டு எனது ஓய்வு நேரங்களை உண்மையான தொழிலாளர்களுடன் கலந்து பழகுவதற்குக் கிட்டத்தட்ட முற்றிலுமாக அர்ப்பணித்தேன்; இதைப் பற்றி நான் மகிழ்ச்சியடைகிறேன், பெருமை கொள்கிறேன்” 1.

1842-ல் மான்செஸ்டர் நகர தொழிலாளர் போராட்ட்டம்

லண்டன், லீட்ஸ், மாஞ்செஸ்டர் ஆகிய நகரங்களில் கூச்சல் நிறைந்த தெருக்களிலும் தொழிலாளர்கள் அடைந்து கிடந்த குடியிருப்புப் பகுதிகளிலும் அலைந்து திரிந்தார் எங்கெல்ஸ். இங்கிலாந்தில் இருந்த காலத்தின் பெரும் பகுதியைத் தான் கழித்த நகரமான மாஞ்செஸ்டரை எங்கெல்ஸ் குறிப்பாக நன்கு ஆராய்ந்தார். அலுவலக வேலையில்லாத ஓய்வு நேரங்களில் அவர் நகரின் வர்த்தகப் பகுதியிலிருந்து தொழிலாளர் குடியிருப்புப் பகுதிகளுக்குச் சென்றார். பல நேரங்களில் இவரது மனதிற்குப் பிடித்தமான மேரி பியோர்ன்ஸ் இவரோடு வருவார்; அயர்லாந்து உழைப்பாளியாகிய இப்பெண்ணை எங்கெல்ஸ் மாஞ்செஸ்டரில் சந்தித்தார்.

சில நேரங்களில் ஜெர்மன் கவிஞர் கியோர்க் வேயெர்த் எங்கெல்சுடன் கூட வருவதுண்டு. பிரிட்டிஷ் தொழிலாளர்களின் நிலைமையைப் பற்றி சில கட்டுரைகளை எழுதிய இவர் தனது ஒரு கட்டுரையைப் பின்வரும் வார்த்தைகளோடு முடிக்கின்றார்: ”…. பிரிட்டனிலுள்ள பாட்டாளிகளைப் பற்றிய எனது மேலோட்டமான குறிப்பை நான் முடிக்கிறேன்; இப்போது ஜெர்மனியின் மிகச் சிறந்த தத்துவஞானிகளில் ஒருவர் பிரிட்டிஷ் தொழிலாளர்களின் வாழ்க்கையைப் பற்றிய விளக்கமான படைப்பை எழுத முனைந்துள்ளது குறித்து மகிழ்கிறேன்; இது விலைமதிக்க இயலா முக்கியத்துவம் வாய்ந்த ஒரு படைப்பாக இருக்கும்”2.

எங்கெல்ஸ் இங்கிலாந்தில் வசித்த போதுதான் சார்ட்டிச இயக்கம் எழுச்சி பெற்று வந்தது. உலகிலேயே முதலாவதான ”பரந்த, உண்மையிலேயே வெகுஜன , அரசியல் ரீதியாக வடிவமைக்கப்பட்ட, பாட்டாளி வர்க்கப் புரட்சிகர இயக்கம்3 Charter (சாசனம்) எனும் ஆங்கிலேயச் சொல்லிலிருந்து தனது பெயரைப் பெற்றது. மக்கள் சாசனம் நாட்டை ஜனநாயகமயமாக்குவதை நோக்கமாகக் கொண்டிருந்தது. தொழிலாளர்களும் தமது பொருளாயத நிலையை மேம்படுத்தும் நம்பிக்கைகளை இதனுடன்தான் தொடர்புபடுத்தினர்.

படிக்க :
♦ சிறப்புக் கட்டுரை : மனிதகுலம் பிழைத்திருக்க சோசலிசம் ஒரு கட்டாயம் !
♦ சோசலிசம்: முதலாளிகளின் கொடுங்கனவு ! பாட்டாளிகளின் கலங்கரை விளக்கம் !!

வெளிப்புற பார்வையாளராக எங்கெல்ஸ் சார்ட்டிச இயக்கத்தை ஆராயவில்லை. இவருடைய சொந்த வார்த்தைகளின்படி இவர் ”சார்ட்டிச இயக்கத்தோடு வெளிப்படையாகச் சேர்ந்திருந்தார்”4

இவர் சார்ட்டிஸ்டுகளின் கூட்டங்களுக்கும் பொதுக் கூட்டங்களுக்கும் சென்றார்; சார்ட்டிச இயக்கத்தின் இடதுசாரித் தலைவர்களுடன் தொடர்பு ஏற்படுத்திக் கொண்டார். இப்பிரிவின் தலைவர்களில் ஒருவரான ஜார்ஜ் ஜூலியன் கார்னி, The Northern Star (”வடக்கு விண்மீன்”) எனும் சார்ட்டிசப் பத்திரிகைப் பதிப்பாசிரியர், அலுவலகத்தினுள் அழகாக ஆங்கிலந்தில் பேசிய, பாங்கான, அழகிய இளைஞர் ஒருவர் எப்படி நுழைந்தார் என்று பல ஆண்டுகளுக்குப் பின் நினைவு கூர்ந்தார். தான் பத்திரிகையின் நிரந்தர வாசகர் என்றும் சார்ட்டிச இயக்கத்தில் ஆர்வமுள்ளவர் என்றும் தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டார். அதுதான் எங்கெல்ஸ்.5

