தீண்டாமைக்கு எதிராக டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் போராடினார். அரசியலமைப்பும் 1950-ல் அதைத் தடைசெய்தது. ஆனால் தேசிய அவமானம் என்றும், பாவச்செயல் என்றும் ஏடுகளில் குறிப்பிடப்பட்டாலும் சாதித்தீண்டாமை இந்தியாவின் பல பகுதிகளிலும் இன்னும் பீடித்திருக்கிறது.

வட இந்தியாவில் 49 விழுக்காடு குடும்பங்கள் சாதித் தீண்டாமையை இன்னமும் கடைப்பிடிப்பதாக சமீபத்திய எக்கனாமிக் & பொலிடிகல் வீக்லி (EPW) இதழின் ஆய்வு கூறியிருக்கிறது. ஆனால் தென்னிந்தியாவில் 20 விழுக்காடு குடும்பத்தினர் மட்டுமே தீண்டாமையை கடைப்பிடிப்பதாக ஆய்வின் ஆசிரியர்களான அமித் தோரத் (Amit Thorat) மற்றும் ஓம்கர் ஜோஷி (Omkar Joshi) கூறுகின்றனர். இந்திய மனித மேம்பாட்டு கணக்கெடுப்பு -2 (IHDS) 2012 ஐ அடிப்படையாகக் கொண்டு இந்த ஆய்வினை அவர்கள் மேற்கொண்டுள்ளனர்.

தோரத், ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் (JNU) பொருளாதாரப் பேராசிரியராகவும், ஜோஷி, மேரிலாந்து பல்கலைக்கழகத்தில் (University of Maryland) சமூகவியல் துறையில் அறிஞராகவும் பணிபுரிகின்றனர். சமூகத்தின் பல்வேறு பிரிவுகளில் தீண்டாமையின் பரவலை ஆய்வு செய்வதற்காக தகவல்களை பல்வேறு பகுதிகளாக அவர்கள் பிரித்தனர். IHDS – II இன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் 42,000 வீடுகளில் தேசிய செயல்முறைப் பொருளியல் ஆய்வுக் குழு (National Council of Applied Economic Research) மற்றும் மேரிலாந்து பல்கலைக்கழகமும் சேர்ந்து இந்த கணக்கெடுப்பை நடத்தின. ஆய்வின் சாராம்சமான விவரங்கள்;

படிக்க:
♦ தீண்டாமை முள்கம்பி வேலிக்குள் முடக்கப்பட்ட தருமபுரி காவக்காடு கிராமம் !
♦ CAA-வை எதிர்த்ததால் கோவா கலாச்சார விழாவிலிருந்து பத்திரிகையாளர் ஃபாயே டிசோசா நீக்கம் !

ஊரக-நகர வேறுபாடு:

30 விழுக்காட்டு கிராமப்புற குடும்பங்கள் தீண்டாமை பழக்கத்தை கடைப்பிடிப்பதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது. நகர்ப்புறங்களில் இது 20 விழுக்காடாக குறைந்துள்ளது. நகரங்கள் மக்களை ஓரிடத்தில் குவிப்பதுடன் அவர்களின் வாழ்நிலையை ஒன்று போலானதாக்குகிறது. “பழையன கழிதலும் புதியன புகுதலும்” போல பிரிவினைகள் போற்றும் பழைய பிற்போக்கு கலாச்சாரங்களை கைவிட்டு அந்த இடத்தில் அனைவரையும் உள்ளடக்கும் புதியதொரு கலாச்சாரத்தை ஏற்றுக்கொள்ள நகரச்சூழல் அவர்களை நெருக்குவதே இதற்கு முதன்மையான காரணமாக இந்த ஆய்வு கூறுகிறது.

மதரீதியான வேறுபாடு:

கணக்கெடுக்கப்பட்டவர்களில் அதிக அளவில் அதாவது 35 விழுக்காட்டு சமண குடும்பங்கள் தீண்டாமையை கடைப்பிடிக்கின்றன. சமணர்கள் கண்டிப்பான மரக்கறி உணவுப்பழக்கம் கொண்டவர்களாக இருப்பதால் இறைச்சி உணவு உண்பவர்களை தங்களது சமையலறைக்குள் விடுவதில்லை. அடுத்ததாக 30 விழுக்காடு இந்துக்கள் தீண்டாமையை கடைப்பிடிக்கின்றனர். புத்த சமயத்தைப் பின்பற்றும் 1 விழுக்காடு குடும்பங்கள் மட்டுமே தீண்டாமையைக் கடைப்பிடிப்பதாக இந்த ஆய்வு கூறுகிறது.

இந்து மதத்தின் தீண்டாமையில் இருந்து தப்புவதற்காக புத்த மற்றும் சமண மதத்திற்கு மாறிவர்களும், இந்து மத்திலேயே இருக்கும் ஒடுக்கப்பட்ட பிரிவினரும் இடஒதுக்கீடு மூலம் ஓரளவிற்கு பொருளாதார ரீதியில் முன்னேறியுள்ளனர். அதே சமயத்தில் தீண்டாமை கொடுமையிலிருந்து தப்புவதற்காக இசுலாம் மற்றும் கிருத்துவ சமயங்களுக்கு மாறியவர்களுக்கு இடஒதுக்கீடும் இல்லை. மதமாற்றமும் அவர்களது சாதி அடையாளத்தை சொல்லிக்கொள்ளும்படியாக அழிக்கவில்லை. அவர்கள் இன்னும் சமூகத்தின் அடிமட்டத்திலேயே வாழ்ந்து வருகின்றனர்.

கல்வியின் தாக்கம்:

கல்வியறிவற்ற சுமார் 30% மக்கள் இன்னும் தீண்டாமையை கடைப்பிடித்து வருகின்றனர். அதே நேரத்தில் பட்டப்படிப்போ அல்லது பட்டயப்படிப்போ படித்த இளைஞர்கள் இருக்கும் வீடுகளில் தீண்டாமை 6 விழுக்காடு குறைந்துள்ளது.

பார்ப்பனர்கள், இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், பட்டியல் வகுப்பினர் மற்றும் பட்டியல் பழங்குடி வகுப்பினரிடையே கல்வி உயர உயர தீண்டாமை கடைபிடிக்கும் குடும்பங்களின் எண்ணிக்கையும் குறைந்து வருவது ஆய்வில் தெரிய வந்தது. பள்ளிப்படிப்பிலிருந்து கல்லூரி படிப்பு என கல்வியின் மட்டம் உயரும் அதே நேரத்தில் பார்ப்பனர்களிடையே 69 விழுக்காட்டிலிருந்து 48 விழுக்காடாக தீண்டாமை குறைந்துள்ளது.

படிக்க:
♦ பிரேசில் அதிபருக்கும் மோடிக்கும் என்ன ஒற்றுமை ?
♦ தமிழகத்தில் தீவிரமடைந்து வரும் தீண்டாமைக் குற்றங்கள் ! 

கல்வியின் நிலை உயர உயர தீண்டாமையின் அளவு குறைவதாக ஆய்வு கூறுகிறது. இதற்கு இடஒதுக்கீடு ஒரு குறிப்பிட்ட அளவிற்கு காரணம் என்று ஆய்வு கூறுகிறது. ஆனால் 1990 -களில் தனியார்மய கொள்கைகளை புகுத்திய பிறகு கல்விக்கான அரசு கட்டமைப்பு சிதைந்து வருவதால் இதில் ஒரு பெரும் தேக்கம் இருப்பதை நாம் பார்க்க முடியும்.

பொருளாதாரக் காரணி:

ஏழைகள், இரண்டாம் பிரிவினர், நடுத்தர பிரிவினர், நான்காம் பிரிவினர் மற்றும் பணக்காரர் என்று வருமானத்தின் அடிப்படையில் குடிமக்களை ஐந்து குழுக்களாக ஆய்வாளர்கள் பிரித்துள்ளனர். வரைப்படத்தில் ஏழைகளில் இருந்து பணக்காரர் நோக்கி செல்ல செல்ல தீண்டாமையின் அளவு குறைந்திருக்கிறது.

32.56 விழுக்காட்டு ஏழைக்குடும்பங்கள் தீண்டாமையைக் கடைப்பிடிக்கும் அதே நேரத்தில் பணக்காரர்களிடையே இந்த எண்ணிக்கை 23.35 விழுக்காடாக குறைந்திருக்கிறது என்று ஆய்வு கூறுகிறது.

வட்டார வேறுபாடு:

வட மாநிலங்களில் சுமார் 40 விழுக்காடு குடும்பங்கள் மற்றும் மைய மாநிலங்களில் சுமார் 49 விழுக்காடு குடும்பங்கள் தீண்டாமையை கடைப்பிடிக்கின்றன. அதே நேரத்தில் மேற்கு மாநிலங்களில் 13 விழுக்காடு குடும்பங்கள் மட்டுமே தீண்டாமை வழக்கத்தை பின்பற்றுகின்றன. கிழக்கு மாநிலங்களில் 17 விழுக்காடு மக்கள் இந்த வழக்கத்தை பின்பற்றுகின்றன.

“இந்த ஆய்வை 2015 முதல் நாங்கள் செய்து வருகிறோம். இந்த ஆய்வு பகுதி அளவிலாக இருந்த போது நாடாளுமன்ற உறுப்பினர் சசி தரூர் மேற்கோள் காட்டினார். சமூகத்தில் தீண்டாமை இன்னமும் எவ்வாறு நிலவுகிறது என்பதைப் புரிந்துகொள்ள இந்த ஆய்வு உதவுகிறது” என்று ஆய்வாளர்களில் ஒருவரான அமித் தோரட் கூறினார்.

இன்றைக்கு யாரு சார் சாதி பார்க்கிறார்கள் என்று ஆங்காங்கே சிலர் முனகுவது நம்முடைய செவிகளில் விழத்தான் செய்கிறது. சாதியொழிப்பு தான் முதன்மையானது வர்க்க விடுதலையை அப்புறம் பார்த்துக்கொள்வோம் என்று தலித் விடுதலையை முன்னிறுத்துபவர்களும் கூறுகின்றனர். ஆனால் பொருளாதார விடுதலையின்றி சாதி விடுதலையோ, ஏன் பெண் விடுதலையும் கூட சாத்தியமன்று என்பதையே இந்த ஆய்வின் முடிவு காட்டுகிறது.

 கட்டுரையாளர் : ஐஷ்வர்யா ஸ்ரீராம்

தமிழாக்கம் : சுகுமார்
நன்றி :  EPW, நியூஸ் மீட்டர்.