னிதனின் அத்தியாவசிய தேவைகளில் உணவுக்கு அடுத்தபடியாக உள்ளது உடை. விவசாயத்துக்கு அடுத்து நெசவுத் தொழில் தமிழகத்தின் வளர்ச்சியில் மிக முக்கியமான பங்காற்றுகிறது. கொங்கு மண்டலம் நெசவுத் தொழிலில் மிக முக்கியமான பங்கு வகிக்கிறது.
அதில் குறிப்பாக சேலம் மாவட்டத்தில் நெசவுத் தொழிலின் நிலை என்ன என்பதை பார்ப்போம்.
அம்மாபேட்டை, வெண்ணந்தூர், ஆட்டையாம்பட்டி, இளம்பிள்ளை, தாரமங்கலம், ஜலகண்டாபுரம், வனவாசி, குகை, எடப்பாடி, சின்னப்பம்பட்டி, இடங்கணசாலை, மடத்தூர், சித்தர்கோவில், காடையாம்பட்டி, கசப்பேரி, கொங்கணாபுரம் ஆகிய இடங்களில் பிரதானமாக நெசவு நடைபெறுகிறது.
இத்தொழிலை நம்பி மாவட்டம் முழுவதும் 5 லட்சம் பேர் உள்ளனர். சேலம் மாவட்டத்தில் மட்டும் பல்வேறு ஜவுளி ரகங்கள் நாளொன்றுக்கு 20 லட்சம் மீட்டர் உற்பத்தி செய்யப்பட்டு வெளிநாடு, வெளிமாநிலங்களுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது.
சேலம், உடையாப்பட்டி பகுதியில் அம்மாப்பேட்டை கூட்டுறவு நூற்பாலை 31 ஏக்கரில் 50 ஆண்டுகளுக்கு முன் அமைக்கப்பட்டு, சிறப்பான முறையில் இயங்கியது. இதில் 14 ஏக்கரில் நூற்பாலை கட்டிடம் கட்டப்பட்டு, தரமான நூல்கள் உற்பத்தி செய்து லாபத்தில் இயங்கிய ஆலை கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்னர் மூடப்பட்டது. இதனால், இங்கு பணிபுரிந்த 1,100 தொழிலாளர்கள் வேலை இழந்தனர்.
படிக்க :
கோவை – திருப்பூர் மாவட்ட கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறி உரிமையாளர்கள் போராட்டம் !
நெல்லை பழைய பேட்டை கைத்தறி நெசவாளர் நிலை : நிவாரணம் கேட்டுப் போராடினால் வழக்கா ?
நூற்பாலை இயங்க நடவடிக்கை எடுப்பதாக தேர்தலின்போது கொடுக்கப்படும் வாக்குறுதிகள் நிறைவேற்றப்படாமல்தான் இருக்கிறது. தற்போது, இந்த இடத்தில் 17 ஏக்கர் நிலம் காலியாக உள்ளது. இங்கு அடுக்குமாடி தொழிற்கூடம் உருவாக்கி, ஆயத்த ஆடை தயாரிப்பு உள்ளிட்ட நெசவு சார்ந்த தொழில் தொடங்கி ஜவுளி பூங்கா உருவாக்க வேண்டும் என்ற நீண்ட கால கோரிக்கையை அரசு கிடப்பில் போட்டுள்ளது.
நெசவாளர்-வாழ்க்கை
அச்சில் பிணைப்பது
சேலம் மாவட்டத்தில் கைத்தறி, விசைத்தறி, தானியங்கி தறிகள் மூலம் துணி நெய்யப்படுகிறது. வேட்டி, சேலை, லுங்கி ஆகிய துணிகள் நெய்யப்படுகின்றன. குறிப்பாக செயற்கை இழையால் நெய்யப்பட்ட மலிவு விலை பட்டுச் சேலைகள் இளம்பிள்ளை போன்ற பகுதிகளில் பிரபலமானவை.
கைத்தறிகளின் எண்ணிக்கை குறைவு. விசைத்தறிகள் பிரதானமாக பங்காற்றுகின்றன. மாறி வருகின்ற தொழில்நுட்ப வளர்ச்சிக்கேற்ப கடந்த இருபது வருடங்களில் தானியங்கி தறிகளும் வேகமாக வளர்ந்து வருகின்றன. தானியங்கி தறிகள் மூலம் நெய்யப்பட்ட துணிகள் முழுவதும் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. கைத்தறி, விசைத்தறியில் நெய்யப்பட்ட துணிகள் நமது தேவை மற்றும் ஏற்றுமதி என்ற அடிப்படையில் கொண்டு செல்லப்படுகின்றன.
தறி உரிமையாளர்கள் :
இப்பகுதியில் கைத்தறி, விசைத்தறி உரிமையாளர்கள், தானியங்கி தறி உரிமையாளர்கள் என்பவர்கள் பெரும் எண்ணிக்கையில் தறிகளை வைத்துக் கொண்டு, அதிக எண்ணிக்கையில் தொழிலாளிகள் வேலை செய்யும் தொழிற்கூடங்கள் அல்ல. 5 முதல் அதிகபட்சம் 15 தறிகள் உள்ள சிறுமுதலாளிகள்தான் அதிகம். 60 தறிகள் வரை வைத்துள்ள பெரிய முதலாளிகள் சிலர் உள்ளனர்.
யாரும் சேமித்து வைத்த பணத்தைக் கொண்டு தொழில் தொடங்கியவர்கள் அல்லர். சொத்துக்களை அடமானம் வைத்தோ, வங்கிக் கடன், நுண்கடன் பெற்றோ தான் தறிகளை வாங்கியுள்ளனர். இதனால் உரிமையாளர்கள் என்பவர்கள் தொழிலாளிகளோடு தொழிலாளிகளாக உழைத்தால் மட்டுமே தப்பிக்க முடியும் என்பதே யதார்த்த நிலை. தொடர்ச்சியாக தறி ஓடிக் கொண்டே இருக்க வேண்டும். இல்லாவிட்டால் தொழிலில் நிற்க முடியாது.
மேலும் நெய்த துணிக்கு கூலியை இவர்கள் நிர்ணயிக்க முடியாது. ஜவுளி உற்பத்தியாளர்கள்தான் நியமிப்பார்கள். சந்தையின் ஏற்ற இறக்கங்களுக்கு ஏற்ப எப்போது வேண்டுமானாலும் கூலி குறைக்கப்படும். இன்னும் சொல்லப்போனால் கடந்த 15 வருடங்களுக்கு முன்பு இருந்த கூலியை விட தற்போது குறைவான கூலி கிடைப்பதாக கூறுகின்றனர்.
கடந்த ஜனவரி மாதம் கோவை பல்லடம் பகுதிகளில் பல்லாயிரக்கணக்கான கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறி உரிமையாளர்களும், தொழிலாளிகளும் கூலி உயர்வுக்காக வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டதை அறிவோம். சேலம் பகுதிகளில் போராட்டம் நடைபெறவில்லையென்றாலும் இங்கும் கூலி உயர்வு பிரச்சினை பிரதானமாக இருந்து கொண்டுதான் இருக்கிறது.
கூலியைப் பொறுத்தவரை, உற்பத்தியாளர்கள் உடனே கொடுப்பதில்லை என்கின்றனர். இரண்டு மாதம் வரை தாமதப்படுத்தித்தான் கொடுக்கின்றனர். இதனால் கைகாசைப் போட்டுத்தான் தொழிலாளிகளுக்கான கூலியும், GST உள்ளிட்ட மற்ற அவசியமான செலவுகளை ஈடுகட்டுகின்றனர். GST ஒவ்வொரு மாதமும் 10 ந்தேதி பில் முடித்து, 20 ந் தேதிக்குள் வரி கட்டிவிட வேண்டும்.
கூலியை உடனே கொடுக்கும்படி உற்பத்தியாளர்களை நிர்ப்பந்திக்கவும் முடியாது. அவ்வாறு செய்தால் நெய்வதற்கான ஆர்டரை மற்றவர்களுக்கு கொடுத்து விடுவார்கள். இதனால் சகித்துக் கொள்ள வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளனர், தறி உரிமையாளர்கள்.
கடைசியாக நடந்த GST கூட்டத்தில் காட்டன் துணிகளுக்கு 5% ல் இருந்து 12% மாக GST உயர்த்தப்பட்டதானது மிகக் கடுமையாக பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. கார்ப்பரேட் முதலாளிகளுக்கு வரிச் சலுகையை வாரி வழங்கும் மோடி அரசு சிறு தொழில் செய்வோரை வரியை உயர்த்தி அழிக்கிறது. GST வரியால் தொழில் நட்டமடைந்து விட்டது என்று ஜவுளி உற்பத்தியாளர்கள் மேலும் கூலியை குறைக்கின்றனர். ஒரு சேலை நெய்தால் ரூ.280 கிடைத்த இடத்தில் தற்போது ரூ.220 தான் கிடைக்கிறது என்பது நிலைமை.
