கால்டுவெல்-ஐ நினைவுகூர்வோம்!

வளர்ந்து வரும் காவி – கார்ப்பரேட் பாசிசத்திற்கெதிராகப் போராட, கால்டுவெல் மீள்கண்டுபிடுப்பு செய்த ”உயர்தனிச் செம்மொழியே நம் மொழி” என்பதும், “பார்ப்பன எதிர்ப்பு மரபே தமிழ் மரபு” என்பதும் இன்னமும் துருவேறாத வாள்களாக உள்ளன. அவற்றை நம் கைகளில் ஏந்துவதே கால்டுவெல்லை நினைவுகூர்வதாகும்.

காவி – கார்ப்பரேட் பாசிச ஆட்சி நடைபெறும் இச்சூழலில் தமிழ் மொழியை வைத்து தமிழ்நாட்டை பிடிக்கமுற்படுகிறது பா.ஜ.க. மறுபுறம் தமிழ் அவமதிப்புக்குள்ளாகிறது. ஜீயர் துவங்கி அண்ணாமலை வரை தமிழ்த்தாய் வாழ்த்தை அவமதித்து வருகின்றார்கள். தமிழ்நாட்டையும், திராவிட இனத்தையும், தமிழ் மொழியையும் தொடர்ந்து ஏளனம் செய்து வருகிறார் ஆளுநர் ஆர்.என்.ரவி. இந்நிலையில் தமிழின் பெருமையையும், அதன் தனித்துவத்தையும் உலகுக்கு உரக்கச் சொன்ன ராபர்ட் கால்டுவெல்லின் 200-ஆவது பிறந்த தினத்தை நாம் நினைவு கூர்கிறோம்.

1814-இல் அயர்லாந்தில் பிறந்த கால்டுவெல் கிறித்தவ சமயப் பரப்புரைக்காக  தமிழகத்திற்கு வந்தார்.  சென்னைக்கு வந்ததும் ”துருவ்” எனும் தமிழ் கற்ற அறிஞரோடும் அந்நாளில் தமிழுக்குத் தொண்டாற்றிய வின்சுலோ, போப், பவர், ஆண்டர்சன் முதலானவர்களோடும் நட்புப் பூண்டார். சென்னை மாநகரில் மூன்று ஆண்டுகள் தங்கிய கால்டுவெல், தமிழ் மக்களின் வாழ்க்கைமுறை, பழக்கவழக்கம், மொழி முதலானவற்றை அறிந்துகொள்ள வேண்டுமென்பதற்காக ஏறத்தாழ நானூறு கல் தொலைவில் உள்ள திருநெல்வேலிக்கு நடந்தே சென்றார். அப்பயணத்தின்போது ‘மிலேச்சரான’ கால்டுவெல்லுக்குப் பல சத்திரங்களில் இடம் மறுக்கப்பட்டதால், மாட்டுத்தொழுவங்களில்தான் அவர் தங்க நேர்ந்தது. இறுதியில் திருநெல்வேலி (இன்று தூத்துக்குடி மாவட்டம்) மாவட்டத்தில் தேரிப்பகுதியில் உள்ள இடையன்குடியைத் தேர்ந்தெடுத்து செயல்படத் தொடங்கினார்.

படிக்க : கால்டுவெல் காலத்து புத்தக விளம்பரங்கள் எப்படி இருக்கும் ?

