அகமதாபாத் விமான விபத்து: கார்ப்பரேட் கிரிமினல்களின் லாபவெறியே காரணம்

அகமதாபாத் விமான விபத்தானது போயிங் போன்ற கார்ப்பரேட் கிரிமினல் நிறுவனங்களின் லாப வெறி மற்றும் இந்திய ஒன்றிய அரசின் கார்ப்பரேட் சேவை ஆகியவற்றின் விளைவே ஆகும்.

குஜராத் மாநிலம், அகமதாபாத் விமான நிலையத்திலிருந்து ஜூன் 12 அன்று இங்கிலாந்து தலைநகர் லண்டனை நோக்கிப் புறப்பட்ட ஏர் இந்திய விமானம், கிளம்பிய 3 நிமிட இடைவெளியில் விமான நிலையத்திற்கு அருகே மேகானி நகர் குடியிருப்புப் பகுதியில் உள்ள பி.ஜே.மருத்துவமனை விடுதியில் விழுந்து விபத்திற்குள்ளானது.

விமானம் புறப்பட்ட சில நிமிடங்களிலேயே கேப்டன் சுமீத் சபர்வாலிடமிருந்து ”மேடே” (Mayday) அழைப்பு விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டுக்கு அனுப்பப்பட்டதாகச் செய்திகளில் குறிப்பிடப்படுகிறது. மேடே அழைப்பு என்பது விமானப் போக்குவரத்து மற்றும் கடல்சார் தகவல் தொடர்புகளில் உயிருக்கு ஆபத்தான அவசரநிலையைக் குறிக்கப் பயன்படுகிறது. ஆனால், மேடே அழைப்பிற்கு பதில் அனுப்பப்படுவதற்குள் விமானம் விபத்தில் சிக்கியது.

விமானத்தில் முழு கொள்ளளவில் எரிபொருள் இருந்ததால், விமானம் வெடித்துச் சிதறியது. இந்த கோர விபத்தில், விமானத்தில் பயணித்த ஒருவர் தவிர 241 பேரும் பரிதாபமாக உயிரிழந்தனர். உயிரிழந்தவர்களில் 169 பேர் இந்தியர்கள். 53 பேர் பிரிட்டன் குடிமக்கள், 7 பேர் போர்த்துக்கீசிய நாட்டினர், ஒருவர் கனடாவைச் சேர்ந்தவர்.

மேகானி நகரில் உள்ள பி.ஜே. மருத்துவக் கல்லூரி விடுதியில் விமானம் நேரடியாக மோதியதில், அங்கு உணவு உட்கொண்டிருந்த மருத்துவர்கள், மாணவர்கள், ஊழியர்கள் என 100-க்கும் மேற்பட்டவர்கள் தீயில் சிக்கினர். 13.06.2025 அன்று மாலை 6 மணி நிலவரப்படி மேகானி நகரில் மருத்துவர்கள், மாணவர்கள், ஊழியர்கள் என 24 பேர் உயிரிழந்ததாகச் செய்திகள் வெளியாகின.


படிக்க: ஈரான் விமான விபத்து – என்ஜினா, ஏகாதிபத்தியமா ?


இதுவரை இந்த கோரமான விமான விபத்தில் 274 பேர் உயிரிழந்துள்ளனர். பலரது நிலை கவலைக்கிடமாக இருப்பதால் பலி எண்ணிக்கை 290 ஆக உயரலாம் எனக் கூறப்படுகிறது. விமானம் வெடித்துச் சிதறியுள்ளதால், பெரும்பாலானோரின் உடல்கள் கருகி நிலையில் உள்ளன. இதனால் டி.என்.ஏ பரிசோதனை மூலமே நபர்களை அடையாளம் காண முடியும் என்ற அவலநிலையே உள்ளது. உயிரிழந்தவர்களின் உறவினர்கள் மருத்துவமனையில் எப்படியாவது உடலையாவது கண்டறிந்து விடமாட்டோமா என்று கதறி அழும் காட்சிகள் மனதை உலுக்குகின்றன. புதிய வாழ்க்கையைத் தொடங்க பயணம் மேற்கொண்டவர்கள், மனைவியின் அஸ்தியைக் கரைக்க வந்த கணவர் என உயிரிழந்தவர்களின் ஒவ்வொருவரின் கதையும் செய்திகளில் வெளியாகி அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. உலக விமான போக்குவரத்து வரலாற்றில் மிக மோசமான விபத்தாக அகமதாபாத் விமான விபத்து மாறியுள்ளது.

