மோடியின் உயிருக்கு பாதுகாப்பில்லையா? ஐந்து மாநில சட்டமன்ற தேர்தல்களுக்கான மோடியின் இன்னொரு நாடகம் !
“நான் உயிரோடு இருக்கிறேன் என்று உங்கள் முதல்வரிடம் சொல்லுங்கள்” என்று மோடி அதிகாரிகளிடம் கூறியதாக செய்திகள் ஊடகங்களில் பரவுகின்றன. முன்னாள் முதல்வர் அம்ரீந்தர்சிங் “பாகிஸ்தானில் இருந்து சில கிலோமீட்டர் தூரமே உள்ள இடத்தில் இச்சம்பவம் நடந்துள்ளது. காங்கிரசு அரசே இதற்கு காரணம் ” என்று கூறியுள்ளார். இதையே பிஜேபின் தலைவர்கள் கோபம் கொப்பளிக்கப் பேசியுள்ளனர்.
”.மோசமான வானிலை மற்றும் விவசாயிகளின் போராட்டம் காரணமாக , மோடியின் பயணத்தை ரத்து செய்யச்சொன்னோம் . மோடி கலந்து கொள்ளும் கூட்டத்தில் சுமார் 70000 நாற்காலிகள் போடப்பட்டதாகவும் ஆனால் 700 பேர் மட்டுமே கூட்டத்திற்கு வந்திருந்ததால்தான் மோடி தன்னுடைய பயணத்தை ரத்து செய்தார்.” என்று அம்மாநில முதல்வர் சரண்ஜித்சிங் சன்னி தெரிவித்துள்ளார்.
கடந்த 5ம் தேதி பஞ்சாப் சென்ற பிரதமர் நரேந்திர மோடியின் கார் , விவசாயிகளால் மறிக்கப்பட்டதாகவும் இது காங்கிரசின் திட்டமிட்ட சதி என்றும் பிரதமர் உயிருக்குக்கூட பஞ்சாபில் பாதுகாப்பு இல்லை என்றும் சதியின் பின்னணியில் காலிஸ்தான் அல்லது பாகிஸ்தான் உள்ளதா என்பது போன்ற பல விவாதங்களை திட்டமிட்டு ஆளும் வர்க்கமும் பிஜேபியும் உருவாக்கியுள்ளன.
படிக்க :
மோடி இப்போது சரியான பாதையில் செல்கிறார் : பல்டியடித்த சத்யபால் மாலிக்
#GoBackModi என்றால் மோடி எதிர்ப்பு மட்டும்தானா?
ஒரு வருடத்திற்கு மேலாக 800-க்கும் மேற்பட்டோரின் உயிரைத்தியாகம் செய்த, வீரம் செறிந்த விவசாயிகளின் போராட்டத்தின் காரணமாக மோடி அரசு கொண்டு வந்த வேளாண் திருத்தச்சட்டங்கள் திரும்பப் பெறப்பட்டன. இப்போராட்டங்களின் ஊடே மோடியின் முகத்திரையை கிழித்து தொங்கவிட்டுள்ளனர் விவசாயிகள். இழந்த பிம்பத்தை மீண்டும் பெறுவதற்கு மோடி எப்படி குட்டிக்கரணமிட்டாலும் மக்கள் தயாராக இல்லாத சூழலில்தான் இச்சம்பவம் நடைபெற்றுள்ளது.
சிலமாதங்களில் உத்திரபிரதேசம், பஞ்சாப் உள்ளிட்ட ஐந்து மாநிலங்களில் சட்டமன்ற தேர்தல்கள் நடைபெற உள்ளதற்கும் கடந்த மாதம் பஞ்சாப் நிதிமன்றத்தில் வெடிகுண்டு வெடித்ததற்கான காரணங்கள் முழுமையாக கண்டறியப்படாத சூழலில் மோடி பஞ்சாப் செல்ல வேண்டிய அவசியம் என்ன? என்ற கேள்விக்கும் தொடர்பில்லாமல் இல்லை.
