“எனது நிர்வாகத்திடம் உலக சுகாதார மையத்துக்கு வழங்கப்பட்டு வரும் நிதி உதவியை நிறுத்தி விடுமாறு நான் இன்றைக்கு உத்தரவிட்டுள்ளேன். கொரோனா வைரஸ் பரவலுக்கு அதன் மோசமான நிர்வாகம் எந்தளவுக்கு காரணமாக இருந்தது என்பதைக் குறித்த விசாரணை நடந்து வருகிறது. எல்லோருக்குமே இதில் என்ன நடந்தது என்று தெரியும்” என ஏப்ரல் 14ம் தேதி அறிவித்தார் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்.

அமெரிக்காவுக்கெல்லாம் கொரோனா வராது என்று முதலில் சவடால் பேசி வந்த டிரம்ப், பிறகு அமெரிக்காவில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து தற்போது பட்டியலில் முதல் இடத்தைப் பிடித்துள்ள நிலையில் சீனா தான் அனைத்துக்கும் காரணம் எனப் பேசி வருகிறார். ஜனவரி மாதத்தின் மத்திய பகுதி வரை இந்த வைரஸ் மனிதர்களிடம் இருந்து மனிதர்களுக்குப் பரவாது என சீன அரசு சொல்லி வந்ததை உலக சுகாதார மையம் ஏற்று பிரச்சாரம் செய்ததாகவும், அந்நிறுவனத்தின் இது போன்ற சீனச் சார்பு நடவடிக்கைகளே வைரஸ் பரவலுக்கு காரணமாகி விட்டது என்றும் டிரம்ப் குற்றம் சுமத்துகிறார்.

மேலும் சீனாவில் வைரஸ் தொற்று அறியப்பட்டதும் அங்கே என்ன நடக்கிறது என்பதை அறிந்து கொள்ள உலக சுகாதார மையம் தவறி விட்டது என்றும், சீன அரசின் இரும்புத் திரையைக் கடந்து தணிகை செய்யப்பட்டு வரும் செய்திகளை அப்படியே நம்பியது எனவும் குறிப்பிட்டுள்ளார். சீன அரசு சர்வதேச பயணங்களுக்கு தடை விதிக்க தேவையில்லை என்று சொன்னதையும் உலக சுகாதார மையம் அப்படியே ஏற்றுக் கொண்டதாக டிரம்ப் சுட்டிக்காட்டுகிறார்.

டிரம்பின் இந்த முடிவை பல்வேறு சர்வதேச நாடுகளும் கடுமையாக எதிர்த்துள்ளன. குறிப்பாக அமெரிக்காவுக்கு வால் பிடிக்கும் நாடுகளான கனடா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளும் ஐரோப்பிய யூனியனும் டிரம்பின் முடிவை விமரிசித்துள்ளன. குறிப்பாக ஜெர்மன் அரசு மிகக் கடுமையாக எதிர்த்துள்ளது. கொரோனா வைரஸ் உலகளவில் ஒரு பேரழிவை ஏற்படுத்தி வரும் இந்த சூழலில் ஒருவருக்கு ஒருவர் குற்றம் சாட்டிக் கொள்வதோ மற்றவரை பலிகடா ஆக்குவதோ பலனளிக்காது என்றும் இந்த சூழலில் உலக சுகாதார மையம் போன்ற ஒரு பொதுவான அமைப்பை முடக்குவது சரியல்ல என்றும் இந்நாடுகள் குறிப்பிடுகின்றன.

அமெரிக்காவிற்கு உள்ளேயே டிரம்பின் முடிவுக்கு எதிர்ப்புகள் எழுந்துள்ளன. சில முதலாளித்துவ பத்திரிகைகள், பிப்ரவரி மாத இறுதி வரை டிரம்ப் சுமார் 14 முறை சீனாவின் செயல்பாடுகளைப் பாராட்டிப் பேசியதை மேற்கோள் காட்டி, தற்போது அமெரிக்க கொரோனா நிலவரம் கைமீறிப் போவதை உணர்ந்த டிரம்ப் பழியை சீனாவின் மீது போட முயல்வதாக குற்றம் சாட்டுகின்றன. உலக சுகாதார மையத்துக்கு நிதிப் புரவலராக உள்ள மைக்ரோசாப்ட் நிறுவனர் பில் கேட்சும் டிரம்பின் முடிவு தவறானது என விமரிசித்துள்ளார்.

உலக சுகாதார மையத்திற்கான நிதியை அமெரிக்கா வெட்டவுள்ளதாக டிரம்ப் அறிவித்துள்ளது அந்நிறுவனத்தின் உதவியை பெரிதும் சார்ந்துள்ள இந்தியா உள்ளிட்ட ஏழை நாடுகளை கடுமையாக பாதிக்கும். எனினும், இவ்விசயத்தில் இந்தியா மிக மென்மையான எதிர்ப்பை பதிவு செய்துள்ள அதே சமயம், பல்வேறு ஆப்ரிக்க நாடுகளோ மிகக் கடுமையாக சாடியுள்ளன.

