ஆர்.என்.ரவிக்கு கருப்பு கொடி: SFI மாணவர்களை ஒடுக்கும் தமிழ்நாடு போலீசு!

இந்திய மாணவர் சங்க நிர்வாகிகள் சுஜித், பிரவீன், முருகன், செல்வ பிரகாஷ் ஆகிய நான்கு பேர் மீது இந்திய தண்டனை சட்டத்தின் பிரிவுகள் 150 மற்றும் 143 ஆகியவற்றின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளது போலீசு.

டந்த சனிக்கிழமை (டிசம்பர் 23) அன்று ஆளுநர் ஆர்.என்.ரவியின் நாகூர் தர்கா வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, வி.சி.க மற்றும் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் சார்பாக கறுப்புக்கொடி காட்டும் போராட்டம் நடைபெற்றது.

அதன் ஒரு பகுதியாக திருவாரூரில் அமைந்துள்ள திரு.வி.க. அரசுக் கலை கல்லூரி முன்பு கறுப்பு கொடி காட்ட முயன்றதாகக் கூறி இந்திய மாணவர் சங்கத்தை (SFI) சேர்ந்த, சந்தோஷ், சுஜித், பிரவீன், செல்வபிரகாஷ் மற்றும் முருகன் ஆகியோரை வலுக்கட்டாயமாக மாவட்ட போலீசு கைது செய்து அழைத்துச் சென்றதோடு மட்டுமல்லாமல் தகாத வார்த்தைகளில் மாணவர்களை திட்டியும் உள்ளது.

மாணவர்களின் கைபேசியை பறித்ததோடு மட்டுமல்லாமல் விசாரணை என்ற பெயரில் காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை தாலுகா போலீசு நிலையத்தில் பிடித்துவதைத்து அனுப்பியுள்ளது. இந்திய மாணவர் சங்க நிர்வாகிகள் சுஜித், பிரவீன், முருகன், செல்வ பிரகாஷ் ஆகிய நான்கு பேர் மீது இந்திய தண்டனை சட்டத்தின் பிரிவுகள் 150 மற்றும் 143 ஆகியவற்றின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளது போலீசு.

கடந்த 2023 ஏப்ரல் மாதம் தஞ்சை தமிழ் பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழாவில் பட்டம் வாங்கச் சென்ற இந்திய மாணவர் சங்கத்தின் மாநில தலைவர் அரவிந்த் சாமியை ஆளுநர் ரவிக்கு எதிராக கறுப்பு கொடி கட்ட முயல்வார் என்று கூறி போலீசு அவரை அழைத்துச் சென்று நாள் முழுவதும் அடைத்து வைத்து சோதனை என்ற பெயரில் அவரின் உள்ளாடை வரை சோதனையிட்டு சித்திரவதை செய்தது குறிப்பிடத்தக்கது.


படிக்க: நாகப்பட்டினம்: “வேண்டாம் பிஜேபி; வேண்டும் ஜனநாயகம்” பேனரை அகற்றிய சங்கி போலீஸ்


பாசிச ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிராகப் போராடக் கூடிய மாணவர்கள் மற்றும் இடதுசாரி அமைப்புகளைச் சேர்ந்த மாணவர்களை பயங்கரவாதிகளை போல் நடத்துவது, சோதனை என்ற பெயரில் உளவியல் ரீதியாக துன்புறுத்துவது ஆகியவை அவர்களை ஒழித்துக் கட்டுவதற்கான நடவடிக்கைகள்.

கல்வி நிறுவனங்கள் காவிமயமாக்கப்பட்டு வருகின்றன. ஆர்.எஸ்.எஸ்-இன் மாணவர் அமைப்பான ஏ.பி.வி.பி-யைத் தவிர மற்ற மாணவர் அமைப்புகள் அனைத்தும் நிர்வாகத்தாலும் போலீசாலும் ஒடுக்கப்படுகின்றன.

ஏற்கெனவே, நாகப்பட்டினம் கணபதி புரத்தில் “வேண்டாம் பிஜேபி; வேண்டும் ஜனநாயகம்” என்ற முழக்கத்தின் அடிப்படையில் வைக்கப்பட்டிருந்த பேனரை எடுத்துச் சென்றது; திருவாரூரில் மக்கள் அதிகாரம் சார்பாக எழுதப்பட்டிருந்த சுவர் விளம்பரத்தை கருப்பு மை கொண்டு அழித்தது என தொடர்ச்சியாக தமிழ்நாட்டில் நடக்கக்கூடிய நிகழ்வுகளை ஒப்பிட்டு பார்க்கும்போதும் தமிழ்நாட்டு போலீசுத் துறை நேரடியாக ஆர்.எஸ்.எஸ் – பிஜேபி கும்பலுக்கு அடியாள் வேலை செய்து வருவது தெளிவாகிறது.


தகவல்
மக்கள் அதிகாரம் – திருவாரூர்

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube



விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க