இத்தேர்தல்களில் வெற்றி பெறுவதற்கு ஒரு உத்தியாக மோடி மீது கொலை முயற்சி என்ற வதந்தி திட்டமிட்டு பரப்பப்படுகின்றது. பஞ்சாப் மாநில மக்கள் – சீக்கியர்கள் மீது தீவிரவாத முத்திரை குத்தி பிரதமரை கொல்ல முயற்சித்தார்கள் என்ற பழியை சுமத்தி அந்த அனுதாப அலையை பயன்படுத்த ஆர்.எஸ்.எஸ். – பிஜேபி கும்பல் முயல்வதையே அவர்களின் செயல்பாடுகள் நிரூபிக்கின்றன. இதை வைத்தே சீக்கியர்கள் மீது அடக்குமுறையை மேற்கொள்ளவுமான வாய்ப்புக்கள் உள்ளன. இந்த சதித்திட்டத்தை நாம் முறியடிக்க வேண்டும்.
பிரதமரின் காரையே மறித்துவிட்டார்கள், மோடி பாலத்தின் மீது அனாதையாக இருந்தார் என்பது போன்ற பல செய்திகள் மோடியின் மீது கழிவிரக்கம் ஏற்படுத்துவதற்காக பரப்பப்படுகின்றன. பஞ்சாப் மற்றும் அரியானாவில் விவசாயிகள் ஒன்றிய அரசின் அமைச்சர்களையும் பிஜேபியினரையும் பலமுறை மறித்து ஓடவிட்டுள்ளனர். வேளாண் திருத்தச் சட்டங்களை ஆதரித்துப் பிரச்சாரம் செய்து வந்த அரியானாவின் துணை முதல்வர் , துணை சபாநாயகர் ஆகியோரை மறித்து விவசாயிகள் போராட்டம் செய்து இருக்கின்றனர். அது போலத்தான் மக்கள் விரோத சட்டங்களின் நாயகனான பாசிச மோடியும் பஞ்சாபின் உழவர்களால் தடுத்து நிறுத்தப்பட்டு இருக்கிறார்.
மக்கள் விரோதிகளுக்கு எதிராக போராடுவதற்கு மக்களுக்கு உரிமை உள்ளதா இல்லையா? 1996-ம் ஆண்டு பிரச்சாரத்துக்கு வந்து ஜெயலலிதா விரட்டியடிக்கபட்டாரா இல்லையா? இது போல பலரும் தேர்தல் காலங்களிலும் மற்ற நேரங்களிலும் விரட்டியடிக்கப்பட்டுள்ளனர். காவிரி நதி நீர் ஆணையம் அமைக்க தடையாக இருந்த மோடிக்கு எதிராக மொத்த தமிழ்நாடும் GOBACK MODI என்று ஒற்றைக் குரலாக முழங்கியது.
அன்று தமிழ் மக்களின் போராட்டங்களுக்கு பயந்து மூத்திர சந்து வழியாக சென்னை ஐஐடிக்கு சென்ற மோடி , இன்று பஞ்சாப் விவசாயிகளுக்கு பயந்து மேம்பாலத்தின் மீது சில நிமிடங்கள் இருக்க வைக்கப்பட்டு இருக்கிறார், அவ்வளவுதான். அதற்கு மேல் அதில் ஒன்றுமே இல்லை. கடும் குளிரிலும் கார் ஏற்றியும் கொல்லப்பட்ட விவசாயிகளின் வேதனையைவிட, குஜராத்திலும் சிஏஏ எதிர்ப்புப் போராட்டங்களிலும் கொல்லப்பட்ட முசுலீம்களின் துயரத்தை விட, மோடியின் ஆட்சியில் அனைத்துப்பிரிவு மக்களும் அனுபவித்துக்கொண்டு இருக்கும் வேதனையைவிட மோடியின் வேதனை ஒன்றும் பெரிதல்ல
மருது
மக்கள் அதிகாரம்