உத்தரப் பிரதேசத்தில் மண்டல பஞ்சாயத்து தலைவர்களைத் தேர்தெடுப்பதற்கான உள்ளாட்சித் தேர்தல் கடந்த 10-ஆம் தேதி நடந்தது. இந்த தேர்தலில் பா.ஜ.க பெரும்பான்மையாக வெற்றி பெற்றிருக்கிறது. இதற்கு முன் நடந்து முடிந்த மாவட்ட பஞ்சாயத்து தலைவர்களுக்கான தேர்தலிலும் அதேபோல பா.ஜ.க வெற்றி பெற்றிருக்கிறது.
மொத்தமுள்ள 825 இடங்களுக்காக நடைபெற்ற தேர்தலில் 349 பேர் போட்டியின்றி ஒருமனதாக தேர்வு செய்யப்பட்ட நிலையில் மீதமுள்ள 476 இடங்களுக்கான தேர்தல் நடைபெற்றது. இதற்காக காங்கிரஸ், சமாஜ்வாதி, பா.ஜ.க ஆகிய கட்சிகள் போட்டியிட்டன. இந்த தேர்தலில் எப்படியாவது வெற்றிபெற்றுவிட வேண்டுமென பல இடங்களில் ஆள் கடத்தல், வன்முறை என பகிரங்கமாகவே இறங்கியிருக்கிறது பா.ஜ.க.
படிக்க :
♦ உ.பி காவி தர்பார் : 1200 போலி மோதல் கொலை – 160 பேர் NSA – வில் கைது ! சிறப்புக் கட்டுரை
♦ உ.பி பீகார் இடைத்தேர்தலில் பாரதிய ஜனதாவின் தோல்வி ஏன் ?
மண்டல பஞ்சாயத்து தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தலில் தொகுதி மேம்பாட்டுக் கமிட்டி உறுப்பினர்களும் வாக்களிக்க தகுதி உள்ளதால் அவர்களை கடத்தி தன் கட்டுப்பாட்டுக்குள் வைத்துக்கொள்ள முயற்சித்திருக்கிறது பா.ஜ.க. கும்பல்.
அதன்படி, தினர்ப்புவா கிராமத்தின் தொகுதி மேம்பாட்டு கமிட்டி உறுப்பினரான யாதுரை தேவியின் வீட்டிற்கு சென்று அவரை கடத்த முயன்றிருக்கிறது. அப்போது அங்கிருந்த 60 வயது மதிக்கத்தக்க நபரான யாதுரை தேவியின் உறவினர் மாயாராம் அவர்களை தடுக்க முயன்றபோது தாங்கள் கொண்டுவந்த துப்பாக்கியால் தாக்கி அவரை கொன்றுள்ளார்கள்.
கவுசாம்பி மாவட்டம் சிராத்து பகுதியைச் சேந்த சுயேட்சை வேட்பாளர் ஒருவரின் வீட்டில் போலீசு சோதனை நடத்திய போது தொகுதி மேம்பாட்டு கமிட்டி உறுப்பினர்கள் 18 பேரை கடத்தி வந்து வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
லக்கிம்பூர் மாவட்டத்தில் வேட்புமனு தாக்கல் செய்யப்போன சமாஜ்வாதி கட்சியின் பெண் வேட்பாளர் மற்றும் அவருடன் வந்த மற்றொரு பெண்ணின் சேலையையும் பிடித்து இழுத்து பொறுக்கித்தனத்திலும் ஈடுபட்டுள்ளார்கள்.
தேர்தலுக்கு முன்னர் இவ்வளவு செய்தார்கள் என்றால், தேர்தல் நாளன்றும் கலவரத்தில் ஈடுபட்டு தங்கள் கைவரிசைகளை காட்டியுள்ளார்கள். இந்த கலவரத்தின் போது போலீசு ஒருவரை பளாரென்று கன்னத்தில் அறைந்துள்ளது பாஜக கும்பல். அந்த போலீசு, “சார்… பா.ஜ.க தொண்டர்கள் என்னை கன்னத்தில் அறைந்துவிட்டார்கள். அவர்கள் வெடிகுண்டுகளை எடுத்து வந்துள்ளனர்” என்று தனது மேலதிகாரியிடம் போனில் பேசும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகியது.
உன்னாவ் மாவட்டத்தில் பா.ஜ.க-வின் கையாளான திவ்யன்ஷூ பட்டேல் எனும் மாவட்ட வளர்ச்சி அதிகாரி பா.ஜ.க-வினரோடு சேர்ந்து தேர்தல் முறைகேட்டில் ஈடுபட்டபோது அதை பத்திரிக்கையாளர் வீடியோ எடுத்திருக்கிறார். இதனை பார்த்த அந்த அதிகாரி அவரை அடித்து படுகாயப்படுத்தியிருக்கிறார்.
Mr CDO your behaviour reeks of high handedness and arrogance. I totally condemn this. This is not the way an officer is supposed to treat people. These incidents bring a bad name to the service. Shameful pic.twitter.com/Ce9b1PBZEW
— Supriya Sahu IAS (@supriyasahuias) July 11, 2021
இப்படி அரசு அதிகாரிகளின் துணையோடு சங்க பரிவாரக் கிரிமினல்களின் பாசிச வெறியாட்டத்தின் மூலமாகத்தான் தேர்தலில் வென்றிருக்கிறது பா.ஜ.க.
அடுத்த ஆண்டு உத்தரப் பிரதேசத்தில் சட்டப் பேரவை தேர்தல் நடக்கவிருக்கிறது. அந்தத் தேர்தல் எப்படி நடக்கவிருக்கிறது என்பதற்கு இந்த உள்ளாட்சித் தேர்தலே சாட்சியாக இருக்கிறது.
அனைத்து அரசு நிறுவனங்களிலும் ஊடுருவியுள்ள சங்க பரிவாரக் கும்பலின் துணையோடு, இந்தியாவையே ஒரு இந்து ராஷ்டிரமாக மாற்றும் வேலையை திட்டமிட்டு நடத்தி வரும் ஆர்.எஸ்.எஸ். – பாஜக-வின் சதித் திட்டத்தின் ஒரு பகுதிதான் இத்தகைய தேர்தல் வன்முறைகள் !
பால்ராஜ்