விரைவிலேயே எங்கெல்ஸ் இப்பத்திரிகையின் தீவிர ஊழியரானார்; ஐரோப்பியக் கண்டத்தின், குறிப்பாக ஜெர்மனியின் – இங்கே புரட்சி முதிர்ந்து வருகிறதென அவர் எழுதினார் – சமூக மற்றும் சோஷலிச இயக்கத்தைப் பற்றி எழுதினார். 1844-ம் ஆண்டு ஜூனில் நடைபெற்ற சிலேஸ் நெசவாளர்களின் எழுச்சிக்கு எங்கெல்ஸ் பெரும் முக்கியமளித்தார். ஒடுக்குமுறையும் மிகக் கடும் உழைப்பும் அதிருப்தியும் ஆத்திரமும் அளவிற்கதிகமான மக்கள் வாழும் லன்காஷியரிலும் யோர்க்ஷியரிலும் உள்ளதைப் போன்றே சிலேசியாவின் குன்றுகளிலும் உள்ளன6 என்று அவர் எழுதினார்.
ராபெர்ட் ஓவன் என்ற கற்பனாவாத சோஷலிஸ்டினுடைய கருத்துக்களைப் பின்பற்றி வந்த பிரிட்டிஷ் சோஷலிஸ்டுகளுடனும் எங்கெல்ஸ் தொடர்பு ஏற்படுத்திக் கொண்டார்.

மனித குலத்தின் விடுதலைகான தத்துவ ஆய்வில் இரு மேதைகள் !

The New Moral World (“ஒழுக்கம் நிறைந்த புத்துலகம்’) என்ற அவர்களின் பத்திரிகையில் அவர் பணி புரியத் துவங்கினார். பிரான்ஸ், ஜெர்மனி, ஸ்விட்சர்லாந்தின் சோஷலிச மற்றும் கம்யூனிச இயக்கத்தையும் மாபெரும் பிரெஞ்சுக் கற்பனாவாத சோஷலிஸ்டுகளான அன்ரீ சான்-சிமோன், ஷார்ல் ஃபூரியே ஆகியோரின் கண்ணோட்டங்களையும் எத்தியேன் காபே, பியேர் லெரூ, பியேர் ழொஸேப் புரூதோன், வில்ஹெல்ம் வெயித்லிங் ஆகியோரின் கருத்துக்களையும் ஆங்கிலேயத் தொழிலாளிகளுக்கு எங்கெல்ஸ் அறிமுகப்படுத்தினார்.

ஜெர்மானிய தத்துவஞானிகளாகிய கான்ட், ஃபிஹ்தெ, ஷெல்லிங் ஆகியோரைப் பற்றியும் ஹெகலின் கருத்துக்களைப் பற்றியும் இவர் சுருக்கமான வடிவத்தில் எடுத்துரைத்தார். பிரெஞ்சு கற்பனாவாத சோஷலிசம் மற்றும் ஜெர்மன் மூலச்சிறப்புள்ள தத்துவஞானம் ஆகியவற்றைச் சேர்ந்த பிரதிநிதிகளின் கண்ணோட்டங்களை வருணிக்கும் போது, இக்கண்ணோட்டங்களில் இருந்த பலவீனங்களையும் குறைகளையும் விமர்சனம் செய்யும் பொழுதே, உலகக் கலாச்சாரக் களஞ்சியத்துக்கு இவர்கள் ஒவ்வொருவரும் கொண்டு வந்து சேர்த்த பயன்மிக்க விஷயங்களையும் குறிப்பிட்டார்.

ஜெர்மனியில் சோஷலிசம் வளர்ச்சி பெறுவதற்கான வாய்ப்புகளைப் பற்றி ஆய்வு செய்கையில் ஜெர்மானியர்களைத் தத்துவஞானத் தேசத்தவர் என்று வர்ணித்து இவர்கள் தமது தனித் “தத்துவ ஞானப்’ பாதையின் மூலமாக கம்யூனிசத்தை வந்து அடைவார்கள் என்றும் எனவே படித்தவர்கள், வசதிபடைத்தோர் ஆகிய வர்க்கங்களின் இடையில் கம்யூனிஸ்டுக் கட்சி ஒன்றை அமைப்பது சாத்தியமே என்றும் எங்கெல்ஸ் அப்பொழுது அபிப்பிராயப்பட்டார்.

இளம் ஹெகல்வாதிகளில் சிலர் 1842-ம் ஆண்டின் இலையுதிர் காலத்திலேயே ”வெறும் அரசியல் சீர்திருத்தங்கள் மட்டும் போதாது என்ற முடிவிற்கு வந்து கூட்டுச் சொத்துரிமையின் அடிப்படையில் நிகழும் சமூகப் புரட்சியின் விளைவாகத்தான் தமது சூட்சுமமான கோட்பாடுகளுக்கு ஏற்புள்ள சமுதாய அமைப்பு வந்து சேரும்” என்று அறிவித்தனர்7 என கண்டத்தில் சமுதாய மாற்றம் ஏற்படுத்துவதற்கான இயக்கத்தின் வெற்றிகள் என்ற கட்டுரையில் எங்கெல்ஸ் சொல்லுகிறார். இத்தகைய இடதுசாரி ஹெகல்வாதிகளில் கார்ல் மார்க்சின் பெயரையும் தமது பெயரையும் குறிப்பிடுகிறார் எங்கெல்ஸ். எனவே இங்கிலாந்துக்குக் கிளம்புவதற்கு முன்பாகவே கம்யூனிசத்தை நோக்கி முதல் அடியை எடுத்து வைத்தார் எங்கெல்ஸ்; ஆனால் அந்தக் கம்யூனிசம் திட்டவட்டமாயில்லாத, தெளிவற்ற தன்மையை உடையதாய் இருந்தது.

இங்கிலாந்தில் இருந்த காலத்தில்தான் எங்கெல்ஸ் முற்றாகக் கம்யூனிஸ்டாக மாறினார். இந்தக் காலத்தில் இவர் எழுதிய படைப்புகளில் பொருள்முதல்வாதத்தையும் கம்யூனிசத்தையும் நோக்கிய சொந்த விஞ்ஞான மற்றும் வாழ்க்கை அனுபவத்தின் அடிப்படையிலான, சுயேச்சையான பாதை தெளிவாகப் பிரதிபலித்தது.

