ஒடிசாவில் கடந்த ஆண்டு ஜூன் மாதத்தில் பா.ஜ.க. ஆட்சிக்கு வந்த பிறகு கிறிஸ்தவர்கள் மீதான தாக்குதல்கள் அதிகரித்துள்ளன. குறிப்பாக, மார்ச் மற்றும் ஏப்ரல் 2025-க்கு இடைப்பட்ட காலத்தில் மூன்று உண்மையறியும் குழுக்களின் ஆய்வறிக்கைகள் வெளியாகியுள்ளன. அவ்வறிக்கைகள், ஒடிசாவில் பழங்குடியின மக்கள் மற்றும் தலித் சமூகங்களைச் சார்ந்த கிறிஸ்தவர்கள் இலக்கு வைக்கப்பட்டு தாக்கப்படுகின்றனர் என்பதை அம்பலப்படுத்துகின்றன.
குறிப்பாக ஒடிசாவின் நபரங்பூர் மாவட்டத்தில், 2022 மற்றும் 2025-க்கு இடையில் கிறிஸ்தவ குடும்பங்களை சார்ந்தவர்களின் உடல்களை மயானத்தில் அடக்கம் செய்யும் உரிமை மறுப்பு, சாதி-மத ரீதியிலான அவமதிப்பு மற்றும் கட்டாய மதமாற்றம் தொடர்பான சம்பவங்களை உண்மை கண்டறியும் குழு ஆவணப்படுத்தியுள்ளது.
இந்துமதவெறி கும்பல் அரசியலமைப்பு உரிமைகளை அப்பட்டமாக மீறுவதையும் ஒடிசாவில் நிலவும் சமூக ரீதியான பாகுபாட்டையும் இவ்வறிக்கைகள் அம்பலப்படுத்துகின்றன. ஆனால், பாதிக்கப்பட்ட பழங்குடி கிறிஸ்தவ மக்கள் உதவிக்காக பலமுறை வேண்டுகோள் விடுத்தும், அதிகாரிகள் அதைக் கண்டுகொள்ளவில்லை.
படிக்க: ஈஸ்டர் பண்டிகை: கிறிஸ்தவர்களைத் துன்புறுத்தும் காவி கும்பல்!
இத்தகைய சம்பவங்களில், அடக்கம் செய்யப்பட்ட கிறிஸ்தவர்களின் உடல்கள் இந்துமத வெறியர்களால் தோண்டியெடுக்கப்பட்டு, இழிவுபடுத்தப்படுகின்றன என்ற அதிர்ச்சிகர உண்மையும் வெளியாகியுள்ளது.
- மகாராஷ்டிராவில் வேலை செய்து கொண்டிருந்தபோது இறந்துபோன சரவன் கோண்ட் என்ற கிறிஸ்தவ இளைஞரின் உடல் அவரது சொந்த கிராமத்தில் அடக்கம் செய்யப்பட்ட பின்பு இந்துமத வெறியர்களால் தோண்டியெடுக்கப்பட்டு, வீசியெறியப்பட்டது. அவரது குடும்பத்தினர் தாக்கப்பட்டுள்ளனர். இன்றுவரை, அவரது உடலை மதவெறி குண்டர்கள் என்ன செய்தார்கள் என்பது தெரியவில்லை.
- சியுனாகுடா என்ற கிராமத்தைச் சேர்ந்த இந்து பழங்குடி கேசவ் சாந்தா (85) மார்ச் 2-ஆம் தேதி அன்று இறந்தார். அவரது மகன்கள் ஏற்கெனவே கிறிஸ்தவத்தைத் தழுவியவர்கள் என்ற காரணத்திற்காக கேசவ் சாந்தாவின் உடல் அடக்கம் செய்ய மறுக்கப்பட்டது. அவரது மகன் திருப்பு சாந்தா, தனது தந்தையை அடக்கம் செய்வதற்காக தன்னை ஒரு இந்து என்று பொய்யாக ஒரு ஆவணத்தில் கையெழுத்திட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.
- பாண்டிகோட் என்ற கிராமத்தில், கிறிஸ்தவரான டோமு ஜானி (60) என்பவரின் மனைவி சாந்தி ஜானி இந்து மதத்திற்கு மாற மறுத்ததால், அவரது உடல் அடக்கம் செய்ய அனுமதிக்கப்படவில்லை. அவரது உடலை கிட்டத்தட்ட மூன்று கிலோமீட்டர் தூரம் கொண்டு சென்று காட்டில் அடக்கம் செய்ய வேண்டிய இழிநிலை ஏற்பட்டது.
- சுருகுடா கிராமத்தைச் சேர்ந்த தலித் கிறிஸ்தவரான சந்திரா ஹரிஜன் (73) இறந்தபோது, அவரது உடலை அடக்கம் செய்வதற்காக மரணத்திற்குப் பின் இந்துவாக அறிவிக்கப்பட்டார். இதேபோல், மெஞ்சார் கிராமத்தைச் சேர்ந்த கிறிஸ்தவரான மது ஹரிஜன் (27) இறந்தபோது, அவர் இந்துவாக அறிவிக்கப்பட்ட பின்பே அவரது உடல் அடக்கம் செய்ய அனுமதிக்கப்பட்டது.
இவையன்றி, கடந்த மார்ச் 22-ஆம் தேதி சம்பல்பூரில் உள்ள டிட்லாகர் திருச்சபையில் உள்ள புனிதப் பொருட்கள் இந்து மதவெறிக் கும்பலால் சேதப்படுத்தப்பட்டு, தேவாலயத்தில் இருந்த நன்கொடைப் பெட்டி திருடப்பட்டது; டிசம்பர் 26, 2024 அன்று சுபானிசி சிங் மற்றும் சுகந்தி சிங் ஆகிய இரண்டு பழங்குடியின பெண்கள் மதம் மாறியதாகக் கூறி, இந்து மதவெறியர்களால் அவமானப்படுத்தப்பட்டது என பல்வேறு வழிகளில் கிறிஸ்தவ மக்கள் தாக்குதலுக்கு உள்ளாக்கப்படுகின்றனர்.
நபரங்பூர் மாவட்டத்தில் உள்ள கிறிஸ்தவர்கள், இறந்தவர்களின் உடல்களை அடக்கம் செய்வதற்கான புதைகுழி வேண்டி பலமுறை கோரிக்கை விடுத்தும் அவை எதுவும் அரசாங்கத்தால் கண்டுகொள்ளப்படவில்லை. இச்சம்பவங்கள், இந்திய அரசியலமைப்பின் பிரிவுகள் 21 (வாழ்வுரிமை), 25 (மத சுதந்திரம்) மற்றும் 17 (தீண்டாமை மற்றும் சாதி அடிப்படையிலான பாகுபாட்டிற்கு எதிரான பாதுகாப்பு) ஆகியவற்றை ஒடிசா மாநில பா.ஜ.க. அரசு குப்பைத் தொட்டியில் வீசியெறிந்துவிட்டதை உணர்த்துகிறது.
படிக்க: கிறிஸ்தவர்கள் மீது தொடுக்கப்படும் பாசிச பயங்கரவாதம்
மேலும் இந்த உண்மை கண்டறியும் குழுக்களின் அறிக்கைகள், கிறிஸ்தவ மக்களுக்கு விரோதமான பாசிச பா.ஜ.க. அரசின் தன்மையையும், விஸ்வ ஹிந்து பரிஷத் போன்ற ஆர்.எஸ்.எஸ். சங்கப் பரிவார குழுக்களின் வளர்ந்துவரும் செல்வாக்கையும் வெளிப்படுத்துவதாக உள்ளன. விஸ்வ ஹிந்து பரிசத்தின் “ஜாகோ அவுர் ஜகாவோ” (விழித்தெழுந்திடு) என்ற பிரச்சாரம் கிராம மக்கள் மத்தியில் இந்துமதவெறியைத் தூண்டுவதற்கு பயன்படுத்தப்பட்டுள்ளது. பா.ஜ.க-வைச் சேர்ந்த ஒரு அரசியல்வாதி “அவர்களைக் கொல்லுங்கள், கல்லறையைத் தோண்டுபவர்களைக் கொல்லுங்கள்” என்று கிறிஸ்தவர்களுக்கு எதிராகக் கூச்சலிட்டதாகக் கிறிஸ்தவ சமூகத்தைச் சார்ந்த முன்னணியாளர் ஒருவர் தெரிவித்துள்ளது இதற்கு சான்றாகும்.
ஒடிசாவின் நபரங்பூர் மாவட்டம் 59.3 சதவிகிதம் பல்பரிமாண வறுமைக் குறியீட்டைக் (MPI – Multidimensional Poverty Index) கொண்டுள்ள மிகவும் ஏழ்மையான மாவட்டம் ஆகும். பழங்குடி பெண்களிடையே கல்வியறிவின்மை 72 சதவிதமாக உள்ளது. இந்த நிலைமைகள் பழங்குடி கிறிஸ்தவ சமூகங்களை மதரீதியாக துன்புறுத்துவதற்கான வாய்ப்பாக உள்ளது.
மேலும், அம்மாவட்டத்தில் கிறிஸ்தவர்களின் மக்கள்தொகை வெறும் 2.63 சதவிகிதமாக உள்ளது. இதனை தங்களுக்கு சாதகமாகப் பயன்படுத்திக்கொண்டு கிறிஸ்தவர்களை இந்து மக்களுக்கு எதிராக சித்தரித்து இந்து மக்களை அணித்திரட்டத் துடிக்கிறது ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க. இந்துமதவெறி கும்பல். இதற்காக கிறிஸ்தவ மக்கள் மீது தொடர் தாக்குதல்களையும் துன்புறுத்தல்களையும் நிகழ்த்தி வருகிறது.
இந்தியாவில் மதரீதியான துன்புறுத்தலை எதிர்கொள்ளும் சிறுபான்மை சமூகமாக இஸ்லாமியர்களுக்கு அடுத்து கிறிஸ்தவர்களே இந்துமதவெறி கும்பலின் இலக்காக உள்ளனர். 2024-இல் மட்டும் கிறிஸ்தவர்கள் மற்றும் ஆலயங்கள் மீது 161 தாக்குதல்கள் பதிவாகியுள்ளன. எதார்த்தத்தில் இதனைவிட பலமடங்கு நடைபெறும் தாக்குதல்கள் முழுமையாக பதிவு செய்யப்படுவதில்லை.
இந்நிலையில், ஒடிசாவில் கிறிஸ்தவர்கள் மீதான தாக்குதல்களை வெளிக்கொண்டுவந்துள்ள இந்த உண்மை கண்டறியும் அறிக்கை சில பரிந்துரைகளை முன்வைத்துள்ளது.
- தேசிய மனித உரிமைகள் ஆணையம் மற்றும் உச்சநீதிமன்ற உத்தரவுகளுக்கு இணங்க, அடக்கம் செய்யும் உரிமைகளைப் பாதுகாக்க சட்டம் இயற்றப்பட வேண்டும்
- பாரதீய நாகரிக் சுரக்ஷா சன்ஹிதா (BNSS) விதிகளைப் பயன்படுத்தி குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும்
- சாதி மற்றும் நம்பிக்கை அடிப்படையிலான பாகுபாட்டிற்கு எதிராக சிவில் உரிமைகள் பாதுகாப்புச் சட்டத்தை அமல்படுத்த வேண்டும்.
- பழங்குடி மக்களின் பழக்கவழக்கங்களின் அடிப்படையில் அடக்கம் செய்ய மறுப்பதை நியாயப்படுத்துவதற்காக பஞ்சாயத்துகள் சட்டம் 1996 (PESA Act) தவறாகப் பயன்படுத்தப்படுவதைத் தடுக்க வேண்டும்
- வன்முறையைத் தூண்டும் இந்துமதவெறி அடிப்படைவாதிகளை விசாரித்து வழக்கு தொடுக்க வேண்டும்
- ஒவ்வொரு மாவட்டத்திலும் சிறுபான்மையினர் உரிமைகளுக்கான குழுக்களை நிறுவி, கிறிஸ்தவ அடக்கங்களுக்கு நிலையான நிலங்களை ஒதுக்க வேண்டும்.
உள்ளிட்ட கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளன.
மேற்கண்ட சம்பவங்கள் ஒடிசாவில் கிறிஸ்தவ மக்களின் மீதான தாக்குதல்கள் நிறுவனமயப்படுத்தப்பட்டு நடத்தப்பட்டுக் கொண்டிருப்பதை தெளிவாக உணர்த்துகின்றன.
குஜராத், உத்தரப்பிரதேசம், உத்தராக்கண்ட், அசாம் வரிசையில், ஒடிசாவில் ஆட்சியதிகாரத்தை கைப்பற்றிய பிறகு அம்மாநிலத்தையும் இந்துமதவெறி சோதனைச்சாலையாக பாசிச ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க. கும்பல் பயன்படுத்தி வருகிறது. இது இஸ்லாமியர்களை போலவே கிறிஸ்தவ மக்களையும் இந்தியாவின் இரண்டாந்தர குடிமக்களாக்கும் பாசிச கும்பலின் நோக்கத்தை வெளிக்காட்டுகிறது.
மேற்கண்ட சம்பவங்களை தடுக்க வக்கற்ற நிலையில்தான் ஜனநாயகத்தை நேசிப்போர் பலரின் கடைசி நம்பிக்கையான உச்சநீதிமன்றம் உள்ளது. பாசிசக் கும்பலுக்கு எதிரான மென்மையான குரலில் சில கண்டனங்களைத் தவிர வேறொன்றையும் நீதிமன்றங்கள் செய்வதில்லை. மேலும் பல்வேறு சமயங்களில் உச்சநீதிமன்றம் இரட்டை நாக்குடன் கொடுக்கும் தீர்ப்புகள் சிறுபான்மை மக்களுக்கு எதிராகவே உள்ளன.
பாசிசக் கும்பலால் பாதிக்கப்பட்ட அனைத்து சமூகப் பிரிவுகளும், பெருவாரியான உழைக்கும் மக்களோடு இணைந்து மாபெரும் போராட்டங்களை, பாசிச எதிர்ப்பு சக்திகளின் தலைமையில் கட்டியமைக்க வேண்டிய தேவையை இந்நிகழ்வுகள் தீர்க்கமாக உணர்த்துகின்றன.
தமிழன்பன்
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram