முப்பத்தைந்து ஆண்டுகளுக்கு முன்பு நானும் எனது நண்பரும் திருச்சியில் இருந்த போது இரவு சிற்றுண்டிக்காக ஒரே உணவகத்திற்குச் (வீட்டு மெஸ்) செல்வது வழக்கம். ”என்னங்க தினமும் சாம்பாரில் கத்தரிக்காயை போடுகிறீர்கள்? வேறு காய்கறியே கிடையாதா?” என்று கேட்ட போது ”கத்தரிக்காய் இல்லாமல் எப்படி சாம்பார் வைக்க முடியும்?” என எதிர் கேள்வி போட்டார். அது போல வெங்காயம் இல்லாமல் சமையலா என்பதுதான் இன்று நமது இல்லத்தரசிகளின் கேள்வி.

திருச்சி ஓட்டல்களில் பரங்கியோ, பூசணியோ இல்லாத சாம்பாரைப் பார்ப்பது அரிது. கத்தரிக்காயை கரப்பான் என்கின்றனர் ஒரு சாரார். ஆனால் அது சர்வரோக நிவாரணி என்கின்றனர் மற்றொரு சாரார். அது கரப்பானோ இல்லை சர்வரோக நிவாரணியோ, எதுவாக இருந்தால் நமக்கென்ன? ருசிக்கிறதா, உடலுக்கு ஒத்துக் கொள்கிறதா, அணைகட்டி அமுக்குவதுதான் நமக்குத் தெரிந்த உண்மை.

திருச்சியின் மற்றுமொரு சுவாரசியமான உணவு வெங்காய சமோசா. சமோசா என்றாலே உள்ளே உருளைக் கிழங்கு இருக்கும். ஆனால் திருச்சி சமோசாவை உரித்துப் பார்த்தால் வெங்காயம் மட்டுமே இருக்கும். மாலை நேரங்களில் சந்துக்கு சந்து தள்ளுவண்டிகளில் இந்த மொறு மொறு வெங்காய சமோசா சக்கை போடு போடும். ருசி இல்லாமல் சக்கை போடு போட முடியுமா என்ன?

பக்கோடா வகையறாக்களிலேயே ஆகச் சிறந்தது எது என்றால் அது வெங்காய பக்கோடாதான். நீளவாக்கில் உதிரி உதிரியாக வெங்காயத்தை நறுக்கி மாவில் தோய்த்து எண்ணெய்யில் போட்டு மொறு மொறு என வறுத்து எடுத்தால் அடுத்த நொடியே அனைத்தும் காலியாகும். இதுதான் வெங்காய பக்கோடாவின் சிறப்பு. மோடி சொன்னது போல ஒரு வேளை பட்டதாரிகள் பக்கோடா போட்டால் அதில் கண்டிப்பாக வெங்காய பக்கோடா இருந்தால் நீங்கள் மோடியைக் காப்பாற்ற முடியும்.

பூண்டுக் குழம்பையும், பூண்டு ஊறுகாயையும் சுவைத்தவர்களுக்குத் தெரியும் அவற்றை நினைத்தாலே பாவ்லோவின் கட்டுப்படுத்தப்படாத அனிச்சைச் செயலாய் நாவில் எச்சில் ஊறும் என்பது. வெங்காய தயிர் பச்சடி மட்டும் இருந்தால் போதும் ஒரு கிலோ பிரியாணியும் கண் இமைக்கும் நேரத்தில் காணாமல் போகும்.

இரத்தக் கொழுப்பை சீராக வைத்துக் கொள்ளவும், இதயம் என்றும் பழுதின்றி இயங்கவும், பூண்டு மற்றும் வெங்காயம் மிகவும் அவசியம்; பூண்டையும் வெங்காயத்தையும் ஒதுக்காமல் தினமும் உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள், இதயம் சம்மந்தப்பட்ட பிரச்னைகளுக்கு குட் பை சொல்லுங்கள் என்கின்றனர் அன்றைய சித்தர்கள் முதல் இன்றைய அலோபதி மருத்துவர்கள் வரை.

மூக்கிலிருந்து பொலபொலவென எரிச்சலோடு நீர் கொட்டுகிறதா? அடிக்கடி சளி தும்மல் பிரச்சனையா? அல்லியம் சிபா மூன்று உருண்டைகளை வாயில் போட்டுப்பாருங்கள். சற்று நேரத்தில் இவை எல்லாம் காணாமல் போகும். கையில் கைக்குட்டையும் தேவைப்படாது. அல்லியம் சிபா வெங்காயச் சாற்றிலிருந்து தயாரிக்கப்படும் ஹோமியோபதி மருந்து.

இப்படி உலகமே கொண்டாடும் வெங்காயத்தை “நான் வெங்காயம் சாப்பிடுவதில்லை; அதனால் விலை உயர்வு ஒரு பொருட்டே இல்லை. நான் பூண்டு, வெங்காயம் சாப்பிடாத குடும்பத்திலிருந்து வந்தவள்“ என்கிறார் நிர்மலா சீதாராமன்.

உடல் ஏற்றுக் கொள்கிறதா, ருசி பிடிக்கிறதா என்பதைப் பொருத்து ஒரு பொருளை ஒருவர் விரும்பி உண்பதும், வெறுத்து ஒதுக்குவதும் அவரவரவர் தனிப்பட்ட உரிமை. அதில் தலையிட வேறு யாருக்கும் அதிகாரம் கிடையாது. இதைத்தான் சாப்பிட வேண்டும்; இதைச் சாப்பிடக் கூடாது என யாரும் யாரையும் கட்டாயப்படுத்த முடியாது.

