“அவமானம் மட்டுமே மிஞ்சுகிறது” – மனம் உடைந்த பெங்களூரு மென்பொறியாளரின் குமுறல்!

சொன்ன வேலையைச் செய்து முடி வேறு பேச்சு பேசாதே என்பதுதான் அத்துறையில் பரவலாக நிலவும் பணி கலாச்சாரம்.

லிங்க்ட் இன் (linkedin.com) என்னும் வேலை தேடும் இணையதளத்தில் பெயர் குறிப்பிடாமல் வெளியிடப்பட்டிருந்த காணொளிப் பதிவு ஒன்று மென்பொருள் பொறியாளர்கள் மத்தியில் கணத்தில் பரவி பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கிறது.

பெங்களூருவில் ஒரு மென்பொருள் பொறியாளர் வழமையான தங்களின் குழுவுக்கான இணையக் கூட்டத்தில் உடைந்து போய் குமுறி அழுதார். அவரால் அழுகையைக் கட்டுப்படுத்த முடியவில்லை. காணொளியுடன் வெளியிடப்பட்டிருந்த அந்த பதிவு, அங்கு வேலை நிலைமை எவ்வளவு மன அழுத்தம் தரக்கூடியதாக இருக்கிறது என்பதையும் சுற்றிலும் யாரிடமிருந்தும் எந்த ஆதரவும் கிடைக்காமல் எதிலும் அவமானம் மட்டுமே எஞ்சும் தனது வேலையை வேறு வழியில்லாமல் ராஜினாமா செய்து விட்டார் என்பதையும் விளக்குகிறது.

மிகுந்த எதிர்பார்ப்புகளுடனும் ஆர்வத்துடனும் அந்த நிறுவனத்தில் சேர்ந்த அந்தப் பொறியாளருக்கு சக ஊழியர்களுடன் எந்த அறிமுகமும் ஏற்படுத்தப்படவில்லை. எந்த அவகாசமும் தரப்படவில்லை. எடுத்த எடுப்பிலேயே நேரடியாக சவால் மிகுந்த வேலைகளை பொறுப்பளித்தனர். சக ஊழியர்களுடன் முறையாக எந்த விதமான அறிமுகமும் நடக்கவில்லை. யாருடைய நட்போ வழிகாட்டுதலோ இல்லை. ப்ராஜெக்ட் எனப்படும் அந்த வேலை குறித்து எந்த முறையான விளக்கமும் கொடுக்க வில்லை. யாருடைய உதவியும் இல்லாமல் ஊழியரே அனைத்தையும் தனியாக சொந்த முறையில் தேடிக் கண்டடைந்து கொள்ள வேண்டும் என்று விடப்பட்டிருக்கிறார்.

அவரது குழுவிற்கான (Team) இணையக் கூட்டத்தில் தன்னுடைய வேலையைப் பற்றிப் புரிந்து கொள்வதற்காக சில சாதாரண சந்தேகங்களைக் கேள்வியாகக் கேட்டதற்கு ”இது கூட தெரியாதா” என்று அனைவர் முன்னிலையிலும் அவமானப்படுத்தப்பட்டு வாயடைக்கப்பட்டார். அப்போதுதான் அக்கூட்டத்திலேயே குமுறி அழுதார். என்னுடைய வேலையைப் பற்றிப் புரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காகத்தான் கேட்டேன். யாருமே எந்த விளக்கமும் சொல்லாமல் அவமானப்படுத்தி வாயடைக்கச் செய்தனர் என்று இப்பதிவாளரிடம் கதறி இருக்கிறார் அப்பொறியாளர்.

பின்னிரவு நேர அழைப்புகளில் திடீரென்று எந்த தெளிவும் இல்லாமல் ஏதாவது கேட்கப்படும். அதில் சந்தேகங்களைத் தெளிவுபடுத்தக் கேட்டால் உதாசீனப்படுத்துவர்; அவமானப்படுத்துவர். தவறு இவருடையதாகவே இல்லை என்றாலும் அந்த மேலாளர் தனது குழு முழுவதையும் கரித்துக் கொட்டுவார்.

பணிக் கலாச்சாரம்

பணிகள் குறித்த சந்தேகங்களைக் கேட்பது அவமானமாகவும் ஆளுமைக்கே இடுக்கானதாகவும் பார்க்கப்படுகிறது. இதுவே பணிக்கலாச்சாரமாக உருவாக்கப்பட்டிருக்கிறது. எனவே இறுதியாக அந்த பொறியாளர்கள் யாரிடமும் எந்த உதவியும் கேட்பதை தானாகவே நிறுத்திக் கொண்டார். அத்துடன் யாருடைய பார்வையிலும் கவனத்திலும் வராமல் தன்னைத்தானே தனிமைப்படுத்திக் கொண்டார். இப்போது எந்தப் பாராட்டுரையையும் எதிர்பார்ப்பதில்லை. தான் பலர் முன்னிலையில் அவமானப்படுத்தப்படாமல் இருந்தாலே போதும் என்கிற தற்காப்பு உணர்வுக்குத் தள்ளப்பட்டு விட்டார்.

ஒரு கட்டத்தில் வேலையை விட்டு விடலாம் என்கிற முடிவெடுத்து குறித்த கால அவகாசத்துடன் கடிதம் கொடுத்து விட்ட பிறகு அவர்மீது மேலும் வெறுப்பு உமிழப்பட்டது. “வேறு வேலை கிடைக்கட்டும்; வாழ்த்துக்கள். பார்ப்போம் எவ்வளவு காலத்துக்கு அங்கே நீடிக்கிறாய் என்று பார்ப்போம்”. இதுதான் அவரது மேலாளர் கடைசி சந்திப்பில் சொன்ன வார்த்தைகள். எவ்வளவு இரக்கமற்ற ஈரமற்ற வார்த்தைகள்?

மனித உணர்ச்சிகள் நீக்கப்பட்ட வெறும் கட்டுப்பாடு, அதாவது சொன்ன வேலையைச் செய்து முடி வேறு பேச்சு பேசாதே என்பதுதான் அத்துறையில் பரவலாக நிலவும் பணி கலாச்சாரம். இப்போதெல்லாம் அதிகமாக யாரும் வேலை செய்யும் நிறுவனங்களை விட்டு வெளியேறுவதில்லை. தங்களுடைய தன்மானமும் சுயமரியாதையும் மறுக்கப்படும் சூழ்நிலையில்தான், அதாவது இனிமேல் அங்கு வேலை செய்வது நமக்கு மரியாதை இல்லை என்ற சூழலில் தான் வெளியேறுகின்றனர். பல இடங்களில் இப்படிப்பட்ட சூழ்நிலைமையை நிறுவனங்களே உருவாக்குகின்றன என்பதுதான் முக்கியமானது; கவனிக்கப்பட வேண்டியது. அதன் வெளிப்பாடு தான் மேலாளர்களின் அணுகுமுறைகள் என்று கூறுகிறது அப்பதிவு.

”ஒரு மேலாளர் கெட்டவனாக இருந்தால், அவன் நீங்கள் கனவு கண்ட வேலையைக் கூட நரகமாக்கி விடுவான். அதே சமயம் ஒரு நல்ல மேலாளர் நீங்கள் விரும்பாத

தெரிந்திருக்காத வேலையையும் விரும்பிச் செய்யும்படி மாற்றி விடுவார். எனவே நல்ல மேலாளர்களை எளிதில் இழந்து விடாதீர்கள். அவர்கள் நீங்கள் எண்ணுவதை விடவும் வேகமாக எண்ணிக்கையில் குறைந்து வருகிறார்கள்” என்று கூறி முடிகிறது அந்த பதிவு.

மற்ற பலரின் அனுபவமும்

லிங்க்ட்இன் தளத்தில் இந்தப் பதிவுக்கு பார்வையாளர் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்திருக்கிறது. பலர் தங்களது சொந்த அனுபவமாகவே இருப்பதைப் பின்னூட்டங்களில் வெளிப்படுத்தி இருக்கின்றனர். இந்தப் பதிவு உண்மையை அழுத்தமாகச் சொல்லி இருக்கிறது என்று பின்னூட்டங்களில் பதிவிட்டிருக்கின்றனர்.

ஒரு தலைமையின் அணுகுமுறை ஊழியர்களின் தன்னம்பிக்கையை, மன வலிமையை எவ்வளவு தூரம் பாதிக்கக் கூடும் என்பதை உணரும்போது நெஞ்சம் பதைக்கிறது. அவ்வாறே, தலைமைகளைப் போலவே நாம் ஒவ்வொருவரும் கூட அடுத்தவர்களைக் கவனிக்கவும் அவர்கள் மீது அக்கறைப்படவும் உதவவும் வேண்டும். என்பதுடன், பரஸ்பரம் இணக்கமாகவும், நமது சக ஊழியர்கள் தாங்கள் மதிக்கப்படுவதாகும் பாதுகாப்பாக இருப்பதாகவும் உணர்கின்ற வகையிலான ஒரு வேலைச் சூழலை உருவாக்குவது நமது பொறுப்புமாகும் என்று ஒருவர் கருத்துரைத்திருக்கிறார்.

இப்போதெல்லாம் நமது கனவு வேலை என்பதெல்லாம் எதார்த்தத்துக்குப் பொருந்தாத ஒரு மூடநம்பிக்கை என்று கூறியுள்ளார் இன்னொருவர்.

வேலைச் சூழல் மற்றும் தலைமையின் அணுகுமுறைகள், ஒரு ஊழியரின் மனநலத்தை எவ்வாறு பாதிக்கின்றது என்பது பற்றிய பரவலான உரையாடலைத் தோற்றுவித்திருக்கிறது இந்த பதிவு. இது வேலை பறிக்கப்பட்டுக் கொண்டிருக்கும் இன்றைய சூழலில் அவசியமாகும்.

நன்றி: எக்கனாமிக்டைம்ஸ் இணையம்


தமிழில் – சுந்தரம்

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram



விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க