இந்தியத் தலைநகரான புது தில்லி 2020-ம் ஆண்டில் கடுமையான குளிரால் பாதிக்கப்பட்டுள்ளது. இது வீதிகளில் வசிக்கும் வீடற்ற மக்களின் சுமையை மேலும் கூட்டியுள்ளது.
தில்லி அரசாங்கம் கிட்டத்தட்ட 200 இரவு தங்குமிடங்களை அமைத்தது. ஆனால், அவை நகரத்தின் வீடற்ற மக்கள் அனைவருக்கும் போதுமானதாக இல்லை. நூற்றுக்கணக்கானவர்கள் தங்கள் இரவுகளை திறந்த வெளியிலேயே கழிக்கும் கட்டாயத்திற்கு உள்ளாகியுள்ளனர்.
“எங்களிடம் சுமார் 40 படுக்கைகள் உள்ளன, இதில் ஒரு படுக்கையைப் பகிர்ந்து கொள்ளக்கூடிய குடும்பங்களின் அளவைப் பொறுத்து, அதிகபட்சமாக 60 பேருக்கு இடமளிக்க முடியும்” என்று ஹஸ்ரத் நிஜாமுதீன் ரயில் நிலையத்திற்கு அருகில் உள்ள இரவு வசிப்பிடங்களை நிர்வகிக்கும் சுனில் குமார், அல்ஜசீராவிடம் தெரிவித்தார்.
நாங்கள் ஒரு நபருக்கு இரண்டு அல்லது மூன்று போர்வைகளை வழங்க முடியும், ஆனால், இங்கு அடிக்கும் குளிருக்கு இது போதுமானதாகயில்லை. சில அறை ஹீட்டர்களும் இருக்க வேண்டும்,” என்றார்.
சிலர் நடைபாதையில் நெருப்பு எரிப்பதன் மூலம் தங்களை சூடாக வைத்திருந்தனர், அடர்த்தியான மூடுபனி புதன்கிழமை (01.01.2020) இரவு வெப்பநிலையை 2.4 டிகிரி செல்சியஸ் (36.3 டிகிரி ஃபாரன்ஹீட்) ஆகக் குறைத்து, சாலை, விமானம் மற்றும் ரயில் போக்குவரத்தை சீர்குலைத்தது.
திங்களன்று (30.12.2019), இந்திய தலைநகரம் 1901-ம் ஆண்டிற்கு பிறகு மிகக் குறைந்த வெப்பநிலை கொண்ட நாளை, வரலாற்றில் மீண்டும் பதிவு செய்தது. அதிகபட்ச அன்று வெப்பநிலை 9.4 செல்சியஸ் (48.9 ஃபாரன்ஹீட்) என்று மிகக் குறைந்த அளவிற்கு சரிந்தது.
“அதிகபட்ச வெப்பநிலை வட இந்தியாவின் பெரிய பகுதிகளிலும் 10 டிகிரிக்கு குறைந்தது” என்று புது தில்லியில் உள்ள பிராந்திய வானிலை முன்னறிவிப்பு மையத்தின் தலைவர் குல்தீப் ஸ்ரீவாஸ்தவா, அல் ஜசீராவிடம் தெரிவித்தார்.
தலைநகரைத் தவிர, ஜம்மு-காஷ்மீர், ராஜஸ்தான், பஞ்சாப், அரியானா மற்றும் உத்தரப்பிரதேசம் ஆகியவை தொடர்ந்து கடுமையான குளிர் அலையை எதிர்கொண்ட பிற இந்திய மாநிலங்கள் மற்றும் பிரதேசங்கள் ஆகும்.
“பொதுவாக ஜனவரி மாதத்தில்தான் வெப்பநிலையானது குறையும், ஆனால், இந்த முறை டிசம்பர் மாதத்திலேயே பல தசாப்தங்களின் சாதனையை இந்தக் குளிர் முறியடித்துள்ளது” என்று ஸ்ரீவாஸ்தவா மேலும் கூறினார்.
அடர்த்தியான மூடுபனி போக்குவரத்தை கடுமையாக சீர்குலைத்தது, இது புது தில்லி விமான நிலையத்தில் விமானங்கள் ரத்து செய்யப்படுவதற்கும், ரயில் தாமதத்திற்கும் வழிவகுத்தது. புதுடெல்லியில் இருந்து 29 ரயில்கள் புதன்கிழமை (01.01.2020) தாமதமாக வந்ததாக ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.