privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புபுதிய ஜனநாயகம்கம்யூனிசக் கல்விவிரிவான விவரங்களில் இருந்து உண்மையைக் கண்டறிவீர் || தோழர் மாவோ

விரிவான விவரங்களில் இருந்து உண்மையைக் கண்டறிவீர் || தோழர் மாவோ

விவரங்களில் இருந்து உண்மையைக் கண்டறிவதும் அதன் அடிப்படையில் பரிசீலனைகளை மேற்கொள்வதுமே ஒரு கட்சி தன்னை மேம்படுத்திக் கொள்வதற்கு வழிவகுக்கும்

-

பாகம் 1 : புத்தக வழிபாட்டை எதிர்ப்போம் || தோழர் மாவோ
பாகம் 2 : பழமைவாத எண்ணங்களை மாற்றிக் கொள்வீர் || தோழர் மாவோ
பாகம் 3
7. பரிசீலனைக்கான உத்தி
1. உண்மை அறியும் கூட்டங்களை நடத்தி, விவாதங்கள் மூலம் பரிசீலனை மேற்கொள்ளுங்கள்.
உண்மைக்கு அருகில் செல்வதற்கும், முடிவுகளை தீர்மானிக்கவும் இதுதான் ஒரே வழி. உண்மை அறியும் கூட்டங்கள் நடத்தி, விவாதங்கள் மூலம் பரிசீலனை செய்யாமல், ஒரு தனி மனிதர் தனது அனுபவங்களில் கூறுவதை நம்பினால், எளிதாக தவறு இழைக்கப்படும். விவாதத்தில் முக்கிய கேள்விகளை எழுப்புவதற்குப் பதிலாக, அத்தகைய கூட்டங்களில் அலட்சியமான கேள்விகளைக் கேட்டால், நீங்கள் ஏறக்குறைய சரியான முடிவுகளை எடுப்பது சாத்தியமில்லை.
2. உண்மையறியும் கூட்டங்களில் எவ்வகையான மக்கள் பங்கேற்க வேண்டும்?
அவர்கள் சமூக மற்றும் பொருளாதார நிலைமைகளை நன்கு அறிந்தவர்களாக இருக்க வேண்டும். வயதை பொறுத்தவரை, அனுபவத்தில் முதிர்ந்தவர்களாகவும், என்ன நடக்கிறது என்று அறிந்தவர்களாகவும் உள்ள முதியோர்களே மிகவும் சிறந்தவர்கள். போராட்ட அனுபவமுள்ள இளைஞர்களையும் நாம் இதில் இணைத்துக் கொள்ள வேண்டும். ஏனெனில் அவர்களிடம் முற்போக்கு சிந்தனையும் கூர்மையான பார்வையும் உள்ளது. தொழிலைப் பொறுத்தவரை, தொழிலாளிகள், விவசாயிகள், வணிகர்கள், அறிவாளிகள் ஆகியோர் அவசியம் இருக்க வேண்டும், எப்போதாவது இராணுவத்தினர் இருக்கலாம். சில சமயங்களில் நாடோடிகளையும் சேர்த்துக் கொள்ளலாம். ஒரு குறிப்பிட்ட விஷயம் பற்றி ஆய்வு செய்யும் போது, அதனோடு தொடர்பற்றவர்கள் இருக்கத் தேவையில்லை. உதாரணமாக, பரிசீலனைக்கான பொருள் வர்த்தகமாக இருக்கும்போது தொழிலாளிகளும், உழவர்களும், மாணவர்களும் கலந்து கொள்வது தேவையில்லை.

படிக்க :

எங்கெல்ஸ் 200 : நாம் ஏன் எங்கெல்ஸை பயில வேண்டும் | தோழர் லெனின்

கம்யூனிஸ்ட்கள் என்றாலே தவறிழைக்காத முனிவர்களா? | தோழர் மாவோ

3. மிகப்பெரிய உண்மையறியும் கூட்டமா? அல்லது சிறிய கூட்டமா? எது சிறந்தது?
அது பரிசீலனை செய்பவரின் கூட்டம் நடத்தும் திறனைச் சார்ந்தது. அவர் அதில் தேர்ந்தவராக இருப்பின், இருபதும், அதற்கு மேலும் உள்ளவர்களைக் கொண்ட கூட்டத்தைக்கூட கூட்டலாம். பெரிய கூட்டங்களுக்கென்று சில நன்மைகள் இருக்கின்றன. அளிக்கப்படும் பதில்களிலிருந்து கிட்டத்தட்ட துல்லியமான புள்ளி விவரங்களைப் பெறலாம். (உதாரணமாக: மொத்த விவசாயிகளில் ஏழை விவசாயிகளின் சதவீதத்தை கண்டுபிடித்தல்) கிட்டத்தட்ட சரியான முடிவுகளைப் பெறலாம் (உதாரணமாக: சமமான நில மறு விநியோகமா, வேறுபடுத்தப்பட்ட நிலப் பகிர்வா எது நல்லது என்று கண்டுபிடித்தல்). இயல்பாகவே, பெரிய கூட்டங்களால் தீமைகளும் உள்ளன. கூட்டங்களை நடத்துவதற்கான திறமையோடு இல்லாவிடில், ஒழுங்கை நிலைநிறுத்துவது சிரமமாய் இருக்கும். எனவே பரிசீலனை செய்பவரின் திறனைப் பொறுத்தே ஒரு கூட்டத்தில் கலந்து கொள்வோரின் எண்ணிக்கை சார்ந்திருக்கிறது. எனினும், குறைந்தபட்சம் மூன்று பேர் இருக்க வேண்டும். இல்லாவிடில், உண்மை நிலைக்கு ஒத்துவராத அளவிற்கு அக்கூட்டங்களில் பெறப்படும் தகவல்கள் குறைவாக இருக்கும்.
4. பரிசீலனைக்கு விரிவான திட்டவரையறைகளை தயாரிக்க வேண்டும்.
முன்பாகவே, விரிவான திட்டவரையறை தயாரிக்க வேண்டும். பரிசீலனை செய்பவர் திட்டவரையறைகளின்படி கேள்வி கேட்க வேண்டும். கூட்டத்தில் பங்கேற்போர் அவர்களது பதில்களைக் கூற வேண்டும். தெளிவற்ற அம்சங்களும் சந்தேகத்திற்குரிய அம்சங்களும் விவாதத்திற்கு விடப்பட வேண்டும். விரிவான திட்டவரையறைகளில் முக்கியமான பொருட்களும், துணைத் தலைப்புகளும், விரிவான விவரங்களும் இடம்பெற வேண்டும். உதாரணமாக, வர்த்தகத்தை முக்கியப் பொருளாக எடுத்துக் கொண்டால், துணி, தானியம், இதர அத்தியாவசியப் பொருட்கள், மூலிகைகள் போன்ற துணைத் தலைப்புகளை கொண்டிருக்க வேண்டும். மீண்டும், துணி என்ற துணைத் தலைப்பின்கீழ், காளிக்கோ, வீட்டில் நெய்யப்பட்டவை, பட்டு, பளபளப்பான பட்டு போன்ற விரிவான விவரங்கள் இருக்கலாம்.

படிக்க :

நவம்பர் புரட்சி 100 ஆண்டு நிறைவு : கம்யூனிசம் வெல்லும் !

எஃகுறுதி வாய்ந்த கட்சி வேண்டும் | லெனின்

5. நேரடி பங்கேற்பு:
நகர அரசாங்கத்தின் தலைவர் முதல் மத்திய அரசாங்கத்தின் தலைவர் வரை, படைப்பகுதித் தலைவர் முதல் முதன்மைத் தளபதி வரை, கட்சிக் கிளையின் செயலாளர் முதல் பொதுச் செயலாளர் வரை, தலைமைப் பொறுப்பு வகிக்கும் ஒவ்வொருவரும் – மற்றும் பொருளாதார நிலைமைகளைப் பற்றி நேரடியாக பரிசீலனை செய்ய வேண்டும். அறிக்கைகள் மட்டும் படித்து, அவற்றை மட்டும் சார்ந்திருக்கக் கூடாது. பரிசீலனை செய்வதும், அறிக்கைகள் படிப்பதும் முற்றிலும் வெவ்வேறான விஷயங்கள்.
6. ஆழமாக ஆராய்க:
ஒரு குறிப்பிட்ட இடத்தின் (ஒரு கிராமமோ, நகரமோ என்று கொள்க) ஒரு குறிப்பிட்ட பிரச்சனையை (தானியம் அல்லது நாணயம் பற்றிய பிரச்சனை என்று கொள்க) பற்றி முழுமையாக அறிந்து கொள்ளும் பொருட்டு, பரிசீலனைக்கு புதியவர் எவரும் ஒன்று அல்லது இரண்டு முழுமையான பரிசீலனைகளை மேற்கொள்ள வேண்டும். ஒரு குறிப்பிட்ட இடம் அல்லது பிரச்சனையைப் பற்றி ஆழமாய் ஆராய்ந்தால், வேறு இடங்களில் அல்லது வேறு பிரச்சனைகளில் எதிர்காலத்தில் செய்யப்படவுள்ள தீவிர ஆய்வுகளை அது எளிதாக்கும்.
7. நீங்களே உங்கள் சொந்தக் குறிப்புகளை தயாரியுங்கள்:
பரிசீலனை செய்பவர்கள் உண்மை அறியும் கூட்டங்களுக்கு தலைமை வகித்து, அங்கிருப்பவர்களுக்கு சரியான வழிகாட்டுதலை வழங்குவதோடு நின்றுவிடாது, சொந்தக் குறிப்புகளையும் தயாரித்து, முடிவுகளை தாமே பதிவு செய்ய வேண்டும். அவருக்காக மற்றவர்களை செய்ய விடுவது நல்லது அல்ல.
(முற்றும்)
தோழர் மாவோ
நூல் : மாவோ – தேர்ந்தெடுக்கப்பட்ட படைப்புகள் – தொகுதி 6
கிடைக்குமிடம் : அலைகள் வெளியீட்டகம்
தொடர்புக்கு : 98417 75112

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க