அவரின் நோக்கம் சமயப் பரப்புரையாக இருந்தபோதும், தமிழின் பேரில் ஏற்பட்ட ஈர்ப்பு மொழி ஆராய்ச்சியை நோக்கி அவரைத் தள்ளியது. அவர் 18 மொழிகளைக் கற்றார். அதுவரை அச்சேறாமல் இருந்த பல பண்டைத் தமிழிலக்கியங்களை (தொல்காப்பியம் உட்பட) பயின்றார். இலக்கிய வேலைகளுக்கிடையே, அந்நாளில் ஒடுக்கப்பட்ட சாதியாக அறியப்பட்ட சாணார்கள் (நாடார்கள்) கல்வி கற்றிடவும், அவர்களின் மீதான சாதி இழிவுகளை அகற்றவும் பாடுபட்டார். அவர் கற்றறிந்த பிற மொழிகளுடன் தமிழ் மொழியை  ஒப்பிட்டு ஆராய்ச்சிகளை மேற்கொண்டு சில முடிவுகளுக்கு வந்து சேர்ந்தார். அதனை ஆய்வுநூலாக அவர் ஆங்கிலத்தில் ”திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம்” எனும் நூலாக இலண்டன் பதிப்பகம் மூலம் 1856 – இல் வெளியிட்டார்.

திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம் தமிழ் வரலாற்றில் முக்கிய திருப்புமுனை நூல் என்று சொல்லலாம். அதுவரை உருவாக்கப்பட்டிருந்த சமஸ்கிருத மேன்மையை அது உடைத்து நொறுக்கியது.  அதுவரை,  இந்திய மொழிகள் எல்லாம் சமஸ்கிருதத்திலிருந்து பிறந்தவை என்றும்,  அம்மொழியின் இலக்கணமே இதர மொழிகளுக்கு இலக்கணங்களாக ஏற்கப்பட்டன என்றும், தமிழிலுள்ள இலக்கியங்கள் கூட சமஸ்கிருத இலக்கியத்தை வழியொட்டி வந்தவைதான் என்ற கருத்தும்தான் மேலாண்மையில் இருந்து வந்தது.

ஆசிய மற்றும் ஆப்பிரிக்காவின் நிலம் மற்றும் மக்களின் இனம் சார்ந்த வாழ்நிலையை அறிந்துகொள்ள இலண்டனில் அமைக்கப்பட்ட ஆசியவியல் கழகத்தின் கிளை 1784-ஆம் ஆண்டு கல்கத்தாவில் அமைக்கப்பட்டது. இதன் சார்பாக இந்தியாவில் செயல்பட்ட பலரும் சமஸ்கிருத மூல மொழியிலிருந்தே இந்தியாவில் பேசப்படும் அனைத்து மொழிகளும் கிளைத்திருக்க வேண்டும் என்னும் கருதுகோளை முன்னிறுத்தியே ஆய்வு செய்தனர்.

ஆனால், சென்னையை மையமாகக் கொண்டு செயல்பட்ட எல்லீசு உள்ளிட்டோர் தமிழ், தெலுங்கு உள்ளிட்ட தென்னிந்திய மொழிகள் இந்தோ-ஆரிய மொழிகள் அல்ல என்பதை கால்டுவெல்லுக்கு முன்பே கண்டறிந்து இம்மொழிகளுக்கான திராவிடச் சான்றுகளை அகழ்ந்தெடுத்திருந்தனர். அந்த ஆய்வின் தொடர்ச்சியாக மிக வலுவான ஆதாரங்களுடன் கால்டுவெல்லின் ஒப்பிலக்கணம் பின்வரும் உண்மைகளை தெள்ளத் தெளிவாக நிரூபித்தது. 1. தமிழ் உள்ளிட்ட தென்னிந்திய மொழிகள் எல்லாம் சமஸ்கிருதத்துக்கு நேர் எதிர் தன்மை கொண்ட திராவிட மொழிக் குடும்பத்தைச் சேர்ந்தவை 2. தமிழில் உள்ள சமஸ்கிருத சொற்களை எடுத்து விட்டாலும் தமிழ் தானாகவே இயங்கும் ஆற்றல் கொண்ட செம்மொழி 3. இதுவரை கருதி வந்தது போல், தமிழ் மரபு என்பது வேத-பார்ப்பன-இந்து மரபின் தொடர்ச்சி அல்ல 4. அதற்கு சமண, பவுத்த, பார்ப்பன எதிர்ப்பு மரபு உள்ளது.

வெறுமனே மொழி ஆராய்ச்சி எனும் எல்லைக்குள் நிறுத்தி விடாமல் தமிழ் மொழி பேசும் இனத்தவர்களின் ஆன்மிகம், பண்பாடு, சாதி மேலாதிக்கம் என அனைத்தும் தழுவிய ஆய்வாக கால்டுவெல் மேற்கொண்டார். அன்று பார்ப்பன மேலாண்மையினை மனமுவந்து ஏற்றுக்கொண்ட சற்சூத்திர தமிழர்கள், ஒடுக்கப்பட்ட மக்களான பறையர்களைத் தமிழர்களாகக் கூட ஏற்க மறுக்கும் சாதிவெறியில்தான் இருந்தனர். ஆனால், கால்டுவெல்லின் ஆய்வு ”பறையர்களே பூர்வீகத் தமிழர்கள்” என்பதை நிறுவியது.

கால்டுவெல்லின் ஒப்பிலக்கண நூல், தமிழ்ச் சமூகத்தில் உருவாக்கிய தாக்கம் ஆழமானது. தமிழ் உயர் தனிச் செம்மொழி என்ற ஆய்வு முடிவு தமிழர்களுக்குத்  தன்னம்பிக்கையையும் சுயமரியாதையையும் உருவாக்கியது. அதன் தொடர்ச்சியாகத்தான் அழிந்துகொண்டிருந்த 2000 ஆண்டு கால தமிழ் இலக்கியக் கருவூலங்களெல்லாம் சி.வை.தாமோதரம் பிள்ளையாலும் உ.வே.சா. வாலும் அச்சு வாகனம் ஏறின. இருபதாம் நூற்றாண்டில் பார்ப்பன எதிர்ப்பு இயக்கம் உருவெடுக்க கால்டுவெல்லின் கோட்பாடுகள் அடித்தளமாயின.

படிக்க : வீரமரபு பாடல் – டீசர் | ம.க.இ.க | சிவப்பு அலை | Veera marabu – Teaser

திராவிட இயக்கம் பின்னாளில் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றி ஊழல் சாக்கடையில் ஊறிச் சீரழிந்தது.  அதன் ஊழல்களையும் வெற்று முழக்கங்களையும் பித்தலாட்டங்களையும் மட்டும் முன்வைத்து பார்ப்பன ஊடகங்களும் அறிவுத் துறையினரும், திராவிடம் என்பதே மோசடி, இவர்கள் கூறும் வரலாறே கிறித்துவ பாதிரியின் சதியால் உருவாக்கப்பட்டது என்பதைத் தொடர்ச்சியாகப் பரப்புரை செய்கின்றனர். தமிழ் மரபென்பது வேதத்தை முன்னிலைப்படுத்திய மரபென்றும், கால்டுவெல்லும் திராவிட இயக்கமும் கூறுவது போல பார்ப்பன எதிர்ப்பு மரபென்பது தமிழ்ப் பண்பாட்டிலேயே கிடையாது என்றும் நிலைநாட்டிட ஆர்.எஸ்.எஸ். முயல்கிறது. ‘திராவிடத்தால் வீழ்ந்தோம்’ எனக் கத்தும் தமிழ் இனவாதிகளும், பார்ப்பனர்களின் சதியோடு கைகோர்த்து, தமிழ் ஆர்.எஸ்.எஸ்.ஐ வளர்க்கின்றனர்.

வளர்ந்து வரும் காவி – கார்ப்பரேட் பாசிசத்திற்கெதிராகப் போராட, கால்டுவெல் மீள்கண்டுபிடுப்பு செய்த ”உயர்தனிச் செம்மொழியே நம் மொழி” என்பதும், “பார்ப்பன எதிர்ப்பு மரபே தமிழ் மரபு” என்பதும் இன்னமும் துருவேறாத வாள்களாக உள்ளன. அவற்றை நம் கைகளில் ஏந்துவதே கால்டுவெல்லை நினைவுகூர்வதாகும்.

புதிய ஜனநாயகம், ஜூன் 2014 (சிறு திருத்தங்களுடன்)