“அரசியல் பொருளாதார விமர்சனத்துக்கான குறிப்புகள்8 என்னும் படைப்பு எங்கெல்சின் கருத்துக்கள் உருப்பெற்றதில் முக்கியக் கட்டமாகத் திகழ்ந்தது. இது, 1844-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் பாரிசில் கா. மார்க்சினாலும் அ. ரூகேயினாலும் பதிப்பிக்கப்பட்டு வெளிவந்த Deutsch-Franzosische Jahrbicher (”ஜெர்மன்-பிரெஞ்சு ஆண்டுமலர்”) என்ற சஞ்சிகையில் பிரசுரமானது. எங்கெல்சினுடைய இந்த நூல் முதிர்ச்சி பெற்ற மார்க்சிய நூலாக இருக்கவில்லையாயினும், மார்க்சியக் கருத்துக்களின் முளைகள் இதில் அடங்கியுள்ளன.

”மேதைமை நிறைந்த முதற்குறிப்புகள்” என்று மார்க்ஸ் பின்னர் இந்த நூலை வர்ணித்தார்; சமூக விஞ்ஞானத் துறை சம்பந்தமான இந்த முதல் நூலில் பலவீனங்கள் பலவிருப்பினும், இதற்காகத் தான் சற்றே பெருமைப்படுவதாக எங்கெல்ஸ் 1884-ம் ஆண்டு எழுதினார்.

மால்தஸ் பாதிரியார்

இந்த நூலில் முதலாளித்துவ அரசியல் பொருளாதாரம் பற்றிய விமர்சனத்தையும் அதன் மூலமாக பாட்டாளி வர்க்க நிலையிலிருந்து முதலாளித்துவத்தை விமர்சனம் செய்வதையும் தொடங்கி வைத்தார் எங்கெல்ஸ். பூர்ஷ்வாப் பொருளாதார வல்லுனர்கள் – அவர்களில் சிறந்தவர்களான அரசியல் பொருளாதாரத்தின் பிரிட்டிஷ் மூலவர்கள் ஆ. ஸ்மித், டே. ரிக்கார்டோ உட்பட- முதலாளித்துவத்தின் பொருளாதார விதிகள் நிலையானவை, மாற்ற முடியாதவை என்று கருதியதற்கு மாறாக எங்கெல்ஸ் இவற்றை வரலாற்று ரீதியாக நிபந்தனைக்குட்பட்டவை, மாறக் கூடியவை என்று கருதினார். லெனினது வார்த்தைகளில், எங்கெல்ஸ் இங்கே, “தனிச்சொத்தின் ஆதிக்கத்தால் ஏற்பட்டுத் தீரும் விளைவுகள் என்ற முறையில், நவீன காலப் பொருளாதார அமைப்பு முறையின் முதன்மையான தோற்றங்களைச் சோஷலிச நோக்கு நிலையிலிருந்து பரிசீலித்தார்9

பூர்ஷ்வாக்களின் தன்னல நோக்கங்களை முகஸ்துதியான தெளிவற்றக் கோஷங்களால் மூடிமறைக்கும் பூர்ஷ்வா பொருளாதார நிபுணர்களை விமர்சனம் செய்யும் எங்கெல்ஸ் பொருளாதார நிபுணர்கள் எவ்வளவுக்கெவ்வளவு நம் காலத்துடன் நெருங்கியிருக்கின்றார்களோ, அவ்வளவுக்கவ்வளவு அவர்கள் நேர்மையிலிருந்து தள்ளி நிற்கின்றனர்10 என்ற முடிவிற்கு வருகிறார்.

பிற்போக்குத்தனமான, மனித விரோத மால்தஸ் ”தத்துவத்தை” எங்கெல்ஸ் மிகக் கடுமையாகத் தாக்கினார். மனித குலத்தின் இனப்பெருக்கம் இதன் வசம் உள்ள வாழ்க்கை சாதனங்களை ஏதோ எப்போதுமே விஞ்சி நிற்பதாக மால்தஸ் கூறினார். இவ்வாறாக முதலாளித்துவத்தின் கேடுகளுக்கும் குறைகளுக்குமான காரணத்தை மால்தஸ் இயற்கையின் மீது சுமத்தினார். ‘இந்த இழிவார்ந்த, கீழ்மையான கருத்தை, இயற்கைக்கும் மனித குலத்திற்கும் எதிரான இந்த வெறுக்கத்தகு அகந்தையை’11 எங்கெல்ஸ் – ஆத்திரத்தோடு கண்டிக்கிறார்.

மனித குலத்தின் வசமுள்ள உற்பத்திச் சக்தி எல்லையற்றது, விஞ்ஞானம் ஒவ்வொரு நாளும் இயற்கையை மேன்மேலும் மனிதர்களின் ஆளுகைக்கு உட்படுத்தி வருகிறது என்பதற்கான நிரூபணங்களை எங்கெல்ஸ் தருகிறார். உணர்வுப் பூர்வமாக, எல்லா மக்களின் நலன்களுக்காக இந்த உற்பத்திச் சக்தி பயன்படுத்தப்பட வேண்டியதுதான் அவசியம். எந்த ஒரு சமுதாயத்தில் தனிச் சொத்துடைமையின் ஆதிக்கமும் எனவே ஒரு துருவத்தில் ஏழ்மையும் மறு துருவத்தில் மிதமிஞ்சிய செல்வமும் இருக்காதோ அந்தச் சமுதாயத்தில் மட்டுமே இது சாத்தியமானது.

எங்கெல்ஸ் கம்யூனிசக் கண்ணோட்டத்தை வந்தடைந்ததும் கருத்து முதல்வாதத்திலிருந்து பொருள் முதல்வாதத்திற்கு வந்து சேர்ந்ததும் ஒன்றுடன் ஒன்று இடையறா தொடர்பு கொண்டு ஒரே நேரத்தில் நடந்தன.

படிக்க :
♦ “பாராளுமன்றத்திற்கு சென்ற பால்காரம்மா”: சோவியத் யூனியனின் அற்புதங்கள்!
♦ சோசலிச சமூகத்தை அமைப்பதற்கான போராட்டம் – ஃபிரட் எங்ஸ்ட் உடன் ஒரு நேர்காணல்

சிந்தனைக்கும் வாழ்நிலைக்கும், ஆன்மாவுக்கும் இயற்கைக்கும் இடையே நிலவுகின்ற உறவு பற்றிய கேள்விக்குத் தரும் பதிலைப் பொறுத்து பொருள் முதல்வாதிகள், கருத்துமுதல்வாதிகள் என்று தத்துவஞானிகள் இரண்டு பெரும் முகாம்களாகப் பிரிக்கப்படுகின்றனர். ஆன்மாவின் வளர்ச்சியே இயற்கையின் வளர்ச்சியை நிர்ணயிக்கிறது என்று கருதுகிறவர்கள், எனவே இறுதியில் உலகமானது படைக்கப்பட்ட ஒன்று என்று ஏதாவது ஒரு வழியில் ஒத்துக் கொள்கிறவர்கள் கருத்து முதல்வாத முகாமைச் சேர்ந்தவர்கள். மாறாக, இயற்கைதான் ஆதிமுதல் அடிப்படை என்று கருதுகிறவர்கள் பொருள்முதல்வாதத்தின் பல்வேறு பிரிவுகளைச் சேர்ந்தவர்கள்.

பிரிட்டனில் இருந்த பொழுது எங்கெல்ஸ் எழுதிய நூல்களில் அவர் பொருள்முதல்வாதக் கண்ணோட்டத்திற்கு மாறிக் கொண்டிருந்தது மேலும் மேலும் தெளிவாகவும் திட்டவட்டமாகவும் தெரிகிறது. உதாரணமாக, டி. கார்லைல் என்பவர் எழுதிய கடந்த காலமும் நிகழ் காலமும் என்ற புத்தகத்தைப் பற்றி எங்கெல்ஸ் எழுதிய கட்டுரையில் பொருள்முதல்வாத, நாத்திகக் கண்ணோட்டங்களிலிருந்து, புதுச் சமயம் ஒன்று தோற்றுவிப்பதற்காகக் கார்லைல் செய்யும் முயற்சிகளை அவர் கண்டிக்கிறார். ”வீர வழிபாடு” பற்றிப் பிரச்சாரம் செய்யும் கார்லைலினுடைய கருத்துமுதல்வாதத் தத்துவஞானக் கண்ணோட்டத்தை எதிர்த்த எங்கெல்ஸ் முற்போக்குக் கருத்துக்களை நடைமுறைப்படுத்துவதில் பொதுமக்கள் வகிக்கும் தீர்மானமான பாத்திரத்தைக் கோடிட்டுக் காட்டினார்.

இந்தக் காலத்தில் Rheinische Zeitung மற்றும் Schweizerischer Republikaner (‘ஸ்விட்சர்லாந்து குடியரசுவாதி”) இதழ்களில் வெளியான எங்கெல்சின் கட்டுரைகளில் இடம்பெற்றிருந்த பிரிட்டனின் சமுதாய, அரசியல் அமைப்பு மற்றும் சமுதாய
இயக்கம் பற்றிய ஆய்வுகளில் அவர் பொருள் முதல்வாதக் கண்ணோட்டத்திற்கு மாறிக் கொண்டிருந்தது திட்டவட்டமாய்த் தெரிகிறது. பிரிட்டனில் நடந்து கொண்டிருந்த அரசியல் போராட்டத்துக்குப் பல்வேறு வர்க்கங்களின் பொருளாயத நலன்களே அடித்தளமாய் இருந்தன என்ற முடிவுக்கு வந்தார் எங்கெல்ஸ்; அரசியல் அரங்கில் போராடிக் கொண்டிருந்த பல்வேறு கட்சிகளின் வர்க்கத் தன்மையையும் பிரிட்டிஷ் அரசின் வர்க்க இயல்பையும் அவர் வெளிப்படுத்தினார். எங்கெல்ஸ் கன்சர்வேட்டிவ் – டோரிகளின் – கட்சியைப் பிரபுக்குலம் மற்றும் பிற்போக்கு மதகுருமார்களின் கட்சி என்றும், லிபெரல் – விக் – கட்சியை ஆலை முதலாளிகள், வியாபாரிகளின் பிரதிநிதிகள் அடங்கிய கட்சி என்றும் இறுதியாக சார்ட்டிஸ்டுகளை பிரிட்டிஷ் தொழிலாளர்களின் கூட்டு உணர்வை வெளிப்படுத்தும் கோட்பாடுகளைக் கொண்ட கட்சி என்றும் வருணித்தார்.

சார்ட்டிஸ்ட் இயக்கத்தின் பொதுக் கூட்டம்

பாரிசிலிருந்து வெளிவந்த Vorwarts! (”முன்னே செல்!”) எனும் ஜெர்மன் பத்திரிகையில் பிரசுரமான பிரிட்டிஷ் நிலைமை. பிரிட்டிஷ் அரசியல் சட்டம் எனும் கட்டுரையில் எங்கெல்ஸ் பெரும்பான்மை தொழிலாளர்களைத் தேர்தல்களிலிருந்து விலக்கிய பிரிட்டிஷ் தேர்தல் சட்டத்தை விரிவாகப் பகுப்பாய்வு செய்து நாடாளுமன்றத்திற்கான தேர்தல் நுணுக்கங்களை- கிராமப்புறங்களில் வாக்காளர்கள் நிலப் பிரபுக்களின் விருப்பு வெறுப்பைச் சார்ந்திருப்பது, தேர்தல்களில் எல்லா இடங்களிலும் வாக்காளர்களுக்கு லஞ்சம் கொடுக்கும் முறையும் தனக்கடங்கிய நாடாளுமன்றப் பெரும்பான்மைக்கு வகை செய்வதற்காக உடைமை வர்க்கங்கள் பயன்படுத்தும் மற்ற முறைகளும் ஆதிக்கம் செலுத்துவது, முதலியவற்றை வெளிப்படுத்தினார்.

“பிரிட்டனை உண்மையில் ஆள்வது யார்?” என்ற கேள்விக்கு,பிரிட்டனில் ஆட்சி புரிவது சொத்துதான்” என்று எங்கெல்ஸ் விடையளித்தார். பிரிட்டிஷ் அரசியல் சட்டத்தின் வர்க்கத் தன்மையையும் குறுகிய எல்லைக்குட்பட்ட அதன் முதலாளித்துவச் “சுதந்திரத்தையும்” வெளிப்படுத்தி எங்கெல்ஸ் முதலாளி வர்க்கத்திற்கும் தனியார் சொத்துரிமைக்கும் எதிராகப் பாட்டாளி வர்க்கம் நடத்துகின்ற போராட்டத்தில் கிடைக்கின்ற வெற்றியில் பிறக்க வேண்டிய உண்மையான சமூக ஜனநாயகத்தை இவையனைத்திற்கும் மாற்றாக முன்வைத்தார். சோஷலிசக் கோட்பாடுதான் இந்த ஜனநாயகத்தின் கோட்பாடாயிருக்கும் என்று எங்கெல்ஸ் எழுதினார்.

பிரிட்டனில் நிலவுகின்ற சமுதாய உறவுகளை, முதலாவதாக பாட்டாளி வர்க்கத்தின் வாழ்க்கையையும் போராட்டத்தையும் பற்றிய ஆய்வின் முடிவுகளை பிரிட்டிஷ் தொழிலாளி வர்க்கத்தின் நிலைமை12 என்ற தமது சிறந்த நூலில் எங்கெல்ஸ் தொகுத்துக் கொடுக்கிறார். இந்நூல் மார்க்சைச் சந்தித்த பின் எழுதி முடித்து 1845-ம் ஆண்டு ஜெர்மனியில் வெளியிடப்பட்டது. எங்கெல்சே பின்னர் குறிப்பிட்டபடி, இந்நூல் விஞ்ஞானக் கம்யூனிச வளர்ச்சியின் தொடக்க நிலைக் கட்டங்களில் ஒன்றாக விளங்கியது; இதில் விஞ்ஞானக் கம்யூனிசம் தனது மூல ஊற்றுகளில் ஒன்றான மூலச்சிறப்புள்ள ஜெர்மன் தத்துவஞானத்திலிருந்து தோன்றியதன் சுவடுகளைக் காணலாம். அதே நேரத்தில் – எங்கெல்சின் வார்த்தைகளின்படி – இந்நூல், 40-ம் ஆண்டுகளின் மத்தியில் சமுதாய வளர்ச்சியில் பொருளாதாரக் காரணியின் பாத்திரத்தைப் புரிந்து கொள்வதை நோக்கி, அதாவது வரலாற்றைப் பற்றிய பொருள்முதல்வாதக் கண்ணோட்டத்தை நோக்கி தானாகவே முன்னேற இவரால் எவ்வளவு முடிந்துள்ளது என்பதைக் காட்டுகிறது. எங்கெல்சின் இந்த ஆரம்ப கால படைப்பு உலக சோஷலிச இலக்கியத்தின் தலை சிறந்த நூல்களில் ஒன்றாக இருந்தது, இருந்து வருகிறது.

பிரிட்டனில் பெரும் இயந்திரத் தொழில் துறையைத் தோற்றுவித்து இயந்திரத் தொழில் சார்ந்த பாட்டாளி வர்க்கத்தை உருவாக்கித் தந்த இயந்திரத் தொழிற்புரட்சியின் ஆழ்ந்த விளைவுகளை இந்த நூலில் எங்கெல்ஸ் ஆய்வு செய்கிறார். முறையாகத் திரும்பத் திரும்ப வெடிக்கிற பொருளாதார நெருக்கடிகள், வேலையில்லா இயந்திரத் தொழில் துறை தொழிலாளர்களின் சேமப் படை உருவாவது, முதலாளித்துவ உற்பத்தி விரிவடைய விரிவடைய தொழிலாளி வர்க்கமும் உழைப்பாளிகளும் மேலும் கடுமையான சுரண்டலுக்கு ஆளாவது போன்ற முதலாளித்துவப் பொருளுற்பத்தியின் நியதிகள் பலவற்றை எங்கெல்ஸ் வெளிப்படுத்துகிறார். தொழிலாளர்கள் வேலை செய்யும் நிலைமைகள், அவர்களின் சம்பளம், வேலை நாள், அவர்களின் வீட்டு நிலைமைகள், பெண்கள் மற்றும் குழந்தைகளின் கடுமையான உழைப்பு ஆகியவற்றைத் தெளிவாகவும் உண்மையாகவும் சித்திரம் தீட்டி வேலையற்று இருப்போரின் கையறு நிலையைப் படம் பிடித்தும் காட்டிய எங்கெல்ஸ் முதலாளி வர்க்கமும் பாட்டாளி வர்க்கமும் சமரசத்திற்கு இடமில்லாத இரு வேறு நலன்களால் எதிரும் புதிருமாய் நிற்கின்றன என்ற முடிவுக்கு வருகிறார்.