நூலின் விலையும் ஓராண்டில் 50% வரை உயர்ந்துள்ளது. மாதம், 50 கிலோ கொண்ட 40ம் நெம்பர் நூல், ஒரு சிப்பம் ரூ.9,000க்கு விற்பனை செய்யப்பட்டது. தொடர்ந்து படிப்படியாக உயர்ந்து, தற்போது ரூ. 14,000 க்கு விற்பனை செய்யப்படுகிறது. 50 நாட்களில் ஒரு சிப்பத்திற்கு ரூ.5.000 அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது. இதுவும் கடுமையான பாதிப்பை உருவாக்குகிறது. இதைக் கண்டித்து சேலம் வெண்ணந்தூர் பகுதியைச் சார்ந்த விசைத்தறி நெசவாளர்கள் இரண்டு நாட்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தையும் நடத்தியுள்ளனர்.
பணமதிப்பழிப்பு, GST, கொரோனா ஊரடங்கு போன்றவை கடுமையான பாதிப்பை நெசவுத் தொழிலுக்கு ஏற்படுத்தியுள்ளன. தறிக்கு உரிமையாளராக இருந்த பலர் தொழிலாளிகளாக மாறியுள்ளனர். ஊரடங்கு காலங்களில் கந்து வட்டிக்கு கடன் வாங்கி பிழைப்பை நடத்த வேண்டிய நிலைக்கு விசைத்தறி நெசவாளர்கள் தள்ளப்பட்டுள்ளனர். அதுமட்டுமில்லாமல் குறைவான தறி வைத்திருப்பவர்கள் நுண்கடன் நிறுவனங்களில் கடன் வாங்கி கட்டமுடியாமல் அந் நிறுவனங்களால் மிகுந்த நெருக்கடிக்கு ஆளாகியுள்ளனர்.
ஒரு பக்கம் சிறப்புப் பொருளாதார மண்டலங்களில் நீர், மின்சாரம், நிலம் அனைத்தையும் சலுகை விலையில் பன்னாட்டு நிறுவனங்களுக்கு கொடுக்கும் அரசோ சிறு தொழில்களுக்கு மின் கட்டணத்தை உயர்த்துகிறது. தறித் தொழில்களுக்கான அதிகப்படியான மின்சார கட்டணமும் இவர்களை பதம் பார்க்கிறது. மின்சார கட்டணத்தை குறைக்க வேண்டும், முறைப்படுத்த வேண்டும் என்பதும் இவர்களது கோரிக்கையாக இருக்கிறது.
இவர்கள் முக்கியமாக வைக்கும் கோரிக்கைகளாவன; ஜவுளித் தொழிலுக்கான GST ரத்து செய்ய வேண்டும். பருத்தி ஏற்றுமதியை தடை செய்ய வேண்டும், பருத்திக்கான இறக்குமதி வரியை குறைக்க வேண்டும், இதன் மூலம் கூலியை அதிகப்படுத்த வேண்டும், மின் கட்டணத்தை குறைக்க வேண்டும் என்பனவாகும்.
தொழிலாளர் நிலைமை :
நெசவுக் கூடங்களில் உழைப்பை மட்டும் செலுத்தும் தொழிலாளர் நிலைமையோ இன்னும் மோசமாக உள்ளது. பெரும்பாலும் வேலை நேரம் 12 மணி நேரமாக உள்ளது. 12 மணிநேரம் வேலை செய்யும் தொழிலாளிக்கு கிடைக்கும் ஊதியம் ரூ.500 மட்டுமே. 8மணி நேர வேலைக்கு ரூ.350 மட்டுமே. இத்தொழிலில் நீண்ட காலம் வேலை செய்ததும் மாற்றுத் தொழில்களைத் தேர்ந்தெடுக்கும் வாய்ப்பில்லாமல் வேறு வழியின்றி இதே தொழிலில் நீடிப்பது என்கிற நிலைமையும் உள்ளது. மேலும் விலைவாசி உயர்வு, கல்வி கட்டணம், மருத்துவ செலவுகள், அன்றாட வாழ்க்கைப்பாட்டுக்காக குறைவான கூலியாக இருந்தாலும் உழைக்க வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
8 மணி நேர வேலை செய்யும் தொழிலாளிகள் சம்பளம் போதாமையால் நெசவு வேலையை முடித்து விட்டு, கூடுதலாக கிடைக்கும் வேலைகளுக்கும் செல்கின்றனர். விலைவாசி உயர்வு தங்களை கடுமையாக பாதிப்பதாக கூறுகின்றனர்.