இந்த விபத்து குறித்து இந்தியாவின் சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகம் (India’s Directorate General of Civil Aviation) தலைமையில் விசாரணை தொடங்கியுள்ளது, அமெரிக்க தேசிய போக்குவரத்து பாதுகாப்பு வாரியம் (National Transportation Safety Board) மற்றும் சர்வதேச விமானப் போக்குவரத்து நிபுணர்களின் உதவியுடன் இடிபாடுகளிலிருந்து மீட்கப்பட்ட விமானத்தின் பிளாக் பாக்ஸ் (black box) எனப்படும் விமானத் தரவுப் பதிவு (Flight Data Recorder – FDR) மற்றும் காக்பிட் குரல் பதிவு (Cockpit Voice Recorder) ஆகியவற்றைக் கொண்டு ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. முதற்கட்ட விசாரணையில், ”இயந்திரக் கோளாறு” தான் விபத்திற்குக் காரணம் எனக் கூறப்பட்டுள்ளது.

கார்ப்பரேட் லாபவெறிக்கு பலியிடப்பட்ட மக்கள்

விபத்துக்குள்ளான “ஏர் இந்தியா” விமானம் அமெரிக்காவைச் சேர்ந்த விமானத் தயாரிப்பு நிறுவனமான போயிங்கிற்கு சொந்தமான “போயிங் 787-8 ட்ரீம்லைனர்” இரட்டை ஜெட் விமானமாகும். போயிங் நிறுவனம் விமானத் தயாரிப்பில் முறையான தர நிலைகளைப் பின்பற்றுவதில்லை என்பது பல்வேறு கால கட்டத்தில் அம்பலமாகியுள்ளது; உலகளவில் பல விபத்துக்களையும் தொடர்ச்சியாக போயிங் விமானங்கள் சந்தித்து வருகின்றன.

2018-ஆம் ஆண்டு இந்தோனேசியாவின் லயன் ஏர் நிறுவனத்தைச் சார்ந்த “போயிங் 737 மேக்ஸ் 8 ஜெட் ரக விமானம்” ஜாவா கடலில் மணிக்கு 400 மைல் வேகத்தில் விழுந்து விபத்துக்குள்ளானது. இதில் விமானத்திலிருந்த 189 பேரும் உயிரிழந்தனர்.

சில மாதங்களுக்குப் பிறகு, மார்ச் 2019-இல், எத்தியோப்பியன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தைச் சார்ந்த அதே வகையைச் சார்ந்த 737 மேக்ஸ் 8 ஜெட் போயிங் விமானம் விபத்துக்குள்ளானது, அதில் பயணித்த 157 பேரும் கொல்லப்பட்டனர்.

இந்தியாவிலும் போயிங் 737 மேக்ஸ் ரக விமானங்கள் விபத்திற்குள்ளாகியுள்ளது. 2010-ஆம் ஆண்டு, மங்களூரில் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸிற்குச் சொந்தமான போயிங் 737-8HG(SFP) வகை விமானம் விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில், விமானத்தில் பயணம் மேற்கொண்ட 166 பேரில் 158 பேர் உயிரிழந்தனர்.

2020-ஆம் ஆண்டு, கோழிக்கோட்டில் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனத்திற்குச் சொந்தமான போயிங் 737 – 8HG(SFP) வகை விமானம் விபத்தானது. இந்த விபத்தில் இரண்டு விமானிகள் உட்பட 21 பேர் உயிரிழந்தனர். சுமார் 100 பேர் படுகாயமடைந்தனர்.