நவீன கூலித் தொழிலாளிக்கும் அடிமை, பண்ணையடிமைக்கும் இடையிலுள்ள கோட்பாட்டு ரீதியான வேறுபாடு எதில் அடங்கியுள்ளது என்று எங்கெல்ஸ் காட்டுகிறார். “அடிமை குறைந்தபட்சம் அவனுடைய சொந்தக்காரனுக்கு தனிப்பட்ட முறையில் ஆதாயமானதால், இவனது வாழ்க்கைக்கு வழியுள்ளது; பண்ணையடிமைக்கோ சோறு போடுவதற்கான துண்டு நிலம் உள்ளது; இருவருக்கும் குறைந்தபட்சம் பட்டினிச் சாவிலிருந்து உத்திரவாதம் உள்ளது; ஆனால் பாட்டாளி முற்றிலுமாகத் தனக்காகவே இருக்கிறான் என்றாலும், அதே நேரத்தில் தனது சக்திகளை அவன் முழுமையாகக் கணக்கில் கொள்ளும் அளவிற்கு இவற்றைப் பயன்படுத்த அவனுக்கு வாய்ப்பளிப்பதில்லை.” 13

தொழிலாளி வர்க்கத்திற்கும் ஒடுக்கப்படுகின்ற, சுரண்டப்படுகின்ற மற்ற வர்க்கங்களுக்கும் இடையிலுள்ள வேறுபாட்டை எங்கெல்ஸ் அதனது வாழ்க்கை வசதிகளைத் தேடிக் கொள்ளுவதற்கு முடியாத மிக மோசமான நிலையிலும் நாளைய தினத்தைப் பற்றிய இடையறா உறுதியின்மையிலும் மட்டும் காணவில்லை. பாட்டாளி வர்க்கம் வாழுகின்ற சூழ்நிலைகளே, அது ஒன்றுபட்டு உறுதியுறுவதற்கும் அணி திரளுவதற்கும் முதலாளித்துவத்தை அழித்தொழிக்கும் புரட்சிகரப் பணியினைச் செய்து முடிப்பதற்கும் தேவையான அடிப்படைகளைப் படைத்துக் கொடுத்திருக்கின்றன என்று எங்கெல்ஸ் கண்டதில்தான் இவரது முக்கிய சேவை அடங்கியுள்ளது.

தொழிலாளி வர்க்கம் எத்தகைய போராட்ட முறைகளையும் போராட்ட வடிவங்களையும் மேற்கொள்ளுகிறது, மனிதத் தன்மையற்ற சுரண்டலை எதிர்த்து அவ்வர்க்கம் வெளிப்படுத்திய ஆரம்ப காலத்திய மற்றும் தன்னிச்சையான கண்டன வடிவங்களிலிருந்து அமைப்பு ரீதியிலும் உணர்வு பூர்வமாகவும் மேலும் சிறந்த போராட்ட முறைகளுக்கு இவ்வர்க்கம் எப்படி மாறிச் செல்கிறது என்று எங்கெல்ஸ் இந்தப் புத்தகத்தில் ஆய்வு செய்கிறார்.

முதலாளி வர்க்கத்தினரை எதிர்த்து தொழிலாளிகள் அடைந்த ஆத்திரம் ஆரம்பத்தில் இயந்திரங்களைப் புகுத்துவதையே எதிர்க்கும் ஒரு போராட்டமாக வெடித்தது. இயந்திரங்களைக் கண்டுபிடித்தவர்களைத் தொழிலாளர்கள் துன்புறுத்துவது, அவ்வியந்திரங்களை உடைத்து அழிப்பது, எழுச்சிகள் நடத்தி அவற்றின் மூலம் தொழிற் சாலைகளையே நிர்மூலமாக்குவது போன்ற தொழிலாளர்களின் செய்கைகளை – உதாரணத்திற்குக் குறிப்பிடுகிறார் எங்கெல்ஸ். கொடுமையான துன்பங்களைக் கொண்டு வருவது இயந்திரங்கள் அல்ல என்றும் மாறாக இவ்வியந்திரங்களையும் ஆலைக் கட்டிடங்களையும் மூலப் பொருள்களையும் தனிச் சொத்தாகக் கொண்டிருக்கிற முதலாளித்துவ உற்பத்தி முறைதான் இத்துன்பங்களுக்குக் காரணம் என்றும் தொழிலாளர்களால் இந்தக் காலத்தில் இன்னும் புரிந்து கொள்ள முடியவில்லை. சுருங்கக் கூறின், அவர்களால் இன்னமும் இயந்திரத்தையும் அதன் முதலாளித்துவ பிரயோகத்தையும் வேறுபடுத்திப் பார்க்க இயலவில்லை.

ஆயினும் இயந்திர முறையையும் ஆலை முறையையும் அழித்தொழிக்கும் தமது முயற்சிகள் எந்தப் பலனையும் தரவில்லை என்று தொழிலாளர்கள் விரைவில் நன்கு உணர்ந்து கொண்டார்கள். தமது எதிர்ப்புகளைத் தெரிவிக்கப் புது வடிவங்களைக் கண்டு பிடிக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டது. தொழிற்சங்க அமைப்பும் வேலைநிறுத்தப் போராட்டமும் இத்தகைய ஒரு புது வடிவ எதிர்ப்பாக அமைந்தன. கற்பனாவாத சோஷலிஸ்டுகளுக்கு மாறாக, தொழிலாளர்களை ஒன்றிணைப்பதற்கும் அவர்களின் அமைப்புறுதியும் ஒற்றுமையும் மேம்பட்டு வருவதற்கும் எத்தகைய பெரும் சக்தியாய் வேலைநிறுத்தங்கள் விளங்குகின்றன என்று எங்கெல்சினால் மதிப்பிட முடிந்தது. “வேலைநிறுத்தங்கள் இராணுவப் பள்ளிகளாகும்; இவற்றில் தொழிலாளர்கள் ஏற்கெனவே தவிர்க்க இயலாததாக மாறியுள்ள மாபெரும் போராட்டத்திற்குத் தயாராகுகின்றனர்; மாபெரும் தொழிலாளர் இயக்கத்துடன் தான் இணைந்து விட்டதைப் பறைசாற்றும் தொழிலாளி வர்க்கத்து தனிப்படைகளின் நடவடிக்கையாக இவை விளங்குகின்றன.”14

போராட்டத்தின் இன்னும் சிறந்த வடிவங்களின் மாதிரிகளை பிரிட்டிஷ் தொழிலாளர்கள் ஏற்கெனவே உருவாக்கி இருந்தனர். தனித்தனி முதலாளிகளை எதிர்த்து முழுமையற்ற பொருளாதாரப் போராட்டங்களை நடத்தி வந்த தொழிலாளர்கள், ஆதிக்கம் செலுத்தி வந்த வர்க்கங்களின் கூட்டாட்சியை – முதலாளித்துவ அரசை எதிர்த்துப் போராட்டம் நடத்தத் தொடங்கினார்கள்.

”சார்ட்டிசம் என்பது முதலாளி வர்க்கத்திற்கு எதிரான எதிர்ப்பின் ஒருமுகப்பட்ட வடிவம். தொழிற்சங்கங்களின் நடவடிக்கைகளிலும் வேலை நிறுத்தங்களிலும் இந்த எதிர்ப்பு எப்போதுமே துண்டு துண்டாகப் பிரிந்து நின்றது; தனித்தனித் தொழிலாளர்களோ, தொழிலாளர் குழுக்களோ தனித்தனி முதலாளிகளை எதிர்த்துப் போராடி வந்தனர்… சார்ட்டிச இயக்கத்திலோ, முதலாளி வர்க்கத்திற்கு எதிராகத் தொழிலாளி வர்க்கம் முழுமையுமே கிளர்ந்து எழுகிறது, முதலாளி வர்க்கத்தின் அரசியல் அதிகாரத்தையே பிரதானமாக எதிர்த்துத் தாக்குகிறது, முதலாளி வர்க்கம் தனது பாதுகாப்புக்காகப் போட்டுக் கொண்டிருந்த சட்டங்கள் என்ற வேலியின் மீது சார்ட்டிச இயக்கம் பாய்கிறது”15 என்று எங்கெல்ஸ் எழுதினார்.

மார்க்ஸ் குடும்பத்துடன் எங்கெல்ஸ்

லெனின் சொன்னபடி, எதிர்கால மார்க்சியத்தின் பல விஷயங்களைப் பெரும் புலமையுடன் முன்னறிவித்த சார்ட்டிச இயக்கம் எங்கெல்சின் மீது மிகப் பெரும் செல்வாக்கு செலுத்தியது. சார்ட்டிச இயக்கத்தின் முக்கியத்துவத்தை உயர்வாக மதிப்பிட்டு அதில் செயல் வேகத்துடன் ஈடுபட்ட எங்கெல்ஸ் இந்த இயக்கத்திற்கே உரியதாய் இருந்த பெரும் பலவீனங்களையும் சுட்டிக் காட்டினார். “சட்ட பூர்வமாகப்” புரட்சியைக் கொண்டு வர வேண்டும் என்னும் சார்ட்டிசக் கருத்தைச் சாடினார் எங்கெல்ஸ்; இது தானாகவே ஒரு முரண்பாடு எனவும் நடைமுறையில் சாத்தியமற்றது என்றும் அவர் நிரூபித்தார். “அவர்களின் சோஷலிசம் இன்னும் கருநிலையிலேயே இருக்கிறது” என்பதுதான் சார்ட்டிஸ்டுகளின் முக்கியமான பலவீனம் என்றும் ஏழ்மையை ஒழிப்பதற்காக இவ்வியக்கத்தின் தனித்தனித் தலைவர்கள் முன்வைக்கும் சமூகப் – பொருளாதாரச் சீர்திருத்தங்கள் – அதாவது, நிலத்தைத் துண்டு துண்டாகப் பிரித்துத் தொழிலாளர்களுக்கு வழங்கி விட வேண்டும் என்று அவர்கள் சொல்வதானது வளர்ந்து வரும் பெரும் இயந்திரத் தொழில் துறையைப் பார்க்கும் பொழுது அர்த்தமற்றதாக இருக்கின்றன என்றும் எங்கெல்ஸ் கருதினார்.

உற்பத்திச் சாதனங்கள் தனியார் கைகளில் இருப்பதை ஒழிப்பது அவசியம் என்று சார்ட்டிசம் புரிந்து கொள்ளும் அளவுக்குச் செல்லவில்லை என்றால், தனது பதாகையில் சோஷலிச முழக்கங்களை இவ்வியக்கம் இன்னும் பொறித்துக் கொள்ளவில்லை என்றால், அதற்கு பிரிட்டிஷ் சோஷலிஸ்டுகள்தான் கணிசமான அளவுக்குக் காரணம். பிரிட்டிஷ் சோஷலிசத்தின் தலைவரும் சித்தாந்தவாதியுமான ஓவன், மாபெரும் பிரெஞ்சுக் கற்பனாவாத சோஷலிஸ்டுகளான சான்-சிமோனையும் ஃபூரியேயையும் போலவே வெகுஜனத் தொழிலாளர் இயக்கம் வேண்டாமென்று ஒதுங்கி நின்று அரசியல் போராட்டம் என்பதையே ஏற்றுக் கொள்ள மறுத்தார்.

முதலாளித்துவச் சமுதாயத்தின் தீங்குகளையும் தீப்புண்களையும் ஈவிரக்கமின்றி அம்பலப்படுத்தி உழைக்கும் மக்களின் துயரங்களைக் கண்டு மிகப் பெரும் அனுதாபத்துடன் அவர்களை அணுகினார் என்பதே ஓவன் ஆற்றிய சந்தேகத்திற்கிடமற்ற பணியாகும். முன்னாள் ஆலை முதலாளியும் கொடைவள்ளலும் பின்னால் சோஷலிஸ்டுமான ஓவன் சமுதாயத்தை இன்னல்களிலிருந்து விடுவிப்பதைத் தம் கடமையாகக் கொண்டார். ஆனால் சான்-சிமோன், ஃபூரியே ஆகியோரின் சோஷலிசத்தைப் போலவே ஓவனுடைய கற்பனாவாத சோஷலிசத்தாலும் விடுதலைக்கான மெய்யான வழியைக் காட்ட முடியவில்லை. முதலாளித்துவத்தில் நிலவும் கூலி அடிமை முறையின் சாராம்சத்தை அதனால் விளக்க முடியவில்லை; முதலாளித்துவ முறையின் வளர்ச்சி பற்றிய விதிகளை அதனால் கண்டுபிடிக்க முடியவில்லை; ஒரு புதிய சமுதாயத்தின் படைப்பாளியாக அமைய வல்ல சமுதாயச் சக்தியை அதனால் சுட்டிக் காட்டவும் முடியவில்லை.”16

மேலிருந்து, உடைமை வர்க்கங்களிடமிருந்தும் அரசாங்கத்திடமிருந்தும் தனது விடுதலையை எதிர்பார்த்துக் காத்துக் கிடக்கும் உதவியற்றுத் தவிக்கும் மக்கள் திரளாகத்தான் கற்பனாவாத சோஷலிஸ்டுகள் பாட்டாளி வர்க்கத்தைப் பார்த்தார்கள். புதிய சமுதாயத்தைப் பற்றி தான் விரிவாகத் தீட்டியுள்ள திட்டத்தை நிறைவேற்றுவதற்காகத் தமது உதவியை அளிக்கவல்ல செல்வந்தர்கள் தன்னைப் போலவே முன்வருவார்கள் என்று ஓவன் நம்பினார். அமெரிக்காவில் ”புதிய சீரிசைவு” என்ற கம்யூனிசக் காலனியைத் தான் உருவாக்கியதன் மூலம் துவக்கி வைத்த கம்யூனிசக் காலனி கட்டுமான அனுபவம் உதாரணமாகத் திகழ்ந்து மனித குலம் முழுவதையும் இப்பாதையில் செல்லுமாறு நம்ப வைக்கும் என்று கருதினார். ஆனால் எதிர்பார்க்கப்பட்டபடியே, உடைமை வர்க்கங்களுக்கும் அரசாங்கங்களுக்கும் ஓவன் விடுத்த அறைகூவல் பயனற்ற பேச்சாக இருந்தது. தொழிலாளர்களின் நடைமுறைப் போராட்டத்திலிருந்து விலகிய ராபெர்ட் ஓவனின் சோஷலிசம் கற்பனையாகவே இருக்கும்படி நேரிட்டது.

பிரிட்டிஷ் தொழிலாளி வர்க்கத்தின் நிலைமை என்ற புத்தகத்தில் பிரிட்டிஷ் பாட்டாளி வர்க்கத்தின் பிரதானமான, தீர்மானகரமான கடமை சார்ட்டிசத்துடன் சோஷலிசத்தை இணைப்பதுதான் என்ற முக்கியமான முடிவுக்கு வந்தார் – எங்கெல்ஸ். அரசியல் போராட்டமும் தொழிலாளர்களின் வெகுஜனப் புரட்சி இயக்கமும் அத்தொழிலாளர்களைச் சோஷலிசத்திற்கு இட்டுச் செல்ல வேண்டும் என்று எங்கெல்ஸ் நிரூபித்தார். மறுபுறத்தில், சோஷலிசமானது தன்னந்தனிக் கற்பனாவாதிகளின் கனவுகளிலிருந்து விடுபட்டு ஒரு எதார்த்த சக்தியாக மாற வேண்டும் என்றால், அந்தச் சோஷலிசம் தொழிலாளி வர்க்கத்தின் வெகுஜன அரசியல் போராட்டத்தின் குறிக்கோளாக மாற வேண்டும் என்று அவர் காட்டினார்.

சோஷலிசத்தையும் தொழிலாளர் இயக்கத்தையும் ஒன்றிணைப்பது, கற்பனாவாத சோஷலிசமாக இருந்த ஒன்றை விஞ்ஞான சோஷலிசமாக மாற்றுவது, பலவீனமான தன்னந்தனி மனிதர்களின் கனவாக இருந்த, அளவில் பெரிய, வல்லமைமிக்க வர்க்கத்தின் கோட்பாடாக மாற்றுவது என்ற உலகம் தழுவிய வரலாற்றுப் பணி, கார்ல் மார்க்ஸ், பிரெடெரிக் எங்கெல்சின் தோள்களில் வீழ்ந்தது.

1  K. Marx, F. Engels, Collected Works, Vol. 4, p. 297.
2 கி. வேயெர்த், தேர்வு நூல்கள், மாஸ்கோ, 1953, பக்கம் 302 (ருஷ்ய மொழியில்).
3 V. I. Lenin, Collected Works, Vol. 29, Progress Publi shers, Moscow, p. 309. –
4 K. Marx, F. Engels, Collected Works, Vol. 6, p. 389.
5 மார்க்சையும் எங்கெல்சையும் பற்றிய நினைவுக் குறிப்புகள், பக்கம் 287 பார்க்க.
6 K. Marx, F. Engels, Collected Works, Vol. 3, p. 531.
7 K. Marx, F. Engels, Collected Works, Vol. 3, p. 406.
8 K. Marx, F. Engels, Collected Works, Vol. 3, pp. 418-443.
9 வி. இ. லெனின், கார்ல் மார்க்சும் அவரது போதனையும், முன்னேற்றப் பதிப்பகம், மாஸ்கோ, 1981, பக்கம் 71.
10  K. Marx, F. Engels, Collected Works, Vol. 3, p. 420.
11 K. Marx, F. Engels, Collected Works, Vol. 3, p. 437
12  K. Marx, F. Engels, Collected Works, Vol. 4, pp. 295– 583.
13 K. Marx, F. Engels, Collected Works, Vol. 4, p. 413.
14 K. Marx, F. Engels, Collected Works, Vol. 4, p. 512.
15 K. Marx, F. Engels, Collected Works, Vol. 4, p. 517.
16 வி. இ. லெனின், நூல் திரட்டு, நான்கு பாகங்களில், முதற் பாகம், முன்னேற்றப் பதிப்பகம், மாஸ்கோ, 1977, பக்கம் 33.

வினவு செய்திப் பிரிவு