தானியங்கி தறிகளில் வேலை செய்யும் தொழிலாளிக்கு 12 மணி நேரம் வேலை. இங்கு மாத சம்பளமாக வழங்கப்படுகிறது. விசைத்தறிக் கூடங்களில் தினசரி சம்பளமாக கொடுக்கப்படுகிறது. வேலைக்கு வராவிட்டால் சம்பளம் கிடையாது.
1970 – 80 களில் கம்யூனிச இயக்கங்கள், குறிப்பாக மார்க்சிய லெனினிய இயக்கங்கள் சேலம், ஈரோடு, நாமக்கல் மாவட்டங்களில் விசைத்தறித் தொழிலாளர்கள் மத்தியில் வீச்சோடு செயல்பட்டன. குறிப்பாக அன்றைய ஒன்றிணைந்த சேலம் மாவட்டத்தின் பகுதியாக (தற்போது நாமக்கல் மாவட்டம்) இருந்த குமாரபாளையம் மற்றும் பள்ளிபாளையம், ஜலகண்டாபுரம், அம்மாபேட்டை ஆகிய பகுதிகளில் தங்கள் வாழ்வுரிமைகளுக்காக பல போர்க்குணமிக்க போராட்டங்களை விசைத்தறித் தொழிலாளர்கள் நடத்தியுள்ளனர். சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை நோக்கி அப்போது இந்த இயக்கங்கள் ஒருங்கிணைத்து நடத்திய பேரணியில் 3000 க்கும் மேற்பட்ட தொழிலாளிகள் கலந்து கொண்டுள்ளனர்.
1990 களுக்குப் பிறகு தொழிற்சங்கங்கள் வலுவிழந்துள்ளன. நெசவுத் தொழிலாளர்கள் மத்தியில் தொழிற்சங்கங்களின் தலையீடு என்பது மிக குறைவாகவே உள்ளது. நவீன தொழில்நுட்ப வளர்ச்சியின் காரணமாக (குறிப்பாக தானியங்கி தறிகள்) தொழிலாளர்களின் எண்ணிக்கையும் கணிசமாகக் குறைந்துள்ளது. தற்போது நெசவுத் தொழிலாளர்களாக வடமாநிலத்தவர்கள் நிறைய பேர் வேலை செய்யும் நிலை உள்ளது. இது மேலும் தொழிலாளர்கள் மீதான சுரண்டலுக்கு வழிவகுப்பதாக உள்ளது. சிறு தொழிலகங்களிலான உற்பத்தி நிலைமைகள், கிடைக்கின்ற குறைவான பொருளாதார ஆதாயம், புதிய தாராளவாதக் கொள்கை தொழிலாளர்கள் மீது ஏற்படுத்தியுள்ள பொருளாதார, பண்பாட்டு தாக்கங்களும், தொழிலாளர்களுக்கு எதிரான அரசின் அணுகுமுறைகளும், கொள்கைகளும் வலுவான தொழிலாளர் ஒற்றுமையை ஏற்படுத்துவதற்கு தடையாக உள்ளன.
மேற்கண்ட நிலைதான் ஈரோடு, நாமக்கல், கோவை, திருப்பூர், கரூர் உள்ளிட்ட ஜவுளித் தொழிலை பிரதானமாக மேற்கொள்ளும் மாவட்டங்களிலும் உள்ளது.
பிரச்சினைக்கான தீர்வு என்ன?