உலகமுழுவதும் போயிங் நிறுவனத்தின் 737 ரக விமானங்கள் தொடர்ச்சியாக விபத்துகளைச் சந்திக்கத் தொடங்கியதையடுத்து, உலகமுழுவதும் விற்பனை செய்யப்பட்ட போயிங் 737 மேக்ஸ் ரக விமானங்கள் ஆய்வுக்குட்டப்படுத்தப்பட்டது. போயிங் நிறுவனத்திடமும் வழக்கு விசாரணை மேற்கொள்ளப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த அமெரிக்க நீதிபதி ரீட் ஓ கானர் என்பவர், இது “அமெரிக்க வரலாற்றில் மிகவும் கொடிய கார்ப்பரேட் குற்றம்” (The deadliest corporate crime in U.S. history) என்று விமர்சித்திருந்தார். ஆனால், நூற்றுக்கணக்கில் மக்களைக் கொன்று குவித்த போயிங் நிறுவனத்திற்கு அபராதம் விதிக்கப்பட்டதைத் தாண்டி எந்தவித தண்டனையும் அளிக்கப்படவில்லை.


படிக்க: அமெரிக்க போயிங் விமானத் தொழிலாளர்கள் போராட்டம்: தொழிலாளர்களின் வர்க்க ஒற்றுமைக்குப் பணிந்தது நிர்வாகம்!


தற்போது, அகமதாபாத்தில் விபத்திற்குள்ளான 787 ட்ரீம்லைனர் ரக விமானத்திலும் பாதுகாப்பு குறைபாடுகள் இருக்கிறது என்பதை போயிங் நிறுவனத்தில் 32 வருடங்கள் பணியாற்றி ஓய்வுபெற்ற ஜான் பர்னெட் அம்பலப்படுத்தியுள்ளார்.

வடக்கு சார்ல்ஸ்டன் தொழிற்சாலையில் போயிங் 787 ட்ரீம்லைனர் விமானங்களைத் தயாரித்துக் கொண்டிருந்த போது ஜான் பர்னெட் அங்கு தரக் கட்டுப்பாட்டு மேலாளராக பணியாற்றியுள்ளார்.

”தயாரிப்புப் பணியில் ஈடுபடும் தொழிலாளர்கள் மீது வேகமாகத் தயாரிக்கும்படி அழுத்தம் கொடுக்கப்பட்டதாகவும், இதன் விளைவாக அவர்கள் தயாரிப்பு முறையிலும், பாதுகாப்பு அம்சங்களிலும் சமரசம் செய்துகொள்ள நேர்ந்ததாகவும்” 2019-ஆம் ஆண்டு அவர் குற்றம்சாட்டியிருந்தார்.

மேலும், தரம் குறைவான உதிரிப் பாகங்களை விமானங்களில் பொருத்தியதாகவும், விமானத்தின் ஆக்சிஜன் அமைப்பில் கடுமையான குறைபாடுகள் இருப்பதாகவும், நான்கில் ஒரு ஆக்சிஜன் முகக்கசவம் அவசரக் காலத்தில் வேலை செய்யாத நிலையில் இருக்கலாம்” என்றும் எச்சரித்துள்ளார்.

ஆனால், போயிங் விமானத்தின் பாதுகாப்பு குறைபாடுகள் குறித்து பொதுவெளியில் அம்பலப்படுத்திய சில நாட்கள் கழித்து, 2024-ஆம் ஆண்டு மார்ச் 9-ஆம் தேதி பர்னெட் மர்மமான முறையில் உயிரிழந்தார்.

”போயிங் விமானம் தன்னுடைய கார்ப்பரேட் லாபவெறிக்காக நூற்றுக்கணக்கான மக்களைக் கொன்று குவித்துள்ளதற்கான ஆதாரங்கள் அம்பலமாகியிருந்தும் அமெரிக்க அரசு போயிங் நிறுவனத்தின் மீது எந்தவித நடவடிக்கையும் மேற்கொள்ளாமல் பாதுகாத்துள்ளதோடு போயிங் விமானங்களை வாங்குமாறும் வளரும் நாடுகளை நிர்ப்பந்திக்கவும் செய்துள்ளது.

இந்திய அரசின் கார்ப்பரேட் சேவையும் அமெரிக்க அடிவருடித்தனமும்

1948 வரை இந்தியாவின் விமானப் போக்குவரத்து டாடா கையில்தான் இருந்தது. பின்னர் 1953−இல் டாடாவிடமிருந்து பெறப்பட்டு அரசுடைமையாக்கப்பட்டு, இந்திய அரசின் அதிகாரப்பூர்வமான விமான நிறுவனமாக அறிவிக்கப்பட்டது. ஆனால், 1990-களில் விமானச்சேவைத் தனியாருக்குத் திறந்துவிடப்பட்ட பின், ஏர் இந்தியா மற்றும் இந்தியன் ஏர்லைன்ஸ் நிறுவனங்களை நவீனமயமாக்குவதை ஒன்றிய அரசு திட்டமிட்டே புறக்கணித்து வந்தது.

ஒருபுறம் ஏர் இந்தியா நிறுவனத்திற்குரிய வர்த்தகச் சந்தையைத் தனியார் விமான நிறுவனங்களுக்குத் தாரை வார்த்துக் கொடுத்தது. மறுபுறம் போயிங், ஏர்பஸ் உள்ளிட்ட கார்ப்பரேட் நிறுவனங்களின் லாபவெறிக்காக, தேவையேயில்லாத விதத்திலும் ஏர் இந்தியாவின் வருமானத்துக்கு மீறியும் ஏர் இந்தியாவை நவீனப்படுத்துகிறோம் என்ற பெயரில் புதிய விமானங்களை வாங்கி ஏர் இந்தியா நிறுவனத்தின் கடன் சுமையை அதிகரித்தது. இந்திய அரசின் கார்ப்பரேட் சேவையால் திட்டமிட்டே ஏர் இந்தியா நட்டத்திலும் கடனிலும் சிக்கவைக்கப்பட்டது. பிறகு அதே நட்டத்தையும், கடனையும் காரணம் காட்டி ஏர் இந்தியா அடிமாட்டு விலைக்கு மீண்டும் டாடாவிற்கே விற்கப்பட்டுவிட்டது.

ஏர் இந்தியாவை மீண்டும் டாடா நிறுவனம் கைப்பற்றிய பிறகு, அந்நிறுவனத்தில் நிரந்தர ஊழியர்களை ஒழித்துக்கட்டி, ஒப்பந்த தொழிலாளர்களை பணியில் அமர்த்தி லாபம் பார்க்கத் தொடங்கியது. ஆனால், ஏர் இந்திய விமானங்களின் பராமரிப்பு மோசமாக இருப்பது; விமானங்கள் அடிக்கடி பழுதாவது போன்றவை வாடிக்கையான ஒன்றாகவே இருந்து வருகிறது.

தற்போது, இந்த விபத்து ஏற்பட்ட பிறகு டாடா தலைவர் சந்திரசேகர், ”விமான விபத்து தொடர்பாக போயிங் நிறுவன அதிகாரிகளின் ஒத்துழைப்பை நாடியுள்ளோம். மேலும் விபத்து தொடர்பாக போயிங் நிறுவனத்திடம் விளக்கம் கேட்டுள்ளோம்” எனக் கூறியுள்ளார். ஏர் இந்தியா விமானங்களின் பராமரிப்பு மற்றும் இயக்கத்தை டாடா நிறுவனமே கவனித்து வரும் நிலையில், விபத்துக்குள்ளான விமானத்தில் என்ன பராமரிப்பு குறைபாடு இருந்தது, இயந்திரத்தில் என்ன குறைபாடு இருந்தது என்பதற்கு டாடா நிறுவனமும் பொறுப்பேற்க வேண்டும். மாறாக, டாடா நிறுவனம் போயிங் விமான நிறுவனத்தை முதன்மை காரணப் பொருளாகக் கூறி தப்பிக்க முயல்கிறது. விபத்தில் உயிரிழந்த ஒவ்வொருவரின் குடும்பத்திற்கும் ஒரு கோடி ரூபாய் பணத்தை அள்ளிவீசி வாயடைக்கப் பார்க்கிறது.

மறுபுறம், அகமதாபாத் விபத்திற்கான உண்மையான காரணத்தைக் கண்டறியாமல் ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க கும்பல் திட்டமிட்டு திசை திருப்பப் பார்க்கிறது.

விபத்துக்குள்ளான விமானம் 11.5 ஆண்டுகள் பழமையானது. அதனால் தான் போயிங் 787-8 ட்ரீம்லைனர் விமானம் விபத்துக்குள்ளாகியுள்ளது என்பதுபோல “கோடி மீடியா” ஊடகங்கள் புரளியைக் கிளப்பி வருகின்றன. ஆனால் உண்மையில் ஒரு விமானம் நன்றாகப் பராமரிக்கப்பட்டால் 30 ஆண்டுகள் வரை இயக்கப்படலாம். விமானத்தின் வயது ஒன்றும் பிரச்சனை இல்லை என விமானத்துறை வல்லுநர்களும் அம்பலப்படுத்தியுள்ளனர்.

மேலும், தற்போதுவரை பற்றி எரிந்து கொண்டிருக்கும் மணிப்பூர் முதல் காஷ்மீர் பஹல்காம் தாக்குதல்வரை எந்தவொரு இடத்திற்கும் நேரில் சென்று பாதிக்கப்பட்ட மக்களைப் பார்வையிடாத பிரதமர் மோடி, குஜராத்தில் விபத்து நடந்துள்ளது என்பதால் ஓடோடி சென்று பார்வையிட்டார். ஆனால், ஒரு துயர சம்பவத்தைப் பார்வையிடுவதைக் கூட போட்டோ-ஷூட் நடத்திப் பதிவிட்டது மோடியின் பாசிச முகத்தை அம்பலப்படுத்திக் காட்டியது. மேலும், மோடியுடன் பார்வையிடச் சென்ற ஒன்றிய விமான போக்குவரத்துத்துறை அமைச்சர் ராம் மோகன் நாயுடு, விபத்து நடந்த இடத்தை பார்வையிட்டதை காணொளியாகப் பதிவுசெய்து பின்னணி இசையுடன் ரீல்ஸ்-ஆக பதிவிட்டார். அகமதாபாத் விமான விபத்திற்குத் தார்மீக பொறுப்பேற்க வேண்டிய மோடி அரசு திட்டமிட்டு தங்களுக்கும் விபத்திற்கும் எந்த தொடர்பும் இல்லை என்று கைகழுவப் பார்க்கிறது என்பதையே பாசிச கும்பலின் இத்தகைய செயல்பாடுகள் காட்டுகின்றன. “விபத்துகளை யாராலும் தடுக்க முடியாது; எல்லாம் விதி வசம்” என்று உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசியிருப்பது இதை உறுதிப்படுத்துகிறது.

அகமதாபாத் விமான விபத்தானது போயிங் போன்ற கார்ப்பரேட் கிரிமினல் நிறுவனங்களின் லாப வெறி மற்றும் இந்திய ஒன்றிய அரசின் கார்ப்பரேட் சேவை ஆகியவற்றின் விளைவே ஆகும். ஆனால், அகமதாபாத் விமான விபத்திற்குக் காரணமாக இருக்கும் கார்ப்பரேட் கிரிமனல்களை ஒருபோதும் மோடி அரசு தண்டிக்கப் போவதில்லை என்பதை அதன் செயல்பாடுகளே காட்டுகின்றன. எனவே, இந்த கார்ப்பரேட் கிரிமினல்களின் குற்றச்செயலைப் பொதுவெளியில் அம்பலப்படுத்தி எதிர்ப்புக் குரல்களை எழுப்புவதே அவர்களுக்குத் தண்டனை பெற்றுத்தரும்.


தென்றல்

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram



விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க