ஆனால், “நானோ எனது குடும்பமோ வெங்காயம் சாப்பிடுவதில்லை” என்று நிர்மலா சீதாராமன்  சொல்வதன் பொருள் என்ன? வெங்காயம் சாப்பிடுபவன் இழிவானவன். சாப்பிடாத நாங்கள் உயர்வானவர்கள். அதனால்தான் அவரது பேச்சில் ஆணவம் தொனிக்கிறது. தான் விரும்பாத ஒரு பொருளை மற்றொருவர் சாப்பிடும் போது அவரை ஏளமாகப் பார்க்கும் பார்ப்பனியப் பார்வையின் வெளிப்பாடு இது.

தனிப்பட்ட முறையில் அவருக்கு வெங்காயத்தின் ருசி பிடிக்கவில்லை, உடலுக்கு ஒத்துக் கொள்ளவில்லை என்றால் அவரது கூற்றை ஏற்கலாம். ஏன் அவரது குடும்பமே பூண்டு, வெங்காயத்தை சாப்பிடுவதில்லை? அந்தக் குடும்பத்தில் ஒருவருக்குக்கூடவா பூண்டு, வெங்காய ருசி பிடிக்கவில்லை அல்லது உடலுக்கு ஒத்துக் கொள்ளவில்லை?

“இதுவரை வெங்காயத்தின் ருசியையே பார்த்ததில்லை, வெங்காயம் பயன்படுத்தாத எனக்கு அதன் விலையைப் பற்றி எப்படித் தெரியும்?” என நிர்மலாவுக்கு ஆதரவாக ஜால்ரா அடித்துள்ளார் உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த பாரதிய ஜனதா கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் அஷ்வினி சௌபே. நிர்மலா சீதாராமன் ஒரு பார்ப்பனர் என்பது ஊரறிந்த ஒன்று. கன்யாகுப்ஜ பார்ப்பனர்களில் பத்து பிரிவுகள் உண்டு. அதில் ஒரு பிரிவுதான் சௌபே பார்ப்பனர்கள். இந்த இருவரின் கூற்றிலிருந்து தெரிவது என்ன? பார்ப்பனர்கள் வெங்காயம், பூண்டு சாப்பிடுவதில்லை என்பதுதான்.

நிர்மலாவின் ஆணவப் பேச்சுக்கு நெட்டிசன்கள் அவரைத் திட்டித் தீர்க்கின்றனர். ஆனால் இது பற்றி நிர்மலா கவலைப்படப் போவதில்லை. காரணம் அவர் ஒரு சனாதனி. சனாதன தர்மத்தை கடைபிடிப்பவர்கள் வெங்காயம் பூண்டு சாப்பிடக் கூடாது என்கிறது பார்ப்பன இந்து மத சாஸ்திரங்கள்.

படிக்க:
நிர்மலா சீதாராமன் வெங்காயம் சாப்பிட மாட்டாராம் ! இதுல என்ன பெருமை … எருமை ?
ஹைதராபாத் என்கவுண்டர் : எங்கள் பெயரில் கொட்டடிக் கொலைகள் கூடாது | AIPWA கண்டனம் !

வெங்காயம், பூண்டு தவிர்க்கப்பட வேண்டிய உணவுகள் என சிவ புராணம் (7.10.12) கூறுகிறது. தர்ம நெறிகளைக் கடைபிடிப்பவர்கள் வெங்காயம், பூண்டைத் தவிர்க்க வேண்டும் என பத்ம புராணம் (4.56), ஹரி பக்தி விலாஸம் (8.158) ஆகிய வேத சாஸ்திரங்கள் தெளிவாக உரைக்கின்றன. வெங்காயம், பூண்டு உண்பவர்கள் பரிகாரம் மேற்கொள்ள வேண்டும் என்று கருட புராணம் (1.96.72) கூறுகிறது.

மீறி சாப்பிட்டால் என்னவாகும்? வேதம் ஓதாத பார்ப்பானும், ஆசாரத்தை கைவிடும் பார்ப்பானும், பூஜை காரியங்களை கைவிடும் பார்ப்பானும், சாப்பிடத்தகாததை சாப்பிடும் பார்ப்பானும் செத்துத் தொலைவார்கள் என்கிறது பார்ப்பன இந்து மதத்தின் சட்ட நூலான மனு தரும சாஸ்திரம். (மனு:5-4)

வெங்காயம், பூண்டு இவைகளைப் பார்ப்பனர்கள் சாப்பிடக் கூடாது. மீறி சாப்பிட்டால், சாப்பிட்ட உடனே கெட்ட சாதி ஆகிவிடுகிறார்கள். (out caste). (மனு: 5-5, 6). அதாவது வெங்காயம், பூண்டு சாப்பிடும் பார்ப்பனர்கள், பார்ப்பனத் தன்மையை இழந்து விடுகிறார்கள். பார்ப்பனத் தன்மையை இழப்பதும் செத்துப் போவதும் ஒன்றுதானே! இரண்டாயிரம் ஆண்டுகள் ஆனாலும் அவர்கள் தங்களது தருமத்தை அதாவது பார்ப்பனியத்தைக் காப்பதில் தெளிவாகத்தான் இருக்கின்றனர். அதனால்தான் வெங்காய விலை அவர்களுக்கு ஒரு பொருட்டாகவே இல்லை.

ஊரான்