கொரோனாவிற்கு மருந்தே இல்லையே. மருத்துவர்கள் என்ன சிகிச்சை அளிக்கிறார்கள் என்ற ஐயம் பலருக்கு இருக்கிறது.

கொரோனாவிற்கு மருந்து இல்லை என்று சொல்வது நேரடியாக வைரஸைக் கொல்லும் மருந்துகள் இல்லை என்பதைத் தான் குறிக்கிறது. உதாரணம் டி.பி நோய்க்கு அதற்கே உரிய ஆண்ட்டி பயாட்டிக் மருந்துகள் இருக்கின்றன. அவை நோய்க் கிருமியைக் கொல்கின்றன. அது போல் கொரோனாவுக்கு இல்லை.

அப்படியானால் கொரோனா பாதித்தவர்களுக்கு என்ன சிகிச்சைகள் வழங்கப் படுகின்றன?

1. அதீத காய்ச்சல் இருந்தால் அதைக் குறைக்க மருந்துகள்

2. சளி இருந்தால் அது வெளியேற மருந்துகள், நுரையீரலுக்காக பிஸியோதெரப்பி

3. வாய்வழியாக உணவு உட்கொள்ள முடியவில்லை என்றால் சலைன், க்ளூக்கோஸ் போன்றவை ஏற்றுதல்

4. கொரோனா நுரையீரலைப் பாதிப்பதால் ரத்தத்தில் ஆக்ஸிஜன் அளவு குறைய தொடங்கும். அதற்காக ஆக்ஸிஜன் கொடுக்கப்படும்

5. இரத்தத்தில் ஆக்ஸிஜன் அளவு மிகக் குறைந்த அளவுக்குச் சென்றுவிட்டால் வெண்டிலேட்டர் என்ற செயற்கை சுவாசம் கொடுக்க வேண்டும்

6. சிலருக்கு நுரையீரலில் உள்ள ரத்தக் குழாய்களில் ரத்த உறைவு ஏற்பட்டு மரணம் ஏற்படுகிறது. அதனால் ரத்த உறைவைத் தடுக்க ஹெப்பாரின் போன்ற மருந்துகள்

7. வெள்ளை அணுக்களிலிருந்து அதீதமாக வெளியேறும் சைட்டோக்கைன் (Cytokine) என்னும் ரசாயனம் வைரஸைக் கொல்கிறது. ஆனால் சிலருக்கு இது தாறுமாறாகச் சுரந்து ரத்தக் குழாய்களையும், நுரையீரல் செல்களையும் அழிக்கிறது. இதனால் ARDS ( Acute Respiratory Distress Syndrome) எனப்படும் மூச்சுத் தினறல் ஏற்படுகிறது. இதைத் தடுக்க methylprednisolone, Infliximab போன்ற மருந்துகளைச் செலுத்த வேண்டும்.

8. சிலருக்குச் சிறுநீரக பாதிப்பு ஏற்படக் கூடும் . அவர்களுக்கு டயாலிஸிஸ் சிகிச்சை.

9. இதயத்தின் சுவர்களில் வைரஸ் பாதிப்பால் இருதயத் துடிப்பு தாறுமாறாக இருந்தால் அதைச் சரிசெய்யும் சிகிச்சை.

10. ரத்தத்தில் சர்க்கரை அளவு, ரத்த அழுத்தம் போன்றவை சீராக இல்லையென்றால் அவற்றைச் சீர் செய்யச் சிகிச்சை.

11.HCQS ( Hdroxy chloroquine ) போன்று கொரோனாவைக் கொல்வதாகச் சில ஆய்வுகளில் கண்டறியப் பட்ட மருந்துகளைப் பரிட்சார்த்த முறையில் பயன்படுத்துவது

12. நுரையீரலில் வேறு பாக்டீரியாக்கால் எளிதில் தொற்றிக் கொள்ளும். ஆகவே அதற்கான ஆண்டிபயாட்டிக் மருந்துகள்.

13. பொதுவாக எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க வைட்டமின்கள் , (கபசுரக் குடிநீர் போன்றவையும் இதில் அடங்கும்)

படிக்க:
♦ கடன் நெருக்கடி தரும் நிறுவனங்களுக்கு எதிராக களமிறங்கிய திருச்சி மக்கள் !
♦ கொரோனா : பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவி செய்யும் வடசென்னை மக்கள் உதவிக்குழு !

இந்தப் பாதிப்புகளையெல்லாம் கண்டறிந்து சிகிச்சை செய்ய அடிக்கடிக் கீழ்கண்ட பரிசோதனைகள் எடுக்க வேண்டும்.

அவை

1. நோயாளியின் உடல் வெப்பநிலை ரத்தத் துடிப்பு , ரத்த அழுத்தம், ரத்த ஆக்ஸிசன் அளவு (Pulse oximeter என்ற கருவி மூலம் விரல் நுனியில் அளக்கலாம்). சாதாரண நோயாளிகளுக்கு நான்கு அல்லது எட்டு மணிநேரத்துக்கு ஒருமுறையும், தீவிர நோயாளிகளுக்குத் தேவைப்பட்டால் தொடர்ச்சியாகவும் பார்க்க வேண்டும்

2. வெள்ளை அணுக்கள் எண்ணிக்கை, சர்க்கரை, யூரியா, க்ரியாட்டினின், கல்லீருக்கான என்ஸைம்கள் போன்ற ரத்தப் பரிசோதனைகள்

3. ரத்தக் குழாய் உறைவை அறிய D – Dimer என்ற ரத்தப் பரிசோதனை

4. நுரையீரலில் நிமோனியா பாதிப்பை அறிய எக்ஸ் ரே, சி.டி ஸ்கேன் போன்ற பரிசோதனைகள்

5. ஈ.சி.ஜி , எக்கோ போன்ற இருதயத்துக்கான பரிசோதனைகள்

6. மூக்கில் அல்லது தொண்டையில் உள்ள நீரில் கொரோனா கிருமியைக் கண்டறியும் Nasal or Throat swab.

7. ரத்தத்தில் அமிலத் தன்மை , ஆக்ஸிஜன் , கார்பன் மோனாக்ஸைட் (Arterial Blood gas )- வெண்டிலேட்டரில் இருக்கும் தீவிர நோயாளிகளுக்கு

இவைதான் கொரோனா நோயாளிகளுக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள் மற்றும் பரிசோதனைகள்.

குறுகிய காலத்தில் பலருக்குப் பாதிப்பு ஏற்பட்டால் இவற்றையெல்லாம் செய்ய முடியாமல் மருத்துவமனைகள் ஸ்தம்பித்துவிடும். இதையெல்லாம் தவிர்க்க வேண்டும் என்றால் கவனமாக இருங்கள்!! மாஸ்க் அணிவது, கைகளைக் கழுவுவது, சமூக விலகல் இவைதான் இப்போதைக்கு நமக்குக் கொரொனா வராமல் காக்க உதவும் தடுப்பூசிகள்

– டாக்டர். ராமானுஜம்

நன்றி : ஃபேஸ்புக்கில் Ramanujam Govindan 

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க