இலங்கையின் கஷ்டப் பிரதேசங்களிலுள்ள ஆசிரியர்களைப் போலவே அங்கிருக்கும் மாணவர்களுக்கும் நிகழ்நிலை கல்வி நடவடிக்கைகளுக்குத் தேவையான இணையத் தொடர்பாடங்களைப் பெற்றுக் கொள்ள பல கிலோமீட்டர்கள் நடந்து, உயரமான மலையுச்சிகளுக்கு ஏற வேண்டிய நிர்ப்பந்தம் தற்போது ஏற்பட்டுள்ளது.
இணையத் தொடர்பாடலுக்கான சிக்னலைப் பெற்றுக் கொள்ளவே அவர்கள் இவ்வாறு காட்டு யானைகளும், சிறுத்தைப் புலிகளும் நடமாடும் காட்டுப் பகுதிகளினூடாக பயணம் செய்ய வேண்டியிருக்கிறது.
கொவிட்-19 தொற்று நோயின் காரணத்தினால் பாடசாலைகள் மூடப்பட்டிருப்பதனால், மாணவர்களின் கல்வியை தொடர்ச்சியாக மேற்கொள்ளும் முகமாக கல்வி இணையத் தளங்களில் பதிவேற்றப்படும் பாடங்களைப் பதிவிறக்கிக் கொள்ளவே மாணவர்களும், ஆசிரியர்களும் இவ்வாறான சிரமங்களை எதிர்கொண்டு வருகிறார்கள்.
படிக்க :
♦ பசில் ராஜபக்சேக்கு அமைச்சர் பதவி : ராஜபக்சே குடும்பத்தின் பிடியில் இலங்கை || ரிஷான் ஷெரிஃப்
♦ இலங்கை : போலீஸ் கைதுகளின் பின்னரான படுகொலைகள் || எம். ரிஷான் ஷெரீப்
மாணவர்கள் அனைவருக்கும் மடிக்கணினியோ, இணைய வசதி கொண்ட தொலைபேசிகளோ இல்லாத காரணத்தால் ஐந்தாறு மாணவர்களுக்கு ஒரு கருவி என பகிர்ந்து கொண்டு பயன்படுத்தி வருகிறார்கள்.
இந்த மாணவர்களோடு, விவசாயம் செய்து வரும் இவர்களது பெற்றோரும் தமது பிள்ளைகளின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு இந்தப் பயணத்தில் இணைந்து கொள்கிறார்கள். ஆறாம் ஆண்டில் கல்வி கற்று வரும் தனது மகனுடன் தினந்தோறும் இரண்டு தடவைகள் மலையேறி இறங்கும் தாய் பத்மினி குமாரி, தற்காலத்தில் பிள்ளைகளின் பாதுகாப்புக்கு பெரிதும் அச்சுறுத்தல்கள் நிலவுவதால் தானும் கூடவே வருவதாகக் கூறுகிறார்.
இலங்கையின் மத்திய – கிழக்கு மாகாணங்களிடையே அமைந்திருக்கும் இவ்வாறான கிராமங்களில் அடிப்படை வசதிகள் கூட காணப்படாததோடு பிள்ளைகள் கல்வி கற்கவும் பதினாறு கிலோமீட்டர்கள் தொலைவிலுள்ள அரச பாடசாலைக்கே செல்ல வேண்டியிருக்கிறது. அதுவும் கூட தற்போது மூடப்பட்டுள்ளது.
இவ்வாறாக போஹிட்டியாவ கிராமத்தைச் சேர்ந்த ஆசிரியர்கள், மாணவர்கள் என கிட்டத்தட்ட 45 பேர், கல்விக்கான இணையத் தொடர்பாடங்களைப் பெற்றுக் கொள்ள தினந்தோறும் மலையேறி வருகிறார்கள்.
அவ்வாறே, லுணுகலை கிராமத்தில் பெற்றோர்கள் தமது பிள்ளைகளோடு காட்டின் மத்தியிலிருக்கும் மலையுச்சியில் ஒரு மரத்தின் மீது கட்டப்பட்டிருக்கும் ஒரு குடிலுக்கு கல்விக்காகச் செல்கிறார்கள். அது கிட்டத்தட்ட முப்பது அடிகள் உயரமான குடில் என்பதோடு மாணவர்களுக்கு கற்றல் நடவடிக்கைகளுக்காக அந்த இடத்துக்கு மாத்திரமே இணையத் தொடர்பு கிடைக்கிறது.
இலங்கையிலுள்ள அநேகமான பாடசாலைகள் 2020-ஆம் ஆண்டு மார்ச் மாதத்திலிருந்து மூடப்பட்டுள்ளன. நாட்டிலுள்ள அனைத்து மாணவர்களுக்கும் கல்வியைத் தொடர்ச்சியாக வழங்குவதற்கு உரிய நடவடிக்கைகள் எடுப்பதாக அதிகாரிகள் கூறுகிறார்கள். எனினும், இலங்கையிலுள்ள 4.3 மில்லியன் மாணவர்களில் 40 சதவீதமான மாணவர்களுக்கு மட்டுமே இணையத்தள வகுப்புகளில் பங்குபெரும் வாய்ப்புகள் உள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளரான ஜோசப் ஸ்டாலின் கூறுகிறார். ஏராளமான மாணவர்களுக்குத் தேவையான கருவிகளோ, இணைய வசதிகளோ இல்லை.
இலங்கையில் கல்வியைப் பெற்றுக் கொள்ளப் பாடுபடும் மாணவர்கள் பற்றிய இந்த விபரங்களுக்கு ஆதாரமாக அல்ஜஸீரா ஊடகத்தில் வெளியிடப்பட்டுள்ள புகைப்படங்களை இத்துடன் காணலாம்.








ஆன்லை வகுப்பிற்காக மரக்கிளைகளில் அமர்ந்திருக்கிறார்கள் இலங்கை சிறுவர்கள்.


எம். ரிஷான் ஷெரீப்
செய்தி ஆதாரம் : அல்ஜசீரா