இப்பிரச்சினைக்கான தீர்வை நாம் நெசவுத் தொழிலுக்கு உட்பட்டு மட்டும் பார்க்க முடியாது. இதை நெசவுத் தொழிலாளர்களுக்கும் உற்பத்தியாளர்களுக்குமான முரண்பாடாக மட்டுமோ, தறிக்கு உரிமையாளராக இருக்கும் நெசவாளருக்கும், அங்கு கூலிக்கு வேலை செய்யும் தொழிலாளிக்குமான முரண்பாடாக மட்டும் பார்க்க முடியாது என்றே தோன்றுகிறது. தறியை உடைமையாக வைத்து கூலிக்கு நெசவு செய்யும் தொழிலாளர்களும், அந்த தறிக்கூடங்களில் வேலை செய்யும் உடமையற்ற தொழிலாளர்களும் தங்களின் தற்காலிகத் தீர்வுக்கு போராடுவது சரிதான் என்றாலும் இதை ஒட்டுமொத்த ஜவுளித்தொழிலுக்குமான பிரச்சினையாக பார்க்க வேண்டியுள்ளது. ஏனெனில் ஜவுளித் தொழிலை அழிவிலிருந்து காப்பாற்றுவது முதன்மையானது.
தமிழகத்தில் விவசாயத்திற்கு அடுத்தபடியாக அதிக வேலை வாய்ப்பு தரும் தொழில் ஜவுளித் தொழிலாகும்! சுமார் 31 லட்சம் குடும்பங்கள் இந்த தொழிலை நம்பியுள்ளன! இதில் விசைத்தறியால் 10.19 லட்சம் பேர் வேலை வாய்ப்பு பெற்றுள்ளனர். கைத்தறியால் 3.20 லட்சம் பேர் வேலை வாய்ப்பு பெறுகின்றனர். மேலும் நூற்பாலைகள், பவர்லூம்கள், கூட்டுறவு சொசைட்டிகள் என பல லட்சம் பேர் வேலை வாய்ப்பு பெற்றுள்ளனர்.
இவ்வளவு பேருக்கு வேலை வாய்ப்பளிப்பதோடு மட்டுமின்றி, பல லட்சம் பருத்தி விவசாயிகளுக்கும், வாழ்வாதாரமாகத் திகழும் ஜவுளித்துறையை தனியார்மயக் கொள்கையின் காரணமாக அரசு கைவிட்டுவிட்டது என்பதுதான் அடிப்படையான பிரச்சினை.
தமிழகத்தை பொறுத்த அளவில் ஜவுளி தொழிலில் மிக முன்னணியில் உள்ள மாநிலம் என்றாலும், ஜவுளிக்குத் தேவையான பருத்தி உற்பத்தியில் மிகவும் பற்றாக்குறை உள்ள மாநிலமாகும்! தமிழகத்திற்கு மட்டுமே 108 லட்சம் பேல்கள் தேவைப்படுகின்றன! இதில் கால்வாசி கூட இங்கு உற்பத்தி ஆவதில்லை! நாம் மற்ற மாநிலங்களில் இருந்து வாங்குகிறோம்!
நூல் விலை 60 சதவிகிதத்திற்கும் அதிகமாக உயர்ந்துள்ளது. இதனால் உற்பத்தியாளர்கள் நெசவாளர்களுக்கு கூலியைக் குறைக்கின்றனர். இது கூலிக்கு நெய்து தரும் நெசவாளர்கள் மத்தியில் போராட்டத்தை தூண்டுகிறது.
பருத்தி விலையை உற்பத்தியாளர்கள் குறைக்க சொன்னாலும், பருத்தி விலையேற்றத்தின் ஆதாயம் சாதாரண விவசாயிகளைச் சென்றடையவில்லை. பருத்தி பயிரிடும் விதர்பா பகுதி விவசாயிகளின் தற்கொலைகளே இதற்கு உதாரணம். பருத்திச் சந்தையில் முன்பேர வர்த்தகத்தை அரசு திறந்து விட்டுள்ளது. இதேதான் மற்ற பிரதான விவசாய விளைபொருட்களுக்கும் பொருந்தும். பன்னாட்டு வர்த்தகச் சூதாடிகள் அடுத்த ஆண்டுக்கான விளைச்சலையும் முன்பேர வர்த்தகத்தின் மூலம் முன்கூட்டியே கொள்முதல் செய்து வைத்துக் கொள்கிறார்கள்.
தனியார்மயத்தின் விளைவாக பருத்தி ஏற்றுமதியின் மீது அரசுக்கு இருந்த கட்டுப்பாடும் அகற்றப்பட்டுவிட்டது. பன்னாட்டு, உள்நாட்டு வர்த்தகச் சூதாடிகள்தான் ஏற்றுமதியால் ஆதாயம் அடைகிறார்கள்! இதனால் பல கோடி நெசவாளர்கள் பாதிக்கப்படுகிறார்கள்!