படிக்க:
♦ கொரோனா – கருத்துப்படங்கள் !
♦ அமெரிக்கா : கொரோனாவுக்கு பலியாகும் கருப்பின ஏழை மக்கள் !

உலக சுகாதார மையத்திற்கு அதன் உறுப்பு நாடுகளும் நிதி உதவி அளிக்கின்றன. கடந்தாண்டு இந்தியா சுமார் 4.1 மில்லியன் டாலர் நிதி அளித்துள்ளது. அதே ஆண்டில் அமெரிக்கா சுமார் 500 மில்லியன் டாலர் நிதியளித்துள்ளது.

கொரோனா வைரசின் தோற்றம் என்னவென்பதைக் குறித்து இன்னமும் ஒரு தெளிவான முடிவுக்கு விஞ்ஞான உலகம் வந்தடையவில்லை. வௌவால்கள் மூலம் பரவியிருக்கலாம் அல்லது வேறு மிருகங்கள் மூலம் பரவி இருக்கலாம் என்பதெல்லாம் ஒரு கருதுகோள் அளவிலேயே உள்ளது. அதன் தோற்றம் குறித்தும், அதை வெல்வது எப்படி என்பதைக் குறித்தும் அறிவியல் உலகம் ஒரு முடிவுக்கு வர மேலும் சில காலம் ஆகலாம். எனினும், அது சீனத்துப் பரிசோதனைச் சாலையில் உருவாக்கப்பட்ட உயிரி ஆயுதம் என்று வாட்சாப் விஞ்ஞானிகளும் இன்னபிற சதிக் கோட்பாட்டாளர்களும் பரப்பி வருகின்றனர்.

உலக சுகாதார மையத்தின் தலைவர் டெட்ரோசையும், சீனாவையும் டிரம்ப் குறிவைப்பதற்கு மேற்படி வில்லேஜ் விஞ்ஞானிகளின் கற்பனைக் கதைகள் மட்டும் காரணங்களாக இல்லை. டிரம்பின் முடிவின் பின் அவரது அரசியல் நலன் ஒளிந்துள்ளது. எதிர்வரும் அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசுக் கட்சியின் சார்பில் மீண்டும் போட்டியிட இருக்கிறார் டிரம்ப். இந்த நிலையில் தான் கொரோனா வைரஸ் அமெரிக்காவை ஆட்டிப்படைத்து வருகின்றது. மொத்த நாடும் முடங்கியுள்ள நிலையில் நோயால் அதிகரித்து வரும் மரணங்களும், அது உண்டாக்கும் அச்சமும் ஒரு புறம் என்றால் நொறுங்கிச் சரிந்து வரும் பொருளாதாரம் இன்னொரு புறம் மக்களை நெருக்கி வருகிறது. கொரோனாவுக்கு பிந்தைய பொருளாதார நிலவரம் மிக மோசமாக இருக்கும் என்றும், வேலையிழப்புகள் அதிகரிக்கும் என்றும் பல்வேறு பொருளாதார நிபுணர்கள் சுட்டிக் காட்டுகின்றனர்.

படிக்க:
♦ குளோரோகுயின் மாத்திரைகள் : அமெரிக்காவின் மிரட்டலும், 56 இஞ்ச்சும் !
♦ கொரோனா நிவாரண நடவடிக்கையில் மக்கள் அதிகாரம் ! செய்திகள் படங்கள்

எனவே இதற்கெல்லாம் காரணமாக ஒரு எதிரியை சுட்டிக்காட்ட வேண்டிய அரசியல் தேவை டிரம்புக்கு உள்ளது. பல பத்தாண்டுகளாக “ரஷிய அரக்கனிடம்” இருந்து உலகைக் காக்கும் பொறுப்பை தலையில் சுமப்பதாக அமெரிக்க மக்களை வெறியூட்டி தமது ஏகாதிபத்திய சுரண்டலையும், ஆக்கிரமிப்புப் போர்களையும் நியாயப்படுத்திக் கொண்டனர் அமெரிக்க ஆளும் வர்க்கத்தினர். இப்போது “ரஷிய அரக்கனின்” இடத்தை “சீன டிராகன்” பிடித்துக் கொண்டுள்ளது.

தனது தோல்விக்கான காரணத்தை ஒரு அந்நியரின் மேல் சாட்டி அந்த அந்நியருக்கு எதிரானதாக தேச வெறியை கட்டமைப்பது பாசிஸ்டுகளின் வழக்கமான தந்திரம் – இந்தியர்களாகிய நாம் இந்த தந்திரத்தை பார்த்து வருகிறோம். அதன் அமெரிக்க வடிவம் தான் டிரம்பின் சீன எதிர்ப்பு அரசியல். ஆனால், பாசிஸ்டுகளின் இடம் எது என்பதை வரலாறு தொடர்ந்து பதிவு செய்தே வந்துள்ளது – இந்த முறை அதை கொரோனா வைரஸ் செய்யும்.


– தமிழண்ணல்
நன்றி :  த வயர். 

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க