உளவியலில் முதுநிலை (M.Sc. Counselling Psychology) படித்துவிட்டு, ஒரு மருத்துவமனையில் ஒப்பந்த அடிப்படையில் மனநல ஆலோசகராகப் பணி செய்யும் நண்பர் ஒருவரைச் சந்திக்க நேர்ந்தது.
அவரது பணி தொடர்பாகவும், உளவியல் துறை சார்ந்த கல்வி தொடர்பாகவும் பல்வேறு விசயங்களை விவாதித்துக் கொண்டிருந்தோம். அப்போது அவர் குறிப்பிட்டுச் சொன்ன ஒரு விசயம் அதிர்ச்சிகரமாக இருந்தது.
உளவியல் சார்ந்து படிப்பவர்களில் 20 சதவிகிதம் பேர் மட்டுமே அத்துறை சார்ந்து மனநல ஆலோசகர்களாக பணிபுரிகின்றனர் என்று அவர் கூறினார்.
”பல்வேறு தரப்பட்ட மனநலப் பிரச்சினைகளோடு வருகிறார்கள். தொடர்ச்சியாக இப்படிப்பட்டவர்களை அணுகுவதால், சிகிச்சை அளிக்கும் மனநல ஆலோசகர்களும் உளவியல் ரீதியாகக் கடுமையாகப் பாதிக்கப்படும் சூழல் உருவாகிறது. கவலை, மனச்சோர்வு, அதிர்ச்சி, மன அழுத்தம் போன்ற பல்வேறு பிரச்சினைகளுக்கு ஆளாகின்றனர். இத்தகைய சூழலால் வேறு துறைக்குச் சென்று விடுகின்றனர்” என்று அவர் கூறினார்.
”அப்படியென்றால், அதற்கு கல்வி மற்றும் மருத்துவக் கட்டமைப்பில் என்ன தீர்வு சொல்கிறார்கள்” என்று கேட்டேன்.
“அவ்வாறு உளவியல் பிரச்சினைகள் ஏற்படும்போது மனநல ஆலோசகர்கள் வேறு ஏதாவது ஒரு விசயத்தில் கவனத்தைக் கொண்டு செல்ல வேண்டும் எனவும், தியானம் செய்ய வேண்டும் எனவும் வழிகாட்டுதல் உள்ளது” என்று நண்பர் கூறினார்.
மேற்கண்ட தீர்வுகள் எல்லாம் இணையத்திலேயே கிடைக்கின்றன. இதைச் சொல்வதற்கு ஒரு அரசு நிர்வாகக் கட்டமைப்பு அவசியம் இல்லை. இது எந்த வகையிலும் தீர்வளிக்கவில்லை என்பதைத்தான், 20 சதவிகித மனநல ஆலோசகர்களே அத்துறை சார்ந்து பணிபுரியும் அவலநிலை எடுத்துக் காட்டுகிறது.
அதாவது, இந்தக் கல்விக் கட்டமைப்பு எவ்வாறு இருக்கிறதென்றால், நீ காசு கொடுத்து படித்துக் கொள். படிப்பு சொல்லிக் கொடுப்பதற்கு மட்டும்தான் நாங்கள் பொறுப்பு. மற்றபடி வேலை தேடுவது உன் பிரச்சினை. உளவியல் பிரச்சினை ஏற்பட்டால் தீர்த்துக் கொள்வதும் உன் பிரச்சினை என்று உளவியல் சார்ந்து படிப்பவர்களை வீதியில் தள்ளி விட்டுள்ளது. மேற்கொண்டு எந்தப் பொறுப்பையும் எடுத்துக் கொள்வதில்லை.
படிக்க: கோட்டா பயிற்சி மைய மரணங்கள்: தனிப்பட்ட மனநல பிரச்சனையா?
உண்மையில் இப்பிரச்சினையைத் தீர்ப்பதற்கு நிறுவனக் கட்டமைப்பை அரசு உருவாக்கியிருக்க வேண்டும். இப்பிரச்சினையைத் தீர்ப்பதற்குத் தொடர்ச்சியான பயிற்சிகள் கொடுக்கப்பட வேண்டும். அப்போதுதான் உளவியல் ஆலோசகர்கள் சீரான மனநிலையில் சிகிச்சை அளிக்க முடியும்.
இன்றைய மறுகாலனியாக்க சூழல் காரணமாக உருவாகியிருக்கும், கொடூர சுரண்டலின் காரணமாக இன்னும் ஆழமாகியிருக்கும் சமூக ஏற்றத்தாழ்வு, இயந்திரமயமான தனித்து விடப்பட்ட வாழ்க்கை முறை, டிஜிட்டல் உலகம் ஏற்படுத்துகின்ற தொடர்ச்சியான தாக்கம், ஏகாதிபத்திய சீரழிவுகள் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் எண்ணிலடங்கா மனநிலைப் பிரச்சினைகளுக்கு மனிதர்கள் ஆட்பட்டு வருகின்றனர். இதைத் தீர்ப்பதற்கான வழிமுறைகளைப் பொறுத்தவரை, அவையும் இன்றைக்கு இலாபம் கொழிக்கும் கார்ப்பரேட் தொழிலாக மாற்றப்பட்டுள்ளது.
இத்தகைய அவலமான சூழலைப் பற்றி அரசுக்கு எந்தப் பொறுப்புணர்ச்சியும் கிடையாது. மறுகாலனியாக்கத்தை மேலும் தீவிரப்படுத்துவது ஒன்றே இன்றைக்கு அரசுக் கட்டமைப்பின் பணியாக மாறிப் போய்விட்டது. இப்படிப்பட்ட சூழலில் இத்தகைய பிரச்சினைகளுக்கு ஆலோசனை அளிக்கும் ஆலோசகர்களின் மனநிலையைக் கொஞ்சம் எண்ணிப் பாருங்கள்.
இது ஒரு மிகவும் சிக்கலான பிரச்சினையாகும். இதற்கு இந்தக் கட்டமைப்பில் எந்தத் தீர்வும் இல்லை. மேலும் மேலும் சிக்கலை விரிவுபடுத்துகின்ற வகையில்தான் இந்தக் கட்டமைப்பே உள்ளது. அதாவது மனிதர்களின் மனநலனை மோசமாகச் சிதைத்துள்ளது.
மனிதர்களின் உடல்நலன், மனநலன் ஆகியவற்றைப் பேணிப் பாதுகாக்கின்ற, அதைத் தன்பொறுப்பாக எடுத்துக் கொண்டு அதன் மீது முழுமையான அக்கறை செலுத்துகின்ற, மாற்றுக் கட்டமைப்பைப் பற்றி இன்னும் ஆழமாகச் சிந்திக்க வேண்டிய தேவையை நண்பருடனான சந்திப்பு உணர வைத்தது.
தமிழன்பன்
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram