‘ஹர் கர் திரங்கா’ : மோடி அரசின் பாசிச செயல்பாடுகளை மறைக்க தேசபக்தி நாடகம்!

தான் ஆட்சி அரியனையில் அமர்ந்ததில் இருந்து இதுநாள் வரை கார்ப்பரேட் முதலாளிகளுக்கு தனது சேவையை செவ்வனே செய்து வரும் மோடி அரசு, உழைக்கும் மக்கள் மீதான தனது பாசிச செயல்பாடுகளை முடிமறைக்க போட்டும் நாடகம்தான் இந்த தேசியக்கொடி பிரச்சாரம் என்ற கேலிக்கூத்து.

1

டந்த ஜூலை 22 அன்று நரேந்திர மோடி அரசு ‘ஹர் கர் திரங்கா’ என்ற பிரச்சாரத்தை தொடங்கி வைத்தது. இப்பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக ரூ.40 கோடி செலவில் 2 கோடி மூவர்ணக் கொடிகளை வாங்குவதற்கு யோகி ஆதித்யநாத் தலைமையிலான உத்தரப்பிரதேச அரசு முடிவு செய்துள்ளது.

இந்திய சுதந்திரத்தின் 75-வது ஆண்டைக் குறிக்கும் வகையில் திரங்காவை (தேசிய கோடியை) வீட்டிற்கு கொண்டுவந்து ஏற்றி வைக்க மக்களை ஊக்குவிப்பதே அதன் நோக்கம் என்று ஒரு பத்திரிகை தகவல் பணியகம் வெளியிட்டுள்ள குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

உத்தரப்பிரதேசம் ஆகஸ்ட் 11 முதல் 17 வரை இந்த திரங்கா பிரச்சாரத்தை நடத்த திட்டமிட்டுள்ளது. இப்பிரச்சாரத்திற்காக ஆகஸ்ட் 13 முதல் 15 வரை ஒவ்வொரு வீட்டிலும் தேசியக் கொடிகள் ஏற்றப்பட வேண்டும். இதற்கான கொடிகளை கொள்முதல் செய்வதற்கான முன்மொழிவுக்கு உத்தரப்பிரதேச அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

2 கோடி கொடிகளில் 1.5 கோடிகளை பஞ்சாயத்து ராஜ் துறை வழங்கும் நிதியில் இருந்தும், மீதமுள்ள 50 லட்சம் கோடிகளை நகர்ப்புற வளர்ச்சித் துறை வழங்கும் நிதியிலும் வாங்க திட்டமிட்டுள்ளதாக கூறியுள்ளது உ.பி அரசு. மாநிலம் முழுவதும் 4.5 கோடி கொடிகளை பறக்கவிட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 2 கோடி கொடிகள் மாநில அரசின் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்கள் அமைச்சகத்தால் (MSME) வாங்கப்படும் எனவும் மீதமுள்ள 2.5 கோடி கொடிகள் பல்வேறு சுயஉதவி குழுக்கள், சமூக நலக் குழுக்கள் மற்றும் தனியார் குழுக்கள் மூலம் வாங்கப்படும் எனவும் யோகி அரசு கூறியுள்ளது.


படிக்க : ’காவி கொடி தேசிய கொடியாக மாறும்’ பாஜக எம்.எல்.ஏ ஈஸ்வரப்பா : இந்து ராஷ்டிரத்தின் அடிக்கட்டுமானங்களை தகர்ப்போம்!


மூவர்ணக் கொடியை இரவும் பகலும் பறக்க அனுமதிக்கும் வகையில், நாட்டின் கொடிக் குறியீடு தொடர்பான சட்டவிதிகளையும் மத்திய அரசு மாற்றியுள்ளது. இந்திய தேசியக் கொடியை காட்சிப்படுத்துதல், ஏற்றுதல் மற்றும் பயன்படுத்துதல் ஆகியவை இந்தியாவின் கொடி குறியீடு 2002 மற்றும் தேசிய மரியாதையை அவமதிப்பதைத் தடுக்கும் சட்டம், 1971 ஆகியவற்றால் நிர்வகிக்கப்படுகிறது.

கொடி குறியீடு 2002, ஜூலை 20 அன்று பிறப்பிக்கப்பட்ட உத்தரவின் மூலம் திருத்தப்பட்டது. 2002-ம் ஆண்டின் இந்தியக் கொடிக் குறியீட்டின் பகுதி-II-இன் பத்தி 2.2-இன் பிரிவு (xi), “திறந்தவெளியில் அல்லது உள்வெளியில் கொடி, இரவும் பகலும் பறக்கவிடப்படலாம்” என்று திருத்தப்பட்டுள்ளது. (இந்த திருத்தத்திற்கு முன்னதாக, சூரிய உதயம் முதல் சூரிய மறையும் வரை மூவர்ணக் கொடி பறக்க அனுமதிக்கப்பட்டது.) இதேபோல், 2002-ம் ஆண்டின் இந்தியக் கொடிக் குறியீட்டின் பகுதி-I-இன் பத்தி 1.2, “தேசியக் கொடியானது கையால் சுழற்றப்பட்ட மற்றும் கையால் நெய்யப்பட்ட அல்லது இயந்திரத்தால் செய்யப்பட்ட, பருத்தி / பாலியஸ்டர் / கம்பளி / பட்டு காதி பந்தினால் செய்யப்பட வேண்டும்” என்று திருத்தப்பட்டுள்ளது. (இதற்கு முன்பு இயந்திரம் மற்றும் பாலியஸ்டர் கொடிகள் அனுமதிக்கப்படவில்லை.)

காவி பயங்கரவாதிகளால் மாநில முழுவதும் தாழ்த்தப்பட்ட மற்றும் முஸ்லீம் சிறுபான்மை மக்கள் ஆதிக்கசாதி வெறியாலும், மதவெறியாலும், யோகி அரசின் இந்துமதவெறி பாசிசத்தினாலும் தினம் தினம் ஒடுக்கப்பட்டு வருகிறார்கள்.

கொரோனா பேரிடர் காலத்தில், வாழ்வாதாரம் இழந்த மக்களுக்கு பொருளாதார ரீதியாக உதவி செய்யாமலும், கொரோனா வைரலில் இருந்து பாதுகாக்காமலும் ஆயிரக்கணக்கான மக்களை பலிகொடுத்தது யோகி அரசு. தேசிய கொடிக்கும் 40 கோடி ரூபாய்கள் செலவு செய்யும் யோகி அரசு, உழைக்கும் மக்களின் நலனுக்காக 4 ரூபாய் கூட செலவு செய்யாது என்பது திண்ணம்.

தான் ஆட்சி அரியணையில் அமர்ந்ததில் இருந்து இதுநாள் வரை கார்ப்பரேட் முதலாளிகளுக்கு தனது சேவையை செவ்வனே செய்து வரும் மோடி அரசு உழைக்கும் மக்கள் மீதான தனது பாசிச செயல்பாடுகளை முடிமறைக்க போட்டும் நாடகம்தான் இந்த தேசியக்கொடி பிரச்சாரம் என்ற கேலிக்கூத்து. நாடுமுழுவது அரங்கேற்றப்பட்டு வரும் ஆஸ்.எஸ்.எஸ் – பி.ஜே.பி; அதானி – அம்பானி பாசிசத்தை வீழ்த்த நாம் அணிதிரளவேண்டிய தருணமிது.


சந்துரு