“கொரானா : தனியார் மருத்துவமனைகளை கையகப்படுத்தி, அதற்கான செலவினங்களை அரசே ஏற்க வேண்டும்.”  – நாம் தொடுத்த பொதுநலவழக்கு விசாரணைக்கு 10.06.2020 அன்று வந்தது!

பத்திரிக்கைச் செய்தி

நாள் : 09.06.2020

COVID-19 நோய்க்கு சிகிச்சை அளிக்க 110 தனியார் மருத்துவமனைகளுக்கு அனுமதி அளித்து கடந்த 03.04.2020 தேதியிட்டு தமிழக அரசு அரசாணை (G.O.Ms.174) வெளியிட்டிருந்தது.

நாடு முழுவதும் பேரிடராக பரவிவரும் கொரானா நோய்த் தொற்றினை தடுத்து மக்களைக் காப்பாற்ற உரிய நடவடிக்கை எடுக்காமல் தனியார் மருத்துவமனைகள் கொரானா நோயினை வைத்து கொள்ளயடிப்பதற்கே மேற்படி அரசாணை வழிவகுக்கும். எனவே, மேற்படி அரசாணையில் கொரானா சிகிச்சைக்கு கட்டணம் செலுத்த வேண்டும் என்ற பகுதியினை ரத்து செய்து, தனியார் மருத்துவமனைகளிலும் கொரானாவிற்கான சிகிச்சையினை இலவசமாக வழங்க அரசு ஏற்பாடு செய்ய வேண்டும் எனக்கோரி மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையத்தின் சென்னை கிளைச் செயலாளர் திரு.ஜிம்ராஜ் மில்ட்டன் சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தாக்கல் செய்தார் (W.P.No7456/2020).

கடந்த 09.04.2020 அன்றே இவ்வழக்கு விசாரணைக்கு எடுக்கப்பட்ட போதிலும் கடந்த 2 மாத காலமாக எவ்வித பதில்மனுவும் தாக்கல் செய்யாமல் அரசு இழுத்தடித்து வந்தது.

படிக்க:
தேசிய பேரிடரான கொரானா தடுப்பு நடவடிக்கை குறித்து உயர் நீதிமன்றத்தில் PRPC வழக்கு !
♦ கொரோனா பாதித்தவர்களுக்கு என்ன சிகிச்சைகள் வழங்கப்படுகின்றன ?

இவ்வழக்கு 09.06.2020 அன்று மாண்புமிகு நீதிபதிகள் வினித்கோத்தாரி மற்றும் சுரேஷ்குமார் ஆகியோர் அடங்கிய அமர்வின் முன்பாக காணொளி முறையில் விசாரணைக்கு எடுக்கப்பட்டது.

மனுதாரர் தரப்பில் மூத்த வழக்கறிஞர் திரு.பாலன் ஹரிதாஸ் உடன் வழக்கறிஞர் பார்த்தசாரதி ஆஜராகினர்.

மூத்த வழக்கறிஞர் பாலன் அரிதாஸ் உடன் வழக்கறிஞர்கள் பார்த்தசாரதி மற்றும் மில்டன்.

கொரானா தொற்றினை தனிப்பட்ட நோயினைப்போல கருதி தனியார் மருத்துவமனைகளில் கட்டணம் வழங்கி சிகிச்சை பெற முடிவு செய்த அரசின் முடிவு சட்ட விரோதமானது, கொரானா நோய்த் தொற்றிலிருந்து மக்களைக் காக்க வேண்டிய தனது பொறுப்பினை கைவிட்டுவிட்டு, தனியார் மருத்துவமனைகள் கொள்ளையடிக்கவே இது வழிவகுக்கும். தேசிய பேரிடர் மேலாண்மைச் சட்டத்தின் கீழ் கொரானா நோய்த் தொற்றிற்கு சிகிச்சை அளிக்கும் வகையில் தனியார் மருத்துவமனைகளை கையகப்படுத்தி, அதற்கான செலவினங்களை அரசே ஏற்க வேண்டும். மேலும், கொரானா நோய்த் தொற்று மற்றும் ஊரடங்கினால் மிகுந்த நெருக்கடியில் இருக்கும் மக்கள், சிகிச்சைக்கு எப்படி செலவு செய்ய முடியும் ? என வாதிட்டார்.

அரசு தரப்பில் ஆஜாரான அரசு வழக்கறிஞர் திரு.ஜெயப்பிரகாஷ் நாராயணன் வழக்கில் பதில் மனு தாக்கல் செய்ய மீண்டும் 2 வாரம் கால அவகாசம் கோரினார்.

இதனை ஏற்க மறுத்த மாண்புமிகு நீதிபதிகள் கொரானா தொற்று பெரும் அச்சுறுத்தலாக பரவி வரும் நிலையில் இதனை சாதாரண வழக்கைப் போல பாவித்து 2 வார காலம் அவகாசம் கொடுக்க முடியாது. கொரானா சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனைகள் கூடுதலாக கட்டணம் வசூலிப்பது பற்றி ஊடகங்கள் வாயிலாக தகவல் வருகிறது.

எனவே, அரசு கொரானா தொற்றிற்காக எத்தனை மருத்துவமனைகளில் (அரசு மற்றும் தனியார்) எத்தனை படுக்கை வசதிகள் ஏற்படுத்தியுள்ளது, சிகிச்சை அளிக்க ஒதுக்கப்பட்ட மருத்துவர்கள், செவிலியர்கள் எண்ணிக்கை, ICU வார்டுகள், செலவினங்கள், அதற்கான அரசின் நடவடிக்கைகள் ஆகிய விபரங்களடங்கிய அறிக்கையினை ஒருவார காலத்திற்குள் தாக்கல் செய்ய வேண்டுமென உத்தரவிட்டனர்.

மேலும், நீதிபதிகளே தாமாக முன்வந்து மத்திய அரசையும் மனுதாரராக இணைத்து, மத்திய அரசையும், மாநில அரசையும் மேற்குறிப்பிட்ட அறிக்கை மற்றும் பதிலுரை தாக்கல் செய்யுமாறு உத்தரவிட்டு வழக்கினை 16.06.2020 தேதிக்கு ஒத்தி வைத்தனர்.

தகவல் :
மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம்
சென்னைக் கிளை.