நம் நாட்டில் எவ்வளவு பருத்தி உற்பத்தியாகிறது. அதில் உள் நாட்டின் தேவை எவ்வளவு? அது போக உபரி எவ்வளவு? அல்லது பற்றாக்குறை எவ்வளவு என்றெல்லாம் கணக்கிட்டு, ஏற்றுமதி இறக்குமதி கொள்கைகளை பற்றி முடிவெடுக்கும் சுதந்திரம் அரசுக்கு கிடையாது. பன்னாட்டு ஏகபோகங்களுக்கும், இங்கிருக்கும் கார்ப்பரேட்டுகளுக்கும் இலாபம் தரும் விசயம் என்னவோ அதைத்தான் அரசு முடிவெடுக்கும். இதுதான் தனியார்மயக் கொள்கை.
மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இருக்கும் இந்திய பருத்தி கழகமும் (சி.சி.ஐ.,) மேற்சொன்ன விசயத்தைத்தான் நடைமுறைப்படுத்த முடியும். பருத்தி விளைச்சல் நன்றாக இருக்கும் போது, விவசாயிகளிடம் வாங்கி அதிக அளவு இருப்பு வைத்து, தட்டுப்பாடு ஏற்படும் போது விலையை உயர்த்தி விற்கிறார்கள்!
படிக்க :
பின்னி ஆலைத் தொழிலாளர் போராட்டம் : வரலாறு கற்பிக்கும் பாடம் !
பாவாடை பெண்களுக்கே உரிய உடையா ? || சிந்துஜா
சிறு, குறு மற்றும் நடுத்தர நூற்பாலைகளுக்கு தேவையான பஞ்சு கிடைக்காமல் ஒரு செயற்கை தட்டுப்பாட்டை ஏற்படுத்துகின்றனர். இந்தியாவில் 130 லட்சம் ஹெக்டேரில் பருத்தி பயிரிடப்படுகிறது. இதன் மூலம் 355 லட்சம் பேல்கள் பஞ்சு உற்பத்தியாகிறது. நமது உள் நாட்டு சந்தைக்கு 375 லட்சம் பேல்கள் தேவைப்படுகிறது. ஆக, நமக்கே பற்றாகுறை 20 லட்சம் பேல்கள்!
பற்றாக்குறை அதிகமாவதால் எந்த அளவுக்கு ஏற்றுமதி ஆனதோ, அந்த அளவுக்கு இறக்குமதி செய்ய வேண்டிய கட்டாயமும் ஏற்படுகிறது. அப்படி தடாலடியாக அதிகமாக இறக்குமதியாகும் போது, உள் நாட்டு பஞ்சின் விலை அடிவாங்கிறது! அதனால், இறக்குமதி பஞ்சின் மீது அதிகம் வரி விதிக்க வேண்டும் என்ற குரல்களும் விவசாயிகள் தரப்பில் எழுகிறது! ஆனால் நெசவாளர்களோ இறக்குமதி பஞ்சின் மீது வரியை குறைக்கச் சொல்லிப் போராடுகிறார்கள்.
இதன் மூலம் உண்மையை மறைத்து விவசாயிகளுக்கும் நெசவாளர்களுக்குமான முரண்பாடாக மாற்றி வேடிக்கை பார்க்கிறது அரசு .
ஒருபுறம் நெசவாளர்களையும், மறுபுறம் விவசாயிகளையும் ஒரு சேர பாதிப்படைய வைத்து ஏற்றுமதி, இறக்குமதி வணிகத்தில் உள்ள கார்ப்பரேட்டுகளை வாழவைக்கும் தனியார்மயம் – தாராளமயம் – உலகமயம் எனும் புதிய தாராளவாத பொருளாதாரக் கொள்கையைத்தான் அரசு நடைமுறைப்படுத்துகிறது என்பதை நெசவாளர்களும், தறித்தொழிலாளர்களும், விவசாயிகளும் உணர வேண்டியுள்ளது. அக் கொள்கையை வீழ்த்துவதற்கும், நம்நாட்டிற்கான தேவையை அடிப்படையாக கொண்ட சுயசார்பான கொள்கை மாற்றத்திற்காகவும் தங்களுக்குள்ளும், அனைத்து தரப்பு மக்களோடும் ஒற்றுமையைக் கட்டியமைத்து போராடும்போதுதான் இப்பிரச்சினைக்கு நிரந்தரமான தீர்வை நோக்கி செல்ல முடியும்.
வினவு செய்தியாளர்

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க