எந்த மாநிலத்திலும் பட்டினிச் சாவுகள் எதுவும் பதிவாகவில்லை என உச்ச நீதிமன்றத்தில் ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது. கடந்த ஜனவரி 18-ம் தேதியன்று உச்ச நீதிமன்றம் பட்டினிச் சாவுகள் குறித்து ஒன்றிய அரசிடம் பல்வேறு கேள்விகளை எழுப்பியது. அப்போது, 2015-ம் ஆண்டு சுகாதார ஆய்வு அறிக்கை மற்றும் ஒரு செய்தித்தாள் கட்டுரையின் புள்ளிவிவரங்களை சுட்டிக்காட்டி பட்டினி சாவுகளே இல்லை என்று ஒன்றிய அரசு வாதிட்டது.
ஒரு மாநிலம் கூட பட்டினிச் சாவுகள் இல்லை என்று ஒன்றிய அரசு தாக்கல் செய்த பிரமாணப் பத்திரத்தை குறிப்பிட்டு, “நீங்கள் ஏன் 2015-2016 அறிக்கையைப் பார்க்கிறீர்கள்? இப்போது பட்டினி சாவுகள் இல்லை என்பதற்கு ஏதேனும் தரவுகள் இருக்கிறதா? செய்தித்தாள் செய்தியைப் ஏன் பார்க்க வேண்டும்?” என்று இந்திய தலைமை நீதிபதி ரமணா, நீதிபதிகள் போபண்ணா மற்றும் ஹிமா கோலி ஆகியோர் அடங்கிய அமர்வு ஒன்றிய அரசிடம் கேள்வியெழுப்பியது.
“நாட்டில் பட்டினிச் சாவுகள் இல்லை என்பதை எப்படி புரிந்து கொள்வது? உங்களின் அதிகாரிகளிடம் பட்டினிச் சாவுகள் பற்றிய சமீபத்திய தகவல்கள் இருக்கிறதா? பட்டினிச் சாவுகள் நடக்கிறதா இல்லையா என்பதைக் குறிக்கும் ஆய்வு அறிக்கை ஏதேனும் உள்ளதா? உங்கள் அதிகாரிகளிடம் இத்தகவல்களை அளிக்கச் சொல்லுங்கள்” என்று நீதிமன்றம் ஒன்றிய அரசிடம் கேட்டது.
படிக்க :
♦ பட்டினிச் சாவுகளின் மீதேறி ஆசிய பசிபிக் பிராந்திய ஆதிக்கம் பெற்ற இந்தியா !
♦ ஏழைகளை பட்டினிச் சாவுக்குத் தள்ளும் ஆதார் !
பட்டினி சாவுகளை பிரேத பரிசோதனை மூலம் மட்டுமே கண்டறிய முடியும் என்றும், பட்டினி சாவுகளை அடையாளம் காண அதிகாரிகள் உண்மையான முயற்சியை மேற்கொள்ள வேண்டும் என்றும் மனுதாரர்கள் தரப்பில் வழக்கறிஞர் அஷிமா மண்டலா தெரிவித்தார்.
ஏழைகளுக்கு உணவுப் பாதுகாப்பை உறுதி செய்ய மாநிலங்களுக்கு, “மாதிரி” சமூக சமையலறை திட்டத்தின் சாத்தியங்களை பற்றி ஆய்வு நடத்தவேண்டும். மாநிலங்களுக்கு சீரான சமூக சமையலறை திட்டத்தை உருவாக்குவது நீதித்துறையின் பொறுப்பல்ல. ஆனால் மாநிலங்களுடன் கலந்தாலோசித்து அதை மத்திய அரசு செய்ய வேண்டும். சமூக சமையலறை திட்டங்களுக்கான பரிந்துரைகளுடன் ஊட்டச்சத்து குறைபாடு மற்றும் பட்டினி சாவுகளின் நிலை குறித்த அறிக்கைகளை இரண்டு வாரங்களில் தாக்கல் செய்யுமாறு ஒன்றிய அரசிடம் நீதிமன்றம் கேட்டுக் கொண்டது.
